Thursday, May 30, 2013

ஆதியோகியின் கதை! ஆனந்தம்




      பண்டைய காலத்தில், இந்தியா தனியொரு நாடாக இருக்கவில்லை. இங்கிருந்த மக்கள் ஒரேயொரு மதத்தையோ, இனத்தையோ அல்லது மொழியையோ மட்டும் கொண்டவர்களாக இருந்திருக்கவில்லை. இருப்பினும் அந்த மாநிலம் முழுவதும் வாழ்ந்த மனிதர்கள் தங்களுக்குள் கொண்டிருந்த, பொதுவான ஆன்மீக நற்பண்பின் காரணமாக, ஒரு நல்லிணக்கம் நிலவியது. இந்த அடிப்படையான ஆன்மீக உணர்வு எந்த அளவுக்கு இருந்தது என்றால், இங்கே வாழ்ந்த ஒவ்வொருவருக்கும் அவர் பாமரனாயிருந்தாலும் சரி, பார்வேந்தனாக இருந்தாலும் சரி, அவர்கள் வாழ்வின் உச்சபட்ச இலக்கு “முக்தி” என்பதாகவே இருந்தது. இந்நிலை, இந்த தேசத்தில் நிகழ்ந்துள்ள ஈடிணையற்ற, பிரமிக்கத்தக்க ஆன்மீகப்பணியின் விளைவாகவே உருவானது. இதற்கெல்லாம் முழுமுதல் காரணமாய் அமைந்தவர் ஒருவர் – மனித குலத்தின் உள்நிலை, வளம்பட செதுக்கப்பட்டதற்கு இன்றியமையாதவர் ஒருவர் – அவர்தான் ஷிவா.

      பின்வரும் கதையில் சத்குரு அவர்கள் ஆதியோகி – முதலாம் யோகியாம் ஷிவாவை பற்றியும், அவர் சப்தரிஷிகளுக்கு யோக அறிவியலை பரிமாறிய விதத்தையும் கூறுகிறார்… 

சத்குரு:

      யோகக் கலாச்சாரத்தில் ஷிவா என்பவர் கடவுளாக அறியப்படுவதில்லை. மாறாக ஆதியோகியாக, யோகத்தை பிறப்பித்தவராக அறியப்படுகிறார். மனித மனத்தினுள் முதன்முதலாக இந்த விதையை விதைத்தவர் அவர்தான். யோக மரபின்படி 15,000 ஆண்டுகளுக்கும் முன்பாக ஷிவா பூரண ஞானமடைந்து, மிகத் தீவிரமான பரவச நிலையில், இமயமலையிலே பேரானந்த தாண்டவத்தில் மூழ்கிப் போனார். அவரின் பரவசம் எப்பொழுதெல்லாம் அவர் அசைந்திடும்படி அனுமதித்ததோ, அப்பொழுதெல்லாம் அவர் கட்டுக்கடங்காத தாண்டவ ரூபமாக வெளிப்பட்டார். அந்த பரவசம் மிகுந்து அசைவையும் தாண்டியபோது, அசைவற்ற நிஷ்சல ரூபமாக வெளிப்பட்டார்.

      இதைக் கண்டவர்கள், அதுவரை எவருமே உணர்ந்திராத ஏதோ ஒன்றை, தங்கள் அறிவுக்கு புலப்படாத ஏதோ ஒன்றை, இவர் அனுபவித்து கொண்டிருக்கிறார் என்று புரிந்து கொண்டார்கள். ஆர்வம் இப்படியே வளர வளர இது என்னவென்று உணர்ந்திட விரும்பினார்கள்; வந்தார்கள், காத்திருந்தார்கள், கிளம்பிச் சென்றார்கள். ஏனென்றால், இந்த மனிதர் தன்னைச் சுற்றி பலர் இருப்பதை துளியும் கவனிக்கவில்லை. ஒன்று தீவிரத் தாண்டவம், அல்லது முற்றிலும் அசைவற்ற நிலை, இப்படியே இருக்கிறார். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது பற்றிய அக்கறை துளிக்கூட இல்லாதவராக வாழ்கிறாரே என்று விரைவிலேயே பலர் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். ஏழு பேரைத் தவிர!

      இவர்கள் ஏழு பேரும் அந்த மனிதனுக்குள் பொதிந்துள்ள பொக்கிஷத்தை எப்படியாவது தாங்களும் கற்றிட வேண்டும் என்று விடாப்பிடியாக தங்கி இருந்தனர். ஆனால் ஷிவா, அவர்களை முழுமையாக புறக்கணித்தார். அவர்கள் கெஞ்சினார்கள். “தயவு செய்து அருளுங்கள்! நீங்கள் உணர்ந்திருப்பதை நாங்களும் உணர விரும்புகிறோம்!,” என்று மன்றாடினார்கள். ஷிவாவோ, “மூடர்களே! நீங்கள் இப்போது இருக்கும் தன்மையில், கோடி வருடங்கள் ஆனாலும் இதை உணர மாட்டீர்கள், இதற்கு மாபெரும் அளவில் உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இது ஒன்றும் கேளிக்கை கிடையாது” என்று நிராகரித்தார்.

