Saturday, July 30, 2011

அகங்காரம்-தியானம் ஆனந்தம்


      அகங்காரத்துக்குள்ளேயே சிக்கி உழுன்று கொண்டிருக்கும் ஒரு மனிதன் அந்த அகங்காரத்தையே தன் அடையாளம் என்று கருதிக் கொண்டே இருக்கிறான். அது தன் அடையாளம் அல்ல என்கிற தெளிவு ஏற்படும் போது, அதற்கு “விழிப்புணர்வு” என்று பெயர். அடிப்படையில், அகங்காரம் என்பது ஒரு பாதுக்காப்பு ஏற்பாடு. அது பாதுகாப்பு உணர்வின் வெளிப்பாடு.
      ஒரு மனிதன், தன் எல்லையற்ற தன்மையை, ஒரு எல்லைக்குட்பட்ட உடலோடோ, வேறு சில எல்லைகளோடோ அடையாளப்படுத்தத் தொடங்கும் போது அது “அகங்காரம்” ஆகிறது. தன்னுடைய அகங்காரம் இன்னொரு மனிதனின் அகங்காரத்தால் ஆக்கிரமிக்கப்படும் போது சிக்கல் ஏற்படுகிறது. மாறாக, அன்பு நிலையில் அவரிடம் இன்னொருவர் கரைந்து போகிபோது அங்கே ஆக்கிரமிப்பு, ஆதிக்கம், போன்றவற்றிற்கு இடமில்லை.
      ஒரு கைக்குழந்தைக்குக் கூட தேவையான நேரத்தில் தேவையான உணவு தரப்படாவிட்டால் கோபம் வருகிறது.கோபத்தை வெளிப்படுத்த குழந்தை வீறிட்டு அழுகிறது இத்தனைக்கும் அந்தக் குழந்தைக்கு தன் பெயர் என்னவென்று கூட தெரியாது. ஆனால், தன்னைப் பற்றிய எண்ணம் அதற்குள் ஏற்பட்டு விடுகிறது.
      “அகங்காரம்” எனபது நிழலைப் போன்றது. உடல் என்ற ஒன்று ஏற்பட்டுவிட்டால் எப்படி நிழல் விழுவதைத் தடுக்க முடியாதோ அதைப்போல அகங்காரம் எழுவதையும் தடுக்க முடியாது. சிலர், என்னிடம் வந்து “ஊரில் மழை பெய்யவில்லை ஏதாவது செய்து மழை வர ஏற்பாடு செய்யுங்கள்” என்றுசில சமயங்களில் கேட்பதுண்டு. இதுவே, அகங்காரத்தின் வெளிப்பாடுதான்.
      இயற்கைக்கு எதிரான செயல்களைச் செய்வது, தங்கள் சுயநலத்திற்கு இயற்கைய மாசுபடுத்தும் தொழில்களை செய்வது, பிறகு யாரைக் கொண்டாவது மழையை வரழைத்து விடாலம் என்று கருதுவது, அகங்காரம் இல்லாமல் வேறென்ன?
      மகாத்மா காந்தி ஒரு முறை சொன்னார். “இந்த உலகில் எல்லா மனிதர்களின் தேவைக்கும் உரிய செல்வம் இருக்கிறது. ஆனால் ஒரு தனிமனிதனின் பேராசைக்குத்தான் அது போதாது” என்றார்.
      இத்தைகய அகங்காரம் அழிவுகளை ஏற்படுத்தும், அகங்காரத்தை முழுமையாக அகற்றுவதைவிட அதனை நேர்மறையாகப் பயன்படுத்துவதே நல்லது. அகங்காரத்தை உற்றுக் கவனித்து, அதுவே “தான்” என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் தன்மையிலிருந்து விடுபட்டு, அகங்காரத்தால் தனிமைப்பட்டுப் போகும் உயிரை மற்ற உயிர்களோடு அன்பில் கரைத்துக் கொள்வதே மனிதகுலத்திற்கு மேன்மைகள் தரும்.
      வாழ்க்கையை பலரும் வாக்குவாதங்களிலேயே கழிக்கிறார்கள். தாங்கள் விரும்புவதை செய்வதுதான் “சுதந்திரம்” என்று பலரும் எண்ணுகின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் எதைச் சுதந்திரமென்று மனிதன் கருதுகிறானோ, அதுவே அவனைப் பிணைத்து வைக்கிற விலங்காக மாறுகிறது.
      புகைப்பிடிப்பதை ஒரு மனிதர் விரும்புகிறார். அதையே தன் சுதந்திரம் என்றும் கருதுகிறார். ஆனால், சுற்றிலும் பெட்ரோல் சிந்தியிருக்கும்போது, “ சிகரெட் பிடிப்பது என் விருப்பம்” என்கிற அகங்காரம் வெளிப்பட்டால், அது அழிவைத் தரும்.
      சின்ன சின்ன விஷயங்களுக்கும், நிபந்தனை விதிக்கிற மனப்பான்மை மனிதனுக்கு இருக்கிறது. வாழ்க்கை எந்த நிபந்தனைகளும் இல்லாமல் மனிதனுக்கு, எல்லா வாய்ப்புகளையும் வழங்குகிறது. ஆனால், தனகுத்தானே விதித்துக் கொள்கிற நிபந்தனைகளால் மனிதன், தன் எல்லைகளைக் குறுக்கிக்கொண்டு சிரமப்படுகிறான்.
      ‘விழிப்புணர்வு’ இந்த நிலையை மாற்றி மனினை அன்புமயமாக ஆக்கும்.
      மனிதனின் உணர்வு நிலையிலேயே உச்சகட்டமானது அன்புதான். அன்பு என்பது ஆழமான அழகான வலி. அன்பு சக உயிர்கள் மீதான, பரிவாக வெளிப்படும். அந்த வலியின் விளைவாகக் கண்ணீர் வெளிப்படும்.அது அற்புதமான அனுபவம் மற்றவர்களுக்காக பொறுப்பேற்றுக் கொள்வதுதான் அன்பின் அடையாளம்.
      மேற்கத்திய நாடுகளில்தான் கண்ணீர் என்பது பலவீனத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்தியப் பாரம்பரியத்தில் கண்ணீர் என்பது மனம் அன்புமயமாகவும், மென்மையாகவும் இருப்பதைக் குறிக்கிறது. உள்முகமாக, மனிதனைத திருப்பி விடுகிற நிகழச்சிகள் பல. அதை மனிதன், எந்த விதத்தில் உணர்ந்து கொள்கிறானோ, அதற்கேற்ப அவன் இயல்பு மாறுகிறது.
      உதாரணமாக, பெங்களூரில் காய்கறி விற்பனையாளர் ஒருவர் இருந்தார் கடும் நோய்வாய்ப்பட்டு ஆறு மாதம் படுக்கையில் இருந்தார். மரணத்திற்கும், வாழ்க்கைக்குமான போராட்டமாக அது இருந்தது.
      ஆறு மாதங்களுக்குப் பிறகு குணமடைந்தார். அத்தனை காலம், மருத்துவமனையில் இருந்ததால், எல்லாவற்றையுமே இழந்திருந்தார். எனினும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புபோது முன்பைவிடவும் அமைதியாக, ஆனந்தமாக, மகிழ்ச்சியாக வாழத் தொடங்கியிருந்தார்.
      கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலை அவருக்கு எத்தனையோ இழப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும், அந்த மரணப் போராட்டம் காரணமாக வாழ்க்கை குறித்த தெளிவு அவருக்கு ஏற்பட்டிருந்தது.
      உள் நிலையில், தெளிவு தோன்றவும், தன்னைக் குறித்த அகங்காரமும், அடையாளங்களும் மாறவும், ஒரு மனிதனுக்கு தியானம் மிகவும் அவசியம். தியானம் என்பது ஒருவர் மேற்கொள்கிற பயற்சியல்ல, தன் இயல்பு நிலையோடு இருப்பது தனக்குள் இருக்கிற உண்மையை உணர்வது.
      வெளிச்சூழ்நிலையை மனிதன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், தன்னுடைய உள்நிலை குறித்த தெளிவு அவசியமாகிறது. அந்தத் தெளிவு வரும்வரை சிறிய நிபந்தனைக்களுக்குள், எல்லைகளுக்குள் மனிதன் சிறைபட்டிருப்பதோடு அதுவே, வாழ்வின் பலம் என்றும், தவறாகப் புரிந்து கொள்கிறான்.
      தானே, வகுத்திருக்கும் தடைகளிலிருந்து, மனிதனை விடுவிக்க வல்லதுதான் “தியானம்”. தியானம் என்று சொன்ன மாத்திரத்திலேயே அது குறித்து ஏராளமான, சந்தேகங்கள் தான் எல்லருக்கும் ஏற்படுகின்றன.
      தியானமும், பிரார்த்தினையும் ஒன்றா? வாழ்வில், நாம் விரும்பும் நன்மைகளை தியானம் தருமா? என்றெல்லாம், பலர் கேட்கின்றனர். முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கையோடு யாரக்கும், எந்தப் பிரச்னைஐயும் இல்லை. இவர்கள் விருப்பத்திற்கேற்ப, வாழ்க்கை இல்லை என்பதில் தான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
      உடல், மனம், ஆகிய இரண்டு எல்லைகளுக்குள் மனிதன் இருக்கிற வரை அவன் விருப்பத்திற்கேற்ப வாழக்கை அமையாது. ஏனெனில், அந்த நிலைகளைப் பொறுத்தவரை புறச்சூழ்நிலைதான் வாழ்வைத் தீர்மானிக்கிறது. இந்த எல்லைகளைக்கடந்து உயிரின் மூலத்தை உணர்தற்கான கருவிதான் தியானம்.
      பிரார்த்தனை என்பது, இப்போதெல்லாம் பக்தியின் வெளிப்பாடாக இருப்பதில்லை. கடவுளிடம் வைக்கின்ற கோரிக்கைகளையே நாம், பிரார்த்தனை என்று புரிந்து கொள்கிறோம். உங்கள் கவலைகள், தேவைகள், ஆசைகள், அச்சங்கள் என்று நீண்ட புலம்பல்களின் பட்டியலை, பிரார்த்தனை என்று கருதுகிறீர்கள். அதுவம், உங்களுக்கு போதிக்கப்பட ஒரு சடங்காகவே ஆகிவிட்டது. அது வெறும் கோரிக்கைகளை இருக்கும் வரை பிரார்த்தனையால் புனிதத்தன்மை இருக்காது. ஆனால்; பிரார்த்தனையின் அடிப்படை கடவுளிடம் பேசுகிற முயற்சி, பிரார்த்தனை வழியாக கடவுளிடம் பேசுகிறீர்கள்.
      இதி என்ன சிக்கல் என்றால், இத்தனை ஆண்டுகளில் நீங்களே தொடர்ந்து, பேசிக்கொண்டேயிருக்கிறீர்களே தவிர அவரை ஒருவார்த்தைக்கூடப் பேச அனுமதிக்கவில்லை. நீங்கள் ஒரு நண்பரைப் பார்க்க போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர் வீட்டில் போய் அவரை ஒரு வார்த்தைகூட பேச அனுமதிக்காமல் நீங்களே தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள். அரை மணி நேரம், ஒரு மணி நேரம் பேசினால் என்னாகும். அடுத்தமுறை நீங்கள் அவர் வீட்டுக்குப் போகும் போது அவர் உங்களைப் பார்க்கவே பயப்படுவார். வீட்டுக்குள் இருந்து கொண்டே இல்லை என்று சொல்லி அனுப்பிவிடுவார்.
      இப்போது கடவுளிடமும் அதுதான் நிகழ்ந்திருக்கிறது. நீங்கள் சொல்வதைப் பார்த்து அவர் இருந்து கொண்டே இல்லாது போல் பாசாங்கு செய்கிறார். எனவே, நீங்கள் பேசுவதை நிறுத்திக்கொண்டு, கடவுளைப் பேச அனுமதிப்பதற்குத்தான், தியானம் என்று பெயர்.
      தியானம் என்பது, இந்தப் படைப்பின் மூலத்தை உணர்வதற்கான வழி. வெறுமனே கண்மூடி அமர்வது, தியானமல்ல. பலர், வசியக் கலைக்கும், தியானத்துக்கும் உள்ள வேறுபாடு பற்றி என்னிடம் கேட்டிருக்கிறீர்கள். இரண்டும் ஒன்றுக்கொண்டு எதிரான நிலைகள். வசயத்தின் போது, யாரோ ஒருவர், அல்லது ஏதோ ஒன்றின் ஆளுமைக்குள் நீங்கள் அல்லது ஏதோ ஒன்றன் ஆளுமைக்குள் நங்கள் அகப்படுகிறீர்கள். அப்போது விழிப்புநிலை இருக்காது. ஆனால், தியானம் என்பது முழு விழிப்புணர்வில் நிகழ்வது. தியானத்தில் எல்லாற்றிடமிருந்தும் விலகி, சுதந்திரமாக இருக்கிறீர்கள். சுதந்திரம் பொதுவாகவே அச்சமூட்டுவதாய் இருக்கிறது. அதனால் தான் மேலை நாடுகளில், தியானம் என்றாலே அஞ்சுகிற நிலை இருந்தது. எல்லோரும், சுதந்திரத்தை விரும்புவதாகச் சொல்லிக்கொண்டால் கூட அடிப்படையில் ஏதாவதொன்றில் சிறைப்பட்டிருக்கவே விரும்புகிறார்கள்.
      மனைவிமார்கள் மீது, கணவன்கள் ஒரு புகார் சொல்வதுண்டு. எப்பதும் தங்களைத் தொந்தரவு செய்து கொண்டேயிருக்கிறாரகள். அது வேண்டும், அது வேண்டும். அங்கே அழைத்துச் செல்லுங்கள் என்று தொல்லைப்படுத்திக்க கொண்டேயிருக்கிறார்கள், என்று கணவன்மார்கள் அலுத்துக்கொள்வதுண்டு. அந்தப் பெண்கள் தியானம் செய்யத் தொடங்கியபின் தமது கணவர்களிடம் எதையுமே கேட்பதில்லை. உடனே இந்தக் கணவன்மார்கள் கவலைப்படத் தொடங்குகிறார்கள். பெண்கள் யாரையும் சாராமல் தனித்திருப்பதும் தங்களையும் தொல்லை செய்யாமல் இருப்பதும், அவர்களை தடுமாறச் செய்கிறது.
      தியானத்தின் வழியாக சார்பு நிலையிலிருந்து விடுதலைபெற முடியும், என்கிற அனுபவ உண்மைக்கு மனம், முதலில் தயாரடைய வேண்டும். தியானம் என்பது விழிப்புநிலை, தியானம் என்பது சுதந்திரம். தியானம் என்பது சுதந்திரம் என்பதைவிட தியானம் என்பதே சுதந்திரம் என்று சொல்ல வேண்டும்.
      தன்னை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மனிதனை யாரும், எதுவும், அடிமைப்படுத்திவிட முடியாது. மனிதனின் புறவாழ்வுக்காக சில திறமைகள், தகுதிகள் தேவைப்படுகின்றன. அந்தத் திறமைகளோடும், தகுதிகளோடும் மனிதன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுவிட்டால், அதைத் தாண்டி வளர இயலாது. புறச்சூழலின் வெற்றிக்காக பெற்றிருக்கும் தகுதிகளே தடைகளாக மாறி மனிதனை அடிமைப்படுத்த வாய்ப்புண்டு.
      மாறாக, விழிப்புணர்வு நிலையில், எதனோடும், தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாத தன்மையில் இருக்கும்போது மனிதன் விரைவாக வளரமுடியும். அந்த விழிப்புணர்வை தியானம் தருகிறது. மனிதன் தேடிப் பெறுகிற தகவல் அறிவு அவனது உலக வாழ்க்கைக்குத் துணை புரிகிறது. ஆனால், தகவல் திரட்டு மட்டுமே இருந்தால் அந்தத் தகவல் திரட்ட உரிய முறையில் அறிவாக வெளிப்படுத்த முடியும்.
      தன் இயல்பான தன்மையை உணர்த்த ஒருவன், வாழ்வில் அன்பாக, அமைதியாக, ஆனந்தமாக இருக்க முடியும். தன்னுடைய சக்தியைத் தெரிந்து கொள்ளாத போதுதான் பதட்டம் வளரும், பயம் வளரும், சுயநலம் கூடும். மனிதனின் உடல் - மனம் - அறிவு - ஆன்மீகத் தேடல் அனைத்தையும் ஒரே புள்ளியில் சந்திக்க வைத்து, உள்நிலை வளர்ச்சிக்கு உறுதுணை புரிய ஈஷா யோகா மையம் ஏற்படுத்தியிருக்கும் வழியே “சஹஜ ஸ்திதி யோகா”
      சஹஜ ஸ்திதி யோகா என்றால், “இயல்பாக வாழும் கலை” என்று பொருள். தன் இயல்பு வாழ்க்கையில் இருந்தபடியே தன்னை மேம்படுத்திக் கொள்ள அனைவருக்கும் வழங்கப்படும் அரிய வாய்ப்பு இது.
      சஹஜ ஸ்திதி யோகா, எந்தவொரு பழக்கத்தயும் விடச்சொல்லி வற்புறுத்துவதில்லை. எந்தவொரு மனநிலையையும் மாற்ற சொல்லி வற்புறுத்தவதில்லை. அனுபவ ரீதியாக எதையும் உணர்ந்து, வேண்டாதவறை விலக்கிக் கொள்வதற்கான, விழிப்புணர்வைத் தருகிறது.
      இதுவரை உணராத பரிமாணத்தில் வாழ்கையை மனிதன் உணரத் தொடங்குகிறான். அன்பு, அமைதி, ஆனந்தம் ஆகியவை வெளியிலிருந்து பெருவதர்க்கல்ல. மனிதனிடம் ஏற்கனவே இருக்கும் இயல்புதான் என்பதை அனுபவ அடிப்படையில் உணரும்போது முற்றிலும் புதிய பார்வை கிடைக்கிறது.
      செயல்திறன் அதிகரித்தல், உடல் நலம், மன அமைதி இவையெல்லாம் சஹஜ ஸ்திதி யோகாவில் முக்கிய அம்சங்களல்ல. அவை பக்க விளைவுகள்தான். மனிதன் தன்னை உணர்ந்து, தனக்குள் இருக்கும் பேராற்றலை உணர்ந்து, உயிர்களிடையே பேதமில்லை என்கிற அனுபத்தைப் பெறுவதே சஹஜ ஸ்திதி யோகாவின் முக்கிய நோக்கம்.
     நோய் வாய்ப்பட்டிருக்கும் மனிதன் சஹஜ ஸ்திதி யோகாவிற்குப் பிறகு, நோயின் தன்மையை உணர்கிறான். ஆனால், அதனால் துன்பமடைவதில்லை. சில அடிப்படை அணுகுமுறைகள் மாறும்போதே சில நோய்கள் அவனைவிட்டு விலகுவதை இங்கே காணமுடியும்.
      கோபம், பதட்டம், போன்றவை தங்கள் பிறவிக் குணங்கள் என்று கருதியவர்கள், வகுப்புகள் தொடங்கி சில நாட்களிலேயே அந்த குணங்கள் தங்களை விட்டு விலகுவதைக் காண்கிறார்கள். சஹஜ ஸ்திதி யோகா, நீண்ட கால அனுபவத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள, ஆழ்ந்த யோக அறிவியலின் வெளிப்பாடு.
      எல்லா வயதினருக்கும் பொதுவான தன்மையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பயிற்சி, மனிதன் தனது அடிப்படை சக்தியை நன்கு உணரவும் அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பாக அமைந்துள்ளது. உலகின் பல பகுதிகளிலும் பரவியுள்ள சஹஜ ஸ்திதி யோகாவை “தன்னை உணர்வதற்கான அமைதிப்புரட்சி” என்று அழைக்கிறோம். இந்த அமைதிப் புரட்சிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

