Monday, October 21, 2013

மன்னிக்க முடியாத மன்னிப்பு ! ஆனந்தம்

      


      வெறும் நம்பிக்கைகளாகவும் ஒழுக்க விதிகளாகவும் திணிக்கப்படும் அட்வைசுகளில் ஒன்றான மன்னிப்பை, மறுப்பதே நம்மில் பலர் வழக்கமாய் கொண்டிருக்கிறோம். மன்னிக்கச் சொல்லி பல மதங்கள் நமக்கு அறிவுரை வழங்கினாலும் ஏற்றுக் கொள்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் நம்மை படுத்துகிறது.

அமெரிக்கப் பெண்மணி ஒருவர் பகிர்ந்து கொண்ட விஷயம் இது.

      “நேற்று காலையில் என் மகளுடன் சண்டை. அவள் என்னை அடித்தாள்; கிள்ளினாள்; கடித்தாள். இரவு தூங்கப்போகும் முன், வழக்கம்போல் எனக்கு முத்தம் கொடுக்க வந்தாள். ‘ஒன்றும் தேவையில்லை’ என்றேன் வெறுப்புடன். ‘இதேபோல் நான் உன்னை அடித்துக் காயப்படுத்திவிட்டு, முத்தம் கொடுக்க வந்தால், நீ என்ன செய்வாய்?’ என்றேன். அவள் சற்றும் யோசிக்காமல், ‘உன்னை மன்னித்துவிடுவேன். என்ன இருந்தாலும் நீ என் அம்மா அல்லவா?’ என்றாள்” – இதைச் சொல்லும்போது அந்தப் பெண்மணிக்குக் கண்ணீர் வந்துவிட்டது.

மன்னிப்பு என்பது அவ்வளவு உணர்ச்சிகரமானது.

      என் வாழ்க்கையுடன் யாரும் விளையாடவில்லை என்று அர்த்தமல்ல. என் உயிரைப் பறிக்கும் முயற்சிகள் கூட நடந்து இருக்கிறது. அந்தந்தச் சந்தர்ப்பங்களில் அவசியமான நடவடிக்கைகள் எடுத்திருக்கிறேனே தவிர, எதையும் குற்றமாக நினைக்கவில்லை.
ஆனால், என் வாழ்வில் மன்னிப்பு என்ற வார்த்தைக்கே இடமில்லை. யாரையாவது குற்றவாளி என்று நினைத்தால்தானே மன்னிக்க முடியும்?

      அதற்காக என் வாழ்க்கையுடன் யாரும் விளையாடவில்லை என்று அர்த்தமல்ல. அந்தந்தச் சந்தர்ப்பங்களில் அவசியமான நடவடிக்கைகள் எடுத்திருக்கிறேனே தவிர, எதையும் குற்றமாக நினைக்கவில்லை. யாரையும் குற்றவாளியாகப் பார்க்கவில்லை.

     உண்மையில் மன்னிப்பு என்பதே ஒருவித தந்திரம். அது இன்றைக்கு உலகில் பெரிய வியாபாரமாகிவிட்டது. முதலில் தவறு செய்யது விட்டு அல்லது செய்ய வைத்து விட்டு பின் மன்னிப்பு என்பது?

      ஒருவன் கடற்கரையில் நடந்து கொண்டு இருந்தான். எதிரில் ஒரு விற்பனையாளன் வந்தான்.

“ஐயா, ஒரு டூத்பிரஷ் வாங்கிக் கொள்ளுங்கள். ஐந்நூறு ரூபாய்.”

“என்னது… பல் தேய்க்கும் பிரஷ் ஐந்நூறு ரூபாயா? கொள்ளையாக இருக்கிறதே?”

“வீட்டில் தயாரித்த சாக்லேட் இருக்கிறது. வெறும் ஐந்து ரூபாய்தான். அதையாவது வாங்கி உதவுங்கள்.”

“இது நியாயமாகத் தெரிகிறது” என்று அவன் ஐந்து ரூபாய் கொடுத்து அதை வாங்கி வாயில் போட்டான். உடனே, ‘த்தூ… த்தூ…’ என்று துப்பினான்.

“ஏய் இதில் கழிவறை நாற்றம் வருகிறதே?”

“அங்கிருந்து எடுத்ததுதான் சார். இப்போது சொல்லுங்கள். வாயைச் சுத்தம் செய்ய டூத்பிரஷ் வேண்டுமா?”

      இப்படித்தான், முதலில் உங்களைப் பாவம் செய்ய வைத்து பின்னர் அதற்கு மன்னிப்பு வழங்கி அல்லது கேட்க வைத்து வியாபாரம் செய்கிறார்கள். இது ஒரு வித அரசியல்

      ஒருவரை ஏன் குற்றவாளியாகப் பார்க்கிறீர்கள்? அவர் உங்களைப்போல் சிந்திக்கவில்லை. நடந்து கொள்ளவில்லை. உணரவில்லை என்பதால்தானே?

      நீங்கள் வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறீர்களோ, அப்படி சுதந்திரமாக வாழ விரும்புகிறீர்கள். உங்களைச் சுற்றி உள்ள மற்ற மனிதர்களும் வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறார்களோ, எப்படி அறிந்திருக்கிறார்களோ, அப்படி வாழ விரும்புகிறார்கள். அவ்வளவுதானே?

      யாரையும் பெருந்தன்மையோடு மன்னித்துவிட்டதாக நினைக்காதீர்கள். அப்படிச் செய்தால், வாழ்நாள் முழுவதும் அவர்களை உங்கள் அடிமைகளாக நினைக்கத் தோன்றும்.

அவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பு எழுதாமல் இருப்பது அதைவிடச் சிறப்பல்லவா?

Sunday, October 20, 2013

ஞானமடைந்தவர் உடலோடு இருக்க முடியுமா? ஆனந்தம்

      


      ஞானோதயம் அடைந்த மனிதர், உயிர் விடாமல் தன் உடலை தக்க வைத்துக் கொள்வது சிரமம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உயிரை தக்க வைத்துக் கொள்ள அவர் என்னென்ன தந்திரங்கள் செய்கிறார் என்று சொல்ல முடியுமா?

சத்குரு:

      ஒரு மனிதர் ஞானமடையும் வரை எல்லா பிறவிகளிலும் தன் கர்மவினையை கரைப்பதற்காக முயல்கிறார்; ஞானமடைந்த பிறகு. விழிப்புணர்வோடு கர்மவினைகளை உருவாக்குகிறார். ஏனென்றால் போதிய கர்மவினை இல்லையென்றால், அவருடைய பக்கம் சமநிலையாக இல்லையென்றால், இந்த உடலில் அவரால் இருக்கமுடியாது.

      90 சதவிதம் பார்த்தால், ஞானமடைகிற நேரமும் உடலை விடுகிற நேரமும் ஒன்றாகவே இருந்திருக்கிறது. இந்த உடல் இயக்கம் குறித்து நிபுணத்துவம் இருக்கிற மனிதர்கள்தான் உடலிலே தொடர்ந்திருக்கிறார்கள். பிறரால் முடிவதில்லை. இதற்கென்று பல வழிகள் உண்டு. உங்கள் இயக்கத்தின் மேல் உங்களுக்கு நிபுணத்துவம் இல்லையென்றால் இன்னொரு வழி, விழிப்புணர்வோடு கர்மவினைகளை ஏற்படுத்திக்கொண்டே போவது. நான் இங்கே என்ன செய்கிறேன் என்பது குறித்து இந்த நேரத்தில் நான் பேச விரும்பவில்லை.

      இராமகிருஷ்ண பரமஹம்சரை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். அவர் தெளிந்த விழிப்புணர்வில் இருந்தவர். மிக அற்புதமான ஒரு உயிர். பல எல்லைகளையும் கடந்தவர். ஆனால் உணவின் மீது அவருக்கு ஒரு வெறியே இருந்தது. சீடர்களோடு பேசிக்கொண்டே இருப்பார். “கொஞ்சம் இருங்கள்”’ என்று சொல்லிவிட்டு சமையலறைக்குச் சென்று சாரதா தேவியாரைப் பார்த்து, “இன்று என்ன சமையல்?” என்று கேட்பார். சாரதாதேவிக்கு வெட்கமாக இருக்கும். இந்த மனிதர் கடவுளைப் போல் இருக்கிறார். எல்லோரும் இவரை வணங்குகிறார்கள். ஆனால் உணவின் மீது இவ்வளவு பைத்தியமாக இருக்கிறாரே என்று.

      புராணங்கள் எல்லாம் என்ன சொல்கின்றன? நீங்கள் ஆன்மீகவாதியாகிக் கொண்டிருந்தால் உணவிலே நாட்டம் குறையவேண்டும் என்று, இல்லையா? ஆனால் இங்கே கடவுளாகவே கருதி வழிபடக்கூடிய ஒரு மனிதர், உணவின் மீது இவ்வளவு பிரியத்துடன் இருக்கிறார். பலவிதங்களில் அவரை சாரதாதேவி கேட்பார். ஆனால் இவர் பதில் எதையும் சொல்லமாட்டார். ஒவ்வொரு நாளும் சாரதாதேவி உணவு பரிமாறுவார். இவர் ஒரு ஊஞ்சலில் அமர்ந்துகொண்டு சாப்பிடுவார்.

      ஒருநாள் மிகவும் கோபம் வந்து சாரதாதேவி சொன்னார். “உங்களை நினைத்தாலே எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கிறது. உணவின் மீது ஏன் இவ்வளவு பைத்தியமாக இருக்கிறீர்கள்? பலர் உங்களைத் தேடி வருகிறார்கள். அவர்கள் உணவைப்பற்றி நினைப்பதே இல்லை. உணவே இல்லாமல் உங்கள் முன் அமர்ந்திருக்க விரும்புகிறார்கள். நீங்கள் உணவின் மீது இவ்வளவு பைத்தியமாக இருக்கிறீர்கள், ஏன்?” என்று. அப்போது இராமகிருஷ்ணர் சொன்னார், “சாரதா, நீ என்னிடம் உணவு கொண்டு வந்து, நான் அந்த நாளில் அதில் ஈடுபாடு காட்டவில்லை என்றால், அன்று தொடங்கி 3 நாட்கள் வரையே நான் உயிரோடு இருப்பேன் என்று தெரிந்து கொள்,” என்றார்.

      ஏழு ஆண்டுகள் கழித்து சாரதாதேவி உணவு கொண்டுவந்து அந்த ஊஞ்சலில் வழக்கமான இடத்தில் வைத்தபோது, ராமகிருஷ்ணர் உணவில் நாட்டம் கொள்ளவில்லை. நேரம் வந்துவிட்டது என்று தெரிந்து சாரதாதேவி அழத்தொடங்கினார். ராமகிருஷ்ணர் சொன்னார், “இப்போது அழுது எந்தப் பயனும் இல்லை. நேரம் வந்துவிட்டது, அது எல்லோருக்கும் வரும்,” என்றார்.

      இது கர்மவினையை உருவாக்குகிற முறை. தெரிந்தே உணவில் ஒரு விருப்பத்தை வளர்த்துக்கொள்வது. விழிப்புணர்வோடு வேண்டுமென்றே எப்போதும் உணவை விரும்புவது. இந்த விருப்பம் இல்லை என்றால் அவரால் அந்த உடலில் இருந்திருக்க முடியாது. நான் இந்த உடலில் தொடர்ந்து இருக்க என்னென்ன தந்திரங்கள் செய்கிறேன் என்று எனக்கு நெருக்கமாக இருப்பவர்களுக்குத் தெரியும்.

      நீங்கள் விழிப்புணர்வோடு இத்தகைய கர்மவினையை ஏற்படுத்தவில்லை என்றால் உடலில் இருப்பது என்பது முடியாது. கர்மவினையின் கட்டமைப்பு இல்லாமல் உங்களுக்கும் உங்கள் உடம்புக்கும் ஒன்றுக்கொன்று செய்துகொள்ள ஒன்றுமே இல்லை.
................வாழ்க வளமுடன்!

Tuesday, October 15, 2013

செயலா? செய்யும் விதமா? குட்டிக்கதை! ஆனந்தம்.

      அடிப்படையாக, வாழ்க்கையில் நாம் என்ன செயல் செய்கிறோம் என்பதைவிட, அந்த செயலை எப்படி செய்கிறோம் என்பதில்தான் நம் வாழ்க்கையின் தன்மை அமைகிறது.
     
      ஒரு ஊரில் மூன்று பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த ஒரு வழிப்போக்கர் முதல் நபரிடம், “நீ இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார். அந்த நபர் நிமிர்ந்து பார்த்து, “பார்த்தால் தெரியவில்லையா?, நான் கல் கொத்திக்கொண்டு இருக்கிறேன். உனக்கு என்ன கண் குருடா?” என்று கேட்டார்.

      உடனே அந்த நபர் அடுத்தவரிடம் சென்று, “நீ இங்கே என்ன செய்துகொண்டு இருக்கிறாய்?” என்று கேட்டார். அவர் உடனே நிமிர்ந்து பார்த்து, “ஏதோ வயிற்றுப் பிழைப்பிற்காக செய்கிறேன். அவர்கள் என்ன செய்யச் சொல்கிறார்களோ அதைச் செய்வேன், அவ்வளவுதான்” என்று சொன்னார்.

      அடுத்து அவர் மூன்றாவது நபரிடம் சென்று, “நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்,” என்று கேட்டார். அதற்கு அந்த மூன்றாவது நபர் மிகவும் ஆனந்தமாக எழுந்து நின்று, “நான் இங்கே ஒரு அழகான கோவிலை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்” என்று சொன்னார். அவர்கள் எல்லோருமே ஒரே வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த ஒரே வேலையை மூன்று பேருமே மூன்று விதமாக உணர்கிறார்கள். அதற்கேற்றார் போல்தான் அவர்கள் வாழ்க்கையின் தன்மையும் அமைகிறது. எனவே எளிமையான செயல் செய்கிறீர்களா அல்லது மிகவும் கடினமான செயல் செய்கிறீர்களா என்பதைவிட செய்யும் வேலையை எப்படி செய்கிறீர்கள் என்பதுதான் உங்கள் வாழ்க்கைத் தன்மையை நிர்ணயிக்கிறது.

Saturday, October 12, 2013

இறந்தபின் கட்டை விரல்களைக் கட்டுவது ஏன்? ஆனந்தம்




ஒருவர் மரணமடைந்தவுடன், அந்த உடலை வடக்கு தெற்காக வைப்பது, கால் கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டுவது போன்ற சடங்குகளை எதற்காகச் செய்கிறார்கள்?

      இறப்பு நேர்கிற நொடியில் இருந்து அல்லது இறப்பு நேர்வதற்கு முன்பிருந்தே ஒரு மனிதன் பயனுள்ள வகையில் இறந்து போவதற்கு என்னென்ன செய்யலாம் என்று இந்தக் கலாசாரத்தில் பல வழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒருவருக்கு மரணம் நெருங்குகிற வினாடியில், அது குறித்து தெரிந்தவர்கள் ஒருவித சுலபத்துடன் மரணம் நிகழ வேண்டுமென்பதற்காக, அந்த மனிதரை வீட்டுக்கு வெளியே கொண்டுபோய், வடக்கு தெற்காக உடலைக் கிடத்துவார்கள். ஏனெனில், ஒரு கட்டடத்துக்குள் இருக்கிறபோது அவ்வளவு சுலபமாக உயிர் பிரியாது. தலை வடக்கு நோக்கி வைக்கப்படும்போது காந்த ஈர்ப்பு காரணமாக அந்த உயிர் உடலைவிட்டு எளிதாகப் பிரியும்.
      மரணம் நிகழ்ந்த பிறகுகூட பிராண சக்தி ஸ்தூல உடலை விட்டு முழுவதும் அகன்றுவிடுவதில்லை. எனவே, அந்த உயிர் உடலை சுற்றிக் கொண்டே இருக்கிறது. ஆனால், உடல் வடக்கு தெற்காக வைக்கப்பட்டு உயிர் பிரியும்போது அந்த உடலில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. எனவே, அந்த உடலைச் சுற்றிக்கொண்டு இருப்பது பயன் தராது என்று அந்த உயிருக்குத் தெரிந்துவிடுகிறது. மற்ற சூழ்நிலைகளில் உயிரானது தொடர்ந்து உடலுக்குள் நுழைய முயற்சிக்கும். இந்தப் போராட்டம் அந்த இடத்தில் ஒருவிதமான சக்தியை ஏற்படுத்தும். இது இறந்துபோன மனிதருக்கும் நல்லதல்ல, வாழ்கிறவர்களுக்கும் நல்லதல்ல.
      இன்னொரு முக்கிய சடங்கு, இறந்த மனிதரின் இரண்டு கால் கட்டை விரல்களும் ஒன்றாகக் கட்டப்படுவது. பொதுவாகவே மரணம் நிகழ்கிறபோது கால்கள் அகலமாகத் திறந்துகொள்கின்றன. அந்த நிலையில் பின்புறத் துவாரம் திறந்திருக்கும். எனவே பிரிந்து போன உயிர் அந்த மூலாதாரம் வழியே உள்ளே நுழைய முயலும். அது அந்த உயிருக்கும் அந்தச் சூழலுக்கும் நல்லதல்ல.
      எனவே, கால் கட்டை விரல்களைக் கட்டுவதன் மூலம் மூலாதாரம் மூடப்படுகிறது. யோகக் கிரியைகள் செய்வதற்காக நீங்கள் கால்கட்டை விரல்களை ஒன்று சேர்க்கும்போது பின்புறத் துவாரம் இயல்பாகவே மூடிக்கொள்ளும். இதையேதான் இறந்தவர்களுக்கும் செய்கிறார்கள். எனவே உடலை கைக்கொள்ளலாம் என்கிற அந்த உயிரின் முயற்சி இப்போது பலிக்காது.
      மூலாதாரம் திறந்திருக்கிறபோது அந்த உடலின் உள்ளே நுழைய வேறு சில ஆவிகளும் முயலக்கூடும். மாந்திரீகப் பயிற்சி மேற்கொள்பவர்களும் அந்த உடலைப் பயன்படுத்தக்கூடும். அப்படி அந்த உடல் வேறு விதத்தில் பயன்படுத்தப்பட்டால், அது பிரிந்து சென்ற ஆன்மாவைப் பலவிதங்களில் துன்புறுத்துவதாக இருக்கும். அதனால்தான் ஒரு மனிதர் இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் அவரின் கால் கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டப்படுகின்றன!

