Monday, February 28, 2011

குழந்தை வளர்ப்பு ஆனந்தம்

 உங்களைப்போல் தடுமாறிப் போகாமல் குழந்தைகளை வளர்ப்பது எப்படி? உங்கள் வாழ்க்கை- குழப்பத்தில், தடுமாற்றத்தில் இருக்கிறது என்ற உண்மை தெரிந்திருக்கிறதென்றால் நீங்கள் செய்யவேண்டிய முதல் வேலை, உங்கள் குழந்தைகளை ஒன்றும் செய்யக்கூடாது. உங்கள் குழப்ப மனநிலையைக் கொண்டு அவர்கள் மனதில் எந்தப் பாதிப்பும் உருவாக்காதீர்கள். இதுதான் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய முதல்படி.
      மற்றவர்கள் அழுகிய மனங்களோடு உங்கள் குழந்தைக்குத் தொல்லை தரக்கூடும். அவர்களிடமிருந்து உங்கள் குழந்தையைத் தனிமைப்படுத்திவிட முடியாது. ஏனெனில், உலகமெங்கும் அவர்கள் இருக்கிறார்கள். இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? குழந்தைக்கான கல்வி எப்படி இருக்க வேண்டும்? குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும்? குழந்தைக்கு எப்படி வழிகாட்ட வேண்டும்?
      அறிவுக்கூர்மையோடும், விழிப்புணர்வோடும் இருக்க உங்கள் குழந்தையை ஊக்கப்படுத்துங்கள். வாழ்க்கையை நிறைவேற்றுவதற்குத் தேவையான அடிப்படை அறிவு எல்லோருக்கும் தரப்பட்டிருக்கிறது. ஒரு எறும்பு பிறக்கிறது. எறும்பை நீங்கள் கூர்ந்து கவனித்துப் பாருங்கள். இந்த எறும்புக்கு வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கான அனைத்து அறிவும் இருக்கிறது. நீங்கள் செய்வதை அதனால் செய்ய முடியாமல் இருக்கலாம். ஆனால் ஒரு எறும்ப்ய் என்ன செய்யவேண்டுமோ, அதற்குத் தேவையான அறிவு அதற்கு இருக்கிறது. இது ஒவ்வொரு உயிரினத்துக்கும் பொருந்தும். உங்களுக்கும் பொருந்தும்.
      ஆனால், என்ன சிக்கல் என்றால், உங்களைப் போன்ற அறிவோடு உங்கள் குழந்தை இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அந்தக் குழந்தை தன் இயல்புக்கேற்றாற்போல் இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பதில்லை. நீங்கள் புரிந்துகொண்ட விதத்திலேயே உங்கள் குழந்தையையும் அறிவைப் புரிந்து கொள்ளவேண்டும் என எண்ணுகிறீர்கள்.  
      உங்களைப் பொறுத்தவரை உங்கள் குழந்தை ஒரு மருத்துவராக வேண்டும். ஆனால் அந்தக் குழந்தை அற்புதமான தச்சுப் பணியாளராக வரலாம். உங்கள் குழந்தை மருத்துவராக வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள். இந்த உலகிற்கு மருத்துவர் தேவை என்பதாலோ, மருத்துவ சிகிச்சையின்றி தவிப்பவர்மீது அக்கறை கொண்டோ இம்முடிவை நீங்கள் எடுக்கவில்லை. உங்களுக்கு ஒரு முட்டாள்தனமான கருத்து, சமூகத்தில் ஒரு மருத்துவரோ- இல்லை ஒரு பொறியாளரோ அல்லது வேறு ஏதோ ஒரு அபத்தமான பொறுப்போதான் உங்களுக்கு பெருமை என்று கருதுகிறீர்கள்.
      இதையே வேறுவிதமாகச் சொல்வதென்றால் உங்கள் வாழ்க்கை உங்களுக்கு நிறைவு தருவதாக இல்லை. எனவே உங்கள் வாழ்க்கையை உங்கள் குழந்தை மூலம் வாழ விரும்புகிறீர்கள். ‘என் குழந்தை ஒரு மருத்துவர்’ என்பது குழந்தையைக் கெடுப்பதற்கான வழி. எல்லாக் குழந்தைக்கும் போதிய அறிவு இருக்கிறது. தன்னுடைய அறிவுநிலைக்கு ஏற்ப அந்தக் குழந்தை வளர்வதற்குச் சூழ்நிலை ஏற்படுத்த வேண்டுமே தவிர, உங்கள் சிந்தனைகளை அக்குழந்தையின்மீது திணிப்பது ஆகாது.
      அந்தக் குழந்தைமேல் ஒரு பாதிப்பை ஏற்படுத்துவதில் ஆசிரியருக்கென்று ஒரு பங்கு இருக்கிறது. நண்பர்களுக்கென்று ஒரு பங்கு இருக்கிறது. சமூகத்தின் பிற பகுதிகளுக்கும் சில பங்குகள் இருக்கின்றன. இதை நீங்கள் முழுக்கத் தவிர்த்துவிட முடியாது. ஆனால் பெற்றோர் என்ற முறையில் ஒரு முக்கியப் பங்காற்றி குழந்தையின் இயல்பான அறிவுநிலை வளர நீங்கள் துணை செய்யலாம். முதலில் ஒரு குழந்தை பிறந்தாலே அதற்குப் போதனை செய்ய வேண்டும் என்ற முடிவில் இருக்கிறீர்கள். பிறகு அந்தக் குழந்தியை நீங்கள் கெடுத்து விடுவீர்கள். ஒரு குழந்தை பிறக்கிறதென்றால் நீங்கள் கற்றுக் கொள்வதற்கான நேரம் வந்துவிட்டதாக அர்த்தம்; உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ இழந்திருக்கிறீர்கள். எவ்வளவோ கோணல்கள் ஏற்பட்டுவிட்டன.
      குழந்தை வாழ்க்கையை முற்றிலும் புதிதாகப் பார்க்கிறது. நீங்கள் உங்கள் குழந்தையோடு புதிதாக உங்கள் வாழ்க்கையைப் பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அத்தோடு உங்கள் அழுகிய சிந்தனையும் தலைகாட்டும். அதையும் தாண்டி அக்குழந்தையின் அறிவு தானாக வளரும்.
      எனவே, நீங்கள் உங்கள் குழந்தைக்குத் தரக்கூடியது அன்பும், ஆதரவும்தான். அது போதும். அன்புமயமான ஒரு சூழல் ஏற்படுத்தினால் அக்குழந்தையின் அறிவு இயல்பாகவே மலரும். இதைத்தான் உங்களால் செய்ய முடியும். நீங்கள் வாழ்க்கையில் என்ன செய்தீர்களோ அதையே உங்கள் குழந்தையும் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நினைத்தும் பார்க்காத ஒன்றை உங்கள் குழந்தை செய்யலாம் இல்லையா? நீங்கள் ஒன்றைப் பற்றி யோசிக்கக்கூட அஞ்சியதை, உங்களுக்கு வரவே வராத எண்ணத்தை குழந்தை இயல்பாக செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த உலகத்தில் வளர்ச்சி ஏற்படும். குறிப்பாக இந்தியாவில் குழந்தைகள் எண்ணிக்கை ஏராளம்.
      இந்த நாட்டின் மக்கள் தொகையைப் பார்த்தால் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதே ஒரு குற்றம். இந்த மக்கள்தொகை பெருக்கத்தை நீங்கள் அன்பு காரணமாகச் செய்யவில்லை. செய்வதற்கு வேறு ஏதும் பணி இல்லை. ஆகவே செய்திருக்கிறீர்கள். உங்கள் வாழ்வில் வேறு ஏதேனும் மதிப்புடியதாகச் செய்வதற்கில்லை. எனவே நீங்கள் குழந்தை பெற்றுக்கொண்டே போகிறீர்கள். இது அன்பின் காரணமாக அல்ல. ஒன்று பாதுகாப்பின்மையினால் அல்லது வேறு பணி இல்லாததால். பெரும்பாலும் பாதுகாப்பு உணர்வு இல்லாததால் தான், இல்லையா?
     இன்னும் சிலபேர் செய்கிற தவறான விஷயம் என்னவென்றால் குழந்தையை அன்பாக வளர்ப்பதென்றால் அது கேட்டதையெல்லாம் வாங்கித் தருவது என்று நினைக்கிறீர்கள். இது முட்டாள்தனம். முதலில் உங்கள் குழந்தையையே நீங்கள் புத்திசாலித்தனமாகப் பார்ப்பதில்லை. உங்கள் குழந்தையைப் போதிய அறிவோடு நீங்கள் பார்ப்பீர்களேயானால், அந்தக் குழந்தை கேட்டதையெல்லாம் வாங்கித் தருவது முட்டாள்தனம் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் அதற்கு அன்பு என்று பெயர் சுமத்துகிறீர்கள்.
      குழந்தையை எப்படி நீங்கள் வளர்க்க வேண்டுமென்றால் அதைக் காட்டில் விட்டாலும், சமூகத்தில் விட்டாலும் ஆனந்தமாக இருக்க வேண்டும். அப்படித்தான் வளர்க்க வேண்டும். குழந்தையை நன்றாக வளர்க்க வேண்டுமென்றால் நீங்கள் ஆனந்தமாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்று உங்களுக்குத் தெரிய வேண்டும். உங்கள் வீட்டில் ஒவ்வொரு நாளும் பதட்டமும், கோபமும், அச்சமும், பொறாமையும் அரங்கேறிக் கொண்டே இருக்குமானால் இவற்றைத்தான் அது பழகும்.
      இதற்குத்தான் வீட்டில் செய்முறைப் பயிற்சி குழந்தைக்குக் கிடைக்கிறது. எனவே நல்ல முறையில் குழந்தையை வளர்க்க வேண்டுமானால், நீங்கள் முதலில் உங்கள் தன்மையை மாற்றிக் கொள்ள வேண்டும். அன்புமயமான- ஆனந்தமான- அமைதியான ஒரு வாழ்க்கை வாழ்பவராக உங்களை நீங்களே மாற்றிக்கொள்ள வேண்டும். உங்களையே நீங்கள் அமைதியாகவும், ஆனந்தமாகவும் வைத்துக்கொள்ள முடியவில்லையென்றால், மிகவும் சக்திவாய்ந்த உங்கள் குழ்ந்தையை என்ன செய்ய முடியும்? உங்கள் பதட்டங்கள், உங்கள் கோபங்கள் போன்ற அபத்தமான குணங்கள் உங்கள் குழந்தைக்கும் வரும்.
      குழந்தைமீது உள்ளபடியே அக்கறை இருக்குமானால். நீங்கள் முதலில் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். எனவே ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்வதற்கு முன்பே இப்படி ஒரு வாழ்க்கை வாழ்கின்ற தகுதி உங்களுக்கு இருக்கிறதா, இல்லையா என்று யோசியுங்கள். யோசிக்கும்போது உங்கள் வாழ்க்கைக்குக் குழந்தை அவசியமா, இல்லையா என்றும் யோசியுங்கள். முதலில் நீங்கள் ஆனந்தமான வாழ்வுக்கு மாறுங்கள்...........

