Monday, January 31, 2011

அன்பின் கதை ஆனந்தம்


        முன்னொரு நாள் மிகப் பழமை வாய்ந்ததும் கம்பீரமானதும் ஆன ஒரு மரம் இருந்தது. அதன் கிளைகள் வான்வரை விரிந்து பரவிக் கிடந்தன.
        அது பூத்துக் குலுங்கும் தருணத்தில் எல்லா வண்ணங்களிலும் சிரிதும் பெரிதுமான எல்லாவித வண்ணத்துப் பூச்சிகளும் அதைச் சுற்றி நடனமாடிக் கொண்டிருக்கும்.
        அது மலர்ந்து கனிகளைத் தாங்கிக் கொண்டிருக்கையில் தொலைதூர பிரதேசங்களிலிருந்து பறவைகள் வந்து அதில் பாடும்.
        நீண்டு திறந்திருக்கும் கைகளைப் போன்ற அதன் கிளைகள் அதன் நிழலில் வந்து இளைப்பாறும் அனைவரையும் ஆசிர்வதிக்கும்.
        அதன் அடியில் எப்பொழுதும் ஒரு சிறுவன் வந்து விளையாடிக் கொண்டிருப்பான். அந்த மரம் அந்த சிறுவனிடம் ஒரு நேசத்தை வளர்த்துக் கொண்டது.
        பெரியவர் தான் பெரியவர் என்ற நினைப்பைக் கொண்டிருக்காவிட்டால்
பெரியவர்க்கும் சிறியவர்க்கும் நட்பு சாத்தியமே.
        அந்த மரத்திற்கு அது மிகவும் பெரிது என்பது தெரியாது. அந்த விதமான அறிவை மனிதன் மட்டுமே கொண்டிருக்கிறான்.
        பெரியது எப்பொழுதும் தனது ஆணவத்தையே முக்கியமாகக் கருதும். ஆனால் அன்பிற்கு சிறியது பெரியது என்று எதுவும் கிடையாது. நெருங்கிவரும் எவரையும் தழுவிக் கொள்வது அன்பு.
        இப்படியாக அந்த மரம் எப்பொழுதும் தன்னருகில் விளையாடுவதற்காக வரும் அந்த சிறுவனிடம் அன்பை வளர்த்துக்கொண்டது.
        அதன் கிளைகளோ உயர்ந்திருப்பவை ஆனால் அது அவைகளை அவனுக்காக வளைத்துத் தாழ்த்திக் கொடுத்தது. அப்போதுதானே அவன் அதனுடைய பூக்களையும் பழங்களையும் பறிக்கமுடியும்.
        அன்பு எப்போதும் வளைந்து கொடுக்கத் தயாராயிருக்கும் ஆணவம் ஒருபோதும் வளைந்து கொடுக்காது. நீ ஆணவத்தை நெருங்கினால் அதன் கிளைகள் இன்னும் எட்டமுடியாமல் மேல்நோக்கி நீளும். அது நீ அதை நெருங்க முடியாதபடி விரைத்து நிற்கும்.
        அந்த விளையாட்டுச் சிறுகுழந்தை வந்தான் அந்த மரம் தனது கிளைகளைத் தாழ்த்திக் கொடுத்தது அந்தச் சிறுகுழந்தை சில பூக்களைப் பறித்துக்கொண்டதில் அந்த மரத்துக்குப் பெருமகிழ்ச்சி. அதன் முழு இருப்பும் சப்த நாடியும் அன்பின் ஆனந்தத்தில் நிறைந்தது.
        எப்பொழுதும் எதையாவது கொடுக்க முடியும்போது சந்தோஷப்படுவது அன்பு. எப்பொழுதும் எதையாவது பெற முடியும்போது சந்தோஷப்படுவது ஆணவம்.
        சில நேரங்களில் அந்தச் சிறுவன் அந்த மரத்தின் மடியில் படுத்து உறங்கினான் சில நேரங்களில் அவன் அதனுடைய பழங்களைப் பறித்து உண்டான். இப்படியாக அவன் வளர்ந்து வந்தான்.
        சிலநேரம் அவன் அந்த மரத்தின் மலர்களால் கிரீடம் செய்து அணிந்துகொண்டு காட்டு ராஜாவைப்போல நடித்துக் கொண்டிருப்பான். அன்பில் மலர்கள் நிறைந்திருக்கும்போது ஒருவன் அரசனாகி விடுவான்.ஆனால் ஆணவத்தின் முட்கள் அங்கிருந்தால் ஒருவன் துன்பமும் ஏழ்மையும் உள்ளவனாகவே இருப்பான்.
        அந்தச் சிறுவன் மலர்கிரீடம் அணிந்து ஆடிக்கொண்டிருப்பதைப் பார்த்து அந்த மரம் ஆனந்தத்தால் பூரித்தது. அது அன்பில் தலையசைத்தது. அது தென்றலில் இசைபாடியது.
        அந்தச் சிறுவன் மேலும் வளர்ந்தான் அவன் அந்த மரத்தின் கிளைகளில் ஊஞ்சலாடுவதற்காக மரத்தின் மேல் ஏற ஆரம்பித்தான். அந்தச் சிறுவன் 
அதனுடைய கிளைகளின் மேல அமர்ந்திருக்கையில் அந்த மரம் மிக மிக சந்தோஷப்பட்டது.
        யாருக்காவது சுகத்தை அளிக்க முடியும்போது சந்தோஷப்படுவது அன்பு. கஷ்டத்தைக் கொடுக்கையில் மட்டுமே சந்தோஷப்படுவது ஆணவம்.
        கால ஓட்டத்தில் அந்தச் சிறுவனுக்கு மற்ற பொறுப்புகளின் சுமை சேர்ந்தது. குறிக்கோள்கள் வளர்ந்தன. அவன் தேர்ச்சி பெற வேண்டிய தேர்வுகள் இருந்தன 
        அவன் அரட்டை அடிக்க ஊர் சுற்ற நண்பர்கள் சேர்ந்தனர். எனவே அவன் அடிக்கடி அந்த மரத்திடம் வருவதில்லை. ஆனால் அந்த மரம் அவனுடைய வரவை எதிர்நோக்கி ஆவலோடு காத்திருந்தது. அது அதனுடைய 
ஆன்மாவிலிருந்து அழைப்பு விடுத்தது. வா....வா.
        அன்பு இரவும் பகலும் காத்திருக்கும். இப்படியாக அந்த மரம் காத்திருந்தது. அந்தச் சிறுவன் வராததால் மரம் சோகத்தில் ஆழ்ந்தது. பகிர்ந்துகொள்ள முடியாதபோது அன்பு சோகத்தில் ஆழ்கிறது. எதையும் கொடுக்க முடியாதபோது அன்பு வருத்தப்படுகிறது.
        பகிர்ந்து கொள்ள முடிவதற்காக நன்றி சொல்வது அன்பு. முழுமையாகத் தன்னைக் கொடுக்க முடியும்பொழுது அன்பு ஆனந்தத்தின் உச்சத்தைத் தொடுகிறது.
        அந்தச் சிறுவன் வளர வளர அந்த மரத்தினிடம் அவன் வருவது குறைந்து கொண்டே வந்தது. பெரிதாக வளர்ந்துவிட்ட மனிதனுக்கு குறிக்கோள்கள் அதிகரித்துவிட்ட மனிதனுக்கு அன்புகொள்ள நேரம் கிடைப்பது குறுகிக் கொண்டே வரும். இப்பொழுது அந்தச் சிறுவன் உலக விஷயங்களில் தன் முழு கவனத்தையும் கொண்டுவிட்டான்.
        ஒருநாள் அவன் கடந்துசெல்லும்போது அந்த மரம் அவனிடம் சொல்லியது. நான் உனக்காகவே காத்திருக்கிறேன் ஆனால் நீ வருவதில்லை. நான் தினமும் உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். 
        அந்தச் சிறுவன் கேட்டான் உன்னிடம் என்ன இருக்கிறது? நான் ஏன் உன்னிடம் வர வேண்டும்? உன்னிடம் ஏதாவது பணம் இருக்கிறதா? நான் பணத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
        நான் எனும் ஆணவம் எப்பொழுதும் காரியத்தில் குறிகொண்டதாகவே இருக்கும். ஏதாவது காரியம் ஆகவேண்டுமென்றால் மட்டுமே ஆணவம் தேடி வரும்.
        ஆனால் அன்பு பயன்கருதாதது. அன்பிற்கு அன்புகொள்வதே அதன் பயன் பரிசு.ஆச்சரியப்பட்ட அந்த மரம் கேட்டது நான் ஏதாவது கொடுத்தால் மட்டும்தான் நீ வருவாயா?
        அந்தச் சிறுவன் சொன்னான் 'பின் ஏன் நான் உன்னிடம் வர வேண்டும்? நான் எங்கு பணம் இருக்கிறதோ அங்கு போகிறேன். எனக்குப் பணம்தான் வேண்டும்.
        ஆணவம் பணத்தைக் கேட்கிறது ஏனெனில் அதற்கு அதிகாரம் வேண்டும்.
        அந்த மரம் சிறிது யோசித்துவிட்டுக் கூறியது. எனது அன்பே வேறு எங்கும் நீ போக வேண்டாம் எனது பழங்களைப் பறித்து அவைகளை விற்பனை செய்.அந்த வகையில் உனக்குப் பணம் கிடைக்கும். அந்தச் சிறுவன் உடனே பிரகாசமானான்.
        அவன் அந்த மரத்தின் மீதேறி அதன் எல்லாப் பழங்களையும் பறித்துக் கொண்டான்: கனியாத பழங்களைக்கூட உலுக்கி எடுத்துக் கொண்டான்.
        அந்த மரம் மகிழ்ச்சியடைந்தது அதன் சில கொம்புகளும் கிளைகளும் முறிந்துவிட்ட போதிலும் அதனுடைய பல இலைகள் நிலத்தில் உதிர்ந்துவிட்ட போதிலும்.
        தான் உடைந்தாலும் கூட அது அன்பை சந்தோஷப்பட வைக்கிறது ஆனால் முடிவதையெல்லாம் எடுத்துக்கொண்ட பின்னும் ஆணவம் சந்தோஷமடைவதில்லை.
        ஆணவம் எப்பொழுதும் இன்னும் அதிகத்திற்கே ஆசைப்படுகிறது. அந்தச் சிறுவன் ஒருமுறைகூடத் திரும்பிப்பார்த்து அதற்கு நன்றி சொல்லவில்லை
        ஆனால் அதையெல்லாம் அந்த மரம் கவனிக்கவேயில்லை. அது அதனுடைய நன்றியுணர்வில் நிரம்பியிருந்தது‍ தனது கனிகளைப் பறித்து
விற்றுக்கொள்ளச் சொன்னதை அந்தச் சிறுவன் ஏற்றுக்கொண்டதிலேயே அது நன்றியுணர்வு கொண்டது.
        அதன்பின் அந்தச் சிறுவன் நீண்டகாலத்திற்குத் திரும்பி வரவேயில்லை. இப்போது அவனிடம் பணம் இருந்தது ஆகவே பரபரப்பாக இருந்தான்‍ இருக்கும் பணத்திலிருந்து இன்னும் பணம் பண்ணும் வேலை.
        அந்த மரத்தை அவன் சுத்தமாக மறந்துவிட்டான். ஆண்டுகள் பல கழிந்தன.
        அந்த மரம் சோகத்தில் ஆழ்ந்தது. அது அந்தச் சிறுவனின் வருகைக்காக ஏங்கியது‍ எப்படி மார்பில் பால் நிரம்பிய நிலையிலுள்ள தாய் தன் மகனைத் தவறவிட்டுவிட்டு தவிப்பாளோ அதுபோல.
        அவளுடைய முழு ஜீவனும் தனது மகனுக்காக ஏங்கும் அவள் பயித்தியம் போல தனது மகனைத் தேடுவாள்‍ எப்படியாவது அவன் வந்து
அவளை லேசாக்கிவிடமாட்டானா என்று.
        அந்த மரத்தின் உள் கதறல் அத்தகையதாயிற்று அதன் முழு ஜீவனும்
வேதனையில் துடித்தது. பல வருடங்களுக்குப் பிறகு தற்போது வளர்ந்த ஓர் ஆளாக அந்தச் சிறுவன் அந்த மரத்தினிடம் வந்தான்.
        அந்த மரம் கூறியது வா என் சிறுவனே வா என்னைக் கட்டித் தழுவிக்கொள். அந்த மனிதன் சொன்னான் அந்தப் பாசத்தையெல்லாம் நிறுத்திக்கொள். அவையெல்லாம் குழந்தைப் பருவ சங்கதிகள். நான் இன்னும் குழந்தையல்ல.
        ஆணவத்தின் பார்வைக்கு அன்பு பயித்தியக்காரத்தனம் குழந்தைத்தனமான கற்பனை. ஆனால் அந்த மரம் அவனை அழைத்தது, வா.. வந்து என் கிளைகளில் ஊஞ்சலாடு. வா... ஆடு. வா... என்னோடு விளையாட வா.
        அந்த மனிதன் கூறினான் இந்தப் பயனற்ற பேச்சையெல்லாம் முதலில் நிறுத்து! நான் ஒரு வீடு கட்ட வேண்டும். நீ எனக்கு ஒரு வீட்டைத் தர  முடியுமா?
         அந்த மரம் வியப்படைந்தது! ஒரு வீடா! நான் வீடில்லாமல் தானே இருக்கிறேன். மனிதன் மட்டும்தான் வீடுகளில் வாழ்கிறான். மனிதனைத் தவிர வேறு எவரும் வீடுகளில் வாழ்வதில்லை. அப்படி நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக் கொண்டுவிட்ட அவனுடைய நிலையை கவனித்தாயா?
         அவனது கட்டிடங்கள் எவ்வளவு பெரியதாகியதோ அந்தஅளவு மனிதன் சிறிதாகிப் போனான்.நாங்கள் வீடுகள் கட்டி வாழ்வதில்லை ஆனாலும் நீ எனது கிளைகளை தாராளமாய் வெட்டி எடுத்துக் கொள்ளலாம் பின் அவைகளைக் கொண்டு ஒரு வீடு கட்டிக்கொள். என்றது. 
        கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் அந்த மனிதன் ஒரு கோடாலியைக் கொண்டு வந்தான் அந்த மரத்தின் எல்லாக் கிளைகளையும் வெட்டிக் கொண்டான்.
        இப்போது அந்த மரம் வெறும் ஒற்றை மரத்தண்டாய் ஆகிப்போனது.
ஆனால் அன்பு இவை போன்றவைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை  
அன்பு கொண்டவருக்காக அதன் அங்கங்கள் துண்டிக்கப்பட்டாலும். அன்பு என்றால் கொடுப்பது அன்பு எப்பொழுதும் கொடுக்கத் தயாராயிருக்கிறது.
        அந்த மரத்திற்கு நன்றி சொல்லவேண்டும் என்றுகூட அவன் நினைக்கவில்லை. அவன் அவனுடைய வீட்டைக் கட்டிக்கொண்டான். நாட்கள் வருடங்களாக உருண்டோடியது.
        அந்தக் கிளைகளையிழந்த மரத்தண்டு காத்திருந்தது.... காத்திருந்தது. அது அவனுக்கு அழைப்புவிட நினைத்தது ஆனால் அதற்கு பலமூட்டும் அதன் கிளைகளோ இலைகளோ இப்போது அதனிடம் இல்லை.
        காற்றடித்தது ஆனால் அந்தக் காற்றிடம் ஒரு செய்தியைக் கொடுத்தனுப்பக் கூட அதனால் இப்போது முடியவில்லை. இருந்தபோதிலும் அதனுடைய ஆன்மாவில் ஒரே ஒரு பிரார்த்தனையே ஒலித்துக் கொண்டிருந்தது: வா வா என் அன்பே வா.
        ஆனால் எதுவுமே நிகழவில்லை. காலம் ஓடியது அந்த மனிதனுக்கு இப்போது வயதாகிவிட்டது. 
        ஒருமுறை அதைக் கடந்து போகும்போது அவன் வந்தான் வந்து அந்த மரத்தினடியில் நின்றான். அந்த மரம் உடனே கேட்டது உனக்காக நான் செய்யக் கூடியது இன்னும் ஏதாவது இருக்கிறதா?
        நீ மிக மிக நீண்டகாலம் கழித்து வந்திருக்கிறாய். அந்த வயதான மனிதன் சொன்னான் நீ எனக்கு வேறு என்ன செய்ய முடியும்?
        நான் இப்போது தூர தேசங்களுக்குப் போக வேண்டும் - அதிகப் பணம் சம்பாதிப்பதற்காக அதற்குப் பயணப்பட எனக்கு ஒரு படகு வேண்டும்.
        உற்சாகத் துள்ளலோடு அந்த மரம் கூறியது எனது அன்பே அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை எனது மரத்தண்டை வெட்டிக்கொள் அதிலிருந்து ஒரு படகு செய்துகொள்.
        ஆனால் தயவுசெய்து ஞாபகத்தில் வைத்துக்கொள் - நான் உனது வரவிற்காக எப்பொழுதும் காத்துக் கொண்டிருப்பேன்.
        அந்த மனிதன் ஒரு ரம்பத்தை எடுத்து வந்தான் மரத்தண்டை வெட்டிச் சாய்த்தான் அதிலிருந்து ஒரு படகு செய்தான் கடல்பயணம் புறப்பட்டுச் சென்றுவிட்டான். 
        இப்போது அந்த மரம் ஒரு வெறும் அடிக்கட்டை. அது காத்திருந்தது - 
அதன் அன்பானவனின் வருகைக்காக. அது காத்திருந்தது மேலும் அது காத்திருந்தது..... மேலும் அது காத்திருந்தது.
        அந்த மனிதன் ஒருபோதும் திரும்பவில்லை. ஆணவம் எங்கே ஏதாவது கிடைக்குமோ அங்கு மட்டுமே போகும். ஆனால் அந்த மரத்திடமோ எதுவுமேயில்லை கொடுப்பதற்கு சுத்தமாக எதுவுமில்லை. அடைவதற்கு எதுவுமில்லாத இடம்நோக்கி ஆணவம் ஒருபோதும் போகாது ஆணவம் என்றுமே பிச்சைக்காரன்தான் அது எப்போதும் யாசித்துக் கொண்டேதான் இருக்கும். 
        ஆனால் அன்பு ஒரு அறக்கட்டளை. அன்பு ஒர் அரசன் ஒரு பேரரசன் அன்பை விட உயர்ந்த ஒரு அரசன் எங்காவதுண்டா? 
        ஒருநாள் இரவு அந்த அடிக்கட்டையின் அருகில் நான் ஓய்வுகொண்டேன். அது என்னிடம் குசுகுசுத்தது என்னுடைய அந்த நண்பன் இன்னும் திரும்பி வரவில்லையே.
        அவன் ஒருவேளை முழுகிப் போயிருப்பானோ அவன் ஒருவேளை தொலைந்து போயிருப்பானோ என்று எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. அந்தத் தொலைதூர தேசங்கள் ஏதாவதொன்றில் அவன் காணாமல் போயிருக்கலாமல்லவா. அவன் இப்போது உயிரோடுகூட இல்லையோ என்னவோ. அவனைப் பற்றிய ஏதாவது செய்திக்காக எவ்வளவு நான் ஏங்குகிறேன் தெரியுமா?
        எனது வாழ்வின் கடைசிகாலத்தை நெருங்கிவிட்ட இந்த சமயத்தில் அவனைப் பற்றித் தகவல் ஏதாவது கிடைத்தால்கூட நான் திருப்திப் பட்டுக் கொள்வேன். அதன் பிறகு நான் சந்தோஷமாக இறந்து விடுவேன். ஆனால் என்னால் அவனை அழைக்க முடிந்தாலும்கூட அவன் வர விரும்ப மாட்டான்.
        என்னிடம் கொடுப்பதற்கு இனி எதுவும் இல்லை ஆனால் அவனுக்கோ
எடுத்துக்கொள்ளும் மொழி மட்டும்தான் புரியும். ஆணவத்திற்கு எடுத்துக்கொள்ளும் மொழி மட்டுமே புரியும். ஆனால் கொடுக்கும் மொழியே அன்பு.
        நான் இதற்கு மேல் சொல்ல எதுவுமில்லை. மேலும் இதற்கு மேல் சொல்ல எதுவும் பாக்கியும் இல்லை. வாழ்க்கை அந்த மரத்தைப்போல ஆகமுடிந்தால் தனது கிளைகளை பரந்து விரிந்து பரவச்செய்தால் அதனால்
எல்லோரும் அதன் நிழலில் பாதுகாப்புப் பெற முடிந்தால் அப்போது அன்பு என்றால் என்ன? என்பதை நாம் புரிந்துகொள்வோம்.  
        எந்த வேதப் புத்தகமும் கிடையாது.
        எந்த வழிகாட்டலும் இல்லை.
        எந்த அகராதியும் கிடையாது  அன்புக்கு.
        எந்த குறிப்பிட்ட கொள்கைகளும் கிடையாது அன்புக்கு.
        அன்பைப் பற்றி நான் எப்படிப் பேச முடியும் என்று நான் ஆச்சரியமே படுகிறேன்! விளக்குவதற்கு அவ்வளவு கஷ்டமானது அன்பு. ஆனால் அன்பு இதோ இருக்கிறது! 
..................................ஓஷோ

