Saturday, December 22, 2012

இளைஞன் – கலக்கமா விளக்கமா? ஆனந்தம்


   
      இந்த உலகத்தில் ஏதாவது ஆக்கப்பூர்வமான வேலைகள் நடக்க வேண்டுமானால், அது இளைஞர்களால்தான் முடியும். ஏதாவது நாசகரமான வேலைகள் நடக்க வேண்டுமானாலும், அதுவும் இளைஞர்களால்தான் முடியும்.ஏனென்றால், அவர்கள் மிகவும் உயிர்ப்புடனும் துடிப்புடனும் இருக்கின்றனர்.

      இன்றைய இளைஞர்கள் உயிரோட்டத்தோடும், சிறந்த லட்சியங்களோடும், சிறந்த ஊக்கத்துடனும் இருக்கிறார்கள். இந்த உலகம் இளைஞர்களால் வழிகாட்டப்படுமானால், வாழ்வதற்கு இன்னும் சிறந்த இடமாக அமையும் என்பதே உண்மை. ஆனால், அவர்கள் ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் சற்று மிகைப்படுத்திச் செய்துவிடுகிறார்கள் என்பதும் உண்மை.

      வயதான தலைமுறையினர், இன்றைய இளைஞர்களை ஏதோ சிகிச்சை தேவைப்படுகிற நோயாளிகளைப்போல கருதுகிறார்கள். அது உண்மை அல்ல. வாழ்க்கையைவிட்டு மிகவும் விலகிப் போய்விட்ட மனிதர்களுக்குத்தான் சிகிச்சை தேவை. இளைஞர்களோ, வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக இருக்கிறார்கள். இளைஞர்கள் எப்போதும் ஓர் உயர்ந்த சக்தி நிலையில் இருப்பதால், அவர்களுக்குச் சரியான வழிகாட்டுதலோ, தூண்டுதலோ கிடைக்கவில்லையென்றால், அவர்களது சக்தி எளிதில் எதிர்மறையாகிவிடும்.

      நமது கல்விமுறை 100% தகவல் அளிப்பதாகத்தான் இருக்கிறது. அது ஒரு தூண்டுகோலாக, ஊக்கம் கொடுப்பதாக இல்லை. ஊக்குவிப்பவர் இல்லையென்றால், ஒரு மனிதன் அவனுடைய எல்லைகளைத் தாண்டி உயர முடியாது. வெறும் தகவல் தேவை என்றால், ஓர் ஆசிரியர் சிறந்தவராக இருக்க முடியாது. புத்தகங்களும், இணையத்தளமும் இந்த வேலையை இன்னும் சிறப்பாகச் செய்யும்.

      ஓர் ஆசிரியரின் பங்கு, ஒரு மாணவரை கற்கத் தூண்டுவதாக இருக்க வேண்டும். அறிவுக்கான தாகத்தை உருவாக்குவதாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஆசிரியரின் பங்கில் ஏதாவது பொருள் இருக்கும்.

      கல்விமுறையை முற்றிலும் தகவல் தொடர்புடையதாய் செய்திருப்பது நம் நாட்டில் ஏராளமான சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வாழ்க்கையில் இளைஞராய் இருக்கும்போது, பல விஷயங்கள் செய்யக்கூடியவராய் இருக்கும்போது, அவர்களுக்குத் தேவையான தூண்டுகோல் இல்லாமல் போய்விட்டால், துரதிர்ஷ்டவசமாக அவர்கள் வாழ்க்கையின் முக்கியக் காலம் பயனற்றுப் போய்விடும்.

      இளைஞர்களுக்குத் தேவையான தூண்டுகோலாக இருப்பதற்கு உங்களுக்குப் பெரிய பொறுப்பும், அர்ப்பணிப்பு உணர்வும் வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, பொறுப்பு உணர்ச்சியும், அர்ப்பணிப்பு உணர்வும் இந்த உலகத்தில் ஒரு பற்றாக்குறைப் பொருளாய் ஆகிவிட்டது. எல்லோரும் ஒரு நாளில் கோலாகலமாக விழா ஒன்று நடத்தி இளைஞர்களை அற்புதமான நிலைகளுக்கு ஊக்குவிப்பது பற்றியே நினைக்கிறார்கள். ஆனால் இது இவ்வாறு நடக்காது. இது ஒரு வாழ்க்கை முழுவதும் நடக்க வேண்டிய விஷயமாகும். இன்றைக்கு ஒன்று செய்துவிட்டு, எல்லாம் முடிந்துவிட்டது என்று வெறுமனே இருந்துவிட முடியாது.

