Monday, April 25, 2011

கடைசி தீட்சை: ஆனந்தம்


      கடைசி தீட்சை சீடனுக்கு அளிக்கப்படவுள்ளது. குரு, உன்னுடைய கடைசி தீட்சை மிகவும் மறைமுகமான ஒரு வழியிலேயே அளிக்கப்படும், என கூறினார். குரு அவனுடைய வழியில் வைத்த எல்லா கஷ்டங்களிலும் சீடன் தேறிவிட்டான், அவன் தன்னை நிரூபித்துவிட்டான். இப்போது கடைசி தீட்சை . . . மற்றும் அவன் கடைசி தீட்சையிலும் தேறிவிட்டால், அவன் ஞானமடைந்தவன் என அறிவிக்கப்படுவான் சீடன் குருவின் காலை தொட்டு, நான் தயாராக இருக்கிறேன். வெறுமனே எனக்கு கட்டளையிடுங்கள் மற்றும் எது செய்யப்படவேண்டுமோ அதை நான் செய்வேன், என கூறினான்.
      குரு ,நீ அரசரிடம் செல்லவேண்டும், மற்றும் அதிகாலையில் செல்லவேண்டும், அரசரை பார்க்கும் முதல் ஆளாய் நீ இருக்கவேண்டும். ஏனெனில் அரசருக்கு ஒரு பழக்கம் உள்ளது, முதலில் வருபவர்கள் யாராக இருந்தாலும், வருபவர் எதை கேட்டாலும், அரசர் கொடுத்துவிடுவார். ஆனால் நாடு செல்வ செழிப்போடு இருப்பதால் யாராவது செல்வது மிகவும் அபூர்வம். வருடங்கள் கடந்துவிட்டன, எதை கேட்டும் யாரும் போவதில்லை. ஆனால் தவறவிட்டுவிடாதே – மிகவும் சீக்கிரமாகவே அங்கு இரு. அரசர் காலையில் அவருடைய தோட்டத்திற்குள் நுழைவார், சூரியன் உதயமாகும்போது, அரசர் தோட்டத்திற்குள் நுழைவார் – அங்கு இரு. மற்றும் அவர் உன்னை உனக்கு என்ன வேண்டும் ? என்று கேட்பார் மற்றும் உனக்கு என்ன வேண்டுமோ, அதை அவரிடம் கேள், என கூறினார்.  
      இந்த கடைசி தீட்சை எந்த விதமானது என்பதை சீடனால் புரிந்துகொள்ள முடியவில்லை, ஆனால் கட்டளை பின்பற்றப்படவேண்டும், அவன் சென்றான். அவன் தவறவிடவில்லை, அதிகாலை மூன்று மணிக்கு அவன் அரசருக்காக காத்திருந்தான்.
      சூரியன் உதயமாகும் சமயத்தில், அரசர் தோட்டத்தில் நுழைந்தார் அந்த இளைஞன் அரசரை வணங்கினான். அரசர் ,நீ எதையாவது கேட்பதற்காக வந்திருக்கிறாயா ? நீ எதை வேண்டுமானாலும் கேட்கலாம்! நீ என்ன கேட்டாலும், நான் அதனை உனக்கு தருவேன், என கூறினார்.
      மிகப்பெரிய ஆசை இளைஞனை ஆட்கொண்டது. அவன் ஒரு ஏழை, மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவன், மற்றும் அரசர் எதுவாக இருந்தாலும் என்று கூறுகிறார் ? நிச்சயமாக தெரிந்துகொள்வதற்காக, அவன் திரும்பவும் கேட்டான்.
      எது வேண்டுமானாலும் என்று சொல்வதன் மூலம் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? அரசர் சரியாக அதைத்தான் சொல்கிறேன் – எதுவாக இருந்தாலும் நீ என்னுடைய இராஜ்ஜியத்தை கேட்டால் கூட நான் அதனை உனக்கு தந்துவிடுவேன். நீ உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ அவ்வளவு கேட்கலாம். . . . ,என கூறினார்.
      ஏழை இளைஞனால் அதிகமாக யோசிக்கமுடியவில்லை. அவன் ஒருவேளை பத்தாயிரம் ரூபாய் போதுமானது என எண்ணினான். ஆனால் ஓர் ஆசை, ஏன் பத்தாயிரம் ? உனக்கு ஒருவேளை இப்படி ஒரு வாய்ப்பு திரும்பவும் கிடைக்காமலேயே போகலாம் –ஏன் ஒரு இலட்சம் கேட்கக்கூடாது?