Thursday, January 27, 2011

வேரும் இறக்கையும் ஆனந்தம்:

ஓரு முறை பணக்கார கெளரவமான குடும்பத்தை சேர்ந்த ஓரு இளைஞன், ஓரு ஜென் குருவிடம் வந்தான். அவன் எல்லாவற்றையும் அனுபவித்தவன். எல்லா ஆசைகளிலும் ஈடுபட்டவன். அவனிடம் போதுமான பணம் இருந்தது. எனவே பிரச்சனை இல்லை.
        ஆனால் பிறகு அவனுக்கு சலித்து விட்டது. காமத்துடன், பெண்களுடன், மதுவுடன் சலித்துவிட்டது. அவன் ஜென்குருவிடம் வந்து, எனக்கு உலகம் சலித்து போய்விட்டது. நான் யார் என்பதை நான் அறிந்து கொள்ள ஏதாவது வழி உள்ளதா என கேட்டான்.
        தெரடர்ந்து அந்த இளைஞன் ஆனால் நீங்கள் ஏதும் சொல்வதற்க்கு முன்னால் நான் என்னைப் பற்றி ஓன்றை சொல்லி விடுகிறேன். என்னால் முடிவெடுக்க இயலாது. என்னால் எதையும் நீண்டகாலம் செய்ய முடியாது. எனவே நீங்கள் எனக்கு ஏதாவது முறையை கொடுத்தால் அல்லது என்னை தியானிக்கும் படி கூறினால் நான் ஓரு சில நாட்கள் செய்யக் கூடும். அதன் பின் நான் உலகில் ஓன்றுமில்லை என நன்றாக தெரிந்திருந்தும், அங்கு துன்பம், மரணம் மட்டுமே காத்திருக்கிறது என நன்றாக தெரிந்திருந்தாலும், தப்பித்துக் கொள்வேன். இதுதான் என் மனதின் வழி. என்னால் தொடர்ந்து செய்யமுடியாது, என்னால் எந்த காரியத்திலும் ஆழ்ந்து ஈடுபட முடியாது, எனவே நீங்கள் எதையாவது தேர்ந்தெடுப்பதற்க்கு முன், இதனை நினைவில் கொள்ளுங்கள். எனக் கூறினான்.
        குரு, நீ ஆழமாக ஈடுபடாவிட்டால் பிறகு அது மிகவும் கடினம். ஏனெனில் நீ கடந்த காலத்தில் செய்த அனைத்தையும் அழிப்பதற்க்கு நீண்ட முயற்சி தேவைப்படும். நீ பின்புறமாக பயணிக்க வேண்டும். அது திரும்பி செல்லுதலாக இருக்கும். நீ புதிதாக, இளமையாக, பிறந்த கணத்திற்கு செல்ல வேண்டும். அந்த புத்துணர்வை மீண்டும் அடைய வேண்டும். அது முன்னால் செல்வதல்ல, நீ பின்னால் செல்ல வேண்டும். திரும்பவும் குழந்தையாக வேண்டும். ஆனால் நீ என்னால் எதிலும் ஆழமாக ஈடுபட முடியாது எனக் கூறினால் சில நாட்களுக்குள் நீ தப்பி சென்று விடுவாய். அது கஷ்டமாக இருக்கும். ஆனால் நான் உன்னை ஓரு கேள்வி கேட்கிறேன், எப்போதாவது நீ உன்னை முழுமையாக மறந்து போகும் அளவிற்க்கு ஆர்வத்துடன் ஆழமாக எதையாவது செய்ததுண்டா?  
        இளைஞன் சிந்தித்து பார்த்துவிட்டு, ஆமாம், சதுரங்கத்தில் மட்டுமே அது நடந்துள்ளது. சதுரங்க விளையாட்டில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. எனக்கு அது மிகவும் பிடிக்கும். அது மட்டுமே என்னை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. மற்றவை அனைத்தும் வீழ்ந்து விட்டன. சதுரங்கம் மட்டுமே இன்னும் என்னுடன் உள்ளது. அதன்மூலம் நான் எப்படியோ என்னுடைய நேரத்தை கடத்திக் கொண்டிருக்கிறேன், எனக் கூறினான்.
        குரு அப்படியென்றால் ஏதாவது செய்யலாம். நீ காத்திரு எனக் கூறிவிட்டு அவர் தன் உதவியாளனை அழைத்து பணிரெண்டு வருடங்களாக மடாலயத்தில் தியானம் செய்து கொண்டிருக்கும் ஓரு துறவியை சதுரங்க அட்டையோடு அழைத்து வரும்படி கூறினார். சதுரங்க அட்டை கொண்டு வரப் பட்டது. துறவி வந்தார். அவருக்கு சிறிது சதுரங்கம் தெரியும், ஆனால் பணிரெண்டு வருடங்களாக அவர் ஓரே அறையில் தியானித்துக் கொண்டிருந்தார். அவர் உலகம், சதுரங்கம் அனைத்தையும் மறந்து விட்டார்.
        குரு அவரை பார்த்து துறவியே கேள், இது ஓரு ஆபத்தான விளையாட்டாக இருக்கப் போகிறது. நீ இந்த இளைஞனால் தோற்கடிக்கப் பட்டால், இதோ இந்த வாளால் நான் உனது தலையை வெட்டி விடுவேன். ஏனெனில் நான் தியானதன்மையுள்ள ஓரு துறவி, பணிரெண்டு வருடங்களாக தியானித்துக் கொண்டிருக்கும் ஓருவர், ஓரு சாதாரண இளைஞனிடம் தோற்றுப்போவதை விரும்பமாட்டேன். ஆனால் நீ என்னுடைய கையால் இறந்தால் பிறகு நீ மிக உயர்ந்த சொர்க்கத்தை அடைவாய். எனவே கவலைப் படாதே, எனக் கூறினார்.  
        இளைஞன் சிறிது சங்கடமடைந்தான். பிறகு குரு அவனிடம் திரும்பி, இதோ பார், நீ சதுரங்கத்துள் மூழ்கி விடுவாய் என நீ கூறியுள்ளாய். எனவே இப்போது முழுமையாக முழ்கிவிடு – ஏனெனில் இது வாழ்வா சாவா என்பதற்க்கான கேள்வி. நீ தோற்றுவிட்டால் நான் உன்னுடைய தலையை வெட்டிவிடுவேன். நினைவில் கொள். ஆனால் நான் உனக்கு சொர்க்கத்தை பற்றி உறுதியளிக்க முடியாது. அந்த துறவி எப்படியிருந்தாலும் போய்விடுவார். ஆனால் நான் உனக்கு எந்த சொர்க்கத்தைப் பற்றியும் உறுதியளிக்க முடியாது. நீ இறந்தால் நரகம்தான்.- உடனடியாக நீ ஏழாவது நரகம் சென்று விடுவாய் எனக் கூறினார்.
        ஓரு நொடி இளைஞன் தப்பி செல்ல நினைத்தான். இது ஆபத்தான விளையாட்டாக இருக்கப் போகிறது, இதற்காக அவன் இங்கு வரவில்லை. ஆனால் பிறகு அது கெளரவ குறைச்சலாக தெரிந்தது. அவன் ஓரு சாமுராய், ஓரு வீரனின் மகன். மரணத்தின் காரணமாக தப்பிச் செல்வது அவன் இரத்தத்தில் இல்லை. எனவே அவன் சரி எனக் கூறினான்.     
        விளையாட்டு தொடங்கியது. இளைஞன் வேகமான காற்றினால் ஆடும் இலையைப் போல நடுங்கத் தொடங்கினான். முழு உடலும் நடுங்கியது. அவனுக்கு வியர்க்க, விறுவிறுக்க தொடங்கியது. அவனுக்கு தலைமுதல் பாதம் வரை வியர்த்துக் கொட்டியது. அது வாழ்வா, சாவா என்பதற்குரிய கேள்வியல்லவா?
        சிந்தனை நின்றுவிட்டது. ஏனெனில் இப்படிப் பட்ட ஓரு அவசரத்தில் நீ சிந்திக்க முடியாது. சிந்தனை ஓய்வு நேரத்திற்கு உரியது. எந்த பிரச்னையும் இல்லாத போது நீ சிந்திக்கலாம். உண்மையிலேயே ஓரு பிரச்னை எழும்போது சிந்தனை நின்றுவிடுகிறது. ஏனெனில் மனதிற்கு நேரம் தேவை. அபாயம் உள்ளபோது நேரம் இருப்பதில்லை. உடனடியாக நீ ஏதாவது செய்தாக வேண்டும்.
        ஓவ்வொரு நொடியும் இறப்பு அருகில் வந்து கொண்டிருக்கிறது. துறவி விளையாடத் தொடங்கினார். அவர் சாந்தமாகவும் அமைதியாகவும் காட்சியளித்தார். இளைஞன், தனது சாவு நிச்சயம் என நினைத்துக் கொண்டான். ஆனால் எண்ணங்கள் மறைந்த பிறகு, அவன் அந்த நொடியில் முழுமையாக முழ்கி விட்டான். எண்ணங்கள் மறைந்த பிறகு, அவன் இறப்பு காத்திருக்கிறது என்பதையும் மறந்து விட்டான். ஏனெனில் மரணம் கூட ஓரு எண்ணமே. அவன் மரணத்தை மறந்து விட்டான். அவன் வாழ்க்கையை பற்றி மறந்துவிட்டான். அவன் விளையாட்டின் ஓரு பகுதியாகி விட்டான். ஆட்கொள்ளப் பட்டு அதில் முழுமையாக முழ்கி விட்டான்.  
         போக, போக மனம் முழுமையாக மறைய, மறைய அவன் அருமையாக விளையாடத் தொடங்கினான். அவன் அதுபோல இதுவரை விளையாடியதேயில்லை. ஆரம்பத்தில் துறவி வெற்றி பெற்றுக் கொண்டிருந்தார். ஆனால் இளைஞன் அதில் முழ்கிய ஓரு சில நிமிடங்களில் அருமையாக காய்களை நகர்த்த தொடங்கினான். துறவி தோற்றுப் போக ஆரம்பித்தார். அந்த நொடி மட்டுமே இருந்தது. நிகழ்காலம் மட்டுமே இருந்ததால் அங்கு எந்த பிரச்னையும் இல்லை. உடல் சரியாகி விட்டது, நடுக்கம் நின்றுவிட்டது. வியர்வை ஆவியாகி விட்டது. லேசானவனாக, இறக்கை போல எடையற்றவனாக உணர்ந்தான். வியர்வை கூட உதவியது. அவன் எடையற்றவனானான். அவனுடைய முழு உடலும் பறந்துவிடலாம் போல இருந்தது. அவனுடைய மனம் இல்லை. பார்வை தெளிவடைந்தது. மிகவும் தெளிவடைந்தது. அவனால் முன்னால் பார்க்க முடிந்தது. ஐந்து நகர்தல் முன்பே பார்க்க முடிந்தது. அவன் இதுவரை இவ்வளவு அழகாக விளையாடியதேயில்லை. மற்றவரின் விளையாட்டு குலையத் தொடங்கியது. ஓரு சில நிமிடங்களில் துறவி தோற்றுவிடுவார். அவனுடைய வெற்றி நிச்சயமாகி விட்டது.
        அப்போது திடீரென அவனுடைய கண்கள் தெளிவாக இருந்த போது, கண்ணாடி போல பார்வை கச்சிதமாக, ஆழமாக இருந்தபோது, அவன் அந்த துறவியை பார்த்தான். அவர் மிகவும் வெகுளித்தனமாய் இருந்தார். பணிரெண்டு வருட தியானம் அவரை மலர் போல ஆக்கியிருந்தது.
        பணிரெண்டு வருட எளிமை – அவர் மிகவும் தூய்மையடைந்திருந்தார். ஆசைகளற்று, எண்ணங்களற்று, இலக்கற்று, காரணமற்று இருந்தார். அவர் எவ்வளவு வெகுளியாக இருக்கமுடியுமோ அவ்வளவு வெகுளியாக இருந்தார்......ஓரு குழந்தை கூட அவ்வளவு வெகுளியாக இல்லை. அவருடைய அழகிய முகம், அவருடைய தெளிந்த வான்நீலம் கொண்ட கண்கள்.......இந்த இளைஞன் அவரிடம் கருணை கொண்டான். இப்போதோ, பிறகோ அவருடைய தலை வெட்டப்படும். அவன் இந்த கருணையை உணர்ந்த அந்த நொடியில், தெரியாத கதவுகள் திறந்தன. தெரியவே தெரியாத ஏதோ ஓன்று அவனுடைய இதயத்தை நிரப்பத் தொடங்கியது. அவன் மிகவும் பரவசமாக உணர்ந்தான். அவனுடைய உள்ளிருப்பு முழுவதிலும் மலர்கள் கொட்டத் தொடங்கின. அவன் மிகவும் பரவசமாக உணர்ந்தான். அவன் இதுவரை இந்த பரவசத்தை, இந்த அழகை, இந்த ஆசீர்வாதத்தை அறிந்ததேயில்லை.
        பிறகு அவன் தெரிந்தே காய்களை தவறாக நகர்த்தினான். ஏனெனில் நான் இறந்தால் எதுவும் இழப்படையப் போவதில்லை. என்னிடம் மதிப்புக்குரியது ஏதுமில்லை. ஆனால் இந்த துறவி கொலை செய்யப் பட்டால் அழகான ஓன்று அழிந்துவிடும். ஆனால் நான் பயனற்றவன். துறவியை வெற்றி பெறச் செய்வதற்க்காக தெரிந்தே அவன் தவறாக காய்களை நகர்த்தத் தொடங்கினான். அந்த நொடியில் குரு மேசையை தலைகீழாக கவிழ்த்துவிட்டு சிரிக்கத் தொடங்கினார். அவர், இங்கு யாரும் தோற்கவில்லை. நீங்கள் இருவரும் வென்று விட்டீர்கள். எனக் கூறினார்
       இந்த துறவி ஏற்கனவே சொர்க்கத்தில் இருக்கிறார். அவர் செழிப்பாக இருக்கிறார். அவருடைய தலையை வெட்ட வேண்டிய தேவை இல்லை. “உன்னுடைய தலை வெட்டப் படும்” என குரு கூறிய போது அவர் கவலைப் படவே இல்லை. ஓரு எண்ணம் கூட அவர் மனதில் உதயமாகவே இல்லை. தேர்ந்தெடுக்கும் கேள்வியே இல்லை.- குரு இது இப்படித்தான் எனக் கூறினால் அது சரி. துறவி அவருடைய முழு இதயத்துடன் “சரி“ எனக் கூறிவிட்டார். அதனால்தான் வியர்வையோ, நடுக்கமோ இல்லை. துறவி சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தார். இறப்பு ஓரு பிரச்சனையே அல்ல.
        குரு நீ வெற்றி பெற்றுவிட்டாய். உன்னுடைய வெற்றி இந்த துறவியின் வெற்றியை விடவும் பெரியது. நான் இப்போது உன்னை சீடனாக்கி கொள்கிறேன். நீ இங்கு இருக்கலாம். விரைவில் நீ ஞானமடைவாய் எனக் கூறினார்.     
        இரண்டு அடிப்படையான விஷயங்களும் நடந்து விட்டன, தியானம் மற்றும் கருணை. இவை இரண்டையும் புத்தர் அடிப்படையானவை எனக் கூறியுள்ளார். பிரக்ஞை, கருணை. தியானம் மற்றும் கருணை.
        இளைஞன் எனக்கு விளக்கமளியுங்கள் எனக் கேட்டான். எனக்கு தெரியாத ஏதோ ஓன்று நடந்துள்ளது. நான் ஏற்கனவே நிலைமாற்றம் அடைந்துவிட்டேன். நான் ஓரு சில மணி நேரங்களுக்கு முன்னால் உங்களிடம் வந்த அதே இளைஞன் அல்ல. அந்த மனிதன் ஏற்கனவே இறந்துவிட்டான். ஏதோ ஓன்று நடந்தது. நீங்கள் அதிசயம் நிகழ்த்தி விட்டீர்கள். எனக் கூறினான்.
        குரு, இறப்பு மிக விரைவில் நேரிடக்கூடியதாக இருந்ததால், உன்னால் சிந்தனை செய்ய முடியவில்லை. எண்ணங்கள் நின்றுவிட்டன. இறப்பு மிகவும் பக்கத்தில் இருந்ததால் சிந்தனை இயலாத காரியமாகி விட்டது. இறப்பு மிக அருகில் இருந்ததால் உனக்கும் இறப்புக்கும் இடையே இடைவெளி இல்லை. எண்ணங்கள் நகர இடம் தேவை. இடம் இல்லை, எனவே சிந்தனை நின்றுவிட்டது. தியானம் தன்னிச்சையாக நிகழ்ந்தது. ஆனால் அது போதுமானதல்ல. ஏனெனில் அபாயத்தில் நடைபெறும் இந்த வகையான தியானம் தொலைந்து விடும். அபாயம் போனவுடன் தியானமும் போய்விடும். எனவே நான் சதுரங்க அட்டையை எறிய முடியாது. நான் காத்திருக்க வேண்டியிருந்தது. எனக் கூறினார்.
        உண்மையிலேயே தியானம் நிகழ்ந்தால் காரணம் என்னவாக இருந்தாலும் கருணை பின் தொடர வேண்டும். தியானத்தின் மலர்ச்சி கருணை. கருணை வரவில்லை எனில் உனது தியானம் ஏதோ ஓரு இடத்தில் தவறாகவே உள்ளது.
        பிறகு நான் உனது முகத்தை பார்த்தேன். நீ பரவசத்தில் திளைத்திருந்தாய். உன்னுடைய கண்கள் புத்தரைப் போல இருந்தன. நீ துறவியை பார்த்து இந்த துறவிக்காக என்னை தியாகம் செய்வது சிறந்தது. இந்த துறவி என்னை விட மதிப்பு வாய்ந்தவர். என உணர்ந்து நினைத்துக் கொண்டாய்.  
        இதுதான் கருணை. உன்னை விட மற்றவர் முக்கியமாக படும்போது, நீ மற்றவருக்காக உன்னை தியாகம் செய்யும் பொழுது அது அன்பு. நீ வழியாகவும், மற்றவர் குறிக்கோளாகவும் ஆகும்போது அது அன்பு. நீ குறிக்கோளாகவும், மற்றவர் வழியாகவும் ஆகும்போது அது காமஇச்சை. காமஇச்சை எப்போதும் தந்திரமானது. அன்பு எப்போதும் கருணை மயமானது.
        பிறகு நான் உனது கண்களில் கருணை எழுவதை கண்டேன். பிறகு நீ தோற்றுப் போவதற்க்காகவே காய்களை தவறாக நகர்த்தினாய். எனவே நீ கொல்லப்பட்டு இந்த துறவி காப்பாற்றப்படுவார். அந்த வினாடியில் நான் சதுரங்க அட்டையை கவிழ்த்தாக வேண்டும். நீ வெற்றி பெற்றுவிட்டாய். இப்போது நீ இங்கே இருக்கலாம். நான் உனக்கு தியானம் கருணை இரண்டையும் கற்றுக் கொடுத்துவிட்டேன். இப்போது இந்த வழித் தடங்களை பின் தொடர். அவை உனது தன்னிச்சையான நிலையாகட்டும். – சூழ்நிலையை பொறுத்தோ, எந்த அபாயத்தையும் சார்ந்தோ அல்ல. அவை உனது இருப்பின் ஓரு இயல்பாகட்டும்.
        இந்த கதையை உனக்குள் சுமந்து கொள். உனது இதயத்தில் சுமந்திரு. அது உனது இதயத்தின் துடிப்பாகட்டும். நீ தியானத்தில் வேர் கொண்டு கருணையின் இறக்கைகளை கொண்டிருப்பாய். அதனால்தான் நான் உனக்கு இரண்டு விஷயங்களை கொடுக்க விரும்புகிறேன் எனக் கூறுகிறேன். இந்த பூமியில் வேர்களும் அந்த சொர்க்கத்தில் இறக்கைகளும். தியானம் இந்த பூமி, இது இப்போது இங்கே, இந்த நொடியில் நீ உனது வேர்களைப் பரப்பலாம் அதனைச் செய். வேர்கள் இருக்குமானால் உனது இறக்கைகள் உயர்ந்த வானத்தை அடையும். கருணை என்பது வானம், தியானம் என்பது பூமி. தியானமும், கருணையும் சந்திக்கும்பொழுது ஓரு ஞானி பிறக்கிறார்.
        தியானத்திற்குள் மிக மிக ஆழமாக செல், அப்போதுதான் நீ கருணையில் மிக மிக உயரமாக செல்லமுடியும். எவ்வளவு ஆழமாக மரத்தின் வேர் இருக்கிறதோ, அந்த அளவிற்கு உயரமான சிகரங்களை மரம் அடையும். நீ மரத்தை பார்க்கமுடியும், நீ வேர்களை பார்க்க இயலாது, ஆனால் அவை எப்போதும் ஓரே விகிதத்திலேயே இருக்கும். மரம் வானத்தை அடைந்தால் வேர்கள் கண்டிப்பாக பூமியின் இறுதிவரைச் சென்றிருக்கும். விகிதாச்சாரம் ஓன்றே. உன்னுடைய தியானம் எவ்வளவு ஆழமாக உள்ளதோ, அதே ஆழத்தை உனது கருணையும் கொண்டிருக்கும். எனவே கருணைதான் அளவுகோல். உன்னிடம் கருணை இல்லை, ஆனால் நீ தியானத்தன்மையுடன் இருப்பதாக நீ நினைத்துகொண்டிருந்தால் பிறகு நீ உன்னையே ஏமாற்றிக்கொள்கிறாய். கருணை கண்டிப்பாக நடைபெறவேண்டும், ஏனெனில் அதுவே மரத்தின் மலர்தல்.
        தியானம் கருணையை அடைவதற்குரிய வழிமுறை. கருணைதான் வாழும்வழி. ..................................ஓஷோ