Friday, October 11, 2013

வெற்றிக்காக காத்திருத்தல் ஆனந்தம்

      

      வெறுமனே காத்திருத்தலுக்கும், 'ஏதோ ஒன்றிற்காகக் காத்திருத்தலுக்கும் இடையே நூலிழை வித்தியாசம். அமைதியான முன்னேற்றத்திற்கும், மன அழுத்தத்துடன்கூடிய வெற்றிக்கும் இடையே உள்ள வித்தியாசம் தான் அது.
      விவசாயி தன் நிலத்தை உழுது, விதையும் விதைத்தாகி விட்டது. இப்போது அவன் காத்திருக்க வேண்டும் அவ்வளவுதான். மனிதனின் பொறுப்பு முடியுமிடத்தில் பரம்பொருளின் பொறுப்பு தலைதூக்குகிறது. காத்திருத்தல் கலையை அந்த விவசாயி அறிந்திருந்தால், அவன் பொறுமையுடன் காத்திருப்பான். மாறாக, பொறுமையின்றி இருப்பானெனில், காத்திருக்கும் ஒவ்வொரு கணமும் அவனது பதற்றமும், மன அழுத்தமும் அதிகரிக்கும். "ஏன் இன்னும் இது நடைபெறவில்லை? மற்றும் ஏன் இன்னும் இது முளைவிட வில்லை?" என்று கேள்விகளால் அவன் மனம் அலைக்கழிக்கப்படும். விதை ஒருவழியாக முளை விடும் போது அவன் வெற்றிக்காக விவசாயி தன் மன அமைதியை அடகு வைத்திருப்பான். பாதிப்பு ஏற்க்கனவே ஏற்ப்பட்டு விட்டது.
      லிஃப்ட் வருவதற்க்கான பொத்தானை அழுத்திவிட்டீர்களா? காத்திருங்கள்! அது வரும்போது வரட்டும். ஆனால் லிஃப்ட்க்காக காத்திருதுக்கொண்டிருக்கும் வேளையில் நீங்கள் அங்கும் இங்கும் நடை போடுவது, கண்களால் மேலும் கீழும் பார்ப்பது போன்றவற்றால், லிஃப்ட்டை வேகப்படுத்தி உங்களிட்ம் அதை விரைவாக சேர்த்து விடுமா என்ன? சர்வரிடம் உங்களுக்கு வேண்டிய உணவு வகைகளை கூறியாகி விட்டதா என்ன? காத்திருங்கள்! பொறுமை இழக்காதீர்கள், பொறுமை இழந்தால் சர்வருக்காக காத்திருப்பதை மோசமான அனுபவமாக்கிவிடும். எடுக்கப்பட வேண்டிய முடிவுகளை எடுத்து விட்டீர்களா? செய்ய‌ப்பட வேண்டிய செயல்களை செய்து விட்டீர்களா? மேற்க்கொள்ள‌ப்பட வேண்டிய நடவடிக்கைகளை மேற்க்கொண்டுவிட்டீர்களா? வெறுமனே காத்திருங்கள். இதற்காக அல்லது அதற்காக காத்திருக்காதீர்கள். வெறுமனே காத்திருங்கள். சாந்தமான முன்னேற்றத்திற்க்கான திறவு கோள் அதில் இருப்பதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். ஏதாவது ஒன்றிற்க்காக காத்திருப்பது வெற்றியை கொண்டுவரலாம், ஆனால் அது மன அழுத்தத்தோடு கூடியதாக இருக்கும். வெற்ரியை அடைய அமைதியான வழி இருக்கும் போது ஏன் மன அழுத்ததோடு கூடிய வழியை தேர்ந்தெடுக்கவேண்டும்?
      உங்கள் கடமையை செய்யுங்கள். உங்கள் பங்கை வழங்குங்கள். வெறுமனே காத்திருங்கள் அதுதான் அமைதியான முன்னேற்றத்திற்கான பாதை...............
                              வாழ்க வளமுடன்!

Thursday, August 22, 2013

சிகரத்தை அடைவதற்க்கு சுலபமான‌ வழிகள்! ஆனந்தம்

      


      வாகனம் ஓட்டுவது என்று தேர்ந்தெடுத்துவிட்டால் போக்குவரத்து நெரிசலை ஏற்றுக்கொண்டாக வேண்டும். ஆரோக்கியம் குறித்து அக்கறை கொண்டிருந்தால், நாக்கு கேட்டதையெல்லாம் அதற்கு கொடுக்க முடியாது! வருமானம் என்றால் வருமான வரியும் உடன் வரும்.

      வாழ்க்கையில் நீங்கள் எதைத்தேர்ந்தெடுத்தாலும் அதோடு ஒட்டிப்பிறந்த நன்மைகளோடும் தீமைகளும் தான் அதுவரும். முட்களற்ற ரோஜாவைத் தேடுவது எவ்வளவு மடத்தனம்! நானயத்தின் ஒரு பக்கத்தை நீங்கள் தேர்ந்தெடுத்தால் அதன் மறுபக்கத்தையும் சேர்த்துதான் நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள். பிரச்சனைகளற்ற ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை வாழவேண்டும் என்று கேட்க்காதீர்கள். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை மகான்க‌ளால் கூட வாழமுடியாது! அப்படிப்பட்ட வாழ்க்கை எதுவும் கிடையாது!

      கனவுகள் பெரிதாகும் போது பிரச்சனைகளும் பெரிதாகும். நீங்கள் நடக்க விரும்பும் போது ஒருசில பிரச்சனைகள் மட்டுமே இருக்கும். அதே நேரம் ஒரு ஓட்டப்பந்திய வீரனாக பந்தயங்களில் கலந்து கொள்ள நீங்கள் விரும்பினால், பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பது வெளிப்படை. வெறுமனே வாழ்க்கையை ஓட்டினால் மட்டும் போதும் என்று நீங்கள் நினைத்தால், பிரச்சனைகள் குறைவு தான். ஆனால் உங்கள் முழுத்திறனையும் வெளிப்படும் விதத்தில் வாழ நினைத்தால், நீங்கள் பெரிய பெரிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

      செதுக்கப்பட நீங்கள் தயாராக இருந்தால் தான், துதிக்கப்படும் ஒரு சிலையின் நிலையை அடையும் தகுதியை உங்களால் பெற‌ முடியும். சிகரத்தை அடைவதற்க்கு சுலபமான‌ வழிகள் ஏதும் கிடையாது. சிகரத்தை அடைந்தவர்கள் அதை சுலபமாக சென்றடையவில்லை.

      என்ன இருந்தாலும் வரலாற்றை படிப்பவனுக்கும், வரலாற்றைப் ப‌டைப்பவனுக்கும் வித்தியாசம் இருக்கத்தானே வேண்டும்?

வெள்ளியின் கதை:    

      பைபிள் வாசிப்புக் குழு ஒன்றில் இப்படி ஒரு வாசகத்தைப் படித்தனர்: "வெள்ளியை சுத்தப்படுத்தும் மாசு அகற்றும் நபர் போல அவர் அமர்ந்திருப்பார்." கடவுளின் குணம் மற்றும் இயல்பு குறித்து இங்கு கூற முற்படுவது என்ன?
      அந்த வாரம் அக்குழுவில் இருந்த ஒரு பெண்மனி வெள்ளி உலோகக்கொல்ல‌ன் ஒருவன் வேலை செய்வதைப் பார்ர்கச் சென்றாள். அங்கே
முதலில் கொல்லன் ஒரு துண்டு வெள்ளியை  எடுத்து தீயில் வைத்து அது சூடாவதற்காக காத்திருந்தான். "வெள்ளியை தீயின் நடுவில் வைக்கவேண்டும். ஏனெனில் அங்கே தான் சூடு அதிகமாக இருக்கும், அது அனைத்து மாசுகளையும் எரித்துவிடும்" என்று எடுத்துரைத்தான் கொல்லன். "முழுநேரமும் உலையின் முன்னாலேயே உட்கார்ந்திருக்க வேண்டும் என்பது உண்மையா?" என்று அந்தப் பெண்மனி கேட்டாள். "உண்மைதான்! முழுநேரமும் உட்கார்ந்திருப்பது மட்டுமல்லாமல், வெள்ளியில் இருந்து கண்களை அகற்றவும் கூடாது" என்றும் தெரிவித்தான். "அதிகப்படியான் ஒரே ஒரு கணம் வெள்ளியை நெருப்பில் விட்டுவிட்டால் அது உருகி ஓடிவிடும்". உடனே அப்பெண்மனி "வெள்ளி முழுவதும் மாசு அகற்றப்பட்டுவிட்டது என்பது உனக்கு எப்படித் தெரியும்?" "ஓ! அது ரொம்ப சுலபம்...... என் உருவத்தை நான் அதில் பார்க்கும் போது!"
      வாழ்க்கைப் பிரச்சனை உங்களை அதிகமாகத் தாக்குவதாக நீங்கள் உணர்ந்தால், கடவுள் உங்கள் மீது தான் வைத்த கண்னை எடுக்கவில்லை என்பதையும், அவரது பிம்பம் உங்களில் தெரியும் வரை அவர் தனது கண்களை அகற்ற மாட்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனுள்ளும் ஒரு தீர்கதரிசி உறங்கிக்கொண்டிருக்கிறான். கடவுள் மனிதனாக மாறியதற்க்கு காரணம், மனிதன் மீண்டும் கடவுளாக ஆக வேண்டும் என்பதற்காகதான். வாழ்க்கை என்பது உங்களை எரித்துக் கொண்டிருக்கும் ஒரு உலை அல்ல. ஜொலிக்கும் வெள்ளியாக மாற்றிக் கொண்டிருக்கும் ஒரு உலை!
      வாழ்க வள‌முடன்! 

Monday, July 22, 2013

குரு பெளர்ணமி என்றழைப்பது ஏன்? ஆனந்தம்

      



      ஜுலை மாதத்தில் வரும் பௌர்ணமியை குரு பௌர்ணமி என்று அழைக்கிறார்கள். அது ஏன்? குரு பௌர்ணமிக்கான சிறப்பு என்ன?

சத்குரு:

      மனித உடல் என்பது மண்ணைத் தவிர வேறு ஏதுமில்லை. எனவே இந்த பூமியின் இயல்பு, இந்த பூமியின் மனப்பாங்கு போன்றவை மாறும்போது அதே மாற்றங்கள் மனித உடலிலும் நிகழ்கின்றன. பூமத்திய ரேகைக்கு வடக்கே சூரியனின் ஓட்டம் இருக்கும்போது (ஜனவரி முதல் ஜுன் வரை – தை முதல் ஆனி வரை) உத்திராயணம் என்கிறோம். சூரியனின் ஓட்டம் தெற்கே இருக்கும்போது (ஜுலை முதல் டிசம்பர் வரை – ஆடி முதல் மார்கழி வரை) தக்ஷிணாயணம் என்கிறோம்.

      சிவன் ஒரு குருவாக அமர்ந்து போதனைகள் வழங்கியதால் அந்த பௌர்ணமி குரு பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது.
உத்திராயணத்தில் வரும் முதல் பௌர்ணமியை (தை மாதம்) “தன்ய பௌர்ணமி” என அழைக்கிறோம். தக்ஷிணாயணத்தில் வரும் முதல் பௌர்ணமியை (ஆடி மாதம்) “குரு பௌர்ணமி” என்கிறோம். இப்பௌர்ணமி ஜுலை மாதத்தில் ஏற்படும். தட்சிணாயன காலமான (ஜுலையிலிருந்து டிசம்பர் வரை) ஆறு மாதங்கள் ‘உள்வாங்கிக் கொள்ளும்‘ தன்மையுடையதாகவும், உத்திராயண காலமான (ஜனவரி முதல் ஜுன் வரை) ஆறு மாதங்கள் ‘நிறைவடையும்‘ தன்மையுடையதாகவும் உள்ளன.

      சப்தரிஷிகள் என அழைக்கப்படும் ஏழு பேர் சிவனிடமிருந்து பெற்ற சில யோகப் பயிற்சிகளை 84 வருடங்கள் தொடர்ந்து செய்தனர். அந்த 84 வருடங்களும் சிவன் அவர்களை பார்க்கவில்லை, அவர்களிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர்களின் தீவிரத்தை உணர்ந்த சிவன் மனமிரங்கி, உள்வாங்கிக் கொள்ளும் தன்மை கொண்ட தட்சிணாயனத்தின் முதல் பௌர்ணமியன்று தெற்கு நோக்கி அமர்ந்து, அவர்களுக்கு முறையான போதனைகளை வழங்கினார். சிவன் ஒரு குருவாக அமர்ந்து போதனைகள் வழங்கியதால் அந்த பௌர்ணமி குரு பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது. சிவன் தெற்கு நோக்கி அமர்ந்ததால் சிவன் அன்று முதல் தக்ஷிணாமூர்த்தி என்றும் அறியப்பட்டார்.

      லிங்கபைரவி தேவியின் கண்கள் கூட ஒவ்வொரு 6 மாதத்திற்கும் மாறும். ஜனவரியிலிருந்து ஜுன் வரை உத்திராயணத்தில் தேவியின் கண்கள் தீப்பொறியாகவும், ஜுலையிலிருந்து டிசம்பர் வரை தட்சிணாயனத்தில் அவள் கண்கள் சாந்தமாகவும் இருக்கும். தேவியின் சக்தியும் அதற்கேற்றாற் போல மாறும். இதனாலேயே இந்தியாவில் பெண்தன்மைக்கு உண்டான கொண்டாட்டங்கள் அனைத்தும் தட்சிணாயனத்திலேயே தொடங்கும்.

      உத்திராயணத்தில், ஜனவரியிலிருந்து ஜுன் வரை இந்த பூமி ஆண்தன்மை வாய்ந்ததாக, நிறைவடையும் தன்மை கொண்டதாக இருக்கும். அடுத்த ஆறு மாதங்கள் ஜுலையிலிருந்து டிசம்பர் வரை, தட்சிணாயனத்தில் பெண்தன்மை வாய்ந்ததாக, உள்வாங்கும் தன்மை கொண்டதாக உள்ளது. எனவேதான் சிவன் தன்னுடைய போதனைகளை வழங்க தட்சிணாயனத்தின் முதல் பௌர்ணமியை தேர்ந்தெடுத்து குருவாக அமர்ந்து போதனைகளை வழங்கினார். எனவேதான் இந்தப் பௌர்ணமி குரு பௌர்ணமி என்று வழங்கப்படுகிறது.

      ஈஷா யோகா மையத்திலும் ஒவ்வொரு வருடமும், தியானலிங்கத்தில் குரு பௌர்ணமி குரு பூஜையுடன் கொண்டாடப்படுகிறது.

      மேலும் ஆன்மீக சாதகர்கள் அனைவரும் அன்று தங்கள் குருவிற்கு குருபூஜை செய்து, அடுத்துவரும் 6 மாதங்களுக்கு (உள் வாங்கும் தன்மையுடையவை) ஆன்மீகப் பயிற்சிகள் தீவிரமாக செய்து வந்தால் அப்பயிற்சியின் பலன்கள் அடுத்த 6 மாதங்களில் (நிறைவடையும் தன்மையுடையவை) பலனளிக்கக் துவங்கும்.

Saturday, July 13, 2013

அங்கப் பிரதக்ஷணம் எதற்காக? ஆனந்தம்

      



      சிலர் கோவிலைச் சுற்றி, வலது புறமாக, சுடும் கட்டாந்தரையில், அங்கப் பிரதக்ஷணம் செய்கிறார்களே, அது எதற்காக?