      மற்றும் பிறகு மற்றொரு ஆசை, மற்றும் ஆசை மேலும் ஆசை. . . ஏனெனில் மனம் தொடர்ந்து இன்னும் இன்னும் என கேட்டுகொண்டேயிருக்கிறது. எனவே அவன் என்ன முடிவு செய்தாலும், மனம் இன்னும் அதிகமாக என்று கேட்டுகொண்டேயிருந்தது.
      அரசர் நீ கேட்பதற்கு இன்னும் தயாராகவில்லை போல தெரிகிறது, நான் எனது காலை நடைப்பயிற்சிக்கு செல்கிறேன், அந்த நேரத்தில் நீ முடிவு செய். மற்றும் நான் திரும்ப வரும்போது, நீ என்ன கேட்டாலும் அது உனக்கு தரப்படும், என கூறினார்.
      அந்த அரை மணிநேரம் சித்ரவதையாக இருந்தது, அவன் போய்கொண்டேயிருந்தான், நான் இதை கேட்கலாம் மற்றும் அதையும் கேட்கலாம், ஒரு தங்க ரதம், மற்றும் பல கோடி ரூபாய் பணம், மற்றும் மிக அதிக அளவிலான நிலம் – நான் எனக்கே உரிய ஒரு சிறிய இராஜ்ஜியத்தை உருவாக்குவேன்.
      ஆசைகள் மற்றும் கனவுகள். . . மற்றும் அரசர் வந்தார். அந்த அரை மணி நேரம் மிகவும் வேகமாக போய்விட்டது. அரசர் அங்கு நின்றுகொண்டிருந்தார் மற்றும் அரசர் , இளைஞனே நீ இன்னும் முடிவு செய்யவில்லையா ? என கேட்டார்.
      பிறகு திடீரென இளைஞன் , நான் எதை கேட்டாலும் அது அரசர் வைத்திருப்பதை விட குறைவாகவே இருக்கும், எனவே ஏன் எல்லாவற்றையும் கேட்ககூடாது ? எண்ணிக்கைக்கு முடிவு கட்டிவிடலாம் என எண்ணினான் !
      எனவே அவன் ,ஐயா, நீங்கள் தர விரும்பினால், நான் எல்லாவற்றையும் உங்களிடம் இருப்பது அனைத்தையும் கேட்கிறேன். உங்களுடைய முழு இராஜ்ஜியம், உங்களுடைய அனைத்து செல்வங்களும், உங்களுடைய மாளிகைகள் - - அனைத்தும் வேண்டும். நீங்கள் வெறுமனே அரண்மனையை விட்டு வெளியேறிவிடுங்கள் ! மற்றும் நீங்கள் திரும்பவும் அரண்மனைக்குள் செல்லக்கூடாது. நீங்கள் ஏதையும் எடுத்துகொள்ளக் கூடாது. நீங்கள் வெறுமனே வெளியேறிவிடுங்கள் - - இராஜ்ஜியத்தைப்பற்றி எல்லாவற்றையும் மறந்துவிடுங்கள். நான் உங்களுக்கு நீங்கள் அணிந்திருக்கும் ஆடைகளை மட்டுமே அனுமதிக்கமுடியும்.
      அதைக்கூட அவன் எதிர்ப்போடுதான் செய்தான், அதுகூட அவனுக்கு குறைவதாக தோன்றியது.
      அரசர் மண்டியிட்டு, கடவுளிடம் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார், அவருடைய கண்களில் ஆனந்த கண்ணீர் உருண்டோடியது, பரவச கண்ணீர் ! மற்றும் அவர் கடவுளிடம் நான் இப்படிப்பட்ட ஒரு மனிதனுக்காகத்தான் முப்பது வருடங்களாக‌ காத்துகொண்டிருந்தேன் ! ஆனால் முடிவில் என்னுடைய பிரார்த்தனைக்கு செவி சாய்த்துவிட்டீர்கள், இப்போது அவன் வந்துவிட்டான், நான் இந்த எல்லா முட்டாள் தனங்களில் இருந்தும் விடுபட்டுவிட்டேன். நன்றி நீங்கள் என் பிரார்த்தனைக்கு செவி சாய்த்துவிட்டீர்கள், நான் அதிக காலம் காத்திருக்க வேண்டியிருந்தது இருந்தாலும், நீங்கள் எனது பிரார்த்தனைக்கு செவிசாய்த்துவிட்டீர்கள், நான் நன்றியால் நிறைந்துள்ளேன் என நன்றி கூறிக்கொண்டிருந்தார்.