Wednesday, January 26, 2011

வாழ்வின் உண்மை ஆனந்தம்

ஒரு அரசர் தனது அரசவையிலுள்ள அறிஞர்களிடம், நான் எனக்காக ஒரு அழகான மோதிரம் செய்யப் போகிறேன். அதில் மிகச்சிறந்த வைரங்கள் பதிக்கப் போகிறேன்.அந்த மோதிரத்திற்க்குள் மிக மோசமான சமயத்தில் படித்தால் எனக்கு உதவக்கூடிய ஒரு செய்தியை வைத்திருக்க விரும்புகிறேன். அது மிகவும் சிறியதாக இருக்கவேண்டும். அப்போதுதான் அதை மோதிரத்தில் பதிக்கும் வைரத்தின் கீழே மறைத்து வைக்கமுடியும். அப்படி ஒரு செய்தி வேண்டும். என்று கேட்டான்.
        அவர்கள் யாவரும் அறிஞர்கள், மிகச்சிறந்த பண்டிதர்கள். அவர்களால் மிகச்சிறந்த உபதேசங்களை எழுத முடியும். ஆனால் மிக மோசமான தருணத்தில் உதவக்கூடிய இரண்டு அல்லது மூன்று வார்த்தைகளுக்குள் அடங்கும் ஒரு செய்தியை எழுதுவது என்றால்...... அவர்கள் சிந்தித்தனர், தங்களது புத்தகத்தில் தேடிப்பார்த்தனர், ஆனால் அவர்களால் அப்படி ஒன்றை கண்டு பிடிக்கவே முடிய வில்லை. அரசரிடம் ஒரு வயதான வேலையாள் இருந்தான். அவனுக்கு அவரது தந்தையின் வயது. அவன் அரசரது தந்தையின் வேலையாள். அரசி சிறுவயதிலேயே மரணமடைந்து விட்டதால் இந்த வேலையாள்தான் அரசரை பாதுகாப்பாக வளர்த்தான். அதனால் அரசர் இவனை ஒரு வேலையாளாக கருதுவதில்லை. அவனிடம் மிகவும் மதிப்பு வைத்திருந்தான்.
        அந்த வயதானவன், நான் அறிவாளியுமல்ல, பண்டிதனுமல்ல, படித்தவனுமல்ல, ஆனால் எனக்கு அந்த செய்தி என்னவென்று தெரியும் – அப்படி பட்ட செய்தி ஒன்றே ஒன்றுதான் உள்ளது. இவர்களால் அதை உங்களுக்கு கொடுக்கமுடியாது. ஏனெனில் தன்னை உணர்ந்த ஒரு மனிதனால்தான், ஒரு ஞானியால்தான் அது போன்ற ஒரு செய்தியை கொடுக்கமுடியும். என்றான்.
        இவ்வளவு காலம் இந்த அரண்மனையில் இருந்ததால் நான் பல்வேறு தரபட்ட மக்களை சந்தித்திருக்கிறேன். அதில் ஒருமுறை ஒரு ஞானியை சந்தித்திருக்கிறேன். அவர் உனது தந்தையின் விருந்தாளியாக வந்திருந்தார். அவருக்கு சேவை செய்வதற்காக உனது தந்தை என்னை அனுப்பினார். அவர் விடைபெறும்போது, நான் அவருக்கு செய்த பணிவிடைகளுக்கு நன்றியுரைக்கும் விதமாக அவர் இந்த செய்தியை எனக்கு அளித்தார். எனக்கூறி அந்த செய்தியை ஒரு சிறுதாளில் எழுதி அதை சுருட்டி அரசரிடம் கொடுத்து, இதை படிக்க வேண்டாம். மோதிரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். எல்லாமும் முடிந்து விட்டது, வேறு வழியேயில்லை எனும் சமயத்தில் இதை திறந்து பாருங்கள் என்றார்.
        அந்த சமயமும் விரைவிலேயே வந்தது. அந்த நாட்டின்மீது படையெடுப்பு நடந்தது. அரசர் தனது நாட்டை போரில் இழந்தார். அவர் தனது குதிரையில் தப்பித்து ஓடினார். அவரது பின்னால் அவரது எதிரி படை வீரர்கள் குதிரையில் துரத்தி வந்தனர். அவர் ஒரு ஆள், அவர்கள் பலர். அவர் ஒரு பாதை முடிவுக்கு, அதற்கு மேல் பாதையில்லை என்ற இடத்திற்கு, ஒரு மலைமுகடுக்கு வந்து விட்டார். கீழே பெரும் பள்ளத்தாக்கு, அதில் விழுந்தால் முடிந்தது. அவரால் திரும்பியும் போக முடியாது, எதிரிகள் வந்து கொண்டிருந்தனர், குதிரைகளின் குளம்படி சத்தம் கேட்டது. – முன்னேயும் போக முடியாது, அங்கே வழியில்லை.
        திடீரென அவருக்கு மோதிரத்தின் நினைவு வந்தது. அவர் அந்த மோதிரத்தை திறந்து, அந்த பேப்பரை எடுத்தார், அதில் மிகச் சிறந்த பொருளுடைய ஒரு வாசகம் இருந்தது. அது இதுவும் கடந்து போகும் அந்த வாசகத்தை படித்தவுடன் அவருக்குள் மிகப் பெரும் அமைதி வந்தமர்ந்தது. இதுவும் கடந்து போகும், அதுவும் கடந்து போயிற்று.
        எல்லாமும் கடந்து போகும், எதுவும் இந்த உலகில் தங்காது. அரசரை பின்தொடர்ந்து வந்த எதிரிகள் வழி மாறி போய் விட்டனர், வேறு வழியில் அவரை தேடி சென்று விட்டனர். குதிரைகளின் குளம்பொலி படிப்படியாக குறைந்து தேய்ந்து போய் விட்டது. அரசருக்கு அந்த ஞானியிடமும், அந்த வேலையாளிடமும் அளப்பரிய நன்றியுணர்வு தோன்றியது. இந்த வார்த்தைகள் அபூர்வ சக்தி படைத்தவை. அவர் அந்த தாளை மடித்து, திரும்பவும் அந்த மோதிரத்தினுள் வைத்தார்.
        பின் தனது படைகளை திரட்டிக் கொண்டு வந்து, திரும்பவும் போராடி தனது அரசை வென்றார். அவர் தனது தலைநகரத்தில் வெற்றியோடு நுழையும்போது, ஆடல்பாடலோடு கோலாகலமாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அரசர் தன்னைப் பற்றி பெருமையாக உணர்ந்தார். அந்த வேலையாள் அவரது ரதத்தின் கூட நடந்து வந்து கொண்டிருந்தார். அவர், இதுவும் சரியான தருணம். அந்த வாசகத்தை திரும்பவும் பாருங்கள். என்றார்.
        அரசர், என்ன சொல்கிறீர்கள், இப்போது நான் வெற்றி பெற்று இருக்கிறேன். மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள், நான் தோல்வியுற்ற நிலையில் இல்லையே. வேறு வழியே இல்லை என்ற நிலையில் நான் இப்போது இல்லையே. எனக் கேட்டார்.
        அந்த வயதானவன், பாருங்கள், இதைத்தான் ஞானி என்னிடம் கூறினார். அந்த செய்தி கையறு நிலைக்கானது மட்டுமல்ல, அது சந்தோஷ தருணங்களுக்கானதும்தான். நீங்கள் தோல்வியுற்ற நிலையில் மட்டுமல்ல, வெற்றி பெற்ற நிலையில் கூட அந்த செய்தி உண்மையானது தான். நீ தொலைந்து போன சமயத்தில் மட்டுமல்லாமல் முதல் ஆளாக நீ இருக்கும் நேரத்தில்கூட அது தேவைதான். என்று கூறினார்
        அரசர் தனது மோதிரத்தை திறந்து, இதுவும் கடந்து போகும் என்ற செய்தியை படித்தார். உடனே திடீரென அந்த கூட்டத்தினுள்ளும், மகிழ்ந்து கூத்தாடிக் கொண்டிருக்கும் அந்த நேரத்திலும் அதே அமைதி, அதே மௌனம் கவிழ்ந்தது. அந்த பெருமை, அந்த ஆணவம் அகன்றது............ எல்லாமும் கடந்து போகும்..........
..........................ஓஷோ