ஆனந்தத்தின் வெளிப்பாடு ஆனந்தம்

      நீங்கள் ஒரு குழந்தையாய் இருந்தபோது அமைதியும் ஆனந்தமும் உங்கள் இயல்பாகவே இருந்தது. எப்போதும் ஆனந்தமாகவே இருப்பீர்கள். எப்போதாவது, யாரவது உங்கள் ஆனந்தத்தைக் கெடுப்பார்கள். ஆனால் இப்போதைய நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. எப்போதும் வருத்தமாகவே இருக்கிறீர்கள். எப்போதாவது யாரவது உங்களை ஆனந்தப் படுத்த வேண்டி இருக்கிறது.
      உங்கள் அமைதி முற்றாகத் தொலைந்து போய்விட்டால் என்ன செய்கிறீர்கள்? வீட்டிற்குப் போய் எல்லாரையும் சத்தம் போடுகிறீர்கள். உங்கள் கணவரையோ, மனைவியையோ, குழந்தையையோ கோபித்துக் கொள்கிறீர்கள். உங்கள் அமைதியின்மைக்கு முதல் பலி அவர்கள் தான்.
      அடுத்த நாளும் உங்கள் அமைதியின்மை தொடருமேயானால் உங்கள் அண்டை வீட்டுக்காரரிடம் சண்டை போடுகிறீர்கள். இதே மனநிலை தொடர்ந்தால் சக பணியாளர்களிடம் சத்தம் போடுகிறீர்கள். அமைதியின்மை அப்படியே தொடர்ந்தால் உங்கள் முதலாளியிடமே சத்தம் போடுகிறீர்கள்.
      நீங்கள் முதலாளியிடம் சத்தம் போட்டதுமே உங்களுக்கு சிகிச்சை அவசியம் என்பதைச் சுற்றி இருப்பவர்கள் புரிந்து கொள்கிறார்கள். சிகிச்சைக்கு உங்களை அழத்துச் செல்கிறார்கள். மனநல மருத்துவர் உங்களிடம் பேச்சுக் கொடுத்து உங்களை அமைதிப் படுத்தப் பார்க்கிறார். அதுவும் முடியாத போது, உங்களுக்கு ஒரு மாத்திரை கொடுக்கிறார். ஒரு சிறு மாத்திரைதான். அதை விழுங்கிய மாத்திரத்தில், அதுவரை பதட்டத்தில் இருந்த உங்கள் உடலும் மனமும் அமைதியாகிவிடுகிறது. அது தற்காலிகமானது தான் என்றாலும், உங்களுக்கு உடனே அமைதி ஏற்படுகிறது. அந்த மாத்திரையில் இருப்பதென்ன? ஒரு சில ரசாயனங்கள் தான். அவை உங்களுக்குள் சென்று உங்களை அமைதிப்படுத்துகின்றன. இதையே வேறுவிதமாகச் சொல்வதென்றால், அமைதி என்பதே ஒருவிதமான ரசாயனம் தான். ஆனந்தம் என்பதும் ஒரு ரசாயனம்தான். பதட்டம் என்பதும் ஒரு ரசாயனம் தான். ஒவ்வொரு மனித அனுபவமுமே அவ்வப்போது உங்களுக்குள் ஏற்படுகிற ரசாயன மாற்றங்களின் வெளிப்பாடுகள்தான்.
      ஆனந்தம் இயல்பாகவே ஏற்படுவதற்கான ரசாயனத்தை உங்களுக்குள் உருவாக்க முடியும். குழந்தையாக இருந்த போது அந்த ரசாயனம் உங்களுக்குள் இருந்தது. வாழ்க்கையின் அடிப்படை புரியாமல் அனைத்தையும் குழப்பிக் கொண்டதால், உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருக்கிறீர்கள். சிலரைக் கொந்தளிக்கச் செய்ய யாராவது தூண்டிவிட வேண்டும். சிலரைக் கொந்தளிக்கச் செய்ய சில எளிய காரணங்களே போதும். அந்த அளவிற்குக் கொந்தளிப்பில் நிபுணராகி விட்டீர்கள். காரணமே இல்லாமல் கோபப்பட அவர்களால் முடியும்.
      ஒரு மனிதன் அமைதியாகவும், ஆனந்தமாகவும் வாழ்வதைத் தன்னுடைய இயல்பாகவே கொண்டால், அவனது வாழ்க்கை ஆனந்தத்தைத் தேடுவதாக இருக்காது. ஆனந்தத்தின் வெளிப்பாடாகவே இருக்கும்.
      இன்று மனிதன் தன் சுயநலத்திற்காக உலகைச் சிதைக்கத் தொடங்கியிருக்கிறான். ஒவ்வொரு தாவரமும், புழுவும், பூச்சியும், பறவையும், விலங்கும், பூக்களும், மனிதனின் மகிழ்ச்சிக்காக சித்திரவதைக்கு ஆளாகின்றன. தன் மகிழ்ச்சிக்கு விலையாக இந்தப் பிரபஞ்சத்தையே தந்தும் கூட மனிதன் மகிழ்ச்சியை உணரவில்லை. அமைதியை உணரவில்லை. நல்ல வேளையாக உலக மக்கள் தொகையில் 50 சதவிகிதம் சோம்பேறிகள். இல்லையென்றால், அவர்களும் சுயநலத்தோடு செயல்கள் புரிந்து இந்த உலகத்தை மேலும் சிதைத்திருப்பார்கள். இன்றைய உலகத்தைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது மந்தனின் செயல்கள் அல்ல; மனிதனின் சோம்பேறித்தனம் தான். மனிதனுடைய அறிவும், அன்பும், பரிவும் அல்லவா இந்த உலகத்தைக் காப்பாற்ற வேண்டும்?
      எனவே, இதற்கான பரிமாணத்தை நாம் உணரத் தொடங்கினால், வெளியே உங்களைச் சுற்றி நடைபெறுகிற சம்பவங்களைச் சார்ந்திராமல் அமைதியானவராகவும் ஆனந்தமானவராகவும் நீங்களே வாழ்வதற்குரிய வழி யோகா என்பது புரியும். வெளியுலகம் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வாய்ப்பில்லை. எவ்வளவுதான் அறிவியலும் தொழில் நுட்பமும் முன்னேறினாலும் கூட வெளிச்சூழல் முழுக்க முழுக்க உங்களுக்கு விருப்பமான விதங்களில் அமையப் போவதில்லை. நீங்கள் வளர்க்கும் நாய்கூட உங்கள் கட்டளைப்படி முழுமையாக நடப்பதில்லை. குறைந்த்து உங்கள் உள் தன்மையாவது நீங்கள் விரும்புகிற விதமாய் அமைய வேண்டுமில்லையா? எனவே உங்களையாவது நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
      அன்பாகவும், அமைதியாகவும் இருப்பதுதான் உங்கள் இயல்பு. ஏனெனில், உங்கள் உள்நிலை ரசாயனம் இயற்கையாகவே அப்படித்தான் இருக்கிறது. ஒரு மனிதனின் செயல்திறன் முழுமையாக வெளிப்படுவதென்பதே உள்நிலையில் அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்கும்போது தான். எனவே தொழிலில் சிறக்க வேண்டுமென்றாலும், பணியில் சிறக்க வேண்டுமென்றாலும், கல்வியிலோ, அனுபவத்திலோ மேம்பட வேண்டுமென்றாலும், அல்லது குடும்பத்துடன் வாழ வேண்டுமென்றாலும் உள் தன்மையை ஒரு மனிதன் சீர் செய்து கொள்ள வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் தனக்கு மட்டுமன்றி, தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும் அவன் தீமை விளைவித்துக் கொள்கிறான்.
      அமைதியில்லாத நிலை உங்களுக்கு இருபத்து நான்கு மணி நேரமும் இருப்பதில்லை தான். ஆனால் ஒரு நாளில் ஏற்படுகிற ஐந்து நிமிடப் பதட்டம் கூட உங்கள் வாழ்வைப் பாழ்படுத்தி விடக் கூடும்.. எனவே, வெளியில் என்ன நடக்கிறது என்பதை உங்களால் முடிவு செய்ய முடியாவிட்டாலும், உங்களுக்குள் என்ன நடக்க வேண்டும் என்பதையாவது நீங்களே முடிவு செய்தாக வேண்டும்.
      அப்படி முடிவு செய்கிற, நிலைக்கு நீங்கள் வந்துவிட்டால் வெளிச் சூழலில் நிகழ்கிற எதுவும் உங்களைப் பாதிக்காது. ஒன்று கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நீங்கள் விரும்பியது நிகழ்ந்தாலும் நிகழாவிட்டாலும் நீங்கள் அமைதியாக ஆனந்தமாக வாழ்வீர்கள்.
      முழுக்க முழுக்க வெளிச் சூழலைச் சார்ந்தே உங்கள் வாழ்க்கை இருப்பதால்தான் துன்பம் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. அதனால்தான் வாழ்க்கையின் ஒரு பகுதி துன்பம் என்று மக்கள் நம்பத் தொடங்கி விட்டார்கள். துன்பம் என்பது வாழ்வின் ஒரு பாகமென்று உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவீர்கள் என்றால் அவர்களுக்கு அதைவிடப் பெரிய அநீதியை நீங்களே இழைக்க முடியாது. அமைதியாக – ஆனந்தமாக வாழக்கூடிய வாய்ப்பு இருப்பதையே அவர்கள் மனங்களிலிருந்து அகற்றியவர்கள் ஆவீர்கள். உங்கள் நோக்கம் நல்லதாக இருந்தால் கூட அவர்களுக்கு உங்களையும் அறியாமல் தீமை செய்கிறீர்கள்.

Sunday, February 27, 2011

மனித வாழ்வு எதற்காக? ஆனந்தம்

      மனித வாழ்வு எதற்காக? ஏன் இந்தப் பிரபஞ்சம் இருக்கின்றது? என்று கேட்கும்போதெல்லாம், நான் உங்களுக்குக் கதைகள்தான் சொல்ல வேண்டும்.
      ஒருநாள் கடவுள் வேலையேதுமின்றி அமர்ந்திருந்தார். அப்போது அவர் கோலிக்குண்டு விளையாடிக் கொண்டிருந்தார். ஒரு கோலி இங்கே விழுந்து அது பூமியானது. மற்றொன்று அங்கே விழுந்து சூரியன் ஆனது. வேறு ஏதோ செய்தார். மனிதர்கள் உருவானார்கள். இதுபோன்ற கதைகளை நான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டே போகலாம்.
      நான் என்ன கதைகளை உங்களுக்குச் சொன்னாலும், சிலர் அவற்றை நம்பலாம்; சிலர் அவற்றாஇ நம்பாமலும் இருக்கலாம். நீங்கள் இந்தக் கதைகளி நம்பினாலும், நம்பாவிட்டாலும் உங்கள் வாழ்க்கை எந்த வழியிலும் வளமடையப் போவதில்லை. உங்களில் பலர் இதுவரையில் ஏதோவொன்றில் எப்போதுமே நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள்.
      இங்கே இருக்கும் உங்களில் எவ்வளவு பேர் கடவுள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள்? சரி. எவ்வளவு பேர் கடவுள் மீது நம்பிக்கையின்றி இருக்கிறீர்கள்? (மிகச் சிலர்தான்). சிலர் கடவுளை நம்புகிறார்கள், சிலர் கடவுள் மீது நம்பிக்கையற்று இருக்கிறார்கள். சரி. உங்களில் எத்தனைபேர் இரண்டு கைகள் உங்களுக்கு இருப்பதாக நம்புகிறீர்கள்? உங்களுக்கு இரண்டு கைகள் இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா? அல்லது உங்களுக்கு இரண்டு கைகள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? கைகளைக் காண்பதற்கு நமக்குக் கண்களே இல்லாவிட்டால் கூட, நமக்கு இரண்டு கைகள் இருப்பதை அனுபவப்பூர்வமாய் அறிவீர்கள், இல்லையா?
      யாரேனும் உங்களிடம் ஒரு விவாதம் தொடங்கி, உங்களுக்கு கைகளே இல்லையென நிரூபிக்க முடியுமா? அது சாத்தியமா? இந்த விவாதம் மிகவும் சூடாகும்போது, அவருக்கு ஓங்கி ஒரு அறை கொடுத்தால், உங்களுக்குக் கைகள் இருக்கின்றன என்பதை அவர் அறிந்துகொள்வார். உங்களுக்கு கைகள் இருப்பதை அறிவீர்கள்.
      ஆனால் கடவுளை மட்டும் எப்படி நம்புகிறீர்கள். இது ஏன்? நமக்கு எதுவெல்லாம் தெரியாதோ, அவற்றை நாம் நம்புகிறோம். சிலர் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறார்க்ள். சிலர் கடவுள் இல்லையென்று நம்புகிறார்கள். நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் அவற்றால் எந்தப் பயனும் இல்லை.
      எனக்குத் தெரியாது என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டால்தான் ஒரு தேடுதல் உங்களுக்குக் தொடங்கும். தேடுதலுக்கான தேவை ஒருமுறை வந்துவிட்டால், அதற்கான விடை வெகுதூரத்தில் இல்லை. ஒருமுறை நீங்கள் ஏதாவது ஒன்றை நம்பத் துவங்கிவிட்டால், உங்களுக்குள் உள்ள தேடுதல் அழிந்து விடும். நீங்கள் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறீர்கள். ஏதாவதொன்றைப் பற்றி ஒருமுறை நீங்கள் முடிவு செய்துவிட்டால், உண்மையைப் பற்றி அறிவதற்கான அடிப்படை வேட்கையே உங்களுக்குள் அழிந்துவிடும்.
      நீங்கள் கௌதம புத்தரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒருமுறை புத்தர் அதிகாலைப் பொழுதில், சூரியோதயத்திற்கு முன்பு தனது சீடர்களுடன் சத்சங்கத்தில் அமர்ந்திருந்தார். இன்னும் இருட்டாகவே இருந்தது. அப்போது ஒரு மனிதர் அங்கே வந்தார். அவர் ஒரு ராமபக்தர். அவர் வாழ்க்கை முழுவ்டஹும் சொல்லிக் கொண்டிருந்தது, ‘ராம், ராம், ராம்!’ தான். வேறெதையும் அவர் சொன்னதில்லை. அவரது ஆடைகளில் கூட முழுவதுமாக ‘ராம், ராம்’ என்றே எழுதி இருந்தது. அவர் கோவிலுக்குச் செல்பவர் மட்டுமல்ல; நிறைய கோவில்கள் கட்டியவரும்கூட. வயதாக வயதாக ஒரு சிறு சந்தேகம் அவருக்கு எழுந்தது. ‘என் வாழ்க்கை முழுவதும் நான் ராம், ராம் என்றே சொல்லி வந்துள்ளேன். ஆனால் கடவுள் மீது நம்பிக்கை இல்லையென்று சொல்பவர்கள் கூட உள்ளனர், அவர்களுக்கும் கூட சூர்யோதயம் நடக்கின்றது, சுவாசமும் நடக்கின்றது. அவர்களும் சந்தோஷமாகத் தான் இருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்விலும் பல‌ சந்தோஷமான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நான் வெறுமனே அமர்ந்து ‘ராம், ராம்’ எனச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை இவர்கள் கூறுவதைப் போல கடவுள் இல்லையென்றால்… எனது வாழ்க்கை முழுவதும் வெறுமையாகி, ஒன்றுமில்லாமல் போய்விடுமே!’ கடவுள் இருக்கிறார் என்ற ஆழ்ந்த நம்பிக்கை அவருக்குத் உண்டு. ஆனாலும் சிறு சந்தேகம் வந்துவிட்டது; அவ்வளவுதான்.
      ஆனால் எப்படி இந்தக் கேள்வியை புத்தரிடம் அனைவர் முன்னிலையிலும் கேட்பது? எனவே அவர் அதிகாலையில் இருட்டாக இருக்கும்போதே வந்து ஒரு மூலையில் நின்றவாறு, ‘கடவுள் இருக்கின்றாரா, இல்லையா?’ என்ற கேள்வியைக் கேட்டார். கௌதம புத்தர் அவரைப் பார்த்து ‘இல்லை’ என்று கூறினார். இந்தப் பதிலைக் கேட்டவுடன் சீடர்கள் மத்தியில் ஒரு நிம்மதிப் பெருமூச்சு வெளிப்பட்டது. கடவுள் இருக்கின்றாரா, இல்லையா என்ற போராட்டம் அவர்களுக்குள் அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருந்தது. பலமுறை அவர்கள் இந்தக் கேள்வியை கௌதமரிடம் கேட்கும்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் அவர் அமைதியாகவே இருந்துவிடுவார். இப்போதுதான் முதன்முறையாகத் தெளிவாகவும், அழுத்தமாகவும் ‘கடவுள் இல்லை’ என்று கூறியிருக்கிறார்.
      கடவுள் இல்லாமல் இருப்பதென்பது எவ்வளவு மகிழ்ச்சியானது! உங்கள் வாழ்வில் நீங்கள் எது வேண்டுமாலும் செய்ய முடியும். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், என்ன செய்யவில்லை என்பதை கவனித்துக் கொண்டிருக்க ஒருவரும் இல்லை. உங்களை நரகத்தில் தள்ளித் துன்புறுத்துவதற்கு யாருமே இல்லை. இது உங்களுக்கு முழுமையான சுதந்திரம் இல்லையா? கடவுள் இல்லையென்றால் உங்களுக்கு முழுமையான சுதந்திரம். சீடர்கள் மத்தியில் நிறைவான சந்தோஷம். அந்த நாள் சந்தோஷமான நாளாக இருந்தது.
      மாலை நேரத்தில் புத்தர் அவருடைய சீடர்கள் மத்தியில் அமர்ந்திருந்த போது, மற்றொரு மனிதர் அங்கே வந்தார். அவர் ஒரு சார்வாகர். அந்த நாட்களில் சார்வாகர்கள் என்றொரு பிரிவினர் இருந்தனர். அவர்கள் பொருளீட்டுவதில் மட்டுமே நாட்டம் உள்ளவர்கள். அவர்கள் பார்ப்பதை மட்டுமே நம்புபவர்கள். வேறு எதையும் நம்புவதில்லை. அவர்கள் உங்கள் நகருக்கு வந்து உங்களிடம் சவால் விடுவார்கள். ‘யாராவது கடவுள் இருக்கின்றார் என்று நிருபித்தால் தான் நூறு பொற்காசுகள் தருவேன். இல்லையென்றால், நீங்கள் அனைவரும் சேர்ந்து நூறு பொற்காசுகளை எனக்குத் தர வேண்டும்.” அவருடைய வாழ்க்கை முழுவதும் இந்த வழியில் மட்டும் சம்பாதித்தார். ஊர் ஊராகச் சென்று ‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை’ என நிருபித்து வந்தார். இது அவருடைய வேலை. கடவுள் இல்லை என்பதை ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிரூபித்து அவர் தனது துறையில் பெரிய மனிதராகத் திகழ்ந்தார்.
      தற்போது வயது ஆக ஆக சிறு சந்தேகம் வந்துவிட்டது. ‘எனது வாழ்க்கை முழுவதும் கடவுள் இல்லையென்றே நான் மக்களிடம் கூறி வந்திருக்கிறேன். ஒருவேளை கடவுள் இருந்தால்? நான் அங்கே போகும்போது அவர் என்னை விடுவாரா? நரகம் என்று ஏதோ இருப்பதாக மக்கள் சொல்கிறார்களே.’ சிறு சந்தேகம்… கடவுள் இல்லையென்று அவருக்குத் தெரியும். இதனை அவரது வாக்கை முழுவதும் நிருபித்தும் வந்திருக்கிறார். ஆனால் ஒரு சிறு சந்தேகம்… ஒருவேளை கடவுள் இருந்தால்? எதற்கு வம்பு, நகரிலே ஞானமடைந்த மனிதர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் கேட்போம். ஆகவே மாலை வேளையில் இருட்டிய பிறகு, அவர் புத்தரிடம் சென்று, ‘கடவுள் இருக்கிறாரா?’ என்று கேட்டார்.
      கௌதமர் அவரைப் பார்த்து, ‘ஆமாம்’ என்று கூறினார். மீண்டும் ஒரு மிகப் பெரிய போராட்டம் சீடர்களிடையே தொடங்கியது. கடவுள் இல்லையென்று அவர் கூறியதால் காலை முதல் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஆனால் மாலையிலோ கடவுள் இருக்கிறார் என்று கூறுகிறார். ஏன் இப்படி?
      வளர்ச்சியடைவதற்கான தேவை உங்களுக்குள் ஆதாரமாக இருக்கும்போது, இது உங்களுடைய நோக்கமாக இருக்கும் போது, எது உங்களுடைய அனுபவத்தில் இருக்கின்றது. எது இல்லை என்பதைப் பற்றிய தெளிவு முதலில் உங்களுக்கு இருக்க வேண்டும். உங்கள் அனுபவத்தில், இருப்பது எது?, இல்லாதது எது? என்பதைப் பற்றித் தெளிவாக வ்ரையறுத்துக் கொள்ளூங்கள். உங்கள் அனுபவத்தில் எது இல்லையோ அதனை இல்லையென நீங்கள் கூறத் தேவையில்லை. வெறுமனே ‘எனக்குத் தெரியாது’ என்று கூறுங்கள். நீங்கள் ‘தெரியாது’ என்று ஏற்றுக்கொண்டால், பிறகு வளர்ச்சி ஏற்படும். ஆனால் தற்போது உங்களுக்கு எதுவெல்லாம் தெரியாதோ, அவற்றை நம்பத் தொடங்குகிறீர்கள். உங்களுக்கு அனைத்துமே தெரிந்ததாக எண்ணுகிறீர்கள்.
      இந்தியாவில் உங்களுக்குக் கடவுளைத் தெரியும். அவ்ர் எங்கிருக்கிறார் என்று தெரியும். அவ்ருடைய பெயரும் உங்களுக்குத் தெரியும்.. அவருடைய மனைவி யாரென்று உங்களுக்குத் தெரியும். அவருக்கு எத்தனை குழந்தைகள் என்றும் உங்களுக்குத் தெரியும். அவருடைய பிறந்தநாளும் தெரியும். அவருடைய பிறந்த நாளிற்கு அவர் விரும்பும் இனிப்பு என்ன என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆனால் உங்களுக்குள் என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. தற்போதிய முழுப்பிரச்சனையும் அதுதான். உங்களுக்கு சொர்க்கத்தின் முகவரி கூடத் தெரியும். ஆனால் இந்தக் கணத்தில் உங்களுக்குள் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய விழிப்புணர்வு உங்களுக்கு இல்லை.
      இப்போது உங்களுக்குள் வளர்ச்சி நடைபெற வேண்டுமெனில், இப்போது உங்கள் அனுபவத்தில் என்ன இருக்கின்றது என்பதைப் பார்க்க வேண்டும். இப்போது உங்கள் அனுபவத்தில் என்ன இருக்கின்றது? உங்கள் உடலை ஓர் அளவிற்கு உணர்ந்திருக்கிறீர்கள். இந்த மனதை ஓரளவிற்கு உணர்ந்திருக்கிறீர்கள். இந்த உடலையும், மனத்தையும் இயக்குகின்ற சக்தியினை ஒரு குறிப்பிட்ட ஆளவிற்கு ஒரு சிஅல் கணங்கள் நீங்கள் உணர்ந்திருக்க முடியும். இதைத் தாண்டி நீங்கள் எதையும் உணரவில்லை. மற்றவை எல்லாமே கற்பனைதான்.
      இந்தச் சமூகம் எந்த வழியில் கற்பித்ததோ, அதே வழியில்தான் உங்கள் கற்பனையும் உள்ளது. உங்கள் அனுபவத்தில் எது இருக்கின்றது? எது இல்லை? என்று பாருங்கள். உங்களது அனுபவத்தில் இல்லாததை எல்லாம் ‘எனக்குத் தெரியாது’ என்று நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். இது மிக மிக அவசியமானது. இல்லாவிட்டால் உங்கள் வாழ்க்கை முழுவதும் பாசாங்காகிவிடும். நிஜமான ஆனந்தத்தை இழந்து விடுவீர்கள். இப்பொழுது என்ன நடக்கிறது என்பதை உணரத் தொடங்கினால் அது உங்களை ஆனந்தமயமான வாழ்கைக்கு இட்டு செல்லும்....