..............சத்குரு ஜக்கிவாசுதேவ்...................

Wednesday, July 27, 2011

வாழ்க்கையின் மகத்தான அற்புதங்கள்


      ஒரு ஜென் துறவியின் குடிலுக்குள் புகுந்துவிட்ட திருடனைச் சீடர்கள் பிடித்து இழுத்து வந்தனர். திருடுவதற்கு தங்கமோ, வெள்ளியோ, பணமோ எதுவும் கிடைக்காமல், ஏற்கெனவே அவன் வெறுப்பில் இருந்தான்.
      ''திருட வந்து வெறுங் கையுடன் போகாதே. இந்தா...'' என்று துறவி தன் அங்கியைக் கழற்றிக் கொடுத்தார். அவன் அதைப் பறித்துக்கொண்டு ஓடினான். தாங்கள் பிடித்து வந்தவனை துறவி தப்பிக்க விட்டுவிட்டாரே என்று சீடர்கள் வெகுண்டு பார்த்தனர்.
      துறவி வானத்தை அண்ணாந்து பார்த்தார். ''ஐயோ பாவம்! அந்த நிலவை மட்டும் என்னால் அவனுக்கு வழங்க முடிந்திருந்தால், எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!'' என்றார்.
      வாழ்க்கையின் மகத்தான அற்புதங்கள் எப்போதுமே மனிதனுக்குக் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கின்றன. ஆனால், அவற்றைவிட அவனுக்கு சிறு சிறு விஷயங்களிலேயே ஆர்வம் எழுகிறது.
      அடுத்தவரை, உலகத்தை, ஏன் பிரபஞ்சத்தையே உங்களில் ஒரு பகுதியாக உணர முடியும். மனிதனுக்கு மட்டும்தான் இந்த உணர்வு வரமாகக் கிடைத்திருக்கிறது. இதை விழிப்பு உணர்வுடன் அனுபவிக்கத் தவறிவிட்டு, களவாடுவதில் கவனம்வைக்கிறோம். மனிதர்களிடம்
இருந்து மட்டுமல்ல, இந்தப் பூமியில் இருந்தும் களவாடிக்கொண்டுதான் இருக்கிறோம்.
      யார் அதிகமாகக் களவாடுகிறாரோ, அவரை வெற்றிகொண்டவராக அறிவித்து மகிழ்கிறோம். பிரபஞ்சத்தையே உங்களுடையதாக்கிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அதைக் கவனிக்காமல் தங்கம், வைரம் என்றெல்லாம் பெயர் வைத்து, சிறு கற்களைச் சேகரிப்பதிலும், சிறு உலோகங்களைக் கைப்பற்றுவதிலுமே உங்கள் கவனம் போகிறது. எல்லை அற்றதையே
உங்களுடையதாக்கிக்கொள்வதை விடுத்து, நிலப் பகுதியின் சிறு சதுரங்களைக் கையகப்படுத்திக்கொள்வதில் சந்தோஷப்படுகிறீர்கள்.
      இந்தப் பூமிக்கு வந்திருப்பது முழுமையாக வாழ்வதற்காக. வாழ்க்கையின் ஆழத்தையும் அர்த்தத்தையும் அனுபவித்து உணர்வதற்காக. இப்படி அற்பமான அம்சங்களில் ஆர்வத்தையும் கவனத்தையும் சிக்கவைத்துவிட்டு, அற்புதங்களையும் மகத்தான விஷயங்களையும் தவறவிடுகிறோம்.
      வாழ்க்கையை எந்த அளவு தீவிரத்துடன் நீங்கள் அணுகுகிறீர்கள் என்பதுதான் அதை மேன்மைமிக்கதாக, மகத்துவம்மிக்கதாக ஆக்க முடியும். இதைச் சீடர்களுக்கு அடையாளம் காட்டுவதுபோல் நிலவே இருக்க, சிறு பொருட்களில் திருடன் சந்தோஷப்பட்டதை ஜென் துறவி சுட்டிக்காட்டுகிறார்!