      பொதுவாக கோவிலுக்குச் செல்பவர்கள் அனைவரும் இடதிலிருந்து வலது பக்கமாக மூன்று முறையாவது தெய்வச்சிலை உள்ள கருவறையைச் சுற்றி நடப்பார்கள். ஆனால் சிலர் மட்டும், வேண்டுதல்படி, நடப்பதற்குப் பதிலாக படுத்து உருண்டு கொண்டே சுற்றுவார்கள்.

      ஒரு சக்தி வடிவத்தை சுற்றி வரும்போது, தெய்வீக சக்தியை கிரகிக்கும் தன்மை அதிகரிக்கிறது. ஆனால் நாம் வாழும் இடத்தைப் பொறுத்து அது இரண்டு விதமாக உள்ளது. பூமத்திய ரேகைக்கு வட பகுதியில், அதாவது இந்தியா போன்ற நாடுகளில் வாழ்பவர்கள், கருவறையைச் சுற்றி வலது புறமாகவும் (கடிகாரம் சுற்றும் திசையில்), பூமத்திய ரேகைக்கு தென் பகுதியில் வாழ்பவர்கள் இடது புறமாகவும் சுற்ற வேண்டும். ஏன் இந்த வேறுபாடு என்றால்..

      இதை ஒரு உதாரணம் மூலம் விளக்க முடியும். பூமத்திய ரேகைக்கு தென் பகுதியில் நீர்த் துளி அல்லது ஏதோ ஒரு பொருள் மேலிருந்து கீழ் வரும்போது, அந்தப் பொருள் சுற்றிக் கொண்டே கீழே விழுமானால், அது வலது புறமாகத்தான் சுற்றி விழும். குழாயைத் திருப்பினால் கூட நீர் வலதுபுறமாகவே சுற்றி விழுவதைப் பார்க்க முடியும். பூமத்திய ரேகைக்கு கீழே அதாவது தென் புறமுள்ள நாடுகளில் இது இடது பக்கம் நிகழும். சரியாக பூமத்திய ரேகையில் அமைந்துள்ள ஊர்களில், இதை ஒரு சுற்றுலா அம்சமாக வைத்திருப்பார்கள். பூமத்திய ரேகைக்கு அந்தப்பக்கம் உள்ள குழாயைத் திருப்பினால் தண்ணீர் ஒரு திசையிலும் இந்தப்பக்கம் வந்து குழாயைத் திருப்பினால் தண்ணீர் வேறு திசையிலும் சுற்றி விழும்.
     
      எனவேதான் பூமத்திய ரேகைக்கு மேல்புறமுள்ள நம் நாட்டில் ஒரு சக்தி வடிவத்தை சுற்றும்போது வலது புறமாக சுற்றுகிறார்கள். இப்படிச் செய்யும்போது தெய்வீகத்தை கிரகிக்கும் தன்மை அதிகமாகிறது. ஆனால் ஏன் படுத்துக் கொண்டே சுற்றுகிறார்கள் என்றால்..

      அனைவராலும் ஒரு இடத்திலேயே உட்கார்ந்து கொண்டு முழுமையாக தங்களை அர்ப்பணிக்க முடிவதில்லை. ஏதோ ஒரு செயல் மூலம்தான் தங்களை அர்ப்பணிக்க முடிகிறது. செயல் எந்த அளவு தீவிரமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அவர்களால் தங்களை முழுமையாக அர்ப்பணிக்க முடிகிறது. அதனால்தான் மக்கள் இதுபோன்ற வழிகளை உருவாக்கிக் கொண்டார்கள். நடந்து சுற்றுவதற்குப் பதிலாக உருண்டு கொண்டே சுற்றுகிறார்கள்.

இப்படிச் சுற்றுவதால் அவர்களுக்கு ஏதாவது அதிகமாகக் கிடைக்குமா என்றால் அப்படி ஏதும் சொல்லமுடியாது. ஆனால் எதையாவது கஷ்டப்பட்டு செய்யும்போதுதான், மக்களுக்கு, எதையோ அர்ப்பணிக்கிறோம் என்ற எண்ணமும் மன நிறைவும் ஏற்படுகிறது.

      இப்படிச் செய்யும்போது, சக்தியை கிரகிப்பதற்கு ஏதுவாக, தங்களை அதிகமாக திறந்த நிலையில் வைத்துக் கொள்ள முடிகிறது.அதிக நேரம் அந்த சக்தி நிலை உள்ள இடத்தில் இருக்கமுடிகிறது. எனவேதான் உருண்டு கொண்டே கோவிலைச் சுற்றுகிறார்கள். அதுவும்கூட, கோவிலைச் சுற்றி வெளிப்புறமுள்ள கருங்கல் தரையில், சூரியனின் தகிக்கும் வெப்பத்தில் உருண்டு சுற்றி வருகிறார்கள்.

Monday, July 8, 2013

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே? ஆனந்தம்

      



      ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலேன்னு ஒரு வாக்கியம் இருக்கே, அது எவ்வளவு உண்மை?

      பெண்களைத் தொலைவில் வைத்தே பார்த்துப் பழகிவிட்ட ஆண்கள் சொன்ன வார்த்தைகள் இவை. பெண்ணை முழுமையாக அருகிலிருந்து பார்க்கத் தவறி விட்டவர்களின் பக்குவமற்ற புலம்பல் இது.

      உண்மையில், ஆணுக்குப் பெண்ணோ, பெண்ணுக்கு ஆணோ தாழ்ந்தவரில்லை. ஆண், பெண் என்று இருவரையும் வித்தியாசப்படுத்தப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. இரண்டு பேரும் இல்லாமல் குடும்பமோ, சமூகமோ, உலகமோ, எதுவுமே முழுமையடையாது.

      ஆனால், ஓர் ஆணால் உணர முடியாத சில நுட்பமான உணர்வுகளை ஒரு பெண்ணால் உணர முடியும். ஆண் தன்னுடைய புத்தியால் செலுத்தப்படுகிறான். பெண்ணோ தன்னுடைய உள்ளுணர்வால் செலுத்தப்படுகிறாள்.

      புத்தி என்பது வெளியிலிருந்து சேகரித்து எந்தத் தரத்தில் கிடைத்ததோ, அந்தத் தரத்தில்தான் செயல்படும். உள்ளுணர்வு வெளி அழுக்குகளால் அசிங்கப்படாதது. தூய்மையானது; புத்தியைவிட உயர்வானது. அதனால், பெண்கள் ஆண்களை விட உணர்வுகளில் மேம்பட்டு இருக்கிறார்கள்.

      உலகின் பல விஷயங்களை விஞ்ஞானப்பூர்வமாக பகுத்துப் புரிந்து கொள்ள ஆணுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், அவனுக்கு அருகிலேயே இருந்த பெண்ணின் நுட்பமான உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாமல் போனது. புரிந்து கொள்ள முடியாததின் மீது இயல்பாகவே அச்சம் வரும்.

      அச்சத்தால் பெண்ணை ஏறிட்டுப் பார்க்க விடாமல், தன் முரட்டுத் தனத்தால் தாழ்த்தி வைத்தான். தன் உடல் வலுவைப் பிரயோகித்து, புத்தியின் தத்திரங்களைப் பயன்படுத்தி, அவளைத் தன் நிழலில் வைத்திருக்க வேண்டியதை எல்லாம் அவன் செய்து முடித்தான்.

      அப்படிச் சொல்லப்பட்ட வார்த்தைகள்தான் இவை.

      ஆவது நிச்சயமாக ஒரு பெண்ணால்தான், ஓர் உயிரைத் தன்னுள் வைத்து, உருவம் கொடுத்து இந்த உலகுக்கு உங்களைக் கொடுப்பவள் ஒரு பெண்தான்.

      ஆனால், அழிவதற்கும் அவளையே பொறுப்பாக்கிப் பார்க்கிறான் என்றால், அப்புறம் அந்த ஆணுடைய பங்களிப்புதான் என்ன?

      ஓர் ஆண் பெண்ணை மரியாதையுடன் உரிய மதிப்புடன் கையாளத் தெரியாவிட்டால், அவளால் அழிந்து போகக்கூடும்.

      ஆக்குவதோ, அழிப்பதோ ஏதோ ஒரு திறமை பெண்ணிடம் இருக்கிறதே, எல்லாவற்றையும் அவளிடமே ஒப்படைத்துவிட்டு ஒன்றுக்கும் உதவாதவனாகத்தானே ஆண் இருக்கிறான்?

      திறமையான ஆண்கள் நிச்சயம் இந்த வார்த்தைகளை அலட்சியம் செய்வார்கள்.

Saturday, July 6, 2013

பில்லிசூனியம் உண்மையா? ஆனந்தம்



     
      சித்து வேலைகளிலேயே மிக மோசமான வகைகள் எல்லாம் உங்கள் மனதில்தான் நிகழ்கின்றன. மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்ய முடியுமோ அது வெகு சொற்பம் மட்டுமே. நல்லது, கெட்டது என இரண்டு வகைகளிலும், உங்களுக்கு நீங்களே செய்து கொள்வதுதான் மிக அதிகம்.

      நம்மைச் சுற்றி இருக்கும் மக்களின் நோக்கங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் நமக்குள் என்ன நடக்கிறது என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியும். அதை 100% நாம் விரும்பிய வழியில் உருவாக்க இயலும்.
எனவே உங்கள் மனதை நேர்மறையான மந்திரவித்தையாக மாற்றிவிட்டால், மற்றவர்களுடைய பில்லிசூனியங்களை நீங்கள் புறக்கணித்துவிடலாம். ஆனால் உங்கள் மனமே பில்லிசூனியமாக இருந்தால், உங்களை அழிப்பதற்கு யாரோ ஒருவர் கொஞ்சம் கொளுத்திவிட்டால் போதும் அது சுலபமாகிவிடும்.

      மற்றவர்கள் உங்கள் மீது எந்த நோக்கத்தோடு இருக்கிறார்கள் என்பதை நீங்கள் முழுமையாகக் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது என்றாலும், அவர்களுடைய நோக்கங்களை உங்களால் ஓரளவு மாற்றியமைக்க முடியும். கோடிக்கணக்கான மக்கள் உங்களை விரும்பும்படியாக சூழ்நிலையை உங்களால் உருவாக்க முடியும். ஒருவகையில் பார்த்தால், நீங்கள் அவர்களுடைய நோக்கங்களையும் கட்டுப்படுத்துகிறீர்கள், ஆனால் அது 100% சாத்தியமில்லை.

      உங்களுடைய சொந்த குடும்பமே கூட திடீரென்று உங்களுக்கு எதிராகத் திரும்பிவிடும். இதை நாம் தினசரி வாழ்க்கை சூழ்நிலையில் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்? எனவே மற்றவர்கள் உங்கள் மீது என்ன நோக்கத்துடன் இருக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படுவதை விட, முதலில் உங்கள் மனம் உங்களுக்குச் செய்யக் கூடிய கொடூரமான செயல்களைப் பற்றி பார்க்க வேண்டியது அவசியம்.

      உங்கள் மனதை நீங்கள் சரி செய்துவிட்டால், மற்றவர்களுடைய மந்திர வித்தைகள் – அவை நல்லவையோ அல்லது பில்லிசூனியங்களோ, உங்கள் மேல் அவை தாக்கம் ஏற்படுத்தாது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அவை உங்கள் மேல் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் குறைவாக இருக்கலாம், ஆனால் அவற்றால் உங்கள் வாழ்க்கையின் பாதையை மாற்ற முடியாது.

      சித்து வேலைகள் செய்வது ஓர் விஞ்ஞானம். அது இன்றைய உலகில் பெரும்பாலும் தொலைந்தேவிட்டது. நாம் இதனை இழந்தது சரியல்ல. உண்மையில் சித்துவேலைகளை நேர்மறையாகவும் பயன்படுத்த முடியும். இந்த முறைகள் ஒருவருடைய சொந்த சக்திநிலைகளையோ அல்லது வெளிப்புற சக்திநிலைகளையோ குறிப்பிட்ட சில விஷயங்களைப் செய்வதற்காக பயன்படுத்திக் கொள்ளும் ஒரு தொழில்நுட்பம்.

      ஆனால் துரதிர்ஷ்டவசமாக மக்கள் இதனை துஷ்பிரயோகம் செய்துவிட்டனர். நேர்மறையான மந்திர வித்தைகளை விட, எதிர்மறையான பில்லிசூனிய வித்தைகள் நீண்ட காலம் நீடித்திருக்கக் கூடியவை. எனவே அதற்கு கிடைத்த ஆதரவினால், நிறைய பேர் மந்திர வித்தைகளை நேர்மைறையாக பயன்படுத்துவதை விட்டுவிட்டு முறையற்ற வகைகளில் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர்.

      ஒரு குறிப்பிட்ட திறமை உருவானது கெட்ட விஷயத்திற்காக இல்லை. அதைப் பயன்படுத்தும் கைகள்தான் அது நல்லதா, கெட்டதா என்பதை தீர்மானிக்கின்றன. ஒவ்வொரு திறமையும் நல்வாழ்வுக்காகவும் பயன்படுத்தப்படலாம் அல்லது மக்களை அழிப்பதற்காகவும் பயன்படுத்தப்படலாம்.

      நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் இதற்கு மிகச் சிறந்த உதாரணங்கள். சில நேரங்களில், சில விஷயங்கள் எதிர்மறையான நோக்கங்களோடு செய்யப்படுகின்றன, வேறு சில சமயங்களில் மிகவும் எதிர்மறையான விஷயங்கள் நேர்மறை நோக்கங்களோடு செயல்படுத்தப் படுகின்றன.

      விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் மனித குலத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதங்கள், ஆனால் துர்திர்ஷ்டவசமாக, அவற்றைப் பயன்படுத்தத் துவங்கிய நூறு வருடங்களுக்குள், அவற்றை நமக்கு எதிராக திசை மாற்றிவிட்டோம். இதனால் மனித குலத்தின் பிழைப்புக்கு மட்டுமல்லாமல், இந்த பூமிக்கே அவை அச்சுறுத்தலாக மாறி நிற்கின்றன.

      நாம் வாழும் இந்தக் காலகட்டத்தில், நாம் உபயோகிக்கும் இந்த தொழில்நுட்ப விந்தைகளை நீங்கள் நேர்மறை மந்திரவித்தைகள் என்பீர்களா அல்லது எதிர்மறையான பில்லிசூனியங்கள் என்பீர்களா? உண்மையில் பார்த்தால், உங்களுக்கு எப்படி விருப்பமோ அவற்றை அப்படி அழைக்கலாம். அவை துவங்கும்போது நல்ல நோக்கங்களுடனே துவங்கப்பட்டிருக்கலாம் அல்லவா?

      அதே போல பில்லிசூனியம் என்று நீங்கள் அழைக்கும் விஷயங்களும் நல்ல நோக்கங்களுடன்தான் துவங்கின. ஆனால் மக்கள் அவற்றை பலவிதமான வழிகளில் துஷ்பிரயோகம் செய்யத் துவங்கிவிட்டனர். ஆனால் இன்றைய நிலையில் பில்லிசூனியத்தைச் செய்யத் தெரிந்தவர்கள் மிகக் குறைவாக இருப்பதால், அவை குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.

      அவர்களுடைய நேரத்தையும், சக்தியையும் உங்கள் மீது செலவழிக்கும் அளவுக்கு நீங்கள் அவ்வளவு பெரிய மனிதரா? நீங்கள் ஒரு சக்ரவர்த்தியாக இருந்தால், நம்மை யாரோ ஏதோ செய்துவிடுவார்கள் என்று நீங்கள் கவலைப்படலாம் அல்லது ஒரு தங்க சுரங்கத்தின் மேல் உட்கார்ந்திருந்தால், இதுபோன்ற விஷயங்களைப் பற்றி கவலைப்படலாம்.

      அப்படி எதுவும் இல்லை என்கிறபோது நீங்கள் இவ்வளவு வருந்தத் தேவையில்லை. யாரும் தங்களுடைய நேரத்தை, சக்திகளை, பணத்தை உங்கள் மீது பில்லிசூனியம் வைப்பதற்காக பயன்படுத்தப் போவதில்லை. நீங்களே உங்கள் சொந்த மந்திரவித்தைகளை உங்களுக்குள் செய்வதுதான் நல்லது.

Sunday, June 23, 2013

காதல் படுத்தும் பாடு! ஆனந்தம்

      


      பஸ்ஸில் மிக அழகான ஒரு பெண்ணை அடிக்கடி பார்க்கிறேன். அவள் முகம் என் மனதில் அப்படியே ஒட்டிக் கொண்டுவிட்டது. கல்லூரி செமஸ்டர் நேரம் இது. படிப்பதற்காகப் புத்தகங்களைத் திறந்தால், அந்தப் பெண்ணின் முகமே வந்துவந்து என்னைத் தொந்தரவு செய்கிறது. அவள் முகம் தரும் சந்தோஷம் ஒருபுறம், படிக்க முடியவில்லையே என்கிற துக்கம் மறுபுறம்… இரண்டும் சேர்ந்து வறுத்தெடுக்கின்றன. நான் என்ன செய்வது?”