      ஆகவே அவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார்கள். நாட்கள் வாரங்களாயின, வாரங்கள் மாதங்களாகி, வருடங்களாயின. அவர்கள் தயாராகிக் கொண்டிருந்தார்கள். ஷிவாவோ அவர்களை பொருட்படுத்தவே இல்லை. இப்படியே 84 வருடங்கள் சென்றுவிட்டது. ஒரு நாள், பௌர்ணமியன்று சூரியனின் ‘கதிர் திருப்பம்’ உத்தராயணத்திலிருந்து தக்ஷிணாயணத்திற்கு மாறிய பின்பு, ஆதியோகி இந்த ஏழு பேரின் மீது தன் அருட்பார்வையை செலுத்தினார். அவர்கள், ஞானத்தை ஏந்திக்கொள்ள தகுதியுடைய கலங்களாக, அருட்களஞ்சியத்தை உள்வாங்க முற்றிலும் பழுத்தவர்களாக, மிளிறுவதை கவனித்தார். அவரால், அவர்களை அதற்கு மேலும் புறக்கணிக்க இயலவில்லை. அவர்கள் அவரது கவனத்தை ஈர்த்துவிட்டார்கள்.

ஆதியோகியின் பார்வை அந்த 7 பேரின் மீது பட்டது.

      ‘அடுத்த சில நாட்களுக்கு அவர்களை கூர்ந்து நெருக்கமாக கவனித்தபடியே இருந்தார். அடுத்த பௌர்ணமி அன்று, அவர்களுக்கு மன இருளை அகற்றி, குருவாய் அருள்புரிய முடிவு செய்தார். ஆதியோகியாக இருந்தவர், தன்னை ஆதிகுருவாக்கி அருளினார். அந்த முழுமுதற் குரு தோன்றிய தினத்தைத்தான், இன்று குருபௌர்ணமியாகக் கொண்டாடுகிறோம்.
ஒருவர் நம் மனித இனத்திற்கு என்றே வரையறுக்கப்பட்டுள்ள கட்டுக்களில் அடைபட்டே கிடக்கவேண்டிய கட்டாயம் இல்லை. அதற்கு அப்பால் கடந்து செல்லவும் முடியும்” என்ற வாய்ப்பை, சாத்தியத்தை முதன்முதலாக உருவக்கியது ஆதியோகியே!
      காந்திசரோவர் என்ற ஏரிக் கரையிலே, ஆதிகுரு தென்திசை நோக்கி அமர்ந்து, மனிதகுலத்தின் மேல் தன் பேரருளைப் பொழிந்தார். கேதார்நாத் திருத்தலத்திற்கு மேலே, சில கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்த நீர்பரப்பின் கரையில்தான், அந்த ஏழு மாமனிதர்களுக்கு ஆதிகுரு முதன்முதலாக, யோக விஞ்ஞானத்தினைப் பரிமாறினார்.
இந்த யோக விஞ்ஞானம் என்பது, நீங்கள் செல்லும் யோகா வகுப்பு போல வெறுமனே உங்கள் உடலை வளைப்பது பற்றியது கிடையாது. அல்லது உங்கள் மூச்சை பிடித்து வைப்பது பற்றியது கிடையாது. பிறந்த குழந்தைக்கும் பிறக்காத குழந்தைக்கும் கூட அந்த விஞ்ஞானம் தெரியும். அது ஒரு மனிதனுடைய அமைப்பு முழுவதும் எப்படியெல்லாம் இயங்குகிறது என்ற நுணுக்கங்களை உணர்ந்திடும் விஞ்ஞானம்.

      இந்த யோக விஞ்ஞானத்தை அந்த ஏழ்வருக்கும் ஆதிகுரு பரிமாறிய செயல், பல ஆண்டுகளுக்குப் பின் முழுமைப்பெற்றது. இதன்மூலம் ஏழு பூரண ஞானமடைந்த மாமனிதர்கள் உருவாகினர். அவர்களைத்தான் சப்தரிஷிகள் என்று நாம் இன்று போற்றிக் கொண்டாடுகிறோம். இந்திய பண்பாட்டில் வணங்கி வழிபடுகிறோம்.

      ஷிவா இந்த ஏழு பேர்களில், ஒவ்வொருவருக்குள்ளும் யோகத்தின் வெவ்வேறு அம்சங்களை உள்ளடக்கினார். இந்த அம்சங்களே யோகத்தின் ஏழு அடிப்படையான அம்சங்களாயின. யோகத்தில் இந்த ஏழு தனிப்பட்ட வடிவங்கள் காத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. இன்றும் பொலிவுடன் விளங்குகின்றன.

      ஒரு மனிதன் தன்னுடைய எல்லைகளாகிய கட்டுப்பாடுகளையும், கட்டாயங்களையும் தாண்டி, பரிணாம வளர்ச்சியில் உயர்ந்திட செய்யும் அம்சங்கள்தான் யோகவிஞ்ஞானம். இந்த அற்புத யோக விஞ்ஞானத்தில் முழுமைபெற்ற சப்தரிஷிகள் ஏழு பேரும், உலகின் எல்லா பாகங்களுக்கும் வெவ்வேறு திசையில் அனுப்பப்பட்டனர். அவர்கள் ஷிவாவுடைய அங்கங்களாயினர். உலகில் ஒவ்வொரு மனிதனும், படைப்பின் மூலமாகவே வாழ்ந்திடச் செய்யும்படியான தொழில்நுட்பத்தையும் ஞானத்தையும் வழங்கிடும் கரங்களாயினர்.

