Showing posts with label அகங்காரம். Show all posts
Showing posts with label அகங்காரம். Show all posts

Saturday, January 25, 2014

குரு யார்? என்ன செய்வார்? ஒரு கதை! ஆனந்தம்

      


      தயு மற்றும் யுதாங் என்ற இரு ஜென் குருமார்களைத்தேடி தலைமைத் தளபதி ஒருத்தர் வந்தார். தன்னைச் சீடனாக ஏற்க்கும் படி கோரினார்.
      "இயல்பிலேயே நீ புத்திசாலியாகத் தெரிகிறாய் அதனால் நல்ல சீடனாக இருப்பாய்" என்றார் யுதாங்.
      "இவனா? அடிமுட்டாளாகத் தெரிகிறான்? இந்த முட்டாளுக்கு மண்டையில் அடித்துச் சொன்னால் கூட ஜென்னைப் புரிய வைக்க முடியாது" என்றார் தயு.
      தன்னை ஏளனமாகப் பேசிய தயுவையே தன் குருவாக எற்றார் அந்தத்தளபதி.
      பொதுவாக உங்களின் அகங்காரத்தைக் கேள்வி கேட்காதவரே உங்களின் உற்றவராக இருக்க முடியும். உங்களின் குறைபாடுகளை ஆதரிப்பவரே நண்பராக ஏற்றுக்கொள்ளப்படுவார். ஆனால் குரு என்பவர் உங்களின் முட்டாள்த்தனங்களை ஆதரிக்க வரவில்லை. அவர் உங்களின் வரயறைகளைத் தகர்க்க வந்தவர்.
      செளகரியமாக உணர வேண்டுமானால், அதற்க்கு தோழர்களைத்தேடிப் போகலாம், அல்லது திருமணம் செய்துகொள்ளலாம். எதற்க்காக குருவை நாடி வந்தீர்கள்? யாருடன் இருக்கையில் முகமூடி கிழிக்கப் பட்டது போல் மிகவும் அசெளகரியமாக உணர்கிறீர்களோ, அந்த நிலையிலும் யாரைவிட்டு தப்பித்து விலகப் பிரியமில்லாமல் மறுபடி நாடிப்போகிறீர்களோ, அவர்தான் உங்கள் குரு.
      "நீங்கள் அற்புதமானவர், புத்திசாலி" என்று எல்லாம் புகழ்ந்து பேசி, உங்கள் அகங்காரத்துக்கு தீனி போடுபவர், உங்களிடம் ஆதயங்களை எதிர்பார்த்து நிற்பவர்.
      முகத்துக்கு நேராக உங்கள் வரையரைகளை சுட்டிக்காட்டி, உங்கள் அகங்காரத்தை சதா தகர்த்துக்கொண்டு இருப்பவர் தான் குரு. உங்கள் குறைகளை சுட்டிக்காட்டினால், உங்கள் கோபத்துக்கும் வெறுப்புக்கும் ஆளாகளாம். வெகு சீக்கிரத்தில் எதிரியாகவே கருதப்படலாம். ஆனால் அதைப்பொருட்படுத்தாது அளவற்ற கருணையுடன் உங்களுடைய குறைபாடுகளை எடுத்துச் சொல்லி, அவற்றைக் கடந்து நீங்கள் பயணம் செய்ய உதவி செய்வதே குருவின் உண்மையான நோக்கம். அவர் உங்களுக்கு உபச்சாரம் செய்ய வரவில்லை. உங்களை மேன்மை நிலைக்கு எடுத்துச் செல்ல வந்திருக்கின்றார்.
      தன்னைப் பாராட்டிப் பேசிய யுதங்கைவிட, தன் பதவியைப் பற்றி கவலை கொள்ளாது தன்னை ஏளனம் செய்த தயுவையே குருவாக தலைமைத் தளபதி ஏற்றதில் அவரது புத்திசலித்தனம் மிளிர்கிறது.

                          வாழ்க வளமுடன்!

Sunday, May 5, 2013

ஹே நண்பா ! ஆனந்தம்


      பள்ளியில் தோள் கொடுத்தவன், கல்லூரி வாழ்க்கையை கலகலப்பாக்கியவன், திருமண மேடையில் கைக்குட்டையால் முகம் துடைத்தவன், எல்லோருக்கும் இன்பத்திலும் துன்பத்திலும் உடனிருப்பவன் எப்போதும் ஒரு நண்பன்தான். ஆனால், ஆயிரம்பேர் படிக்கும் கல்லூரியில், நாம் ஏன் ஒரு சிலரைமட்டும் நண்பர்களாக ஆக்கிக் கொண்டுள்ளோம்?! நட்பு பற்றி சத்குருவின் சில வரிகள்…

சத்குரு:

      உங்களைப் போலவே எண்ணுகிற, உணர்கிற, உங்களைப் புரிந்துகொள்கிற, உங்களைப்போல விருப்பங்களைக் கொண்டவர்களைத்தான் நண்பர்கள் என்கிறீர்கள்!
      எனவே எப்போதும் உங்கள் முட்டாள் தனங்களை ஆதரிப்பவர்களைத்தான் தேடிச் செல்கிறீர்கள். அந்த விதத்தில் பார்த்தால் ஒரு குருவோடு இருப்பது வித்தியாசமானது. அவர் உங்கள் நண்பர். ஆனால், உங்கள் அகங்காரத்தைக் கீழே இழுத்து அதன் மீது நடனமாடுபவர். சாதாரணமாக அகங்காரத்தைச் சீண்டினால், உங்கள் நண்பர் எதிரியாகி விடுவார். நாம் செய்வது என்னவென்றால் உங்கள் அகங்காரத்தின் மீது நடனமாடினாலும் பரவாயில்லை, நீ என் நண்பன் என்ற நிலையை ஏற்படுத்துவது.
      நீங்கள் யாருக்காவது நண்பர் எனில் அவருக்குப் பிடித்தவராக இருக்க எவ்வளவு முட்டாள்தனங்களைச் செய்கிறீர்கள் பாருங்கள். சூழலைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில், இனிமையற்ற எத்தனை விஷயங்களை உங்களுக்குள் போட்டுப் புதைத்து வைத்திருக்கிறீர்கள் பாருங்கள்.
இனிமையற்ற விதைகளை மண்ணில் விதைத்தால், பழங்களும் அப்படித்தான் இருக்கும். வாழ்க்கையும் அப்படித்தானே இருக்கும்.
      உங்களுக்கு ஒரு நண்பர் இருந்தால், அவருக்கு உங்களைப் பிடிக்காது என்றாலும் பரவாயில்லை என்ற தைரியம் உங்களுக்கு வேண்டும். தற்போது உங்கள் நண்பர்களில் பலர் ஒப்பந்தங்களோடும் விருப்பு வெறுப்புகளோடும்தான் உள்ளனர்.
      ஓர் உண்மை நண்பர் உங்களின் முட்டாள்தனங்களைச் சுட்டிக்காட்டினாலும் அன்போடு பழகும் தைரியமுடன் இருக்க வேண்டும். அதுதான் நட்பு! வாழ்க வளமுடன்!