சத்குரு:

      யாரோ ஒருத்தியின் நினைவு உங்களுக்குச் சந்தோஷம் தரமுடியும் என்பதெல்லாம் சுத்தப் பேத்தல். ஒரு பெண்ணைப் பார்த்தீர்கள். அது மகிழ்ச்சியைத் தந்தது. அவ்வளவுதானே? கவனியுங்கள். அந்தப் பெண்ணைப் பற்றி நினைத்ததும் மகிழ்ச்சி எங்கே பிறக்கிறது? உங்களுக்கு வெளியிலா, உள்ளேயா? உள்ளேதானே? தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். ஆனந்தத்தை உங்களால் கொடுக்கவும் முடியாது. வாங்கவும் முடியாது. அதை அனுபவிக்கத்தான் முடியும். அது எப்போதும் உங்களுக்குள்தான் இருக்கிறது. அதைத் தூண்டி உயிர்ப்பிக்கும் சக்தியை வெளியில் யார் கையிலோ ஒப்படைத்துவிட்டீர்கள். அதனால், குரங்காட்டியின் கோலுக்கு ஆடும் குரங்கைப் போல் ஆடுகிறீர்கள்.

      படிப்பு முக்கியமா, காதலி முக்கியமா என்பது இல்லை இங்கே பிரச்சனை. உங்கள் ஆனந்தம்தான் முதல் முக்கியம். சந்தோஷம் என்று நீங்கள் நினைத்தது உங்களுக்கு வேதனையாக மாறிவிட்டபோது, அதைச் சுமப்பதா புத்திசாலித்தனம்?
     
      படிப்பு முக்கியம் என்று தோன்றினால், முழுமையான ஈடுபாட்டுடன் உங்களை அதனுடன் பிணைத்துக் கொள்ளுங்கள். மற்றதெல்லாம் தானாக மறைந்துவிடும். மாறாக, ஒரு குறிப்பிட்ட நினைவை மனதிலிருந்து போராடிப் பிய்த்து எறிவது என்பது நடவாத காரியம். அப்படி முயற்சி செய்ய ஆரம்பித்தீர்கள் என்றால், அதுவே உங்கள் முழுநேர வேலையாக ஆகிவிடும்.
பனிப் பிரதேசத்தில் இருந்த ஒரு சித்தரைத் தேடிப் போனார் சங்கரன்பிள்ளை. “மண்ணைத் தங்கமாக்கும் மந்திரம் உங்களுக்குத் தெரியுமாமே? எனக்கு சொல்லித் தருவீர்களா?” என்று மண்டியிட்டார். சித்தர் சம்மதித்தார். மந்திரங்களை சங்கரன்பிள்ளை காதில் ரகசியமாகச் சொன்னார்.

      சங்கரன்பிள்ளைக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. “இது வெகு சுலபமாக இருக்கிறதே! இந்த மந்திரங்கள் நிச்சயம் வேலை செய்யும்தானே?” “நிச்சயம் இது மண்ணைப் பொன்னாக்கும். ஆனால், ஒரு நிபந்தனை. மந்திரங்களை உச்சரிக்கும்போது, குரங்குகளைப் பற்றி நீ நினைக்கக்கூடாது” என்றார் சித்தர்.

      சங்கரன்பிள்ளை சிரித்தார். “போயும் போயும் குரங்குகளை நான் ஏன் நினைக்கப் போகிறேன்?”

      ஆனால், சங்கரன்பிள்ளை மந்திரங்களைச் சொல்லக் கண்களை மூடினால் போதும், குரங்குகளைப் பற்றி நினைக்கவே கூடாது என்ற நினைப்பே அவர் நினைவு பூராவும் ஆக்கிரமித்தது. இருபத்து நான்கு மணி நேரமும் சிந்தனையில் குரங்குகள் நிரம்பி வழிந்தன.

      இரண்டு நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல், சித்தர் காலில் போய் விழுந்தார் சங்கரன்பிள்ளை. “பொன்னே எனக்கு வேண்டாம். என்னைச் சுற்றிக் கும்மாளமிடும் குரங்குகளிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள். அது போதும்!” என்று கதறினார்.

      மனித மனம் அப்படித்தான். எதையாவது தவிர்க்க நினைத்தீர்கள் என்றால், அதையேதான் வட்டமிடும். உங்கள் மனதை உங்கள் வசப்படுத்திக் கொள்ளும் தந்திரத்தை நீங்கள் தெரிந்து கொள்ளும் வரை, எதை நிராகரிக்கப் பார்க்கிறீர்களோ, அதுதான் உங்கள் மனதில் நிரம்பி வழிந்து ஆக்கிரமிக்கும்.

      உங்களுக்கு என்ன நடக்கிறது என்கிற விழிப்புணர்வு இல்லாமல், உங்கள் வாழ்க்கையைக் கடைசி வரை செலுத்தப் போகிறீர்களா?

      இன்றைக்கு ஒரு வேலை செய்யுங்கள். கண்களை இறுக மூடிக் கொண்டு, போக்குவரத்தில் வண்டியை ஓட்டிப் பாருங்களேன். அதிர்ஷ்டம் இருந்தால், அங்கே இங்கே சிலரை இடித்துத் தள்ளிவிட்டு, இந்த முறை வீட்டுக்குக்கூட போய்ச் சேரலாம். ஆனால், ஒவ்வொரு முறையும் அந்த அதிர்ஷ்டம் உங்களுக்குத் துணையிருக்குமா? சீக்கிரமே உங்களை அள்ளிப்போக ஆம்புலன்ஸ் வந்து சேரும்.

      சங்கரன் பிள்ளை டாக்டரைத் தேடிப் போனார்.
“டாக்டர், என் காதுகளைப் பாருங்கள்!”
“ஐயையோ! இந்தளவுக்கு எப்படித் தீய்ந்து போனது?” என்று டாக்டர் பதறினார்.

“நான் சட்டைக்கு இஸ்திரி போட்டுக் கொண்டு இருந்தேன். அந்த நேரம் பார்த்து என் மனைவியிடமிருந்து போன் வந்தது. குழப்பத்தில் போன் என்று நினைத்து கொதிக்கும் இஸ்திரிப் பெட்டியை எடுத்துக் காதில் வைத்துக் கொண்டுவிட்டேன்…!”

“அடக் கடவுளே… சரி, இடக்காது எப்படித் தீய்ந்தது?”
சங்கரள்பிள்ளை பற்களை நறநறத்தார்.
“அந்த ராட்சஸி மறுபடியும் போன் செய்து தொலைத்தாளே!”

      நீங்கள் கவனத்துடன் நடந்து கொள்வதோ, சங்கரன்பிள்ளை போல் நடந்து கொள்வதோ யார் கையில் இருக்கிறது? உங்கள் கையில்தானே?

      ஆனந்தமோ, துக்கமோ.. கவனமின்றி நீங்கள் அதன் திரியை வெளியே வைத்திருக்கும்வரை, அதை வெளியிலிருந்து ஒருவர் சுலபமாகப் பற்ற வைக்க முடியும். உங்களை அலைக்கழிக்கக் கூடிய ஸ்டார்ட் பட்டனை ஏன் வேறு யார் கையிலோ கொடுத்துவிட்டு அவதிப்படுகிறீர்கள்?

      உங்கள் அடிப்படைப் பிரச்சனை என்ன தெரியுமா? நீங்கள் இங்கே இருக்கும்போது, அங்கே இருக்க விரும்புகிறீர்கள். அங்கே இருக்கும்போது, இங்கே இருக்க விரும்புகிறீர்கள்.

      நீங்கள் எங்கே இருக்க வேண்டுமோ, அங்கே இல்லையென்றால், உங்கள் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். முழுமையான ஈடுபாட்டுடன் இப்போது செய்ய வேண்டியதைச் செய்யுங்கள். தேவையற்றது தானாக விலகிப் போகிறதா இல்லையா, பாருங்கள்.

      படிப்பு முக்கியமா, காதலி முக்கியமா என்பது இல்லை இங்கே பிரச்சனை. உங்கள் ஆனந்தம்தான் முதல் முக்கியம். சந்தோஷம் என்று நீங்கள் நினைத்தது உங்களுக்கு வேதனையாக மாறிவிட்டபோது, அதைச் சுமப்பதா புத்திசாலித்தனம்?

     எது ஆனந்தமோ, அதை எப்போதும் செய்யுங்கள். தப்பே இல்லை.

      ஆனால், அப்படி எதைச் சந்தோஷமாகச் செய்தாலும், அதன் பின்விளைவுகளையும் அதே சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள்!
                         வாழ்க வளமுடன்!

Monday, June 17, 2013

அமாவாசை, பௌர்ணமியின் மகத்துவம் என்ன? ஆனந்தம்




மற்ற நாட்களைவிட அமாவாசை, பௌர்ணமி நாட்களுக்கு மட்டும் ஏன் இத்தனை மகத்துவம்?

      அமாவாசை, பௌர்ணமி நாட்களில் எல்லாவற்றையும் மேல் நோக்கி இழுக்கும் சந்திரனின் ஈர்ப்பு சக்தியானது பூமியின்மீது கூடுதலாக இருக்கும். மனநிலையில் சமநிலையற்றவர்கள் இந்தச் சக்தியைச் சமாளிக்க முடியாமல் அதிகப்படியாகத் தடுமாறுவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.

      மகிழ்ச்சியாக இருப்பவர்கள் மேலும் மகிழ்ச்சி அடைகிறார்கள். துக்கமாக இருப்பவர்கள் கூடுதலாக வேதனை கொள்கிறார்கள். அமைதியாக இருப்பவர்கள் மேலும் அமைதியாகிறார்கள்.

      இந்த ஈர்ப்பு சக்தியால் கடல் பொங்கி மேலே எழுவதைக் கண்கூடாகக் காணலாம். உங்கள் உடலில் உள்ள ரத்தம்கூட மேல்நோக்கிச் சுண்டி இழுக்கப்படுகிறது.

      தங்கள் சக்தியை மேல்நோக்கிச் செலுத்தப் பலவித முயற்சிகளில் ஈடுபடும் சாதகர்களுக்கு இந்த இரண்டு நாட்களும் இயற்கை அருளும் வரப்பிரசாதம்!

கோபப்படுங்கள் ஆனந்தம்



      காற்றுக்குமிழி ஊதி விளையாடியிருக்கிறீர்களா? அந்தக் குமிழிக்கு உள்ளே இருப்பதும் கார்றுதான், வெளியே இருப்பதும் காற்றுதான். ஆனாலும் அந்த குமிழிக்கென்று ஒரு தனித்தன்மை உண்டு. 
      அதே போல் மனிதனுக்கு உள்ளே என்ன இருக்கிறதோ அதேதான் மனிதனுக்கு வெளியேயும் இருக்கிறது. ஆனாலும் இடையில் ஒரு தந்திரமான ஒரு தடுப்பு வேலி இருக்கிறது. அது எவ்வளவு தந்தைரமானது என்பதை உங்களால் உணரமுடியாது. எப்படிப் பார்த்தாலும் அப்படி ஒருவேலி இல்லாதது போல் தான் தோன்றும். ஆனாலும் வேலி இருக்கிறது. அதுவும் ஒவ்வொரு மனிதரிலும் ஒவ்வொரு வகையான வேலி இருக்கிறது. இந்த வேலியை உடைத்துக்கரைவது தான் ஆன்மீகம். 
      அதைச் செய்ய பல விளையாட்டுக்கள் இருக்கின்றன. ஆனால் எந்த விளையாட்டு விளையாடினாலும் அதை முழுமையாக விளையாட வேண்டும். அரை மனதுடன் விளையாடுவது தான் உங்கள் பிரச்சனை. ஒரு ஆட்டத்தையாவது நூறு சதவிகிதம் முழுமையாக ஆடினால், ஒரு வினாடியில் உங்கள் இருப்பின் கட்டுப்பாடுகளைக் கடந்து, அந்த இடத்தில் இருக்கமுடியும். மிக விரைவில் நினைத்த இடத்தை சென்றடைவீர்கள். " 
      உங்களுக்கு தியானம் தெரியவில்லையா? கவலைப்படாதீர்கள், உங்களுக்கு அமைதி தெரியவில்லையா? கவலைப்படாதீர்கள், உங்களால் அன்பு செலுத்த முடியவில்லையா? தெரியவில்லையா கவலைப்படாதீர்கள், ஆனால் கோபப்படமுடிகிறதா? சரி வெறுமனே கோபப்படுங்கள். தொடர்ந்து 24மணி நேரமும் மிகத்தீவிரமான் கோபத்துடன் இருங்கள். இப்படி இருந்தால் நீங்கள் ஞானம் பெற்று விடுவீர்கள். நீங்கள் செய்ய வேன்டியது இதுதான் நீங்கள் எதைச் செய்கிறீர்களோ, அதில் முழுமையாக 100 சதவிகித தீவிரத்துடன் இருங்கள்! போதும், அதுவே உங்களை ஞானத்திற்க்கு அழைத்துச்செல்லும்.
      வாழ்க வளமுடன்!

Wednesday, June 5, 2013

அலற வைக்கும் அலைபேசி? ஆனந்தம்




      கத்தியைக் கொண்டு பழங்களையும் நறுக்க முடியும், விரலையும் வெட்டிக்கொள்ள முடியும். எந்த ஒரு கருவியானாலும் நமக்குப் பயன்படும்படி செய்துகொள்வதும் அல்லது நம் அழிவிற்கு வழிவகுக்கும்படி செய்துகொள்வதும் நம் கையில்தான் உள்ளது. இப்போது, செல்ஃபோனுடைய கூர் முனைகள் நம்மைப் பதம்பார்க்கத் துவங்கியுள்ள நிலையில், அபாயச் சங்காக இந்தக் கட்டுரை…

      இன்று வண்டு, சிண்டு, நண்டுகளின் கைகளில் தவழுகின்ற இந்த செல்போன்கள், கடந்த 20 வருடங்களில் மனிதனின் குறைந்தபட்ச தேவையை, “உணவு, உறைவிடம், உள்ளங்கை செல்போன்,” என மாற்றிவிட்டன.

   செல்போன்களின் ரிஷிமூலம்

      இரண்டாம் உலகப் போரில் இராணுவத் தகவல் தொடர்புக்காக ரேடியோ அலைவரிசையின் மூலம் இயங்கக்கூடிய சாதனங்கள் உருவாக்கப்பட்டன. இதன் மூலம், 2 முதல் 4 வார்த்தைகள் மட்டுமே ஒரு நேரத்தில் பரிமாறிக் கொள்ள முடியும். இவை நவீன செல்போன்களின் ‘பாட்டன்கள்’ எனலாம்.
குழந்தைகளின் (குறிப்பாக 12 வயதுக்கு கீழ்) மண்டை ஓடு முழுவதும் வளர்ச்சியடையாத நிலையில், கதிர்வீச்சு மூளையில் ஊடுருவ வாய்ப்பு அதிகமாதலால், அவர்களை செல்போன் உபயோகிக்க ஊக்கப்படுத்தக் கூடாது. இது கர்ப்பிணி பெண்களுக்கும் பொருந்தும்.

      பின்பு 1973ல், பொறியாளர் மார்டின் கூப்பர், ஒரு செங்கல் அளவிலான செல்போன் மூலம் விஞ்ஞானி ஜோயலிடம் பேசிய முதல் உரையாடல் வரலாறு. ஆனால் 40 வருடங்களில் தன் கண்டுபிடிப்பு சிலிம் மாடல், ஃப்ளிப் மாடல், ஆண்ட்ராய்டு, டாப்லட் என உலகையே சட்டைப் பாக்கெட்டில் கட்டிப் போட்டுவிடும் என்பதைச் சத்தியமாய் நம்பியிருக்க மாட்டார் கூப்பர்.
தகவல் தொழில்நுட்பப் புரட்சி ஒரு சாமான்யனின் பார்வையில்…

      என் தந்தையின் பால்யத்தில், ஒரு ஊரிலிருந்து இருபதே மைல் என‌ இருந்தாலும் மற்றவர்களிடம் தன் வீட்டிலிருந்தே பேச முடியும் என்ற கனவை எழுபது, எண்பதுகளில் பரவலாக்கப்பட்ட தொலைபேசிகள் (லேன்ட் லைன்) நனவாக்கின. என் பால்ய பருவத்திலோ, ஒரு தொலைபேசியை வயர் இணைப்பின்றி போகும் இடமெல்லாம் கொண்டு சென்று நினைத்த நபருடன், நினைத்த நேரத்தில் பேச முடியும் என்று நான் கற்பனைக் கூட செய்து பார்க்காத ஒரு புரட்சியை கடந்த 15 ஆண்டுகளில் செல்போன்கள் நம் சமூகத்தில் நிகழ்த்தி விட்டன.

   கொஞ்சம் ஓவராத்தான் பேசுறோமோ?!

      குறிப்பாக இந்தியாவில் தேவையை மீறி அவற்றின் பயன்பாடு கட்டுப்பாடு இழக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது. சமீபத்திய கணக்கெடுப்பு கூறும் தகவல்… உலகில் 500 கோடி பேருக்கு செல்போன் இணைப்பு உள்ளது (உலக மக்கள் தொகை 750 கோடி). அதில் 60 கோடி இணைப்புகள் இந்தியாவிலாம்!