Tuesday, July 26, 2011

உண்ணாவிரதப் போராட்டம் ஆனந்தம்


      இன்றைக்கு ஏதாவது பிரச்னை என்றால், அரசியல்வாதிகள் உண்ணாவிரதம் என்று அறிவிக்கிறார்கள். பிரபலம் அடைகிறார்கள். அவர்களுக்கு உடல்நலம் மோசமானால், மக்கள் கொதித்து எழுந்து வன்முறையில் ஈடுபடுகிறார்கள். ஆட்சியில் இருப்பவர்களை அச்சுறுத்தும் ஆயுதமாகிவிட்ட உண்ணாவிரதப் போராட்டத்தைத் தடைசெய்தால் என்ன?''
      ''பொதுவாக, போராட்டம் என்றால் என்ன நடக்கிறது? கடை அடைப்பு அறிவிக்கிறார்கள். தொழில் நடத்துபவர்கள் தாக்கப்படுகிறார்கள். வேலைக்குச் செல்பவர்கள் மிரட்டப்படுகிறார்கள். பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் அடைக்கப்படுகின்றன. தெருவில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, தீ வைத்துக் கொளுத்தப்படுகின்றன.
      நினைத்ததைச் சாதிப்பதற்காக, சாலை மறியல்களில் ஈடுபட்டு மக்களின் அன்றாட வாழ்வைப் புரட்டிப்போடுவதைவிட, உண்ணாவிரதம் சிறப்பான போராட்டம் இல்லையா?வாகனங்கள் மீது கல் எறிவதிலும், பேருந்துகளுக்குத் தீ வைப்பதிலும், கடைகளை உடைத்துச் சூறையாடுவதிலும் ஈடுபடாமல், உண்ணாவிரதம் அறிவித்து அமைதியாக
எதிர்ப்பைக் காட்டுவது கண்ணியமான போராட்டம்.
      இந்தியாவில் இரண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். வயிறு பெருத்தவர்கள். வயிற்றுக்குக் கிடைக்காதவர்கள். வயிறு பெருத்தவர்கள் உண்ணாவிரதம் இருந்தால், அது அவர்களுக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது.
      பிரேசிலில் ஒரு நாடோடிக் கதை உண்டு.
      ஒரு பாதிரியார் வாரத்துக்கு ஒரே ஒரு முறை உணவு அருந்தி ஓர் ஆண்டு முழுவதும் விரதம் இருந்தார். கேட்டால், பைபிளில் உள்ள குறிப்பிட்ட வாசகங்களுக்கு நேரடியாகக் கடவுளிடம் இருந்து அர்த்தம் அறியப்போவதாகச் சொன்னார். ஆனால், கடவுளிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை.
      ''சே, உணவையே விட்டுக்கொடுத்தேனே? கடவுளுக்குக் கருணையே இல்லை. வேறு அறிஞர் யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொண்டால் போயிற்று!'' என்று அவர் சொன்னதுதான் தாமதம், அவர் முன் ஒரு தேவதை தோன்றியது.
      ''ஒரு வருடம் உண்ணாவிரதம் இருந்தது, மற்றவர்களைவிட நீ உயர்ந்தவன் என்று காட்டிக்கொள்வதற்காக. அப்படிப்பட்டவர்களுக்குக் கடவுள் உதவுவது இல்லை. இப்போது மற்றவர்களிடம் கேட்டு அறியலாம் என்று உன்னிடம் பணிவு வந்தது. உனக்கு விளக்கம் கொடுக்கக் கடவுள் என்னை அனுப்பினார்'' என்றது.
      உங்கள் கொள்கைக்காக உண்ணாவிரதம் என்று நாடகம் போடுவது சரியல்ல. உண்மையான உறுதியுடன் உண்ணாவிரதம் இருந்தால், அது நிச்சயம் வெற்றிபெறும்.
      உண்ணாவிரதம் இருக்கும் தலைவருக்கு உடல்நிலையில் ஏதாவது பிரச்னை வந்தால், தொண்டர்கள் கொதித்துப்«¦பாகிறார்கள். எதையெல்லாம் தலைவர் தவிர்த்தாரோ, அவற்றில் தவறாமல் ஈடுபடுகிறார்கள். பஸ்களுக்குத் தீ வைக்கிறார்கள். கடை அடைப்பை
வற்புறுத்துகிறார்கள். ரயில் தண்டவாளங்களைப் பெயர்த்து எறிகிறார்கள்.
      இதை நிறுத்த வேண்டுமானால், உண்ணாவிரதத்தில் அமர்வதற்கு முன் தலைவர் இப்படி ஓர் அறிக்கை வெளியிட வேண்டும். வன்முறையில் ஈடுபடுவது நம் கொள்கைகளுக்கு எதிரானது. எனக்கு ஏதாவது நடந்தால், எதிர்ப்பைக் காட்ட நினைக்கும் தொண்டர்கள் அனைவரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட வேண்டும்.'
      ஒரு மனிதர் ஒற்றையாக உண்ணாவிரதம் இருந்தால், நாடு அவரை அலட்சியம் செய்யலாம். ஆனால், நூற்றுக் கணக்கானோர் அமைதியாக உண்ணாவிரதம் மேற்கொண்டால், நாடு அதைக் கவனிக்காமல் தவிர்க்க முடியாது.
      சுமார் 50 வருடங்களுக்கு முன்பு ஆந்திராவில் நடந்த சம்பவம் இது. குறிப்பிட்ட ஒரு கோரிக்கைக்காக 58 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணம் அடைந்தார் ஒருவர். அதே கோரிக்கைக்காக அடுத்த நபர் உண்ணாவிரதத்தில் அமர்ந்தபோது, பத்தே நாட்களில் தீர்வு கிடைத்தது.
      1814. பிரான்ஸ் தேசத்துக்கும் பிரிட்டனுக்கும் நடந்த போர் முடிந்திருந்தது. சிறைப்பிடிக்கப்பட்ட ஆங்கிலேய ராணுவக் கைதிகளைச் சொந்த நாட்டுக்கு அனுப்ப பிரான்ஸ் அரசு முடிவு செய்தது. அவர்களை அழைத்துச் செல்ல கப்பல் வரும் வரை, அவர்களை விருந்தினர்களாக ஏற்று, கவனித்து உணவு வழங்கும் பொறுப்பு உள்ளூர் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
      இரண்டு நாட்கள் சென்றிருக்கும்... ஆங்கிலேயத் தளபதி ஒருவர் பிரான்ஸ் அதிகாரியைச் சந்தித்தார்.
      'கப்பல் வரும் வரை எங்களை மறுபடி சிறையிலேயே அடைத்துவிடுங்கள், பிரபு' என்றார் பிரிட்டிஷ் தளபதி.
      'ஏன்? உங்களைக் கவனித்துக்கொள்ள வேண்டிய குடும்பம் உங்களிடம் மோசமாக நடந்துகொண்டதா?'
      'ஐயோ, அப்படி இருந்தால் பிரச்னை இல்லையே? நாங்கள் தங்கியிருப்பது ஒரு விவசாயியின் வீட்டில். அந்தக் குடும்பத்தில் கணவன், மனைவி, ஆறு குழந்தைகள் இருக்கின்றனர். போர் காரணமாக எங்கும் உணவுப் பற்றாக்குறை. அவர்களிடம் இருக்கும் தானியங்கள் அவர்களுக்கே அரை வயிற்றுக்குத்தான் காணும். அதையும் எங்களுக்கு இன்முகத்துடன் வழங்கிவிட்டு, அவர்கள் இரண்டு நாட்களாகப் பட்டினி கிடப்பதைக்
கண்டுபிடித்தோம். சிறையின் கொடுமைகளை எங்களால் தாங்க முடிகிறது. இந்த ஏழைகளின் கருணையை எங்களால் தாங்க முடியவில்லை' என்றார் பிரிட்டிஷ் தளபதி.
      பிரான்ஸ் அரசு, ஆங்கிலேயர் முன் பெருமையுடன் தலை நிமிர்ந்தது. அதே சமயம், அதன் குடிமக்கள் முன் நன்றியுடன் தலை குனிந்தது. விருந்தோம்பலில் ஈடுபட்ட அத்தனைக் குடும்பங்களுக்கும் மகிழ்ச்சியுடன் பரிசளித்தது.
      நீங்கள் உணவு அருந்தாமல் இருப்பது, வெறும் அரசியல் நாடகமாக இல்லாமல், இது போல் மற்றவர் இதயத்தைத் தொட வேண்டும்.
      அமெரிக்காவில், சாலை விபத்தில் உங்கள் மனைவியை, குழந்தையை, நெருக்கமான உறவினரை, நண்பரை நீங்கள் இழந்திருக்கலாம். ஆனால், அந்த விபத்தில் பொதுச் சொத்து எதையாவது
உங்கள் வாகனம் சிதைத்திருந்தால், அதற்கான கட்டணத்தை நீங்கள் கட்டித்தான் ஆக வேண்டும்.
      பொதுச் சொத்துக்களை விறகுகளைப்போல் நினைத்து தீக்கு இரையாக்கும் வன்முறையாளர்கள் நிச்சயம் நிறுத்தப்பட வேண்டும்.
      நீங்கள் எரித்த வாகனத்துக்காக அதன் சொந்தக்காரன் தன் வாழ்க்கையையே அடமானம் வைத்திருக்கக்கூடும். அதை ஓட்டித்தான் அவனுடைய வயிற்றுப்பிழைப்பே நடக்கக்கூடும். மற்றவர் சொத்தை எரிப்பதற்கு உங்களுக்கு ஏது உரிமை?
      மகாத்மா காந்தி வன்முறையில் நம்பிக்கை இல்லாதவர். அதனால், தன் கொள்கைகளை அடுத்தவர் கவனத்துக்குக் கொண்டுவர மற்றவரை வருத்துவதை விடுத்து, தன்னை வருத்திக்கொள்ள உண்ணாவிரதம் இருந்தார்.
      'என் முன் எரியும் பிரச்னை ஒன்று இருக்கலாம். ஆனால், அதற்காக என் உயிரை முன்வைத்தேனே தவிர, உங்கள் உயிரை நான் துச்சமாக நினைக்கவில்லை' என்பதே மகாத்மா காந்தி மற்றவர்களுக்கு முன்வைத்த சேதி.
      'என் கொள்கைக்காக, உங்கள் உயிரையோ, அன்றாட அலுவல்களையோ எந்தவிதத்திலும் ஆபத்துக்கு உள்ளாக்க மாட்டேன்' என்பதுதான் அரசியல்வாதிகள் விடுக்கும் சேதியாக இருக்க வேண்டும். தொண்டர்களும் அதை முழுமனதாகப் புரிந்துகொண்டு தலைவருக்கு
ஆதரவு தெரிவிக்க வன்முறையை நாடாமல், உண்ணாவிரதங்களையே நாட வேண்டும்!''