Sunday, January 23, 2011

யார் குரு? ஆனந்தம்

மிகச் சிறந்த சூஃபி ஞானிகளில் ஒருவரான ஹாசன் என்பவரிடம் இறக்கும் சமயத்தில் உங்களது குரு யார் என்று யாரோ ஒருவர் கேட்டார்.
        அதற்கு அவர், மிக தாமதமாக இந்த கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். நேரம் இல்லை. நான் இறந்து கொண்டிருக்கிறேன். என்று கூறினார். அதற்கு கேள்வி கேட்டவர், நீங்கள் பெயரை மட்டும் சொன்னால் போதுமானது. நீங்கள் இன்னும் உயிரோடு இருக்கிறீர்கள், இன்னும் சுவாசித்து கொண்டும், பேசிக் கொண்டும் இருக்கிறீர்கள். நீங்கள் பெயரை மட்டும் சொன்னால் போதுமானது என்று கேட்டார்.
        அதற்கு ஹாசன் எனக்கு ஆயிரக்கணக்கான குருமார்கள் இருக்கிறார்கள். நான் அவர்களது பெயரை சொல்வதற்கே எனக்கு பல மாதங்கள் பிடிக்கும் அவர்களைப் பற்றி பேச வருடங்கள் ஆகும். இருப்பினும் மூன்று பேர்களை மட்டும் நான் குறிப்பிட விரும்புகிறேன்.
        அதில் ஒன்று ஒரு திருடர். ஒருமுறை நான் பாலைவனத்தில் தொலைந்து போய் வழி கண்டுபிடித்து கிராமத்தை போய் சேரும்போது நடு இரவாகி விட்டது. பாதி இரவு சென்று விட்டது. கடைகள் அனைத்தும் மூடிக் கிடந்தன. கதவுகள் அனைத்தும் அடைபட்டுக் கிடந்தன. ரோட்டில் மனித நடமாட்டமே இல்லை. நான் விசாரிப்பதற்காக யாராவது இருக்கிறார்களா என்று தேடினேன். இறுதியில் சுவற்றில் உள்ளே நுழைவதற்காக கன்னம் வைத்துக் கொண்டிருந்த ஒரு திருடனை பார்த்தேன்.
        நான் அவரிடம், நான் தங்க இங்கே ஏதாவது இடம் இருக்குமா என்று கேட்டேன். அவர், நான் ஒரு திருடன், நீங்களோ ஒரு சுஃபி ஞானி போல தோன்றுகிறீர்கள். இப்போது தங்க இடம் கண்டு பிடிப்பது மிகவும் கடினம். ஆனால் நீங்கள் விருப்ப்பட்டால் என் வீட்டிற்கு வரலாம், திருடனுடன் தங்க உங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லையென்றால் என்னுடன் வாருங்கள். என்று அழைத்தார்.
        நான் கொஞ்சம் ஒரு வினாடி தயங்கினேன். பின் எனக்கு உரைத்தது. ஒரு திருடன் சூஃபியை பார்த்து பயப்படாத போது ஏன் சூஃபி திருடனைக் கண்டு அஞ்ச வேண்டும். உண்மையில் அவன்தான் என்னைக் கண்டு அஞ்ச வேண்டும். அதனால் நான் அவனிடம் சரி நான் உன் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறினேன். நான் அவனுடன் சென்று அவன் வீட்டில் தங்கினேன். அந்த மனிதன் மிகவும் அன்பானவன், மிகவும் அருமையான மனிதர். நான் அவருடைய வீட்டில் ஒரு மாதம் தங்கினேன். ஒவ்வொரு இரவும் அவர் திருடுவதற்கு கிளம்பும்போதும், சரி, நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள், தியானம் செய்யுங்கள், ஓய்வெடுங்கள், நான் என் வேலையை பார்க்கப் போகிறேன் என்பார். அவர் திரும்பி வரும்போது, ஏதாவது கிடைத்ததா என்று நான் கேட்பேன். இன்று எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் நாளை திரும்பவும் முயற்சிப்பேன். என்று கூறுவார். ஒருநாளும் அவர் நம்பிக்கையிழந்து நான் பார்க்கவேயில்லை.
        ஒரு மாதம் முழுவதும் அவர் வெறும் கையுடன்தான் திரும்பி வந்தார். ஆனாலும் அவர் மகிழ்ச்சியாகத்தான் இருந்தார். அவர் நாளை முயற்சி செய்வேன். கடவுள் விருப்பபட்டால் நாளை ஏதாவது கிடைக்கும். நீங்களும் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள். இந்த ஏழைக்கு உதவி செய்யுங்கள் என்று நீங்கள் கடவுளிடம் சொல்லுங்கள். என்று கூறுவார்.
        மேலும் தொடர்ந்து ஹாசன் சொல்லுகையில் நான் பல வருடங்கள் தொடர்ந்து தியானம் செய்து கொண்டிருக்கையில் எதுவும் நிகழவில்லை. நான் மிகவும் மனமுடைந்து நம்பிக்கையிழந்து இது எல்லாவற்றையும் நிறுத்திவிடலாமா என்று பல சமயங்களில் நினைத்ததுண்டு. கடவுள் என்று ஒருவரும் இல்லை, எல்லா பிரார்த்தனைகளும் மடத்தனம், எல்லா தியானங்களும் பொய் என்று நினைப்பேன் – அப்போது திடீரென அந்த திருடனின் நினைவு வரும். அவர் ஒவ்வொரு நாள் இரவும் கடவுள் விருப்பபட்டால் நாளை ஏதாவது கிடைக்கும் என்று கூறியதை நினைத்துக் கொள்வேன்.
        அதனால் மேலும் ஒருநாள் முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைத்துக் கொள்வேன். திருடன்கூட அந்த அளவு நம்பிக்கையுடனும் அந்த அளவு நம்பிக்கையுணர்வுடனும் இருக்கும்போது நான் ஏன் இன்னும் ஒருநாள் முயற்சி செய்து பார்க்கக் கூடாது என்று தோன்றும். பலமுறை இப்படி நிகழ்ந்திருக்கிறது. அந்த திருடனும் அவனைப் பற்றிய நினைவும் நான் இன்னும் ஒருநாள் என்று முயல உதவி செய்திருக்கிறது. ஒருநாள் அது நிகழ்ந்து விட்டது. அது நிகழ்ந்தே விட்டது. நான் அந்த திருடனின் வீட்டை விட்டும் அவனை விட்டும் பலஆயிரம் மைல் தூரம் அப்பால் இருந்தேன். ஆயினும் நான் அந்த திசையில் வணங்கினேன். அவர்தான் எனது முதல் குரு.
        எனது இரண்டாவது குரு ஒரு நாய். நான் மிகவும் தாகமாக இருந்தேன். தண்ணீர் குடிப்பதற்காக நதியை நோக்கி போய்க் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாயும் தண்ணீர் குடிப்பதற்காக நதியை நோக்கி வந்தது. அதற்கும் மிகவும் தாகமாக இருந்தது. அது நதிக்குள் பார்த்தது. அங்கே வேறொரு நாய் இருப்பதை பார்த்தது. – அதனுடைய பிம்பம்தான் – அதைப் பார்த்து பயந்தது. அது குரைத்தது உடனே அந்த நாயும் குரைத்தது. இது மிகவும் பயந்து போய் தயங்கிக் கொண்டே திரும்பி போனது. ஆனால் தாகம் மிகவும் அதிகமாக இருந்ததால் திரும்பி வந்தது, தண்ணீரில் பார்த்தது, அந்த நாய் அங்கேயே இருப்பதை பார்த்தது. ஆனாலும் தாகத்தினால் தண்ணீரில் எட்டிக் குதித்தது, அந்த பிம்பம் கலைந்து போய் விட்டது. தண்ணீரை குடித்து அது ஒரு கோடை காலமாக இருந்ததால் தண்ணீரில் நீச்சலடித்து ஆனந்தப்பட்டது. நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். அதன்மூலம் கடவுளிடமிருந்து எனக்கு ஒரு செய்தி வந்ததை புரிந்து கொண்டேன். ஒருவர் எல்லா பயங்களோடும் எட்டிக் குதித்து விடவேண்டும் என்பதை புரிந்து கொண்டேன்.
        நான் அறியாததற்குள் குதித்து விடும் ஒரு சமயம் வந்த போது ஒரு பயம் வந்தது. அந்த எல்லை வரை போய்விட்டு தயக்கப் பட்டுக் கொண்டு திரும்பி வந்து விடுவேன். அப்போது அந்த நாயின் நினைவுதான் வந்தது எனக்கு. நாய் எட்டிக் குதிக்கும்போது நான் ஏன் எட்டிக் குதிக்கக் கூடாது என்று தோன்றியது. ஒருநாள் நான் அறியாததற்குள் எட்டிக் குதித்துவிட்டேன். நான் கரைந்து அறியாதது மட்டுமே இருந்தது. அந்த நாய்தான் எனது இரண்டாவது குரு.
        எனது மூன்றாவது குரு ஒரு சிறு குழந்தை. நான் ஒரு நகரத்தினுள் சென்றபோது அந்த குழந்தை ஒரு மெழுகுவர்த்தியை ஏந்திக்கொண்டு சென்றது அதன் திரி ஏற்றப்பட்டிருந்தது, மசூதியில் வைப்பதற்காக ஏற்றப்பட்ட அந்த மெழுகுவர்த்தியை கைகளில் எடுத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தது அந்த குழந்தை. ஒரு கிண்டலுக்காக நான் அந்த குழந்தையை நீயா இந்த மெழுகுவர்த்தியை ஏற்றினாய் என்று கேட்டேன். அவன் ஆமாம் என்று கூறினான். நான் தொடர்ந்து, அந்த ஒளி எங்கிருந்து வந்தது என்று உன்னால் கூற முடியுமா மெழுகுவர்த்தி எரியாமல் இருந்தது, நீ ஏற்றினாய் ஒளி வந்தது. நீ ஏற்றியபோது பார்த்தாய் அல்லவா அந்த ஒளி எங்கிருந்து வந்தது என்று உன்னால் கூற முடியுமா என்று கேட்டேன். அந்த பையன் சிரித்துவிட்டு, மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு, இப்போது நீங்கள் இந்த ஒளி எங்கு போனது என்று பார்த்தீர்கள் அல்லவா அது எங்கு போனது என்று எனக்கு கூறுங்கள் என்று கேட்டான். என்னுடைய ஆணவம் சுக்குநூறானது, எனது அறிவு அனைத்தும் பொடிபொடியானது. அந்த வினாடியில் நான் எனது முட்டாள்தனத்தை உணர்ந்தேன். அப்போதிலிருந்து நான் அறிந்தவன் என்பதை விட்டு விட்டேன். என்றார்.
        ஹாசன் மூன்று குருக்களைப் பற்றி கூறினார். மேலும் அவர் பலர் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் எல்லோரையும் பற்றியும் பேச எனக்கு நேரம் இல்லை என்றார்.
        ஆம், அது உண்மை. எனக்கு ஒருவர்தான் குரு என்று கிடையாது. ஏனெனில் எனக்கு ஆயிரக்கணக்கான குருக்கள் இருக்கின்றனர். நான் சாத்தியப்பட்ட எல்லா வழிகளிலும் கற்றுக் கொண்டேன்.
        நீ அப்படிப்பட்ட விதமான ஒரு சீடன் என்றால் உனக்கு குரு என்று ஒருவர் தேவை இல்லை. ஆனால் நினைவில் கொள், குரு என்ற ஒருவர் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நீ தேர்ந்தெடுத்தாலும் சரி, தேர்ந்தெடுக்காமல் எல்லோரையும் வைத்துக் கொண்டாலும் சரி, நீ ஒரு சீடனாக இருக்க வேண்டியது அவசியம்.
        சீடனாக இருப்பது இந்த பாதையில் மிக அவசியமான ஒரு விஷயம்.
        சீடனாக இருப்பது என்றால் - கற்க முடிவது, கற்க தயாராக இருப்பது, இந்த இயற்கைக்கு திறந்தவனாக இருப்பது. நீ ஒரு குருவை தேர்ந்தெடுக்கும் போது என்ன நிகழ்கிறது எப்படி கற்றுக் கொள்வது என கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறாய். ஒரு குருவுடன் இருக்கும்போது நீ மெதுமெதுவாக லயப்பட ஆரம்பிக்கிறாய். மெதுமெதுவாக நீ இயற்கையுடன் லயப்படுவது எப்படி என கற்றுக் கொள்கிறாய்.
        குரு என்பவர் இந்த இயற்கையின் சிறிய வடிவம்தான். குருவுடன் நெருங்கி வர வர நீ அழகு, நேசம், நெருக்கம், அணுக்கம், அன்யோன்யம், ஒப்புக்கொடுத்தல் ஆகியவற்றை பற்றி தெரிந்து கொள்கிறாய். ஒருவரிடம் ஒன்றாக இருக்கும்போது இவ்வளவு ஆனந்தம் கிடைக்கும்போது முழுமையுடன் ஒன்றாக இருக்கும்போது எவ்வளவு ஆனந்தம் கிடைக்கும் என்பதை நீ பார்க்கும் ஒரு நேரம் வரும். குரு என்பவர் ஒரு ஆரம்பம்தான், அவர் முடிவு அல்ல. உண்மையான குரு என்பவர் ஒரு வாசல்தான், நீ அவர் மூலம் சென்று கடந்து போக முடியும். உண்மையான குரு நீ அவரை கடந்து செல்ல உதவுபவர். .................................................................................ஓஷோ