      காலச் சக்கரத்தின் சுழற்சிகளில், உலகின் பல பாகங்களிலும் இவை குலைந்து போயிருந்தாலும், அந்தந்த பகுதிகளின் நாகரீகம், கலாச்சாரம் இவற்றை சற்று கூர்ந்து கவனித்தால், இன்னமும் கூட இந்த ஏழு மாமனிதர்களின் மகத்தான பணி ஆங்காங்கே இழைந்தோடுவதை கவனிக்க முடியும். இன்னமும் உயிரோட்டமாயிருப்பதை பார்க்க முடியும். அவர்கள் பரிமாறியவை காலப்போக்கில் பல வண்ணங்களில் பல்வேறு வடிவங்களில் மாறியிருந்தாலும், அதன் அடிப்படையான சாரம் இன்னமும் அப்படியே காணப்படுகிறது.

      “ஒருவர் நம் மனித இனத்திற்கு என்றே வரையறுக்கப்பட்டுள்ள கட்டுக்களில் அடைபட்டே கிடக்கவேண்டிய கட்டாயம் இல்லை. அதற்கு அப்பால் கடந்து செல்லவும் முடியும்” என்ற வாய்ப்பை, சாத்தியத்தை முதன்முதலாக உருவக்கியது ஆதியோகியே!

      இந்த உடலுக்குள் அடங்கி இருக்கலாம், ஆனால் உடலுக்கே உரித்தாக வேண்டியதில்லை. உடலில் வசித்திடலாம், ஆனால் உடலாகவே ஆகிவிடாமல் இருக்கலாம். இதற்கொரு வழி உண்டு;

      இந்த மனத்தை உச்சபட்ச திறனுக்கு பயன்படுத்திடலாம், அதேசமயம் மனத்தின் துயர்கள் துளியும் இல்லாதபடி வாழ்ந்திடலாம். இதற்கொரு வழி உண்டு;

      இப்போது நீங்கள் இருப்பின் எந்த பரிமாணத்தில் உள்ளீர்கள் என்றாலும் சரி, அதை கடந்த போக முடியும். வேறுவிதமாக வாழ்ந்திட வழியுள்ளது. ஆதியோகி இதைத்தான் சொன்னார், “நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ளத் தயாராக இருந்தால், அதற்கு செய்ய வேண்டியதை உங்களுக்கு நீங்களே செய்து கொண்டால், நீங்கள் இப்போது கட்டுண்டு இருக்கும் எல்லைகளை கடந்து, பரிமாண வளர்ச்சியில் மேலெழுந்திட முடியும்” – இன்றியமையாதவர் அல்லவா ஆதியோகி.

Wednesday, May 29, 2013

இருளைக் கண்டு ஏன் பயம்? ஆனந்தம்








      மாயாஜாலக் கதைகளும், அம்புலி மாமா கதைகளும் நமக்கு சகஜம். ஆனால் கேட்பதற்கு அம்புலி மாமா கதைப்போல் தோன்றினாலும், சத்குருவுக்கு தன் சிறு வயதில் ஏற்பட்ட சில விஷயங்களை நம்மால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை, இது சாத்தியம்தானா எனப் புரியவில்லை. படித்துவிட்டு கமென்டில் சொல்லுங்களேன்…



சத்குரு:

      என் தாத்தா வீட்டில் ஒரு மாட்டுக் கொட்டகை இருந்தது. அங்கே இரண்டு மாடுகள் கட்டப்பட்டு இருக்கும். இருட்டில் பார்த்தால், மாடுகளின் கண்கள் மட்டும் பெரிய கோலிக் குண்டுகளாகத் தெரியும். இரவுகளில் அதைக் காட்டி, ‘கும்மா வந்திரும்’ என்று சொல்லி, என் அத்தைகள், மாமிகள் எல்லோரும் குழந்தைகளைப் பயமுறுத்திச் சாதம் ஊட்டுவார்கள்.

      அதே மாட்டுக் கொட்டகையைக் காட்டி, சாதம் ஊட்டுவதற்காக என்னையும் பயமுறுத்த முனைந்தார்கள். ‘அது கும்மா இல்லை… பசுமாடு’ என்று சொல்லித் சிரித்தேன். அவர்கள் வாயடைத்துப் போனார்கள். அதுபற்றிப் பல நாட்கள் ஆச்சர்யப்பட்டுப் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

      இருள் என்றால் ஒன்றுமில்லை என்றுதானே அர்த்தம்! ஏதோ இருந்தால்கூட அது உங்களை ஏதாவது செய்யலாம். எதுவுமே இல்லாத ஒன்று உங்களை என்ன செய்துவிட முடியும்?
எனக்கு ஏன் இருளைப் பார்த்து பயம் வரவில்லை? எளிமையான காரணம்தான். மற்றவர்களுக்கு இருட்டில் மாட்டின் கண்கள் மட்டும் புலப்பட, எனக்கோ மொத்த மாடும் தெரிந்தது. அன்றைக்கே, இருளில் மற்றவர்களைவிடத் தெளிவாக என்னால் பார்க்க முடிந்தது. இருள் எனக்கு ஒருபோதும் பிரச்சனையாக இருந்ததில்லை.

      எத்தனையோ முறை வனங்களில் சுற்றித் திரிந்திருக்கிறேன். 11 வயதில் ஒருமுறை மூன்று நாட்கள் காட்டில் தனியாக அலைந்திருக்கிறேன். இரவுகளில் பயன்படுத்த ஒரு தீப்பெட்டி கூட என்னிடம் கிடையாது. இருள் என்னிடம் நட்பாகவே இருந்திருக்கிறது.

      மூன்று நாட்களுக்கு நான் வீடு திரும்பாததால், என்னைக் கண்டுபிடிக்க வீட்டில் பல முயற்சிகள் நடந்தன. ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் என்னைத் தேடிக் கொண்டு இருந்ததாக அறிந்தேன். நான் வீடு திரும்பியபோது, எல்லோருக்கும் ஒரு கேள்விதான் பெரிதாக இருந்தது. ‘இரவுகளில் தூங்குவதற்கு என்ன செய்தாய்? ஏதாவது பாழடைந்த கோயில் இருந்ததா?’