      இதன்மூலம் நாம் குறைந்தபட்சம் புரிந்து கொள்ள வேண்டியது, இன்றைய மனித சமூகம் 20 வருடங்களுக்கு முன்பைவிட 500 கோடி மடங்கு அதிக கதிர்வீச்சை உள்வாங்குகிறோம் என்பதையே!

      காணாமல் போன குருவி, பட்டாம்பூச்சி இனங்களுக்கு செல்போன் கதிர்வீச்சு தான் காரணம் என இனங்கண்டுள்ளோம்.

      சமீப காலமாய் குண்டூசி விற்பவர் கூட இடது காதுக்கு ஒன்று, வலது காதுக்கு மற்றொரு போன் என பரபரவென இயங்கும் காட்சிகளைக் கண்டால், “நான் ரொம்ப பிஸி!” என வசனம் பேசும் கவுண்டமணியாரின் கதாபாத்திரம்தான் நினைவில் வருகிறது.

      மேலும் குறிப்பாக இளைஞர், இளைஞிகள் மத்தியில் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதில் ஆதாயம் தேடும் செல்போன் நிறுவனங்களோ, ‘கூல் கப்பிள் ஆபர்,’ ‘சூப்பர் ஜோடி ப்ளான்,’ என பல ப்ளான்களைப் போடுவதும், 2ஜி, 3ஜி என லட்சம் கோடிகளில் கல்லா கட்டுவதும் நாடறிந்த ஒன்றே! இந்தப் போக்கினால் தனிமனித அளவிலும், சமூக அளவில் ஏற்படும் எதிர்வினைகள் நாம் ரசிக்கும்படியாக இல்லை.

   அதிகப் பேச்சு, அதிக ஆபத்து

      “வரங்களைக் கூட சாபங்களாய் மாற்றும் திறன் மனிதனுக்கு உண்டு,” என்பதை நமது வரைமுறையற்ற செல்போன் பேச்சும், அதன் பரிசாய் நாம் பெறும் கதிர்வீச்சும் மௌன சாட்சி!

      லட்சம் கோடிகளில் புரளும் வணிகம் என்பதாலோ என்னவோ அதிக கதிர்வீச்சினால் ஏற்படும் உடல், மனநலக் கேடுகளை அறிவியல் உலகம் இன்று வரை அதிகம் பேசமாட்டேன் என்கிறது. ஐ.நா வின் உலக சுகாதார அமைப்பு, செல்போன் கதிர்வீச்சு ‘கேன்சரை உண்டாக்கலாம்’ எனப் பட்டும் படாமல் தன் முடிவை அறிவிக்கிறது. இதை மீறியும் உலக அளவில் மக்கள் நலனில் அக்கறைக் கொண்ட விஞ்ஞானிகள் அபாய சங்கை ஊதிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

   அதீத கதிர்வீச்சுக்கு உட்படுவோருக்கு ஏற்படும் பாதிப்புகளில் அவர்கள் குறிப்பிடுபவை:

      கவனக்குறைவு, மனச்சோர்வு, மறதி (திருமண நாளை மறப்பது, தொடங்கி, செல்ஃபோனில் பேசிக் கொண்டே வண்டி ஓட்டி, அல்பாயிசில் முடிவது வரை)
      படபடப்பு, ஆழ்ந்த தூக்கமின்மை, மன உளைச்சல் (தூங்கும்போது கூட ரிங்டோன் அடிக்கிற மாதிரியே ஒரு ஃபீலிங்க்!!!)
      ஹார்மோன் சமநிலையில் பாதிப்பு, ஒற்றைத் தலைவலி
      மூளைப் புற்றுநோய்கள்
      செல்போனும் மூளைப் புற்றுநோயும் அதிகம் விவாதிக்கப்படும் பொருளாக இருந்தாலும் கூட, அதற்கு முன்னர் நாம் மேலே கூறிய மனப்பிறழ்வுகளால் இளைய தலைமுறையும் குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அது ஆபத்துதான்.

   கதிர்வீச்சைக் குறைக்கும் வழிகள்:

      மிகவும் தேவையெனில் மட்டும் உபயோகிப்பதும் பேசும் கால்களின் (calls) நேரத்தைக் குறைப்பதும் நலம். முடிந்த அளவு SMS மூலம் மட்டும் தொடர்பு கொள்வது நலம்.

      பொதுவாக செல்போனை உடலுக்கு அருகில் (காதோடு) வைத்து பயன்படுத்தும்போது கதிர்வீச்சு அபாயம் பல மடங்காகிறது. ஆகையால் காதில் பொருத்திக் கொள்ளும் சாதனத்துடன் செல்போனை உடலில் இருந்து தூரத்தில் வைத்து உபயோகித்தல் நலம்.

      சிக்னல் வலுவான இடங்களில் மட்டும் உபயோகிப்பது நலம். இது செல்போன் வெளியேற்றும் கதிர்வீச்சினைக் குறைக்கிறது.
குழந்தைகளின் (குறிப்பாக 12 வயதுக்கு கீழ்) மண்டை ஓடு முழுவதும் வளர்ச்சியடையாத நிலையில், கதிர்வீச்சு மூளையில் ஊடுருவ வாய்ப்பு அதிகமாதலால், அவர்களை செல்போன் உபயோகிக்க ஊக்கப்படுத்தக் கூடாது. இது கர்ப்பிணி பெண்களுக்கும் பொருந்தும்.

      கதிர்வீச்சை உள்வாங்கும் தன்மை (SAR – Specific Absorption Rate) குறைவாக உள்ள போன்களை கேட்டறிந்து வாங்கி உபயோகிக்கலாம்.
ஏன்? முடிந்தால், செல்போனே பயன்படுத்தாமல் கூட வாழமுடியும் என்றால் நல்லதுதானே? 15 வருடங்களுக்கு முன்பும் செல்போனின்றி நாம் வாழ்ந்தோம் தானே?

      உர மருந்துகள், ப்ளாஸ்டிக், அணு அறிவியல் முதலிய அனைத்தும் உருவாக்கப்பட்ட போது கொண்டாடப்பட்டவைதான்! அவற்றை அன்றே அதன் தறிகெட்ட பயன்பாட்டால் ஏற்படும் பின்விளைவுகளை எச்சரித்தவர்களும் இருந்திருப்பார்கள். அவை 50, 60 வருடங்களுக்குப் பிறகுதான், பெரும்பான்மையினரின் புத்திக்கு உரைக்கத் தொடங்கியிருக்கிறது! இதே தவறை நாம் செல்போன் விஷயத்திலும் செய்ய வேண்டாமே!

அளவாய் பேசி அழகாய் வாழலாமே! வாழ்க வளமுடன்!

Thursday, May 30, 2013

ஆதியோகியின் கதை! ஆனந்தம்




      பண்டைய காலத்தில், இந்தியா தனியொரு நாடாக இருக்கவில்லை. இங்கிருந்த மக்கள் ஒரேயொரு மதத்தையோ, இனத்தையோ அல்லது மொழியையோ மட்டும் கொண்டவர்களாக இருந்திருக்கவில்லை. இருப்பினும் அந்த மாநிலம் முழுவதும் வாழ்ந்த மனிதர்கள் தங்களுக்குள் கொண்டிருந்த, பொதுவான ஆன்மீக நற்பண்பின் காரணமாக, ஒரு நல்லிணக்கம் நிலவியது. இந்த அடிப்படையான ஆன்மீக உணர்வு எந்த அளவுக்கு இருந்தது என்றால், இங்கே வாழ்ந்த ஒவ்வொருவருக்கும் அவர் பாமரனாயிருந்தாலும் சரி, பார்வேந்தனாக இருந்தாலும் சரி, அவர்கள் வாழ்வின் உச்சபட்ச இலக்கு “முக்தி” என்பதாகவே இருந்தது. இந்நிலை, இந்த தேசத்தில் நிகழ்ந்துள்ள ஈடிணையற்ற, பிரமிக்கத்தக்க ஆன்மீகப்பணியின் விளைவாகவே உருவானது. இதற்கெல்லாம் முழுமுதல் காரணமாய் அமைந்தவர் ஒருவர் – மனித குலத்தின் உள்நிலை, வளம்பட செதுக்கப்பட்டதற்கு இன்றியமையாதவர் ஒருவர் – அவர்தான் ஷிவா.

      பின்வரும் கதையில் சத்குரு அவர்கள் ஆதியோகி – முதலாம் யோகியாம் ஷிவாவை பற்றியும், அவர் சப்தரிஷிகளுக்கு யோக அறிவியலை பரிமாறிய விதத்தையும் கூறுகிறார்… 

சத்குரு:

      யோகக் கலாச்சாரத்தில் ஷிவா என்பவர் கடவுளாக அறியப்படுவதில்லை. மாறாக ஆதியோகியாக, யோகத்தை பிறப்பித்தவராக அறியப்படுகிறார். மனித மனத்தினுள் முதன்முதலாக இந்த விதையை விதைத்தவர் அவர்தான். யோக மரபின்படி 15,000 ஆண்டுகளுக்கும் முன்பாக ஷிவா பூரண ஞானமடைந்து, மிகத் தீவிரமான பரவச நிலையில், இமயமலையிலே பேரானந்த தாண்டவத்தில் மூழ்கிப் போனார். அவரின் பரவசம் எப்பொழுதெல்லாம் அவர் அசைந்திடும்படி அனுமதித்ததோ, அப்பொழுதெல்லாம் அவர் கட்டுக்கடங்காத தாண்டவ ரூபமாக வெளிப்பட்டார். அந்த பரவசம் மிகுந்து அசைவையும் தாண்டியபோது, அசைவற்ற நிஷ்சல ரூபமாக வெளிப்பட்டார்.

      இதைக் கண்டவர்கள், அதுவரை எவருமே உணர்ந்திராத ஏதோ ஒன்றை, தங்கள் அறிவுக்கு புலப்படாத ஏதோ ஒன்றை, இவர் அனுபவித்து கொண்டிருக்கிறார் என்று புரிந்து கொண்டார்கள். ஆர்வம் இப்படியே வளர வளர இது என்னவென்று உணர்ந்திட விரும்பினார்கள்; வந்தார்கள், காத்திருந்தார்கள், கிளம்பிச் சென்றார்கள். ஏனென்றால், இந்த மனிதர் தன்னைச் சுற்றி பலர் இருப்பதை துளியும் கவனிக்கவில்லை. ஒன்று தீவிரத் தாண்டவம், அல்லது முற்றிலும் அசைவற்ற நிலை, இப்படியே இருக்கிறார். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது பற்றிய அக்கறை துளிக்கூட இல்லாதவராக வாழ்கிறாரே என்று விரைவிலேயே பலர் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். ஏழு பேரைத் தவிர!

      இவர்கள் ஏழு பேரும் அந்த மனிதனுக்குள் பொதிந்துள்ள பொக்கிஷத்தை எப்படியாவது தாங்களும் கற்றிட வேண்டும் என்று விடாப்பிடியாக தங்கி இருந்தனர். ஆனால் ஷிவா, அவர்களை முழுமையாக புறக்கணித்தார். அவர்கள் கெஞ்சினார்கள். “தயவு செய்து அருளுங்கள்! நீங்கள் உணர்ந்திருப்பதை நாங்களும் உணர விரும்புகிறோம்!,” என்று மன்றாடினார்கள். ஷிவாவோ, “மூடர்களே! நீங்கள் இப்போது இருக்கும் தன்மையில், கோடி வருடங்கள் ஆனாலும் இதை உணர மாட்டீர்கள், இதற்கு மாபெரும் அளவில் உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இது ஒன்றும் கேளிக்கை கிடையாது” என்று நிராகரித்தார்.

      ஆகவே அவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார்கள். நாட்கள் வாரங்களாயின, வாரங்கள் மாதங்களாகி, வருடங்களாயின. அவர்கள் தயாராகிக் கொண்டிருந்தார்கள். ஷிவாவோ அவர்களை பொருட்படுத்தவே இல்லை. இப்படியே 84 வருடங்கள் சென்றுவிட்டது. ஒரு நாள், பௌர்ணமியன்று சூரியனின் ‘கதிர் திருப்பம்’ உத்தராயணத்திலிருந்து தக்ஷிணாயணத்திற்கு மாறிய பின்பு, ஆதியோகி இந்த ஏழு பேரின் மீது தன் அருட்பார்வையை செலுத்தினார். அவர்கள், ஞானத்தை ஏந்திக்கொள்ள தகுதியுடைய கலங்களாக, அருட்களஞ்சியத்தை உள்வாங்க முற்றிலும் பழுத்தவர்களாக, மிளிறுவதை கவனித்தார். அவரால், அவர்களை அதற்கு மேலும் புறக்கணிக்க இயலவில்லை. அவர்கள் அவரது கவனத்தை ஈர்த்துவிட்டார்கள்.

ஆதியோகியின் பார்வை அந்த 7 பேரின் மீது பட்டது.

      ‘அடுத்த சில நாட்களுக்கு அவர்களை கூர்ந்து நெருக்கமாக கவனித்தபடியே இருந்தார். அடுத்த பௌர்ணமி அன்று, அவர்களுக்கு மன இருளை அகற்றி, குருவாய் அருள்புரிய முடிவு செய்தார். ஆதியோகியாக இருந்தவர், தன்னை ஆதிகுருவாக்கி அருளினார். அந்த முழுமுதற் குரு தோன்றிய தினத்தைத்தான், இன்று குருபௌர்ணமியாகக் கொண்டாடுகிறோம்.
ஒருவர் நம் மனித இனத்திற்கு என்றே வரையறுக்கப்பட்டுள்ள கட்டுக்களில் அடைபட்டே கிடக்கவேண்டிய கட்டாயம் இல்லை. அதற்கு அப்பால் கடந்து செல்லவும் முடியும்” என்ற வாய்ப்பை, சாத்தியத்தை முதன்முதலாக உருவக்கியது ஆதியோகியே!
      காந்திசரோவர் என்ற ஏரிக் கரையிலே, ஆதிகுரு தென்திசை நோக்கி அமர்ந்து, மனிதகுலத்தின் மேல் தன் பேரருளைப் பொழிந்தார். கேதார்நாத் திருத்தலத்திற்கு மேலே, சில கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்த நீர்பரப்பின் கரையில்தான், அந்த ஏழு மாமனிதர்களுக்கு ஆதிகுரு முதன்முதலாக, யோக விஞ்ஞானத்தினைப் பரிமாறினார்.
இந்த யோக விஞ்ஞானம் என்பது, நீங்கள் செல்லும் யோகா வகுப்பு போல வெறுமனே உங்கள் உடலை வளைப்பது பற்றியது கிடையாது. அல்லது உங்கள் மூச்சை பிடித்து வைப்பது பற்றியது கிடையாது. பிறந்த குழந்தைக்கும் பிறக்காத குழந்தைக்கும் கூட அந்த விஞ்ஞானம் தெரியும். அது ஒரு மனிதனுடைய அமைப்பு முழுவதும் எப்படியெல்லாம் இயங்குகிறது என்ற நுணுக்கங்களை உணர்ந்திடும் விஞ்ஞானம்.

      இந்த யோக விஞ்ஞானத்தை அந்த ஏழ்வருக்கும் ஆதிகுரு பரிமாறிய செயல், பல ஆண்டுகளுக்குப் பின் முழுமைப்பெற்றது. இதன்மூலம் ஏழு பூரண ஞானமடைந்த மாமனிதர்கள் உருவாகினர். அவர்களைத்தான் சப்தரிஷிகள் என்று நாம் இன்று போற்றிக் கொண்டாடுகிறோம். இந்திய பண்பாட்டில் வணங்கி வழிபடுகிறோம்.

      ஷிவா இந்த ஏழு பேர்களில், ஒவ்வொருவருக்குள்ளும் யோகத்தின் வெவ்வேறு அம்சங்களை உள்ளடக்கினார். இந்த அம்சங்களே யோகத்தின் ஏழு அடிப்படையான அம்சங்களாயின. யோகத்தில் இந்த ஏழு தனிப்பட்ட வடிவங்கள் காத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. இன்றும் பொலிவுடன் விளங்குகின்றன.

      ஒரு மனிதன் தன்னுடைய எல்லைகளாகிய கட்டுப்பாடுகளையும், கட்டாயங்களையும் தாண்டி, பரிணாம வளர்ச்சியில் உயர்ந்திட செய்யும் அம்சங்கள்தான் யோகவிஞ்ஞானம். இந்த அற்புத யோக விஞ்ஞானத்தில் முழுமைபெற்ற சப்தரிஷிகள் ஏழு பேரும், உலகின் எல்லா பாகங்களுக்கும் வெவ்வேறு திசையில் அனுப்பப்பட்டனர். அவர்கள் ஷிவாவுடைய அங்கங்களாயினர். உலகில் ஒவ்வொரு மனிதனும், படைப்பின் மூலமாகவே வாழ்ந்திடச் செய்யும்படியான தொழில்நுட்பத்தையும் ஞானத்தையும் வழங்கிடும் கரங்களாயினர்.