Friday, January 7, 2011

முடிவெடுக்காதீர்கள் ஆனந்தம்

        ஒரு கிராமத்தில் வயதான ஏழை ஒருவன் இருந்தான். ஆனால் அரசர்களே பொறாமை கொள்ளுமளவு அழகான வெண் குதிரை ஒன்று அவனிடம் இருந்தது. யாரும் அப்படிப்பட்ட அழகான, வலிமை பொருந்திய, அம்சமான. கம்பீரமான குதிரையை அதற்குமுன் பார்த்திருக்க முடியாது. அரசன் அந்த குதிரையை என்ன விலை கொடுத்தாவது வாங்க தயாராக இருந்தான். ஆனால் அந்த மனிதன், "இந்த குதிரை என்னை பொருத்தவரை வெறும் குதிரையல்ல, என் குடும்பத்தில் ஒருவன். நான் எப்படி மனிதர்களை விற்கமுடியும்? அவன் ஒரு நண்பன். அவன் ஒரு உடமையல்ல, உன்னால் நண்பனை விற்க முடியுமா? அது சாத்தியமில்லை." என்று கூறி விட்டான். அவன் மிகவும் ஏழை, எல்லா வழியிலும் சபலம் வர வாய்ப்பிருந்தது.   ஆனால் அவன் அந்த குதிரையை விற்கவில்லை.
        ஒருநாள் காலை லாயத்தில் குதிரை இல்லை என்பதை அவன் கண்டான். முழு கிராமமும் ஒன்று திரண்டு, "நீ ஒரு முட்டாள் கிழவன். இப்படி நடக்குமென்று – என்றாவது ஒருநாள் யாராவது குதிரையை திருடி விடுவார்கள் என – எங்களுக்கு முன்பே தெரியும். நீயோ மிகவும் ஏழை – இப்படிப் பட்ட அரிதான ஒன்றை உன்னால் எப்படி பாதுகாக்க முடியும்? இதற்கு பதிலாக அதை நீ முன்பே விற்றிருக்கலாம். நீ என்ன விலை கேட்கிறாயோ அந்த விலைக்கு விற்றிருக்கலாம். நினைத்து பார்க்க முடியாத விலை கிடைத்திருக்கும். இப்போது குதிரை போய்விட்டது. உனக்கு இது ஒரு கெட்டநேரம், இது ஒரு சாபம்" என்றனர்.
         அந்த கிழவன், "அதிகம் பேச வேண்டாம் – குதிரை லாயத்தில் இல்லை என்று மட்டும் கூறுங்கள். இதுதான் உண்மை மற்ற அனைத்தும் அனுமானங்களே. இது அதிர்ஷ்டமா இல்லையா என்பது யாருக்கு தெரியும்? எப்படி உங்களால் முடிவு செய்ய முடியும்?" என்றான்.
மக்கள், "எங்களை முட்டாளாக்காதே. நாங்கள் சிறந்த தத்துவவாதிகளல்ல, ஆனால் இதற்குத் தத்துவம் எதுவும் தேவையில்லை. அரிதான ஒன்று காணாமல் போய்விட்டது. அது கெட்டநேரம் என்பது மிக சாதாரண உண்மை." என்றனர்.
         அந்த கிழவன், "லாயம் காலியாக உள்ளது, குதிரை போய்விட்டது என்பது உண்மை என நானும் ஒத்துக்கொள்கிறேன். மற்றபடி எதுவும் எனக்குத் தெரியாது – அது கெட்டநேரமா நல்லநேரமா – ஏனெனில் இது நிகழ்வின் ஒரு பகுதியே. இதை தொடர்ந்து என்ன நடக்குமென்பது யாருக்கு தெரியும்?" என்றான்.
         மக்கள் சிரித்தனர். கிழவனுக்கு புத்தி பிசகிவிட்டதென அவர்கள் நினைத்தனர். அவன் எப்போதும் கொஞ்சம் கிறுக்கனாகவே இருப்பான். அது எல்லோருக்கும் தெரியும். இல்லாவிடில் இந்த குதிரையை நல்ல விலைக்கு விற்று பணக்காரனாகி இருக்கலாம். ஆனால் அவன் விறகுவெட்டியாகவே வாழ்ந்துவந்தான். அவனுக்கும் மிக வயதாகிவிட்டது. இருப்பினும் காட்டுக்கு சென்று மரங்களை வெட்டி கொண்டுவந்து விற்றுக் கொண்டிருந்தான். அவன் சம்பாதிப்பது கைக்கும் வாய்க்குமே போதவில்லை. அவன் வறுமையிலும் வேதனையிலும் வாடிக் கொண்டிருந்தான். இப்போது அவன் ஒரு கிறுக்கன் என்பது மிகவும் ஊர்ஜிதமாகிவிட்டது.
        பதினைந்து நாட்களுக்கு பிறகு, திடீரென ஒரு இரவில் அந்த குதிரை திரும்பி வந்துவிட்டது. இது திருடப்பட வில்லை. அது காட்டுக்கு தப்பி ஓடிவிட்டது. இப்போது தான் மட்டுமின்றி அது தன்னுடன் கூட தன் இனத்தைச் சேர்ந்த ஒரு டஜன் குதிரைகளையும் கூட்டிக் கொண்டு திரும்பி வந்துள்ளது. திரும்பவும் கிராமத்து மக்கள் திரண்டு வந்து,"அந்த கிழவனிடம், பெரியவரே, நீங்கள் சொன்னது சரிதான், நாங்கள் கூறியது தவறாகிவிட்டது. அது கெட்டநேரமல்ல. அது நல்லநேரம்தான் என்பது நிருபணமாகிவிட்டது. நாங்கள் வலியுறுத்தி கூறியதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள்." என்றனர்.
அந்த கிழவன், "மறுபடியும் நீங்கள் அதிகமாக யோசிக்கிறீர்கள். அந்த குதிரை திரும்ப வந்துவிட்டது என்றும் அதனுடன் இன்னும் பனிரெண்டு குதிரைகள் வந்துள்ளன என்று மட்டும் கூறுங்கள்.- ஆனால் தீர்மானிக்காதீர்கள். இது ஆசீர்வாதமா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. இது ஒரு நிகழ்வின் ஒரு பகுதியே. முழு கதையும் தெரியாமல் எப்படி உங்களால் முடிவு செய்ய முடிகிறது? ஒரே ஒரு பக்கத்தை படித்துவிட்டு முழு புத்தகத்தையும் எப்படி விமர்சனம் செய்ய முடியும்? ஒரு பக்கத்தில் ஒரே ஒரு வரியை படித்துவிட்டு எப்படி அந்த பக்கத்தை பற்றி பேச முடியும்? ஒரே ஒரு எழுத்தை மட்டும் பார்த்துவிட்டு எப்படி அந்த வரியை பற்றி கூற முடியும்? நமது கையில் அந்த எழுத்து அளவு கூட இல்லை, வாழ்வு மிகப் பெரியது – எழுத்தின் பகுதிதான் இருக்கிறது. நீங்கள் முழு வாழ்வையும் பற்றி முடிவெடுக்கிறீர்கள். இது ஒரு ஆசீர்வாதம் எனக் கூற வேண்டாம், யாருக்கும் தெரியாது. முடிவெடுக்காமல் இருப்பதே எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அதனால் என்னை தொந்தரவு செய்யாதீர்கள்." என்றார்.
        இந்த முறை மக்கள் எதுவும் கூறவில்லை. அந்த பெரியவர் சொல்வது சரியாக இருக்கலாம். அதனால் அவர்கள் மெளனமாக இருந்துவிட்டனர், ஆனால் உள்ளே இவன் கூறுவது தவறு என நினைத்துக் கொண்டனர். பனிரெண்டு குதிரைகள் அந்த குதிரையுடன் வந்திருக்கின்றன. சிறிதளவு பயிற்சி கொடுத்தால் போதும் அவைகளை விற்று ஏகப்பட்ட பணம் சம்பாதிக்கலாம் என நினைத்தனர்.
        அந்த பெரியவருக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அவன் இளஞன். இவன் அந்த குதிரைகளுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தான். ஒரு வாரத்திற்க்குள் ஒரு குதிரை மேலிருந்து விழுந்து அவனது கால் எலும்பு முறிந்துவிட்டது. மக்கள் திரும்பவும் கூடி – மக்கள் எப்போதும் எங்கும் ஒரே மாதிரிதான், உங்களைப் போலவே தான் – தீர்மானித்தனர். அவர்களின் முடிவு மிக எளிதாக வந்துவிடக் கூடியது. அவர்கள், "நீங்கள் கூறியது சரிதான். மறுபடியும் நீங்கள் சொல்வதுதான் சரி என நிருபணமாகியிருக்கிறது. இது ஒரு வரப்பிரசாதமல்ல, இது ஒரு கெட்டகாலம்தான். உனது ஒரே மகன் தனது கால்களை இழந்துவிட்டான். உன்னுடைய வயதான காலத்தில் அவன்தான் உனக்கு ஒரே ஆதரவு. இப்போது நீ மிகவும் கஷ்டப் படப் போகிறாய்." என்றனர்.
        அந்த வயதானவன், "நீங்கள் முடிவெடுப்பதற்க்கு மிகவும் ஆவலாக உள்ளீர்கள். வெகுதூரம் நினைப்பை ஓடவிட வேண்டாம். எனது மகன் தனது கால்களை ஒடித்துக் கொண்டான். என மட்டும் கூறுங்கள். இது ஒரு சாபமா வரமா என யாருக்குத் தெரியும்?– யாருக்கும் தெரியாது. மறுபடியும் இது நிகழ்வின் ஒரு பகுதியே, முழுமையாக கொடுக்கப்படவில்லை. வாழ்க்கை பகுதிகளாகத்தான் நிகழ்கிறது, முடிவு முழுமையை ஒட்டித்தான் எடுக்க முடியும்." என்றான்.
        இது நிகழ்ந்து சில வாரங்களுக்குப் பின் இந்த நாடு பக்கத்து நாட்டுடன் சண்டையிட சென்றது. நகரத்தின் அனைத்து வாலிபர்களும் படைக்கு வலுக்கட்டையமாக அழைத்து செல்லப்பட்டனர். அந்த பெரியவரின் மகன் மட்டும் விட்டுவைக்கப் பட்டான். ஏனெனில் அவன் முடமானவன். மக்கள் எல்லோரும் அழுது அரற்றினர். ஏனெனில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் இளைஞர்கள் வலுக்கட்டாயமாக கூட்டிச் செல்லப் பட்டனர். அவர்கள் திரும்பி வருவதற்க்கான சாத்தியக் கூறே இல்லை, ஏனெனில் அவர்கள் சண்டையிடப் போகும் நாடு மிகப் பெரியது. இந்த சண்டை தோல்வியுறப் போகும் சண்டைதான். அவர்கள் திரும்பி வரப் போவது இல்லை. அந்த நகரம் முழுவதும் அழுது கொண்டும், அரற்றிக் கொண்டும் விம்மிக் கொண்டும் இருந்தது.  அவர்கள் அந்த வயதானவனிடம் வந்து, "நீங்கள் சொன்னது சரியே பெரியவரே! கடவுளுக்குத்தான் தெரியும்! நீங்கள் கூறியது மிகவும் சரிதான் – இது வரம்தான் என்பது நிருபணமாகிவிட்டது. உனது மகன் முடமாகி இருக்கலாம், ஆயினும் அவன் உன்னுடன் இருப்பான். எங்களது மகன்கள் ஒரேயடியாக போகப் போகிறார்கள். குறைந்தபட்சம் இவன் உயிருடன் உன்னோடு இருப்பான், மெது மெதுவாக நடக்கக் கூட ஆரம்பிக்கலாம், சிறிதளவு நொண்டி நடப்பானாக இருக்கலாம், ஆனாலும் அவன் சரியாகி விடுவான்." என்றனர்.
       அந்த வயதானவன், "உங்களுடன் பேசவே முடியாது. நீங்கள் மேன்மேலும் கற்பனை செய்துகொண்டே போகிறீர்கள். – முடிவெடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள். யாருக்கும் தெரியாது உங்களது மகன்கள் வலுக்கட்டாயமாக படைக்கு போர்முனைக்கு இழுத்துச் செல்லப் படுகிறார்கள்., என்னுடைய மகன் இழுத்துச் செல்ல பட வில்லை என்பதை மட்டும் கூறுங்கள். இது வரமா சாபமா என்பது யாருக்கும் தெரியாது. யாராலும் தெரிந்து கொள்ளவும் முடியாது. கடவுளே அறிவார்." என்றார்.
        நாம் எதையும் கடவுளே அறிவார் எனக் கூறுவதன் அர்த்தம் முழுமைக்கு மட்டுமே தெரியும் என்பதுதான். முடிவெடுக்காதே, முடிவெடுத்தால், தீர்மானித்தால், ஒருபோதும் உன்னால் முழுமையுடன் ஒருங்கிணைய முடியாது. நிகழ்வின் பகுதிகளால் கவரப்பட்டு விடுவீர்கள். சிறிய விஷயங்களின் மூலம் முடிவெடுக்கவும் தீர்மானிக்கவும் ஆரம்பித்து விடுவீர்கள்.

கடவுளைத் நம்பாதீர்கள் ஆனந்தம்

       வாழ்க்கையின் ஒவ்வொரு கோணத்தையும், படைபின் ஒவ்வொரு ரகசியத்தையும் நுணுக்கமாக கவனித்து உருவான கலாச்சாரம், இங்கு போல் உலகத்தில் வேறு எங்கும் இல்லை.
       வாழ்க்கையின் பூரணத்துவத்தை வேர் வரை உய்ந்து உணரக்கூடிய கலாச்சாரத்தில் பிறந்தும், உலகில் நாம் கோமாளிகளாகத் தோற்றம் அளிக்கக் காரணம் என்ன?
       அடிப்படையான பிழைப்புக்குக் கூட நம்மை நம்புவதை குறைத்துக் கொண்டு, கடவுளை நம்பி இருப்பது தான்!
       இந்த உலகில் த்ங்களுக்குத் தேவையானதை தேடிப் பெற, மண்புழுவிலிருந்து மாபெரும் யானை வரை யாவும் த‌ங்கள் திறமையை நம்பித்தான் இருக்கின்றன. யாரிடமும் போய் உதவி கேட்பதில்லை.
       அவற்றையெல்லாம் விட மிக அதிகமான புத்திசாலித்தனம் கொண்ட மனிதன் மட்டும்தான் தனக்குத் தேவையானதைக் கடவுளிடம் கேட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான்.
       நீங்களும் பிழைத்திருக்க உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கைகளும் கால்களுமே போதும்!
       உங்கள் உடலையும் மனதையும் எப்படி திறம்படப் பயன்படுத்துவது என்பதற்கான பயிற்சிகள் கொடுத்தால் போதும்!
       அதை விட்டுவிட்டு, கடவுளை உங்கள் பிழைப்புக்காக உதவுவதற்கு அழைப்பது கேவலம்.
       ஆம், தினப்படி வாழ்க்கைக்குக் கடவுள் தேவையில்லை!
       பல லட்சம் கோயில்கள் இருந்தும், எங்கு திரும்பினாலும் ஏன் வேதனை மிகுந்த முகங்களைப் பார்க்கிறோம்?
       உண்மையையும், உபதேசத்தையும் போட்டுக் குழப்பிக் கொண்டதால் வந்த பிரச்சனை இது.
       கடவுள் உங்களை விட மிக சக்தி வாய்ந்தவர்; அவர் இல்லாமல் ஓர் அணுவும் அசையாது என்பீர்கள்.
       ஆனால் அவரை நம்பி உண்மையிலேயே உங்களை ஒப்படைப்பீர்களா? மாட்டீர்கள்?
       அவரின் புத்திசாலித்தனத்தின் மீது சந்தேகம் கொண்டு தினம் தினம் அவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் முன் நின்று கண்களை மூடிய படி, நீங்கள் அல்லவா அவருக்கு சொல்லிக் கொடுக்கிறீர்கள்?
       உழைக்காமல் சாப்பிடவும், படிக்காமல் தேர்வுகளில் பாஸ் செய்யவும், உங்கள் த‌வறுகள் கவனிக்கப்படாமல் போகவும் கடவுளைத் துணையிருக்கச் சொல்லுகிறீர்கள்.
       வாழ்க்கை திடுமெனப் புரண்டுவிட்டால் என்ன செய்வது என்று கடவுளை ஒரு இன்சூரன்ஸாக வைத்திருக்கிறீர்கள். கோயில் கோயிலாக அதற்கான பிரிமியம் கட்டுகிறீர்கள்.
       'இதையெல்லாம் கொண்டு வா!' ' இதிலிருந்து காப்பாத்து!' என்று உங்கள் சேவகனாகவும், பாதுகாப்பு சிப்பாயாகவும் கடவுளை நியமிக்கப் பார்க்கிறீர்கள்.
       வாழ்க்கையை பற்றிய அச்சம் மட்டுமே உங்களிடம் கடவுள் நம்பிக்கையை வளர்த்திருந்தால் உங்களிடம் தெய்வமும் தங்காது... வாழ்க்கையும் மிஞ்சாது!
       சங்கரன்பிள்ளையிடம் ஒரு வேலைக்காரன் இருந்தான். ஒரு முறை உப்பும் சர்க்கரையும் வாங்கி வர அவனை சங்கரன்பிள்ளை கடைத்தெருவுக்கு அனுப்பினார்.
       வேலைக்காரன் முத‌லில் பை நிறைய சர்க்கரை வாங்கினான். அடுத்ததாக உப்பு வாங்கப் போனபோது, 'இரண்டையும் கலந்து வாங்கி வந்து விடாதே' என்று சங்கரன்பிள்ளை எச்சரிக்கை செய்திருந்தது நினைவுக்கு வந்தது.
       பையை உள்ளும் வெளியுமாக புரட்டி விட்டால் வேறொரு பையாகி விடுமே என்று புரட்டினான், சர்க்கரையெல்லாம் தெருவில் கொட்டி வீணானது.
       பையில் உப்பை நிரப்பிக் கொண்டு வீடு திரும்பினான்.
       "உப்பு இருக்கிறது சர்க்கரை எங்கே?" என்று சங்கரன்பிள்ளை கேட்டார்.
       அந்த புத்திசாலி வேலைக்காரன், 'பையின் அந்தப் பக்கம் இருக்கிறது' என்று பையை மறுபடி புரட்டினான். உப்பும் பூமியில் கொட்டி மண்ணில் கலந்தது.
       அச்சமும் கடவுள் நம்பிக்கையும் இப்படித்தான். இரண்டையும் குழப்பிக்கொண்டால் எதற்கும் உதவாது. இத்ற்கு பக்தி என்று பெயர் சூட்டி ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.
       உண்மையில் கடவுளை உங்க‌ளுக்கு மேலானவராக எண்ணினால், உங்கள் வாழ்க்கை எதிர்பார்த்தபடி நடக்காத போது, ஆஹா, கடவுள் விருப்பப்படி நடக்கிறதே! என்று ஆனந்தமல்லவா கொள்ள வேண்டும்! முடிகிறதா?
       மாறாக, வாழ்க்கையை எப்படி நடத்தித்தர வேண்டும் என்று பிரார்த்தனை என்ற பெயரில் கடவுளுக்கு உத்தரவு அல்லவா கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்?
       சந்தேகம் இருக்கும் மனதில் பக்தி நிகழ்வதில்லை. கடவுளிடம் பணிவது போன்ற பாசங்கு தான் நிகழ்கிறது.
       பக்தி என்பது உங்கள் அடையாளங்களை இழந்து எதன் மீது பக்தி கொண்டீர்களோ அதனுடன் இரண்டரக் கரைவது.
       உங்கள் தவறுகளுக்கான பழியை சகமனிதர்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லாத‌ போது, தெய்வச் செயல் என்று அவற்றை சுமத்த வசதியான தோள்களாகக் கடவுளை வைத்திருக்கிறீர்கள்.
       அதன் பெயர் பக்தி இல்லை. போலித்தனம்!
       உங்கள் வாழ்க்கையை, கடவுளின் உதவியைக் கோராமல் நீங்களாக வாழக் கற்றுக் கொண்டீர்களானால், உங்கள் வாழ்க்கை மேன்மையாகிவிடும்.
       உங்களூக்குத் தேவையான உணவு கிடைத்துவிட்டது, விரும்பிய துணை, குழந்தைகள், வசதிகள் அனைத்தும் கிடைத்து விட்டது, இருந்தாலும் இன்னும் வேறு எதற்காகவோ மனம் ஏங்குகிறதே அதன் பெயர் என்ன?
       இந்தப் படைபின் வேர் என்ன என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் அப்போது தான் தலையெடுக்கிறது என்று அர்த்தம். அதுதான் உண்மையான தேடல்......
       அப்போது தான் கடவுளைப் பார்க்க நீங்கள் தயார். உண்மையான ஆனந்தத்தை அடைய நீங்கள் தயார்..........அதுவரை கடவுளைத் துரத்தாதீர்கள், விட்டுவிடுங்கள்........
வாழ்க வளமுடன்!