      “இல்லை. இருட்டிலும் காட்டில் நடந்து கொண்டுதான் இருந்தேன். ஓய்வெடுக்க நினைத்தபோதெல்லாம் ஏதாவது ஒரு மரக்கிளையில் போய்த் தங்கினேன்” என்றேன்.

      “அடப்பாவி! இருட்டைக் கண்டால் உனக்கு பயமாக இல்லையா?” என்று கேட்டார்கள். “என்னால்தான் இருட்டில் வெகு தெளிவாகப் பார்க்க முடிந்ததே… நான் பார்த்த எதுவும் என்னைப் பயமுறுத்துவதாக இல்லை” என்றேன். என் அப்பா தலையில் அடித்துக் கொண்டார். ‘ஐயோ, இந்தப் பையனுக்கு பயமே இல்லையே! இவனுக்கு என்ன ஆகப்போகிறதோ?’

      எனக்குப் புரியவே இல்லை. எதையாவது தெளிவாகப் பார்க்க முடியாமல் இருந்தால்தான், அதன்மீது பயம் வர வாய்ப்பு இருக்கிறது. பயப்படும் மகனாக இருந்தால், அவனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று கவலைப்பட வேண்டும். எனக்கு பயம் இல்லை என்பதே அவருக்கு பயமாக இருந்தது. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

      இருள் என்றால் ஒன்றுமில்லை என்றுதானே அர்த்தம்! ஏதோ இருந்தால்கூட அது உங்களை ஏதாவது செய்யலாம். எதுவுமே இல்லாத ஒன்று உங்களை என்ன செய்துவிட முடியும்? இருளைக் கண்டு எதற்குப் பயப்பட வேண்டும்?

      எதையாவது கண்டு பயந்தால்தான் அது பூதாகரமாகத் தோன்றும். பயம் இல்லாதபோது ஒருவருக்கு என்ன இழப்பு நேர்ந்துவிட முடியும்?

      நீங்கள் குழந்தையாக இருந்தபோது, உங்களை அன்பால், நம்பிக்கையால் கட்டுப்படுத்தத் திறனில்லாத பெரியவர்கள், இதையும் அதையும் சொல்லிப் பயமுறுத்தி வைத்திருப்பார்கள். இருளைக் கண்டு அச்சப்படுவதற்குக் கற்றுத் தந்தது அவர்கள்தான். பழைய பிம்பங்கள், கற்பனை உருவங்கள், ஏற்கனவே சேகரித்த அச்சங்கள் இவைதான் உங்களை இருளில் ஆட்டிப் படைக்கின்றன.

      வெளிச்சத்தில் சுற்றிலும் என்ன இருக்கிறது என்று உங்களால் பார்க்க முடிகிறது. இருட்டில் எதுவும் புலப்படாதபோது, கட்டுப்பாடு இல்லாத மனம், அதுவாகவே விபரீதமான பிம்பங்களைக் கற்பனையாகத் தோற்றுவிக்கிறது. அந்த பிம்பங்கள்தான் அச்சத்தின் அடிப்படை. இல்லாத ஒன்றை உருவகித்துக் கொண்டு அச்சப்படுவதும், அதனால் துன்பப்படுவதும் புத்திசாலித்தனமா? பைத்தியக்காரத்தனமா? நீங்களே சொல்லுங்கள்.

      என் மண்டைக்குள் எந்தவிதமான பிம்பங்களும் இல்லை என்பதால், எனக்குள் இந்தப் பயமுறுத்தும் விளையாட்டு நேர்வதில்லை. எதை வேண்டுமானாலும் என்னால் வெறித்துப் பார்க்க முடியும். இப்போதும் கண்களை மூடிக் கொண்டால், எனக்குள் வெறுமைதான் நிறைந்திருக்கும்.

      ரோகி, போகி, யோகி மூவருமே இரவில் தூங்கமாட்டார்கள். ரோகி என்றால் நோயாளி. உடல்நிலை மோசமாக இருக்கும்போது, ஒருவனுக்குத் தூக்கம் வராது. போகி என்றால் இன்பத்தை நாடிப் போகிறவன். அவன் நாடும் இன்பங்கள் பலவற்றுக்கு இரவுதான் உகந்தது. யோகி இரவில் தூங்காமல் இருப்பதற்குக் காரணம், இரவும் இருளும் அவருடைய ஆன்மீகப் பயிற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும்.

      காரணம், இருளில் எல்லாம் ஒன்றுடன் ஒன்று பாகுபாடு இன்றி ஐக்கியமாகிவிடுகின்றன. வெளிச்சம் வந்ததும் ஒவ்வொன்றும் தன் அடையாளத்தோடு விறைத்து நிற்கிறது. இருள் என்பது உண்மைக்கு வெகு அருகில் இருக்கிறது. வெளிச்சம் என்பது பொய்க்கு அருகில் இருக்கிறது.

அற்புதம்! ஆச்சர்யம்! சிதம்பர இரகசியம்? ஆனந்தம்



சிதம்பர இரகசியம் என்றால் என்ன ...?!

      சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான இரகசியங்கள் மற்றும் ஆச்சர்யங்கள் இவைகள் தான்.

      சிதம்பரம் நடராஜர் கோயில் இரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்தக் கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

      முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்."

