Sunday, June 23, 2013

காதல் படுத்தும் பாடு! ஆனந்தம்

      


      பஸ்ஸில் மிக அழகான ஒரு பெண்ணை அடிக்கடி பார்க்கிறேன். அவள் முகம் என் மனதில் அப்படியே ஒட்டிக் கொண்டுவிட்டது. கல்லூரி செமஸ்டர் நேரம் இது. படிப்பதற்காகப் புத்தகங்களைத் திறந்தால், அந்தப் பெண்ணின் முகமே வந்துவந்து என்னைத் தொந்தரவு செய்கிறது. அவள் முகம் தரும் சந்தோஷம் ஒருபுறம், படிக்க முடியவில்லையே என்கிற துக்கம் மறுபுறம்… இரண்டும் சேர்ந்து வறுத்தெடுக்கின்றன. நான் என்ன செய்வது?”

சத்குரு:

      யாரோ ஒருத்தியின் நினைவு உங்களுக்குச் சந்தோஷம் தரமுடியும் என்பதெல்லாம் சுத்தப் பேத்தல். ஒரு பெண்ணைப் பார்த்தீர்கள். அது மகிழ்ச்சியைத் தந்தது. அவ்வளவுதானே? கவனியுங்கள். அந்தப் பெண்ணைப் பற்றி நினைத்ததும் மகிழ்ச்சி எங்கே பிறக்கிறது? உங்களுக்கு வெளியிலா, உள்ளேயா? உள்ளேதானே? தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். ஆனந்தத்தை உங்களால் கொடுக்கவும் முடியாது. வாங்கவும் முடியாது. அதை அனுபவிக்கத்தான் முடியும். அது எப்போதும் உங்களுக்குள்தான் இருக்கிறது. அதைத் தூண்டி உயிர்ப்பிக்கும் சக்தியை வெளியில் யார் கையிலோ ஒப்படைத்துவிட்டீர்கள். அதனால், குரங்காட்டியின் கோலுக்கு ஆடும் குரங்கைப் போல் ஆடுகிறீர்கள்.

      படிப்பு முக்கியமா, காதலி முக்கியமா என்பது இல்லை இங்கே பிரச்சனை. உங்கள் ஆனந்தம்தான் முதல் முக்கியம். சந்தோஷம் என்று நீங்கள் நினைத்தது உங்களுக்கு வேதனையாக மாறிவிட்டபோது, அதைச் சுமப்பதா புத்திசாலித்தனம்?
     
      படிப்பு முக்கியம் என்று தோன்றினால், முழுமையான ஈடுபாட்டுடன் உங்களை அதனுடன் பிணைத்துக் கொள்ளுங்கள். மற்றதெல்லாம் தானாக மறைந்துவிடும். மாறாக, ஒரு குறிப்பிட்ட நினைவை மனதிலிருந்து போராடிப் பிய்த்து எறிவது என்பது நடவாத காரியம். அப்படி முயற்சி செய்ய ஆரம்பித்தீர்கள் என்றால், அதுவே உங்கள் முழுநேர வேலையாக ஆகிவிடும்.
பனிப் பிரதேசத்தில் இருந்த ஒரு சித்தரைத் தேடிப் போனார் சங்கரன்பிள்ளை. “மண்ணைத் தங்கமாக்கும் மந்திரம் உங்களுக்குத் தெரியுமாமே? எனக்கு சொல்லித் தருவீர்களா?” என்று மண்டியிட்டார். சித்தர் சம்மதித்தார். மந்திரங்களை சங்கரன்பிள்ளை காதில் ரகசியமாகச் சொன்னார்.

      சங்கரன்பிள்ளைக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. “இது வெகு சுலபமாக இருக்கிறதே! இந்த மந்திரங்கள் நிச்சயம் வேலை செய்யும்தானே?” “நிச்சயம் இது மண்ணைப் பொன்னாக்கும். ஆனால், ஒரு நிபந்தனை. மந்திரங்களை உச்சரிக்கும்போது, குரங்குகளைப் பற்றி நீ நினைக்கக்கூடாது” என்றார் சித்தர்.

      சங்கரன்பிள்ளை சிரித்தார். “போயும் போயும் குரங்குகளை நான் ஏன் நினைக்கப் போகிறேன்?”