Friday, September 23, 2011

நம்மை பற்றிய நமது கருத்து ஆனந்தம்


      ஓ-நமி – மாபெரும் அலைகள் என்று பொருள் – என்ற பெயர்கொண்ட ஒரு குத்துச் சண்டை வீரன் ஜப்பானில் இருந்தான். அவன் மிகவும் வலிமையானவன். மேலும் குத்துச்சண்டையில் மிகவும் ஆற்றல் படைத்தவனாக இருந்தான். தனிப்பட்ட முறையில், பள்ளியில் பயிலுகையில் அவன் தனது ஆசிரியரைக் கூட வீழ்த்திவிடுவான். ஆனால் பொதுமேடையில் அவனைவிடச் சிறியவர்கள் கூட அவனை தூக்கி வீசி விடுவர்.
      அவனது இந்த பிரச்சனைக்காக அவன் ஒரு ஜென் குருவிடம் சென்றான். அவரது குருகுலம் கடற்கரையோரம் இருந்தது.
      ஜென் குரு அவனிடம், மாபெரும் அலைகள் என்பது உனது பெயர். ஆகவே இந்த குருகுலத்தில் இன்றிரவு தங்கி கடலின் அலையோசையை கேள். உன்னை அந்த கடலின் அலை என நினைத்துக்கொள். நீ ஒரு குத்துச்சண்டை வீரன் என்பதை மறந்துவிட்டு அந்த கடலலை என எண்ணிக்கொள். அது எப்படி எது எதிரே வந்தாலும் அதை மூழ்கடிக்கிறதோ அது போல உன்னையும் நீ பெரும் அலை என எண்ணிக்கொள். என்றார்.
      ஓ-நமி அங்கே தங்கினான். அவன் அந்த அலையை நினைத்துப்பார்க்க முயன்றான். அவனுக்கு பல்வேறு விஷயங்கள் நினைவுக்கு வந்ததே தவிர அலையை மட்டும் அவனால் நினைக்க முடியவில்லை. பிறகு மெதுமெதுவாக அவன் அந்த அலைகளை மட்டுமே நினைத்தான். இரவு ஏறஏற அலைகள் மேலும் அளவில் பெரிதாகிக் கொண்டே வந்தன. முதலில் புத்தர் சிலைக்கு முன்னே இருந்த பாத்திரத்திலிருந்து பூக்களை கொண்டு சென்றது. பின் அந்த பாத்திரத்தையே கொண்டு சென்றது. பின் புத்தர் சிலையையே கொண்டு சென்றது. அதிகாலையில் அந்த குருகுலம் முழுமையும் நீரால் சூழப்பட்டு இருந்தது. ஓ-நமி முகத்தில் புன்னகையுடன் அங்கே அமர்ந்திருந்தான்.
      அன்று அவன் பொதுமேடையில் குத்துச்சண்டைக்கு சென்றான், வென்றான். அன்றிலிருந்து ஜப்பானில் யாராலும் அவனை வெல்ல முடிந்ததில்லை.
      இது நம்மை பற்றிய நமது கருத்தை எப்படி இழப்பது, எப்படி விடுவது, எப்படி அதிலிருந்து வெளியே வருவது என்பதைப் பற்றிய கதை.
      ஒவ்வொருவரும் அளவற்ற ஆற்றல் படைத்தவர்கள்தாம். உனக்கு உன் பலம் தெரியாது. அது வேறு விஷயம். ஒவ்வொருவரும் பலம் பொருந்தியவர்கள்தாம். அப்படித்தான் இருக்க வேண்டும். ஏனெனில் எல்லோரும் கடவுளிலிருந்து வந்தவர்கள்தான். ஒவ்வொருவரும் இந்த பிரபஞ்சத்திலிருந்து பிறந்தவர்கள்தான். நீ பார்ப்பதற்கு எவ்வளவு சிறியவனாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நீ சிறியவனல்ல. இருக்கவும் முடியாது. இயல்புப்படி அது அப்படி இருக்கமுடியாது. இப்போது பௌதீக விஞ்ஞானம் சின்னஞ்சிறு அணுவிற்குள் அதீத அளவு சக்தி இருக்கிறது என்று கூறுகிறது. ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்களும் அணுசக்தியால்தான் அழிக்கப்பட்டன. அணு மிகவும் சிறியது. யாராலும் அதைப்பார்க்க முடியாது. அது மிகச்சிறிய புள்ளி போன்றது. மிகவும் கடுகளவானது. இன்றைய விஞ்ஞானத்தால் கூட மிகப்பெரிதாக்கிக் காட்டும் கருவிகளின் உதவியால்தான் அதைப் பார்க்க முடிகிறது. ஆனால் அந்த அளவு சிறிய அணுவிற்கே அளவற்ற ஆற்றல் இருக்குமானால் மனிதனைப்பற்றி என்ன சொல்ல. மனிதனுக்குள்ளே உள்ள தன்ணுணர்வுச் சுடரைப்பற்றி என்ன சொல்ல. என்றாவது ஒருநாள் அந்தச்சுடர் மிகப் பெரிதாகி வெடிக்கும். அப்போது அளவற்ற ஆற்றலும் ஒளியும் வெளிப்பட்டே தீரும். அதுதான் ஒரு புத்தருக்கும், ஒரு ஜீஸஸூக்கும் நிகழ்ந்தது.
      இந்த சூத்திரத்தை நினைவில் கொள். நீ உன்னை நினைவில் கொள்ளும்போது கடவுளை மறந்து விடுகிறாய். நீ உன்னை மறந்துவிடும்போது நீ கடவுளை நினைவில் கொள்கிறாய். உன்னால் இரண்டையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. அலை தன்னை அலை என்று நினைவில் வைத்துக்கொள்ளும்போது, அது தான் கடல் என்பதை மறந்து விடுகிறது. அலை தன்னைக் கடலாக உணரும்போது, அது தான் அலை என்பதை எப்படி நினைவில்கொள்ள முடியும். ஏதாவது ஒன்றுதான் சாத்தியம். அலை தன்னை அலை அல்லது கடல் என ஏதாவது ஒன்றைத்தான் நினைவில் கொள்ள முடியும். அது ஒரு கண்கட்டி வித்தை. உன்னால் இரண்டையும் நினைவு கொள்ள முடியாது. அது சாத்தியமில்லை.
      தனிப்பட்ட முறையில் அவனால் தனது அகங்காரத்தை, தன்னை முழுமையாக மறந்துவிட முடியும். அப்போது அவன் மிகவும் ஆற்றல் உள்ளவனாய் இருக்கிறான். ஆனால் பொது மேடையில் அவன் தன்னை மிகவும் நினைவில் வைத்துக் கொள்கிறான். அப்போது அவன் பலவீனமடைந்து விடுகிறான். நான் – என்பதை நினைவில் வைத்துக் கொள்வது பலவீனம். நான் – என்று நினைவில் கொள்ளாமல் இருப்பது பலம்.
      அவனது இந்த பிரச்சனைக்காக அவன் ஒரு ஜென் குருவிடம் சென்றான். அவரது குருகுலம் கடற்கரையோரம் இருந்தது. ஜென் குரு அவனிடம், மாபெரும் அலைகள் என்பது உனது பெயர். ஆகவே இந்த குருகுலத்தில் இன்றிரவு தங்கி கடலின் அலையோசையை கேள்.....................
      ஒரு குரு என்பவர் ஒவ்வொருவருக்கும் ஏற்ற வழிமுறையை உருவாக்குபவர். ஒரு குரு என்பவர் குறிப்பிட்ட வழிமுறை ஏதும் இல்லாதவர். அவர் இந்த ஓ-நமி – மாபெரும் அலைகள் – என்ற மனிதனைப் பார்த்தார். அவனது பெயரிலிருந்தே அவனுக்கு ஒரு வழிமுறையை உருவாக்கிக் கொடுத்தார்.