      அரசர் இந்த விஷயங்களை கடவுளிடம் கூறிக்கொண்டிருக்கும்பொழுது இளைஞன் அங்கு நின்றுகொண்டிருந்தவன் என்ன விஷயம் ? இராஜ்ஜியத்தை துறப்பது குறித்து இந்த மனிதன் அதிக மகிழ்ச்சியை உணர்கிறான் என்றால், நான் எதற்கு இதற்குள்  நுழைகிறேன் ? இந்த மனிதன் சொல்வதைப்போல் 30 வருடங்களாக என்னுடைய முழு இராஜ்ஜியத்தை ஏற்றுகொள்ளும் ஒருவனை அனுப்பு, என்னுடைய முழு இராஜ்ஜியத்தையும் கேட்கும் ஒருவனை அனுப்பு என இந்த மனிதன் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தான் என்றால், பிறகு இவை எதுவும், எந்த மதிப்பும் உடையது அல்ல. நான் தேவையற்ற பிரச்சனைக்குள் நுழைகிறேன் என யோசிக்க தொடங்கினான், யோசித்துக்கொண்டே இருக்கிறான்.
      இளைஞனும் மண்டியிட்டான், அரசரின் கால்களை தொட்டு சார் நான் ஒரு இளைஞன் . . ஓர் இளைய முட்டாள். தயவுசெய்து மன்னித்துவிடுங்கள். எனக்கு எதுவும் வேண்டாம். கடவுளிடம் உங்களுடைய பிரார்த்தனை, கடவுளிடம் உங்களுடைய நன்றியுணர்வு என்னுடைய முழு மனதையும் திறந்துவிட்டது. நான் காட்டிற்கு என்னுடைய குருவிடம் திரும்பி செல்கிறேன், என கூறினான்.
      அரசர் அவனிடம் சம்மதிக்க வைக்க முயன்றார். போகாதே, வெறுமனே பார். அரண்மனைக்குள் வா ! நான் என்னுடைய அரண்மனை, என்னுடைய இராஜ்ஜியம், என்னுடைய செல்வங்கள் மட்டுமல்ல, அதோடு என்னுடைய அழகான பெண்ணையும் உனக்கு தருகிறேன், வந்து வெறுமனே பார் ! என்றார்.
      ஆனால் இளைஞன் நான் இங்கு ஒரு நொடிகூட இருக்கமுடியாது - - ஏனெனில் மனம் என்னை ஏமாற்றிவிடலாம். ஒரு உள்ளார்ந்த புரிதல் நிகழ்ந்துவிட்டது, மற்றும் நீங்கள் கடவுளிடம் நன்றியுணர்வு கொண்டதைபோல நான் உங்களிடம் நன்றியுணர்வோடு இருக்கிறேன். நான் தெளிந்துவிட்டேன் ! என கூறினான்.
      மற்றும் இளைஞன் தன்னுடைய குருவிடம் சென்று நடந்த முழு கதையையும் சொன்னபோது, குரு உன்னுடைய கடைசி தீட்சை முடிந்துவிட்டது. இப்போது எதுவும் எப்போதும் உன்னை ஒரு அடிமையாக்காது. இப்போது நீ கவனமாக, உணர்வோடு, சுதந்திரமானவனாக‌ இருக்கிறாய், நீ தேறிவிட்டாய் - - நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் இங்கிருந்து கவனித்துகொண்டிருந்தேன், நீ முழு இராஜ்ஜியத்தையும் கேட்டபோது, என்னுடைய இதயம் அழுதது. நான் ,எனவே இந்த முட்டாளிடம் 15 வருட உழைத்தது, எல்லாம் முடிந்தது என நினைத்துகொண்டிருந்தேன். ஆனால் நீ எடுத்த முடிவால் நான் அடைந்த மகிழ்ச்சியை நீ கற்பனை செய்துகூட பார்க்கமுடியாது, என கூறினார். நீ திரும்பவும் வந்துவிட்டாய். என குரு கூறினார்.
      கவனி, வெறுமனே கவனி. . . . மக்களிடம் பணம் உள்ளது, மக்களிடம் மாளிகைகள் உள்ளன, மக்களிடம் நீ ஆசைப்படும் அனைத்தும் உள்ளன - - வெறுமனே கவனி, வெறுமனே பார். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா ? அவர்கள் நிறைவாக இருக்கிறார்களா ? அவர்கள் உன்னைவிட மகிழ்ச்சியற்று இருக்கலாம் மற்றும் உன்னைவிட அதிகமாக நிறைவற்று உணரலாம் - - பிறகு அவர்களை பின்தொடராதே. அவர்கள் குருடர்கள் ! அவர்கள் மற்ற குருட்டு மக்களை பின்தொடர்ந்திருக்கிறார்கள். அவர்களை பின் தொடராதே................ பிந்தொடர்ந்தால் ஆனந்தத்தை இழப்பாய்...... ஆனந்தமே குறிக்கோள்...... ஆன்ந்தமே வாழ்க்கை...... ஆனந்தமே நிறைவு........ஆனந்தமே ஞானம்....