      இது ஒரு செடியைப் பேணி வளர்ப்பதுபோல. அது ஒரு நாள் பழம் கொடுக்க வேண்டுமானால், நீங்கள் அதை தினமும் பேணி வளர்க்க வேண்டும். அதற்குத் தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும். தினமும் அதனைப் பாதுகாக்க வேண்டும். இந்த அர்ப்பணிப்பு உணர்வு வயதானவர்களுக்கு இருக்குமானால், இளைஞர்களால் பல அற்புதமான செயல்களைச் செய்ய முடியும். இந்த அர்ப்பணிப்பு உணர்வு பெரியவர்களிடம் இல்லாததால்தான், இளைஞர்கள் திசைமாறி, என்ன செய்வதென்றே தெரியாமல் தங்களுக்குத் தோன்றியதை எல்லாம் செய்து வருகிறார்கள். பொறுப்பில் உள்ளவர்கள் குறுகிய கால இலக்குகளை நோக்கிச் செயல்படுவதால், இளைஞர்களும் குறுகிய கால இலக்குகளை நோக்கிச் செயல்படுகிறார்கள்.

      இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும், மனிதர்களின் நலன் குறித்துத்தான் அக்கறை கொண்டு உள்ளார்கள். ஆனால், ஒவ்வொருவரும் மனித நலன்பற்றி வெவ்வேறு அளவுகளில் அக்கறை கொண்டுள்ளார்கள். ஒருவருக்கு மனித நலன் என்பது அவரும் அவரது குடும்பமும். இன்னொருவருக்கு அவரும் அவரது நாடும். மற்றொருவருக்கோ மனித நலன் என்பது இந்த முழு உலகமும் உள்ளடங்கியது. ஒரு குற்றவாளியோ அல்லது ஒரு திருடனோ அவரும் மனித நலன் குறித்துத்தான் அக்கறைகொண்டு இருக்கிறார். ஆனால் அவர், மனித நலன் என்றால் தனது நலன்தான் என்ற கருத்தில் இருக்கிறார்.

      அதனால் இளைஞர்கள் மற்றும் எல்லோரிடமும் ஒரு பெரிய மாற்றம் வர வேண்டும். ஒவ்வொருவருடைய எண்ணமும் தன்னைப்பற்றி மட்டுமல்லாமல் அது இந்த முழுச் சமூகத்தையும், முழு உலகத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

      துரதிர்ஷ்டவசமாக, இது நமது கல்விமுறையில் காணாமல் போய்விட்டது. நவீனக் கல்விமுறை, மக்களைத் தொடர்ந்து தங்களைப்பற்றி மட்டுமே நினைத்துக்கொள்ளப் பயிற்சி அளிக்கிறது. இந்த முழு விஞ்ஞானச் செயல்முறையே, எப்படி எல்லாவற்றையும் நமது இன்பத்துக்கும், நலத்துக்கும் உபயோகப்படுத்துவது என்பதில்தான் இருக்கிறது. இந்த மனப்பாங்கு புதிய கல்விமுறையால் ஆழமாகச் செய்யப்பட்டுவிட்டது.

      தகவல் அறிவைக் கொடுப்பதற்காக எப்படி நமது நேரம், வளங்கள் மற்றும் சக்தி முதலிய-வற்றை முதலீடு செய்கிறோமோ அவ்வாறே நமது இளைஞர்களை ஊக்குவிப்பதற்கும் நமது நேரம், வளங்கள் மற்றும் சக்தி முதலியவற்றை முதலீடு செய்ய வேண்டும். இது நடந்துவிட்டால், நமது உலகம் உண்மையிலேயே ஓர் அழகான இடமாக மாறும்!