(1) இந்தக் கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. (Centre Point of World's Magnetic Equator ).

(2)பஞ்சபூதக் கோயில்களில் ஆகாயத்தைக் குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றைக் குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது "மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்" என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தைக் குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்தப் படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதைப் போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது.

Monday, May 27, 2013

போதையுண்டு, தள்ளாட்டம் இல்லை! ஆனந்தம்


      ஆனந்தத்தைத் தேடும் இளைஞர்கள், மதுவைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் மறுநாள் காலையிலோ தலைவலியும் சேர்ந்து வந்துவிடுகிறது.இங்கே, பக்க விளைவில்லாத போதைப் பொருள் பற்றி..... சிலவகை தியானங்கள் மது அருந்தியது போன்ற போதையைத் தருகின்றனவே?

      பொதுவாக போதை தரும் பானங்களைக் குடித்தால், உடலும், மனமும் தங்கள் கட்டுப்பாட்டை இழந்துவிடும். தியானங்கள் தரும் போதை அப்படியல்ல. வெளியேயிருந்து எதையோ எடுத்து நீங்கள் அருந்துவதில்லை. உங்கள் உள்ளேயிருக்கும் உயிர்ச் சக்தியை நீங்கள் விரும்பி, அருந்துகிறீர்கள்.

      தியானத்தினால் உள்ளே போதையாகவும் வெளியே உறுதியாகவும் இருக்க முடியும். இன்னும் சில தியானங்கள் மூலம் உள்ளுக்குள் உயிர்ச் சக்திக்கு முழு போதையும் வெளியே பாறை போன்ற அமைதியும்கூட ஏற்படுத்த முடியும். பாறை என்றால், உறைந்துபோன பாறை அல்ல. நினைத்த மாத்திரத்தில், உயிர்த்து எழுந்திருக்கக்கூடிய பாறை!

புத்த பூர்ணிமா! உண்மைகதை! ஆனந்தம்


      இந்த உலகில் எத்தனையோ ஆன்மீகக் குருமார்கள் தோன்றியிருந்தாலும், அவர்கள் எல்லாரிலும் பெருமளவில் கொண்டாடப்படுகிறவர் கௌதம புத்தர். அவர் காலத்தில் வாழ்ந்த அரசர்களும் சக்கரவர்த்திகளும் அவரது சீடர்களாயினர். இந்தியாவில் மிகப்பெரும் சக்கரவர்த்தியாக விளங்கிய அசோகர், அரியணை துறந்து திருவோடு தாங்கி புத்தர் வழியில் நடந்தார்.

      ஆட்சிக் கட்டிலில் இருந்த அனேகம் பேரை புத்தர் திருவோடு ஏந்தச் செய்தார். இந்தக் காரணங்களாலேயே புத்த மார்க்கம் இந்தியாவில் ஒரு பெரும் அலையை ஏற்படுத்தியது.
“இதற்கு வேண்டியதெல்லாம் முழுமையான விருப்பம்தான். அது இப்போது இருக்கிறது. பிறகு எதைத் தேடி இந்தப் போராட்டம்?”

      பல விதங்களிலும் புத்தரின் போதனைகளை நீங்கள் சிந்தித்தால் அவை உபநிஷதங்களின் சாரமாகத்தான் உள்ளன. ஆனாலும் கலாச்சாரத்தின் தளைகளுக்குள் இருந்த அவற்றை விடுவித்து எளிமையாகவும் விஞ்ஞானப்பூர்வமாவும் வழங்கியதுதான் புத்தரின் போதனைகள் வெற்றி பெற்றமைக்கு முக்கியக் காரணம்.

      ஆன்மீக அடிப்படையில் மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாத பல நுண்ணிய அம்சங்களும் சக்திகளும் அவருக்கு இருந்தால்கூட அவற்றை ஒருபோதும் அவர் வெளிப்படுத்தியதே இல்லை. ஆனால் புறஉலகைப் பொறுத்தவரை தன்னை மிகவும் யதார்த்தமான மனிதராகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.

      அவர் ஞானோதயம் அடைந்த பௌர்ணமி நாள்தான் புத்த பூர்ணிமா என்று குறிப்பிடப்படுகிறது. ஏறக்குறைய எட்டாண்டு காலம் தன் உடலையே பெரும்சேதத்துக்கு ஆட்படுத்துகிற விதமாக மிகக் கடுமையான ஆத்ம சாதனைகளில் அவர் ஈடுபட்டார்.

      நான்காண்டு காலம் சமணா என்னும் மிகக் கடுமையான ஆத்ம சாதனைகளில் அவர் ஈடுபட்டார். சமணா என்பது உண்ணாநோன்பு இருப்பதும், யாரிடமும் உணவு கேட்காமல் நடந்துகொண்டே இருப்பதும் ஆகும். பலரும் சமணா சாதனையை செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்களில் பலர் மனிதர்கள் இருக்கிற பகுதியின் வழியாக நடந்து செல்வார்கள். இவர்கள் சமணா நோன்பு நோற்பதை அறிந்து மக்கள் தாமாக உணவு படைப்பார்கள்.

      ஆனால் கௌதமரோ, மனித நடமாட்டம் இல்லாத பகுதிகளிலேயே நடந்தார். அதன் காரணமாக மரணத்தை நெருங்கும் அளவு தன் உடலை சிதைத்துக்கொண்டார். அப்போதுதான் நிரஞ்சனா என்கிற நதிக்கு அருகே வந்தார். இப்போது அந்த நதி இல்லை. அந்த நதியில் முழங்கால் அளவுதான் தண்ணீர் இருந்தது. ஆனால் வேகமாகப் பாய்ந்துகொண்டு இருந்தது. மிகவும் பலவீனமாக இருந்த கௌதமரால் அடுத்து ஓர் அடிகூட எடுத்துவைக்க முடியவில்லை.