      ஆனால், சங்கரன்பிள்ளை மந்திரங்களைச் சொல்லக் கண்களை மூடினால் போதும், குரங்குகளைப் பற்றி நினைக்கவே கூடாது என்ற நினைப்பே அவர் நினைவு பூராவும் ஆக்கிரமித்தது. இருபத்து நான்கு மணி நேரமும் சிந்தனையில் குரங்குகள் நிரம்பி வழிந்தன.

      இரண்டு நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல், சித்தர் காலில் போய் விழுந்தார் சங்கரன்பிள்ளை. “பொன்னே எனக்கு வேண்டாம். என்னைச் சுற்றிக் கும்மாளமிடும் குரங்குகளிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள். அது போதும்!” என்று கதறினார்.

      மனித மனம் அப்படித்தான். எதையாவது தவிர்க்க நினைத்தீர்கள் என்றால், அதையேதான் வட்டமிடும். உங்கள் மனதை உங்கள் வசப்படுத்திக் கொள்ளும் தந்திரத்தை நீங்கள் தெரிந்து கொள்ளும் வரை, எதை நிராகரிக்கப் பார்க்கிறீர்களோ, அதுதான் உங்கள் மனதில் நிரம்பி வழிந்து ஆக்கிரமிக்கும்.

      உங்களுக்கு என்ன நடக்கிறது என்கிற விழிப்புணர்வு இல்லாமல், உங்கள் வாழ்க்கையைக் கடைசி வரை செலுத்தப் போகிறீர்களா?

      இன்றைக்கு ஒரு வேலை செய்யுங்கள். கண்களை இறுக மூடிக் கொண்டு, போக்குவரத்தில் வண்டியை ஓட்டிப் பாருங்களேன். அதிர்ஷ்டம் இருந்தால், அங்கே இங்கே சிலரை இடித்துத் தள்ளிவிட்டு, இந்த முறை வீட்டுக்குக்கூட போய்ச் சேரலாம். ஆனால், ஒவ்வொரு முறையும் அந்த அதிர்ஷ்டம் உங்களுக்குத் துணையிருக்குமா? சீக்கிரமே உங்களை அள்ளிப்போக ஆம்புலன்ஸ் வந்து சேரும்.

      சங்கரன் பிள்ளை டாக்டரைத் தேடிப் போனார்.
“டாக்டர், என் காதுகளைப் பாருங்கள்!”
“ஐயையோ! இந்தளவுக்கு எப்படித் தீய்ந்து போனது?” என்று டாக்டர் பதறினார்.

“நான் சட்டைக்கு இஸ்திரி போட்டுக் கொண்டு இருந்தேன். அந்த நேரம் பார்த்து என் மனைவியிடமிருந்து போன் வந்தது. குழப்பத்தில் போன் என்று நினைத்து கொதிக்கும் இஸ்திரிப் பெட்டியை எடுத்துக் காதில் வைத்துக் கொண்டுவிட்டேன்…!”

“அடக் கடவுளே… சரி, இடக்காது எப்படித் தீய்ந்தது?”
சங்கரள்பிள்ளை பற்களை நறநறத்தார்.
“அந்த ராட்சஸி மறுபடியும் போன் செய்து தொலைத்தாளே!”

      நீங்கள் கவனத்துடன் நடந்து கொள்வதோ, சங்கரன்பிள்ளை போல் நடந்து கொள்வதோ யார் கையில் இருக்கிறது? உங்கள் கையில்தானே?

      ஆனந்தமோ, துக்கமோ.. கவனமின்றி நீங்கள் அதன் திரியை வெளியே வைத்திருக்கும்வரை, அதை வெளியிலிருந்து ஒருவர் சுலபமாகப் பற்ற வைக்க முடியும். உங்களை அலைக்கழிக்கக் கூடிய ஸ்டார்ட் பட்டனை ஏன் வேறு யார் கையிலோ கொடுத்துவிட்டு அவதிப்படுகிறீர்கள்?

      உங்கள் அடிப்படைப் பிரச்சனை என்ன தெரியுமா? நீங்கள் இங்கே இருக்கும்போது, அங்கே இருக்க விரும்புகிறீர்கள். அங்கே இருக்கும்போது, இங்கே இருக்க விரும்புகிறீர்கள்.