மாபெரும் மனிதராக வேண்டுமா? ஆனந்தம்


      சமூகத்தில் மாபெரும் மனிதராக வேண்டும் என்று நினைப்பதே சிறுமையான மனநிலை. அற்பமாக உணர்பவர்கள் தான் வித்தியாசமாகத் தங்களைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்று முனைவார்கள். சிறப்பானவராகவோ, பெருமைக்கு உரியவராகவோ ஆக வேண்டும் என்று ஆசைப்படுவதற்கு அவசியமே இல்லை.
      மற்றவர்கள் உங்களைக் கவனிக்க வேண்டும் என்று எதற்காக நினைக்கிறீர்கள்?
      அந்தத் திரையரங்கம் நிரம்பிவிட்டது.
      ''எங்கள் இருக்கைகளை வேறு ஒருவன் ஆக்கிரமித்து இருக்கிறான். எவ்வளவு சொன்னாலும் நகர மறுக்கிறான்'' என்று ஒரு தம்பதி மேனேஜரிடம் புகார் செய்தனர்.
      மேனேஜர் கோபமாக உள்ளே சென்றார். ஒரு ஆள் அடுத்தடுத்து மூன்று இருக்கைகளை ஆக்கிரமித்து மல்லாந்து படுத்துக்கிடப்பதைக் கவனித்தார்.
      ''தம்பி, குடித்துவிட்டு வந்திருக்கிறாயா? படம் ஆரம்பிக்கப் போகிறது. உனக்கான இருக் கையில் உட்கார். மற்ற இரண்டு இருக்கைகளை உடனே காலி செய்.''
      படுத்துக்கிடந்தவன் ஏதோ முனகினானே தவிர, அசையவில்லை. மேனேஜர் கோபமாகி போலீஸ்காரரை அழைத்து வந்தார்.
      போலீஸ்காரர் மிரட்டலாகக் கேட்டார்.
      ''டேய், உன் பெயர் என்ன?''
      அவன் இமைகளைக் கஷ்டப்பட்டுத் திறந்தான்.
      ''சங்கரன்'' என்றான்.
      ''எங்கே இருந்து வருகிறாய்?'' என்று அதட்டலாக அடுத்த கேள்வி வந்தது.
      வலி கலந்த முனகலாகப் பதில் வந்தது: ''பால்கனியிலிருந்து.''
      இப்படி மற்றவர்கள் கவனத்தைக் கவர்ந்தவராக மாறவா ஆசை? 'இல்லை. என்னை மற்றவர்கள் போற்றும் அளவு நடக்க வேண்டும்' என்று சொல்கிறீர்களா?
      வாழ்க்கையில் எதை அணுகினாலும், 'நான் என்ன ஆவேன்? எனக்கு என்ன கிடைக்கும்?' என்ற கணக்குகளை நீக்கிவிட்டு வாழ்ந்து பாருங்கள். உங்கள் திறனை 100 சதவிகிதம் முழுமையாகப் பயன்படுத்திச் செயல்படுங்கள். உங்களுக்கான ஆதாயங்களைப் பற்றிய கவனம் இல்லாமல் உங்கள் வாழ்க்கையின் நோக்கம் அமைந்துவிட்டாலே நீங்கள் பெருமைக்கு உரியவராகிவிடுவீர்கள்.
      தவிர, ஒருவர் வாழும் நாட்கள் சரித்திரத்தில் எந்தக் கட்டத்தில் இருக்கின்றன என்பதைப் பொறுத்து அவருக்கான பெருமையும் மாறும். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற நபர் இந்தத் தேசத்துக்கு மிகத் தேவையாக இருந்தபோது கிடைத்ததால்தான் மகாத்மா காந்தி ஆனார். மகாத்மா என்றால், மிகச் சிறந்த உயிர் என்று அர்த்தம். இன்றைய காலகட் டத்தில் அவர் அரசியலுக்கு வந்தால், மற்றவர்க ளோடு தாக்குப்பிடிப்பாரா... யோசியுங்கள்.
      ஊழலிலே மூழ்கிப்போன ஓர் அரசியல்வாதி தனியே ஓய்வு எடுக்க கடற்கரைக்குச் சென்றார். தண்ணீரில் கால்களை நனைத்து அவர் நின்றிருந்த போது, திடீரென்று அலைகள் அவரை உள்ளே இழுத்துச் சென்றுவிட்டன.
      இதைக் கவனித்த இளைஞன் ஒருவன் தண்ணீரில் பாய்ந்தான். அவரைக் காப்பாற்றிக் கரை சேர்த்தான்.
      அரசியல்வாதி வெலவெலத்துப் போயிருந்தார். ''நன்றி, தம்பி. எனக்குப் பெரும் செல்வாக்கு இருக்கிறது. உனக்கு என்ன வேண்டுமோ கேள். நிறை வேற்றிவைக்கிறேன்.''
      ''ஐயா, என் இறுதிச் சடங்குகளை ராணுவ மரியாதையுடன் செய்ய வேண்டும். இதுவே என் ஆசை.''
      அரசியல்வாதி திகைத்தார்.
      ''தம்பி, இவ்வளவு இளைஞனாக இருக்கிறாய். அதற்குள் உனக்கு எதற்கு மரணத்தைப் பற்றிய கவலை?''
      ''நான் கடலில் இருந்து யாரைக் காப்பாற்றி இருக்கிறேன் என்பது வெளியில் தெரிந்தால், என் உயிருக்கு ஏது ஐயா உத்தரவாதம்?'' என்றான், இளைஞன் நடுக்கத்துடன்.
      இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் நிறைந்த இன்றைய இந்தியாவில், மகாத்மா காந்தி தனது நேர்மையான கொள்கைகளை வைத்துக்கொண்டு தேர்தலில் நின்றால், வெற்றி பெற முடியுமாஎன்பதே சந்தேகம்தான்.
      அவர் வாழ்ந்த காலகட்டத்திலும் தான் பெருமைக்கு உரியவராக அறியப்பட வேண்டும் என்ற முனைப்புடனா செயல்பட்டார்? இல்லை. தன் தனிப்பட்ட தேவைகளைப் பின்தள்ளி வைத்துவிட்டு, தேசத்துக்கு எது தேவையானதோ, அதற்கு அவர் முக்கியத்துவம் தந்தார். அதனால், பெருமை பெற்றார்.
      உங்களுக்கு என்ன கிடைக்கும் என்ற ஆதாயக் கணக்கை நீக்கிவிட்டு உங்களைச் சுற்றியுள்ள வாழ்க்கையைக் கவனியுங்கள். தானாகவே உங்களால் என்ன செய்ய முடியும் என்பதைத்தான் கவனிப்பீர்கள். தேவையானதைச் செய்வதற்கு உங்கள் திறமையை இன்னும் எப்படி மேலோங்கச் செய்யலாம் என்று யோசிப்பீர்கள். திறமைகளைக் கூர்தீட்டிக்கொள்வீர்கள்.
      இந்தியாவிலேயே செய்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் பாக்கி இருக்கும் போது, வேலையில்லாத் திண்டாட்டம் என்று பேசுவது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. செய்து முடிப்பதற்கு இன்னும் பல நூறு விஷயங்கள் மிச்சம் இருக்கின்றன. அவற்றைக் கவனிக்காமல், உங்கள் தேவைகளை முன்னிறுத்தி மட்டுமே வேலைகளைத் தேடுவதால்தான் அவை கிடைப்பது இல்லை.
      'எனக்கு என்ன கிடைக்கும்?' என்ற கணக்கு விலகியவுடன் நீங்கள் பிரகாசிக்கத் துவங்கிவிடுவீர்கள்.
      உங்களுக்கு எந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும், எந்த அளவுக்கு மதிப்பு கிடைக்கும் என்பதெல்லாம் உங்கள் திறனைப் பொறுத்துதான் அமையும். தேசத்தில் உயர்ந்தவராக நீங்கள் அறியப்படலாம். அல்லது, உங்கள் ஊரில் பெருமைமிக்கவராக மாறலாம். உங்கள் தெருவில் கவனிக்கப்படுபவராக இருக்கலாம். எதுவும் இல்லாமல், உங்கள் வீட்டளவில் மட்டுமே நீங்கள் சிறப்பானவராக மதிக்கப்படலாம். அதனால் என்ன?
      மற்றவர்கள் உங்களை மகாத்மா என்று அழைக்கட்டும். அழைக்காமல் போகட்டும். அது ஒரு பொருட்டல்ல. உங்கள் அளவில் நீங்கள் மகாத்மாவாக உணர்வீர்கள். மகாத்மாவாக வாழ்வீர்கள்!

Saturday, July 23, 2011

அற்புதமனிதன் ஆனந்தம்


      அனைவரும் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் அன்பும் அக்கறையுமாக இருக்க வேண்டும். அந்த மாதிரி இந்த உலகம் மாற வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு மனிதருக்குமே இருக்கிறது.ஆனால் அதைத் தவறான இடத்திலிருந்து தொடங்க முயற்சிக்கின்றனர்.
      தான் அன்பும் அக்கறையுமாக இருப்பதற்கு முன் மற்றவர் எல்லோரும் அன்பும் அக்கறையுமாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். ஒருவருக்கு அன்பும் அக்கறையும் எப்போது வரும்? மகிழ்ச்சியாகவும் ஆனந்தமாகவும் இருக்கிற நேரங்களில் இயல்பாகவே அன்புடனும், தாராள சிந்தையுடனும் அற்புதமான மனிதராகவும் இருக்கிறார்கள்.
      இதை உங்களிடமே பலமுறை நீங்கள் கவனித்திருக்க முடியும். அதே நேரத்தில் நீங்கள் மகிழ்வற்ற தன்மையிலும் மனவேதனையிலும் இருக்கும் போது காரணமில்லாமலே கூட அனைவர் மீதும் எரிந்து விழுபவராக இருக்கிறீர்கள்.
      எனவே நீங்கள் முதலில் மகிழ்ச்சியானவராகவும் ஆனந்தமானவராகவும் மாற வேண்டியது முக்கியம். உங்களுக்குள் முதலில் இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இல்லாமல் அடுத்தவர் மீது முயற்சி செய்து அன்புடன் இருக்க விரும்பினால் அப்படி அது நடக்காது. எனவே ஒவ்வொருவரும் தாங்கள் முதலில் ஆனந்தம் மிகுந்தவராக மாறுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
      உங்களுக்குள் முதலில் நீங்கள் ஆனந்தமாக இல்லாமல் வெறுமனே நல்ல மனிதர்களை உருவாக்கும் முயற்சி என்றைக்குமே சரியாக பலன் அளித்ததில்லை.மக்கள் ஆனந்தமாக இருக்கும்போது அற்புத மனிதர்களாக இருக்கின்றனர். ஆனந்தமானது அனைத்து தீமைகளுக்கும் எதிரான காப்பீடாக இருக்கின்றது. மக்கள் ஆனந்தமாக இருக்கும்போது தங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் இயல்பாகவே அன்பையும் ஆனந்தத்தையும் பொழிகின்றனர். எனவே மனிதர்களை உண்மையாகவே ஆனந்தம் கொண்டவர்களாக செய்வது தான் ஒட்டுமொத்த வேலையாக இருக்கவேண்டும்.
      அதற்கு ஆன்மீக செயல்முறை அவசியமாக இருக்கிறது. ஆன்மீகம் என்றால் வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்வது என்று பொருளல்ல. ஆன்மீகம் என்றால் முழு அளவில் நீங்கள் உயிரோட்டமாக இருப்பதுதான். வாழ்க்கையின் மையம் வரையில் உயிர்ப்புடன் இருப்பது நீங்கள் ஐந்து வயதாக இருக்கும்போது எவ்வளவு உயிர்ப்புடனும், முழுமையான ஆனந்தத்துடனும் இருந்தீர்கள் என்பதுடன் இப்போது எந்தளவு உயிர்த்தன்மையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறீர்கள். என்று ஒப்பிட்டுப் பார்த்தால் அதன் அளவு குறைந்து காணப்படுகிறதா அல்லது அதிகரித்துள்ளதா?
      பெரும்பாலான மக்களுக்கு அது மிகவும் கீழ் நிலையில் உள்ளது. ஆனால் அது அப்படி இருக்கக் கூடாது வயது கூடுவதனால், உடல்திறன் குறையலாம். ஆனால் மகிழ்ச்சின் அளவும் உயிர்த்துடிப்போடு விளங்கும் தன்மையும் குறையத் தேவையில்லை. ஆனால் வயதாக வயதாக உங்களுடைய மகிழ்ச்சியின் அளவும், உயர்த்துடிப்பும் குறைந்து கொண்டே போகிறது என்றால் நீங்கள் தவணை முறையில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதுதானே அர்த்தம்.
      இது எதனால் என்றால் வாழ்வின் குறிப்பிட்ட சில அம்சங்களில் மட்டும்தான் நீங்கள் கவனம் செலுத்துகிறீர்கள். ஆனால் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் நீங்கள் கவனம் செலுத்தவில்லை யென்றால், நீங்கள் ஒரு முழுமையான வாழ்க்கையை வாழ முடியாது. எனவே உங்கள் மகிழ்ச்சியும் உயிர்த்துடிப்பும் அதிகரிக்க ஆன்மீகத் தேடுதலும் உதவுகிறது.
      ஆன்மீகம் என்பது எப்போதும் தாகமும், தேடுதலும் உள்ளடக்கியது. அதனால்தான் ஆன்மீகப் பாதையில் இருப்பவர்கள் நான் தேடுதலில் உள்ளேன் என்று கூறுகிறார்கள். மாறாக நான் மத நம்பிக்கை கொண்ட வன் என்று கூறும்போது ஏதோ ஒன்றில் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளீர்கள் என்று அர்த்தம். இரண்டிற்கும் குறிப்பிடத்தக்க வேறு பாடு உள்ளது.
     எனென்றால் நம்பிக்கை என்பது உங்களுக்குத் தெரியாத ஒன்றைக் குறித்து ஒரு முடிவுக்கு வருவது அதற்கு மாறாக தேடுதல் என்று கூறும்போது எனக்குத் தெரியாது என்று உணர்ந்து தேட முயற்சிப்பது,
      துரதிஷ்டவசமாக பெரும்பாலான நேரங்களில் நம்பிக்கை முறைகளையே ஆன்மீகம் என்று தவறாகக் கருதிக் கொள்கின்றனர். நீங்கள் எதையோ ஒன்றை இதுதான் என்று உறுதியாக நம்ப ஆரம்பிக்கும் கணத்திலேயே உங்களுடைய வாழ்வின் போக்கில் ஓரளவு இறுக்கத்தைப் புகுத்தி விடுகிறீர்கள். அப்போது அங்கு தளர்வு நிலை இருக்காது. உங்களுக்குள் இறுக்கமாக இருப்பது என்றைக்குமே ஆன்மீகம் அல்ல.
     எப்போது உங்களுக்குத் தெரியாது என்று உணர்ந்து ஒப்புக்கொள்கிறீர்களோ, அப்போது உங்களுக்குள் நீங்கள் தளர்வாக இருக்கிaர்கள். எப்பொழுதெல்லாம் நீங்கள், ‘இது எனக்குத் தெரியும்’ என்று நம்புகிறீர்களோ அப்பொழுது உங்களுக்குள் இறுக்கம் வந்து விடுகிறது. இந்தக் கடுமை உங்கள் செயல்களில் மட்டும் இருப்பதில்லை. உங்கள் வாழ்க்கையின் எல்லாப் பக்கங்களிலும் இந்தக் கடுமையைப் பரவ விடுகிறீர்கள். இந்தக் கடுமைதான் உலகின் பெரும்பாலான துன்பங்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
      மனிதர்கள் எப்படி இருக்கின்றனரோ அதே விதமாகத்தான் சமூகமும் இருக்கும். ஆகவே, தங்கள் கருத்துக் களிலேயே சிக்கிப் போகும் மனிதர் களைக் காட்டிலும் வளைந்து கொடுக்கும் தன்மை, திறந்த மனத்துடன் இருக்கும் தன்மை கொண்ட மனிதர்களையே நாம் உருவாக்கத் தேவையி ருக்கிறது.
      தங்களுக்குள் ஆனந்தமாக இருக்கும் மனிதர்கள்தான் வளைந்து கொடுக்கும் தன்மை தளர்வு நிலை போன்றவற்றுடன் இருக்க முடிகிறது. எனவே நீங்கள் முதலில் ஆனந்தமானவராக மாறும்போது உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலை ஆனந்தமானதாக மாறுகிறது. உங்களின் ஆனந்தமான சூழ்நிலையே அடுத்தவரின் மனத்திலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
      இப்படி சமூகத்தில் ஒவ்வொருவரும் தங்களுக்குள் ஆனந்தமானவராக மாறும்போது ஒருவருக்கொருவர் அன்பும் அக்கறையுமாக இருப்பது இயல்பாகவே நிகழ்ந்து விடும். அப்போது அந்த சமூகமே அற்புதமானதாக இருக்கிறது.