Friday, February 25, 2011

குழந்தைத்தனம் ஆனந்தம்


அவர் ஒரு ஜென் குரு. ஜப்பானில் அவரைக் குழந்தை புத்தர் என்று சொல்வார்கள். அவருடைய பேச்சு, நடவடிக்கை எல்லாம் குழந்தைத்தனமாக இருக்கும். பக்குவம் அடைந்த ஞானிபோல பேசமாட்டார். நடந்துகொள்ள மாட்டார். யாராவது யோசனை கேட்டால் 'சீ போ' என்றுதான் சொல்வார். 'வர்றியா கிட்டிப்புள் ஆடலாம்' என்று ஏதாவதொரு விளையாட்டுக்கு அழைப்பார். என்ன வேண்டுமானாலும் வாங்கித்தருகிறேன் என்றால் திண்பண்டம் கேட்பார். அவருடைய விருப்பம் எல்லாமே குழந்தைத்தனமாக இருக்கும்.
      பிறகு ஏன் அவரை ஞானி என்று சொன்னார்கள்?
      அவர் வாழ்ந்த காலத்தில் அவர் கொண்டாடப்படவில்லை. அவர் மரித்தபிறகே அவருடைய வாழ்க்கையைக் கேள்விப்பட்டு அவரைக் கொண்டாட ஆரம்பித்தார்கள். அவர் வாழ்ந்த வாழ்க்கையைக் கொண்டே அவருடைய மகத்துவம் அறியப்பட்டது. இந்தக் கதையைப் பாருங்கள்.
      மன்னர் ஒருநாள் அவரைப் பார்க்க வந்தார். குரு வெளியே அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருந்தார். மன்னர் குழம்பிப் போய்விட்டார். 'நான் தவறான நேரத்தில் வந்தேனா’ என்று குருவிடம் கேட்டார்.
      'ஆமாம் நான் மிகவும் வேலையாக இருக்கிறேன்’ என்றார் குரு.
இவ்வளவு பெரிய ஞானி, யாரைப் பார்க்க வெளியே போகிறார் என்று மன்னர் தீவிரமாக யோசிக்கத் தொடங்கினார். குரு சந்திக்கப் போகும் நபர் நிச்சயம் பெரிய ஆளாக இருக்கக்கூடும் என்று அவர் நம்பினார். மன்னர் குருவைப் பின்தொடர ஆரம்பித்தார். அவர் உதவியாளர்கள் பின்தொடர்ந்தனர்.
      குரு தலைதெறிக்க ஓடுகிறார். அவருக்குக் காயங்கள் ஏற்படுகின்றன. அவர் அளவுக்கு மன்னராலும் அவர் உதவியாளர்களாலும் வேகமாகச் செல்லமுடியவில்லை. திணறுகிறார்கள். குரு சுவரெல்லாம் தாண்டிச் செல்கிறார்.
      இறுதியில் ஆற்றங்கரைப் பக்கத்தில் உள்ள நாணல் புதருக்குச் செல்கிறார். ராஜாவுக்குப் புரியவில்லை. அங்கே ஏழுட்டுக் குட்டிப் பயல்கள் கும்பலாக நின்றுகொண்டிருந்தனர். குருவைப் பார்த்ததும் கையசைத்தனர். பதிலுக்கு இவரும் சந்தோஷமாகக் சையசைத்தார்.
      ராஜா குழம்பிப் போய் நின்றார்.
      குட்டிப்பயல்களிடம், 'ஸாரிப்பா லேட்டாகிவிட்டது’ என்கிறார் குரு.
      ஒரு குட்டிபையன் குருவைக் கோபித்துக்கொள்கிறான்.
      குரு அவனிடம், 'அதான் சொல்லிட்டேன் இல்லை. வேணும்னா தோப்புக்கரணம் போடறேன்’ என்று உடனே பத்துத் தோப்புக்கரணம் போடுகிறார்.
      இப்போது ராஜாவுக்குக் கோபம் வந்தது. உலகமே நான் என்ன சொன்னாலும் அதற்குத் தலைவணங்கும். ஆனால் என்னை அவமதித்துவிட்டு இங்கே வந்து கொட்டம் அடிக்கிறாரே என்று குருமீது அடக்கமுடியாத கோபம் கொண்டார். .
      குரு தொடர்ந்து அந்தச் சிறுவர்களைத் தாஜா செய்கிறார். பயல்களிடம், ’பச்சைக் குதிரை விளையாடலாமா’ என்று கேட்கிறார்.
      அனைவரும் சாபூத்ரி போடுகிறார்கள் திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடுகிறார்கள். குரு வைக்கோல் போருக்குள் ஒளிந்து கொள்கிறார்.
ராஜாவால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை.
      சிறுவர்கள் ஆறு பேரும் குருவைத் தேடோ தேடென்று தேடுகிறார்கள். மறைவில் நின்றுகொண்டு ராஜா அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்.
மாலையாகிறது. இருட்டாகிவிடுகிறது. ராஜாவுக்குப் பசியெடுக்கிறது. கடுங்கோபத்துடன் அங்கே இருந்து கிளம்புகிறார். ராஜாவின் கட்டளையின்படி அவருடைய ஆள்கள் தொடர்ந்து குருவைக் கண்காணிக்கிறார்கள். குருவினுடைய விநோத நடவடிக்கைகள் பற்றி அடுத்த நாள் ராஜாவுக்கு ரிப்போர்ட் கொடுத்தாகவேண்டும்.
      அடுத்தநாள் ராஜாவுக்குத் தகவல் வருகிறது. இரவு போய் காலையானபின்பும் குரு வைக்கோல் போரிலிருந்து வெளியே வரவில்லை.
ராஜா திடுக்கிட்டுப் போகிறார். மீண்டும் அந்த இடத்துக்கு ஓடுகிறார்.
      குருவுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை அவர்களது பெற்றோர்கள் கூட்டிச் சென்றுவிட்டார்கள். ஆனால் குரு இன்னமும் வைக்கோல் போருக்குள்தான் இருக்கிறார் என்று ராஜாவுக்குத் தகவல் சொல்லப்படுகிறது..
      'பிரியுங்கள்’ என்று ஆணையிடுகிறார் ராஜா. வைக்கோல் போரைப் பிரிக்கிறார்கள்.
      உள்ளே குறுகிக்கொண்டு ஒளிந்துகொண்டிருக்கிறார் குரு. ராஜாவின் ஆள்கள் பிரிப்பதைப் பார்த்து 'ஐய்யோ, பிரிக்காதீங்க. பிரிக்காதீங்க. அந்தப் பசங்க என்னைக் கண்டுபிடிச்சுடுவாங்க’ என்கிறார்.
      நிஜமான ஞானி, ஆனந்தமானவர்கள் இப்படியும் இருக்கமுடியுமா? முடியும் அது ஞான நிலையில் மட்டுமே சாத்தியம்