Monday, December 3, 2012

உங்களால் கணக்கிடமுடியாதவையே மதிப்பானவை - ஆனந்தம்



   
      நான் ஒரு உயர்ந்த வணிகக் கல்வி நிறுவனத்தை பார்வையிடச் சென்ற பொழுது, அங்கு அவர்கள், “உங்களால் கணக்கிட முடியாதவை மதிப்பற்றவை” என்று கற்பிப்பதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இல்லை, உங்களால் எதை கணக்கிட முடியாதோ அதுவே மதிப்பானது. உங்கள் வாழ்க்கையில் எதை உங்களால் கணக்கிட முடியுமோ அதன் முக்கியத்துவம் குறைவுதான். உங்களால் கணக்கிட முடிந்தது என்பது உங்கள் வருமானம்தான். வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தலாம். ஆனால் ஒரு வாழ்க்கையை உருவாக்க முடியாது. பிழைப்பு நடத்தியே உங்கள் வாழ்க்கையை கழிக்க வேண்டுமா அல்லது ஓர் நல்ல வாழ்க்கையை உருவாக்க வேண்டுமா? ஒவ்வொரு மனிதனும் தேர்ந்தெடுக்க வேண்டியது இதைத்தான்.
      துரதிர்ஷ்டவசமாக இன்றைக்கு பெரும்பாலான மனிதர்களின் வாழ்க்கைமுறை செயற்கைத்தனமாகவும் விலை உயர்ந்ததாகவும் இருப்பதால் அவர்கள் வாழ்க்கை முழுவதும் பிழைப்புக்காகவே செலவிடுகிறார்கள். வீடு வாங்குகிறார்கள், 30 வருடம் வீட்டிற்கு அடைமானமாகி விடுகிறார்கள். வீடு அடமானமாகாது, அவர்கள் தான் அடமானமாகி விடுகிறார்கள். பின்னர் கார் வாங்குகிறார்கள், அதற்கு 10 வருடம் அடமானம். அவர்கள் கல்விக்கான கடன் தொகையை அடைப்பதற்கே 15 வருடங்கள் ஆகிவிடுகின்றன. இன்றைக்குத்தான் ஒரு செய்திதாளில் படித்தேன். வரும்காலத்தில், பூமியில் இனி பிறக்கும் மனிதர்களில் மூன்றில் ஒருவர் 100 வருடம் வரை வாழ்வார்களாம். கல்வியை 32 வயதில் முடித்து அதற்கான கடன் தொகையை 50 வயதில் அடைத்து, 45 வயதில் திருமணம் செய்து 70, 72 வயதில் ஒய்வுபெற்று விடுவார்கள். அதன் பிறகு உள்ள 30 வருடங்களுக்கு இருக்கவே இருக்கிறது மருத்துவ காப்பீட்டுத் திட்டம். மருத்துவர் பின் மருத்துவராக தேடிச் செல்ல வேண்டியதுதான்.
      நீங்கள் ஒரு நல்ல வாழ்க்கையை உருவாக்கத் தேர்ந்தெடுத்தால், இந்த சமூகத்திற்கு என்ன செய்ய முடியும் என்கிற ரீதியில் யோசிக்காதீர்கள். உங்களுக்கென்று ஏதாவது அற்புதமான செயலை செய்தீர்களேயானால், இயல்பாகவே அதை மற்றவருடன் பகிர்ந்துகொள்வதை நீங்கள் தவிர்க்க முடியாது. மிகவும் அற்புதமான ஒன்று உங்களுக்குக் கிடைத்தால் அதை பகிர்ந்துகொள்ளத் தோன்றாதா என்ன? உங்களுக்கு கணக்கிடக் கூடிய விஷயங்களைத் தான் பகிர்ந்துகொள்ளத் தோன்றாது. வாழ்க்கையில் கணக்கிட முடியாத சில அம்சங்கள் இருப்பதை நீங்கள் புரிந்துகொண்டால், அவை என்றுமே குறைவதில்லை என்று உணர்வீர்கள். மதிப்பிட்டு சேமித்து வைக்கக் கூடிய பொருட்கள்தான் ஒரு நாள் சென்று விடுமோ என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும். ஒரு கோடி ரூபாயை சேமித்து நீங்கள் வைத்திருந்தால், அதை வெளியே எடுத்தால் செலவழிந்துவிடும் என்ற பயம் இருந்து கொண்டேயிருக்கும். உங்களுக்குள் மகிழ்ச்சி இருந்தால், பரவசம் இருந்தால், ஞானோதயம் இருந்தால் அது செலவழியாது, எனவே பூட்டி வைக்கத் தேவையில்லை என்று அறிவீர்கள். அப்பொழுதுதான் உதவிக்கரம் நீட்டி என்ன தேவையோ அதை உங்களால் செய்ய முடியும்.
      இந்த உலகிற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்களுக்குப் பிடித்தமானது அல்ல. இந்த உலகிற்கு என்ன தேவையோ அதைத்தானே செய்ய வேண்டும்? உங்களுக்கு எது பிடித்ததோ அதைச் செய்யாமல் எது தேவையோ அதைத் செய்ய வேண்டும். குறிப்பாக மேற்கத்திய கலாச்சாரங்களில் இதை மாதிரி தவறான பிரச்சாரம் செய்கிறார்கள், “உங்களுக்கு விருப்பமானதைச் செய்வதே சுதந்திரம்.”