Friday, July 22, 2011

வாழ்வின் அருமையான தருணங்கள் ஆனந்தம்


      அமைதி என்பது நம் உள்ளம் சார்ந்த விஷயமே. எந்த இடத்தில் இருந்தாலும் மனம் கூடவே தான் இருக்கும். அமைதியைத் தேடி மலைகளுக்குச் செல்கிறீர்கள் என்றால், மலை அமைதியாக இருப்பதாகத் தான் அர்த்தமே தவிர நீங்கள் அமைதியாக இருப்பதாக அர்த்தம் அல்ல. இரைச்சல் மிக்க சந்தைக்கு நடுவிலும் அமைதியாக இருக்க முடிந்தால் தான் நீங்கள் அமைதியானவராக இருப்பதாக அர்த்தம்.
      மகிழ்ச்சியாக இருக்கும் போது, உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு நீங்கள் அற்புதமான மனிதர் தான். ஆனால், மகிழ்ச்சியின்றி இருக்கும்போது, இந்த உலகுக்கு நீங்கள் ஒரு ஆபத்தான மனிதர். நமது மனநிலை நாம் இருக்கும் சூழ்நிலையை வெகுவாகப் பாதிக்கிறது.
      உங்கள் வாழ்வின் மிக அழகான தருணங்கள் நீங்கள் மகிழ்ச்சியைத் தேடிக் கொண்டு இருந்த கணங்கள் அல்ல. நீங்கள் மனமகிழ்ச்சியை வெளிப்படுத்திய நல்ல தருணங்களே. அமைதியும் ஆனந்தமும் வாழ்வின் உச்சக்கட்ட நிலை அல்ல. அவை வாழ்வின் தொடக்கமே.
      அன்பு என்பது வெறும் பேச்சளவில் இருக்கக் கூடாது. அது செயல் வடிவம் பெற வேண்டும். மற்றவர்களுக்காக பொறுப்பேற்றுக் கொள்வது தான் உண்மையான அன்பின் அடையாளம் ஆகும். முழுமையான பொறுப்புணர்வில் தான் மனிதன் அற்புதமான அனுபவங்களைப் பெறுகிறான்.

Wednesday, July 20, 2011

முன்னோர்களுக்காக திதி செய்ய வேண்டுமா? ஆனந்தம்

      பெற்றோர், முன்னோர் மூலமாகத் தான் நாம் இந்த உலகிற்கு வந்தோம். அவர்கள் உயிரைக் கொடுக்கா விட் டாலும் இந்த உடலைக் கொடுத்தவர்கள் அவர்களே. எனவே, நன்றி உணர்வோடு திதி செய்ய வேண்டும்.
      மறைந்தவர்களின் புகைப் படத்தை சுவரில் மாட்டி வைத்தால் மட்டும் போதாது. அவர்களை வருடத்திற்கு ஒரு முறையாவது அவசியம் சிந்திக்க வேண்டும். அவர்கள் பெயரில் முடிந்த நல்லவற்றை செய்யுங்கள். காகம், பசு போன்ற உயிர்களுக்கு உணவளியுங்கள். அதாவது திதி எனபது இவ்வாறாக இருக்க வேண்டும். அதனால், நல்ல மாற்றத்தை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் காண்பீர்கள்.
      அவர்களது நினைவு நாளில் உணவுக்காக வாடும் ஏழைகளுக்கு உணவளியுங்கள். உறவினர்களை மட்டும் அழைக்காமல் ஏழை, எளியவர்களையும் அழைத்து உணவிடுவது தான் சாலச்சிறந்தது.
      ஏழைகள் உண்பதால் இறந்தவரின் ஆன்மா சாந்தி அடைகிறதோ இல்லையோ நிச்சயமாக நமக்கு நன்மையகள் உண்டு. நம் நிம்மதிக்காகவும், ஆனந்தத்திற்க்காகவும் அமைதிக்காவும் இந்த நல்ல விஷயத்தை மேற்கொள்ள வேண்டும்.

Monday, July 18, 2011

அன்பினால் வியாபாரம் ஆனந்தம்

      அனைவரிடமும் அன்பாக இருக்க வேண்டும், நேசம் செலுத்தி அவர்களால் விரும்பப்படுபவராக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறோம். ஆனாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களால் அவ்வாறு இருக்க முடிவதில்லை. இந்த அன்பு நிலையை அடைவதற்கு, மற்றொருவரின் உதவி தேவையில்லை.
      ஆனால், அன்பு என்பது மற்றொரு நபரின் தூண்டுகோல் இருந்தால் மட்டுமே வெளிப்படும் என்ற மாயையான நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளார்கள். அன்பு என்பதை தனிமையில் இருக்கும்போது நமக்கு நாமே கூட செலுத்திக் கொள்ளலாம். பிறர் மீது, அன்பு செலுத்த விரும்புபவர்கள், அதற்கான சூழலை உருவாக்கிக் கொண்டாலே போதும்.
      தற்போது மற்றவர்களை எப்படி பயன்படுத்துவது என்பதின் இலக்கணமாகத்தான் அன்பு கருதப்படுகிறது. ஒருவர் யார் மீது அன்பு செலுத்துகிறாரோ, அவர் இவரது விருப்பத்திற்கேற்ப நடந்து கொள்பவராக இருக்க வேண்டும் என்ற வரைமுறையும் வகுக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் தங்களுக்கு பிடிக்காத கொள்கை உடையவர்களை விரும்புவதில்லை. இத்தகைய செயல் வியாபாரமாக கருதப்படுமே தவிர நிச்சயமாக அன்பாக இருக்காது.
      ஒருவருக்கு பொருளோ, இன்பமோ தேவைப்படும் நேரத்தில் அதனை அடைவதற்காக சம்மந்தப்பட்ட நபரிடம் அன்பு செலுத்தக்கூடாது. உண்மையான அன்புடன் இருந்தால் விரும்பும் அனைத்தும் எளிதாக கிடைக்கும் என்ற மனப்பக்குவம் அனைவருக்கும் வர வேண்டும். இந்த மாதிரியான அன்பு இருந்தால் வாழ்க்கை முழுதும் ஆனந்தம் நிறைந்திருக்கும்.

Sunday, July 17, 2011

பசுவதை ஏன் கூடாது? ஆனந்தம்

      நமது கலாச்சாரத்தில் பசு, பாம்பு மற்றும் காகம் ஆகிய மூன்று உயிரினங்களுக்கம் தனி இடம் தரப்பட்டுள்ளது. உடலின் பரிணாம வளர்ச்சியைப் பார்க்கும்போது, குரங்கு நமக்கு மிக அருகில் இருக்கிறது. ஆனால், ஆத்மாவின் பரிணாம வளர்ச்சியைப் பார்க்கும் போது இம்மூன்றுமே நமக்கு அருகாமையில் உள்ளன. இந்த உயிர்களைக் கொல்வது என்பது கிட்டத்தட்ட மனித உயிர்களைக் கொல்வது போலத்தான்.
      கிராமங்களில் இன்னமும் மனிதர்கள் பசுக்களுடன் மிக ஆழமான உறவு வைத்துள்ளனர். உயிரினங்களில் பசுமட்டுமே மனிதனைப் போல ஆழமான உணர்வுகளைக் கொண்டுள்ளது. நீங்கள் துக்கமாக இருந்தால் பசு உங்களுக்காக உண்மையாகவே கண்ணீர் விடும்.
      இயற்கையில் எந்த வனவிலங்கைத் தொட்டாலும் எதிர்ச்செயல் புரியும். ஆனால், நளினமாகக் கையாண்டால் விஷப்பாம்பு கூட எதிர்ப்பினைக் காட்டுவதில்லை.
      ஆன்மிகசக்தி உள்ள இடங்களை நாடி பாம்புகள் தானாகவே வந்து விடும். சில யோகிகள் பாம்பு மற்றும் பசுவிற்கு பிறவிச்சுழற்சியிலிருந்து விடுதலை அளித்த சம்பவங்களும் உண்டு. மற்ற உயிரினங்களை அப்படி விடுவிக்க முடியாது. பசுவையோ, பாம்பையோ தெரிந்தோ, தெரியாமலோ கொல்ல நேர்ந்தால் மனிதர்களைப் புதைப்பது போல அதைப் புதைக்கவேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

Saturday, July 16, 2011

திருநீறு அணிவது ஏன்? ஆனந்தம்

      நாம் வெளியில் செல்லும் போது, அங்கு இருக்கும் அதிர்வுகளை பலவழிகளில் நம் உடல் ஏற்றுக் கொள்கிறது. இது நம் உடலின் ஏழு சக்கரங்கள் வழியாக நிகழ்கிறது. அதனால் தான், நல்ல அதிர்வுகளை நம் உடல் ஏற்றுக் கொள்ளும் விதமாக திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் நம் கலாசாரத்தில் இருந்து வருகிறது. பசுவின் சாணம் மற்றும் சில பிரத்யேகப் பொருட்கள் கலந்த கலவையின் சாம்பல் தான் விபூதி அல்லது திருநீறு. இதற்கு நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் உண்டு. விபூதி இட்டுக் கொள்ளும் போது, வாழ்வின் உயர்ந்த அம்சங்களை ஈர்த்துக் கொள்ளலாம். நம்மைச் சுற்றிலும் தெய்வீகத் தன்மை உண்டாகும். இதனால், தீயவற்றைத் தவிர்க்க முடியும்.
      விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்
1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.
2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.
3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி (அநாகதம்) தெய்வீக அன்பைப் பெறலாம்.
மேலும், விபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே நம் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் சூட்சுமம் அங்கு உள்ளது.

Friday, July 15, 2011

ஏன் வடக்கே தலை வைத்து படுக்கக்கூடாது? ஆனந்தம்

      நம் நாட்டில் வடக்கில் தலை வைத்து படுத்தால் ஆகாது என்பார்கள். இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள். 
      இந்தியா பூமத்திய ரேகைக்கு மேலே உள்ள நாடாகும். இந்த அமைப்பில் உள்ள நாடுகளில் வடதிசையில் காந்த ஈர்ப்பு அதிக மிருக்கும். இதனால், இத்திசையில் தலை வைத்துப் படுக்கும் போது, தேவைக்கு அதிகமாக மூளைக்கு ரத்தம் பாயும். இதனால் மனப் போராட்டம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக அதிகப்படியான வேலை அல்லது கடுமையான உடற் பயிற்சி செய்து விட்டு, ஓய்வெடுக்கும் போது வடக்கில் தலை வைக்கவே கூடாது. இதனால் மனதில் பதட்டம் அதிகரிக்கும்.
      அமாவாசை, பவுர்ணமி நாட்களில் நிலாவின் ஈர்ப்பு அதிகமாக இருக்கும். அப்போது பூமியில் உள்ள கடல் போன்ற பெரிய சக்திகள் கூட, மேல் நோக்கி இழுக்கப்படும். எனவேதான், இந்நாட்களில் கடல் அலைகள் வழக்கத்தைவிட அதிகமாக மேலே எழும்பும். இதைப்போலவே, வடக்கில் தலை வைத்துப் படுக்கும்போது, ரத்த ஓட்டமும் மூளைக்கு அதிகமாக இழுக்கப்படும். இதனால் மூளை பாதிப்பு ஏற்படும். எனவே, வடக்கில் தலை வைத்து படுக்கக்கூடாது. 
      பூமத்திய ரேகைக்கு கீழுள்ள தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் காந்த ஈர்ப்பு தென்திசையில் இருக்கிறது. எனவே, இந்நாடுகளில் தெற்கே தலை வைத்துப் படுக்கக்கூடாது.