Friday, April 8, 2011

கோபம் உங்ளுடையது அல்ல ஆனந்தம்

ஜென் குரு பான்காய் என்பவரிடம் அவர் சீடர் ஒருவர் வருத்தத்துடன் சொன்னார். “குருவே, என்னால் என் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அதைப் போக்க நீங்கள் தான் எனக்கு ஒரு வழி சொல்ல வேண்டும்”

ஜென் குருக்கள் வித்தியாசமானவர்கள். அவர்கள் புனித நூல்களில் இருந்து மேற்கோள்கள் காட்டுவதோ, மணிக்கணக்காய் புத்தி சொல்வதோ இல்லை. பான்காய் சொன்னார். “உன்னுடைய கோபத்தை நீ கொஞ்சம் காட்டினால் அதைப் போக்க என்னால் வழி சொல்ல முடியும்”

சீடர் சொன்னார். “தற்சமயம் என்னிடம் கோபம் இல்லை. எனவே கோபத்தை என்னால் காட்ட முடியாது”

பான்காய் பொறுமையாகச் சொன்னார். “பரவாயில்லை. உன்னிடம் கோபம் இருக்கும் போது நீ அதை என்னிடம் கொண்டு வந்து காட்டுவாயாக”

சீடருக்கு ஒரே தர்மசங்கடம். கோபத்தை எப்படி ஒருவரிடம் கொண்டு போய் காட்ட முடியும்? திடீரென்று வந்து திடீரென்று போகும் கோபம் குருவிடம் வருகிற வரை இருக்குமா? அவன் தன் பிரச்னையைச் சொன்னான். “குருவே, கோபத்தை என்னால் கொண்டு வர முடியாது. கோபம் திடீரென்று ஏற்படுகிறது. அப்படி ஏற்படும் கோபம் உங்களிடம் வரும் வரை இருக்காது. காணாமல் போய் விடும்”

பான்காய் சொன்னார். “அப்படியனால் அது உன்னுடைய கோபமாக இருக்க முடியாது. அது உன் உண்மையான இயல்பாக இருந்தால் அது உன்னிடம் எப்போதும் இருக்கும். அதை நீ எப்போது வேண்டுமானாலும் அடுத்தவருக்குக் காண்பிக்க முடியும். கோபம் நீ பிறந்த போது இல்லை. உன் பெற்றோர்கள் அதை உனக்குத் தரவில்லை. எனவே அது வெளியே இருந்து தான் உன்னிடம் வர வேண்டும். உன்னுடையதல்லாததை, வெளியே இருந்து வருவதை விரட்டியடிப்பதில் என்ன பிரச்னை இருக்கிறது? இனி அப்போது உன்னுள்ளே நுழைய முயன்றாலும் கவனமாக இருந்து அதைப் பிரம்பால் அடித்துத் துரத்து”

பான்காய் மிக அழகாக ஒரு பேருண்மையை இங்கே சுட்டிக் காட்டி இருக்கிறார். சீடர் ‘என் கோபத்தைப் போக்க வழி சொல்லுங்கள்’ என்று கேட்டதறகு ‘என் கோபம்’ என்று சொல்வதே தவறு என்று மிக அழகாகச் சொல்கிறார். பிரச்னையே கோபத்தை தன்னுடன் இணைத்து தன்னுடையதாக பாவிப்பதில் தான் உருவாகிறது என்று கூறுகிறார்.

பான்காய் சொல்வதை நாம் ஆழமாகப் பார்க்க வேண்டும். நாம் கோபத்துடன் பிறக்கவில்லை. நம் கை, கால்களைப் போல, கண் காது மூக்கு போல நாம் பிறக்கும் போதே அது தரப்பட்டதல்ல. நம் உறுப்பு போல அது நம்முடன் ஒட்டி நாம் பிறந்திருந்தால் அதை நம்மிடம் இருந்து பிரிப்பது இயலாது. உடன் பிறந்தவற்றைத் துண்டித்து எறிவது கஷ்டம். அது பிரிவதே உடலுக்கு ஆபத்து அல்லது ஊனம் என்பதே உண்மை. ஆனால் இடையில் வந்து போகிற உணர்ச்சிகளை எல்லாம் நம்முடையது என்று பாவிப்பதனால் தான் அதனால் நாம் பெரிதாகப் பாதிக்கப்படுகிறோம்.