      உங்களுடைய விருப்பு வெறுப்புகள் என்பது ஒரு கட்டுப்பாட்டு நிலை. உங்களுக்கு விருப்பமானதைச் செய்ய முடியவில்லையென்றால் வேதனைப்படுவீர்கள். நீங்கள் வெறுப்பதைச் செய்ய நேர்ந்தால் வேதனைப்படுவீர்கள், இது ஒரு கடுமையான கட்டுப்பாடு, ஒரு பொறி என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய விருப்பங்களுக்காகவே உங்கள் வாழ்க்கையை நீங்கள் செலவழித்தால், ஒரு ஆழமான பொறிக்குள் சிக்கிக்கொள்வீர்கள். உங்களுடைய விருப்பங்ள் எந்நேரமும் உங்களைத் துன்புறுத்திக்கொண்டே இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
      உங்களுக்கு என்ன பிடிக்கும் என்பதைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். முதலில் அந்த மாதிரி ஒரு மனநிலையை உருவாக்காதீர்கள். என்ன தேவையோ அதை மட்டும் செய்யுங்கள். தேவையானதை நீங்கள் செய்துகொண்டே இருந்தால், எந்நேரமும் எல்லாம் நன்றாகவே இருக்கும். கட்டுப்பாடு என்ற ஒன்றிற்கு இடமே இல்லை. இயல்பாகவே நீங்கள் விழிப்புணர்வு நிலையை அடைந்து விடுவீர்கள். வாழ்க்கையை அனுபவிக்க ஒரே ஒரு வழி விழிப்புணர்வு நிலையடைவதுதான். உங்கள் விழிப்புணர்வு குறைந்து கொண்டே போனால் நீங்கள் வாழ்க்கையை அனுபவிக்க முடியாது.
      நீங்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருந்தால்தான் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க முடியும். உண்மையான விழிப்புணர்வுடன் இருந்தால் எல்லாமே அற்புதமாக இருக்கும். நீங்கள் விழிப்புணர்வு இழந்துவிட்டால் இறந்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.
      எனவே எவ்விதமான வாழ்க்கை வாழ்வது என்பது உங்கள் விருப்பமாக இருக்கக் கூடாது. வாழ்வா சாவா என்பதைப் பற்றிதான் இருக்க வேண்டும். ஏனென்றால் விழிப்புணர்வு ஒன்றுதான் வாழ்க்கையை நடத்திச் செல்லும்.
      விழிப்புணர்வில்லாத நிலையில் நீங்கள் இருந்தால் மரணத்தை நோக்கி தவணை முறையில் செல்கிறீர்கள் என்று அர்த்தம். வாழ்க்கையில் கணக்கிடக்கூடிய விஷயங்களில் நீங்கள் அதிக நேரம் செலவழித்தால் நீங்கள் மேலும் மேலும் விழிப்புணர்வில்லாத நிலையடைகிறீர்கள்.
      கர்நாடகாவில் ஒர் அற்புதமான துறவி இருந்தார். அல்லமா மஹா பிரபு என்று பெயர். பல்லாயிரக்கணக்கான கவிதைகள் எழுதியவர். ஒரு கவிதையில் அவர் இப்படி வருந்துகிறார் “ஒரு மனிதன் நீரில் மூழ்கிக்கொண்டிருக்கும்பொழுது கூட அவனுடன் பேச முடியும். ஒருவனைப் பாம்பு கடித்து விட்டால் அந்த நிலையில் கூட அவனுடன் பேச முடியும். ஆனால் பணம், செல்வம் முதலியவை ஒரு மனிதனைக் கடித்து விட்டால் அவனுடன் பேசவே முடியாது ஏனென்றால் அவன் உணர்விழந்த நிலையில் இருப்பான்,” என்கிறார்.
      கையில் கொஞ்சம் காசு இருந்தால் அது நிலைமையை எளிதாகவும், சாதாரணமாகவும் ஆக்குகிறது. அதற்கு பின்விளைவு எதுவும் இல்லை. உங்களால் கணக்கிட முடியாதவையே வாழ்க்கையில் வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன. எனவே வாழ்க்கையில் கணக்கிட முடியாதவற்றில் உங்கள் வாழ்க்கையை செலவழியுங்கள். என்ன செய்தாலும், நீங்கள் இந்த உலகத்திற்கு பெரிய அர்ப்பணிப்பாக இருப்பீர்கள்.
‍                                               சத்குரு. வாழ்கவளமுடன்!