Thursday, January 6, 2011

மனநிலை ஆனந்தம்

        ஒரு நாட்டின் ராஜா ஒவ்வொரு நாள் இரவும் நகர்வலம் வருவான். அப்போது அவன் தினமும் ஒரு துறவி மரத்தடியில் அசைவின்றி சிலைபோல அமர்ந்திருப்பதை போல பார்ப்பான். அவனுக்கு அமைதியாக அந்த துறவி அமர்ந்திருப்பதை பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.
        அவனால் தனது ஆர்வத்தை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதனால் ஒருநாள் தனது குதிரையை நிறுத்தி இறங்கி, "சுவாமி, உங்களது தியானத்தைக் கலைத்ததற்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்." என்றான்.
        அந்த துறவி தனது கண்களை திறந்து, இங்கே எந்த மன்னிப்புக்கும் இடமே இல்லை, நான் தியானம் செய்யவில்லை, இங்கே தியானம்தான் இருக்கிறது – யாரும் அதை தொந்தரவு செய்ய முடியாது. ஆனால் உனது ஆர்வம் எதுவோ அதை பூர்த்தி செய்துகொள்,என்றான்.
        அரசன், "நீங்கள் எனது அரண்மனைக்கு வர வேண்டும். நான் உங்களை கவனித்துக் கொள்வேன். இந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களது தவத்தினாலும், உங்களது பொலிவினாலும், அமைதியினாலும் நான் ஈர்க்கப்பட்டு விட்டேன். அமைதியாக இந்த மரத்தடியில் நீங்கள் அமர்ந்திருப்பதை பார்த்தால் ஒரு புத்தரை பார்ப்பது போல இருக்கிறது. நான்தான் இந்த நாட்டின் அரசன், நான் உங்களை எனது அரண்மனைக்கு அழைக்கிறேன்."  என்றான்.
        இப்படித்தான் காட்டுமிராண்டிதனமான மனம் வேலை செய்கிறது. அரசன் அந்த இளைஞனை தனது அரண்மனைக்கு வருமாறு அழைக்கிறான் – ஆனால் அவனது ஆழ் மனதில் இவர் தனது அழைப்பை ஏற்றுக் கொள்ளக் கூடாதென தோன்றுகிறது. ஏனெனில் அப்போது அவர் அரண்மனையையும் ஆடம்பரத்தையும் விரும்புகிறார் என ஆகி விடுமென பயப்படுகிறான்.
        ஆனால் அந்த துறவியோ எழுந்து நின்று, "போகலாம்" எனக் கூறுகிறார். 
        இப்போது உடனடியாக அந்த சூழ்நிலையே மாறுகிறது. அரசனின் மனம், "நான் இப்போது என்ன செய்வது?  அரசனின் விருந்தாளியாக இருப்பதற்கு, அரண்மனையில் இருக்கும் சுகங்களை அனுபவிப்பதற்கு இவர் ஆர்வமாக இருப்பது போல தோன்றுகிறதே, இவர் உண்மையான துறவியே அல்ல." என அரசன் மனம் நினைக்கிறது. எந்த அளவு ஒருவர் தன்னை துன்புறுத்திக் கொள்கிறாரோ அந்த அளவு அவர் ஒரு துறவி என்பது பழமையான ஒரு கருத்து. வசதியின்றி இருப்பது மதம். நோய், பசி, என தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ள ஆயிரம் வழிகள்........ அப்போது தான் அவர் ஒரு சிறப்பான துறவி. அரசனின் மனதில் அந்த துறவி தனது துறவிதன்மையிலிருந்து கீழிறங்கி விட்டார். ஆனால் இப்போது ஒன்றும் செய்ய முடியாது. தனது வார்த்தையிலிருந்து மாற முடியாது.
        ஆனால் அந்த துற‌வி எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் எதுவும் பேசவில்லை. அரசன் அரண்மனையின் சிறப்பான இடத்தை கொடுத்து நல்ல வேலையாட்களை அமர்த்தி துறவியை கவனித்துக்கொள்ள இளம்பெண்களை ஏற்பாடு செய்தான். துறவி இது ஒவ்வொன்றையும் ஏற்றுக் கொள்ள கொள்ள அரசனின் மனதில் அந்தத் துறவி தனது துறவிதன்மையிலிருந்து கீழிறங்கி கொண்டே வந்தார். என்ன வகையான துறவி இவர்? அழகான மிகப் பெரிய படுக்கையை ஏற்றுக் கொண்டார். அரண்மனையின் சிறப்பான உணவு வகைகளை உண்டார்.
        அரசன், "கடவுளே, மடையன் நான். இவன் என்னை ஏமாற்றிவிட்டான். இவன் வலை விரித்து பிடித்துவிட்டான். நான் ஒவ்வொரு நாள் இரவும் போகும் வழி அறிந்து அந்த இடத்தில் ஒரு புத்தரைப் போல அமர்ந்து என்னை ஏமாற்றும் வகை அறிந்து என்னை வீழ்த்தியிருக்கிறான். நானும் ஏமாந்து விட்டேன். இப்போது இவனை மெல்லவும் முடியாது, துப்பவும் முடியாது. அரண்மனைக்குள் வந்துவிட்டான். மிகவும் ஏமாற்றுக்காரன் இவன்." என்று நினைத்தான்.
        ஆனால் இப்படிப்பட்ட மனநிலையோடு எவ்வளவு நாள் தாக்கு பிடிக்கமுடியும்?
        ஆறு மாதம் கழித்து ஒருநாள் அதிகாலையில் தோட்டத்தில் உலாவியபடி பேசிக் கொண்டிருக்கையில், அரசன், ஒரு விஷயம் உங்களிடம் கேட்க வேண்டும். அது என்னை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. என்னால் அதிலிருந்து விடுபட முடியவில்லை. அதனால் ஆறு மாதங்களாக சரியாக தூங்கக் கூட முடியவில்லை. என்றான்.
        துறவியோ, நீ எதை வேண்டுமானாலும் கேட்கலாம். என்று கூறினான்.
        நான் இப்படி உங்களிடம் கேட்கக்கூடாது. ஆனாலும் இவ்வளவு காலமாக இந்த அரண்மனை சுகத்தை அனுபவிக்கும் துறவியாகிய‌ உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று எனக்கு தெரிய வேண்டும். நீங்களும் அரண்மனையில்தான் இருக்கிறீர்கள், எல்லா சுகங்களையும் அனுபவிக்கிறீர்கள், உங்களுக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு என்ன?
        என்றாவது ஒருநாள் இந்த கேள்வி வரும் என்று எனக்குத் தெரியும். உண்மையில் நான் இங்கே வருவதற்காக மரத்தடியில் எழுந்து நின்றபோதே அது உன்னுள் எழுந்து விட்டது. நீ தைரியசாலி அல்ல. நீ இந்த கேள்வியை அப்போதே கேட்டிருக்க வேண்டும். ஆறு மாதங்கள் தேவையின்றி உனது தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை, ஆறு மாதங்களை வீணடித்திருத்த வேண்டியதில்லை. நான் உனது கேள்விக்கு பதிலை இங்கு சொல்ல போவதில்லை. நீ என்னுடன் வர வேண்டும், என்றார் துறவி.
        இருவரும் பல மைல் தாண்டி சென்று கொண்டிருந்தனர். ஒரு ந‌தியை கடந்தனர். கரையை கடந்தவுடன் துறவி, "நான் தொடர்ந்து போகப் போகிறேன். என்னுடன் வர நீங்கள் தயாரா" என்றார்.
        அரசன், "என்னால் எப்படி தொடர்ந்து வர முடியும்?  என்னுடைய அரண்மனை, என்னுடைய அரசாங்கம், என்னுடைய மனைவி, என்னுடைய குழந்தைகள்....... ஆயிரக்கணக்கான கவலைகளும் பிரச்னைகளும் எனக்கு உள்ளன. என்னால் எப்படி உங்களோடு தொடர்ந்து வர முடியும்?" என்றான்.
        துறவியோ, வித்தியாசத்தை பார்த்தாயா, நான் போகிறேன். நான் அரண்மனையில் எவ்வளவு ஆனந்தத்தோடு இருந்தேனோ அதே ஆனந்தத்தோடு மரத்தடியிலும் இருப்பேன் – இம்மியளவும் கூடவும் குறைவும் இல்லாமல். நான் காட்டில் இருந்தாலும் சரி, அரண்மனையில் இருந்தாலும் சரி எனக்கு எல்லாம் ஒரே நிலைதான். என்றார்.
        தான் இவ்வளவு மோசமாக நினைத்ததை எண்ணி அரசன் மிக வருந்தினான். அவன் துறவியின் காலில் விழுந்து, இப்படி நினைத்ததற்காக  என்னை மன்னித்து விடுங்கள். என்னை நினைத்தால் எனக்கே கேவலமாக இருக்கிறது. என்றான். நீங்க‌ள் மீண்டும் என் அர‌ண்ம‌னைக்கே வ‌ர‌வேண்டும் என்றான்.
        துறவியோ, அப்படி நினைக்காதே. நீ மன்னிப்பு கேட்டு கண்ணீர் விடுவதால் திரும்பி வருவதற்கு எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை. ஆனால் நீ திரும்பவும் கடவுளே, என்னை இவன் திரும்பவும் ஏமாற்றி விட்டானோ என்று நினைக்க ஆரம்பித்துவிடுவாய். நான் திரும்பவும் வருவதில் எனக்கு எந்த வித கஷ்டமும் இல்லை. ஆனால் உன் மீதுள்ள கருணையால் நான் வரப் போவதில்லை. என்னை போகவிடு. இந்த முழு உலகமும் பரந்து விரிந்திருக்கிறது, எனக்கு எதுவும் பெரிதாக தேவையில்லை. ஒரு மரநிழல் மட்டுமே போதுமானது. எதுவாக இருந்தாலும் சரியே. என்றார்.
       ஆனால் அரசன், இல்லை, இல்லை. நீங்கள் வராவிட்டால் நான் மிகவும் கவலைப்படுவேன், காயப்பட்டுப்போவேன், நான் என்ன செய்துவிட்டேன் என வருத்தப்பட்டுப் போவேன். என்று வலியுறுத்திச் சொன்னான்.
       அந்த துறவியோ, நீ இப்போது என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிட்டாய். நான் வருவதில் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை என நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஆனால் நினைவில் வைத்துக் கொள், என்ன வித்தியாசம் என திரும்பவும் உனக்கு தோன்ற ஆரம்பித்துவிடும். என்றார். உன் தூக்க‌ம், நிம்மதி போய்விடும். ஆகவே உன் மீது கருணை கொண்டு நான் வரப்போவதில்லை, என் வழியே போகவிடு என்று கூறிவிட்டு போய் விட்டார்........ எந்த மனநிலையிலும்  நிலையிலும் ஆனந்தமாக வாழ்பவர்களே.... உயிர்ப்போடு வாழ்பவர்கள்.