இது கோபத்திற்கு மட்டுமல்ல நம்மை அலைக்கழிக்கும் வெறுப்பு, பொறாமை, வருத்தம் போன்ற எல்லா உணர்ச்சிகளுக்கும் பொருந்தும். இது போன்ற உணர்ச்சிகள் எல்லாம் துன்பத்தைப் பெருக்குபவை. அவற்றை நம்முடையதாக பாவிக்கும் போது, அவற்றை நம்மை அறியாமல் வளர்த்து வலுவாக்குகிறோம். அவை வலிமையாகும் போது அதன் விளைவுகளும் வலிமையாக நம்மைத் தாக்குகின்றன. அந்தத் தாக்குதலால் பாதிக்கப்படும் போது நாம் மூன்று உண்மைகளை நினைவில் வைத்தால் அவற்றின் பிடியில் இருந்து விலகி விடுதலையாகலாம்.

1. இந்த உணர்ச்சிகள் என்றுமே என்னுடைய மன அமைதிக்கோ, மகிழ்ச்சிக்கோ வழி வகுப்பதில்லை. மாறாக இவை கவலைக்கும், துக்கத்திற்குமே வழி வகுக்கக் கூடியவை.

2. இந்த உணர்ச்சிகள் தவறான அபிப்பிராயங்களாலும், கணிப்புகளாலும் ஏற்படுபவை. இவை என்னிடம் வர முயற்சிக்கும் உணர்ச்சிகள். ஆனால் இவை என்னுடையவை அல்ல.

3. இவற்றை என்னுடையவை என்று நான் அங்கீகரித்தால் ஒழிய, அப்படி நினைத்து பற்றிக் கொண்டிருந்தால் ஒழிய இவை என்னைப் பாதிக்க முடியாது.

இந்த உணர்ச்சிகளை பான்காய் கூறுவது போல புறத்தில் இருந்து வருபவை என்று உணருங்கள். இதற்கெல்லாம் கோபப்பட வேண்டும், இதையெல்லாம் வெறுக்க வேண்டும், இதற்கெல்லாம் பொறாமைப் பட வேண்டும் என்று நாம் யாரோ போட்ட பாதையில் போக வேண்டியதில்லை. அதை நம் பாதையாக முட்டாள்தனமாய் ஆக்கிக் கொள்ள வேண்டியதில்லை. நாம் அப்படி போய் அவதிப்பட வேண்டியதில்லை.

இது போன்ற உணர்ச்சிகள் வரும் போது எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருங்கள். அவை வரும் போது வாசலிலேயே தடுத்து நிறுத்தி விடுங்கள். உங்களுக்குள்ளே விடாதீர்கள். “எனக்கு இயல்பானவன் போன்ற தோற்றத்தில் வந்தாலும் நீ அன்னியன். என்னுடையவன் அல்ல. எனவே போய் விடு” என்று அனுப்பி விடுங்கள்.

இந்த உணர்ச்சிகளை உங்களுடையது என்று நீங்களாகப் பற்றிக் கொண்டு இருந்தால் மட்டுமே உங்களுக்கு தீய பாதிப்புகள் ஏற்படும். அவற்றை உங்களுடையது அல்ல என்று கை விட்டு விடுங்கள். உதறித் தள்ளி விடுங்கள். அவை உங்களை கஷ்டப்படுத்துவது தானாக முடிந்து விடும்.

Wednesday, April 6, 2011

குழந்தையும் தெய்வமும் ஆனந்தம்


      பேருந்தில் பயணம் செய்கின்றபோது குழந்தைகளை கவனித்திருப்போம். சில குழந்தைகள் வைத்தகண் வாங்காமல் நம்மை அப்படியே பார்த்துக் கொண்டிருப்பார்கள். நம்மைப் பார்த்து அப்படி ஒரு புன்சிரிப்பு பூப்பார்கள். பல சைகைகளைக் காட்டி நம்மை தங்கள் பக்கம் ஈர்த்துக் கொள்வார்கள். இதையெல்லாம் பார்த்து நம்மில் சிலர் அப்படியே உளம் பூரித்துப்போய் அந்தக் குழந்தையின் கன்னத்தைச் செல்லமாய் கிள்ளியிருப்போம். 'என்னிடம் வருகிறாயா' என்று கேட்பதுபோல் குழந்தையைப் பார்த்து பல சைகைகளைக் காட்டியிருப்போம்.