      மாபெரும் அலைகள் என்பது உனது பெயர். ஆகவே இந்த குருகுலத்தில் இன்றிரவு தங்கி கடலின் அலையோசையை கேள்.....................
      கடவுளின் கோவிலுக்குள் நுழைவதற்கான அடிப்படை ரகசியங்களில் ஒன்று கவனிப்பது.கவனிப்பது என்றால் ஒன்றுவது. கவனிப்பது என்றால் உன்னை முற்றிலுமாக மறந்து விடுவது. அப்போது மட்டுமே உன்னால் கவனிக்க முடியும். யாரையாவது நீ கவனித்தால் அப்போது உன்னை நீ மறந்து விடுவாய். உன்னை உன்னால் மறக்கமுடியாவிட்டால் நீ கவனிக்கமாட்டாய். நீ உன்னைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தால் நீ கவனிப்பது போல பாசாங்குதான் செய்து கொண்டிருப்பாய். கவனிக்க மாட்டாய். நீ உனது தலையை ஆட்டிக் கொண்டிருப்பாய். ஆம் என்றோ இல்லை என்றோ சிறிது நேரத்திற்கொருமுறை சொல்லிக் கொண்டிருப்பாய். ஆனால் நீ கவனிக்கமாட்டாய்.
      கவனிக்கும்போது நீ வெறும் வழி போல, கருவறை போல, பெற்றுக் கொள்ளுதல் போல மாறி விடுகிறாய். ஒரு பெண்மை போலாகிவிடுகிறாய். மேலும் சென்றடைய ஒருவர் பெண்மைதன்மை அடைந்தாக வேண்டும். போராடிக்கொண்டு, சண்டையிட்டுக் கொண்டு நீ கடவுளை சென்றடைய முடியாது. நீ கடவுளை சென்றடைய வேண்டுமானால்.......அல்லது இப்படி சொன்னால் சரியாக இருக்கும். நீ பெற்றுக் கொள்பவனாக, பெண்மை தன்மையுடன் இருக்கும்போதுதான் கடவுள் உன்னை வந்தடைவார். நீ‍இன் என்பது போல, ஒரு பெறுபவனாக மாறும்போது கதவு திறக்கிறது. நீ காத்திருக்கிறாய்.
      பொறுமையாளனாக மாற கவனிப்பது உதவும். புத்தர் கவனிப்பதை மிகவும் வலியுறித்தினார். மகாவீரர் கவனிப்பதை மிகவும் வலியுறுத்தினார். கிருஷ்ணமூர்த்தி சரியான கவனித்தல் என்பதை திரும்ப திரும்ப கூறினார். காதுதள் அதன் சின்னம் போல உள்ளதை நீ கவனித்திருக்கிறாயா. உன்னுடைய காதுகள் வெறுமனே ஓட்டைகள் மட்டுமே. வழிதான். வேறெதுவும் இல்லை. உனது காதுகள் உனது கண்களை விட அதிகம் பெண்மையானவை. கண்கள் அதிக ஆண்மையானவை. காதுகள் – இன் – பாகம். கண்கள் – யாங் – பாகம். யாரையாவது பார்க்கும்போது நீ ஆக்கிரமிக்கிறாய். கேட்கும்போது நீ பெறுபவனாகிறாய்.
      அதனால்தான் யாரையாவது உற்றுப்பார்ப்பது நாகரீகமற்றதாக, வன்முறையானதாக மாறுகிறது. அதற்கு அளவு உள்ளது. மனோவியலார் மூன்று நிமிடங்கள் என்று கூறுகின்றனர். மூன்று நிமிடங்கள் ஒருவரை உற்று பார்த்தால் சரி, அதை தாங்கி கொள்ள முடியும். அதற்கு மேல் என்றால் நீ பார்க்கவில்லை. நீ உறுத்துகிறாய். அவரை நீ தண்டிக்கிறாய். நீ அத்துமீறுகிறாய்.
      ஆனால் கவனிப்பதற்கு எல்லை இல்லை. ஏனெனில் காதுகள் அத்து மீறுவதில்லை. அவை எங்கே உள்ளனவோ அங்கேயே இருக்கின்றன. கணகளுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. இரவில் கவனித்திருக்கிறாயா, கண்களுக்கு ஓய்வு தேவை. காதுகளுக்கு ஓய்வு தேவையில்லை. அவை 24 மணி நேரமும் திறந்திருக்கின்றன – வருடம் பூராவும். கண்கள் சில நிமிடங்கள் கூட திறந்திருப்பதில்லை. தொடர்ந்து சிமிட்டிக் கொண்டே இருக்கின்றன. தொடர்ந்து களைப்படைந்து கொண்டே இருக்கின்றன. ஆக்கிரமித்தல் களைப்படைய செய்யும். ஏனெனில் ஆக்கிரமித்தல் உனது சக்தியை வெளியே எடுக்கிறது. இதனால் கண்கள் ஓய்வெடுப்பதற்காக தொடர்ந்து சமிட்டிக் கொண்டே இருக்கின்றன. அது ஒரு தொடர் செயல். ஆனால் காதுகள் ஓய்வில்தான் இருக்கின்றன.
      அதனால்தான் பல மதங்களும் இசையை பிராத்தனைக்கு உபயோகிக்கின்றன. ஏனெனில் இசை உனது காதுகளை மேலும் துடிப்புள்ளதாக, மேலும் உணர்வுள்ளதாக ஆக்குகிறது. ஒருவர் காதுகளாக அதிக அளவிலும் கண்களாக குறைந்த அளவிலும் இருக்க வேண்டும்.
நீ உன்னுடைய அகங்காரத்தை விட்டுவிட்டால் எல்லா தோல்விகளையும் எல்லா விரக்திகளையும் எல்லா அவமானங்களையும் விட்டுவிட்டாய். அதை சுமந்து சென்றால் நீ தோல்வியில்தான் முட்டிக் கொள்ள வேண்டும். அந்த அகங்காரத்தை விட்டுவிடு. முடிவற்ற ஆற்றல் உன் மூலம் பெருகியோட ஆரம்பிக்கும். அந்த அகங்காரத்தை விடுவதன் மூலம் நீ நதியாகிறாய், நீ ஓட ஆரம்பிக்கிறாய், நீ கரைகிறாய், நீ பெருகியோடுகிறாய். – நீ உயிர் துடிப்புள்ளவனாகிறாய்.
      நீ உன் முயற்சிப்படி வாழ ஆரம்பத்தால் நீ மடத்தனம் செய்கிறாய். அது ஒரு மரத்தில் உள்ள இலை அதன் முயற்சிப்படி வாழ ஆரமபிப்பதை போன்றது. அது மட்டுமல்ல, அது மரத்துடன் சண்டையிடும், வேருடன் சண்டையிடும். இவை யாவும் அதற்கு கெடுதல் செய்வதாக நினைக்கும். நாம் ஒரு மிகப் பெரிய மரத்தில் உள்ள இலைகள்தான். அதை கடவுள் என்றோ, இயற்கை என்றோ, முழுமை என்றோ எப்படி வேண்டுமானாலும் அழை. ஆனால் நாம் அடிமுடியற்ற வாழ்வெனும் மரத்தில் இருக்கும் சிறிய இலைகள்தான். போராட வேண்டிய அவசியம் இல்லை.
      உயிர் துடிபுள்ளவனாகும் போது உன்னிடம் இருந்து அகங்காரம் மறைகிறது. அகங்காரம் மரையும் போது நீ கடவுள் தன்மை உள்ளவனாகிறாய். கடவுள் தன்மை வரும்போது அளவற்ற ஆற்றலும் நிதானமும் சரியாக சிந்திக்கும் திறனும் வரும். வெற்றிக்காக உழைக்க வேண்டாம். அது உன் செயலிலேயே ஒளிந்துள்ளது, தானாக் கிடைக்கும். அப்போது மகிழ்ச்சியாக உண‌ர்வாய். இந்த மாதிரி வெற்றியே உனக்கு முழுமை கொடுக்கும்.