Monday, July 11, 2011

விரதங்கள் ஏன்? ஆனந்தம்

      ஆன்மிகத்தின் பெயரால் பலர் விரதமிருக்கிறார்கள். ஆன்மிகத்திற்கும் உணவுக்கும் என்ன சம்பந்தம் என்கிற கேள்வி இதில் எழும். உணவு, உடல் சார்ந்த விஷயம்தான். ஆனால், இங்கே நீங்கள் வாழ உடலே அடிப்படை. துரதிருஷ்டவசமாக பலரும் கொடூரமான விரத முறைகளை பயன்படுத்தி உடலை வருத்திக்கொள்கிறார்கள். எல்லாவற்றிலும் வெறித்தனமாக ஈடுபட்டு தங்கள் வளர்ச்சிக்கான படிக்கற்களையே தடைக்கற்களாக மாற்றிக்கொள்ள முற்படுகிறார்கள்.
      ஒருசிலர் உடலை அதீதமாக வருத்தி அதனை சிறுமைப்படுத்துவது, இன்னும் சிலர் உடலையே பிரதானப்படுத்தி அதனை தேவைக்கு அதிகமாக கொண்டாடுவதும் நடைபெறுகிறது. இரண்டுமே தேவையில்லாதது. ஒவ்வொன்றுக்கும் உரிய இடத்தை தருகிறபோதுதான் அது உங்களுக்கு பயன்படும். மிகையான முக்கியத்துவமோ, சிறுமைப்படுத்துவதோ உடலை சீர்குலைக்கத்தான் செய்யும். உடல் என்பது எவ்விதத்திலும் சிக்கலில்லை என்கிற முறையில் உடலைக் கையாள வேண்டும்.
      ஏனெனில் உடலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க துவங்கிவிட்டால், அது உங்களை வேறெதையும் செய்யவிடாது. உங்களுக்கு அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டியிருந்தால், அப்போது நான் ஞானோதயத்தை பற்றி பேசினால், ஞானோதயம் உங்களுக்கு முக்கியமாக இருக்காது. உங்கள் சிறுநீர் அவ்வளவு சக்தி வாய்ந்தது.
      சக்கரவர்த்தி அக்பர் மிகவும் அறிவுப்பூர்வமான கேள்விகள் என்று கருதி சிலவற்றைக் கேட்பார். அவர் சக்கரவர்த்தி என்பதாலேயே பலரும் அவை அறிவுப்பூர்வமான கேள்விகள் என்று ஆமோதித்து பதில் சொல்வார்கள். தங்கள் தலையை காப்பாற்றிக்கொள்ளும் முயற்சிதான் அது.
      ""உலகிலேயே மிக இன்பமான அனுபவம் எது?'' என்று அவர் கேட்டார். ""சக்கரவர்த்தி அவர்களே! உங்களுக்கு சேவை செய்வதுதான்'', என்று சிலர் சொல்வார்கள். இப்படியே அவருக்கு சந்தோஷம் தரும் செய்திகளை பலரும் சொல்லச்சொல்ல, அவையில் பீர்பால் அலுப்புடன் அமர்ந்திருந்தார்.
     ""சக்கரவர்த்திகளின் முகத்தை பார்ப்பதுதான் இன்பம் தரும் செயல்,'' என்றெல்லாம் பலரும் பதில் சொல்லிக்கொண்டிருக்க, பீர்பால் பதில் தரவேண்டிய நேரம் வந்தது. சற்றும் தயங்காமல், ""மனிதனுக்கு அதீத இன்பம் தரும் செயல் மலம் கழிப்பதுதான்,'' என்று பதிலளித்தார். அனைவரும் அதிர்ந்தனர். அவையில் இப்படி ஆபாசமாக பேசியதால், அதை நிரூபிக்க வேண்டுமென்றும், இல்லையென்றால் பீர்பால் தலைக்கே ஆபத்து என்றும் அக்பர் எச்சரிக்க, 15 நாட்கள் அவகாசம் கேட்டார் பீர்பால்.
      ஒரு வாரம் கழித்து அக்பருக்கு வேட்டை பயணம் ஒன்றை அவர் ஏற்பாடு செய்தார். அரண்மனையில் இருந்த அத்தனை பெண்களும் அதில் பங்கேற்கும்படி செய்தார். நடுவில் அக்பரின் கூடாரத்தை அமைத்து, அதைச்சுற்றி பெண்களும், குழந்தைகளும் தங்குமிடங்களை அமைத்தார். சமையற்காரர்களிடம் சொல்லி, அக்பருக்கு விருப்பமான உணவுகளை சமைக்கச் செய்தார்.
      மறுநாள் காலை அக்பர் வெளியே வந்து பார்த்தால் மலம் கழிக்கும் கூடாரத்தைக் காணோம். அக்பர் அங்குமிங்கும் நடந்தார். பொறுமையிழந்த நிலையில் காட்டுக்குள் மறைவிடம் தேடிப் போனார். அங்கே எல்லா இடங்களிலும் பெண்கள் நின்றுகொண்டிருக்கும்படி செய்திருந்தார் பீர்பால். அக்பரால் தாங்கவே முடியாது என்ற நிலை வந்தபோதுதான் கழிப்பறை கூடாரத்தை எங்கே அமைப்பது என்கிற பேச்சு எழுவதை கவனித்தார். ஒரு வழியாய் கூடாரம் அமைக்கப்பட்டு, அவசரமாய் கூடாரத்திற்குள் நுழைந்தார் அக்பர். நிம்மதிப் பெருமூச்சு விட்டார். கூடாரத்திற்கு வெளியே பீர்பாலின் குரல் கேட்டது. ""நான் சொன்னதை ஒப்புக் கொள்கிறீர்களா?''.
      ""ஆமாம்! உண்மைதான். இதுதான் உலகிலேயே இன்பமான விஷயம்,'' என்றார் அக்பர்.
      தாங்கமுடியாத ஒன்றிலிருந்து கிடைக்கும் விடுதலைதான் உலகிலேயே இன்பமான விஷயம். அது எதுவாக இருந்தாலும் சரி. உடல் அவ்வளவு முக்கியமானதாக ஆகிவிடக்கூடும். காலை வேளைகளில் சூரிய நமஸ்காரம், ஆசனங்கள் ஆகியவற்றை சரியாக பயிற்சி செய்து வந்தீர்கள் என்றால், எவ்வித சிரமமுமின்றி நீங்கள் இங்கே அமர்ந்திருக்கலாம். உடல் எவ்விதத்திலும் உங்களை சிரமப்படுத்தாது.
      உங்கள் உடலை எதற்கு தயார் செய்கிறீர்கள் என்பதை பொறுத்தே நீங்கள் சாப்பிடும் உணவு அமைகிறது. ஒரு நாயைப்போலவோ, சிறுத்தையைப் போலவோ ஓடுவதற்கு உங்கள் உடலை தயார் செய்கிறீர்களா? அல்லது 100 கிலோ எடையை தாங்கி நடைபோட தயார் செய்கிறீர்களா?
உடலை தெய்வீகத்திற்கான ஏணியாகவும் பயன்படுத்தலாம். பள்ளத்தில் கொண்டு சேர்க்கும் கருவியாகவும் பயன்படுத்தலாம். சாப்பிட வேண்டும் என்று தோன்றும்போதோ அல்லது வேறு வகையான உணர்வுகளிலோ அந்த நிர்ப்பந்தத்தை அகற்றுவது மிகவும் முக்கியம். ஆசிரமத்தில்கூட, நீங்கள் பசியாக இருக்கும்போது உங்கள் முன் உணவு பரிமாறப்படும். அள்ளி விழுங்க நீங்கள் ஆயத்தமாகும்போது, கைகூப்பி இறைவணக்கப்பாடல் சொல்லத் துவங்குவார்கள். "ஐயோ பசிக்கிறதே!' என்று நீங்கள் அயர்ந்துபோகலாம். சாப்பிட்டே ஆகவேண்டும் என்ற உந்துதல் வரும்போது அதனை இரண்டு நிமிடங்கள் ஒத்திப்போடுகிற உத்திதான் இது.
      இப்படி ஒத்திப் போடுவதால் நீங்கள் இறந்துவிட மாட்டீர்கள். மாறாக மேலும் வலிமையடைவீர்கள். கவுதம புத்தர் ஒருமுறை சொன்னார், ""நீங்கள் பசியாக இருக்கும்போது உங்கள் உணவை வேறொருவருக்கு கொடுத்துவிட்டால் நீங்கள் வலிமையடைவீர்கள்,'' என்று. நான் அந்தளவுக்கு போகவில்லை. கடுமையாக பசிக்கும்போது உணவு சாப்பிடுவதை இரண்டு நிமிடங்கள் ஒத்திப்போடுங்கள் என்றுதான் சொல்கிறேன். இது உங்களை மேலும்
வலிமையாக்கும். உடல் சார்ந்த நிர்ப்பந்தங்களை அகற்றுவது மிகவும் முக்கியம்.
இது தொடர்பாக பல விஷயங்கள் உள்ளன. என் பாட்டியும் என் அம்மாவும் இத்தகைய முயற்சிகளை கையாண்டுள்ளார்கள். என் அம்மா உணவு சாப்பிடும் முன் ஒரு கைப்பிடி சோறை ஈ, எறும்புகளுக்கு இடுவார்கள்.
      உலகின் எல்லா உயிரினங்களும் இந்த உலகில் உண்டு வாழவும், வளரவும் வாய்ப்புண்டு என்பதன் வெளிப்பாடே இது. மக்கள் மனதில் எறும்பு மிகச்சிறியது. யானை மிகப்பெரியது. இருப்பதிலேயே சின்னஞ்சிறு ஜீவராசிக்கு முதலில் உணவு படைத்தார்கள். உணவுக்கு நீங்கள் அடிமையானால் ஒருவேளை உணவை துறந்திடுங்கள். இது உங்களை கொடுமைப்படுத்துவதற்கு அல்ல.உடம்பின் கொடுமையிலிருந்து விடுபட, நிர்ப்பந்தங்களிலிருந்து நீங்கவே விரதங்கள்.

Saturday, July 9, 2011

உடலே தெய்வீகம் ஆனந்தம்

      நீங்கள் உயிர் வாழ்வதற்கான முக்கிய அம்சங்களில் ஒன்று உங்கள் உடல். ஆனால், இதன் வலிமையை விலங்குகளுடன் ஒப்பிடவே முடியாது. ஒரு வெட்டுக்கிளியை எடுத்துக்கொள்ளுங்கள். தன் உடலின் நீளத்தைவிட 50லிருந்து 100 மடங்கு வரையிலான உயரத்திற்கு அதனால் குதிக்க முடியும். அப்படியானால் நீங்கள் ஆறடி உயரம் இருந்தால் 600 அடி உயரத்திற்கு குதிக்க வேண்டும். அப்போதுதான் ஒரு வெட்டுக்கிளிக்கு நீங்கள் நிகராக முடியும்.
      "உடல் வலிமை' என்று வரும்போது மனிதர்களைவிட விலங்குகளே வலிமையானவை. ஆனால், பிழைப்பு என்கிற எல்லையைத்தாண்டி வாழ்வை அணுகவும், கையாளவும் மனிதர்களுக்கு தகுதி, அறிவு, சக்தி இருக்கிறது. ஆனால், மனிதனோ தன்னுடைய பிழைப்பின் தரத்தை உயர்த்த மட்டுமே தன் சக்தியைப் பயன்படுத்துகிறான். ஒரு காலத்தில், உயிர் வாழ்வதற்கு வெறுமனே இரண்டு வேளை உணவு மட்டுமே போதுமானதாய் இருந்தது. இப்போது அதன் எல்லைகள் நீட்டிக்கப்பட்டிருக்கிறது, அவ்வளவு தான்! மனிதன் தன் அடிப்படையான செயல் கட்டமைப்பை மிகவும் முட்டாள்தனமாக கையாள் கிறான் என்பதற்கு இது அடையாளம். மிகவும் வித்தியாசமான முறையில் அதனை பயன் படுத்தும் வாய்ப்பு மனிதனுக்கு இருக்கிறது.
      யோகமரபில், மனிதனின் முதுகுத்தண்டு "மேருதண்டம்' என்று அழைக்கப்படுகிறது. இதற்கு "பிரபஞ்சத்தின் அச்சாணி' என்று பொருள். ஒரு மனிதனுடைய முதுகுத்தண்டு எப்படி பிரபஞ்சத்தின் அச்சாணி ஆகமுடியும்?
உலகிலுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அதிர்வு இருக்கிறது என்பதை நவீன விஞ்ஞானம் நிரூபித்திருக்கிறது. மனிதனைப் பொறுத்தவரை அடிப்படையான அதிர்வுகள் முதுகுத் தண்டிலிருந்து தொடங்குகின்றன. அது எவ்வளவுக்கெவ்வளவு சூட்சுமமான நிலையை அடைகிறதோ, அந்த அளவுக்கு மேல் நோக்கிச் செல்கிறது. இல்லையென்றால் முதுகுத்தண்டிலேயே (தொடங்கிய இடத்திலேயே) நின்றுவிடுகிறது. அது சூட்சுமமாகிறபோதுதான் அதனை எல்லா இடங்களுக்கும் நீங்கள் கொண்டுசெல்ல முடியும். அந்த அதிர்வுகள் எல்லா இடங்களிலும் பரவுகிறபோது உங்கள் புரிதலும் எல்லா இடங்களுக்கும் பரவுகிறது, அப்போது நீங்கள் மிகச்சிறந்த ஆனந்தமான மாமனிதனாக முடியும்.
      இந்த உடலே ஒரு கருவி. இதனை உங்களுக்கு உணவு சேகரிக்கவும் மற்ற விஷயங் களுக்காகவும் மட்டும் பயன்படுத்தப் போகிறீர்களா? அல்லது அதன் உச்சபட்சமான சாத்தியத்தை அதாவது ஆனந்தத்தை நோக்கி பயன்படுத்தப் போகிறீர்களா? உடலை ஒரு கருவியாக பயன்படுத்துவீர்கள் என்றால் முதலில் அதனை உங்களுடன் அடையாளப் படுத்திக் கொள்வதை நிறுத்த வேண்டும். இந்த உடம்பை எங்கிருந்து சேகரித்தீர்கள் என்பது உங்களுக்கு தெரியும். நீங்கள் சேகரித்த ஒன்று நீங்களாக இருக்க முடியாது. குறிப்பிட்ட காலம் வரையில் அது உங்களுடையதாக இருக்கலாம்.
      ஒரு மனிதன் சராசரியாக‌ தன் வாழ்நாளில் 50 டன் உணவு சாப்பிடுகிறான்,'' அப்படியானால் உங்கள் எடை எவ்வளவு இருக்க வேண்டும்? உணவை சேர்த்துக்கொண்டே போவது பற்றி மட்டுமல்ல இது. நீங்கள் சேகரித்துக்கொண்டே போகும் கர்மவினை எவ்வளவு என்று பாருங்கள். ஒவ்வொரு பிறவியிலும் இந்த உடம்பை உதறிவிட்டு இன்னொரு உடம்பை எடுத்துக்கொள்கிறீர்கள். ஆனால் கர்மவினையையோ சேர்த்துக்கொண்டே போகிறீர்கள்.
      மனித உடல் அற்புதமான ஒரு கருவி. இதன் நுணுக்கமான விஷயங்களை நீங்கள தெரிந்துகொள்ள ஒரு பிறவி போதாது. ஈஷா யோகாவின் அறிமுக வகுப்பிற்கு வந்த முதல் நாளிலேயே உங்களுக்கும் உங்கள் உடம்புக்கும் நடுவே ஒரு இடைவெளியை உருவாக்க நாங்கள் முயன்று வருகிறோம். அப்போதுதான் எவ்வளவு நல்ல கருவி ஒன்று உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து நீங்கள் ஆனந்தம் கொள்ள முடியும். இந்த உடல் சாதாரணமான ஒன்றல்ல. பந்தத்திற்கும் விடுதலைக்குமான அனைத்து அம்சங்களும் இதில் இருக்கின்றன. இதன் சக்தி நிலையை சரியான விதத்தில் நீங்கள் மேலெடுத்துச் சென்றால் இதையே தெய்வீகத்தின் உச்சமாக உருவாக்கவும் முடியும்! அல்லது பிணம் போல் வாழவும் முடியும்!இந்த உடம்பை நீங்கள் சிவமாக்குகிறீர்களா? சவமாக்குகிறீர்களா என்பது உங்களைப் பொறுத்தது.
      புதிதாக ஒரு கார் வாங்கியிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த வாகனத்தில் என்னவெல்லாம் உள்ளது என்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் திறமைமிக்க ஓட்டுனர் ஒருவரிடம் அதனை ஒப்படைக்க வேண்டும். இது உங்கள் உடம்புக்கும் பொருந்தும். அதனை எப்படி சரியாக பயன்படுத்துவது என்று தெரிந்துகொண்டுவிட்டால் இந்த உடலை தெய்வீகத்திற்கான ஏணியாக பயன்படுத்தலாம். இன்னும் சரியாக பயன்படுத்தினால் உடலே தெய்வீகம் என்பதையும் உணர்ந்துகொள்ளலாம்.