      நீங்கள் எங்கே இருக்க வேண்டுமோ, அங்கே இல்லையென்றால், உங்கள் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். முழுமையான ஈடுபாட்டுடன் இப்போது செய்ய வேண்டியதைச் செய்யுங்கள். தேவையற்றது தானாக விலகிப் போகிறதா இல்லையா, பாருங்கள்.

      படிப்பு முக்கியமா, காதலி முக்கியமா என்பது இல்லை இங்கே பிரச்சனை. உங்கள் ஆனந்தம்தான் முதல் முக்கியம். சந்தோஷம் என்று நீங்கள் நினைத்தது உங்களுக்கு வேதனையாக மாறிவிட்டபோது, அதைச் சுமப்பதா புத்திசாலித்தனம்?

     எது ஆனந்தமோ, அதை எப்போதும் செய்யுங்கள். தப்பே இல்லை.

      ஆனால், அப்படி எதைச் சந்தோஷமாகச் செய்தாலும், அதன் பின்விளைவுகளையும் அதே சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள்!
                         வாழ்க வளமுடன்!

Monday, June 17, 2013

அமாவாசை, பௌர்ணமியின் மகத்துவம் என்ன? ஆனந்தம்




மற்ற நாட்களைவிட அமாவாசை, பௌர்ணமி நாட்களுக்கு மட்டும் ஏன் இத்தனை மகத்துவம்?

      அமாவாசை, பௌர்ணமி நாட்களில் எல்லாவற்றையும் மேல் நோக்கி இழுக்கும் சந்திரனின் ஈர்ப்பு சக்தியானது பூமியின்மீது கூடுதலாக இருக்கும். மனநிலையில் சமநிலையற்றவர்கள் இந்தச் சக்தியைச் சமாளிக்க முடியாமல் அதிகப்படியாகத் தடுமாறுவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.

      மகிழ்ச்சியாக இருப்பவர்கள் மேலும் மகிழ்ச்சி அடைகிறார்கள். துக்கமாக இருப்பவர்கள் கூடுதலாக வேதனை கொள்கிறார்கள். அமைதியாக இருப்பவர்கள் மேலும் அமைதியாகிறார்கள்.

      இந்த ஈர்ப்பு சக்தியால் கடல் பொங்கி மேலே எழுவதைக் கண்கூடாகக் காணலாம். உங்கள் உடலில் உள்ள ரத்தம்கூட மேல்நோக்கிச் சுண்டி இழுக்கப்படுகிறது.

      தங்கள் சக்தியை மேல்நோக்கிச் செலுத்தப் பலவித முயற்சிகளில் ஈடுபடும் சாதகர்களுக்கு இந்த இரண்டு நாட்களும் இயற்கை அருளும் வரப்பிரசாதம்!