      காலச் சக்கரத்தின் சுழற்சிகளில், உலகின் பல பாகங்களிலும் இவை குலைந்து போயிருந்தாலும், அந்தந்த பகுதிகளின் நாகரீகம், கலாச்சாரம் இவற்றை சற்று கூர்ந்து கவனித்தால், இன்னமும் கூட இந்த ஏழு மாமனிதர்களின் மகத்தான பணி ஆங்காங்கே இழைந்தோடுவதை கவனிக்க முடியும். இன்னமும் உயிரோட்டமாயிருப்பதை பார்க்க முடியும். அவர்கள் பரிமாறியவை காலப்போக்கில் பல வண்ணங்களில் பல்வேறு வடிவங்களில் மாறியிருந்தாலும், அதன் அடிப்படையான சாரம் இன்னமும் அப்படியே காணப்படுகிறது.

      “ஒருவர் நம் மனித இனத்திற்கு என்றே வரையறுக்கப்பட்டுள்ள கட்டுக்களில் அடைபட்டே கிடக்கவேண்டிய கட்டாயம் இல்லை. அதற்கு அப்பால் கடந்து செல்லவும் முடியும்” என்ற வாய்ப்பை, சாத்தியத்தை முதன்முதலாக உருவக்கியது ஆதியோகியே!

      இந்த உடலுக்குள் அடங்கி இருக்கலாம், ஆனால் உடலுக்கே உரித்தாக வேண்டியதில்லை. உடலில் வசித்திடலாம், ஆனால் உடலாகவே ஆகிவிடாமல் இருக்கலாம். இதற்கொரு வழி உண்டு;

      இந்த மனத்தை உச்சபட்ச திறனுக்கு பயன்படுத்திடலாம், அதேசமயம் மனத்தின் துயர்கள் துளியும் இல்லாதபடி வாழ்ந்திடலாம். இதற்கொரு வழி உண்டு;

      இப்போது நீங்கள் இருப்பின் எந்த பரிமாணத்தில் உள்ளீர்கள் என்றாலும் சரி, அதை கடந்த போக முடியும். வேறுவிதமாக வாழ்ந்திட வழியுள்ளது. ஆதியோகி இதைத்தான் சொன்னார், “நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ளத் தயாராக இருந்தால், அதற்கு செய்ய வேண்டியதை உங்களுக்கு நீங்களே செய்து கொண்டால், நீங்கள் இப்போது கட்டுண்டு இருக்கும் எல்லைகளை கடந்து, பரிமாண வளர்ச்சியில் மேலெழுந்திட முடியும்” – இன்றியமையாதவர் அல்லவா ஆதியோகி.

Wednesday, May 29, 2013

இருளைக் கண்டு ஏன் பயம்? ஆனந்தம்








      மாயாஜாலக் கதைகளும், அம்புலி மாமா கதைகளும் நமக்கு சகஜம். ஆனால் கேட்பதற்கு அம்புலி மாமா கதைப்போல் தோன்றினாலும், சத்குருவுக்கு தன் சிறு வயதில் ஏற்பட்ட சில விஷயங்களை நம்மால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை, இது சாத்தியம்தானா எனப் புரியவில்லை. படித்துவிட்டு கமென்டில் சொல்லுங்களேன்…



சத்குரு:

      என் தாத்தா வீட்டில் ஒரு மாட்டுக் கொட்டகை இருந்தது. அங்கே இரண்டு மாடுகள் கட்டப்பட்டு இருக்கும். இருட்டில் பார்த்தால், மாடுகளின் கண்கள் மட்டும் பெரிய கோலிக் குண்டுகளாகத் தெரியும். இரவுகளில் அதைக் காட்டி, ‘கும்மா வந்திரும்’ என்று சொல்லி, என் அத்தைகள், மாமிகள் எல்லோரும் குழந்தைகளைப் பயமுறுத்திச் சாதம் ஊட்டுவார்கள்.

      அதே மாட்டுக் கொட்டகையைக் காட்டி, சாதம் ஊட்டுவதற்காக என்னையும் பயமுறுத்த முனைந்தார்கள். ‘அது கும்மா இல்லை… பசுமாடு’ என்று சொல்லித் சிரித்தேன். அவர்கள் வாயடைத்துப் போனார்கள். அதுபற்றிப் பல நாட்கள் ஆச்சர்யப்பட்டுப் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

      இருள் என்றால் ஒன்றுமில்லை என்றுதானே அர்த்தம்! ஏதோ இருந்தால்கூட அது உங்களை ஏதாவது செய்யலாம். எதுவுமே இல்லாத ஒன்று உங்களை என்ன செய்துவிட முடியும்?
எனக்கு ஏன் இருளைப் பார்த்து பயம் வரவில்லை? எளிமையான காரணம்தான். மற்றவர்களுக்கு இருட்டில் மாட்டின் கண்கள் மட்டும் புலப்பட, எனக்கோ மொத்த மாடும் தெரிந்தது. அன்றைக்கே, இருளில் மற்றவர்களைவிடத் தெளிவாக என்னால் பார்க்க முடிந்தது. இருள் எனக்கு ஒருபோதும் பிரச்சனையாக இருந்ததில்லை.

      எத்தனையோ முறை வனங்களில் சுற்றித் திரிந்திருக்கிறேன். 11 வயதில் ஒருமுறை மூன்று நாட்கள் காட்டில் தனியாக அலைந்திருக்கிறேன். இரவுகளில் பயன்படுத்த ஒரு தீப்பெட்டி கூட என்னிடம் கிடையாது. இருள் என்னிடம் நட்பாகவே இருந்திருக்கிறது.

      மூன்று நாட்களுக்கு நான் வீடு திரும்பாததால், என்னைக் கண்டுபிடிக்க வீட்டில் பல முயற்சிகள் நடந்தன. ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் என்னைத் தேடிக் கொண்டு இருந்ததாக அறிந்தேன். நான் வீடு திரும்பியபோது, எல்லோருக்கும் ஒரு கேள்விதான் பெரிதாக இருந்தது. ‘இரவுகளில் தூங்குவதற்கு என்ன செய்தாய்? ஏதாவது பாழடைந்த கோயில் இருந்ததா?’

      “இல்லை. இருட்டிலும் காட்டில் நடந்து கொண்டுதான் இருந்தேன். ஓய்வெடுக்க நினைத்தபோதெல்லாம் ஏதாவது ஒரு மரக்கிளையில் போய்த் தங்கினேன்” என்றேன்.

      “அடப்பாவி! இருட்டைக் கண்டால் உனக்கு பயமாக இல்லையா?” என்று கேட்டார்கள். “என்னால்தான் இருட்டில் வெகு தெளிவாகப் பார்க்க முடிந்ததே… நான் பார்த்த எதுவும் என்னைப் பயமுறுத்துவதாக இல்லை” என்றேன். என் அப்பா தலையில் அடித்துக் கொண்டார். ‘ஐயோ, இந்தப் பையனுக்கு பயமே இல்லையே! இவனுக்கு என்ன ஆகப்போகிறதோ?’

      எனக்குப் புரியவே இல்லை. எதையாவது தெளிவாகப் பார்க்க முடியாமல் இருந்தால்தான், அதன்மீது பயம் வர வாய்ப்பு இருக்கிறது. பயப்படும் மகனாக இருந்தால், அவனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று கவலைப்பட வேண்டும். எனக்கு பயம் இல்லை என்பதே அவருக்கு பயமாக இருந்தது. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

      இருள் என்றால் ஒன்றுமில்லை என்றுதானே அர்த்தம்! ஏதோ இருந்தால்கூட அது உங்களை ஏதாவது செய்யலாம். எதுவுமே இல்லாத ஒன்று உங்களை என்ன செய்துவிட முடியும்? இருளைக் கண்டு எதற்குப் பயப்பட வேண்டும்?

      எதையாவது கண்டு பயந்தால்தான் அது பூதாகரமாகத் தோன்றும். பயம் இல்லாதபோது ஒருவருக்கு என்ன இழப்பு நேர்ந்துவிட முடியும்?

      நீங்கள் குழந்தையாக இருந்தபோது, உங்களை அன்பால், நம்பிக்கையால் கட்டுப்படுத்தத் திறனில்லாத பெரியவர்கள், இதையும் அதையும் சொல்லிப் பயமுறுத்தி வைத்திருப்பார்கள். இருளைக் கண்டு அச்சப்படுவதற்குக் கற்றுத் தந்தது அவர்கள்தான். பழைய பிம்பங்கள், கற்பனை உருவங்கள், ஏற்கனவே சேகரித்த அச்சங்கள் இவைதான் உங்களை இருளில் ஆட்டிப் படைக்கின்றன.

      வெளிச்சத்தில் சுற்றிலும் என்ன இருக்கிறது என்று உங்களால் பார்க்க முடிகிறது. இருட்டில் எதுவும் புலப்படாதபோது, கட்டுப்பாடு இல்லாத மனம், அதுவாகவே விபரீதமான பிம்பங்களைக் கற்பனையாகத் தோற்றுவிக்கிறது. அந்த பிம்பங்கள்தான் அச்சத்தின் அடிப்படை. இல்லாத ஒன்றை உருவகித்துக் கொண்டு அச்சப்படுவதும், அதனால் துன்பப்படுவதும் புத்திசாலித்தனமா? பைத்தியக்காரத்தனமா? நீங்களே சொல்லுங்கள்.

      என் மண்டைக்குள் எந்தவிதமான பிம்பங்களும் இல்லை என்பதால், எனக்குள் இந்தப் பயமுறுத்தும் விளையாட்டு நேர்வதில்லை. எதை வேண்டுமானாலும் என்னால் வெறித்துப் பார்க்க முடியும். இப்போதும் கண்களை மூடிக் கொண்டால், எனக்குள் வெறுமைதான் நிறைந்திருக்கும்.

      ரோகி, போகி, யோகி மூவருமே இரவில் தூங்கமாட்டார்கள். ரோகி என்றால் நோயாளி. உடல்நிலை மோசமாக இருக்கும்போது, ஒருவனுக்குத் தூக்கம் வராது. போகி என்றால் இன்பத்தை நாடிப் போகிறவன். அவன் நாடும் இன்பங்கள் பலவற்றுக்கு இரவுதான் உகந்தது. யோகி இரவில் தூங்காமல் இருப்பதற்குக் காரணம், இரவும் இருளும் அவருடைய ஆன்மீகப் பயிற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும்.

      காரணம், இருளில் எல்லாம் ஒன்றுடன் ஒன்று பாகுபாடு இன்றி ஐக்கியமாகிவிடுகின்றன. வெளிச்சம் வந்ததும் ஒவ்வொன்றும் தன் அடையாளத்தோடு விறைத்து நிற்கிறது. இருள் என்பது உண்மைக்கு வெகு அருகில் இருக்கிறது. வெளிச்சம் என்பது பொய்க்கு அருகில் இருக்கிறது.

அற்புதம்! ஆச்சர்யம்! சிதம்பர இரகசியம்? ஆனந்தம்



சிதம்பர இரகசியம் என்றால் என்ன ...?!

      சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான இரகசியங்கள் மற்றும் ஆச்சர்யங்கள் இவைகள் தான்.

      சிதம்பரம் நடராஜர் கோயில் இரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்தக் கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

      முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்."

(1) இந்தக் கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. (Centre Point of World's Magnetic Equator ).

(2)பஞ்சபூதக் கோயில்களில் ஆகாயத்தைக் குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றைக் குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது "மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்" என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தைக் குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்தப் படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதைப் போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது.

Monday, May 27, 2013

போதையுண்டு, தள்ளாட்டம் இல்லை! ஆனந்தம்


      ஆனந்தத்தைத் தேடும் இளைஞர்கள், மதுவைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் மறுநாள் காலையிலோ தலைவலியும் சேர்ந்து வந்துவிடுகிறது.இங்கே, பக்க விளைவில்லாத போதைப் பொருள் பற்றி..... சிலவகை தியானங்கள் மது அருந்தியது போன்ற போதையைத் தருகின்றனவே?

      பொதுவாக போதை தரும் பானங்களைக் குடித்தால், உடலும், மனமும் தங்கள் கட்டுப்பாட்டை இழந்துவிடும். தியானங்கள் தரும் போதை அப்படியல்ல. வெளியேயிருந்து எதையோ எடுத்து நீங்கள் அருந்துவதில்லை. உங்கள் உள்ளேயிருக்கும் உயிர்ச் சக்தியை நீங்கள் விரும்பி, அருந்துகிறீர்கள்.

      தியானத்தினால் உள்ளே போதையாகவும் வெளியே உறுதியாகவும் இருக்க முடியும். இன்னும் சில தியானங்கள் மூலம் உள்ளுக்குள் உயிர்ச் சக்திக்கு முழு போதையும் வெளியே பாறை போன்ற அமைதியும்கூட ஏற்படுத்த முடியும். பாறை என்றால், உறைந்துபோன பாறை அல்ல. நினைத்த மாத்திரத்தில், உயிர்த்து எழுந்திருக்கக்கூடிய பாறை!

புத்த பூர்ணிமா! உண்மைகதை! ஆனந்தம்


      இந்த உலகில் எத்தனையோ ஆன்மீகக் குருமார்கள் தோன்றியிருந்தாலும், அவர்கள் எல்லாரிலும் பெருமளவில் கொண்டாடப்படுகிறவர் கௌதம புத்தர். அவர் காலத்தில் வாழ்ந்த அரசர்களும் சக்கரவர்த்திகளும் அவரது சீடர்களாயினர். இந்தியாவில் மிகப்பெரும் சக்கரவர்த்தியாக விளங்கிய அசோகர், அரியணை துறந்து திருவோடு தாங்கி புத்தர் வழியில் நடந்தார்.

      ஆட்சிக் கட்டிலில் இருந்த அனேகம் பேரை புத்தர் திருவோடு ஏந்தச் செய்தார். இந்தக் காரணங்களாலேயே புத்த மார்க்கம் இந்தியாவில் ஒரு பெரும் அலையை ஏற்படுத்தியது.
“இதற்கு வேண்டியதெல்லாம் முழுமையான விருப்பம்தான். அது இப்போது இருக்கிறது. பிறகு எதைத் தேடி இந்தப் போராட்டம்?”

      பல விதங்களிலும் புத்தரின் போதனைகளை நீங்கள் சிந்தித்தால் அவை உபநிஷதங்களின் சாரமாகத்தான் உள்ளன. ஆனாலும் கலாச்சாரத்தின் தளைகளுக்குள் இருந்த அவற்றை விடுவித்து எளிமையாகவும் விஞ்ஞானப்பூர்வமாவும் வழங்கியதுதான் புத்தரின் போதனைகள் வெற்றி பெற்றமைக்கு முக்கியக் காரணம்.

      ஆன்மீக அடிப்படையில் மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாத பல நுண்ணிய அம்சங்களும் சக்திகளும் அவருக்கு இருந்தால்கூட அவற்றை ஒருபோதும் அவர் வெளிப்படுத்தியதே இல்லை. ஆனால் புறஉலகைப் பொறுத்தவரை தன்னை மிகவும் யதார்த்தமான மனிதராகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.

      அவர் ஞானோதயம் அடைந்த பௌர்ணமி நாள்தான் புத்த பூர்ணிமா என்று குறிப்பிடப்படுகிறது. ஏறக்குறைய எட்டாண்டு காலம் தன் உடலையே பெரும்சேதத்துக்கு ஆட்படுத்துகிற விதமாக மிகக் கடுமையான ஆத்ம சாதனைகளில் அவர் ஈடுபட்டார்.

      நான்காண்டு காலம் சமணா என்னும் மிகக் கடுமையான ஆத்ம சாதனைகளில் அவர் ஈடுபட்டார். சமணா என்பது உண்ணாநோன்பு இருப்பதும், யாரிடமும் உணவு கேட்காமல் நடந்துகொண்டே இருப்பதும் ஆகும். பலரும் சமணா சாதனையை செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்களில் பலர் மனிதர்கள் இருக்கிற பகுதியின் வழியாக நடந்து செல்வார்கள். இவர்கள் சமணா நோன்பு நோற்பதை அறிந்து மக்கள் தாமாக உணவு படைப்பார்கள்.

      ஆனால் கௌதமரோ, மனித நடமாட்டம் இல்லாத பகுதிகளிலேயே நடந்தார். அதன் காரணமாக மரணத்தை நெருங்கும் அளவு தன் உடலை சிதைத்துக்கொண்டார். அப்போதுதான் நிரஞ்சனா என்கிற நதிக்கு அருகே வந்தார். இப்போது அந்த நதி இல்லை. அந்த நதியில் முழங்கால் அளவுதான் தண்ணீர் இருந்தது. ஆனால் வேகமாகப் பாய்ந்துகொண்டு இருந்தது. மிகவும் பலவீனமாக இருந்த கௌதமரால் அடுத்து ஓர் அடிகூட எடுத்துவைக்க முடியவில்லை.

      அங்கே இருந்த ஒரு சிறு கிளையைப் பற்றிக்கொண்டார். அப்படியே பல மணி நேரங்கள் அவர் இருந்ததாகச் சொல்கிறார்கள். அல்லது சிறிது நேரம் இருந்திருந்தாலும்கூட, உடல் சோர்வு காரணமாகப் பல மணி நேரங்கள் கழிந்ததாகத் தோன்றியிருக்கலாம். அந்த வினாடியில்தான் அவருக்குள் ஓர் எண்ணம் பிறந்தது.