கிரஹப்பிரவேசம் எதற்காக? ஆனந்தம்


     
      இந்தியாவில் பொதுவாக இரண்டு வகையான கிரஹப்பிரவேசங்கள் கொண்டாடப்படுகின்றன. கணவன் வீட்டிற்குள் ஒரு பெண் நுழைவது என்பது மிக முக்கியம். இது ஒரு வகையான கிரஹப்பிரவேசம். அதனால்தான் அதைச் சுற்றியே பல சடங்குகளை உருவாக்கினர்.
      இச்சடங்குகள் சிறுத்துக் கொண்டே சென்று, அவற்றில் பல சடங்குகள் இன்று அர்த்தமற்றவை ஆகிவிட்டன. ஏனெனில் இன்று அவள் திருமணத்திற்கு முன்பே கூட கணவன் வீட்டில் அனுமதிக்கப்படும் நிலையிருக்கிறது.
      இன்று திருமணம் என்றால் ஆண், பெண் இருவருக்குள் நடக்கும் கவர்ச்சி அல்லது காதல் என்று நினைக்கின்றனர். ஆனால் அன்றோ திருமண உறவை அவ்விருவர், அவர்களின் குழந்தைகள், குடும்பத்தின் எதிர்காலம் இவற்றை நிர்ணயிக்கும் கருவியாகக் கருதினர்.
      எந்த வகையான பெண் கணவனின் வீட்டிற்குள் நுழைகிறாள் என்பதிலும், கணவனின் வீட்டிற்குள் அவள் முறையாக நுழைவதிலும் அக்கறை செலுத்தினர்.
      கிரஹப்பிரவேசத்தில் மற்றொரு வகை நீங்கள் புதிதாக ஒரு வீடு கட்டி அதில் குடியேறும் முன் செய்வது. புது வீட்டில் குடியேறுபவர்கள் அவர்களுடைய புதிய வீடு, குடியிருப்பதற்கு உகந்த சூழலில் இருப்பதற்காக இதைச் செய்தனர்.
      அவ்வீட்டின் வடிவம், அழகு, நிறம் இவையனைத்தும் முக்கியம்தான். ஆனால் எவ்வகையான சக்தி அவ்விடத்தில் இருக்கப் போகிறது என்பது மிக, மிக முக்கியம்.
      நம் கலாச்சாரத்தில் சக்தியூட்டப்படாத ஒரு இடத்தில் எவரும் உறங்குவதுகூட இல்லை. எனவே கிரஹப்பிரவேசம் என்பது சிறிய அளவிலான பிரதிஷ்டை ஆகும்.
      அந்த வீட்டிற்குள் புதிதாக நுழையும் முன் அவ்விடம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் மக்கள் அங்கே சென்று வாழ்வதில்லை. இந்த செயல்முறை மூலம் அந்த வீட்டில் வசிப்போர் இயல்பாகவே நல்வாழ்வை நோக்கிச் செல்வர். ஒரு இடத்தை உயிரோட்டமாகச் செய்யும் ஒரு செயல்முறை அது.
      எந்த ஒரு உயிரும் பிரதிஷ்டை செய்யப்படாத ஓர் இடத்தில் வாழக்கூடாது என்பது இக்கலாச்சாரத்தில் ஆழமாய் வேரூன்றிப்போன ஒரு விஷயம். ஒவ்வொரு குடும்பமும் ஒரு புதிய இடத்தில் வசிப்பதற்கு முன் அந்த இடத்தை சக்தியூட்டி பின்னரே வசித்தனர்.