Monday, August 22, 2011

எங்கே தனித்தன்மையும் அகங்காரமும் வேறுபடுகிறது ? ஆனந்தம்


      தனித்தன்மை என்றால் தனித்துவம் – யாருடனும் ஒப்பிடமுடியாது. ஒப்பிடமுடியாத தனித்துவம் அதுதான் தனித்தன்மை. தனித்தன்மை அழகானது. அப்படித்தான் கடவுள் உங்களை உருவாக்கினார். தனிப்பட்ட விதத்தில். அகம்பாவம் ஒப்பிடுவதால் வருவது, அகம்பாவம் உன்னுடைய கண்டுபிடிப்பு. கடவுள் உனக்கு அகம்பாவத்தை கொடுக்கவில்லை, அவர் உனக்கு ஒரு தனிதன்மையைத்தான் கொடுத்துள்ளார்.
      அகம்பாவம் ஒப்பிடுதல்தான். நீ மற்றவர்களை விட அதிக புத்திசாலியாக உன்னை நினைத்துக் கொண்டிருக்கிறாய். நீ உன்னை அடுத்தவரைவிட உயர்வாக அல்லது தாழ்வாக நினைத்துக்கொள்கிறாய். அடுத்தவரை விட நீ அழகாக இருப்பதாக நீ நினைத்துக்கொள்கிறாய். அப்போது நீ அகம்பாவத்தை உள்ளே கொண்டுவருகிறாய். நீ யாருடனாவது உன்னை ஒப்பிடும்போது அந்த ஒப்பிடுதல் மூலம் வரும் முடிவு தான் அகம்பாவம்.
      நீ ஒப்பிடுவதை நிறுத்தும்போது நீ மட்டுமே அங்கிருக்கிறாய். அளவற்ற அழகோடும் தனித்துவமாகவும் இருக்கிறாய். எல்லா உயர்வு தாழ்வுகளும் நான் யார், எங்கிருக்கிறேன், எனக்கு மேல் யார் இருக்கிறார்கள், எனக்கு கீழ் யார் இருக்கிறார்கள் என்பது எல்லாமே அகம்பாவத்தின் பிரச்னைகளே. உயர்ந்தவன் என்ற உணர்ச்சி கொண்ட மனிதனும் சிரமப்படுகிறான், தாழ்வுணர்ச்சி கொண்ட மனிதனும் சிரமப்படுகிறான், இருவருமே சிரமப்படுகிறார்கள், ஏனெனில் மிக உயர்ந்தவனும் கூட திருப்தி அடையக்கூடிய நிலை என்பதே கிடையாது.
      ஆபிரஹாம் லிங்கனின் முகம் மிகவும் அழகற்றது. அது அவரை மிகவும் கொடுமைப்படுத்தியது. அவர் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடும் போது அவர் வோட்டு கேட்க சென்ற இடத்தில் ஒரு சிறிய பெண், “நீங்கள் தாடி வைத்துக் கொள்ளுங்கள், அது உங்களை சிறிது அழகாக காட்டும்” என்று கூறினாள். அப்போதிலிருந்து அவர் தாடி வைத்துக் கொண்டார். ஆனாலும் அவருக்கு அவரது முக அழகைப்பற்றிய கவனம் எப்போதும் இருந்தது. அவர் ஜனாதிபதியாகி விட்டார். ஆனாலும் எங்கே அழகான ஒரு முகத்தை காண நேர்ந்தாலும் அவர் மனம் புண்பட்டது.
      நெப்போலியன் போனபார்ட் அதிக உயரமில்லை, 5.5 – என் உயரமும் அதுதான். அவர் தனது வாழ்நாள் முழுவதும் வருத்தப்பட்டார். எப்போதும் யாருக்கும் 5.5 உயரம் கொண்டவராக இருப்பதில் எந்த பிரச்னையும் இல்லை, அதில் என்ன பிரச்னை இருக்கிறது ? நான் 5.5 உயரம் கொண்டவராக இருப்பதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. 5.7 அல்லது 5.8 ஆக இருந்தால் மட்டும் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது ? எதுவும் நடக்கப் போவதில்லை? நீ அப்படியே தான் இருக்கப் போகிறாய். 5.5 அல்லது 5.7 அல்லது 5.8 என்பது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது ஆனால் அவருக்கு அது மிகப் பெரிய அளவில் தொந்தரவாக இருந்தது. அவர் அதில் மிகவும் கவனம் கொண்டவராக இருந்தார்.
      ஒருநாள் அவர் சுவரில் படம் ஒன்றை மாட்ட முயன்று கொண்டிருந்தார். ஆனால் அந்த இடம் அவரைவிட கொஞ்சம் உயரமாக இருந்தது. அதனால் அவரது மெய்காப்பாளன்,“சார், நான் உங்களை விட உயர்ந்து இருப்பதால் நான் இதை செய்து விடுகிறேன்” என்று கூறினான். உடனே நெப்போலியன், “நிறுத்து! அப்படி சொல்லாதே! உயர்ந்தவன் என்று கூறாதே, வளர்ந்தவன் என்று வேண்டுமானால் சொல் “என்று கூறினார்.
      அவர் அதை பற்றிய மிகுந்த உணர்வோடு இருந்தார். “உயர்ந்தவனா,? வளர்ந்தவன் என்று வேண்டுமானால் சொல்” என்றார். நெப்போலியன் கூட சந்தோஷமாக இல்லை என்றால் வேறு யார் சந்தோஷமாக இருக்க முடியும்?
      ஒப்பிடும் மக்கள் சந்தோஷமாக இருக்க முடியாது. இந்த மரங்கள் சந்தோஷமாக இருக்கின்றன. சிறிய மரம் பெரிய மரத்தை பற்றி கவலைப்படுவதில்லை. அவை ஒன்றையொன்றை பற்றி கவலைப்படுவதில்லை. சிறியது, சிறியதுதான், பெரியது பெரியதுதான். உண்மையில் சிறியது பெரியது உயர்ந்தது தாழ்ந்தது எல்லாமே மனித பிரிவினைதான். அவை மரங்களின் உலகில் இருப்பதில்லை.  ஒரு மிகப்பெரிய ஓக் மரம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறதோ அவ்வளவு மகிழ்ச்சியாக ஒரு ரோஜாசெடியும் இருக்கும். அதில் எந்த பிரச்னையும் இல்லை. ரோஜாசெடி மட்டுமல்ல, புல் கூட ஒரு தாமரை மலரைப் போல மகிழ்வோடுதான் இருக்கும். அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது.
      கடவுள் ஒவ்வொருவரின் மேலும் பொழிகிறார். ரோஜாசெடி, புல், தாமரை ஆகிய எல்லாவற்றின் மேலும் எல்லா இடத்திலும் பொழிகிறார். இந்த முழு பிரபஞ்சமும் மகிழ்வோடு இருக்கிறது. மனிதன் மட்டுமே பிரச்னையில் இருக்கிறான். ஒப்பிடுதலால் அகம்பாவம் வருகிறது. தனிதன்மை உனக்கு இருக்கிறது, தனித்துவமான தனித்தன்மை உன்னிடம் உள்ளது. ஒப்பிடுதலால் எவ்வளவு பிரச்னைகள் எழுகின்றன.?