கோபப்படுங்கள் ஆனந்தம்



      காற்றுக்குமிழி ஊதி விளையாடியிருக்கிறீர்களா? அந்தக் குமிழிக்கு உள்ளே இருப்பதும் கார்றுதான், வெளியே இருப்பதும் காற்றுதான். ஆனாலும் அந்த குமிழிக்கென்று ஒரு தனித்தன்மை உண்டு. 
      அதே போல் மனிதனுக்கு உள்ளே என்ன இருக்கிறதோ அதேதான் மனிதனுக்கு வெளியேயும் இருக்கிறது. ஆனாலும் இடையில் ஒரு தந்திரமான ஒரு தடுப்பு வேலி இருக்கிறது. அது எவ்வளவு தந்தைரமானது என்பதை உங்களால் உணரமுடியாது. எப்படிப் பார்த்தாலும் அப்படி ஒருவேலி இல்லாதது போல் தான் தோன்றும். ஆனாலும் வேலி இருக்கிறது. அதுவும் ஒவ்வொரு மனிதரிலும் ஒவ்வொரு வகையான வேலி இருக்கிறது. இந்த வேலியை உடைத்துக்கரைவது தான் ஆன்மீகம். 
      அதைச் செய்ய பல விளையாட்டுக்கள் இருக்கின்றன. ஆனால் எந்த விளையாட்டு விளையாடினாலும் அதை முழுமையாக விளையாட வேண்டும். அரை மனதுடன் விளையாடுவது தான் உங்கள் பிரச்சனை. ஒரு ஆட்டத்தையாவது நூறு சதவிகிதம் முழுமையாக ஆடினால், ஒரு வினாடியில் உங்கள் இருப்பின் கட்டுப்பாடுகளைக் கடந்து, அந்த இடத்தில் இருக்கமுடியும். மிக விரைவில் நினைத்த இடத்தை சென்றடைவீர்கள். " 
      உங்களுக்கு தியானம் தெரியவில்லையா? கவலைப்படாதீர்கள், உங்களுக்கு அமைதி தெரியவில்லையா? கவலைப்படாதீர்கள், உங்களால் அன்பு செலுத்த முடியவில்லையா? தெரியவில்லையா கவலைப்படாதீர்கள், ஆனால் கோபப்படமுடிகிறதா? சரி வெறுமனே கோபப்படுங்கள். தொடர்ந்து 24மணி நேரமும் மிகத்தீவிரமான் கோபத்துடன் இருங்கள். இப்படி இருந்தால் நீங்கள் ஞானம் பெற்று விடுவீர்கள். நீங்கள் செய்ய வேன்டியது இதுதான் நீங்கள் எதைச் செய்கிறீர்களோ, அதில் முழுமையாக 100 சதவிகித தீவிரத்துடன் இருங்கள்! போதும், அதுவே உங்களை ஞானத்திற்க்கு அழைத்துச்செல்லும்.
      வாழ்க வளமுடன்!

Wednesday, June 5, 2013

அலற வைக்கும் அலைபேசி? ஆனந்தம்




      கத்தியைக் கொண்டு பழங்களையும் நறுக்க முடியும், விரலையும் வெட்டிக்கொள்ள முடியும். எந்த ஒரு கருவியானாலும் நமக்குப் பயன்படும்படி செய்துகொள்வதும் அல்லது நம் அழிவிற்கு வழிவகுக்கும்படி செய்துகொள்வதும் நம் கையில்தான் உள்ளது. இப்போது, செல்ஃபோனுடைய கூர் முனைகள் நம்மைப் பதம்பார்க்கத் துவங்கியுள்ள நிலையில், அபாயச் சங்காக இந்தக் கட்டுரை…

      இன்று வண்டு, சிண்டு, நண்டுகளின் கைகளில் தவழுகின்ற இந்த செல்போன்கள், கடந்த 20 வருடங்களில் மனிதனின் குறைந்தபட்ச தேவையை, “உணவு, உறைவிடம், உள்ளங்கை செல்போன்,” என மாற்றிவிட்டன.

   செல்போன்களின் ரிஷிமூலம்

      இரண்டாம் உலகப் போரில் இராணுவத் தகவல் தொடர்புக்காக ரேடியோ அலைவரிசையின் மூலம் இயங்கக்கூடிய சாதனங்கள் உருவாக்கப்பட்டன. இதன் மூலம், 2 முதல் 4 வார்த்தைகள் மட்டுமே ஒரு நேரத்தில் பரிமாறிக் கொள்ள முடியும். இவை நவீன செல்போன்களின் ‘பாட்டன்கள்’ எனலாம்.
குழந்தைகளின் (குறிப்பாக 12 வயதுக்கு கீழ்) மண்டை ஓடு முழுவதும் வளர்ச்சியடையாத நிலையில், கதிர்வீச்சு மூளையில் ஊடுருவ வாய்ப்பு அதிகமாதலால், அவர்களை செல்போன் உபயோகிக்க ஊக்கப்படுத்தக் கூடாது. இது கர்ப்பிணி பெண்களுக்கும் பொருந்தும்.