      “இதற்கு வேண்டியதெல்லாம் முழுமையான விருப்பம்தான். அது இப்போது இருக்கிறது. பிறகு எதைத் தேடி இந்தப் போராட்டம்?” இதை உணர்ந்தபோது அவருக்கு கொஞ்சம் சக்தி பிறந்தது. எனவே நதியைக் கடந்த அவர், தற்காலத்தில் புத்தரைக் காட்டிலும் கூடுதல் புகழ் பெற்றிருக்கிற போதி மரத்தின் கீழ் சென்றமர்ந்தார்.

      அந்த மரத்தின் கீழ் சம்மணம் இட்டு அமர்ந்த அவர், ‘ஞானோதயம் நிகழும் வரை நான் அசைய மாட்டேன், எழுந்தால் ஞானம் பெற்றவனாக எழுவேன், இல்லையெனில் இப்படியே இறந்துவிடுவேன்’
என்று முடிவு செய்தார். ஒரே கணத்தில் ஞானம் பிறந்தது.

      அவர் முழுமையாக ஞானோதயம் பெறுகிறபோது நிலவு உதயமாகிக்கொண்டு இருந்தது. கண் விழித்துப் பார்த்தபோது, அவருக்கு எதிரே ஐந்து சீடர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்களை சீடர்கள் என்றுகூட சொல்ல முடியாது. ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டிருந்த சக பயணிகள் அவர்கள். இவரது தீவிரத்தைப் பார்த்து அவர் வழிகாட்டுவார் என்று அவர் முன் அமர்ந்திருந்தார்கள்.

      கண் விழித்ததுமே புத்தர் சொன்ன முதல் வார்த்தை, “வாருங்கள், நாம் உணவருந்தலாம்” என்பதுதான். ஐந்து பேரும் அதிர்ந்தார்கள். ஆனால் எப்படியோ உணவுக்கு ஏற்பாடு செய்தார்கள். புத்தர் நிதானமாக அமர்ந்து நன்றாகச் சாப்பிட்டார். இந்த ஐந்து பேருக்கும் நம்பிக்கை போய்விட்டது.

      வயிறாரச் சாப்பிடுகிற ஒருவர் எப்படி ஆன்மீகவாதியாக இருக்க முடியும் என்று கருதி அவரை விட்டு விலகிச் சென்றுவிட்டார்கள். புத்தர் பெருங்கருணை காரணமாக சில ஆண்டுகள் கழித்து அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து ஞானோதயத்தின் பாதையில் அவர்களை நெறிப்படுத்தினார்.

      2500 ஆண்டுகளுக்கு முன்பு தன்னில் மலர்ந்த கௌதம புத்தர், ஆன்மீக உலகில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார்.

      ஆன்மீகப் பாதையில் நடையிடும் ஒவ்வொருவருக்கும் புத்த பூர்ணிமா மிக முக்கியமான நாளாகும்! வாழ்க வளமுடன்!

Thursday, May 23, 2013

உங்களுக்குள் ஒரு மர்மப் புதையல்! ஆனந்தம்


     
      குண்டலினி பரமரகசியங்களுக்கு எல்லாம் பரமரகசியமாய் காலம் காலமாய் பொத்திப் பொத்தி பேசி வரப்படும் ஒரு ஆன்மீக சமாச்சாரம். உனக்கு தெரியுமா, உன் குண்டலினியை எழுப்பினால் நீ பறக்கலாம், நீ தண்ணீரில் மிதக்கலாம் என்னும் பல கதைகள் கேட்டிருப்பீர்கள். இங்கே குண்டலினியின் அறிவியல்…

      குண்டலினி, உங்களுக்குள் பொதிந்து கிடக்கும் ஒரு சக்தி. தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ளாத நிலையிலேயே நமக்குள் இது புதைந்து கிடக்கிறது. நீங்கள் “மனிதன்” என்று குறிப்பிடும் தன்மை இன்னும் உருவாக்கத்தில் இருப்பதால், இந்த சக்தி இன்னும் வெளிப்படாமல் காத்துக்கொண்டே இருக்கிறது. நீங்கள் இன்னும் முழுமையான மனிதனாக இல்லை. உங்களை நீங்கள் மேம்பட்ட மனிதராக வளர்க்க ஒரு தொடர்ச்சியான நோக்கம் இருந்துகொண்டே இருக்கிறது.

      இந்த சக்தியை பற்றி உங்களுக்கு கவனமிருந்தால், இதை பயன்படுத்தி அற்புதங்களை படைக்க முடியும்.

      நீங்கள் குரங்காக இருந்தபோது, உங்களுக்கு மனிதனாக மாற விருப்பமில்லை. இயற்கைதான் உங்களை அந்த நிலைக்கு தள்ளியது. ஆனால் மனிதனாக மாறியபின், அதைத்தொடர்ந்து ஒரு விழிப்புணர்வான பரிணாம வளர்ச்சி அங்கே நடைபெறவில்லை. நீங்கள் விழிப்புணர்வாக இல்லாத பட்சத்தில், அந்த சுழற்சி திரும்பத்திரும்ப நடந்துகொண்டே இருக்கும்.
எந்த ஒரு மாற்றமும் சரி, பரிணாம வளர்ச்சியும் சரி, போதிய சக்தி இல்லாமல் நடப்பதில்லை. இந்த சக்தியை பற்றி உங்களுக்கு கவனமிருந்தால், இதை பயன்படுத்தி அற்புதங்களை படைக்க முடியும். ஒரு புதையலின் மேல் உட்கார்ந்து இருப்பதுபோன்றது இது. ஆனால் நீங்கள் தவறான திசையில் பார்த்துக் கொண்டிருந்தால், அங்கே புதையல் இருப்பதே உங்களுக்குத் தெரியாது.

      ஒரு பிச்சைக்காரர் கடுமையான வறுமையில் வாழ்ந்து வந்தார். மரத்தடியில் உட்கார்ந்து பிச்சை எடுத்து கொண்டிருந்தார். அவர் இறந்தபிறகு அவர் உடலை அங்கிருந்து வேறு இடத்திற்கு கொண்டு போய் புதைக்க யாரும் பிரயத்தனப்படாமல் அந்த மரத்தடியிலேயே புதைக்க முடிவு செய்தனர். அங்கே தோண்டும்போது ஒரு சில அடிகளிலேயே பெரும் புதையல் ஒன்று கிடைத்தது.

      ஒரு பானை நிறைய தங்கத்தை கீழே வைத்துக்கொண்டு அந்த முட்டாள் தன் வாழ்க்கை முழுவதும் பிச்சை எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார். கீழே தோண்டியிருந்தால் அவர் பெரும் பணக்காரர் ஆகியிருக்க முடியும். ஆனால் அங்கேயே உட்கார்ந்துகொண்டு எப்போதும் பிச்சை மட்டுமே எடுத்துக் கொண்டிருந்தவரை என்ன சொல்ல?

      இப்படித்தான் குண்டலினியும். அது அங்கே அடியில் மௌனமாய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது. இது எப்படி தெரியுமா? ஜாக்பாட்டின் மேல் உட்கார்ந்து கொண்டிருப்பதைப் போன்றது. ஆனால் தவறான திசையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். புதையல் இருக்கும் பக்கம் திரும்பவில்லை.

      அதனால் குண்டலினி சக்தி இருப்பதையே நீங்கள் உணரவில்லை. குண்டலினி என்பது உங்களுக்குள் இருக்கும் பயன்படுத்தப்படாத, தொடப்படாத சக்தி. உங்களை முற்றிலும் கற்பனை செய்யமுடியாத பரிமாணத்திற்கு மாற்றிட இந்த சக்தியைப் பயன்படுத்த முடியும்.

      முறையான யோகப் பயிற்சிகள், குண்டலினி சக்தியை மேலெழுப்ப துணை நிற்கும்!
........................வாழ்க வளமுடன்!..............................

Wednesday, May 22, 2013

இறந்த உடலை ஏன் எரிக்கிறோம்? ஆனந்தம்


நமது கலாசாரத்தில், இறந்தவர் உடலை எரிக்க வேண்டும் என்ற பழக்கம் எப்படி வந்தது?

      நமது கலாசாரத்தில் இறந்தவர் உடலைப் பாதுகாக்கும் வழக்கம் இல்லை. இந்தத் தேசத்தின் கலாசாரம், வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சமும் மனிதனை மேல்நோக்கிக் கொண்டுசெல்வதாக அமைய வேண்டும் என்றே நினைக்கிறது. உடலை எரிப்பது என்ற சடங்கும் அந்த நோக்கத்திலேயே அமைக்கப்பட்டது.

      உங்களைப் பொறுத்தவரையில் அவர் இறந்துவிட்டார். ஆனால் அந்த உயிரைப் பொறுத்தவரையில் உடலைவிட்டு நழுவிவிட்டதாகத்தான் நினைத்துக்கொண்டு இருக்கும்.

      இறந்தவர் இந்த உடல்தான் தனது உயிர் என்று வாழ்ந்திருப்பார். அந்த உடலோடு மிகவும் ஆழமான தொடர்போடு வாழ்ந்திருப்பார். உங்களைப் பொறுத்தவரையில் அவர் இறந்துவிட்டார். ஆனால் அந்த உயிரைப் பொறுத்தவரையில் உடலைவிட்டு நழுவிவிட்டதாகத்தான் நினைத்துக்கொண்டு இருக்கும். எனவே மீண்டும் அந்த உடலுக்குள் நுழைந்துவிடலாம் என்றே அந்த உயிர் துடிக்கும். எனவே, வாய்ப்பை எதிர்நோக்கி அந்த உடலைச் சுற்றியே உயிர் சுற்றிக்கொண்டு இருக்கும். உடல் முழுமையாக இருக்கும் வரை அந்த உயிரால் அங்கிருந்து நகர முடியாது. அந்த மனிதர் ஞானம் அடைந்திருந்தால், அந்த உடலைவிட்டு நீங்கிய கணத்திலேயே அந்த உயிர் மகிழ்ச்சியாக அங்கிருந்து வெளியேறிவிடும். ஆனால், சரியான புரிதல் இல்லாத உயிர் அந்த உடலையே சுற்றிவரும். இது அந்த உயிருக்கும் நல்லதல்ல. இறந்தவருடன் பழகியவர்க்கும் அந்த உடலைப் பார்த்துப் பார்த்து பல நினைவுகளால் வருத்தம் அதிகமாகியே போகும்.

      உயிரை விட்டவரும் சரி, உறவினர்களும் சரி, உடல் அங்கிருக்கும் வரை, வேதனையோடு இருப்பர். எனவே விடைபெற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை அந்த உயிர் உணர வேண்டும் என்பதால், அந்த உடலை முழுமையாகவும் விரைவாகவும் அழிக்க வேண்டும் என்னும் நடைமுறை உண்டாக்கப்பட்டது. எனவேதான் இறந்த ஒன்றரை மணி நேரத்துக்குள் உடலை எரிக்க வேண்டும் என்ற விதி ஏற்படுத்தப்பட்டது. அவசரத்திலும் பதற்றத்திலும் தவறான முடிவெடுத்து உயிருடன் இருக்கக்கூடியவரையும் தவறுதலாக எரிக்கப்பட்டுவிடலாம் என்பதால், அதை நான்கு மணிநேரம் என பிற்பாடு மாற்றி அமைத்தார்கள்.

      தாம் அறிந்த அந்த உடல் இனி இல்லை, அடையாளமற்று எரிந்து கையளவு சாம்பலாகிவிட்டது என்னும் உண்மையை அறியும்போது, இறந்த உயிரும் அந்த இடத்திலேயே பரிதவித்துக்கொண்டு இருக்காது. இங்கு உயிருடன் இருப்பவர்களும் மாண்டவன் இனி மீளப்போவதில்லை என்று ஒருவித அமைதி கொள்வார்கள். எனவேதான் ஒருவர் இறந்துவிட்டால் அவரை உடனடியாக எரிப்பது நமது கலாசாரத்தில் இருந்து வருகிறது.

      போதிய விறகு இல்லாத பாலைவனங்களிலும், நெருப்பு நின்று எரியாத குளிர்ப் பிரதேசங்களிலும் எரிப்பதைவிட புதைப்பது சுலபமாக இருந்தது. எனவே அத்தகைய நாடுகளில் அதுவே அவர்களது நடைமுறையாக மாறிவிட்டது!

Sunday, May 5, 2013

ஹே நண்பா ! ஆனந்தம்


      பள்ளியில் தோள் கொடுத்தவன், கல்லூரி வாழ்க்கையை கலகலப்பாக்கியவன், திருமண மேடையில் கைக்குட்டையால் முகம் துடைத்தவன், எல்லோருக்கும் இன்பத்திலும் துன்பத்திலும் உடனிருப்பவன் எப்போதும் ஒரு நண்பன்தான். ஆனால், ஆயிரம்பேர் படிக்கும் கல்லூரியில், நாம் ஏன் ஒரு சிலரைமட்டும் நண்பர்களாக ஆக்கிக் கொண்டுள்ளோம்?! நட்பு பற்றி சத்குருவின் சில வரிகள்…

சத்குரு:

      உங்களைப் போலவே எண்ணுகிற, உணர்கிற, உங்களைப் புரிந்துகொள்கிற, உங்களைப்போல விருப்பங்களைக் கொண்டவர்களைத்தான் நண்பர்கள் என்கிறீர்கள்!
      எனவே எப்போதும் உங்கள் முட்டாள் தனங்களை ஆதரிப்பவர்களைத்தான் தேடிச் செல்கிறீர்கள். அந்த விதத்தில் பார்த்தால் ஒரு குருவோடு இருப்பது வித்தியாசமானது. அவர் உங்கள் நண்பர். ஆனால், உங்கள் அகங்காரத்தைக் கீழே இழுத்து அதன் மீது நடனமாடுபவர். சாதாரணமாக அகங்காரத்தைச் சீண்டினால், உங்கள் நண்பர் எதிரியாகி விடுவார். நாம் செய்வது என்னவென்றால் உங்கள் அகங்காரத்தின் மீது நடனமாடினாலும் பரவாயில்லை, நீ என் நண்பன் என்ற நிலையை ஏற்படுத்துவது.
      நீங்கள் யாருக்காவது நண்பர் எனில் அவருக்குப் பிடித்தவராக இருக்க எவ்வளவு முட்டாள்தனங்களைச் செய்கிறீர்கள் பாருங்கள். சூழலைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில், இனிமையற்ற எத்தனை விஷயங்களை உங்களுக்குள் போட்டுப் புதைத்து வைத்திருக்கிறீர்கள் பாருங்கள்.
இனிமையற்ற விதைகளை மண்ணில் விதைத்தால், பழங்களும் அப்படித்தான் இருக்கும். வாழ்க்கையும் அப்படித்தானே இருக்கும்.
      உங்களுக்கு ஒரு நண்பர் இருந்தால், அவருக்கு உங்களைப் பிடிக்காது என்றாலும் பரவாயில்லை என்ற தைரியம் உங்களுக்கு வேண்டும். தற்போது உங்கள் நண்பர்களில் பலர் ஒப்பந்தங்களோடும் விருப்பு வெறுப்புகளோடும்தான் உள்ளனர்.
      ஓர் உண்மை நண்பர் உங்களின் முட்டாள்தனங்களைச் சுட்டிக்காட்டினாலும் அன்போடு பழகும் தைரியமுடன் இருக்க வேண்டும். அதுதான் நட்பு! வாழ்க வளமுடன்!