ஜென் முறை ஆனந்தம்


      டோக்குசான் என்ற ஜென் துறவி மூலிகைகளை பறிப்பதற்காக மலைச்சாரல் ஒன்றில் சென்று கொண்டு இருந்தார். ஓரிடத்தில் ஒரு குன்றின் மீது சிறிய குடிசை இருப்பதைக் கண்டார். சுற்றிலும் நிறைய தூரத்திற்கு எந்த வீடும் இல்லை. அது போன்ற ஏகாந்தத்தில் குடிசை இருக்க வேண்டுமென்றால் அதில் வசிப்பது ஒரு துறவியாகத் தான் இருக்க வேண்டும் என்றெண்ணிய டோக்குசான் அந்தக் குடிசையின் கதவைத் தட்டினார். கதவைத் திறந்ததோ ஒரு மூதாட்டி.
      அந்த ஜென் துறவியைப் பார்த்தவுடன் மூதாட்டி பக்தியுடன் தலை தாழ்த்தி வணக்கம் தெரிவித்து வரவேற்றாள். அவருக்கு முகமலர்ச்சியோடு வரவேற்ற அவளைக் கண்டு வியப்பு. "அம்மா நீங்கள் இந்த மலையில் இந்த ஏகாந்தத்தில் என்ன செய்கிறீர்கள்" என்று கேட்டார்.
      "ஐயா நான் இங்கு தனியாகத் தான் வசிக்கிறேன். இங்கு யாரும் வருவதில்லை. இங்கு காய்கறிகள் வளர்த்து அருகே உள்ள கிராமங்களுக்குக் கொண்டு சென்று விற்கிறேன்" என்றாள் அந்த மூதாட்டி. விளையும் காய்கறிகளைப் பற்றி மகிழ்ச்சியுடன் அவருக்கு விவரித்தாள். மலைச்சாரலில் விளையும் அந்தக் காய்கறிகள் சத்தானவை என்றும் அந்தக் கிராம மக்களுக்கு அந்த சத்தான காய்கறிகளை விற்பதில் தனக்கு ஒரு நிறைவிருக்கிறது என்றும் தெரிவித்தாள். அவருக்கும் அந்தக் காய்கறிகளைக் கொண்டு தான் சமைத்திருந்த எளிய உணவை அளித்து உபசரித்தாள். தன் வீட்டுக்கு வந்த அபூர்வமான அந்த விருந்தாளியைக் கண்டு அவளுக்கு பெருத்த மகிழ்ச்சி.
      அந்த மகிழ்ச்சியையும், அன்பையும் கவனித்த டோக்குசான் உணவருந்தியபடியே கேட்டார். "வேலை இல்லாத போது நீங்கள் எப்படிப் பொழுதைப் போக்குகிறீர்கள்?"
      "நான் சுவர்க் கோழிகளின் ஓசையையும், மழை, காற்றின் இசையையும், இரவில் நிலவழகையும் ரசித்து மகிழ்வேன். பொழுது தானாகப் போகிறது" என்றாள் அந்த மூதாட்டி.
      அந்த மூதாட்டியின் பதில் டோக்குசானை மனதினுள் பாராட்ட வைத்தது. அவர் மௌனமாகத் தலையாட்டினார்.
      "ஐயா நான் படிப்பறிவில்லாதவள். ஆன்மிக ஞானம் அறியாதவள். எனக்கு புத்தரின் அறிவுரைகளைப் போதிப்பீர்களா?" என்று மூதாட்டி மிகுந்த அடக்கத்துடன் கேட்டாள்.
      "தனக்கு சமமானவர்களுக்கு ஒரு மனிதன் போதிப்பதில்லை. மேலும் ஜென்னில் வாழ்கின்ற மனிதனுக்கு வேறெந்த போதனையும் தேவையில்லை" என்ற டோக்குசான் அந்தப் பெண்மணியைத் தலை தாழ்த்தி வணங்கி விட்டு விடைபெற்றார்
      இன்றெல்லாம் வேலை என்பதே ஒரு கடுஞ்சொல் என்பது போல் ஆகிவிட்டது. சலிப்புடனும், அலுப்புடனும் அணுகும் சமாச்சாரமாகி விட்டது. அதுவும் அந்த மூதாட்டியைப் போல் வயோதிகத்தை எட்டும் போது வேலை பெருஞ்சுமையாகவே தோன்றி விடுகிறது. ஆனால் அந்த மூதாட்டி தன் வேலையை மகிழ்ச்சியாகச் செய்வதுடன் மீதியுள்ள பொழுதையும் நிறைவாகக் கழிக்க முடிந்ததை அந்த ஜென் துறவி கவனித்தார். பொழுதைப் போக்க உலகம் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கையில், நூறாயிரம் கேளிக்கைகளைத் தேடி ஈடுபட்டும் திருப்தியடையாமல் திணறிக் கொண்டிருக்கையில் சுவர்க்கோழிகளின் ஓசையயும், காற்றும், மழையும் உருவாக்கும் இசையையும், நிலவழகையும் ரசித்தபடி வாழும் அந்த மூதாட்டியின் ரசனையைப் பார்த்து ஜென் துறவி வியந்தார். இதுவல்லவா ஜென்னின் வாழ்க்கை முறை என்று நினைத்ததால் தான் டோக்குசான் "ஜென்னில் வாழ்கின்ற மனிதனுக்கு வேறெந்த போதனையும் தேவையில்லை" என்றார்.
      ஜென்னில் இருக்கின்ற இடமோ, செய்கின்ற தொழிலோ முக்கியமில்லை. படித்து முடித்த புத்தகங்களின் எண்ணிக்கையோ, சேர்த்து வைத்திருக்கிற செல்வத்தின் அளவோ ஒரு அடையாளமில்லை. வாழ்கின்ற முறையில் தான் எல்லா சூட்சுமமும் இருக்கின்றது. ஜென் நிகழ்காலத்தில் முழுமையாக இருக்கச் சொல்கிறது. இருப்பவற்றை முழுமையாக ரசித்து ஆனந்தமாக வாழ் சொல்கிறது. கிடைத்தவற்றிற்கு நன்றியுடன் இருக்கச் சொல்கிறது. ஜென்னில் ஒப்பீடுகள் இல்லை. ஒப்பீடுகள் இல்லாத போது துக்கங்களும் இல்லை.
      நிகழ்காலத்தில் முழுமையாக, ஆனந்தமாக‌ வாழும் போது செய்கின்ற செயல்களில் தானாக மெருகு கூடி விடுகிறது. மனதில் தானாக நிறைவு ஏற்பட்டு வருகிறது. சின்னச் சின்ன விஷயங்களையும் ரசித்து ஆனந்தமாக வாழ முடிகிறது. ஜென்னில் தேநீர் அருந்துவதே ஒரு தியானத்தைப் போல செய்யப்படுகிறது. அந்த நேரத்தில் தேனீரை மிகவும் ரசித்து, ருசித்து, நன்றியுடன், மகிழ்ச்சியுடன், நிதானமாக, ஆனந்தமாக‌ அருந்த வேண்டும் என்று வலியுறுத்தப் படுகிறது.
      இன்றைய வாழ்க்கை முறையின் அவசர ஓட்டத்தில் சின்னச் சின்ன விஷயங்களை ரசிக்க முடியாத சிக்கல்கள் நிறையவே இருக்கின்றன. தேவைகள் அதிகப்பட அதிகப்பட அதற்காகத் தர வேண்டிய விலையும் அதிகப்படுகிறது. அதுவும் விரைவாக அந்தத் தேவைகள் பூர்த்தியடைய வேண்டும் என்ற வெறியும் இருந்து விட்டால் பின் வேறெதற்கும் வாழ்க்கையில் நேரமோ, மனமோ இருப்பதில்லை. அதில் உண்மையில் பலியாவது இது போன்ற சின்னச் சின்ன ரசனைகளும் ஆனந்தமும் தான்.
      இலக்குகள் மிக முக்கியம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் அந்த இலக்கை நோக்கிச் செல்லும் பயணத்தில் ஒவ்வொரு கணமும் வாழப்பட வேண்டுமேயொழிய ஓட்டப்படக் கூடாது. எல்லாம் இயந்திரகதியில் இருந்துவிடக்கூடாது. இலக்குகளைப் போலவே அவற்றை நோக்கிச் செல்லும் பயணத்தின் தரமும் முக்கியமே. முழுமனதோடும், ஆர்வத்தோடும், மகிழ்ச்சியோடும் செய்ய வேண்டிய செயல்களைச் செய்தோமானால் விரைவாகவும் தரமாகவும் சிறப்பாகவும் எதையும் செய்து முடிக்கவும் முடியும். இதையே ஜென் வலியுறுத்துகிறது.
      மேலும் ஜென் எளிய வாழ்க்கையையும், நிறைவான மனநிலையையும் மிக முக்கியமாகக் கருதுகிறது. ஜென்னிற்கு கூர்மையான அறிவு முக்கியமில்லை. பக்குவப்பட்ட மனம் முக்கியம். அந்த மூதாட்டிக்கு ஜென் என்றால் என்ன என்று தெரியாமலேயே ஜென் வாழ்க்கை வாழ்ந்திருக்கிறாள். அதனால் அதை விளக்க வேண்டிய போதனைகளுக்கு அவசியமிருக்கவில்லை. வாழ்க்கையை அனுபவித்து வாழ்வதற்காகவே போதனைகளே அல்லாமல் போதனைகளைக் கற்பதற்காக வாழ்க்கை அல்ல.
      சுவர்க்கோழிகளின் ஓசையையும், காற்றையும், மழையையும், நிலவையும் யாரும் என்றும் அந்த மூதாட்டியிடமிருந்து பறித்து விட முடியாது. நம்மிடமிருந்து யாரும், எப்போதும் அபகரிக்க முடியாதவற்றின் மூலம் நம்மால் மகிழ்ச்சியடைய முடிந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிறைவும் என்றும் குறைவதில்லை அல்லவா? இதுவே ஜென் சொல்லும் மகிழ்வாக வாழ, வாழ்க்கையின் மிக உன்னதமான‌ சூட்சுமம்.
................வாழ்க வளமுடன்!

Thursday, February 24, 2011

கதவைத்திற காற்று வரட்டும் ஆனந்தம்


        ஒரு ஜென் ஞானி, மலையையொட்டி சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் நதிக்கரையோரத்தில் நின்று கொண்டு நிலவின் அழகையும், நட்சத்திரங்களின் மினுமினுப்பையும் கண்டு ஆனந்தமாக ரசித்துக்கொண்டிருந்தார்.
        அந்த நதிக்கரையோரத்தில் துன்பங்களை மட்டுமே கண்டு நொந்துபோன ஒருவன், குடிசையில் அடைந்து கொண்டு “வாழ்க்கை துக்ககரமானது! வாழ்க்கை துக்ககரமானது! என்று புலம்பிக்கொண்டிருந்தான்.
        இதைக்கேட்ட ஞானி, “இல்லையப்பா. வாழ்க்கை ஆனந்தமானது. குடிசையைவிட்டு வெளியே வந்துபார். உனக்குத் தெரியும்” என்றார். துறவியின் பேச்சில் அவனுக்கு நம்பிக்கை இல்லை.
        முதலில் கதவைத் திறந்து வை. காற்று உள்ளே வரட்டும். உன்னைத் தேடி வரும் தென்றல் உன்னை வெளியே கொண்டு வரும்” என்று சொன்னார் ஞானி. அதையும் அவன் கேட்கிற மாதிரி இல்லை.
        உடனே அந்த ஞானி, ” அடடே….ஆபத்து! ஆபத்து! உன் குடிசையில் தீப்பிடித்துவிட்டது” என்று கத்தினார். குடிசை எரிகிறது என்றவுடன் பதறியடித்துக்கொண்டு அவன் வெளியே ஓடி வந்தான்.
        வந்தவனைப் பிடித்திழுத்து வானத்தைக் காட்டினார் ஜென் ஞானி. மேலே ஒளிரும் நிலவின் அழகையும், நட்சத்திரங்களின் மின்னுவதையும், அருகே சலனமற்று ஓடும் ஆற்றையும் கண்டு பரவசப்பட்டு நின்றான்.
        ‘குடிசையை விட்டு வெளியே வா… அழகைக் கண்டு ஆராதிக்கலாம் என்று அழைத்தபோது அவன் குட்கவில்லை. அவனோ கடவுள் நம்பிக்கை இல்லாதவன். எனவே, ‘பரம்பொருளைக் காணலாம் மோட்சம் அடையலாம்” என்று அவனிடம் சொல்லிப் பிரயோஜனமில்லை. பிறகு அவனை எப்படித்தான் வெளியே அழைத்து வருவது?
        அதற்கு அந்த ஜென் ஞானி பயன்படுத்தியது தான், “ஆபத்து! குடிசை தீப்பற்றி எரிகிறது” என்று கத்தியது.
        விதை வெடிக்க பயந்தால், விருட்சம் எழாது. புழு கூட்டைக் கிழித்து வெளியே வர பயந்தால் வண்ணத்துப்பூச்சியாய் வானில் வெளியே வர முடியாது.நீரில் குதிக்க பயந்தால் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது.கதவைத் திறக்க பயந்தால், காற்றை உள்ளே அனுமதிக்க முடியாது. ஆனந்தம் பொங்காது. அனைவரது வாழ்விலும் ஆனந்தம் பொங்க வாழ வேண்டும். எல்லா நிலையிலும் ஆனந்தத்தோடு வாழவேண்டும். ஆனந்தமே ஒவ்வொருவரது குறிக்கோளாக இருக்க வேண்டும்.
      

Wednesday, February 23, 2011

இயல்பு ஆனந்தம்


        போரில் சிறப்பான வெற்றி பெற்று அனைவரின் பாராட்டுதலையும் பெற்று வீட்டுக்கு மகிழ்வுடன் வந்தான் சாமுராய்ஒருவன்.மனைவி குழந்தையுடன் மகிழ்ச்சியாகப் பேசி விட்டு படுக்கச் சென்றான். அப்போது படுக்கையில் ஒரு எலி விளையாடிக் கொண்டிருந்தது.
        அதை விரட்டியும் அவனுக்கு போக்குக் காட்டிக் கொண்டிருந்தது. எரிச்சலுற்ற சாமுராய் தன வாளை எடுத்து அதைஇரண்டு துண்டாக்க விரட்டினான். ஆனால் எலி மாட்டிக் கொள்ளாமல் இங்கும் அங்கும் ஓடியது.ஒரு மணி நேரம் ஆகியும் அதைக் கொல்லமுடியாத சாமுராய் அடுத்து என்ன செய்வது என யோசித்தான்.
        பூனையை விட்டால் எலியைப் பிடித்து விடும் என்று யோசனை தோன்றியது.அரண்மனைக்கு ஆள் அனுப்பி ஒரு கொழுத்த பூனை கொண்டு வந்து விடப்பட்டது. அந்தப் பூனை ஒரு மணி நேரம் விரட்டியும் எலி பிடிபடவில்லை.சாமுராய் க்குக் எரிச்சல்.கடுங்கோபம்.ஆனால்ஒன்றும் செய்ய இயலாத நிலை.
        அப்போது அவன் வீடு வழியே ஞானி ஒருவர் சென்று கொண்டிருந்தார். அவரை அணுகி விபரம் சொல்லி எலியை விரட்ட வழிகேட்டான்.
        அப்போது வேறு ஒரு பூனை சாலையில் சென்று கொண்டிருந்தது.அந்தப் பூனையை உபயோகிக்குமாறு ஞானி சொன்னார். அந்தப் பூனை மெலிந்து எலும்பும்தோலுமாக இருந்தது.சாமுராய் க்கு சந்தேகம்.
        கொழுத்த அரண்மனைப் பூனையாலேயே பிடிக்க முடிய வில்லை.இந்த நோஞ்சான் பூனை எவ்வாறு எலியைப் பிடிக்கும்?இருந்தாலும் ஞானி சொன்னதால் அந்த நோஞ்சான் பூனையை பிடித்து தன படுக்கையில் விட்டான். ஒரே நிமிடத்தில் அப்பூனை எலியைக் கவ்விக் கொண்டு வெளியே சென்றது.
        சாமுராய்க்கு ஆச்சரியம். இது ஞானியின் சக்தியால் தான் நடந்திருக்க வேண்டும் என்று எண்ணி ஞானியிடம் விளக்கம் கேட்டான். ஞானி சொன்னார்''நான் மந்திரம் மாயம் எதுவும் செய்ய வில்லை. இந்த நோஞ்சான் பூனை இன்னும் பூனையாகவே இருக்கிறது.அதனால் எலியை உடனே பிடித்து விட்டது.
        அரண்மனைப் பூனைக்கு எல்லா வசதிகளும் அது இருக்கும் இடத்திலேயே கிடைப்பதால் அது ஓடிச் சென்று இரை தேட வேண்டிய அவசியமில்லை. எனவே அது தன் சொந்த இயல்பை மறந்து விட்டது. மேலும் அது ஒரு பூனையாக இல்லை, எனவே அதனால் எலியைப் பிடிக்க முடியவில்லை.''

Tuesday, February 22, 2011

எது நிஜம் ஆனந்தம்

        முதிய ஜென் குரு ஒருவர் மரணப் படுக்கையில் இருந்தார். ‘‘இன்று மாலைக்குள் இறந்துவிடுவேன்’’ என்று தன் சீடர்களிடம் தெரிவித்துவிட்டார். இதைக் கேள்விப்பட்ட அவர் நண்பர்கள் பலரும், சிஷ்யர்களும் ஆசிரமத்தை வந்தடைந்தனர். 
        
மூத்த சீடர் ஒருவர் திடீரென கடைவீதிக்குப் புறப்பட்டார். ‘‘ஏய்... என்ன மடத்தனம் பண்ணுகிறாய்... குரு மரணப்படுக்கையில் கிடக்கும்போது அப்படி என்ன அவசரமாக வாங்க வேண்டியிருக்கு?’’ என்றனர் மற்றவர்கள். 
        
மூத்த சீடர், ‘‘குருநாதருக்கு நாவல்பழம் என்றால் அத்தனை பிரியம். அதை வாங்கத்தான் போகிறேன்!’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். 
        
எல்லோரும் கவலையோடிருந் தனர். குரு கண்களைத் திறப்பதும் யாரையோ தேடுவதும் பின் மூடிக் கொள்வதுமாக இருந்தார். 
        
மூத்த சீடர் வந்ததும், ‘‘வந்து விட்டாயா... எங்கே நாவல்பழம்?’’ என்றார். 
        
அவர் கையில் நாவல் பழத்தைக் கொடுத்ததும், சற்றும் நடுக்கமின்றி அதை வாங்கிக் கொண்டார். 
        
ஒரு சீடர் குருவிடம், ‘‘குருவே... தள்ளாத வயதிலும் உங்கள் கைகளில் நடுக்கமில்லையே?’’ என்றார். 
        
குரு சிரித்தபடி, ‘‘என் கைகள் ஒருபோதும் நடுங்கியதில்லை. ஏனென்றால் எப்போதும் எதற்கும் நான் பயந்ததே இல்லை!’’ என்று சொல்லிவிட்டு நாவல் பழத்தை ருசித்து தின்னத் தொடங்கிவிட்டார். 
        
இன்னொரு சீடர் குருவிடம் பணிந்து, ‘‘ஐயா, தாங்கள் சீக்கிரமே இந்த உலகை விட்டுப் பிரியப் போகிறீர்கள். நாங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய தங்களின் இறுதிக் கருத்து என்ன?’’ என்று கேட்டார். 
       
குரு சிரித்தபடி, ‘‘இந்த நாவல்பழம் என்ன அருமையான சுவையுள்ளதாக இருக்கிறது’’ என்று சொல்லிவிட்டு இறுதி மூச்சை விட்டார். 
        
அந்தந்தக் கணத்தில் வாழுங்கள். கடந்து போன நிமிடமும், வரப் போகும் நிமிடமும் நமக்கானதல்ல. இன்று இப்போது மட்டுமே நிஜம்! 

வாழ்க வளமுடன்!