      சில நாட்களுக்கு முன் ஒரு பெண் அவளால் அவளது உடலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று என்னிடம் கூறினாள். அவள் குண்டாக இருக்கிறாள் என்பதுதான் காரணம். அவளுக்கு தான் குண்டாக இருக்கிறோம் என்ற எண்ணம் எப்படி வந்தது, ? எதனால் வந்தது,? ஒப்பிடுவதால் வந்தது.
      உன்னுள் ஒல்லியாக இருக்கும் பெண்களைப் பற்றிய ஏதோ ஒரு கருத்து இருக்க வேண்டும், அதனால்தான் ஒப்பிடுகிறாய், அந்த பெண்ணிடம் எந்த பிரச்னையும் இல்லை, நான் அந்த பெண்ணை பார்த்தேன். அவள் ஒரு அழகான பெண். ஒரு தனித்துவமான பெண், தனித்தன்மைவாய்ந்தவள். ஆனால் தேவையின்றி வேதனையை கவலையை கஷ்டத்தை உருவாக்கிக் கொள்கிறாள். அவள் தான் சிறிது குண்டாக இருப்பதால் தன்னை யாரும் நேசிப்பார்கள் என்பதையே அவளால் நம்ப முடிவதில்லை.
      யார் இதை கொடுத்தது ? இதுதான் சரியானது என்பதை எப்படி நீ தீர்மானிக்கமுடியும்? இதுதான் சரியானது என்பதில் யாருக்கும் எந்த தெளிவும் கிடையாது. எல்லா சராசரிகளும் பொய்யானவையே. இந்த உடலுக்கு எந்த அளவு குண்டாக இருக்கலாம் என்பது யாருக்கும் தெரியாது. அந்த உடலுக்கு மட்டுமே தெரியும். உனது உடலை நேசி, உனது உடல் சொல்வதை கேள். ஒப்பிடாதே.
      இந்த ஒப்பிடுதலால் அவள் தனது முழு வாழ்க்கையையும் தவறவிடுகிறாள். இந்த ஒப்பிடுதல் பிரச்னையை உருவாக்குகிறது. அவளால் நேசிக்க முடிவதில்லை. அவளால் தன்னை யாரும் நேசிப்பதை அனுமதிக்க முடிவதில்லை, ஏனெனில் தன்னை யாரும் நேசிக்க முடியும் என்பதையே அவளால் நம்ப முடிவதில்லை. அந்த மனிதன் விகார மனம் படைத்தவனாகத்தான் இருக்கமுடியும் இல்லாவிடில் எப்படி அவனால் ஒரு அசிங்கமான பெண்ணை நேசிக்க முடியும் ? அழகைப்பற்றிய உனது கருத்து விகாரமானதாக இருக்க வேண்டும் அல்லது நீ ஏமாற்றவேண்டும் என்றுதான் அவள் நினைத்துக் கொள்கிறாள்.
      அவள் யாரையும் நம்புவதில்லை. யாராவது வந்து அவளிடம் வந்து நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னால் அவளால் நம்ப முடிவதில்லை. அவளே அவளை நேசிப்பதில்லை, பின் எப்படி வேறு யாராவது வந்து அவளை நேசிக்க முடியும் சாத்தியமேயில்லை. உனக்கு வேறு ஏதாவது எண்ணம் இருக்க வேண்டும் அல்லது உனக்கு வேறு ஏதாவது கருத்து இருக்க வேண்டும் நீ வெறும் காமத்தில் மட்டும் ஆர்வம் கொண்டவனாக இருக்கலாம், அல்லது வேறு ஏதாவது உனக்கு ஈர்ப்பு இருக்கலாம், அவளது பணத்தின் மீது உனக்கு ஆசை இருக்கலாம். உன்னால் அவளை காதலிக்க முடியாதே, எப்படி அவளை காதலிக்க முடியும் அவள் தான் கண்ணாடியில் பார்க்கும் தனது சொந்த முகத்தையே காதலிப்பதில்லை. நீ அவளை வற்புறுத்தினால் கூட அவள் வேறு ஏதாவது வழியில் உனது காதலை அழிக்க முயற்சிப்பாள். அப்போதுதான் தான் சொன்னது தான் சரி, நீ சொல்வது தவறு என்று நிரூபிக்கமுடியும். உன்னை ஒத்துக் கொள்ள வைக்கும் அளவு சவாலை ஏற்கும் ஒரு காதலனை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். அவள் காதலன் இன்றியே இருப்பாள். அவள் காதலன் இன்றி இருக்க இருக்க தான் அசிங்கமானவள் என்று தான் நினைத்ததுதான் சரி என்று அதில் நிலைப்படுவாள்.
      அவள் அசிங்கமானவள் அல்ல.
      நான் என் வாழ்வில் ஒரு அசிங்கமான நபரைக் கூட பார்த்ததேயில்லை. எப்படி ஒருவர் அசிங்கமாக இருக்க முடியும் ? நீ அசிங்கமான காக்கையை பார்த்திருக்கறாயா ? சாத்தியமேயில்லை. ஒரு அழகற்ற மரத்தை பார்த்திருக்கிறாயா  ?முடியவே முடியாது. எல்லாமும் அதனதன் படி அழகுதான். ஆனால் மனித இனத்துடன் மட்டும் இந்த ஒப்பிடுதல் வருகிறது, உடன் கூடவே பிரச்னையும் வருகிறது.
      ஒப்பிடாதே. அவசியமேயில்லை. மனித இனத்தில் இருக்கும் குழப்பத்திற்கு ஒப்பிடுதலும் ஒரு மிகப் பெரிய காரணம். நீ எப்படி இருக்கிறாயோ அப்படி மிகச் சரியாக இருக்கிறாய். உன்னை நேசி, உன்னை மதி. உனக்கு நீயே மதிப்பு கொடுக்காவிட்டால் வேறு யார் உனக்கு மதிப்பு கொடுக்கப் போகிறார்கள்,? உன்னை நீயே நேசிக்காவிட்டால் வேறு யார் உன்னை நேசிக்கப் போகிறார்கள். ? மக்கள் தங்களை தாங்களே மதிப்பதில்லை, ஆனால் மற்றவர்கள் மதிப்பு கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் தங்களை தாங்களே நேசிப்பதில்லை, ஆனால் இந்த முழு உலகமும் தங்களை நேசிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இப்போது நீ சாத்தியமற்றதை எதிர்பார்க்கிறாய். அப்படி நடக்காது. உன்னை நேசி, உனக்கு மதிப்பு கொடு, தனக்கு மதிப்பு கொடுக்கும் மனிதன் ஒப்பிடுவதில்லை, ஒப்பிடுவது மதிப்பு கொடுக்கவில்லை என்பதையே காட்டுகிறது.
      இதன் சாராம்சம் என்னவென்றால் அகம்பாவம் உள்ளவனாக இருப்பது உனக்கு நீயே மதிப்பு கொடுப்பதில்லை என்பதை காட்டுகிறது. தனித்தன்மை உள்ளவனாக இருப்பது மிகவும் சரியானது, ஆனால் அகம்பாவம் பிடித்தவனாக இருப்பது உன்னிடம் உனக்கு மதிப்பு இல்லை என்பதையே காட்டுகிறது. அகம்பாவத்தை விடு அது உண்ணை ஆனந்தமானவனாக மாற்றும்.
..................................................................ஓஷோ.............................................................................