      அந்தக் குழந்தை யாரென்று நமக்கு தெரியாமலிருக்கலாம். எந்த ஊரென்பதும் நாம் அறியாமலிருக்கலாம். ஆனால் அந்தக் குழந்தையால் ஒருவகையான இனம்புரியாத மகிழ்ச்சி நம்மில் உதயமாகிறது. நாம் பல்வேறு சிந்தனைகளோடு அந்த பேருந்தில் ஏறியிருக்கலாம். அவசர அவசரமாக குழப்பத்தோடு எங்காவது கிளம்பியிருக்கலாம்.ஆனால், அவற்றையெல்லாம் அந்த குழந்தையின் புன்னகையும் அழகிய சைகைகளும் அப்படியே மறக்கச் செய்துவிடும்.

      இவ்வாறு குழந்தைகள் இருக்கும் இடமெல்லாம் சொர்க்க பூமியாக மாறிவிடுவதை நாம் அனுபவிக்கிறோம். அது கோவிலாக இருந்தாலும் சரி.. மருத்துவமனையாக இருந்தாலும் சரி.. ஏன் இறப்புச் சடங்கு நடக்கும் வீடாக இருந்தாலும் சரி... குழந்தைகள் அந்த இடங்களை தங்களது மழலை வார்த்தைகளாலும் கள்ளங்கபடற்ற செயல்களாலும் சொர்க்கமாக மாற்றி விடுகிறார்கள். குழந்தைகளின் செல்ல மொழியும் தெய்வீக புன்னகையும் சுட்டித்தனமான செயல்களுங்கூட நம்மை அப்படியே மெய்மறக்க செய்துவிடுகின்றன.

      இதனால்தான் 'குழந்தையும் தெய்வமும் ஒன்று' என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள் போலும்! ஆம். தெய்வம் இருக்கின்ற இடத்தில் ஆனந்தமும் குதூகலமும் இருப்பது இயல்புதானே. அது தானே இறையின் குணம்... குழந்தையின் குணம்....

அனந்தமாக இறப்பதே மேல்


      ஆராய்ச்சிப் பயணம் என்பதன் பொருள் என்ன? நீங்கள் இதுவரை பயணப்படாத இடங்களுக்குச் சென்று அங்குள்ளதை முழுமையாக அறிவதுதான் ஆராய்ச்சிப் பயணம், அது ஒரு கருத்து அல்ல. நீங்கள் வீட்டில் இருந்து கொண்டு, ஆப்பிரிக்கக் கண்டத்தை ஆராய்ச்சி செய்தால், அது வெறும் கற்பனை மட்டுமே. ஆனால் நீங்கள் ஆப்பிரிக்கக் கண்டத்திற்குச் சென்று, அங்கு குறுக்கும் நெடுக்கும் சென்று அனைத்தையும் கண்டறிவது வெறும் கருத்தோ அல்லது கற்பனையோ ஆகாது. இதைத்தான் ஆராய்ச்சிப்பயணம் என்கிறோம்.

      ஒன்றை ஆய்ந்து கண்டறிவதற்கும் அல்லது அதைப்பற்றிய ஒரு கருத்தை மட்டும் உருவாக்கிக் கொள்வதற்கும் இடையில் பெரிய வேறுபாடு இருக்கிறது. ஒன்றைக் கண்டறிவதுதான் நமக்குத் தேவையே தவிர அதைப் பற்றிய வெறும் கருத்து உருவாக்கிக் கொள்வது அல்ல. ஒன்றைப் பற்றிய முடிவுக்கு வந்து விட்டீர்கள் என்பது கருத்து.
    
      வாழ்க்கை பற்றி நீங்கள் ஒரு கருத்துக்கு வந்து விட்டீர்கள் என்றால வாழ்க்கை பற்றிய ஒரு முடிவுக்கு வந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். 10 நிமிடங்களில் நீங்கள் கணக்குப் போடுமளவுக்கு வாழ்க்கை அவ்வளவு சிறியதாக இல்லை. அது உங்கள் கணக்கிற்குள் வருவதாக இருந்தால், இவ்வளவு வருடங்கள் நாம் வாழத் தகுதியானதே இல்லை. வாழ்க்கையை உங்களால் அப்படித் தொகுக்க முடியாது. சிறிது சிறிதாக ஆராய்ந்து அறியத்தான் முடியும். அதைத்தான் உங்களால் செய்ய முடியும். அப்படிச் நீங்கள் வாழ்க்கையை தொகுக்க முனைந்து விட்டால் எதையோ தவற விட்டீர்கள் என்பதுதான் பொருள்.