      பின்பு 1973ல், பொறியாளர் மார்டின் கூப்பர், ஒரு செங்கல் அளவிலான செல்போன் மூலம் விஞ்ஞானி ஜோயலிடம் பேசிய முதல் உரையாடல் வரலாறு. ஆனால் 40 வருடங்களில் தன் கண்டுபிடிப்பு சிலிம் மாடல், ஃப்ளிப் மாடல், ஆண்ட்ராய்டு, டாப்லட் என உலகையே சட்டைப் பாக்கெட்டில் கட்டிப் போட்டுவிடும் என்பதைச் சத்தியமாய் நம்பியிருக்க மாட்டார் கூப்பர்.
தகவல் தொழில்நுட்பப் புரட்சி ஒரு சாமான்யனின் பார்வையில்…

      என் தந்தையின் பால்யத்தில், ஒரு ஊரிலிருந்து இருபதே மைல் என‌ இருந்தாலும் மற்றவர்களிடம் தன் வீட்டிலிருந்தே பேச முடியும் என்ற கனவை எழுபது, எண்பதுகளில் பரவலாக்கப்பட்ட தொலைபேசிகள் (லேன்ட் லைன்) நனவாக்கின. என் பால்ய பருவத்திலோ, ஒரு தொலைபேசியை வயர் இணைப்பின்றி போகும் இடமெல்லாம் கொண்டு சென்று நினைத்த நபருடன், நினைத்த நேரத்தில் பேச முடியும் என்று நான் கற்பனைக் கூட செய்து பார்க்காத ஒரு புரட்சியை கடந்த 15 ஆண்டுகளில் செல்போன்கள் நம் சமூகத்தில் நிகழ்த்தி விட்டன.

   கொஞ்சம் ஓவராத்தான் பேசுறோமோ?!

      குறிப்பாக இந்தியாவில் தேவையை மீறி அவற்றின் பயன்பாடு கட்டுப்பாடு இழக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது. சமீபத்திய கணக்கெடுப்பு கூறும் தகவல்… உலகில் 500 கோடி பேருக்கு செல்போன் இணைப்பு உள்ளது (உலக மக்கள் தொகை 750 கோடி). அதில் 60 கோடி இணைப்புகள் இந்தியாவிலாம்!

      இதன்மூலம் நாம் குறைந்தபட்சம் புரிந்து கொள்ள வேண்டியது, இன்றைய மனித சமூகம் 20 வருடங்களுக்கு முன்பைவிட 500 கோடி மடங்கு அதிக கதிர்வீச்சை உள்வாங்குகிறோம் என்பதையே!

      காணாமல் போன குருவி, பட்டாம்பூச்சி இனங்களுக்கு செல்போன் கதிர்வீச்சு தான் காரணம் என இனங்கண்டுள்ளோம்.

      சமீப காலமாய் குண்டூசி விற்பவர் கூட இடது காதுக்கு ஒன்று, வலது காதுக்கு மற்றொரு போன் என பரபரவென இயங்கும் காட்சிகளைக் கண்டால், “நான் ரொம்ப பிஸி!” என வசனம் பேசும் கவுண்டமணியாரின் கதாபாத்திரம்தான் நினைவில் வருகிறது.

      மேலும் குறிப்பாக இளைஞர், இளைஞிகள் மத்தியில் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதில் ஆதாயம் தேடும் செல்போன் நிறுவனங்களோ, ‘கூல் கப்பிள் ஆபர்,’ ‘சூப்பர் ஜோடி ப்ளான்,’ என பல ப்ளான்களைப் போடுவதும், 2ஜி, 3ஜி என லட்சம் கோடிகளில் கல்லா கட்டுவதும் நாடறிந்த ஒன்றே! இந்தப் போக்கினால் தனிமனித அளவிலும், சமூக அளவில் ஏற்படும் எதிர்வினைகள் நாம் ரசிக்கும்படியாக இல்லை.

   அதிகப் பேச்சு, அதிக ஆபத்து

      “வரங்களைக் கூட சாபங்களாய் மாற்றும் திறன் மனிதனுக்கு உண்டு,” என்பதை நமது வரைமுறையற்ற செல்போன் பேச்சும், அதன் பரிசாய் நாம் பெறும் கதிர்வீச்சும் மௌன சாட்சி!