Saturday, July 30, 2011

அகங்காரம்-தியானம் ஆனந்தம்


      அகங்காரத்துக்குள்ளேயே சிக்கி உழுன்று கொண்டிருக்கும் ஒரு மனிதன் அந்த அகங்காரத்தையே தன் அடையாளம் என்று கருதிக் கொண்டே இருக்கிறான். அது தன் அடையாளம் அல்ல என்கிற தெளிவு ஏற்படும் போது, அதற்கு “விழிப்புணர்வு” என்று பெயர். அடிப்படையில், அகங்காரம் என்பது ஒரு பாதுக்காப்பு ஏற்பாடு. அது பாதுகாப்பு உணர்வின் வெளிப்பாடு.
      ஒரு மனிதன், தன் எல்லையற்ற தன்மையை, ஒரு எல்லைக்குட்பட்ட உடலோடோ, வேறு சில எல்லைகளோடோ அடையாளப்படுத்தத் தொடங்கும் போது அது “அகங்காரம்” ஆகிறது. தன்னுடைய அகங்காரம் இன்னொரு மனிதனின் அகங்காரத்தால் ஆக்கிரமிக்கப்படும் போது சிக்கல் ஏற்படுகிறது. மாறாக, அன்பு நிலையில் அவரிடம் இன்னொருவர் கரைந்து போகிபோது அங்கே ஆக்கிரமிப்பு, ஆதிக்கம், போன்றவற்றிற்கு இடமில்லை.
      ஒரு கைக்குழந்தைக்குக் கூட தேவையான நேரத்தில் தேவையான உணவு தரப்படாவிட்டால் கோபம் வருகிறது.கோபத்தை வெளிப்படுத்த குழந்தை வீறிட்டு அழுகிறது இத்தனைக்கும் அந்தக் குழந்தைக்கு தன் பெயர் என்னவென்று கூட தெரியாது. ஆனால், தன்னைப் பற்றிய எண்ணம் அதற்குள் ஏற்பட்டு விடுகிறது.
      “அகங்காரம்” எனபது நிழலைப் போன்றது. உடல் என்ற ஒன்று ஏற்பட்டுவிட்டால் எப்படி நிழல் விழுவதைத் தடுக்க முடியாதோ அதைப்போல அகங்காரம் எழுவதையும் தடுக்க முடியாது. சிலர், என்னிடம் வந்து “ஊரில் மழை பெய்யவில்லை ஏதாவது செய்து மழை வர ஏற்பாடு செய்யுங்கள்” என்றுசில சமயங்களில் கேட்பதுண்டு. இதுவே, அகங்காரத்தின் வெளிப்பாடுதான்.
      இயற்கைக்கு எதிரான செயல்களைச் செய்வது, தங்கள் சுயநலத்திற்கு இயற்கைய மாசுபடுத்தும் தொழில்களை செய்வது, பிறகு யாரைக் கொண்டாவது மழையை வரழைத்து விடாலம் என்று கருதுவது, அகங்காரம் இல்லாமல் வேறென்ன?
      மகாத்மா காந்தி ஒரு முறை சொன்னார். “இந்த உலகில் எல்லா மனிதர்களின் தேவைக்கும் உரிய செல்வம் இருக்கிறது. ஆனால் ஒரு தனிமனிதனின் பேராசைக்குத்தான் அது போதாது” என்றார்.
      இத்தைகய அகங்காரம் அழிவுகளை ஏற்படுத்தும், அகங்காரத்தை முழுமையாக அகற்றுவதைவிட அதனை நேர்மறையாகப் பயன்படுத்துவதே நல்லது. அகங்காரத்தை உற்றுக் கவனித்து, அதுவே “தான்” என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் தன்மையிலிருந்து விடுபட்டு, அகங்காரத்தால் தனிமைப்பட்டுப் போகும் உயிரை மற்ற உயிர்களோடு அன்பில் கரைத்துக் கொள்வதே மனிதகுலத்திற்கு மேன்மைகள் தரும்.
      வாழ்க்கையை பலரும் வாக்குவாதங்களிலேயே கழிக்கிறார்கள். தாங்கள் விரும்புவதை செய்வதுதான் “சுதந்திரம்” என்று பலரும் எண்ணுகின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் எதைச் சுதந்திரமென்று மனிதன் கருதுகிறானோ, அதுவே அவனைப் பிணைத்து வைக்கிற விலங்காக மாறுகிறது.
      புகைப்பிடிப்பதை ஒரு மனிதர் விரும்புகிறார். அதையே தன் சுதந்திரம் என்றும் கருதுகிறார். ஆனால், சுற்றிலும் பெட்ரோல் சிந்தியிருக்கும்போது, “ சிகரெட் பிடிப்பது என் விருப்பம்” என்கிற அகங்காரம் வெளிப்பட்டால், அது அழிவைத் தரும்.
      சின்ன சின்ன விஷயங்களுக்கும், நிபந்தனை விதிக்கிற மனப்பான்மை மனிதனுக்கு இருக்கிறது. வாழ்க்கை எந்த நிபந்தனைகளும் இல்லாமல் மனிதனுக்கு, எல்லா வாய்ப்புகளையும் வழங்குகிறது. ஆனால், தனகுத்தானே விதித்துக் கொள்கிற நிபந்தனைகளால் மனிதன், தன் எல்லைகளைக் குறுக்கிக்கொண்டு சிரமப்படுகிறான்.
      ‘விழிப்புணர்வு’ இந்த நிலையை மாற்றி மனினை அன்புமயமாக ஆக்கும்.
      மனிதனின் உணர்வு நிலையிலேயே உச்சகட்டமானது அன்புதான். அன்பு என்பது ஆழமான அழகான வலி. அன்பு சக உயிர்கள் மீதான, பரிவாக வெளிப்படும். அந்த வலியின் விளைவாகக் கண்ணீர் வெளிப்படும்.அது அற்புதமான அனுபவம் மற்றவர்களுக்காக பொறுப்பேற்றுக் கொள்வதுதான் அன்பின் அடையாளம்.
      மேற்கத்திய நாடுகளில்தான் கண்ணீர் என்பது பலவீனத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்தியப் பாரம்பரியத்தில் கண்ணீர் என்பது மனம் அன்புமயமாகவும், மென்மையாகவும் இருப்பதைக் குறிக்கிறது. உள்முகமாக, மனிதனைத திருப்பி விடுகிற நிகழச்சிகள் பல. அதை மனிதன், எந்த விதத்தில் உணர்ந்து கொள்கிறானோ, அதற்கேற்ப அவன் இயல்பு மாறுகிறது.
      உதாரணமாக, பெங்களூரில் காய்கறி விற்பனையாளர் ஒருவர் இருந்தார் கடும் நோய்வாய்ப்பட்டு ஆறு மாதம் படுக்கையில் இருந்தார். மரணத்திற்கும், வாழ்க்கைக்குமான போராட்டமாக அது இருந்தது.