      அதே போல் வாழ்க்கையில் பாதுகாப்பைத் தேடுவதும் சரியல்ல. வாழ்க்கையில் பாதுகாப்பைத் தேடுவது என்பது வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சிப் பயணத்தில் ஒரு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும். நீங்கள் வாழ்க்கையில் ஏதாவது சிறிய அளவில் சாதித்திருந்தாலும் அதை முக்கியமாகக் கருதுகிறீர்கள். அதை வைத்து அஸ்திவாரம் எழுப்பப் பார்க்கிறீர்கள்.
    
      திரவம் போல இலகுவாக இருப்பதை விடுத்து எதையோ வைத்து அஸ்திவாரம் எழுப்பி ஒரே இடத்திலேயே இருக்க விரும்புகிறீர்கள். வாழ்க்கை இப்படி தேங்கிப் போகும்போது, மிகவும் மோசமான நிலைக்குப் போய்விடுகிறது. அப்போது உங்களுக்கு என்ன நடக்கும் என்றால் நீங்கள் நன்றாகக் கண்ணீர் விட்டுக் கதறவும் மாட்டீர்கள், மனம் விட்டுச் சிரிக்கவும் மாட்டீர்கள். உங்கள் கண்ணீருக்கும் வேலையிருக்காது, மலர்ந்த சிரிப்புக்கும் வேலையிருக்காது. ஒரே இடத்தில் தங்கி விடுவீர்கள்.
    
      மாறாக வாழ்க்கையை முழுமையாக ஆய்ந்து வாழும்போது, ஒன்று மிகவும் உயிரோட்டத்துடன் வாழ்வீர்கள். அது மிகவும் மகத்தானதாகது. அல்லது வீழ்ந்து மடிவீர்கள். அதுவும் சரிதான். ஆனால் இப்போது நீங்கள் உயிர்ப்போடும் இல்லை. இறக்கவும் இல்லை. கடைசியில் உண்மையிலேயே நீங்கள் இறக்க வேண்டிய நேரம் வரும்போது, அந்த கடைசி தருணத்தில்தான், இதுவரை வாழாமலே போய்விட்டோம் என்பதை அறிந்து கொள்வீர்கள். அது மிகவும் துயரமானது. உலகில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் இப்படித்தான் இறக்கிறார்கள்.

மனிதர்கள் 70 - 80 வருடங்கள் வாழ்ந்திருப்பார்கள். ஆனால் இறந்து போகும் நேரத்தில் அவர்களைப் பார்த்தால் வெறும் பயமும், குழப்பமுமாகத்தான் இருப்பார்கள். வாழ்க்கையை வாழ்ந்து பார்க்காமலேயே இறக்கிறோம் என்பதை அந்த கடைசி நேரத்தில் கண்டு கொள்கிறார்கள். வாழ்க்கையின் ஒரு அணுவைக்கூட அறிந்து கொள்ளாமல் அவர்கள் இறந்து போகிறார்கள்.

      எனவே வாழ்க்கைப் பயணத்தில் முழுமையாக இறங்கி ஒவ்வொன்றையும் கண்டறியுங்கள். அப்படி வாழ்ந்து இறக்கும் தருவாயில் ஆனந்தமாக இறந்தால் அது அற்புதமானது. குறைந்தபட்சம் அமைதியாக இறந்தாலும் சரிதான். அல்லது உள்நிலையில் ஆனந்தத்தை அடையும் முயற்ச்சியில் வலியுடன் இறக்கிறீர்கள். அதுவும் நல்லதுதான். ஆனந்தம்தான் ஏற்படவில்லை, அதற்கான முயற்சியில் குறைந்த பட்சம் வலி வந்தாலும் நல்லதுதான். அந்த வலி கூட உங்களுக்கு நிகழாமல் நீங்கள் இறப்பது மிகவும் துயரமானது, இல்லையா?

      இறுதி நேரத்தில், வாழாமலேயே போகிறோமே என்று நீங்கள் குழப்பத்திலும் திகைப்பிலும் இறக்கிறீர்கள் என்றால் அது மிகவும் கொடூரமானது. நீங்கள் ஆனந்தத்துடன் இறந்து போங்கள், அமைதியாக இறந்து போங்கள், அல்லது (ஆனந்தத்தை அடையும் முயற்ச்சியில்) வலியுடனாவது இறந்து போங்கள். ஆனால் நாம் யாருமே திகைப்பிலும், குழப்பத்திலும், ஏக்கத்திலும் இறப்பது சரியானதல்ல‌..............

Sunday, April 3, 2011

இறைதூதர் ஆனந்தம்


      ஜென் குரு ஒருவர் இமயமலையில் இருந்தார். ஒருநாள் அவரைக் காண ஒரு மடாலயத்தின் தலைவர் ஒருவர் வந்திருந்தார்.