Tuesday, July 5, 2011

பெண்கள் இல்லாமல் ஞானம் சாத்தியமே இல்லை


      ஞானம் நிகழக்கூடிய ஒன்று. தியானம் செய்யப் பட வேண்டிய தயாரிப்பு. அத்துடன் ஆழமான தவிப்பும் தேவைப்படுகிறது. புரிந்து கொள்ளுதல் தவிர வேறு எதுவும் முக்கியமில்லை என்று நீங்கள் சொன்னதை கேட்டேன். எனக்கு எல்லாவற்றிலுமே ஆர்வம். மனதில் தோன்றும் கற்பனைகள், இசை, பெண்கள், உணர்வுகள் என எல்லாவற்றிலும் எனக்கு ஆர்வம் இருக்கின்றது. இவையெல்லாம், ஞானத்தை தடுத்து விடக் கூடுமா?
      ஒரு பழைய கதை இருக்கிறது. ஒரு கிழவன் தன் குருவிடம் வந்து நான் பல ஆசான்களை பார்த்துவிட்டேன். எத்தனையோ ஆசைகளையெல்லாம் துறந்தும் விட்டேன். உண்ணாவிரதம் இருந்தேன். பிரம்மசரியம் மேற்கொண்டேன். ஞானம் தேடி இரவெல்லாம் விழித்திருந்தேன். வெறுக்க சொன்ன எல்லாவற்றையும் வெறுத்தேன். மிகவும் துன்பங்கள் அனுபவித்தேன். ஆனால் ஞானம் பெற முடியவில்லை. நான் என்னதான் செய்யட்டும்? என்று கேட்டான்.
      துன்பங்களையும் துறந்துவிடு என்றார் குரு.
      ஞானம் பெறுவதை இசையும் தடுக்காது, புலனின்பங்களும் தடுக்கா, பெண்களும் தடுக்க மாட்டார்கள். ஒன்று மட்டும் அதை தடுக்கும். அதுதான் உன் துன்பம்.
      ஞானம் என்பது எல்லையற்ற ஆனந்த பரவசம். ஆகவே, எந்த சிறிய கொண்டாட்டமும் ஞானத்திற்கான படிக்கட்டுதான். ஆனால் வேதனை ஞானத்திற்கான படியாக அமையவே முடியாது.
      எல்லாவற்றிலும் உனக்கு ஆர்வம் இருப்பதாக குறிப்பிடுகிறாய். உன் தியானம் வளர வளர அவை காணாமல் போய்விடும், வெளிச்சத்தை கொண்டு வந்தவுடனே இருட்டு மறைந்து விடுவது போல. இருள் ஒரு தடையே அல்ல. இருள் மிக பழையது, கெட்டி தட்டி போய் இருக்கிறது, விளக்கை கொண்டு வந்தால், அதை அமுக்கி அணைத்து விடுகிறது. என்று சொல்ல முடியுமா என்ன? இருளால் விளக்கை அணைக்க முடியவே முடியாது.
      மனக் கற்பனைகள் எல்லாம் சோப்பு நுரை குமிழிகள். தியானத்தின் ஒரு சிறு பகுதியின் தீண்டுதலில், மனதின் மாயக் கற்பனைகள் என்ன, மனமே மாய்ந்து போய்விடும்.
      ஆனால் தியானம் வளர இசை ஆழப்பட்டு விடும். உனது இசையில் புதிய சுவை பிறக்கும். புதிய மலர்கள் புதிய மணத்துடன் மலரும். உனது இசை, உனது தியானத்துடன் இசைந்து சுப சுரமாய் ஒலிக்கும்.
      பெண்கள் விஷயத்தை பொறுத்தவரை, அவர்கள் இல்லாமல் ஞானமடைதல் சாத்தியமே இல்லை. அவர்கள்தான் உண்மையான உந்து சக்தி. வெற்றி பெறும் ஒவ்வொரு ஆணுக்கும் பின்னால், ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்கிறார்கள். அது உண்மையோ, பொய்யோ. ஆனால் ஒவ்வொரு ஞானிக்கும் பின்னால் பல பெண்கள் இருக்கவே செய்கிறார்கள்.
      அவனை தொல்லை படுத்த, சித்ரவதை செய்ய பெண்கள் இருந்தால்தான் போதுமடா சாமி என்று அவன் ஞானத்தை தேடி போக முடியும். அப்படி எந்த பெண்ணும் உன்னை தொல்லை படுத்த வில்லையென்றால், நீ ஞானத்தை தேடி செல்ல வேண்டிய தேவை என்ன வந்தது?
      எந்த ஆணும் தம்மை தொல்லைப் படுத்தாததால்தான், பெண்கள் ஞானம் பெறுவதில்லை என்பது எளிய உண்மை. அதனால் பெண்களை கண்டு பயப்படாதே. அவர்கள் உனக்கு மிகவும் உதவியாக இருப்பார்கள். அதனால் அவர்கள் உனக்கு நிச்சயம் தேவைப்படுவார்கள்.
      புலனுணர்வுகள் தடையல்ல. தியானம் ஆழப்பட பட, உன் உணர்வுகள் கூர்மை அடையும். அதனால்தான், அந்த கதையில் வரும் கிழவனுக்கு அப்படி பதில் சொன்னார் குரு.
      துயரங்களை விட்டொழி.
      உன் தியானத்தை தடுக்க வல்லது இந்த உலகில் எதுவுமே இல்லை.
                                                   .....................ஓஷோ....................

Sunday, July 3, 2011

ஆனந்தத்தின் ஊற்று


      எல்லா உறவுகளையுமே மனிதர்கள் பற்றுகளாகத் தான் பார்க்கிறார்கள். பற்று என்பது அறியாமையின் வெளிப்பாடு. இதற்கு அடிப்படைக்காரணம், உங்கள் உடலோடு <உங்களை நீங்கள் ஆழமாக அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதுதான். குறிப்பாக, இரண்டு மனிதர்களின் உடல் சார்ந்து ஓர் உறவு அமைகிறபோது, அந்தப்பற்று இன்னும் ஆழமாகிறது.
      ஆன்மிகம் உறவுகளுக்கோ, உடல் சார்ந்த இன்பங்களுக்கோ எதிரானதல்ல. ஆனால், இவையெல்லாம் பற்றினை ஆழப்படுத்தும் என்பது தான் விஷயம். ஒன்றை நீங்கள்புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் பற்று இன்னொருவர் மீதல்ல. உங்கள் உடலின் மேல் உங்களுக்கு இருக்கும் ஆழமான பற்று உங்களை இன்னொருவர் மீது பற்று வைக்கச் செய்கிறது. உங்கள் உடல் மீது உங்களுக்கு பற்று இல்லாத பட்சத்தில் இன்னொருவர் மேல் உங்களால் பற்று வைக்க முடியாது. எனவே, மற்றவர்கள் மீதிருக்கும் பற்றை அகற்ற நீங்கள் போராட வேண்டியதில்லை. உங்கள் உடல்மீது உங்களுக்கு இருக்கும் பற்றை அகற்றினாலே போதும்.
      இளமைப்பருவத்தில் உடல்மீது உங்கள் பற்று ஆழமாக இருக்கிறது. வயதாக வயதாக அது மனதுக்கோ, உணர்வுக்கோ தாவுகிறது. ஏனெனில், வயது ஏறஏற உடல் மரணத்தை நோக்கிச் செல்கிறது. அப்போது தான், உடல் இன்பத்தை விட நேசம், அன்பு போன்ற உணர்வுகள் முக்கியம் என்று கருதுகிறீர்கள்.
      உணர்வுகளோடு உங்களைப் பிணைக்கத் தொடங்கும்போது, கடவுள் மீது கவனம் செலுத்தத் தொடங்குகிறீர்கள். ஏனென்றால், மனிதர்கள் உங்களை கைவிட்டு விட்டார்கள்.
      எப்படியாவது வாழவேண்டும் என்ற வேட்கை, உங்களுக்குள் இருக்கிறது. முதலில் ஒன்றைப் பற்றுகிறீர்கள். அது பலவீனம் அடைகிறபோது, இன்னொன்றைப் பற்றுகிறீர்கள். அதுவும் பலவீனமாகிற போது, எதைப் பற்றுவது என்று தெரியாத அச்சத்திலேயே மரணம் வந்து சேர்கிறது. அப்போது அச்சம் ஒன்றே மிச்சமாய் இருக்கிறது. அதுவரை, கடவுளின் பெயரை உச்சரித்து வந்தவர்கள், அச்சம் வரும் போது கடவுளையும் மறந்து விடுகிறார்கள்.
      வாழ்வில், வசதி குறைவுகளைத் தவிர்ப்பதற்கான வழிமுறையாகத் தான் பலரும் கடவுளை பயன்படுத்துகிறார்களே தவிர, ஆன்மிகத் தேடல் காரணமாக கடவுளை நாடுவதிலலை. சொர்க்கம் என்பது, சந்தோஷம் என்று சொல்லப்பட்டதால் அங்கு போக விரும்புகிறீர்கள். அது துன்பமயமாக இருக்கும் என்று சொல்லி இருந்தால் அந்த சொர்க்கத்திற்கு போகவே விரும்ப மாட்டீர்கள். எனவே, கடவுளைத் தேடுவதாகச் சொல்லிக் கொண்டு பலரும் மகிழ்ச்சியைத் தான் தேடுகிறார்கள்.
      ஒரு காலத்தில் 70 சதவீதம் பேர், 30 சதவீதம்பேர் துறவு வாழ்விலும் புகுந்தார்கள். எப்போதுமே, சமூகத்தில் 30 முதல் 40 சதவீதம் வரை பாலியல் தேடல் இல்லாமல் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சிலருக்கு தீவிரமான பாலியல் வேட்கை இருப்பது போலவே, சிலருக்கு அத்தகைய தேவைகள் இல்லாமல் போகின்றன. எனவே, உறவு வாழ்க்கையோ, துறவு வாழ்க்கையோ நீங்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டுமேதவிர, சமூக நியதிகள் சார்ந்து முடிவெடுக்கக் கூடாது. உணர்வு ரீதியாக,யாரையாவது சார்ந்திரா விட்டால், உங்கள் வாழ்க்கை அர்த்தமற்றது என்கிற தவறான போதனை உங்கள் மனதிற்குள் திணிக்கப்பட்டிருக்கிறது. எனவே, நிர்ப்பந்தங் களால் அத்தகைய உறவுகளை பலரும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
      திருமண வாழ்வை விரும்பி ஏற்றுக் கொண்டு காலம் முழுவதும், மோதலிலேயே சிலர் தங்கள் வாழ்வைக் கழிக்கிறார்கள். திருமணத்தில் ஏதோ தவறு என்று பொருளல்ல. மனமுதிர்ச்சி இல்லாமல் இருப்பது தான் இந்த மோதலுக்குக் காரணம். உங்கள் உடல், மனம், உணர்வுகள் ஆகியவற்றின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுகிற முறையில் தான் திருமணம் என்ற அமைப்பே உருவானது. மேற்கண்ட தேவைகள் இல்லை என்றால், திருமணத்தை நீங்கள் தவிர்த்து விடலாம். தங்களுக்கு திருமணம் தேவையா இல்லையா என்பதை பலரும் யோசிப்பதில்லை. ஆட்டு மந்தைகள் போல் நடந்து கொள்கிறார்கள். மற்றவர்களுக்கு மணமாகிறது, அதனால் நானும் மணம் செய்து கொள்கிறேன் என்கிறார்கள். மூன்று நாட்களுக்கு மேல், அவர்களால் மணவாழ்க்கையில் மகிழ்ச்சியாய் இருக்கமுடிவதில்லை.
      காதலர்களாக இருக்கின்ற காலகட்டங்களில், ஒருவருக்கொருவர் மிகுந்த நேசத்தோடு பழகுகிறார்கள். பெற்றோரையே எதிர்த்து கொண்டு திருமணம் செய்கிறார்கள். ஆனால், திருமணமாகி நான்கைந்து ஆண்டுகளுக்குள் அவர்கள் வாழ்க்கை சின்னாபின்னமாகிறது. ஒருகாலத்தில் அற்புதமான மனிதராகத் தெரிந்தவர், இப்போது மிகவும் மோசமான மனிதராகத் தெரிகிறார். எந்தச் செயல் செய்தாலும், அதற்குரிய பின்விளைவுகளையும் யோசிக்கின்ற மனிதராக இருந்தால் இத்தகைய இடர்ப்பாடுகள் ஏற்படாது.
      பலரும் மகிழ்ச்சியான மணவாழ்வு குறித்து கேட்பதுண்டு. உங்கள் உடல் உங்கள் முழுக்கட்டுப்பாட்டில் இருக்குமேயானால், வாழ்வின் 30 சதவீதம் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். உடலோடு மனமும் உங்கள் கட்டுப் பாட்டில் இருந்தால், உங்கள் வாழ்வு மற்றும் விதியின் 60 சதவீதத்தை நீங்களே நிர்ணயிக்க முடியும். உங்கள் சக்திநிலையும் கட்டுப்பாட்டில் இருந்தால் 100 சதவீதமும் உங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிடும். உங்கள் பிறப்பையும் இறப்பையும் கூட நீங்களே முடிவு செய்ய முடியும்.
      ஒரு முனிவர் இருந்தார். அவர் நதியில் நீராடியபோது, நீரில் மிதந்து வந்த தேளை எடுத்து கரையில் விட்டார் அப்போது அந்தத்தேள் அவரைக் கொட்டியது. அது மீண்டும் நீரில் விழுந்தது. திரும்பவும் எடுத்துப் போட்டார். அது கொட்டிக் கொண்டே இருந்தது." அதை விட்டு விட வேண்டியது தானே' என்று சீடர்கள் சொன்னார்கள். அதற்கு முனிவர், ""தேள் தன்னுடைய தன்மையை வெளிப்படுத்துகிறது. நான் என்னுடைய தன்மையை வெளிப்படுத்துகிறேன்'' . வெளிச்சூழல்களில் பாதிக்கப்படாத தன்மையில் இருப்பவர்களுக்குத் தான் இது சாத்தியம். எனவே, உங்கள் ஆனந்தம் அடுத்தவர் தருவதாக இருக்கக்கூடாது. வெளியே ஆனந்தத்தை தேடுவதை விட்டு, உங்களையே ஆனந்தத்தின் ஊற்றாக உருவாக்கிக் கொள்வீர்களேயானால், வாழ்வில் எவ்விதமான நிர்ப்பந்தங்களும் இருக்காது.