      அங்கே இருந்த ஒரு சிறு கிளையைப் பற்றிக்கொண்டார். அப்படியே பல மணி நேரங்கள் அவர் இருந்ததாகச் சொல்கிறார்கள். அல்லது சிறிது நேரம் இருந்திருந்தாலும்கூட, உடல் சோர்வு காரணமாகப் பல மணி நேரங்கள் கழிந்ததாகத் தோன்றியிருக்கலாம். அந்த வினாடியில்தான் அவருக்குள் ஓர் எண்ணம் பிறந்தது.

      “இதற்கு வேண்டியதெல்லாம் முழுமையான விருப்பம்தான். அது இப்போது இருக்கிறது. பிறகு எதைத் தேடி இந்தப் போராட்டம்?” இதை உணர்ந்தபோது அவருக்கு கொஞ்சம் சக்தி பிறந்தது. எனவே நதியைக் கடந்த அவர், தற்காலத்தில் புத்தரைக் காட்டிலும் கூடுதல் புகழ் பெற்றிருக்கிற போதி மரத்தின் கீழ் சென்றமர்ந்தார்.

      அந்த மரத்தின் கீழ் சம்மணம் இட்டு அமர்ந்த அவர், ‘ஞானோதயம் நிகழும் வரை நான் அசைய மாட்டேன், எழுந்தால் ஞானம் பெற்றவனாக எழுவேன், இல்லையெனில் இப்படியே இறந்துவிடுவேன்’
என்று முடிவு செய்தார். ஒரே கணத்தில் ஞானம் பிறந்தது.

      அவர் முழுமையாக ஞானோதயம் பெறுகிறபோது நிலவு உதயமாகிக்கொண்டு இருந்தது. கண் விழித்துப் பார்த்தபோது, அவருக்கு எதிரே ஐந்து சீடர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்களை சீடர்கள் என்றுகூட சொல்ல முடியாது. ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டிருந்த சக பயணிகள் அவர்கள். இவரது தீவிரத்தைப் பார்த்து அவர் வழிகாட்டுவார் என்று அவர் முன் அமர்ந்திருந்தார்கள்.

      கண் விழித்ததுமே புத்தர் சொன்ன முதல் வார்த்தை, “வாருங்கள், நாம் உணவருந்தலாம்” என்பதுதான். ஐந்து பேரும் அதிர்ந்தார்கள். ஆனால் எப்படியோ உணவுக்கு ஏற்பாடு செய்தார்கள். புத்தர் நிதானமாக அமர்ந்து நன்றாகச் சாப்பிட்டார். இந்த ஐந்து பேருக்கும் நம்பிக்கை போய்விட்டது.

      வயிறாரச் சாப்பிடுகிற ஒருவர் எப்படி ஆன்மீகவாதியாக இருக்க முடியும் என்று கருதி அவரை விட்டு விலகிச் சென்றுவிட்டார்கள். புத்தர் பெருங்கருணை காரணமாக சில ஆண்டுகள் கழித்து அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து ஞானோதயத்தின் பாதையில் அவர்களை நெறிப்படுத்தினார்.

      2500 ஆண்டுகளுக்கு முன்பு தன்னில் மலர்ந்த கௌதம புத்தர், ஆன்மீக உலகில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார்.

      ஆன்மீகப் பாதையில் நடையிடும் ஒவ்வொருவருக்கும் புத்த பூர்ணிமா மிக முக்கியமான நாளாகும்! வாழ்க வளமுடன்!

Thursday, May 23, 2013

உங்களுக்குள் ஒரு மர்மப் புதையல்! ஆனந்தம்


     
      குண்டலினி பரமரகசியங்களுக்கு எல்லாம் பரமரகசியமாய் காலம் காலமாய் பொத்திப் பொத்தி பேசி வரப்படும் ஒரு ஆன்மீக சமாச்சாரம். உனக்கு தெரியுமா, உன் குண்டலினியை எழுப்பினால் நீ பறக்கலாம், நீ தண்ணீரில் மிதக்கலாம் என்னும் பல கதைகள் கேட்டிருப்பீர்கள். இங்கே குண்டலினியின் அறிவியல்…

      குண்டலினி, உங்களுக்குள் பொதிந்து கிடக்கும் ஒரு சக்தி. தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ளாத நிலையிலேயே நமக்குள் இது புதைந்து கிடக்கிறது. நீங்கள் “மனிதன்” என்று குறிப்பிடும் தன்மை இன்னும் உருவாக்கத்தில் இருப்பதால், இந்த சக்தி இன்னும் வெளிப்படாமல் காத்துக்கொண்டே இருக்கிறது. நீங்கள் இன்னும் முழுமையான மனிதனாக இல்லை. உங்களை நீங்கள் மேம்பட்ட மனிதராக வளர்க்க ஒரு தொடர்ச்சியான நோக்கம் இருந்துகொண்டே இருக்கிறது.

      இந்த சக்தியை பற்றி உங்களுக்கு கவனமிருந்தால், இதை பயன்படுத்தி அற்புதங்களை படைக்க முடியும்.