Wednesday, January 5, 2011

திருடனுக்கு கூட கிடைக்கும்: ஆனந்தம்

        நாகார்ஜூனா என்ற மிகச் சிறந்த ஞானியைப் பற்றி ஒரு அழகான கதை உண்டு.
        அவர் ஒரு நிர்வாணமாக திரியும் பக்கிரி, ஆனால் உண்மையான தேடுதல் உடையவர்கள் அனைவராலும் நேசிக்கப்பட்டார். ஒரு நாட்டின் அரசி கூட நாகார்ஜூனா மீது மிகவும் பக்தியோடு இருந்தாள். அவள் ஒருநாள் நாகார்ஜூனாவை அரண்மனைக்கு விருந்தாளியாக அழைத்தாள். நாகார்ஜூனா அரண்மனைக்குச் சென்றார்.
        அரசி தனக்கு ஒரு உதவி வேண்டும் எனக் கேட்டாள். அவர் என்ன உதவி வேண்டும் எனக் கேட்டார். அதற்கு அரசி உங்களது பிச்சைப் பாத்திரம்தான் வேண்டும் என்றாள்.
        நாகார்ஜூனா கொடுத்துவிட்டார் – அது ஒன்றுதான் அவரிடம் உள்ள பொருள் – பிச்சைப் பாத்திரம். ராணி உள்ளே சென்று வைரங்கள் பதிக்கப்பட்ட தங்கத்திலான பிச்சைப் பாத்திரம் ஒன்றைக் கொண்டு வந்து நாகார்ஜூனாவிடம் கொடுத்தாள்.
        அவள், இதை வைத்துக் கொள்ளுங்கள். வருடக் கணக்காக உங்கள் கைகளில் இருந்த அந்த பிச்சை பாத்திரத்தை நான் வழிபட போகிறேன் – உங்களின் துடிப்பில் சிறிதளவாவது அது கொண்டிருக்கும். இனி அது என் கோவிலாக இருக்கும். உங்களைப் போன்ற மனிதர் ஒரு சாதாரண மரத்திலான பிச்சை பாத்திரத்தை ஏந்தக் கூடாது. இந்த தங்க பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். நான் இதை உங்களுக்காகவே விசேஷமாக செய்தேன். என்றாள்.
        அது உண்மையிலேயே விலையுயர்ந்தது. நாகார்ஜூனா சாதாரண முனிவர்கள் போல இருந்திருந்தால், நான் இதை தொட மாட்டேன். நான் துறவி. இந்த உலகத்தை துறந்து விட்டேன் என்று கூறியிருப்பார். ஆனால் அவரைப் பொறுத்தவரை எல்லாமும் ஒன்றுதான், அதனால் அவர் அந்த பாத்திரத்தை எடுத்துக் கொண்டார்.
        அவர் அரண்மனையை விட்டுப் போகும்போது, ஒரு திருடன் அவரைப் பார்த்தான். அவனால் அவனது கண்களையே நம்ப முடியவில்லை. ஒரு நிர்வாண சந்நியாசியிடம் இவ்வளவு விலையுயர்ந்த பொருளா இவரால் எவ்வளவு காலம் இதை பாதுகாக்க முடியும் அதனால் திருடன் அவரை பின்தொடர்ந்தான்.
        நாகார்ஜூனா ஊருக்கு வெளியே உள்ள ஒரு பாழடைந்த கோவிலில் தங்கியிருந்தார் – கதவுகளும் இல்லை, ஜன்னல்களும் இல்லை. மிகவும் பாழடைந்தது. திருடன் அதைப் பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். சீக்கிரமே அவர் தூங்கப் போய்விடுவார். பின் எந்த கஷ்டமும் இல்லை. நான் அந்த பாத்திரத்தை எடுத்துக் கொள்வேன் என நினைத்தான்.
        திருடன் கதவுக்கு வெளியே ஒரு சுவறின் அருகில் பதுங்கியிருந்தான். நாகார்ஜூனா அந்த பாத்திரத்தை வெளியே விட்டெறிந்தார். திருடனால் நடந்ததை நம்பவே முடியவில்லை.
        நாகார்ஜூனா இந்த திருடன் தன்னை பின் தொடர்ந்து வருவதை பார்த்திருந்தார். இவன் தனக்காக வரவில்லை, இந்த பாத்திரத்திற்காகத் தான் வருகிறான் என்பதை நன்கு அறிந்த அவர் அதை வெளியே வீசி விட்டார். எதற்கு அனாவசியமாக அவன் காத்திருக்க வேண்டும் எடுத்துக் கொண்டு அவன் போகட்டும், நானும் ஓய்வெடுக்கலாம் என நினைத்தார்.
        இவ்வளவு விலையுயர்ந்த பொருளை நாகார்ஜூனா இவ்வளவு சுலபமாக வீசி விட்டாரே என ஆச்சரியப்பட்ட திருடனுக்கு அது தனக்காகத் தான் வீசப்பட்டது என நன்றாகத் தெரிந்தது. அதனால் அவருக்கு நன்றி சொல்லாமல் அவனால் போக முடியவில்லை.
        அவன், தலையை உள்ளே நீட்டி, சாமி, மிகவும் நன்றி. ஆனால் நீங்கள் மிக வித்தியாசமான மனிதர் – என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. மேலும் எனக்கு ஆழமான ஆசை ஒன்று எழுகிறது. ஒரு திருடனாக இருந்து என் வாழ்நாளை நான் வீணடித்துவிட்டேன். ஆனால் உங்களைப் போன்றவர்களும் இருக்கிறார்களா நான் உள்ளே வந்து உங்கள் காலில் விழலாமா எனக் கேட்டான்.
        நாகார்ஜூனா சிரித்தார், அவர், வா, அதற்காகத்தான் அந்த பாத்திரத்தை வெளியே வீசினேன். அப்போதுதான் நீ உள்ளே வருவாய். என்றார்.
        திருடன் மாட்டிக் கொண்டான். உள்ளே வந்து பாதங்களை தொட்டான். அந்த சமயத்தில் திருடன் மிகவும் வெளிப்படையாக இருந்தான். ஏனெனில் இவர் சாதாரண மனிதர் அல்ல என்பதை அவன் கண்டான். அவன் மிகவும் மென்மையாகவும், திறந்தும், நன்றியோடும், திகைத்தும், உள்வாங்கத்தயாராகவும் இருந்தான். அவன் அவர் காலில் விழுந்து வணங்கிய போது, வாழ்க்கையில் முதன்முறையாக அவன் தெய்வீகத்தை உணர்ந்தான்.
        அவன் நாகார்ஜூனாவிடம், நானும் உங்களைப் போல மாற இன்னும் எத்தனை பிறவிகள் ஆகும் எனக் கேட்டான்.
        நாகார்ஜூனா, எத்தனை பிறவிகளா அது இங்கேயே இப்போதே, இன்றே நடக்கலாம் என்றார்.
        திருடன், நீங்கள் கிண்டல் செய்கிறீர்கள். அது இப்போது எப்படி நிகழமுடியும் நான் ஒரு திருடன், நாடே அறியும். அவர்களால் என்னை பிடிக்க முடிய வில்லை. அரசர் கூட என்னை பார்த்து பயப்படுவார். ஏனெனில் மூன்றுமுறை பொக்கிழத்திற்க்குள் நுழைந்து திருடிக் கொண்டு போயிருக்கிறேன். அவர்களுக்கு அது நான்தான் எனத் தெரியும். ஆனால் அத்தாட்சியில்லை. நான் ஒரு பக்கா திருடன் – நீங்கள் இந்த பகுதிக்கு அன்னியராக இருப்பதால் உங்களுக்கு இவை தெரியாமலிருக்கலாம். இப்போதே நான் எப்படி மாற முடியும் என்றான்.
        நாகார்ஜூனா ஆயிரக்கணக்கான வருடங்களாக வெளிச்சமே இன்றி இருண்டு கிடக்கும் ஒரு வீட்டிற்க்குள் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொண்டு வந்தால், இருள் ஆயிரக்கணக்கான வருடங்களாக நான் இங்கே இருக்கிறேன். ஒரு தீபத்தை உள்ளே கொண்டு வந்ததால் மட்டுமே என்னால் வெளியே போக முடியாது. நான் நெடுங்காலமாக இங்கே இருக்கிறேன். எனக் கூற முடியுமா இருள் சண்டையிட முடியுமா ஒருநாள் இருட்டு, ஆயிரக்கணக்கான வருட இருட்டு என இருட்டில் பேதம் உண்டா எனக் கேட்டார்.
        திருடனால் அதை புரிந்து கொள்ள முடிந்தது, இருள் வெளிச்சத்தை எதிர்க்க முடியாது. வெளிச்சம் வரும்போது, இருள் மறைந்துவிடும். நாகார்ஜூனா, நீ பல பிறவி பிறவியாக இருளில் இருந்திருக்கலாம். – அது ஒரு பொருட்டேயல்ல. நான் உனக்கு ஒரு ரகசியத்தை கொடுக்கிறேன். அதன்மூலம் நீ உன் இருப்பில் வெளிச்சத்தை கொண்டு வர முடியும். என்றார்.
        திருடன், என் தொழில் அதை நான் விட வேண்டுமா எனக் கேட்டான்.
        நாகார்ஜூனா அதை நீதான் தீர்மானிக்க வேண்டும். எனக்கு உன் தொழிலைப் பற்றியோ உன்னைப் பற்றியோ அக்கறையில்லை. உன் இருப்பில் வெளிச்சத்தை கொண்டுவரக்கூடிய ஒரு ரகசியத்தை நான் உனக்குத் தருவது மட்டுமே நான் செய்வது. மற்றபடி எல்லாமே உன்னை பொறுத்தது. என்றார்.
        திருடன், ஆனால் நான் மற்ற சன்னியாசிகளிடம் சென்றபோது, அவர்கள் எப்போதும், முதலில் திருடுவதை நிறுத்து – பின்புதான் தீட்சையளிக்க முடியும் எனக் கூறுவர். என்றான்.
        நாகார்ஜூனா சிரித்து, நீ சன்னியாசிகளிடம் செல்லாமல் திருடர்களிடம் சென்றிருக்கலாம். அவர்களுக்கு ஒன்றும் தெரியாது.
        நீ வெறுமனே உன் சுவாசத்தை கவனி – இது புத்தரின் முறை – உன் சுவாசம் உள்ளே போவதையும் வெளியேறுவதையும் கவனி. எப்போதெல்லாம் நினைவு வருகிறதோ, அப்போதெல்லாம் உன் சுவாசத்தை கவனி. திருடப் போகும்போது, வேறு யாருடைய வீட்டிற்க்குள் இரவில் நுழையும்போதும், உன் சுவாசத்தை கவனி. பொக்கிஷத்தை திறக்கும்போதும், வைரங்கள் அங்கே இருப்பதை பார்க்கும்போதும் உன் சுவாசத்தை கவனி. என்ன செய்ய விரும்புகிறாயே அதை செய் – ஆனால் சுவாசத்தை கவனிக்க மறந்து விடாதே. என்றார்.
        திருடன், இது மிகவும் எளிதானதாக தோன்றுகிறதே. ஒழுக்கம் தேவையில்லையா குணநலன் வேண்டாமா வேறு எதுவும் தேவையில்லையா என்றான்.
        நாகார்ஜூனா, நிச்சயமாக வேறு எதுவுமில்லை. உன் சுவாசத்தை கவனி. அவ்வளவுதான் என்றார்.
        பதினைந்து நாட்களுக்கு பிறகு திருடன் திரும்ப வந்தான். ஆனால் அவன் முற்றிலும் புதியவனாக இருந்தான். அவன் நாகார்ஜூனாவின் காலில் விழுந்து வணங்கி, என்னை சிக்க வைத்து விட்டீர்கள். நான் ஒரு துளி கூட சந்தேகப் பட முடியாத விதத்தில் மிக அழகாக என்னை சிக்க வைத்து விட்டீர்கள். நான் இந்த பதினைந்து நாட்களாக முயற்சி செய்தேன் – அது நடக்கவே இல்லை. நான் என் சுவாசத்தை கவனித்தால் என்னால் திருட முடியவில்லை. நான் திருடினால், என் சுவாசத்தை என்னால் கவனிக்க முடியவில்லை. சுவாசத்தை கவனித்தால் நான் மிகவும் மௌனமாக, விழிப்போடு, தன்னுணர்வோடு, கவனமானவனாக இருக்கிறேன். அப்போது வைரங்கள் கூட கூழாங்கற்களாக தோன்றுகிறது. நீங்கள் எனக்கு ஒரு கஷ்டத்தை, அலைபாயுதலை உருவாக்கி விட்டீர்கள். நான் இப்போது என்ன செய்வது என்று கேட்டான்.
        நாகார்ஜூனா, வெளியே போ – நீ என்ன செய்ய விரும்புகிறாயோ அதை செய். அந்த அமைதி, அந்த மௌனம், அந்த ஆனந்தம் என உன் சுவாசத்தை நீ கவனிக்கும் போது கிடைப்பது வேண்டும் என நினைத்தால் அதை தேர்ந்தெடு. அதை விட வைரமும் தங்கமும் வெள்ளியும் விலைமதிப்புள்ளது என முடிவெடுத்தால் அதை தேர்ந்தெடு. நீதான் தேர்ந்தெடுக்க வேண்டும். உன் வாழ்வில் தலையிட நான் யார் எனக் கேட்டார்...............
        அந்த மனிதனால் தன்னுண‌ர்வு நிலையாகிய ஆனந்த நிலையைத் தவிர வேறு ஒரு முடிவை எடுக்க முடியாது, ஏனென்றால் அனைவரும் விரும்புவது ஆனந்த நிலையே......