      "ஐயா நான் பிரசித்தி பெற்ற மடாலயம் ஒன்றின் தலைவர்" என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் வந்தவர்.

      குரு மௌனம் கலைக்காமல் தலையசைத்தார்

      "தற்பொழுது என் மனம் மிகுந்த குழப்பத்தில் உள்ளது. தெளிவு பெறவே தங்களை நாடி வந்தேன்" என்றார் வந்தவர்.

      "நான் என்ன செய்யவேண்டும்?" என்று பணிவுடன் கேட்டார் குரு.

      "குருவே எங்கள் மடம் மிகவும் புராதனமானது. பழைமையும் கீர்த்தியும் பெற்றது.உலகெங்கிலும் பல நாடுகளிலுமிருந்து ஆர்வமுள்ள பல இளைஞர்கள் வருவார்கள். ஆலயம் முழுவதும் இறைவழிபாட்டு ஒலியால் நிறைந்திருக்கும். ஆனால் சில காலமாக நிலைமை மோசமாக உள்ளது. எங்கள் மடத்தை நாடி யாரும் வருவதில்லை.அங்கு இருப்பதோ சில பிட்ச்சுக்கள் தான். அவர்களும் ஏனோதானோவென்று தங்கள் கடமையைச் செய்கிறார்கள்.இந்த நிலைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இதற்க்கு என்ன பரிகாரம் காண்பதென்று விளங்கவில்லை. நீங்கள் தான் ஒரு உபாயம் சொல்ல வேண்டும்" என்று வேண்டினார் அந்த மடத்தலைவர்.

      அவரது குரலில் தென்பட்ட ஆழ்ந்த வருத்தத்தையும் வேதனையையும் கண்ட குரு மெல்லக் கூறினார்.

      "அறியாமை என்ற வினைதான் காரணம்"

      "அறியாமையா?" என்று வியந்தார் வந்தவர்.

      "ஆம் உங்கள் மத்தியில் ஒரு இறைத்தூதர் உறைகிறார். நீங்கள் அவரை உணரவில்லை. அவரை அறிந்துகொண்டால் போதும் இந்தக் குறைகள் நீங்கிவிடும்" என்று அவருக்கு விடைகொடுத்து அனுப்பினார் குரு.

      குரு சொன்னதை சிந்தித்தபடியே புறப்பட்ட மடத்தலைவர் மடத்திற்கு வந்து அங்குள்ளவர்கள் அனைவரையும் அழைத்து குரு சொன்ன செய்தியை விளக்கிக் கூறினார்.

      இதைக் கேட்ட அனைவருக்கும் அதிர்ச்சியாகவும் குழப்பமாகவும் இருந்தது. அவநம்பிக்கையுடனும் அதே சமயம் பயம் கலந்த சந்தேகத்துடனும் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தனர்.

      இவராயிருக்குமோ? இல்லை அவராயிருக்குமோ? என்று சந்தேகத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தனர். யார் தேவதூதர் என்று கண்டுபிடிக்க தங்களால் முடியாது. அது இங்குள்ள யாராகவும் இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்த அங்கிருந்த ஒவ்வொருவரும் மற்றவரிடம் மரியாதையாக நடக்க ஆரம்பித்தனர். ஒருவேளை இவர் தேவதூதராக இருந்தால்? என்ற கேள்வியோடு.மற்றவர்களை அன்போடு நடத்தினர்.

      இதனால் சில நாட்களிலேயே அந்த மடாலயம் அன்பு, ஆனந்தம்,மகிழ்ச்சி நிரம்பியதாயிற்று. அங்கு வந்தவர்கள் பலரும் அங்குள்ள நிலையைப் பற்றி மற்றவர்களிடம் கூறத்தொடங்கினர். மீண்டும் பல இடங்களில் இருந்து இறைப்பனிபுரிய அங்கு வர ஆரம்பித்தனர்.

      இதனைக் கண்ட பிறகு தான் மடாலத்தின் தலைவருக்கு குரு சொன்னதன் பொருள் புரிந்தது. இறைத்தூதர் வெளியில் இல்லை. நமக்குள் இருக்கிறார். நாம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார். நாம் மற்றவருடன் அன்புடன் ப‌ரிவுடனும் பழகும்போது நாம் இறைத்தூதராகிவிடுகிறோம், ஆனந்தமானவராகி விடுகிறோம்.

      கடவுள் என்பவர் எங்கும் இல்லை. நமக்குள் இருக்கிறார். நாம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார். நம்மைப் போல பிறரையும் நேசித்தால் இறைவனை உணர முடியும். ஆனந்த்மாக வாழலாம்.