Sunday, February 13, 2011

நட்பு - உறவு ஆனந்தம்


        ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் என் நண்பனுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு வந்தது. அப்போது, அவனிடம் சில கடுமையான வார்த்தைகளைப் பேசிவிட்டேன். அதற்கப்புறம் அவன் என்னிடம் இருந்து விலகிவிட்டான். எங்கள் பழைய நெருக்கத் தைக் கொண்டுவர என்னால் முடிந்த வரை பலமுறை முயன்றுவிட்டேன். அவன் இறுக்கமாகவே இருக்கிறான். என்ன செய்ய?
        பிறப்பினாலோ, அல்லது சமூக பந்தத்தினாலோ, ஓர் உறவு அமைந்துவிட்டால், அது பாதிப்புகளுக்கு அப்பாற்பட்டது என்று நினைப்பது மிகத் தவறு. மனைவியோ, கணவனோ, தாயோ, தந்தையோ, குழந்தையோ, நண்பரோ, எந்த நெருக்கமான உறவாக இருந்தாலும், அது இரும்புக் கவசம் அணிந்திருப்பதில்லை.
        உறவு என்பது மிக அழகான கண்ணாடி ஜாடி போன்றது. அதை எப்படிக் கையாள்கிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் அதன் ஆயுள் தீர்மானிக்கப்படுகிறது. அதைக் கவனம்இன்றிக் கீழே போட்டுவிட்டால், அது நொறுங்கித்தான் போகும். நொறுங்கியதை மறுபடி பழைய வடிவத்துக்குக் கொண்டுவருவது இயலவே இயலாது என்று நான் சொல்லவில்லை. ஆனால், அது மிகவும் கடினமான வேலை.
        கடற்கரையில் சங்கரன்பிள்ளை நடந்துகொண்டு இருந்தார். ஒரு பையன் ஓடி வந்தான். அவரிடம் 'சார், வாயைச் சுத்தம் செய்யும் திரவம் வாங்கிக்கொள்ளுங்கள்' என்று பாட்டில் ஒன்றை எடுத்துக் காட்டினான்.
        'என்ன விலை?' என்றார் சங்கரன்பிள்ளை.
        '500 ரூபாய்.'
        'கொள்ளையாக இருக்கிறதே, வேண்டாம்.'
        'சரி, பிஸ்கட்டாவது வாங்கிக்கொள்ளுங்கள் சார். இரண்டே ரூபாய்தான்.'
        சங்கரன்பிள்ளை பரிதாபப்பட்டு வாங்கினார். பிஸ்கட்டை வாயில் போட்டவர் தூதூவென்று துப்பினார்.
        'என்ன கண்றாவி இது? இவ்வளவு மோசமாக நாறுகிறதே?'
        'இப்போது சொல்லுங்கள் சார்... வாயைச் சுத்தம் செய்யும் திரவம் வேண்டுமா?'
        இதைப்போலத்தான் பிரச்னைகளை நாமே உருவாக்கிவிட்டு,    அவற்றுக்குத் தீர்வு தேடி அலைகிறோம். எப்போதும், உங்கள் எண்ணத்துக்கு ஏற்ப மற்றவரை மாற்ற வேண்டும் என்று நினைப்பது சரியல்ல. நீங்கள் என்ன செய்தாலும், அதையெல்லாம் தாண்டி எப்படிப்பட்ட உறவும் நிலைத்து இருக்கும் என்ற உத்தரவாதம் எதுவும் இல்லை.
        சில உறவுகளை நீங்கள் பார்த்திருக்கலாம். 'நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கையே இல்லை' என்று உணர்ந்தவர்கள்கூட, ஏதோ காரணத்தினால் பிரிய நேரிடும். அப்படிப் பிரிந்து இருப்பது, சேர்ந்து இருந்ததைவிட அதிக நிம்மதி தரும் என்பதை அவர்கள் உணர்ந்துவிட்டால், எதற்கு மறுபடியும் தலைவலி என்று ஒதுங்கி இருக்கத்தானே நினைப்பார்கள்?
        உங்கள் நண்பர் ஒருவேளை ஏதோ ஓர் ஆதாயத்துக்காக உங்களுடன் நட்பு பாராட்டியிருந்தால், அவருக்கான ஆதாயம் கிடைத்ததும், பிரிவதற்கான
சந்தர்ப்பத்துக்காகக் காத்து இருந்திருக்கக்கூடும். நீங்கள் சொன்ன வார்த்தைகளைக் காரணம் காட்டி, அவர் ஒதுங்கியிருக்கலாம்.
        அவர் கோபத்திலோ, வருத்தத்திலோ இருந்தால் அந்தக் கோபத்தைக் குறைக்கப் பார்க்கலாம். விட்டதடா தொல்லை என்று அவர் ஒதுங்கப்பார்த்தால், யார் சொன்னதற்காகவும் அவர் உங்களுடன் மீண்டும் நண்பர் ஆகப் போவதில்லை.
        ஒவ்வோர் உறவின் ஏமாற்றமும் சரிப்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பமும். ஆனால், அத்தனை பேரும் சரிசெய்யக்கூடிவர்களாக இருப்பதில்லை. அதற்கான பக்குவம் பெற்றவர்களாக அவர்கள் விளங்குவது இல்லை.
        இந்த உண்மையை முதலில் முழுமையாகப் புரிந்து ஏற்றுக் கொள்ளுங்கள். இப்போது அந்த நண்பருடைய உறவு உங்களுக்கு முக்கியமானதா என்பதைத் தீர்மானியுங்கள். முக்கியமானது என்றால், செய்த தவறுக்கு அவரிடம் மனதார மன்னிப்புக் கேளுங்கள்.
        'ஏதோ ஓர் அறியாமையில், முட்டாள்தனத்தில் தவறாகப் பேசிவிட்டேன், என் உணர்வு உன் நட்பைத்தான் விரும்புகிறது' என்று அவருக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். சொல்லிவிட்டு, முடிவு செய்ய அவருக்கு அவகாசம் கொடுங்கள். அவர் நெருங்கி வருகிறாரா, பாருங்கள்.
        அந்த இடைவெளிகூடக் கொடுக்காமல், மேலும் மேலும் அவரை நட்புக்காக வற்புறுத்தினால், அது மேலும் எரிச்சலைக் கிளப்பிவிடக்கூடும். அவர் உடனடியாக இறங்கி வராமல் போகலாம். இன்றைக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, நாளைக்கு அதே தவறை நீங்கள் செய்வீர்கள் என்று அவர் நினைத்தால், அவர் உங்கள் மன்னிப்பைப் பொருட்படுத்தாமல் போகக்கூடும்.
        அப்படி ஒரு நிலை வந்தால், உங்கள் வாழ்க்கையைச் சற்று ஊன்றிக் கவனியுங்கள். உங்கள் வார்த்தைகளை முழுமையாக நம்ப முடியுமா? உங்கள் மீது மற்றவர்கள் முழுமையான நம்பிக்கைவைக்கும் அளவு நீங்கள் நடந்து கொண்டு இருக்கிறீர்களா என்று யோசியுங்கள்.
        நாம் பீகாரில் இருக்கும்போது, குறிப்பிட்ட நேரத்தில் ரயில் வந்து
சேர்ந்துவிட்டால், நம் வாட்ச் நின்றுவிட்டதா என்று ஆட்டிப்பார்க்கிறோம். இதுவே ஜப்பானில் இருந்தால், ரயிலைப் பார்த்துவிட்டு வாட்ச்சில் நேரத்தைச்
சரிசெய்யலாம்.
        சாராயத்துக்கு அடிமையாகிவிட்ட ஓர் இளைஞன் இருந்தான். 'இப்படி மோசமான சாராயத்தை நீ தொடர்ந்து குடித்தால், உன் உயிருக்கு ஆபத்து. ஒருநாள் உன் குடலே வெளியே வந்துவிடும்' என்று அவனுடைய நண்பன் பயமுறுத்திப் பார்த்தான். ஆனால், அவனோ தினமும் குடித்துவிட்டு வாந்தி எடுக்கும் தன் பழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை.
        பார்த்தான் நண்பன். ஒருநாள், ஒரு ஆட்டின் குடலை வாங்கி, அவன் வாந்தி எடுக்கும் இடத்தில் போட்டுவைத்தான். அன்றைக்குக் குடித்துவிட்டு வாந்தி எடுக்கப் போனவன் பதறிக்கொண்டு திரும்பி வந்தான். 'டேய், நீ சொன்னபடியே இன்று என் குடல் வெளியே வந்துவிட்டது' என்றான்.
        'சரி, இப்போதாவது குடிப்பதை நிறுத்து...'
        'கவலைப்படாதே நண்பா... வெளியே வந்ததை எடுத்து உள்ளே போட்டுக்கொண்டுவிட்டேன்' என்றான் அவன்.
        நண்பன் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்தால், அங்கே கிடந்த குடல்
தன்னுடையதாகத்தான் இருக்கும் என்று அவன் நினைத்துஇருப்பான். அப்படி ஒரு நம்பிக்கை உங்கள் மீது உங்கள் நண்பருக்கு இருக்கிறதா? உங்கள் நண்பரிடம் மட்டுமல்ல; நீங்கள் சந்திக்கும் அத்தனை பேரிடமும் அப்படி ஒரு
நம்பிக்கையை நிலைநாட்டும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள். ஏதோ ஒன்றைச் சாதிக்க மட்டும் அப்படிச் செய்யாமல், அதையே உங்கள் குணநலனாக மாற்றிக்கொள்ளுங்கள். இது நேராத வரை உங்களால் அற்புதமான உறவுகளை அமைத்துக்கொள்ள முடியாது.
         நீங்கள் சொன்னால் அதை வேத வாக்கியமாக எடுத்துக்கொள்ள இயலும் என்ற ஒரு சூழ்நிலையை நீங்கள் உருவாக்கினால், நீங்கள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர் என்று ஒரு நம்பிக்கை மற்றவரிடத்தில் பிறந்துவிட்டால், உங்கள் வேலை சுலபம்.

முரண்பாடு-‍வளர்ச்சி ஆனந்தம்

        முன்னொரு காலத்தில் ஒரு பெண் இருந்தாள். அவள் வளர்ந்து வந்த மதத்தை விட்டு அவள் விலகி வந்தாள். அவள் மற்றொரு மதத்தின் மீது நம்பிக்கை கொண்டு அதில் சேர்ந்தாள். பின் மற்றொரு மதத்தின் கொள்கை மீது பிடிப்பு ஏற்பட்டு இதை விட்டு விலகி அதில் சேர்ந்தாள். ஒவ்வொரு முறை அவள் வேறு மதத்தின் மீது ஈர்ப்பு கொள்ளும்போதும் அவளுக்கு ஏதோ புரிந்து விட்டதாகவும் ஆனால் அது நிறைவு தரவில்லை எனவும் அவள் நினைத்தாள். ஒவ்வொரு முறை அவள் மதம் மாறும்போதும் அவள் வரவேற்கப்பட்டாள். அவளது தரம் உயர்ந்து இருப்பதாகவும், அவளது தூய்மையும் ஞானநிலையும் உயர்ந்து வருவதாகவும் எல்லோரும் நினைத்தனர்.
         ஆனால் அவளது மனநிலையோ குழப்பமாகத்தான் இருந்தது. இந்த நீண்ட பயணத்தில் அவள் ஒருமுறை இமாம் ஜபார் சாதிக் என்ற நிறைவடைந்த ஞானி ஒருவரைப் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்திக்கச் சென்றாள்.
         அவளது முயற்சிகளையும் கருத்துக்களையும் கேள்விப்பட்ட பின் அவர் நீ உன் வீட்டிற்கு திரும்பிச் செல். நான் எனது முடிவை ஒரு செய்தியாக அனுப்பி வைக்கிறேன் என்றார்.
         விரைவிலேயே அந்த ஞானியின் சீடர் ஒருவர் இவளின் வீடு தேடி வந்தார். அவர் கையில் அந்த குரு கொடுத்தனுப்பிய ஒரு பார்சல் இருந்தது. அவள் அதை திறந்து பார்த்தாள். அதில் ஒரு கண்ணாடி பாட்டில் இருந்தது. அதில் கருப்பு, சிவப்பு, வெள்ளை நிறங்களையுடைய மணல் மூன்று அடுக்குகளாக நிரப்பப்பட்டு இருந்தது. மீதி பாதி பஞ்சால் நிறைக்கப்பட்டிருந்தது. அதன்கூடவே இந்த பஞ்சை எடுத்துவிட்டு இந்த பாட்டிலை குலுக்கு. அது எப்படி இருக்கிறதோ அப்படித்தான் நீ இருக்கிறாய் என்ற எழுதப்பட்ட குறிப்பு ஒன்றும் இருந்தது.
         அவள் அந்த பஞ்சை எடுத்துவிட்டு அந்த பாட்டிலை குலுக்கினாள். பார்த்தபோது அவள் கையில் இருந்தது சாம்பல் கலர் கொண்ட மணல் பாட்டில்.
         மனிதன் முரண்பாடுடையவன். மனிதன் மட்டுமே மிருகமாகவும் மனிதனாகவும் இருக்கக் கூடியவன். அதுதான் முரண்பாடு. அதுதான் அவனது தனித்துவம். மனிதனின் சிறப்பே அவனுக்கு உள்ளே உள்ள உள்முக முரண்பாடுதான். மற்ற அனைத்து மிருகங்களும் முரண்பாடு உடையவை அல்ல.
         ஒரு மரம் மரம் மட்டுமே. ஒரு நாய் நாய் மட்டுமே. ஆனால் மனிதனுக்கு மட்டும் அது மட்டுமே என்பது போன்ற நிலை கிடையாது. அவன் எப்போதுமே வளர்ச்சியடைபவன், நிலைமாற்றமடையக் கூடியவன். மனிதன் எப்போதும் தன்னையே கடந்து செல்கிறான். அதுதான் அவனது முரண்பாடு. அது அவனது ஆழ்நிலை இருப்பு. அது தற்செயலானதல்ல, அதுதான் அடிப்படையே. நீ இந்த முரண்பாட்டை புரிந்து கொண்டால் மனித்தன்மை பற்றிய முதல்தரிசனம் உனக்கு ஏற்படும். 
        மனிதன் என்பவன் எப்போதும் ஒரு திட்டம்தான், ஒரு வளரக்கூடியவன்தான். அவனது இருப்பு வளரக்கூடியது, அதுதான் முரண்பாடு. அவன் எப்போதும், முன்பு எப்படி இருந்தானோ அதற்கும் இனிமேல் என்னவாக மாறப் போகிறானோ அதற்கும் இடையில் இருக்கிறான். அவன் எப்போதும் அவனது கடந்த காலத்திற்கும் அவனது எதிர்காலத்திற்கும் இடையில் இருக்கிறான். கடந்த காலமும் எதிர்காலமும் ஆன இரண்டு நிரந்தரத்திற்கிடையே ஆன பாலம் அவன். அவன் கடந்து செல்பவன், தொடர்ந்து கடந்து சென்று கொண்டே இருப்பவன். மனிதன் அவன் என்னவாக இருக்கிறானோ அதில் நிறைவடைவது இல்லை. அவன் கடந்து செல்ல முயன்று கொண்டே இருக்கிறான். எப்போதும் முயன்று கொண்டே இருக்கிறான். அவன் என்ன செய்தாலும் அடிப்படையில் அவனது முயற்சி எப்படி மேன்மேலும் உயர்வது, மேன்மேலும் சிறப்படைவது, மேன்மேலும் வளர்வது என்பதிலேயே இருக்கிறது.  
மனிதன் ஒரு முன்னேறுபவன், ஒரு வழிப்போக்கன், ஒரு பயணம்தான். அவனது வாழ்வே ஒரு புனிதப்பயணம்தான், முடிவற்ற பயணம்தான், அது போய்க் கொண்டே இருக்கும். ஒரு நாய் பிறக்கிறது, ஒரு மரம் பிறக்கிறது - மரம் ஒரு மரத்திற்குரிய குணாதிசியங்களுடன் பிறக்கிறது, நாய் அதற்கேரிய குணாதிசியங்களுடன் பிறக்கிறது. மனிதன் அது போன்ற கொடுக்கப்பட்ட யதார்த்தமல்ல. மனிதன் மறைந்துள்ள ஆற்றலுடன், ஒரு சாத்தியக்கூறாக பிறக்கிறான். மனிதன் வெறுமையாக, வெற்றுத்தாளாக பிறக்கிறான். எதுவும் எழுதப்படவில்லை. எது வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம்
 