      லட்சம் கோடிகளில் புரளும் வணிகம் என்பதாலோ என்னவோ அதிக கதிர்வீச்சினால் ஏற்படும் உடல், மனநலக் கேடுகளை அறிவியல் உலகம் இன்று வரை அதிகம் பேசமாட்டேன் என்கிறது. ஐ.நா வின் உலக சுகாதார அமைப்பு, செல்போன் கதிர்வீச்சு ‘கேன்சரை உண்டாக்கலாம்’ எனப் பட்டும் படாமல் தன் முடிவை அறிவிக்கிறது. இதை மீறியும் உலக அளவில் மக்கள் நலனில் அக்கறைக் கொண்ட விஞ்ஞானிகள் அபாய சங்கை ஊதிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

   அதீத கதிர்வீச்சுக்கு உட்படுவோருக்கு ஏற்படும் பாதிப்புகளில் அவர்கள் குறிப்பிடுபவை:

      கவனக்குறைவு, மனச்சோர்வு, மறதி (திருமண நாளை மறப்பது, தொடங்கி, செல்ஃபோனில் பேசிக் கொண்டே வண்டி ஓட்டி, அல்பாயிசில் முடிவது வரை)
      படபடப்பு, ஆழ்ந்த தூக்கமின்மை, மன உளைச்சல் (தூங்கும்போது கூட ரிங்டோன் அடிக்கிற மாதிரியே ஒரு ஃபீலிங்க்!!!)
      ஹார்மோன் சமநிலையில் பாதிப்பு, ஒற்றைத் தலைவலி
      மூளைப் புற்றுநோய்கள்
      செல்போனும் மூளைப் புற்றுநோயும் அதிகம் விவாதிக்கப்படும் பொருளாக இருந்தாலும் கூட, அதற்கு முன்னர் நாம் மேலே கூறிய மனப்பிறழ்வுகளால் இளைய தலைமுறையும் குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அது ஆபத்துதான்.

   கதிர்வீச்சைக் குறைக்கும் வழிகள்:

      மிகவும் தேவையெனில் மட்டும் உபயோகிப்பதும் பேசும் கால்களின் (calls) நேரத்தைக் குறைப்பதும் நலம். முடிந்த அளவு SMS மூலம் மட்டும் தொடர்பு கொள்வது நலம்.

      பொதுவாக செல்போனை உடலுக்கு அருகில் (காதோடு) வைத்து பயன்படுத்தும்போது கதிர்வீச்சு அபாயம் பல மடங்காகிறது. ஆகையால் காதில் பொருத்திக் கொள்ளும் சாதனத்துடன் செல்போனை உடலில் இருந்து தூரத்தில் வைத்து உபயோகித்தல் நலம்.

      சிக்னல் வலுவான இடங்களில் மட்டும் உபயோகிப்பது நலம். இது செல்போன் வெளியேற்றும் கதிர்வீச்சினைக் குறைக்கிறது.
குழந்தைகளின் (குறிப்பாக 12 வயதுக்கு கீழ்) மண்டை ஓடு முழுவதும் வளர்ச்சியடையாத நிலையில், கதிர்வீச்சு மூளையில் ஊடுருவ வாய்ப்பு அதிகமாதலால், அவர்களை செல்போன் உபயோகிக்க ஊக்கப்படுத்தக் கூடாது. இது கர்ப்பிணி பெண்களுக்கும் பொருந்தும்.

      கதிர்வீச்சை உள்வாங்கும் தன்மை (SAR – Specific Absorption Rate) குறைவாக உள்ள போன்களை கேட்டறிந்து வாங்கி உபயோகிக்கலாம்.
ஏன்? முடிந்தால், செல்போனே பயன்படுத்தாமல் கூட வாழமுடியும் என்றால் நல்லதுதானே? 15 வருடங்களுக்கு முன்பும் செல்போனின்றி நாம் வாழ்ந்தோம் தானே?

      உர மருந்துகள், ப்ளாஸ்டிக், அணு அறிவியல் முதலிய அனைத்தும் உருவாக்கப்பட்ட போது கொண்டாடப்பட்டவைதான்! அவற்றை அன்றே அதன் தறிகெட்ட பயன்பாட்டால் ஏற்படும் பின்விளைவுகளை எச்சரித்தவர்களும் இருந்திருப்பார்கள். அவை 50, 60 வருடங்களுக்குப் பிறகுதான், பெரும்பான்மையினரின் புத்திக்கு உரைக்கத் தொடங்கியிருக்கிறது! இதே தவறை நாம் செல்போன் விஷயத்திலும் செய்ய வேண்டாமே!

அளவாய் பேசி அழகாய் வாழலாமே! வாழ்க வளமுடன்!