Friday, July 1, 2011

உற்சாகமின்மை ஆனந்தம்


      வாழ்வில் எந்த முயற்சியை மேற்கொண்டாலும் தடைகளைத் தவிர்க்க முடியாது. ஆன்மிகம் தான் என்றில்லை, எந்த செயலுக்கும் இது பொருந்தும். ஆனால், தவறான கோட்பாடுகள், கருத்துக்கள் பாம்பின் ஷத்தை விட மோசமானவை என்பதை நாம் பல சந்தர்ப்பங்களில் உணர்வதில்லை. ஒருமுறை இவ்வாறு நடந்தது.
      சாத்தான் தன் செய்து வந்த வியாபாரத்தை விட்டுவிட நினைத்தது. வியாபார கருவிகளை எல்லாம் விற்றுவிட எண்ணி "இவை விற்பனைக்கு' என்று எழுதி வைத்தது. கோபம், பொறாமை, வெறுப்பு, பேராசை,
சுயநலம், ஆணவம் இப்படி பல பொருட்கள் விற்பனைக்கு வந்தன. மக்களும் விருப்பமாக பொருட்களை சாத்தானிடம் வாங்கினர்.ஆனால், இரண்டே இரண்டு பொருட்கள் மட்டும் சாத்தானின் பையிலிருந்து வந்தது. ""அவற்றை ஏன் விற்பனைக்கு வைக்கவில்லை?'' என்று கேட்டனர். அவை விற்பனைக்கு அல்ல. மன அழுத்தமும், உற்சாகம் இழப்பதும் தான் அவை.
      சாத்தான் விற்பனைக்கு வைக்காத அவ்விரு பொருட்களையும் கூட உங்களில் பலரும் பெற்றிருக்கிறீர்கள். உங்கள் மீதும், உங்களை சுற்றியுள்ளவர்கள் மீதும் அதைத் தொடர்ந்து பிரயோகிக்கிறீர்கள். துரதிர்ஷ்டமாக தன்னை அறிவு ஜீவிகளாக நினைப்பவர்களும் கூட உற்சாகம் இழந்து, மன அழுத்தத்தோடு சிரமப்படுகின்றனர். தர்க்கரீதியாக நீங்கள் வாழ்க்கையை பிளவுபடுத்திக் கொண்டிருந்தால் உற்சாகமின்மை உண்டாகிவிடும்.
      வாழ்க்கை தற்போது எப்படி உள்ளதோ, அதை அப்படியே உணரப் பழகிகொள்ள வேண்டும். இப்போதைய கனம் எப்படி இருக்கிறதோ, அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
      ஒருமுறை ஒரு கிராமத்துக்கு, நாடாளும் மன்னன் வருகை தரப்போவதாக அரண்மனை ஆட்கள் தெரிவித்தனர். எளிமையான அந்த மக்கள், மன்னனிடம் முட்டாள்தனமாக நடந்து கோபத்துக்கு ஆளாகிவிடுவோமோ என்று பயந்தனர். அதனால் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த சங்கரன்பிள்ளை என்பவரை கிராமத்தின் பிரநிதியாக இருக்க கேட்டுக் கொண்டனர்.
      சம்மதம் தெரிவித்த சங்கரன்பிள்ளைஅரசன் வரும் கிராமத்துக்கு வந்து சேர்ந்தார். அரண்மனை ஆட்கள் சங்கரன்பிள்ளையிடம், ""மன்னர் உங்களிடம் மூன்று கேள்வி கேட்பார். முதலில் வயது என்ன என்பார் கேட்பார், அதற்கு எழுபது என்று மட்டும் தான் கூறவேண்டும் அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட கூற கூடாது. இரண்டாவதாக, உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்பார். நீங்கள் "ஆறு' என்று மட்டும் கூற வேண்டும். மூன்றாவது கேள்வியாக இந்த ஆண்டு மழை எப்படி இருக்கிறது என்பார். நீங்களும் நன்றாக உள்ளது என்று கூற வேண்டும்,'' என்றனர்.
      சங்கரன்பிள்ளையும் ஒத்துக் கொண்டார். அரண்மனை ஆட்கள் மன்னனிடம்,"" மன்னா! கிராமத்து மக்கள் உங்களை பார்க்க அளவு கடந்த ஆர்வம் கொண்டுள்ளனர். அறியாமையால் தவறாகப் பேசினாலும்கோபம் கொள்ளாதீர்கள், கிராமத்து பிரதிநிதியிடம் அவருடைய வயது, எத்தனை குழந்தைகள், மழை நிலவரம் மட்டும் கேளுங்கள். அதுபோதும்,'' என்று கூறி அழைத்து வந்தனர்.
      மக்களை சந்தித்த அரசர், மக்களிடம்,"" உங்கள் பிரதிநிதி யார்?'' என்று கேட்டார். கூட்டத்திலிருந்து எழுந்து வந்தார் சங்கரன்பிள்ளை.
      அவரிடம் மன்னன், ""உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?'' என கேட்டார். ""எழுபது'' என்றார் சங்கரன்பிள்ளை.
      "" உங்கள் வயது என்ன?'' என்று கேட்டார் மன்னர். அவர்,"ஆறு' என்று ஒருவார்த்தையில் முடித்துக் கொண்டார். மன்னர் கோபமாக,"" உங்களுக்கு என்ன பைத்தியமா?''என்று கேட்டார். சங்கரன் பிள்ளையும்,""நன்றாக உள்ளது,'' என்றார். மன்னர் மிகுந்த
கோபமடைந்து, "இந்த ஆள் சரியான பைத்தியம், கிராமத்து பிரதிநிதியாக இவன் ஏன் இருக்கிறான்,'' என்றார். சங்கரன்பிள்ளையும் மன்னனிடம்,"" நீங்கள் தான் பைத்தியக்காரன். நான், பதிலை வரிசையாகத்தான் கூறினேன். நீங்கள் தான் தவறாக கேள்விகளைக் கேட்கிறீர்கள்,''என்றார்.
      நம் மனம் கடந்த காலத்திலேயே நின்று கொண்டு செயல்படுகிறது.
மனதின் போக்கில் போனால் நாம் குழப்பமாகிவிடுவோம். நான் தர்க்கமனத்தைப் பற்றித் தான் சொல்கிறேன்.
      தர்க்கரீதியாக யோசிப்பது என்றால், ஒவ்வொரு நாள் காலையிலும் கண் விழித்தவுடன் பல் துலக்குகிறீர்கள். காலைக்கடமைகளைச் செய்கிறீர்கள். சாப்பாடு, வேலை, சாப்பாடு, தூக்கம் என்று நாள் முழுக்க ஏதோ ஒன்றில் ஈடுபடுகிறீர்கள். இப்படி ஆண்டுக்கணக்கில் செய்கிறோம்.
      இச்செயல்களைத் தொடர்ந்து செய்வதில் என்ன மதிப்பிருக்கிறது? சில கணநேர அனுபவங்களும் இதற்கிடையில் உண்டு. சூரியோதயம், வானில் வட்டமிடும் பறவைகள், தோட்டத்தில் பூத்த புதுமலர்கள், மழலை பேசும் குழந்தையின் முகம் என்று மகத்தான விஷயங்களால் இந்த வாழ்க்கை மதிப்புடையதாகவும் எண்ணத் தோன்றலாம். ஆனால், இதெல்லாம் அவ்வப்போது ஏற்படும் நிகழ்வுகள்.
      தர்க்கரீதியாக எண்ணும் போதெல்லாம் மன அழுத்தம் அதிகமாகி உங்களை நீங்களே காயப்படுத்திக் கொள்கிறீர்கள். யாரொருவர் தன்னையும், தனக்கு சாத்தியமான சூழ்நிலையையும் மதித்து நடக்கிறாரோ அவரே அனைத்திற்கும் மதிப்பளிக்கும் இயல்புடையவராக இருப்பார்.
      எப்படியோ வாழ்க்கைக்குள் நுழைந்து விட்டீர்கள். வாழ்வைப் புரிந்து கொள்வது என்பது பெரிய பிரச்னையாக இருக்கிறது. அதில் சிக்கல் என்பது நீங்களாகவே உருவாக்கிக் கொண்டது. பின் நீங்களே அதற்கு தீர்வு தேடி அலைகிறீர்கள். நீங்களே திருடனாகவும் இருக்கிறீர்கள். காவல்காரனாகவும் செயல்படுகிறீர்கள். திருடன்பிடிபடுவானா?  ஒருபோதும் மாட்டான். தர்க்க மனத்தின் தன்மையும்  அப்படித்தான்!