Saturday, February 12, 2011

சொர்கம்‍‍ - நரகம் ஆனந்தம்


       இந்த கதை அழகானது. ஜென் குரு ஹேக்குன் அபூர்வ மலர்களில் ஒருவர். ஒரு போர்வீரன் அவரிடம் வந்தான். ஒரு சமுராய், ஒரு சிறந்த வீரன் வந்து ஹேக்குனிடம் நரகம் என்று ஏதாவது உள்ளதா ? சொர்க்கம் என்று ஏதாவது உள்ளதா ? நரகம் மற்றும் சொர்க்கம் என்று ஒன்று இருக்குமானால் அவைகளின் கதவுகள் எங்கே உள்ளன ? நான் எங்கேயிருந்து உள்ளே செல்வது ? நான் எவ்வாறு நரகத்தை தவிர்த்துவிட்டு சொர்க்கத்தை தேர்ந்தெடுப்பது ?என கேட்டான், அவன் ஒரு எளிய வீரன். வீரர்கள் எப்போதும் எளிமையானவர்கள்.
       எளிமையாக இருக்கும் ஒரு வியாபாரியை கண்டுபிடிப்பது கடினம். ஒரு வியாபாரி எப்போதும் தந்திரமான புத்தியை உடையவன். இல்லாவிடில் அவன் ஒரு வியாபாரியாக இருக்கமுடியாது. ஒரு வீரன் எப்போதும் எளிமையானவன், இல்லாவிடில் அவன் ஒரு வீரனாக இருக்கமுடியாது. ஒரு வீரன் இரண்டு விஷயங்களை மட்டுமே அறிவான், வாழ்க்கை மற்றும் இறப்பு – அதிகமல்ல.
அவனுடைய வாழ்க்கை எப்போதும் பணயத்திலேயே உள்ளது, அவன் எப்போதும் சூதாடிக்கொண்டிருக்கிறான், அவன் ஒரு எளிமையான மனிதன். அதனால்தான் வியாபாரிகள் ஒரே ஒரு மகாவீரரையோ, ஒரே ஒரு புத்தரையோ கூட உருவாக்கமுடியவில்லை.  இது அதிசயமாய் உள்ளது. 24 தீர்த்தங்கரர்கள் அனைவரும் சத்திரியர்கள், வீரர்கள். புத்தர் ஒரு சத்திரியர், இராமன் மற்றும் கிருஷ்ணர் இருவரும் சத்திரியர்கள். அவர்கள் எளிமையான மக்கள், அவர்களுடைய மனதில் எந்த தந்திரமும், எந்த கணக்கீடும் இல்லை. அவர்களுக்கு இரண்டு விஷயங்கள் மட்டுமே தெரியும் – வாழ்க்கை மற்றும் இறப்பு.
       இந்த எளிமையான வீரன் ஹேக்குனிடம் சொர்க்கம் எங்கே இருக்கிறது மற்றும் நரகம் எங்கே இருக்கிறது என்று கேட்பதற்காக வந்துள்ளான், அவன் எந்த கோட்பாடுகளையும் தெரிந்துகொள்வதற்காக வரவில்லை. அவன் கதவுகளை தெரிந்துகொள்ள விரும்பினான். அதனால் அவன் நரகத்தை தவிர்த்துவிட்டு சொர்க்கத்தில் நுழையலாம் ஹேக்குன் ஒரு வீரன் மட்டுமே புரிந்துகொள்ளகூடிய வகையில் பதிலளித்தார்.  
       ஆனால் இந்த சமுராய் ஒரு வியாபாரியல்ல, அவன் ஒரு போர்வீரன். அவன் ஒரு எளிமையான கேள்வியோடு வந்துள்ளான். அவனுக்கு வேதங்களிலோ, விலையிலோ, சொல்லும் பதிலிலோ, ஆர்வமில்லை. அவன் உண்மையின் மீது ஆர்வம் கொண்டிருந்தான். மற்றும் ஹேக்குன் என்ன செய்தார் ? அவர் நீ யார் ? என கேட்டார் போர்வீரன் நான் ஒரு சமுராய் என பதிலளித்தான். ஒரு சமுராயாக இருப்பது ஜப்பானில் மிகவும் பெருமை வாய்ந்த ஒரு விஷயம். அதன் பொருள் ஒரு சிறந்த போர்வீரன், அவனுடைய வாழ்க்கையை இழப்பதற்கு ஒரு நொடிகூட தயங்கமாட்டான். அவனைப்பொறுத்தவரை, வாழ்வும் இறப்பும் வெறும் ஒரு விளையாட்டு.
       அவன் நான் ஒரு சமுராய், சமுராய்களின் தலைவன். அரசரும்கூட எனக்கு மரியாதை அளிக்கிறார், என கூறினான். ஹேக்குன் சிரித்துவிட்டு, நீ ஒரு சமுராய் ? நீ ஒரு பிச்சைக்காரனைப்போல இருக்கிறாய் என கூறினார்.
       உடனே சமுராயின் பெருமை காயப்பட்டுவிட்டது, அவனுடைய ஆணவம் அடி வாங்கிவிட்டது. அவன் எதற்காக வந்தான் என்பதை அவன் மறந்துவிட்டான். அவன் அவனுடைய வாளை எடுத்து ஹேக்குனை கொல்லப்போனான். சொர்க்கத்தின் கதவைப்பற்றியும் நரகத்தின் கதவைப்பற்றியும் கேட்க இந்த குருவிடம் அவன் வந்துள்ளான் என்பதையே அவன் மறந்துவிட்டான்.
       அப்போது ஹேக்குன் சிரித்துவிட்டு இதுதான் நரகத்தின் கதவு. இந்த வாளோடு, இந்த கோபம், இந்த ஆணவம், கதவு இங்குதான் திறக்கிறது என கூறினார்.
       இதைத்தான் ஒரு போர்வீரன் புரிந்துகொள்ளமுடியும். உடனடியாக அவன் புரிந்துகொண்டான், இதுதான் கதவு. அவன் அவனுடைய வாளை அதன் உறைக்குள் போட்டான்.
       அப்போது ஹேக்குன் இங்கு சொர்க்கத்தின் கதவு திறக்கிறது என கூறினார்.
       நரகமும் சொர்க்கமும் உனக்குள் உள்ளன. இரண்டு கதவுகளும் உனக்குள் உள்ளன. நீ உணர்வற்று செயல்படும்போது அங்கு நரகத்தின் கதவு உள்ளது, நீ கவனமாகவும், உணர்வுடனும் இருக்கும்பொழுது, அங்கு சொர்க்கத்தின் கதவு உள்ளது.
       இந்த சமுராய்க்கு என்ன நடந்தது? ஹேக்குனை கொல்லப்போகும் அந்த சமயத்தில் அவன் உணர்வோடு இருந்தானா ? அவன் என்ன செய்யப்போகிறான் என்பதுபற்றி அவன் உணர்வோடு இருந்தானா ? அவன் எதற்காக இங்கு வந்துள்ளான் என்பதுபற்றி உணர்வோடு இருந்தானா ? எல்லா உணர்வும் மறைந்துவிட்டது.
       ஆணவம் ஆட்கொள்ளும்போது, நீ கவனமாக இருக்கமுடியாது. ஆணவம் ஒரு போதை, அந்த போதை உன்னை முழுமையாக உணர்வற்றவனாக்கிவிடும். நீ செயல்படுவாய் ஆனால் அந்த செயல் உனது உணர்வற்ற நிலையிலிருந்து வெளிப்படும் உன்னுடைய உணர்வு நிலையிலிருந்து வெளிப்படாது. மற்றும் உணர்வற்ற நிலையிலிருந்து எந்த செயல் வந்தாலும் அப்போதெல்லாம், நரகத்தின் கதவு திறந்துள்ளது. நீ என்ன செய்தாலும், நீ என்ன செய்கிறாய் என்ற உணர்வு உனக்கு இல்லாவிட்டால் நரகத்தின் கதவு திறந்துவிடுகிறது.
       திடீரென, ஹேக்குன் இதுதான் கதவு அதை நீ ஏற்கனவே திறந்துவிட்டாய் என சொன்னவுடன் உடனடியாக சமுராய் கவனமடைந்தான் – சூழ்நிலையே கண்டிப்பாக கவனத்தை உண்டாக்கியிருக்கவேண்டும்.
       வெறுமனே கற்பனை செய்து பார். நீ போர்வீரனாக இருந்திருந்தால், சமுராயாக இருந்திருந்தால், வாளை கையில் ஏந்திகொண்டு, கொல்லப்போகிறாய். என்ன நடந்திருக்கும். ஒரு நொடி அதிகமாகியிருந்தால் ஹேக்குனின் தலை வெட்டப்பட்டிருக்கும், ஒரு நொடி அதிகமாகியிருந்தால் அது உடலிலிருந்து பிரிக்கப்பட்டிருக்கும். அப்போது ஹேக்குன் இதுதான் நரகத்தின் கதவு என கூறினார்.
       இது ஒரு தத்துவார்த்தமான பதில் அல்ல. எந்த ஞானியும் தத்துவார்த்தமான முறையில் பதில் அளிப்பதில்லை, சாதாரண ஞானமடையாத மனங்களுக்கு மட்டுமே தத்துவம் இருக்கிறது. ஞானி பதிலளிக்கிறார். அப்போது அந்த பதில் வார்த்தைகளால் ஆனதல்ல. அது முழுமையானது. இந்த மனிதன் அவரை கொன்றிருக்கலாம் என்பது பொருட்டல்ல. நீ என்னை கொன்றால் நீ கவனம் பெறுவாய் என்றால், அது தகுதிவாய்ந்ததே – ஹேக்குன் விளையாட்டை விளையாடினார். ஒரு வினாடி தப்பியிருந்தாலும் அந்த மனிதன் அவரை கொன்றிருக்கலாம். ஆனால் சரியான நொடியில் ஹேக்குன் இதுதான் கதவு என கூறினார்.
              ஹேக்குன் இதுதான் கதவு என கூறியபோது சமுராய் சிலைபோல நின்றிருக்கவேண்டும். அந்த சிலைபோன்ற நிலையில், எல்லா செயல்களும் உறையும்போது, நீ கவனமடைகிறாய். ஏதாவது செயல் தேவை . . . இல்லாவிடில் உனது உணர்வற்ற தன்மை உடைந்து நீ உணர்வு பெறுவாய். ஒரு மனிதன் ஆறு மணிநேரம் எதுவும் செய்யாமல் அமர்ந்திருந்தால் அவன் ஞானடைந்துவிடுவான் என ஜென் கூறுகிறது. வெறும் ஆறு மணிநேரம் . . .ஆனால் ஆறுமணிநேரம் உண்மையிலேயே மிக அதிகம். நான் ஆறு நிமிடங்கள் போதும் என கூறுகிறேன். நீ முற்றிலுமாக எந்த செயல்பாடும் இன்றி இருக்கமுடியுமானால் ஆறு நொடிகள் கூட போதும். நீ ஏதும் செய்யாமல் இருக்கும்போது, நீ உணர்வற்று இருக்கமுடியாது, நீ ஏதும்செய்யாமல் இருக்கும்போது உன்னுடைய முழு சக்தியும் உணர்வுதன்மை அடைகிறது. ஒரு பிரம்மாண்ட வெடித்தல் நிகழ்கிறது.
  ...............................................................................ஓஷோ..............................................................................................................

Wednesday, February 9, 2011

ஆனந்தமாக வாழவிருப்பமா? ஆனந்தம்

        இந்த உலகில் நீங்கள் நினைத்தது போலவே 100% யாரும் இருப்பதில்லை. வேடிக்கை என்னவென்றால், நீங்கள் நினைப்பதுபோல நீங்களே இருப்பதில்லை. அதுதான் உங்கள் பிரச்சினை. நீங்கள் எந்தச் சூழலிலும் உள்ளே ஆனந்தமாக இருப்பதென்று முடிவு செய்தால் நிச்சயம் முடியும். ஆனால், உள்ளே இருப்பது என்னவென்று பெரும்பாலானவர்கள் உணர்வதில்லை.
        சங்கரன்பிள்ளை ஒருமுறை அமெரிக்கா சென்றிருந்தார். அங்கே வழிப்பறிக் கொள்ளையர் களிடம் மாட்டிக் கொண்டார். அவரிடம் இருந்த மணிப்பர்சைப் பறிக்க, கொள்ளையர்கள் போராடினார்கள். ஆனால் இவர் விடவில்லை. கீழே தள்ளி பர்ஸை பலவந்தமாகப் பறித்துப் பிரித்தால் இந்தியப் பணம் ஐந்து ரூபாய் இருந்தது. அமெரிக்க டாலர்கூட இல்லை. அவர்கள் ஆத்திரத்துடன் ”இதற்கா இவ்வளவு போராடினாய்” என்று கேட்டார்கள். உடனே சங்கரன் பிள்ளை, ”நான்கூட, நான் ஷுவில் மறைத்து வைத்திருக்கும் வைரத்தைத்தான் கொள்ளையடிக்க வந்திருக்கிறீர்கள் என்று நினைத்தேன்” என்று சொன்னார்.
        இப்படித்தான் பலரும் தங்களுக்குள் மறைந்து கிடக்கும் விஷயங்களின் மதிப்பு தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். விழிப்புணர்வுடன் பார்த்தால் உங்கள் மனம் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். நீங்கள் அதிசயம் என்று தனியாக எதையும் நிகழ்த்த வேண்டிய அவசியமில்லை. விழிப்புணர்வுடனும் முழுஈடுபாட்டுடனும் செய்தால் எல்லா செயல்களும் அதிசயங்கள்தான்.
        எங்கிருந்தோ உங்கள் உணவு வருகிறது. அதை நீங்கள் பயிராக்கவில்லை. ஆனால் அந்த உணவை எடுத்து வாயில் போட்டதும் அது உங்களில் ஒரு பகுதியாகிறது. கணப்பொழுதுக்குள் ஒரு கவளம் மனிதனாகிவிட்டது. உங்களுக் குள்ளேயே இருப்பது அற்புதம். அதை உணராமல் வாழ்வது ஆபாசம். உங்களுக்குள் இருக்கும் சக்தியை செயல்படுத்தும் தொழில் நுட்பத்துக்குத்தான் ஆன்மீகம் என்று பெயர். பலர், தங்களுக்குள் இருக்கும் சக்தியை செயல்படுத்தக்கூட எங்கிருந்தோ கட்டளை வருமென்று காத்திருக்கிறார்கள்.
        எதை நீங்கள் உங்களுக்கான செய்தியாக எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதில்தான் எல்லாம் இருக்கிறது, ஒருவர் தவம் செய்யலாம் என்று காட்டுக்குள் போகத் தீர்மானித்தார். அங்கிருந்து உணவுக்கு வெளியே வரவேண்டுமா என்று யோசித்த போது, அவர் பார்வையில் ஊனமுற்ற நரி ஒன்று தென்பட்டது. அதனால் அசைய முடியாது. உணவு தேடி வேட்டையாட முடியாது. ஆனால் அது பட்டினி கிடப்பது மாதிரியும் தெரியவில்லை. கொழுத்த நரியாகத்தான் இருந்தது. உணவுக்கு என்ன செய்கிறதென்று இந்த மனிதர் மறைந்திருந்து பார்த்தார். சிறிது நேரத்தில் அங்கே ஒரு சிங்கம் வந்தது. ஒரு மாமிசத் துண்டைக் கொண்டு வந்து நரியின் முன் போட்டது. தனக்குக் கடவுளின் செய்தி கிடைத்துவிட்டதாக இந்த மனிதர் அகமகிழ்ந்தார்.
        தனக்கான உணவு, தானே வரும் என்று தவம் செய்ய உட்கார்ந்தார். நாட்கள் ஓடின. யாரும் உணவு கொண்டு வரவில்லை. பசியால் சுருண்டு கிடந்த அவரை அந்தப் பக்கமாக வந்த யோகி ஒருவர் கண்டார். என்ன நடந்தது என்று கேட்டறிந்தார்.
        பிறகு அந்த யோகி சொன்னார், ”நடந்த சம்பவத்தில் இரண்டு செய்திகள் இருக்கின்றன. பசித்திருந்த நரி. பகிர்ந்து உண்ட சிங்கம். நீ ஏன் உன்னை நரியின் இடத்தில் வைத்துப் பார்த்தாய். நீ சிங்கத்தின் நிலைப்பாட்டை எடுத்திருக்கலாமே” என்றார்.
        இதேபோல் இன்னொரு சம்பவம். ஒரு குருவிடம் பயின்ற சீடர்கள் எதிர்பாராத விதமாக வேறொரு யோகியை சந்தித்தார்கள். அவரிடம், ”வாழ்க்கை என்றால் என்ன?” என்று கேட்டார்கள்.
        அதற்கு அந்த யோகி, ”வாழ்க்கை என்பது மல்லிகைப் பூவின் மெல்லிய வாசனை போன்றது” என்றார். வந்தவர்கள் அதிர்ந்து போனார்கள். ”சுவாமி! எங்கள் குருநாதர், வாழ்க்கை என்பது குத்துகிற முட்களைப்போல் கொடுமையானது என்று கூறினாரே!’ என்றார்கள். யோகி சிரித்துக் கொண்டே சொன்னார், ”அவர் சொன்னது அவருடைய வாழ்க்கை. நான் சொன்னது என்னுடைய வாழ்க்கை” என்று.
        ”உங்கள் வாழ்க்கையை நீங்கள் விரும்பும் விதமாக அமைத்துக் கொள்ளும் சக்தி உங்களிடமே இருக்கிறது. ஆனந்தமாக வாழவிருப்பமா?”

