Thursday, July 5, 2012

உலகைக் காப்பாற்றும் சோம்பேறிகள்? Real Story-ஆனந்தம்


      
      உங்கள் மகிழ்ச்சி என்பது உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் இருந்து கடனாகப் பெறப்படும் ஒரு பொருள் போல கருதுகிறீர்கள்! நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் வெளியில் என்ன நடக்கிறது என்பதற்கும் சம்பந்தம் இல்லை என்ப‌தை புரிந்து கொள்ளுங்கள்.
      இப்போதைக்கு உங்களுடைய சக்திகள் அனைத்தும் வெளிபுற சூழ்நிலைகளுக்கு அடிமைப்பட்டு கிடப்பதால், அந்த வெளியுலகம் தான் உங்கள் உள் நிலை மகிழ்ச்சியைத் தீர்மானிக்கிறது. இது போன்ற சூழ்நிலைகளில் போராட்டங்களைத் தவிர்க்க முடியாது. இந்த உலகில் போராட்டம் என்பதே ஒருவர் சந்தோசத்திற்கும் மற்றவர் சந்தோசத்திற்கும் இடையே தான் நடக்கிறது. என் சந்தோசம் சிவன், உங்கள் சந்தோசம் அல்லா, இப்படி இருந்தால் இருவரும் சண்டை போட்டே ஆக வேண்டும்.
      நம்முடைய இயல்பிலேயே நாம் சந்தோசமாக இருப்பதற்கு முடியாவிட்டால், மகிழ்ச்சியாக இருப்பதற்கு நாம் வெளியில் எதையாவது செய்து தான் ஆகவேண்டும். இந்த உலகத்தில் சந்தோசமாக இருப்பதற்கு நாம் எதையாவது செய்து தான் ஆகவேண்டும் என்றால் பின் மற்றவர்களும் சந்தோசமாக இருப்பதற்கு வேறு எதையாவது ஒன்றைச் செய்வார்கள்.
      நாளையோ அல்லது நாளை மறுநாளோ நம்முடைய பாதைகள் ஒன்றோடு ஒன்று குறுக்கிட்டு, நாம் சண்டையில் இறங்குவோம். நாம் அனைவரும் சகோதரர்கள் என்று பாவனை செய்தாலும், நம் சந்தோசத்திற்கு ஏதாவது தடை வந்து விட்டால் அடுத்தவரை அடித்து வீழ்த்துவதற்கு தயங்கவே மாட்டோம்.
      இந்த கம்பத்தில் ஏறுவது தான் உங்களுடைய‌ இப்போதைய சந்தோசம் என்று வைத்துக் கொள்ளுவோம். இப்போது யாரோ ஒருவர் அந்த கம்பத்தில் ஏறி அமர்ந்து கொண்டு, இது புனிதமான கம்பம் இதன் மீது நீங்கள் ஏறக் கூடாது என்று தடுக்கிறார் என்னும் போதே உங்கள் மகிழ்ச்சி அனைத்தையும் தொலைத்து விடுவீர்கள்.
      ஒரு வேளை தடுப்பவர் பலமானவராக இருந்தால், அங்கிருந்து நீங்கள் போய்விடுவீர்கள், அவர் உங்களை விட பல‌கீனமானவராக இருந்தால் அவரை இழுத்து கீழே தள்ளி விட்டு கம்பத்தின் மீது நீங்கள் ஏறி விடுவீர்கள். ஏனெனால் அந்த கம்பத்தின் மீது ஏறுவதில் தான் உங்கள் சந்தோசம் இருக்கிறது என்பதால் அதில் எப்படியாவது ஏறிவிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள். ஆனால் நீங்கள் ஏற்கனவே சந்தோசமாக இருந்தால் அந்த கம்பத்தில் ஏற வேண்டாம் என்று தடுத்தால், நீங்கள் வேறு விசயத்தை நாடி போய்விடுவீர்கள் அல்லது வேறு கம்பத்தில் ஏறிக் கொள்வீர்கள்.
      உங்கள் இயல்பில் நீங்கள் மகிழ்ச்சியானவராக இருந்தால், மகிழ்ச்சியே உங்கள் வெளிப்பாடாக‌ இருந்தால், பிறகு இந்த உலகத்தில் எந்த விதமான சச்சரவுகளும் இருக்காது. ஆனால் உங்கள் வாழ்க்கையை நீங்கள் மமகிழ்ச்சியைத் தேடி ஓடுவதில் செலவழித்தால், இந்த உலகத்தில் எப்பொழுதும் போராட்டங்கள் இருந்து கொண்டே தான் இருக்கும். மக்களுக்கு நீங்கள் எவ்வளவு தான் கலிவி அறிவு புகட்டினாலும், நாகரீகத்தைக் கற்றுக் கொடுத்தாலும், அவர்கள் சண்டையிட்டுக் கொள்வார்கள்.
      நாம் இயல்பிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் நம்முடைய சக்திகளை ஒழுங்கு படுத்திக் கொண்டால், பிறகு நம்வாழ்வில் எது நடந்தாலும், நம் மகிழ்ச்சி மட்டும் குறையவே குறையாது. அப்போது நாம் வாழும் சூழ்நிலைக்கு என்னெ தேவையோ அதை மட்டும் செய்வோம். எதையாவது செய்ய வேன்டும் என்ற கட்டாயம் நம‌க்கு இருக்காது. எதையுமே செய்யாமல் கூட நாம் வெறுமனே அமர்ந்திருக்க முடியும்.
      ஆனால் தற்போது நிறைய பேர் மகிழ்ச்சியைத் தேடிச் செல்லும் பயணத்தில் இந்த பூமியையே கொளுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக இந்த உலகத்தில் 50% பேருக்கு மேல் சோம்பேறிகளாக உள்ளனர். உலகில் இருக்கும் 700 கோடி பேரும் கடும் உழைப்பாளிகளாக இருந்தால், இந்த உலகம் இன்னும் 10 வருடங்களுக்கு கூட நீடிக்காது; அழிந்துவிடும். இந்த உலகம் இன்னும் நீடிப்பதற்கு காரணம் உழைப்பாளிகள் அல்ல; சோம்பேறிகள் தான் காரணம். அவர்கள் தான் உண்மையிலேயே இந்த உலகத்தைக் காப்பாற்றி வருகிறார்கள்.
      உழைப்பாளிகள் எனப்படும் பிரிவினர் நல்ல நோகங்களுடனும், அதே நேரம் முழு முட்டாள் தனத்துடனும் இந்த பூமியை சிதைத்து வருகிறார்கள். மக்களுக்கு நன்மை செய்வதைப் பற்றி அவர்களுக்கு நல்ல நோக்கங்கள் இருக்கலாம்.ஆனால் அவர்களுடைய நோக்கங்கள் அனைத்தும் நிறைவேறி விட்டால் இந்த உலகம் மிஞ்சியிருக்காது.
      எனவே மகிழ்ச்சியைத் தேடி ஓடாதீர்கள். உங்கள் மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் தற்ப்போதையை வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் மகிழ்ச்சியை தேடியதைவிட, மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கணங்கள் தான் அழகானவை என்பதை உணர்வீர்கள்!
..............................வாழ்க வளமுடன்!.........................