      நீங்கள் குரங்காக இருந்தபோது, உங்களுக்கு மனிதனாக மாற விருப்பமில்லை. இயற்கைதான் உங்களை அந்த நிலைக்கு தள்ளியது. ஆனால் மனிதனாக மாறியபின், அதைத்தொடர்ந்து ஒரு விழிப்புணர்வான பரிணாம வளர்ச்சி அங்கே நடைபெறவில்லை. நீங்கள் விழிப்புணர்வாக இல்லாத பட்சத்தில், அந்த சுழற்சி திரும்பத்திரும்ப நடந்துகொண்டே இருக்கும்.
எந்த ஒரு மாற்றமும் சரி, பரிணாம வளர்ச்சியும் சரி, போதிய சக்தி இல்லாமல் நடப்பதில்லை. இந்த சக்தியை பற்றி உங்களுக்கு கவனமிருந்தால், இதை பயன்படுத்தி அற்புதங்களை படைக்க முடியும். ஒரு புதையலின் மேல் உட்கார்ந்து இருப்பதுபோன்றது இது. ஆனால் நீங்கள் தவறான திசையில் பார்த்துக் கொண்டிருந்தால், அங்கே புதையல் இருப்பதே உங்களுக்குத் தெரியாது.

      ஒரு பிச்சைக்காரர் கடுமையான வறுமையில் வாழ்ந்து வந்தார். மரத்தடியில் உட்கார்ந்து பிச்சை எடுத்து கொண்டிருந்தார். அவர் இறந்தபிறகு அவர் உடலை அங்கிருந்து வேறு இடத்திற்கு கொண்டு போய் புதைக்க யாரும் பிரயத்தனப்படாமல் அந்த மரத்தடியிலேயே புதைக்க முடிவு செய்தனர். அங்கே தோண்டும்போது ஒரு சில அடிகளிலேயே பெரும் புதையல் ஒன்று கிடைத்தது.

      ஒரு பானை நிறைய தங்கத்தை கீழே வைத்துக்கொண்டு அந்த முட்டாள் தன் வாழ்க்கை முழுவதும் பிச்சை எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார். கீழே தோண்டியிருந்தால் அவர் பெரும் பணக்காரர் ஆகியிருக்க முடியும். ஆனால் அங்கேயே உட்கார்ந்துகொண்டு எப்போதும் பிச்சை மட்டுமே எடுத்துக் கொண்டிருந்தவரை என்ன சொல்ல?

      இப்படித்தான் குண்டலினியும். அது அங்கே அடியில் மௌனமாய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது. இது எப்படி தெரியுமா? ஜாக்பாட்டின் மேல் உட்கார்ந்து கொண்டிருப்பதைப் போன்றது. ஆனால் தவறான திசையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். புதையல் இருக்கும் பக்கம் திரும்பவில்லை.

      அதனால் குண்டலினி சக்தி இருப்பதையே நீங்கள் உணரவில்லை. குண்டலினி என்பது உங்களுக்குள் இருக்கும் பயன்படுத்தப்படாத, தொடப்படாத சக்தி. உங்களை முற்றிலும் கற்பனை செய்யமுடியாத பரிமாணத்திற்கு மாற்றிட இந்த சக்தியைப் பயன்படுத்த முடியும்.

      முறையான யோகப் பயிற்சிகள், குண்டலினி சக்தியை மேலெழுப்ப துணை நிற்கும்!
........................வாழ்க வளமுடன்!..............................

Wednesday, May 22, 2013

இறந்த உடலை ஏன் எரிக்கிறோம்? ஆனந்தம்


நமது கலாசாரத்தில், இறந்தவர் உடலை எரிக்க வேண்டும் என்ற பழக்கம் எப்படி வந்தது?

      நமது கலாசாரத்தில் இறந்தவர் உடலைப் பாதுகாக்கும் வழக்கம் இல்லை. இந்தத் தேசத்தின் கலாசாரம், வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சமும் மனிதனை மேல்நோக்கிக் கொண்டுசெல்வதாக அமைய வேண்டும் என்றே நினைக்கிறது. உடலை எரிப்பது என்ற சடங்கும் அந்த நோக்கத்திலேயே அமைக்கப்பட்டது.

      உங்களைப் பொறுத்தவரையில் அவர் இறந்துவிட்டார். ஆனால் அந்த உயிரைப் பொறுத்தவரையில் உடலைவிட்டு நழுவிவிட்டதாகத்தான் நினைத்துக்கொண்டு இருக்கும்.

      இறந்தவர் இந்த உடல்தான் தனது உயிர் என்று வாழ்ந்திருப்பார். அந்த உடலோடு மிகவும் ஆழமான தொடர்போடு வாழ்ந்திருப்பார். உங்களைப் பொறுத்தவரையில் அவர் இறந்துவிட்டார். ஆனால் அந்த உயிரைப் பொறுத்தவரையில் உடலைவிட்டு நழுவிவிட்டதாகத்தான் நினைத்துக்கொண்டு இருக்கும். எனவே மீண்டும் அந்த உடலுக்குள் நுழைந்துவிடலாம் என்றே அந்த உயிர் துடிக்கும். எனவே, வாய்ப்பை எதிர்நோக்கி அந்த உடலைச் சுற்றியே உயிர் சுற்றிக்கொண்டு இருக்கும். உடல் முழுமையாக இருக்கும் வரை அந்த உயிரால் அங்கிருந்து நகர முடியாது. அந்த மனிதர் ஞானம் அடைந்திருந்தால், அந்த உடலைவிட்டு நீங்கிய கணத்திலேயே அந்த உயிர் மகிழ்ச்சியாக அங்கிருந்து வெளியேறிவிடும். ஆனால், சரியான புரிதல் இல்லாத உயிர் அந்த உடலையே சுற்றிவரும். இது அந்த உயிருக்கும் நல்லதல்ல. இறந்தவருடன் பழகியவர்க்கும் அந்த உடலைப் பார்த்துப் பார்த்து பல நினைவுகளால் வருத்தம் அதிகமாகியே போகும்.