Friday, February 4, 2011

சினம் - மன்னிப்பு ஆனந்தம்

        சமீபத்தில் ஒரு கருத்துக்கணிப்பு. மகாத்மா எழுதிய ஆயிரமாயிரம் வாசகங்களில் தலைசிறந்த வாசகம் எது? அதன் முடிவு, பலகீனமானவன் யாரையும் மன்னிப்பதில்லை, பலம் பொருந்தியவன் அனைவரையும் மன்னிக்கிறான்.
        மன்னிப்புக்கு மாற்றுப்பாதை கோபம். நாம் தவறு செய்யும் போது, அப்பாவோ, அம்மாவோ அல்லது உயரதிகாரிகளோ "ந‌டந்தது நடந்து போச்சு, சரி பரவயில்லை" என மன்னிக்க மாட்டார்களா என ஏங்குகிறோம், நாம் மன்னிப்புக்கு ஏங்குகிறோம், பிறரை மன்னிக்கத் தயங்குகிறோம்.
        நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களில் பல ரகங்கள் உண்டு. சாதுக்கள், சண்டாளர்கள், ஏமாற்றுபவர்கள், ஏமாறுபவர்கள், கருமிகள், தருமவான்கள், முன்கோபிகள், மூர்க்கர்கள், அருளாளர்கள் என பலவகையினரை நாம் பார்க்கிறோம். இவர்களுக்கு மத்தியில் தான் நாம் வாழவேண்டியிருக்கிறது. யாருடனும் பகைமை கொள்ளாது அனைவரிடமும் இணக்கமாக வாழ, நமக்கு அவரவர்களை அவரவர் நிலையில் ஏற்றுக்கொண்டு வாழவேண்டும்.
        நமது வாழ்க்கையில் நித்தம் நித்தம் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் சம்பவங்களே! சிலது நல்ல பலனைத் தரும், சிலது நல்ல பாடத்தைத் தரும். பலனைப் பெறும்போது சந்தோசமடைகிறோம், பாடத்தைப் பெறும் போது சம்மந்தப்பட்ட மனிதர்களை கோபம் கொண்டு காயப்படுத்துகிறோம்.

        கண்டிப்பு வேண்டும், ஆனால் கோபம் கொண்டு வார்த்தைகளை தாறுமாறாக கொட்டும் கோபம் வேண்டாம். கோபம் கொண்டால் மனிதனுக்கும் விலங்கிற்கும் வித்தியாசமில்லை. ஆனால் மன்னித்தல் என்பது மனிதனுக்கு மட்டுமே சாத்தியமானது. மனிதனின் த்னித்தன்மையை இழக்கச் செய்வது சினம். ஆகவே வள்ளுவர் அருளினார்,
                      " தன்னைத்தான் காக்கின் சினம் காக்க, காவாக்கால்
            தன்னையே கொல்லும் சினம்"
        அன்பின் அடையாளம் மன்னிப்பு. ஆணவத்தின் ஆரவாரம் சினம்.
        வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சிறுசிறு சம்பவங்கள்-கல்யாணத்திற்கு என்னை அழைக்கவில்லை, வசதி மிகுந்த சிலர் என்னை மதிக்கவில்லை, வெளிநாடு போகும் போது என்னிடம் சொல்லிக்கொண்டு போகவில்லை, மருத்துவமனையில் இருக்கும் போது என்னை வந்து பார்க்கவில்லை என்ற எண்ணங்கள் சில சிக்கல்களை கோபத்தை மனதில் ஏற்படுத்தலாம். உருவான சிறுசிறு சிக்கல்களை  பெரிதாக்குவது நம்கையில் தான் இருக்கிறது. சிக்கல் உருவானது நம் மனதில் ஆகவே தீர்வும் அங்கே தான் உருவாக வேண்டும். சிக்கல் சிறிதாக இருக்கும் போது அதை உருவாக்கியவரை மன்னித்து சம்பவம் நடக்காதது மாதிரி நாம் நடந்து கொண்டால் அந்த சிக்கலுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்கிறோம். மாறாக, சினம் கொண்டு சம்மந்தப்பட்டவர்களை வார்த்தைகளால் வாரி இறைத்தால் சிக்கல் பெரிதாகி விடுகிறது. அவர் மீது நமக்கு வெறுப்பும், நம் மீது அவருக்கு வெறுப்பும் உண்டாகி நல்ல உறவுகளை இழக்கிறோம்.
                      "சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி
                     இனமெனும் ஏமப்புனையைச் சுடும்"
        சென்னையில் எனது நெருங்கிய உறவுக்காரர், மிகவும் வேண்டியவர். அவர் வீட்டுக் கல்யாணத்திற்கு பத்திரிக்கை இன்னும் வரவில்லை, விடிந்தால் கல்யாணம் கல்யாணத்திற்கு செல்வதா? வேண்டாமா?
        நெருங்கிய உறவுக்காறர் ஆயிற்றே பத்திரிக்கை கொடுத்து தான் கல்யாணத்திற்கு செல்ல வேண்டுமா? என்று அவரை மன்னித்து கல்யாணத்திற்கு சென்றால், நான் இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். "நேரில் வந்து அழைக்கலாமென்று இருந்தேன், கடைசி நேரத்தில் விட்டுப் போய்விட்டது என்று கட்டிப் பிடிப்பார் அவர். அங்கே நல்உறவு  வாழ்க்கை முழுவதும் நீடிக்கும். அல்லது சென்னையில் எத்தனையோ திருமணங்கள் அழைப்பில்லாமல் நடக்கின்றன அதில் இதுவும் ஒன்று என்று பேசாமல்(கல்யாணத்திற்கு போகாமல்) விட்டுவிட்டால் அதோடு சிக்கல் தீர்ந்து உறவு நீடிக்கும். அதை விடுத்து கோபத்தில் போகாமல் விட்டுவிட்டதுடன், நாளைக்கு நம்வீட்டு விசேஷத்திற்கும் அவருக்கு அழைப்பு கொடுக்கக் கூடாது என்ற முடிவுடன், அவரைப் பற்றி தகாத வார்த்தைகளை அள்ளி வீச, அதை நான்கு பேரிடம் சொல்ல உறவு முறிகிறது.
        வீட்டிலாகட்டும், வெளியிலாகட்டும் கோபம் கொண்டு எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்பட்டு உறவுகளை முறித்து விடாதீர்கள். உறவுகள் முறிய முறிய தனிமைப் படுத்தப்படுவோம். உற‌வுகளைக் கட்டிக் காப்பற்றுவது தெய்வீகம். அந்த தெய்வீகத் தன்மையை வளர்ப்பது நமது மன்னிக்கும் தன்மையே.
        சினம் நம்மைத் தாழ்த்திவிடும், மன்னிக்கும் தன்மை ஒன்றே நம்மை உயர்த்தவல்லது. மன்னிப்பே மகத்தானது. மன்னிப்பே நமக்கும் நிம்மதியைத் தந்து, மற்ற‌வர்களுக்கும் நிம்மதியைத் தரும். மன்னிப்பதால் ஆனந்தம் நிலைக்கும், ஆனந்தம் பெருகும்..........
…………………… அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி…………………….

காலம் ஆனந்தம்


        ஒருவர் மிகசிறந்த நல்ல சக்ரவர்த்தி ஆவது ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நிகழக்கூடும் என்றும் அவர் ஒரு தனிப்பிறவி என்றும் அதனால் அப்படி ஒரு சக்ரவர்த்தியான ஒருவர் இறந்தால் அவருக்கு சொர்க்கத்தில் தனிப்பட்ட மரியாதைகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டு, சிறப்பான ஒரு இடம் கொடுக்கப்படும் என்றும் சொல்லப்படுவதுண்டு.
        ஜைன மத நூல்களில் சொர்க்கத்தில் இமயமலையை போன்ற ஒரு மலை உண்டு எனக் கூறப்பட்டுள்ளது. இந்த இமயமலை பாறைகளாலும் மண்ணாலும் பனியாலும் உருவாக்கப்பட்டுள்ளது. சொர்க்கத்தில் உள்ள அந்த மலைக்கு பெயர் சுமிரு. சுமிரு என்றால் மிக உயர்ந்த மலை எனப் பொருள். அதை விட சிறந்த, அதை விட அழகானது வேறில்லை என்பது அதன் அர்த்தம். அது தங்கத்தால் உருவானது. அதில் பாறைகளுக்கு பதிலாக வைரங்களும் பவளங்களும் மரகதங்களும் உள்ளன. மிகசிறந்த நல்ல சக்ரவர்த்தி ஒருவர் இறந்தால் அவரது பெயர் அந்த மலை மீது பொறிக்கப்படும்.
        அப்படி ஒரு சக்ரவர்த்தி இறந்த சமயம் அவரது பெயரை சுமிரு மலை மீது பொறிப்பதற்காக அவரை கூட்டிப் போனார்கள். அது ஒரு அரிதான தருணம். அது ஆயிரம் வருடங்களில் ஒருமுறையே நிகழும். இந்த மன்னன் தன் பெயரை சுமிரு மலை மீது தான் பொறிக்கப்போவதை எண்ணி மிகவும் மனக்கிளர்ச்சியடைந்தான். இதுவரை இருந்த மிகச் சிறந்தவர்களில் ஒருவனாகப் போவதோடு, வரப்போகிற சிறந்தவர்களுக்கும் ஒரு பாடமாக, வழிகாட்டியாக இருக்கப்போகிறான். அந்த சக்ரவர்த்தி அசாதாரணமானவர்களில் ஒருவனாகப் போகிறான்.
        அந்த வாயில் காவலன் மலைமீது அவரது பெயரை பொறிப்பதற்க்கு தேவையான கருவிகளை கொடுத்தான். சக்ரவர்த்தி தன்னுடன் இன்னும் சிலரை கூட்டிச் செல்ல விரும்பினான். சக்ரவர்த்தியின் வாழ்நாள் பூராவும் அவருடன் இருந்து அவரது வெற்றிக்கு துணை நின்ற அவரது மனைவி, அமைச்சர், தளபதி ஆகியோர் சக்ரவர்த்தி இறந்தபோது அவரின்றி வாழ முடியாது என தற்கொலை செய்துகொண்டு அவருடன் கூடவே உயிர் விட்டு அவருடன் இப்போது சொர்க்கத்துக்கு வந்துள்ளனர். அவர்களையும் கூட்டிச் செல்ல அனுமதிக்குமாறு வாயில் காப்போனைக் கேட்டார். ஏனெனில் தன்னந்தனியே போய் தன் பெயரை பதித்துவிட்டு வருவதில் என்ன சந்தோஷம் இருக்கப் போகிறது—அங்கு அதைப்பார்க்க யாருமே இல்லாவிடில் மகிழ்ச்சி எப்படி வரும்—ஏனெனில் இந்த முழு உலகமும் பார்ப்பதில்தான் சந்தோஷமே இருக்கிறது.
        வாயில் காவலன், என்னுடைய பேச்சை தயவு செய்து கேளுங்கள். இது என்னுடைய பரம்பரை தொழில். என்னுடைய அப்பா, தாத்தா, அவருடைய அப்பா என நாங்கள் ஆயிரக்கணக்கான நூற்றாண்டுகளாக இந்த சுமிரு மலையின் வாயில் காப்பவர்கள். அதனால் என் பேச்சைக் கேளுங்கள். இவர்கள் யாரையும் உங்களுடன் கூட்டிச் செல்லாதீர்கள். இல்லையெனில் வருத்தப்படுவீர்கள். என்றான்.
        சக்ரவர்த்தியால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவரால் அவனது பேச்சைக் கேட்காமலும் இருக்க முடியவில்லை. ஏனெனில் அவரைத் தடுப்பதால் அவனுக்கு என்ன லாபம்...
        வாயில் காப்போன், நீங்கள் இவர்களை இப்போதேக் கூட்டிச் செல்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அவர்களைக் கூட்டிச் சென்று விட்டு பின் அங்குள்ள நிலையை பார்த்துவிட்டு ஒருக்கால் காண்பிக்க வேண்டாம் என முடிவெடுத்தால் அப்போது அதை செயல்படுத்த வழியும் இருக்காது, வாய்ப்பும் இருக்காது. அவர்கள் உங்களுடன்தான் இருப்பார்கள். எனவே இப்போது நீங்கள் தனியே சென்று உங்கள் பெயரை பொறித்துவிட்டு வாருங்கள். பின் இவர்கள் பார்க்கத்தான் வேண்டும் என விரும்பினால் திரும்பி வந்து இவர்களை கூட்டிச் செல்லுங்கள். என்றான்.
இது மிகச் சரியான யோசனையாகத் தோன்றியதால் சக்ரவர்த்தி, மற்றவர்களிடம், நான் தனியாகப் போய் எனது பெயரை பொறித்துவிட்டு திரும்ப வந்து உங்கள் எல்லோரையும் அழைத்துச் செல்கிறேன். என்றார்.
        வாயில் காப்போன், இதுதான் மிகச் சரியானது என்றான்.
        சக்ரவர்த்தி சென்று ஆயிரக்கணக்கான சூரியன்களுக்கு அடியில் தகதகத்துக் கொண்டிருந்த சுமிரு மலையைக் கண்டார். – ஏனெனில் சொர்க்கத்தில் ஒரே ஒரு சூரியனோடு ஏழை போன்று இருக்க முடியாது – ஆயிரக்கணக்கான சூரியன்கள், இமயமலையைவிட பெரிதான தங்க மலை. இமயமலையே இரண்டாயிரம் மைல் நீளம் உடையது. சக்ரவர்த்தியால் கண்களை திறக்கவே முடியவில்லை. அவ்வளவு தகதகப்பு – பின் மெதுவாக கண்களை பழக்கப்படுத்திக்கொண்டு தனது பெயரை பொறிக்க சரியான ஒரு இடத்தைத் தேடினார். ஆனால் அவர் மிகவும் வியப்படைந்தார். அங்கு இடமே இல்லை. மலை முழுவதும் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவரால் தனது கண்களையே நம்ப முடியவில்லை.
        முதல் தடவையாக அவர் தான் யாரென்று உணர்ந்தார். இதுவரை ஆயிரம் வருடங்களில் ஒருமுறை மட்டுமே உருவாகக் கூடிய சிறப்பான மனிதனாக தன்னை நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் காலம் முடிவற்றது. அதில் ஆயிரம் வருடங்கள் என்பது எந்தப்பெரிய மாறுதலையும் ஏற்படுத்தி விடாது. அது ஒரு பொருட்டே அல்ல. அதனால் ஏகப்பட்ட சக்ரவர்த்திகள் ஏற்கனவே இருந்திருக்கிறார்கள். அவ்வளவு பெரிய மலையில் இவருடைய சிறிய பெயரை எழுத இடமே இல்லை.
        அவர் திரும்பி வந்தார். உன்னுடைய மனைவி, அமைச்சர்கள், தளபதி மற்றும் நெருங்கிய நண்பர்கள் என யாரையும் உன்னுடன் கூட்டிச் செல்ல வேண்டாம் என காவலாளி தடுத்தது ஏன் என இப்போது புரிந்தது. அவர்கள் இந்த காட்சியை பார்க்காமல் இருந்தது நல்லது. தங்களது சக்ரவர்த்தி ஒரு அரிய பிறவி என்றே அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கட்டும்.
        அவர் காவலாளியை உள்ளே தனியே அழைத்து, அங்கே இடமே இல்லை என்பதைக் கூறினார்.
        காவலாளி, இதைத்தான் நான் உங்களிடம் கூறினேன். நீங்கள் சில பெயர்களை அழித்துவிட்டு உங்களது பெயரை எழுதிவிட்டு வாருங்கள். அப்படித்தான் செய்திருக்கிறார்கள். என் வாழ்வில் பலர் இப்படி செய்வதை பார்த்திருக்கிறேன். எனது தந்தையும் இப்படி நடந்திருக்கிறது எனக் கூறியிருக்கிறார். எனது தாத்தா ஏன் எனது பரம்பரையில் யாருமே சுமிரு மலை காலியாக இருந்தோ, சிறிதளவு இடம் இருந்தோ பார்த்ததில்லை.
        எப்போதுமே ஒரு சக்ரவர்த்தி வந்தால் அவர் சில பெயர்களை அழித்துவிட்டு தனது பெயரை எழுதுவார். இதுவரை இருந்த எல்லா சக்ரவர்த்திகளின் பெயரும் இதனுள் இருக்கிறது என்று கூறிவிட முடியாது. பலமுறை அழிக்கப்பட்டு பலமுறை பொறிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் உங்களது பெயரை எழுதிவிட்டு பின் உங்களது நண்பர்களிடம் காட்ட விரும்பினால் அவர்களை உள்ளே அழைத்துச் செல்லுங்கள். என்றான்.
        சக்ரவர்த்தி, இல்லை, நான் அவர்களிடம் காட்டவும் விரும்பவில்லை, என்னுடைய பெயரை நான் எழுதவும் போவதில்லை. அதனால் என்ன பயன் – ஒருநாள் யாராவது ஒருவர் வந்து அதை அழிக்கப் போகிறார். என்னுடைய முழு வாழ்வும் இப்போது பொருளற்றதாகி விட்டது. சொர்க்கத்தில் உள்ள சுமிரு மலையில் எனது பெயர் பொறிக்கப் படும் என்பதுதான் எனது ஒரே நம்பிக்கையாக இருந்தது. இதற்காகவே நான் வாழ்ந்தேன். இதற்காகவே நான் எனது வாழ்க்கை முழுவதையும் பணயம் வைத்தேன். இதற்காகவே நான் இந்த உலகம் முழுவதையும் கொல்லத் தயாராக இருந்தேன். ஆனால் இப்போது வேறு யார் வேண்டுமானாலும் வந்து எனது பெயரை அழித்துவிட்டு தங்களது பெயரை எழுதக்கூடும் எனும்போது அதில் எழுதுவதில் என்ன பொருளிருக்கிறது--- நான் அதில் எழுதப் போவதில்லை. என்றார்.
        காவலாளி சிரித்தான். சக்ரவர்த்தி, ஏன் சிரிக்கிறாய் எனக் கேட்டார்.
        காவலாளி, ஆச்சரியமாயிருக்கிறது. ஏனெனில் சக்ரவர்த்திகள் வந்து, இதைப் பார்த்துவிட்டு, கேட்டுவிட்டு, தங்கள் பெயரை எழுதாமல் திரும்பி போன கதையையும் நான் எனது தாத்தாவிடமிருந்து கேட்டிருக்கிறேன். நீங்கள் மட்டுமல்ல, ஒரு சிறிதளவாவது புத்திசாலித்தனம் உள்ள யாரும் இதையே தான் செய்வர். என்றான்.