Monday, January 3, 2011

மனிதர்களின் அனைத்துத் தேடுதல்களின் முடிவு எது தெரியுமா?ஆனந்தம்

       ஒரு பழைய கதை .... ஒரு விறகுவெட்டி வயதானவன், ஏழை, அனாதை. அவன் சாப்பாட்டிற்கு ஒரே வழி நாள்தோறும் காட்டிற்கு வந்து விறகு வெட்டி கொண்டு சென்று விற்று வரும் பணத்தில் சாப்பிடுவதுதான். காட்டிற்குள் நுழையும் இடத்தில் ஒரு அழகிய அரசமரம் இருந்தது.
       இந்த விறகுவெட்டி அந்த மரத்தின் கீழ் ஒரு வயதான ஞானி உட்கார்ந்திருப்பதை பார்ப்பான். அவர் இரவு, பகல், வெயி்ல், மழை, குளிர் என எல்லாநேரங்களிலும் எல்லா காலங்களிலும் அங்கே இருப்பதை பார்ப்பான். அதனால் காட்டிற்குள் நுழையும் முன் அவர் காலில் விழுந்து வணங்குவான். அவன் வணக்கம் சொல்லும் ஒவ்வொரு முறையும் அவர் அவனைப் பார்த்து, சிரித்தபடி,"நீ ஒரு முட்டாள்" எனக் கூறுவார்.
       விறகுவெட்டி ஆச்சரியமடைவான். ஒவ்வொரு முறை வணங்கும்போதும் அவர் ஆசி கூறுவதற்கு பதிலாக முட்டாள் எனக் கூறுகிறாரே என நினைத்துக் கொண்டு போவான்.
       ஒருநாள் தைரியத்தை வளர்த்துக் கொண்டு அவரிடம்,"ஏன் இப்படி கூறுகிறீர்கள்?" என்று கேட்டான்.
       அதற்கு அவர், "நீ தினமும் இந்த காட்டினுள் சென்று விறகு வெட்டி கொண்டு வருகிறாய். ஆனால் இதனுள் இன்னும் சிறிது தூரம் சென்றால் செம்பு சுரங்கம் உள்ளது. அங்கு சென்று செம்பு எடுத்து சென்றால் ஏழு நாட்களுக்கு கவலையில்லாமல் உட்கார்ந்து சாப்பிடலாம். ஒரு முட்டாளுக்கு மட்டுமே அது தெரியாமல் போகும். உனது வாழ்நாள் முழுவதும் நீ இந்த காட்டினுள் சுற்றிக் கொண்டு இருக்கிறாய். நீ அதை பார்த்திருந்தால் இப்படி தினமும் வந்து விறகு வெட்டிகொண்டு செல்ல வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது." என்றார்.
       விறகுவெட்டியால் அவர் சொல்வதை நம்ப முடியவில்லை. ஏனெனில் அவனுக்கு அந்த காடு முழுவதும் நன்றாகத் தெரியும். அவர் ஏதோ கேலி செய்கிறார் என நினைத்தான். ஆனாலும் அவர் சொல்வதில் ஏதேனும் உண்மை இருக்குமானால்..............சரி, சிறிதுதூரம் போய் தேடுவதால் என்ன தீங்கு வந்துவிடப் போகிறது என நினைத்துகொண்டு இன்னும் சிறிது தூரம் காட்டினுள் சென்று ஏதேனும் செம்பு சுரங்கம் இருக்கிறதா என்று கவனமாகவும் விழிப்போடும் தேடினான்.
       அங்கே அவன் செம்பு சுரங்கத்தை கண்டான். அவர் எப்போதும் நீ ஒரு முட்டாள், தேவையில்லாமல் இந்த வயதான காலத்திலும் தினமும் வேலை செய்துகொண்டிருக்கிறாய் என ஏன் சொல்லிக் கொண்டு இருந்தார் என்பது இப்போது அவனுக்கு புரிந்தது.
       இப்போது அவன் வாரத்திற்கு ஒருமுறைதான் சென்றான். ஆனாலும் அந்த பழைய வழக்கம் தொடர்ந்தது. அவர் காலை தொட்டு வணங்கினான். அவர் மறுபடியும் அதேபோலவே சிரித்தபடி,"நீ ஒரு முட்டாளேதான்" என்றார்.
       அவனுக்கு குழப்பமாக இருந்தது. "ஏன்? நான்தான் செம்பு சுரங்கத்தை கண்டுபிடித்து விட்டேனே! பிறகும் ஏன் இப்படி கூறுகிறீர்கள்?" எனக் கேட்டான்.
       அவர் இன்னும் சிறிது தூரம் சென்றால் வெள்ளி சுரங்கம் இருக்கிறது என்று கூறினார்.
       விறகுவெட்டி அதிர்ச்சியுற்றான். "ஏன் இதை முதலிலேயே கூறவில்லை?" எனக் கேட்டான். அதற்கு அவர்,"நீ என்னை செம்பு சுரங்கம் பற்றி கூறியபோதே நம்பவில்லை. பிறகு எப்படி வெள்ளி சுரங்கம் பற்றி கூறினால் நம்புவாய்? இன்னும் சிறிது தூரம் உள்ளே செல்" எனக் கூறினார்.
       அது எப்படி இருக்கும் என்ற சந்தேகம் தோன்றினாலும் இந்த தடவை ஒருவிதமான நம்பிக்கையுணர்வு அவனுள் தோன்றியிருந்ததால் அவன் இன்னும் சிறிது தூரம் உள்ளே தேடிச் சென்ற போது வெள்ளி சுரங்கத்தை கண்டறிந்தான்.
       வெள்ளியை எடுத்துக் கொண்டு அவரிடம் திரும்பி வந்து, "இப்போது மாதத்திற்கு ஒருமுறை வந்தால் எனக்கு போதும். ஆனால் எனக்கு உங்களை பிரிவது மிகவும் கடினமானதாக இருக்கிறது. உங்களை பார்க்காமல் நான் எப்படி இருக்கப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. உங்களிடமிருந்து நீ ஒரு முட்டாள் என்பதை இனி நான் கேட்க முடிய போவதில்லை என்பது எனக்கு மிகவும் வருத்தமானதாக இருக்கிறது. நீங்கள் என்னை நீ ஒரு முட்டாள் என்று கூறுவதை நான் விரும்ப தொடங்கி விட்டேன்." என்றான்.
       அதற்கு அவர்,"நீ சர்வ நிச்சயமாக முட்டாளேதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை" என்றார்.
       அதற்கு அவன்,"நான் வெள்ளி சுரங்கத்தை கண்டு விட்டபிறகுமா இப்படிக் கூறுகிறீர்கள்?" எனக் கேட்டான். "ஆம், இதன் பின்னும் நீ முட்டாள்தான்! அதைத் தவிர வேறில்லை. ஏனெனில் இன்னும் சிறிது தூரம் சென்றால் அங்கு தங்க சுரங்கம் இருக்கிறது. அதனால் இன்னும் ஒரு மாதம் வரை காத்திருக்கத் தேவையில்லை. நாளையே வா." என்றார்.
       இந்த முறை அவர் நிச்சயமாக கிணடல் செய்கிறார் எனத் தோன்றியது. ஏனெனில் அப்படி அங்கே தங்கம் இருந்திருக்குமானால் இவர் ஏன் இப்படி இந்த மரத்தடியில் மற்றவர்கள் கொணடு வந்து தரும் உணவை நம்பி, -அவர்கள் கொண்டு வருகிறார்கள் பலதடவை கொண்டு வருவதில்லை.- இதுபோல வெயிலுக்கு ஒரு மறைப்பின்றி, மழைக்கு குடையின்றி குளிருக்கு போதுமான கம்பளியின்றி கஷ்டப் பட வேண்டும். அதனால் அவர் இந்த தடவை கேலிதான் செய்கிறார். ஆனால் அவர் சொல்வது எப்போதும் உண்மையாகத் தான் இருந்திருக்கிறது. மேலும் இதில் என்ன தீங்கு இருக்கிறது. யாருக்குத் தெரியும்? இந்த கிழவன் ஒரு புதிரான ஆளாகத் தான் இருக்கிறார்!
       இன்னும் சிறிது தூரம் சென்றபின் அங்கே மிகப் பெரிய தங்க சுரங்கத்தைக் கண்டான். அவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. இந்த காட்டில்தான் அவன் தன் வாழ்நாள் முழுவதும் விறகுவெட்டி கழித்து வந்தான். அந்த கிழவன் இந்த காட்டின் ஆரம்பத்தில் உள்ள மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு இருக்கிறான். ஆனால் அவனுக்குத் தெரிந்தது, தனக்குத் தெரியவில்லை.
       பை நிறைய தங்கத்தை எடுத்துக் கொண்டுவந்தவன் ஞானியிடம் வந்து, "இனிமேலும் நீ ஒரு முட்டாள் என்று சொல்ல மாட்டீர்கள் என நினைக்கிறேன்." என்றான்.
       அதற்கு அவர், "அப்படியேதான் தொடர்ந்து சொல்லுவேன். இது ஆரம்பம்தான். முடிவல்ல, அதனால் நாளை வா." என்றார்.  
       அவன், "என்னது தங்கம் கிடைத்தது முடிவல்லவா, ஆரம்பம்தானா!" என வியந்தான். அதற்கு அவர், "ஆம், நாளை இன்னும் சிறிது தூரம் உள்ளே சென்றால் அங்கே வைரங்களைக் காண்பாய். ஆனால் அதுவும் முடிவல்ல, ஆனால் நான் உனக்கு அதிகப்படியாக எதுவும் சொல்லமாட்டேன். ஏனெனில் சொல்லிவிட்டால் உன்னால் இன்று இரவு தூங்க முடியாது. அதனால் வீட்டிற்குப் போ. நாளை காலை முதலில் காட்டிற்குள் போய் வைரங்களை எடுத்துக் கொண்டு பின் வந்து என்னை சந்தி." என்றார்.
       அவனால் இரவு முழுவதும் தூங்கவே முடியவில்லை. ஒரு ஏழை விறகுவெட்டி அவனுக்கு செம்பு, வெள்ளி, தங்கம், மற்றும் வைர சுரங்கமும் கூட சொந்தமாகப் போகிறது என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. ஆனால் அவர் இதை ஆரம்பம் என்றல்லவோ கூறுகிறார், வைரத்திற்கு மேல் என்ன இருக்கமுடியும் என்பது அவனுக்கு புரியவில்லை. யோசித்து, யோசித்து பார்த்தபோதும் அவனுக்கு விளங்கவேயில்லை.
       அடுத்தநாள் காலை அதிகாலையிலேயே அவன் அங்கே வந்துவிட்டான். அவர் உறங்கிக் கொண்டு இருந்தார். அவர் காலைத் தொட்டு வணங்கினான். அவர் கண் விழித்து அவனைப் பார்த்தார். "வந்து விட்டாயா? எனக்குத் தெரியும். உன்னால் இரவு முழுவதும் உறங்கியிருக்க முடியாது. போய் அந்த வைரங்களை பார்த்துவிட்டு வா." என்றார்.
       அவன் "வைரங்களை விட உயர்வானவையாக என்ன இருக்க முடியும் எனச் சொல்லுங்கள்." எனக் கேட்டான். அதற்கு அவர் "முதலில் வைரங்கள், பின்பு அடுத்தது, ஒன்றன் பின் ஒன்று! இல்லாவிடில் உனக்கு பைத்தியம் பிடித்துவிடும்." என்றார்.
       அவன் சென்று வைரங்களை எடுத்துக் கொண்டு சந்தோஷத்தில் நடனமாடிக் கொண்டே வந்து அவரிடம்,"நான் வைரங்களை கணடுவிட்டேன், இப்போது நீங்கள் என்னை முட்டாள் என சொல்லமுடியாது." என்றான்.
       அவர் சிரித்துக் கொண்டே, "இன்னும் நீ முட்டாள்தான்." என்றார்.
       அவன்,"இதை நீங்கள் விளக்கிச் சொல்லாவிட்டால் நான் இங்கிருந்து போகப் போவதில்லை" என்றான். அதற்கு அவர், இந்த செம்பு, வெள்ளி, தங்க, வைர சுரங்கங்களைப் பற்றி எனக்குத் தெரியும். ஆனால் நான் அவைகளைத் தேடி போவதில்லை. நான் அவைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஏனெனில் அவைகளை விட மதிப்புள்ள விஷயம் சிறிது தூரத்தில், வெளியே காட்டின் உள்ளே அல்ல – உள்ளே சிறிது தூரத்தில் உள்ளது. அதை நான் கண்டு விட்டதால் வெளியே உள்ள வைரங்களைப் பற்றி கவலைப் படுவதில்லை. இப்போது நீதான் முடிவெடுக்க வேண்டு்ம். உன்னுடைய பயணம் இந்த வைரங்களோடு முடிவடைந்து விட்டது என்றால் என்னைப் பொறுத்தவரை நீ இன்னும் முட்டாள்தான். எனக்கு இந்த சுரங்கங்களைப் பற்றித் தெரியும், ஆனால் நான் அவற்றைப் பற்றிக் கவலைப் படவில்லை. எவ்வளவுதூரம் வெளியே போனாலும் கிடைக்காத ஏதோ ஒன்று உள்ளே கிடைக்கிறது என்பதற்கு நானே சிறந்த சாட்சி. அது உன் உள்ளேதான் கிடைக்கும்," என்றார்.  
       அவன் வைரங்களை கீழே போட்டான். "நான் உங்கள் அருகே உட்காரப் போகிறேன். நான் ஒரு முட்டாள் என்ற உங்களுடைய எண்ணத்தை நீங்கள் மாற்றிக் கொள்ளும்வரை நான் இங்கிருந்து நகரப் போவதில்லை." என்றான்.   
       அவன் ஒரு அப்பாவி, வெகுளித்தனமான விறகுவெட்டி.
       தகவல் அறிவுநிரம்பிய ஆசாமிகளுக்கு உள்ளே செல்வது கடினம். அந்த விறகு வெட்டிக்கு அது கடினம் அல்ல.
       விரைவிலேயே அவன் ஒரு ஆழ்ந்த அமைதிக்கு, ஒரு ஆனந்தத்திற்கு, ஒரு உள்ளார்ந்த மௌனத்திற்கு ஆளானான்.  
       ஞானி அவனை உலுக்கி, "இதுதான் அது! இனி நீ காட்டிற்குள் போக வேண்டிய அவசியம் இல்லை. நான் உன்னை சொன்ன முட்டாள் என்ற வார்த்தைகளை விலக்கிக் கொள்கிறேன். நீ ஒரு விவேகி. இப்போது நீ உன் கண்களைத் திறக்கலாம். இந்த உலகம் முன்பு எப்படி எந்த கலரில் இருந்ததோ, அப்படி இல்லாமல் புது விதமாக புது மாதிரியாக, தோன்றுவதைப் பார்க்கலாம். மக்கள் என்பு தோல் போர்த்திய உடம்பாக இல்லாமல், அவர்களும் ஒளிவிடும் ஆன்மீக உயிர்களாக ......... இந்த பிரபஞ்சத்தில் தன்னுணர்வு எனும் கடலாக பார்க்கலாம்." என்றார்.  
       விறகுவெட்டி கண்களைத் திறந்தான்.
       அவன் ஞானியைப் பார்த்து, "நீங்கள் மிகவும் வித்தியாசமானவர். இதை நீங்கள் முன்பே கூறியிருக்க வேண்டும். நான் கிட்டதட்ட என் வாழ்நாள் முழுவதும் இந்த காட்டிற்கு வந்து கொண்டு இருக்கிறேன்.. நீங்கள் இந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஏன் இவ்வளவு நாள் காத்திருந்தீர்கள்?" என்று கேட்டான்.
       அதற்கு அவர். "நான் சரியான தருணத்திற்கு காத்திருந்தேன்". காலம் கனிவது என்பதன் பொருள், கேட்பது மட்டுமல்லாமல் புரிந்து கொள்ளப்படவும் வேண்டும். பயணம் மிகச் சிறியதுதான். ஆனால் புரிந்துகொண்டு ஒவ்வொரு அடியையும் சென்றடைந்தால்தான், அதையும் தாண்டி செல்லலாம், செல்லவேண்டும் என்பது தெரியும்,
       மீண்டும் தேடல் தலைதூக்கும்...
       தேடலின் முடிவே முடிவற்ற ஆனந்தம்தான் என்பது தெரியும்....
       அதற்கு ஒவ்வொரு செயலிலும் ஆனந்தத்தை காண வேண்டும்....
       முடிவற்ற ஆனந்தநிலை அடைவீர்கள்.....

நேசித்தல்: ஆனந்தம்

          நேசத்திலிருந்து சந்தோஷம் பிறக்கிறது. அதுதான் ஒரே சந்தோஷம். நீ எப்போதெல்லாம் நேசிக்கிறாயோ, அப்போதெல்லாம் நீ சந்தோஷமாக இருக்கிறாய். எப்போதெல்லாம் நேசமாக இருக்க முடிவதில்லையோ, அப்போதெல்லாம் நீ சந்தோஷமாக இருக்க முடிவதில்லை. சந்தோஷம் நேசத்தின் விளைவு, நேசத்தின் நிழல். அது நேசத்தை பின்தொடரும். நீ மேலும் மேலும் நேசமாக இருக்க இருக்க நீ மேலும் மேலும் சந்தோஷப்படுவாய்.
           உன்னுடைய நேசம் திரும்ப வருகிறதா இல்லையா என்பதைப் பற்றி கவலைப்படாதே. அது முக்கியமல்ல. அது திரும்ப வருகிறதோ இல்லையோ, மற்றவர்கள் பெற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நீ நேசித்தால் சந்தோஷம் நேசத்தை தானாகவே பின்தொடரும்.
           நீ சந்தோஷமாயிருப்பாய், அதுவே போதும். ஒருவர் எதிர்பார்ப்பதை விட போதும். அதுதான் நேசத்தின் அழகு – அதன் விளைவு – அதன் அர்த்தம் - அது அடுத்தவரின் எதிர்விளைவை பொறுத்ததல்ல, அது முழுமையாக உன்னுடையது.
           மக்கள் எப்போதும் திரும்ப எதையாவது எதிர்பார்கிறார்கள். அவர்களது நேசம் நிபந்தனைக்குரியது. அவர்கள் என்னை சந்தோஷப்படுத்து, பின் நான் உன்னை நேசிக்கிறேன் என்கின்றனர். அவர்களது நேசத்தில் கட்டுப்பாடு உள்ளது, அதில் பேரம் உள்ளது. அவர்கள் முழுமையான குருடர்களாக உள்ளனர். நேசிப்பதன் மூலம் சநேதோஷம் தானாகவே மலரும் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. அது ஒரு தொடரும் பின்விளைவு. அதனால் நேசி, நீ யாரை அல்லது எதை நேசிக்கிறாய் என்பது முக்கியமல்ல – பூனை, நாய், மரம், பாறை எதுவாக இருந்தாலும் சரி, ஒரு பாறையின் அருகில் உட்கார்ந்து அதை நேசி! அதனுடன் பேசு! அதை முத்தமிடு.
          அந்த பாறை மீது படுத்துக்கொள். அந்த பாறையுடன் ஒன்றாக உணர்ந்து பார்! திடீரென ஒரு சக்திபிரவாகம், ஒரு சக்தி வெள்ளம் வருவதை உணர்வாய். நீ அளவற்ற மகிழ்ச்சியடைவாய். அந்தப் பாறை திரும்ப எதுவும் கொடுக்காமல் இருக்கலாம், கொடுக்கலாம் – ஆனால் அது முக்கியமல்ல! நீ நேசிப்பதன் மூலம் நீ மகிழ்ச்சியடைகிறாய்.
          யார் நேசிக்கிறார்களோ அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். ஒருமுறை உனக்கு இந்த சாவி கிடைத்துவிட்டால், உன்னால் இருபத்திநான்கு மணி நேரமும் சந்தோஷமாக இருக்க முடியும். நீ இருபத்திநான்கு மணி நேரமும் நேசமாக இருந்தால் பின் நேசிக்க பொருளை தேட மாட்டாய். மேலும் மேலும் நீ விடுதலை பெற்றவனாக இருப்பாய். ஏனெனில் உன்னால் நேசிக்க முடியும் என்பதை மேலும் மேலும் அதிகமாக அறிந்து கொள்வாய் – அங்கு யாரும் இல்லையென்றால் கூட உன்னைச் சுற்றியுள்ள அந்த வெறுமையை நேசிப்பாய். உன்னுடைய அறையில் தனிமையில் அமர்ந்திருக்கும்போதுகூட அந்த அறையை உனது அன்பால் நிறைத்துவிடுவாய். நீ சிறையில் இருக்கலாம், நீ அதை கோவிலாக ஒரு வினாடிக்குள் மாற்றி விடுவாய். நீ அதை நேசத்தால் நிறைக்கும்போது அது ஒரு சிறையாக இருக்காது!
          மரங்கள், பாறைகள், அன்னியர்கள், மக்கள், நண்பர்கள் ஆகிய எல்லோரையும் நேசிக்க ஆரம்பி.
          ஒரு பாறை மேல் உட்கார்ந்து அதை நீ காதலிப்பதுபோல உணர்ந்து தொட்டுப்பார்! நீ உடனடியாக பதில்விளைவை உணர்வாய்! ஒரு மரத்தை ஆழ்ந்த நேசத்துடன் தொட்டுப்பார்! திடீரென அது ஒரு வழிப்பாதையல்ல என்பதை உணர்வாய்! உணவை சாப்பிடும்போது, உணவை அன்புடன் மெல்லு! குளிக்கும்போது தண்ணீரை தெய்வீகம் போன்று ஆழ்ந்த அன்புடன் நன்றியுடன் பெற்றுக் கொள்! ஏனெனில் தெய்வீகம் எல்லாவற்றிலும் எல்லா இடத்திலும் உள்ளது.
          ஒருமுறை எல்லாமும் தெய்வீகம் என்று உணர ஆரம்பித்துவிட்டால் பின் நீ நேசத்திற்காக ஏங்க மாட்டாய், ஏனெனில் எல்லா இடங்களிலும் அது நிறைந்திருப்பதை நீ உணர்வாய். அது தான் ஆனந்தம் என்பதை உணர்வாய்........ ..................................................................ஓஷோ.................................................................................