Friday, March 29, 2013

காலை எழுந்தவுடன் காபி? ஆனந்தம்


   
       “ஜோரான மழை, சுவையான காபி, சூடான பஜ்ஜி, கடலைபோட ரெண்டு ப்ரண்ட்ஸ் இதைவிட என்னவேணும் வாழ்கைல” என்பவரா நீங்கள்… அப்படியே இருந்தாலும் காபி உடம்புக்கு நல்லதா என்ற சந்தேகமும் தலையெடுக்கிறதா உங்கள் மனதில்? குறைத்துக் கொள்ள வேண்டுமோ என்கிற கேள்வியும் எழுந்துவிட்டதா? ம்ம்… இந்நிலையில் நீங்கள் தனியாகத் தவிக்கவில்லை, உங்களுக்கு ஏகத்துக்கும் இருக்கிறது துணை…
      காபியைப் பற்றி பல வாதங்கள் இவ்வுலகில் பல இடங்களில் நடந்திருக்கிறது. அது விளைவிக்கும் கேடுகள், அதற்கு இருக்கும் மருத்துவ குணங்கள் என்று பலர் இதில் பிளவுபட்ட கருத்துடனே இருக்கிறார்கள். நீரிழிவு நோய், உடல் தளர்ச்சி போன்றவற்றிற்கு காஃபியைப் போன்ற மருந்தில்லை என்று சிலரும், இதய நோய்கள் புற்று நோய்களுக்கு முக்கிய காரணமே காஃபிதான் என்று சாடுவதற்கு சிலரும் போர்கொடியோடு தயாராக இருக்கிறார்கள். வல்லுனர்கள் இப்படி வேறுபட்டு நிற்க, இங்கு காபி பற்றி சத்குருவின் வார்த்தைகளில்…
      காபி உங்களை விழிப்புடன் வைக்கிறது, சுறுசுறுப்பாக்குகிறது, கிளர்ச்சியடையச் செய்கிறது, அதனால் அதற்கு நல்ல சர்டிபிகேட் கொடுத்தே ஆக வேண்டும். அதிலும் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே காபி குடித்தால், நீங்கள் ஆச்சரியப்படும் அதிசயம் எல்லாம் உங்களுக்கு நடக்கும். நீங்கள் ஏதோ வீர அபிமன்யு போல் தெம்பாகக் கூட உணர்வீர்கள்.
ஆனால் தினம் தினம் அதை அருந்தினால், நீங்கள் அதை சார்ந்து வாழ்பவர் ஆகிவிடுவீர்கள். காபியை குடித்தவுடன் உங்கள் பயம், கவலைகள் எல்லாம் விலகிவிட்டது போல் தோன்றினாலும், சிறிது நேரத்திலேயே உங்கள் உடல் ‘இன்னும் கொஞ்சம் காபி வேண்டும்’ என்று அனத்தத் துவங்கிவிடும்.
      ஒரு இரண்டு மாதங்கள் நீங்கள் காபியே அருந்தாமல் ஒதுக்கி வைத்துவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். திடீரென்று ஒரு நாள் காலை எழுந்தவுடன் நல்ல ஸ்ட்ராங்காக ஒரு காபி, அதிகமாக டிகாக்ஷன் சேர்த்து குடித்தீர்கள் என்றால் உங்கள் கைகள் நடுங்குவதை நீங்கள் உணர முடியும்.
      இதுவே ஒரு ஆறு மாத காலம் தொடர்ந்து நீங்கள் காபி அருந்தி வந்தீர்கள், திடீரென்று ஒரு நாள் காபி வேண்டாம் என்று நிறுத்த முயல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், அன்று உங்கள் முடிவை ஏற்க முடியாமல் உங்கள் உடல் தவிப்பதையும், மீண்டும் மீண்டும் காபி வேண்டும் என்று அது ஏக்கமாக நச்சரிப்பதையும் நீங்கள் நிச்சயமாக கவனிக்க முடியும். அப்படி என்றால் நிச்சயமாக ஏதோ ஒரு வகையில் காபி உங்களுக்கு பாதிப்பு விளைவிக்கிறதுதானே?
      அப்போது நான் காபி குடிப்பதை நிறுத்தி விட வேண்டுமா என்று நீங்கள் கேட்கலாம். எதை விட வேண்டும், எதை விட வேண்டாம் என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இதை விடுங்கள், அதை விடுங்கள் என்று நான் எப்போதும் வலியுறுத்த மாட்டேன்.
      நான் சொல்வதெல்லாம் – நீங்கள் இங்கு வாழும்போது, எதற்கும் நீங்கள் அடிமைப்பட்டு வாழாதீர்கள் என்பது மட்டும்தான். பதிலாக, விழிப்புணர்வுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.
      காபியாக இருந்தாலும் சரி, சிகரெட்டாக இருந்தாலும் சரி, ஏன் கடவுளாக இருந்தாலும் கூட சரி, அதனுடன் ஒரு விழிப்புணர்வோடு வாழக் கற்றுக் கொள்ளுங்கள். ஒவ்வொன்றும் உங்களுக்கு எவ்வளவு வேண்டும் என்று நீங்கள் மட்டும்தான் முடிவு செய்ய முடியும்.
      ஆனால் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், தூண்டுகோள்களை ஓரளவிற்கு மேல் பயன்படுத்தினால், அதற்கு நீங்கள் விலை கொடுத்துதான் ஆக வேண்டும். “அதனால் என்ன…? வாழ்க்கையே கொஞ்சம் காலம்தானே.
      90 வயது வரைக்கும் வாழாமல், நான் 70 வயதிலேயே போகிறேன்” என்று நீங்கள் சொல்பவராக இருந்தால்… பரவாயில்லை. நான் இந்த எண்ணத்தையும் எதிர்க்கவில்லை. காபியையும் எதிர்க்கவில்லை.
      ஆனால் இது வலுக்கட்டாயமாக பருகப்பட வேண்டிய ஒரு பானம் அல்ல. அதன் சுவை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா, என்றோ ஒரு நாள் ஒரு பெரிய குவளை நிறைய வேண்டுமானலும் குடியுங்கள். அதன் சுவையில் திளைத்திடுங்கள். ஒரு நாள் குடித்தால் பரவாயில்லை. ஆனால் தினம் தினம் குடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தால் அது பெரும் பிரச்சனைதான்.
      ஒரு நாள் காபி கிடைக்காவிட்டாலும் அந்த நாளைக் கடக்கவே முடியாது என்ற நிலையில் நீங்கள் இருந்தால், நிச்சயமாக நீங்கள் இப்பிரச்சனையை சரி செய்துக் கொள்ளத்தான் வேண்டும். போயும் போயும் ஒரு குவளை காபி தானா உங்கள் வாழ்க்கையின் தரத்தை நிர்ணயிப்பது…?
      நீங்கள் எதை உண்ண வேண்டும் எதைப் பருக வேண்டும் என்று சொல்வது என் வேலை அல்ல. இந்தப் பொருள் உங்களுக்குள் எப்படி வேலை செய்கிறது என்று மட்டுமே நான் சொல்கிறேன். உங்களுக்கு நீங்கள் எதைச் செய்து கொண்டாலும் சரி, அதை உங்கள் விருப்பத்தோடு முழுத் தெளிவுடன் செய்யுங்கள்.
      ஏதோ கட்டாயத்தினாலோ, அறியாமையினாலோ வேண்டாம். உங்கள் சாவை வரவேற்கசச் செல்கிறீர்கள் என்றாலும் கூட, முழு விழிப்புணர்வோடு, என்ன செய்கிறோம் என்று தெளிவாகத் தெரிந்து கொண்டு செய்யுங்கள்.

Monday, March 25, 2013

"கோபத்தில் கத்துவது ஏன்?" ஆனந்தம்


"Why We Shout In Anger?"

A Hindu saint who was visiting river Ganges to take bath found a group of family members on the banks, shouting in anger at each other.
 He turned to his disciples smiled 'n asked.

'Why do people shout in anger shout at each other?'

Disciples thought for a while, one of them said, 'Because we lose our calm, we shout.'

'But, why should you shout when the other person is just next to you? You can as well tell him what you have to say in a soft manner.' asked the saint

Disciples gave some other answers but none satisfied the other disciples.
Finally the saint explained, .

'When two people are angry at each other, their hearts distance a lot. To cover that distance they must shout to be able to hear each other. The angrier they are, the stronger they will have to shout to hear each other to cover that great distance.

What happens when two people fall in love? They don't shout at each other but talk softly, Because their hearts are very close. The distance between them is either nonexistent or very small...'

The saint continued, 'When they love each other even more, what happens? They do not speak, only whisper 'n they get even closer to each other in their love. Finally they even need not whisper, they only look at each other 'n that's all. That is how close two people are when they love each other.'

He looked at his disciples and said.

'So when you argue do not let your hearts get distant, Do not say words that distance each other more, Or else there will come a day when the distance is so great that you will not find the path to return.'

Friday, February 8, 2013

வெற்றி வேண்டுமா? இதோ 5 டிப்ஸ்! ஆனந்தம்


     success, victory, isha, sadhguru, yoga, mediation, kundalini, win win, you can win, secret, businesssecret, life, flexible, isha foundation, great, thumbs up, personality, inter personal skills, skills, failure, looser, luck, fortune, talent, clarity, confidence, belief, embrace, like, dislike, calculation, sense, aspiration, vision,
      “எல்லாம் செய்துவிட்டேன், ஆனாலும் வெற்றி கழுவும் மீனில் நழுவும் மீனாக இருக்கிறது” என்பவர்கள் இங்கே வாருங்கள். சத்குரு சொல்லும் இந்த 5 வழிமுறைகளில் ஒன்றைப் பற்றிக்கொண்டால் உங்கள் வாழ்க்கையில் இனி வெற்றி வெற்றி வெற்றி மட்டும்தான். வெற்றியைத் தேடுபவர்களுக்குப் புதிய பொன்மொழிகள் இதோ.

1. கைகளை நம்புவோம்! கைரேகையை அல்ல…
   சத்குரு:

      சில சமயங்களில் எதேச்சையாக, அதிர்ஷ்டவசமாக, சில விஷயங்கள் உங்களுக்குச் சாதகமாக நிகழ்ந்துவிடலாம். அப்படிக் காற்று உங்கள் பக்கம் வீசும் சமயத்திற்காக நீங்கள் காத்திருந்தால், நல்ல விஷயங்கள் உங்கள் கல்லறையில்தான் நடக்கும், ஏனென்றால் அச்சமயம் வராமல் கூட போய்விடலாம்.
      உங்களுக்கு தெரியுமா? கோடான கோடி தடவை ஒரு திடமான சுவரின் ஊடே நடந்து அதைக் கடக்க முயன்றால், அதில் ஒரு முறை நீங்கள் கடந்துவிட முடியுமென்று குவான்டம் கோட்பாடு (Quantum Theory) கூட சொல்கிறது. அதில் சிறிய சிக்கல் அந்த கோடான கோடி தடவையைத் தொடும்முன் உங்கள் மண்டையோடு உடைந்திருக்கும்.
      நீங்கள் அதிர்ஷ்டத்தை நம்பி வாழும்போது, நீங்கள் பயத்திலும் பதற்றத்திலும் வாழ்கிறீர்கள். நீங்கள் தெளிவான நோக்கத்துடனும் திறமையுடனும் வாழும்போது உங்களுக்கு எது நடந்தாலும் நடக்காவிட்டாலும், உங்களுக்கு நடப்பவை மேல் உங்களுக்கு ஆளுமை இருக்கும். அதுதான் ஸ்திரமான வாழ்க்கை.

2. தோல்வியில் தொலைவதை நிறுத்துங்கள்
   சத்குரு:
      உறுதியோடு இருக்கும் ஒரு மனிதனுக்குத் தோல்வி என்பதே கிடையாது. ஒரு நாளுக்கு 100 முறை நீங்கள் கீழே விழுந்தால், அவை நீங்கள் கற்கும் 100 பாடங்களாகிவிடும். நீங்கள் விரும்புவதை உருவாக்குவதில் உறுதியுடன் இருந்தால், உங்கள் மனம் ஒரே திசையில் நிலைத்துவிடும். உங்கள் மனம் இருக்கும் திசையில் உங்கள் உணர்ச்சிகளும் ஒன்றிவிடும். ஏனென்றால் நீங்கள் சிந்திக்கும் விதமாகத்தான் நீங்கள் வாழ்க்கையை உணரும் விதமும் இருக்கும். உங்கள் எண்ணமும் உணர்வுகளும் ஒன்று சேர்ந்தால், உங்கள் சக்திகளும் உங்கள் உடலும்கூட அத்திசையில் ஒருங்கிணைந்துவிடும். இவை அனைத்தும் ஒருமுகமாகின்ற போது, நீங்கள் விரும்புவதை உருவாக்கி உங்கள் கனவை நிஜமாக்கும் திறமை அபாரமாகிவிடும். பல விதங்களில் நீங்கள் படைப்பாளராகி விடுவீர்கள்.

3. தேவை தெளிவு – குருட்டு நம்பிக்கை அல்ல
   சத்குரு:
      ஒரு மனிதனுக்குத் தேவை தெளிவு, குருட்டு நம்பிக்கை அல்ல. ஒரு கூட்டத்தின் நடுவே நீங்கள் நடக்கும்போது, உங்கள் பார்வை தெளிவாக இருந்தால், ஒவ்வொருவரும் எங்கு இருக்கிறார் என்று உங்களால் பார்க்க முடிந்தால், கூட்டத்தில் ஒருவரைக் கூடத் தொடாமல் நீங்கள் மிகச் சுலபமாக நடந்து சென்றுவிடுவீர்கள்.
      உங்கள் பார்வைத் தெளிவாக இல்லை, ஆனால் நீங்கள் அதீத நம்பிக்கை உடையவர் என்கிறபோது, எல்லோர் மீதும் நடந்து செல்வீர்கள். தெளிவில்லாத காரணத்தால், தன்னம்பிக்கை நல்ல மாற்றுப்பொருள் என்று கருதுகிறீர்கள். அது ஒருக்காலமும் அப்படி ஆக முடியாது.
      உதாரணமாக, நீங்கள் உங்கள் வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளையெல்லாம் இப்படி எடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு நாணயத்தைச் சுண்டிவிடுங்கள். “சரி, தலை விழுந்தால் முதல் திட்டப்படி செயல்படுவோம், ஒருவேளை பூ விழுந்துவிட்டால் இரண்டாம் திட்டப்படி செயல்படுவோம்,” என்று நீங்கள் முடிவெடுத்து செயல்பட்டால், உங்கள் திட்டம் வேலை செய்ய 50 சதவிகிதம் வாய்ப்பிருக்கிறதா இல்லையா?
      வாழ்க்கையில் 50 சதவிகிதம்தான் நீங்கள் சரியாக இருக்கிறீர்கள் என்கிறபோது, நீங்கள் இரண்டு தொழில்கள்தான் செய்ய முடியும். ஒன்று நீங்கள் வானிலை அறிக்கையாளராகவோ அல்லது ஜோசியக்காரராகவோ இருக்க முடியும். இந்த பூமியில் நீங்கள் வேறெந்த வேலையும் செய்ய முடியாது.

4. கொஞ்சம் வளைந்து கொடுங்கள்
   சத்குரு:
      நம் வாழ்க்கையில் பலவிதமான சூழ்நிலைகளைக் கையாள்வதற்கு, நமக்கு வெவ்வேறு விதமான ஆளுமை குணங்கள் தேவை. அதில் நீங்கள் நீரோடைபோல் வளைந்துகொடுக்கும் தன்மையுடன் இருந்தால், நீங்கள் எடுத்திருக்கும் பாத்திரத்தில் உங்களால் முழு திறனுடன் செயல்பட முடியும். அதில் சிறிதும் சிக்கலிருக்காது. ஆனால் பலருக்கோ சூழ்நிலைக்கேற்றவாறு வளைந்து கொடுக்க முடியாமல் கட்டுண்டு கிடக்கிறார்கள். அவர்களுக்கு பிடிக்காதவற்றையும் புரியாதவற்றையும் எதிர்கொள்ளும்போது, அவர்கள் சொல்ல முடியாத பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.
      நீங்கள் அதை உடைக்க வேண்டுமென்றால், நீங்கள் அதை முற்றிலும் வேறுவிதமாக அணுக வேண்டும். நீங்கள் செய்யக்கூடிய மிக எளிமையான செயல் இது: உங்களுக்குப் பிடிக்காத ஒருவருடன் சேருங்கள். அவர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள், மிக அன்பாக, ஆனந்தமாக! உங்களுக்குப் பிடிக்காதவற்றைச் செய்யுங்கள், உங்களுக்குப் பிடிக்காதவர்களுடன் இருங்கள். அந்த சூழ்நிலையிலும் நீங்கள் புத்தியுடன், அன்புடன், ஆனந்தத்துடன் வாழக் கற்றுக் கொண்டால் அதுவே உங்களுக்கு வெற்றி.
5. எனக்கு என்ன கிடைக்கும்?
   சத்குரு:
      உயர்ந்த மனிதனாக ஆக வேண்டும் என்கிற பேராவல் உங்களுக்கு இருக்கத் தேவையில்லை. நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பதன்மேல் உள்ள கவனத்தைத் தாண்டி உங்கள் குறிக்கோளையும், நீங்கள் இயங்கும் வளையத்தையும் விரிவுபடுத்திவிட்டால், எப்படியும் நீங்கள் உயர்ந்த மனிதராகத்தான் இருப்பீர்கள்.
      உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று சில மனிதர்கள் ஏங்கியதில்லை. அவர்கள் பார்வை “எனக்கு என்ன கிடைக்கும்?” என்பதைத் தாண்டி இருந்தது. “எனக்கு என்ன கிடைக்கும்?” என்ற இந்த ஒரு கணக்கை மட்டும் நீங்கள் கைவிட்டுவிட்டு, உங்கள் திறமையின் உச்சத்தில் செயல்பட்டால், ஏதோ ஒருவிதத்தில் நீங்கள் உயர்ந்தவராகத்தான் இருப்பீர்கள்.
      அப்போது இயல்பாகவே “என்னைச் சுற்றியிருக்கும் உயிர்களுக்கு நான் என்ன செய்ய முடியும்?” என்று பார்க்கத் துவங்கிவிடுவீர்கள். உங்கள் திறமைகளையும் இயல்பாகவே அதிகரித்துக் கொள்வீர்கள், ஏனென்றால் செய்வதற்கு அவ்வளவு செயல்கள் இருக்கும்!

............................................." வாழ்க வளமுடன்"........................................