      ஆறு மாதங்களுக்குப் பிறகு குணமடைந்தார். அத்தனை காலம், மருத்துவமனையில் இருந்ததால், எல்லாவற்றையுமே இழந்திருந்தார். எனினும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புபோது முன்பைவிடவும் அமைதியாக, ஆனந்தமாக, மகிழ்ச்சியாக வாழத் தொடங்கியிருந்தார்.
      கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலை அவருக்கு எத்தனையோ இழப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும், அந்த மரணப் போராட்டம் காரணமாக வாழ்க்கை குறித்த தெளிவு அவருக்கு ஏற்பட்டிருந்தது.
      உள் நிலையில், தெளிவு தோன்றவும், தன்னைக் குறித்த அகங்காரமும், அடையாளங்களும் மாறவும், ஒரு மனிதனுக்கு தியானம் மிகவும் அவசியம். தியானம் என்பது ஒருவர் மேற்கொள்கிற பயற்சியல்ல, தன் இயல்பு நிலையோடு இருப்பது தனக்குள் இருக்கிற உண்மையை உணர்வது.
      வெளிச்சூழ்நிலையை மனிதன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், தன்னுடைய உள்நிலை குறித்த தெளிவு அவசியமாகிறது. அந்தத் தெளிவு வரும்வரை சிறிய நிபந்தனைக்களுக்குள், எல்லைகளுக்குள் மனிதன் சிறைபட்டிருப்பதோடு அதுவே, வாழ்வின் பலம் என்றும், தவறாகப் புரிந்து கொள்கிறான்.
      தானே, வகுத்திருக்கும் தடைகளிலிருந்து, மனிதனை விடுவிக்க வல்லதுதான் “தியானம்”. தியானம் என்று சொன்ன மாத்திரத்திலேயே அது குறித்து ஏராளமான, சந்தேகங்கள் தான் எல்லருக்கும் ஏற்படுகின்றன.
      தியானமும், பிரார்த்தினையும் ஒன்றா? வாழ்வில், நாம் விரும்பும் நன்மைகளை தியானம் தருமா? என்றெல்லாம், பலர் கேட்கின்றனர். முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கையோடு யாரக்கும், எந்தப் பிரச்னைஐயும் இல்லை. இவர்கள் விருப்பத்திற்கேற்ப, வாழ்க்கை இல்லை என்பதில் தான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
      உடல், மனம், ஆகிய இரண்டு எல்லைகளுக்குள் மனிதன் இருக்கிற வரை அவன் விருப்பத்திற்கேற்ப வாழக்கை அமையாது. ஏனெனில், அந்த நிலைகளைப் பொறுத்தவரை புறச்சூழ்நிலைதான் வாழ்வைத் தீர்மானிக்கிறது. இந்த எல்லைகளைக்கடந்து உயிரின் மூலத்தை உணர்தற்கான கருவிதான் தியானம்.
      பிரார்த்தனை என்பது, இப்போதெல்லாம் பக்தியின் வெளிப்பாடாக இருப்பதில்லை. கடவுளிடம் வைக்கின்ற கோரிக்கைகளையே நாம், பிரார்த்தனை என்று புரிந்து கொள்கிறோம். உங்கள் கவலைகள், தேவைகள், ஆசைகள், அச்சங்கள் என்று நீண்ட புலம்பல்களின் பட்டியலை, பிரார்த்தனை என்று கருதுகிறீர்கள். அதுவம், உங்களுக்கு போதிக்கப்பட ஒரு சடங்காகவே ஆகிவிட்டது. அது வெறும் கோரிக்கைகளை இருக்கும் வரை பிரார்த்தனையால் புனிதத்தன்மை இருக்காது. ஆனால்; பிரார்த்தனையின் அடிப்படை கடவுளிடம் பேசுகிற முயற்சி, பிரார்த்தனை வழியாக கடவுளிடம் பேசுகிறீர்கள்.
      இதி என்ன சிக்கல் என்றால், இத்தனை ஆண்டுகளில் நீங்களே தொடர்ந்து, பேசிக்கொண்டேயிருக்கிறீர்களே தவிர அவரை ஒருவார்த்தைக்கூடப் பேச அனுமதிக்கவில்லை. நீங்கள் ஒரு நண்பரைப் பார்க்க போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர் வீட்டில் போய் அவரை ஒரு வார்த்தைகூட பேச அனுமதிக்காமல் நீங்களே தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள். அரை மணி நேரம், ஒரு மணி நேரம் பேசினால் என்னாகும். அடுத்தமுறை நீங்கள் அவர் வீட்டுக்குப் போகும் போது அவர் உங்களைப் பார்க்கவே பயப்படுவார். வீட்டுக்குள் இருந்து கொண்டே இல்லை என்று சொல்லி அனுப்பிவிடுவார்.
      இப்போது கடவுளிடமும் அதுதான் நிகழ்ந்திருக்கிறது. நீங்கள் சொல்வதைப் பார்த்து அவர் இருந்து கொண்டே இல்லாது போல் பாசாங்கு செய்கிறார். எனவே, நீங்கள் பேசுவதை நிறுத்திக்கொண்டு, கடவுளைப் பேச அனுமதிப்பதற்குத்தான், தியானம் என்று பெயர்.
      தியானம் என்பது, இந்தப் படைப்பின் மூலத்தை உணர்வதற்கான வழி. வெறுமனே கண்மூடி அமர்வது, தியானமல்ல. பலர், வசியக் கலைக்கும், தியானத்துக்கும் உள்ள வேறுபாடு பற்றி என்னிடம் கேட்டிருக்கிறீர்கள். இரண்டும் ஒன்றுக்கொண்டு எதிரான நிலைகள். வசயத்தின் போது, யாரோ ஒருவர், அல்லது ஏதோ ஒன்றின் ஆளுமைக்குள் நீங்கள் அல்லது ஏதோ ஒன்றன் ஆளுமைக்குள் நங்கள் அகப்படுகிறீர்கள். அப்போது விழிப்புநிலை இருக்காது. ஆனால், தியானம் என்பது முழு விழிப்புணர்வில் நிகழ்வது. தியானத்தில் எல்லாற்றிடமிருந்தும் விலகி, சுதந்திரமாக இருக்கிறீர்கள். சுதந்திரம் பொதுவாகவே அச்சமூட்டுவதாய் இருக்கிறது. அதனால் தான் மேலை நாடுகளில், தியானம் என்றாலே அஞ்சுகிற நிலை இருந்தது. எல்லோரும், சுதந்திரத்தை விரும்புவதாகச் சொல்லிக்கொண்டால் கூட அடிப்படையில் ஏதாவதொன்றில் சிறைப்பட்டிருக்கவே விரும்புகிறார்கள்.