Thursday, February 3, 2011

வேஷம் ஆனந்தம்


        முல்லா, நஸ்ருதீன் என்ற‌ ஒரு பெண்ணைக் காதலித்தார். முல்லாவுக்கு எல்லாம் நல்லபடி அமைந்திருந்தது. ஆனால் அவருடைய கண்பார்வை மங்கலானது.
ஆகவே அவர் கண் டாகடரிடம் கேட்டார், "கண்ணுக்கு சோடாபுட்டி போட்டுக் கொண்டிருந்தால் அந்தப் பெண் எப்படி என்னைக் காதலிப்பாள்? அவளுடைய முகம் கூட எனக்கு சரியாகத் தெர்யவில்லையே! நான் கண்ணாடி போட்டபடி அவள் எதிரில் போகக் கூடாது : உடனே என்னை நிராகரித்து விடுவாள். என்ன செய்யலாம் ?"
        டாக்டர் ஆலோசனை கூறினார், "ஒன்று செய்யலாமே! வெகு தொலைவு வரை உம்மால் பார்க்க முடிவது போல் நடியும். இப்படி அவள் நம்பும்படி ஏதாவது செய்து பாரும்!" முல்லா இதை செய்து பார்த்துவிடுவது என்று முடிவு செய்தார்.
        ஒரு நாள் பூங்காவில் உட்கார்ந்திருந்தபோது அவருக்கு ஒரு யுக்தி தோன்றியது. தூரத்தில் இருந்த ஒரு மரத்தில் ஒரு தையல் ஊசியைக் குத்திவிட்டு வந்தார். நல்ல கண்பார்வை இருந்தால் கூட அவ்வளவு தொலைவில் உள்ள ஊசியை யாராலும் பார்க்க முடியாது.
        முல்லா விண்மீ ன்கள் பளிச்ச்சிடும் இரவில் அன்று அந்த மரத்திலிருந்து 100 அடி தொலைவில் தன் காதலியுடன் உட்கார்ந்திருந்தார், திடிமென அவளிடம் "அதோ அந்த மரத்தில் பொருப்பில்லாமல் யாரோ ஒரு தையல் ஊசியை குத்தி வைத்திருக்கிறார்களே!" என்று கூறினார்.
        அப்பெண் முல்லாவின் கண்பார்வையின் மேல் ஏற்க்னவே சந்தேகம் கொண்டிருந்தாள். அப்படி இருக்க இவ்வளவு தொலைவில் ஒரு ஊசி இருப்பதை அவரால் எப்படி காண முடிந்தது என்று ஐயம் கொண்டாள். மேலும் அவளாலும் அதை பார்க்க முடியவில்லை; அந்த மரத்தையும் கூட சரியாகப் பார்க்கவில்லை. "நஸ்ருதீன், எனக்கு ஊசி ஒன்றும் தெரியவில்லையே," என்று கூறினாள்.
        முல்லா பந்தாவாக எழுந்து , "நான் போய் அதை எடுத்து வருகிறேன்", என்று கூறியபடி நடக்கலானார். ஓன்றிரண்டு அடி வைத்ததுமே தொப்பென்று தரையில் விழுந்தார். ஏனேன்றால் எதிரில் ஒரு எருமை மாடு நின்று கொண்டிருந்தது. இது அவர் கண்ணுக்குத் தெரியவில்லை.
        எந்த வேஷமும் நெடு நேரம் நிலைத்திருக்காது! உங்கள் வேஷத்தை மக்கள் கண்டுபிடிக்க வெகுநேரமாகாது. ஆனாலும் மரியாதைக்காக நீங்கள் வேஷம் போடுகிறீர்கள் என்று உங்களிடம் அவர்கள் சொல்லுவதில்லை. ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்வது நாகரீகமாகிவிட்டது.
........................................................ஓஷோ.........................................................................................

நட்பு - ஆனந்தம்

        மனித வாழ்க்கையில் விலை மதிக்க ஒண்ணாதது நட்பு. உடலுக்கும் உயிருக்கும் உறுதுணையாகி, சுகதுக்கங்களிலே கூட்டுறவு கொள்ளும் மனப்பாண்மையே நட்பு ஆகும். நல்ல நண்பர்கள் கிடைப்பதும் அவர்களைத் தேர்ந்தெடுப்பதும் எல்லோருக்கும் எளிதல்ல.
        பொருளாதாரத்தையும் ஒழுக்கத்தியும் குலைக்கும் நோக்கத்தோடு ஒருவர் மற்றவரோடு நட்பு கொள்ள இடமிருக்கிறது. ச‌முதாயத்தில் இத்தகைய நட்பு தான் மலிந்திருக்கிறது. இத்தகைய நட்பு வளர வளர அதனூடே தொக்கி நிற்கும் ஆபத்தும் வளர்ந்து கொண்டே வரும். ஆகவே இத்தகைய நட்பை ஆரம்பத்திலேயே உணர்ந்து முறித்துவிடுவது நலம்.
        ஒரு நீதிபதி தன்முன் குற்றம் சுமத்தப்பட்டு எதிரில் நிற்கும் குற்றவாளியை அவன் நிரபராதியாக இருக்கலாம் என்ற கருத்தை முன் வைத்தே விசாரணை நடத்துவார். அவன் குற்றவாளி என்று திர்ப்பை விசாரணை முடிந்த பின்னரே அவசியமானால் அளிக்கிறார். அதுவரையில் அந்த தீர்ப்பு தள்ளி வைக்கப்படுகிறது. அது போல, பொருள் தேவை, ஒழுங்கீனம் மிகுந்துள்ள இந்தக் காலத்தில், அவர் ஏன் சுயநலவாதியாக, சுரண்டி வாழ்பவராக இருக்கக் கூடாது என்ற கருத்தை முதலில் வைத்துக்கொண்டே அவரோடு நட்பு கொண்டு அவர் நடத்தையை ஆராயவேண்டும். சந்தர்ப்பங்கள் தான் மனித உள்ளத்தை உரை போடும் கல். ஆகவே உறவாடுபவர் உள்ளம் சீக்கிரம் தெளிவுபடும். அதன் பிறகே அவர் குற்றமற்றவர், நட்புக்கு ஒத்தானவர் என்ற முடிவுக்கு வரவேண்டும். நீதிபதி நிரபராதி என்பதை முன் வைத்து குற்றவாளி என்ற முடிவைப் பின் கொள்ளுகிறார். ஆனால் நட்பை ஆராய்வோர் முதலில் களங்கமுடையோன் என்ற கருத்தை வைத்து சோதனைக்கு பின்னரே களங்கமற்றவன், நண்பன் என்ற கருத்தை முடிவாகக் கொள்ள வேண்டும்.
        நட்பு எந்த முறையிலும் உருவாகலாம். குரு‍‍‍‍‍-சீடன், கணவன்-மனைவி, ஆசிரியர்-மாணவன், எசமான்-பனியாள், பொருட்களை விற்பவர்-வாங்குவோர், துணைவர்கள் அகிய எந்த முறையிலும் நட்பு உருவாகலாம். தேவை, பழக்கம், அறிவுநிலை இந்த மூன்றிலும் ஒவ்வொருவரும் வேறு பட்டிருப்பதனால் நட்பு என்றும் நிரந்தரம் எறு கொள்ள முடியாது. அது நீடிக்க இருக்கும் வாய்ப்பை விட குலைந்து போக இருக்கும் வாய்பு தான் அதிகம்.
        சிந்தனையில்லாமல் கொண்ட நட்பு, அத்த‌கைய நண்பர்கள் மேல் கொண்ட நம்பிக்கை மயக்கத்தில் எத்துணையோ விபரீதங்களை உலகில் விளைவித்துள்ளது. பொருட்கள், பதவி, மனைவி, மக்கள், கெளரவம் இவற்றை துரோகிகள் நட்பினால் இழந்தவர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காது. போலி நண்பர்கள் துரோகத்திற்க்கு உயிரைப் பலி கொடுத்தவர்கள்தான் கொஞ்சமா?
        எதிரிகளால் ஏற்ப்படவிருக்கும் கெடுதல்களை புரிந்து கொள்ள முடியும். முன் ஏற்பாடோடும் இருக்கலாம். நண்பர்கள் என்ற முத்திரையில் உளவும் நயவஞ்சகர்கள் அடுத்த நிமிடத்தில் என்ன செய்வார்கள் என்று கூட புரிந்து கொள்ள முடியாது. இத‌ற்கு உலகசரித்திரம் சான்று கூறுகிறது.
        எவ்வளவு ஆழமான நட்பாக இருந்தாலும் இருவருக்கிடையே தான் அது வலுவுள்ளதாக இருக்க முடியும். மூன்றாவது நபர் ஒரு நட்பில் குறுக்கிட்டால்-இணைந்தால்-ந‌ட்புக்கு எந்த வித‌த்திலேனும் ஊறு உண்டாகிவிடும்.
        நல்ல நட்பு கிடைக்காவிட்டாலும் சரி ஒருவரையும் பகைத்துக்கொள்ளாத இன்மொழியாளனாக இருந்தால் அது உலகையே உனக்கு வசீகரப்படுத்திக் கொடுக்கும். வாழ்வை வெற்றிகரமாக்கித் தரும்.
        நட்பின் உயர்வு பற்றி விரித்துரைப்பது முடியாதுதான். பொருள்த் தேவை, ஒழுங்கீனம் மலிந்துள்ள இந்தக் காலத்தில் அத்தகைய நட்பு உருவாவது அரிது. நட்பினால் நலம் பெற்றோர் எண்ணிக்கையைவிட வாழ்வில் ஏமாற்றமடைந்தோர், சீர்குலைந்தோர் எண்ணிக்கையே அதிகம்.
        அறிவோடும், விழிப்போடும் எல்லோரிடமும் அன்பாய்ப் பழகி, அகலாமலும், நெருங்காமலும் தீக்காய்வார் போல, பொருளையோ, ஆற்றலையோ உத‌வியும், பெற்றும் வாழ்வது நட்பினால் ஏமாறாத-ஏமாற்றமளிக்காத-உயர்முறையாகும். அதுவே ஆனந்தமான வாழ்க்கைக்கு உதவும் முறையாகும்................................
.........................அருட்தந்தை வேதத்திரி மகரிஷி................................. 
வாழ்க வளமுடன்!