      உயிரை விட்டவரும் சரி, உறவினர்களும் சரி, உடல் அங்கிருக்கும் வரை, வேதனையோடு இருப்பர். எனவே விடைபெற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை அந்த உயிர் உணர வேண்டும் என்பதால், அந்த உடலை முழுமையாகவும் விரைவாகவும் அழிக்க வேண்டும் என்னும் நடைமுறை உண்டாக்கப்பட்டது. எனவேதான் இறந்த ஒன்றரை மணி நேரத்துக்குள் உடலை எரிக்க வேண்டும் என்ற விதி ஏற்படுத்தப்பட்டது. அவசரத்திலும் பதற்றத்திலும் தவறான முடிவெடுத்து உயிருடன் இருக்கக்கூடியவரையும் தவறுதலாக எரிக்கப்பட்டுவிடலாம் என்பதால், அதை நான்கு மணிநேரம் என பிற்பாடு மாற்றி அமைத்தார்கள்.

      தாம் அறிந்த அந்த உடல் இனி இல்லை, அடையாளமற்று எரிந்து கையளவு சாம்பலாகிவிட்டது என்னும் உண்மையை அறியும்போது, இறந்த உயிரும் அந்த இடத்திலேயே பரிதவித்துக்கொண்டு இருக்காது. இங்கு உயிருடன் இருப்பவர்களும் மாண்டவன் இனி மீளப்போவதில்லை என்று ஒருவித அமைதி கொள்வார்கள். எனவேதான் ஒருவர் இறந்துவிட்டால் அவரை உடனடியாக எரிப்பது நமது கலாசாரத்தில் இருந்து வருகிறது.

      போதிய விறகு இல்லாத பாலைவனங்களிலும், நெருப்பு நின்று எரியாத குளிர்ப் பிரதேசங்களிலும் எரிப்பதைவிட புதைப்பது சுலபமாக இருந்தது. எனவே அத்தகைய நாடுகளில் அதுவே அவர்களது நடைமுறையாக மாறிவிட்டது!

Sunday, May 5, 2013

ஹே நண்பா ! ஆனந்தம்


      பள்ளியில் தோள் கொடுத்தவன், கல்லூரி வாழ்க்கையை கலகலப்பாக்கியவன், திருமண மேடையில் கைக்குட்டையால் முகம் துடைத்தவன், எல்லோருக்கும் இன்பத்திலும் துன்பத்திலும் உடனிருப்பவன் எப்போதும் ஒரு நண்பன்தான். ஆனால், ஆயிரம்பேர் படிக்கும் கல்லூரியில், நாம் ஏன் ஒரு சிலரைமட்டும் நண்பர்களாக ஆக்கிக் கொண்டுள்ளோம்?! நட்பு பற்றி சத்குருவின் சில வரிகள்…

சத்குரு:

      உங்களைப் போலவே எண்ணுகிற, உணர்கிற, உங்களைப் புரிந்துகொள்கிற, உங்களைப்போல விருப்பங்களைக் கொண்டவர்களைத்தான் நண்பர்கள் என்கிறீர்கள்!
      எனவே எப்போதும் உங்கள் முட்டாள் தனங்களை ஆதரிப்பவர்களைத்தான் தேடிச் செல்கிறீர்கள். அந்த விதத்தில் பார்த்தால் ஒரு குருவோடு இருப்பது வித்தியாசமானது. அவர் உங்கள் நண்பர். ஆனால், உங்கள் அகங்காரத்தைக் கீழே இழுத்து அதன் மீது நடனமாடுபவர். சாதாரணமாக அகங்காரத்தைச் சீண்டினால், உங்கள் நண்பர் எதிரியாகி விடுவார். நாம் செய்வது என்னவென்றால் உங்கள் அகங்காரத்தின் மீது நடனமாடினாலும் பரவாயில்லை, நீ என் நண்பன் என்ற நிலையை ஏற்படுத்துவது.
      நீங்கள் யாருக்காவது நண்பர் எனில் அவருக்குப் பிடித்தவராக இருக்க எவ்வளவு முட்டாள்தனங்களைச் செய்கிறீர்கள் பாருங்கள். சூழலைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில், இனிமையற்ற எத்தனை விஷயங்களை உங்களுக்குள் போட்டுப் புதைத்து வைத்திருக்கிறீர்கள் பாருங்கள்.
இனிமையற்ற விதைகளை மண்ணில் விதைத்தால், பழங்களும் அப்படித்தான் இருக்கும். வாழ்க்கையும் அப்படித்தானே இருக்கும்.
      உங்களுக்கு ஒரு நண்பர் இருந்தால், அவருக்கு உங்களைப் பிடிக்காது என்றாலும் பரவாயில்லை என்ற தைரியம் உங்களுக்கு வேண்டும். தற்போது உங்கள் நண்பர்களில் பலர் ஒப்பந்தங்களோடும் விருப்பு வெறுப்புகளோடும்தான் உள்ளனர்.
      ஓர் உண்மை நண்பர் உங்களின் முட்டாள்தனங்களைச் சுட்டிக்காட்டினாலும் அன்போடு பழகும் தைரியமுடன் இருக்க வேண்டும். அதுதான் நட்பு! வாழ்க வளமுடன்!