      மனைவிமார்கள் மீது, கணவன்கள் ஒரு புகார் சொல்வதுண்டு. எப்பதும் தங்களைத் தொந்தரவு செய்து கொண்டேயிருக்கிறாரகள். அது வேண்டும், அது வேண்டும். அங்கே அழைத்துச் செல்லுங்கள் என்று தொல்லைப்படுத்திக்க கொண்டேயிருக்கிறார்கள், என்று கணவன்மார்கள் அலுத்துக்கொள்வதுண்டு. அந்தப் பெண்கள் தியானம் செய்யத் தொடங்கியபின் தமது கணவர்களிடம் எதையுமே கேட்பதில்லை. உடனே இந்தக் கணவன்மார்கள் கவலைப்படத் தொடங்குகிறார்கள். பெண்கள் யாரையும் சாராமல் தனித்திருப்பதும் தங்களையும் தொல்லை செய்யாமல் இருப்பதும், அவர்களை தடுமாறச் செய்கிறது.
      தியானத்தின் வழியாக சார்பு நிலையிலிருந்து விடுதலைபெற முடியும், என்கிற அனுபவ உண்மைக்கு மனம், முதலில் தயாரடைய வேண்டும். தியானம் என்பது விழிப்புநிலை, தியானம் என்பது சுதந்திரம். தியானம் என்பது சுதந்திரம் என்பதைவிட தியானம் என்பதே சுதந்திரம் என்று சொல்ல வேண்டும்.
      தன்னை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மனிதனை யாரும், எதுவும், அடிமைப்படுத்திவிட முடியாது. மனிதனின் புறவாழ்வுக்காக சில திறமைகள், தகுதிகள் தேவைப்படுகின்றன. அந்தத் திறமைகளோடும், தகுதிகளோடும் மனிதன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுவிட்டால், அதைத் தாண்டி வளர இயலாது. புறச்சூழலின் வெற்றிக்காக பெற்றிருக்கும் தகுதிகளே தடைகளாக மாறி மனிதனை அடிமைப்படுத்த வாய்ப்புண்டு.
      மாறாக, விழிப்புணர்வு நிலையில், எதனோடும், தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாத தன்மையில் இருக்கும்போது மனிதன் விரைவாக வளரமுடியும். அந்த விழிப்புணர்வை தியானம் தருகிறது. மனிதன் தேடிப் பெறுகிற தகவல் அறிவு அவனது உலக வாழ்க்கைக்குத் துணை புரிகிறது. ஆனால், தகவல் திரட்டு மட்டுமே இருந்தால் அந்தத் தகவல் திரட்ட உரிய முறையில் அறிவாக வெளிப்படுத்த முடியும்.
      தன் இயல்பான தன்மையை உணர்த்த ஒருவன், வாழ்வில் அன்பாக, அமைதியாக, ஆனந்தமாக இருக்க முடியும். தன்னுடைய சக்தியைத் தெரிந்து கொள்ளாத போதுதான் பதட்டம் வளரும், பயம் வளரும், சுயநலம் கூடும். மனிதனின் உடல் - மனம் - அறிவு - ஆன்மீகத் தேடல் அனைத்தையும் ஒரே புள்ளியில் சந்திக்க வைத்து, உள்நிலை வளர்ச்சிக்கு உறுதுணை புரிய ஈஷா யோகா மையம் ஏற்படுத்தியிருக்கும் வழியே “சஹஜ ஸ்திதி யோகா”
      சஹஜ ஸ்திதி யோகா என்றால், “இயல்பாக வாழும் கலை” என்று பொருள். தன் இயல்பு வாழ்க்கையில் இருந்தபடியே தன்னை மேம்படுத்திக் கொள்ள அனைவருக்கும் வழங்கப்படும் அரிய வாய்ப்பு இது.
      சஹஜ ஸ்திதி யோகா, எந்தவொரு பழக்கத்தயும் விடச்சொல்லி வற்புறுத்துவதில்லை. எந்தவொரு மனநிலையையும் மாற்ற சொல்லி வற்புறுத்தவதில்லை. அனுபவ ரீதியாக எதையும் உணர்ந்து, வேண்டாதவறை விலக்கிக் கொள்வதற்கான, விழிப்புணர்வைத் தருகிறது.
      இதுவரை உணராத பரிமாணத்தில் வாழ்கையை மனிதன் உணரத் தொடங்குகிறான். அன்பு, அமைதி, ஆனந்தம் ஆகியவை வெளியிலிருந்து பெருவதர்க்கல்ல. மனிதனிடம் ஏற்கனவே இருக்கும் இயல்புதான் என்பதை அனுபவ அடிப்படையில் உணரும்போது முற்றிலும் புதிய பார்வை கிடைக்கிறது.
      செயல்திறன் அதிகரித்தல், உடல் நலம், மன அமைதி இவையெல்லாம் சஹஜ ஸ்திதி யோகாவில் முக்கிய அம்சங்களல்ல. அவை பக்க விளைவுகள்தான். மனிதன் தன்னை உணர்ந்து, தனக்குள் இருக்கும் பேராற்றலை உணர்ந்து, உயிர்களிடையே பேதமில்லை என்கிற அனுபத்தைப் பெறுவதே சஹஜ ஸ்திதி யோகாவின் முக்கிய நோக்கம்.
     நோய் வாய்ப்பட்டிருக்கும் மனிதன் சஹஜ ஸ்திதி யோகாவிற்குப் பிறகு, நோயின் தன்மையை உணர்கிறான். ஆனால், அதனால் துன்பமடைவதில்லை. சில அடிப்படை அணுகுமுறைகள் மாறும்போதே சில நோய்கள் அவனைவிட்டு விலகுவதை இங்கே காணமுடியும்.
      கோபம், பதட்டம், போன்றவை தங்கள் பிறவிக் குணங்கள் என்று கருதியவர்கள், வகுப்புகள் தொடங்கி சில நாட்களிலேயே அந்த குணங்கள் தங்களை விட்டு விலகுவதைக் காண்கிறார்கள். சஹஜ ஸ்திதி யோகா, நீண்ட கால அனுபவத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள, ஆழ்ந்த யோக அறிவியலின் வெளிப்பாடு.
      எல்லா வயதினருக்கும் பொதுவான தன்மையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பயிற்சி, மனிதன் தனது அடிப்படை சக்தியை நன்கு உணரவும் அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பாக அமைந்துள்ளது. உலகின் பல பகுதிகளிலும் பரவியுள்ள சஹஜ ஸ்திதி யோகாவை “தன்னை உணர்வதற்கான அமைதிப்புரட்சி” என்று அழைக்கிறோம். இந்த அமைதிப் புரட்சிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

..............சத்குரு ஜக்கிவாசுதேவ்...................