      மேலும் குறைந்தது வருடத்திற்கு ஒருமுறையாவது அவ்வீட்டின் சூழலை மேம்படுத்தத் தேவையான சடங்குகளையும் செயல்முறைகளையும் செய்து வந்தனர். தனியொரு மனிதன் தன் முழுதிறனை அடையத் தேவையான உகந்த சூழ்நிலையை உருவாக்கினர்.
      தற்போது மனிதனுடைய முழுத்திறன், அவன் எவ்வளவு பணம் சேர்க்கிறான் என்பதை வைத்துதான் மதிப்பிடப்படுகிறது. வெற்றியை பற்றிய நவீன கருத்து மிகவும் மேலோட்டமானதாக உள்ளது. பணமும் அந்தஸ்தும்தான் இப்போது வெற்றியை நிர்ணயிக்கிறது.
      அன்று வெற்றியை பற்றிய மக்களின் கருத்து இவ்வாறு இருக்கவில்லை. மாறாக அது பரந்து விரிந்த மனப்பான்மையோடு மிகுந்த ஆழமானதாக இருந்தது.
      ஒருவர் தன் உணர்தலில் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருந்து, பொருளாதார நிலையிலும் ஓரளவு சிறப்புடனிருந்து, குடும்பம், நண்பர்கள் மற்றும் சமூகத்தின் அன்பைப் பெற்றிருந்தால் மட்டுமே அவரை வெற்றி பெற்றவர் என்று நினைத்தனர். இது வெறும் தத்துவமல்ல, இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இச்சமூகத்தில் இயல்பாக நடைபெற்ற நிகழ்ச்சி இது.
      கடந்த 30, 40 வருடங்களில் கணிசமான அளவு இதனை வேருடன் களைந்துள்ளோம். அதனால் கிரஹப்பிரவேசம் என்றால் அது இந்த செடி (தன்னை சுட்டிக் காட்டுகிறார்) வளர்ந்து, பூத்து, கனி கிடைப்பதற்கான சரியான நிலத்தை உருவாக்குவதே!
      ஆனால், துரதிருஷ்டவசமாக இந்த சடங்குகளைச் செய்வோர், தற்போது, எதனால், எப்படி செய்கிறோம் என்கிற சரியான புரிதல் இல்லாமல், ஒரு கடமை போல செய்வதால் மக்களும் இதில் ஆர்வமிழக்க ஆரம்பித்துவிட்டனர்.
      இன்று கிரஹப்பிரவேசம் என்றால் அனைவரையும் விருந்துக்கு அழைப்பது, தேவைக்கதிகமாக சாப்பிடுவது, குடிப்பது என்று ஆகிவிட்டது. இன்றைய கிரஹப்பிரவேசம் இப்படித்தான் ஆகிவிட்டது.
      நீங்கள் உங்களுடைய நல்வாழ்வை நோக்கிச் செல்லவில்லை. நீங்கள் சிறந்தபடி வாழ, உங்களைச் சுற்றியுள்ள சூழலை சரியான முறையில் உருவாக்குவது மிகவும் முக்கியம். குறிப்பாக குழந்தைகள் வளரும் பொழுது, சூழ்நிலைக்கேற்ப அவர்கள் மாறக்கூடிய நிலை இருக்கும்போது, சரியான சக்திநிலையை அமைத்துக் கொடுப்பது மிகவும் முக்கியம்.
                            வாழ்க வளமுடன்!