Showing posts with label இறப்பு. Show all posts
Showing posts with label இறப்பு. Show all posts

Saturday, October 12, 2013

இறந்தபின் கட்டை விரல்களைக் கட்டுவது ஏன்? ஆனந்தம்




ஒருவர் மரணமடைந்தவுடன், அந்த உடலை வடக்கு தெற்காக வைப்பது, கால் கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டுவது போன்ற சடங்குகளை எதற்காகச் செய்கிறார்கள்?

      இறப்பு நேர்கிற நொடியில் இருந்து அல்லது இறப்பு நேர்வதற்கு முன்பிருந்தே ஒரு மனிதன் பயனுள்ள வகையில் இறந்து போவதற்கு என்னென்ன செய்யலாம் என்று இந்தக் கலாசாரத்தில் பல வழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒருவருக்கு மரணம் நெருங்குகிற வினாடியில், அது குறித்து தெரிந்தவர்கள் ஒருவித சுலபத்துடன் மரணம் நிகழ வேண்டுமென்பதற்காக, அந்த மனிதரை வீட்டுக்கு வெளியே கொண்டுபோய், வடக்கு தெற்காக உடலைக் கிடத்துவார்கள். ஏனெனில், ஒரு கட்டடத்துக்குள் இருக்கிறபோது அவ்வளவு சுலபமாக உயிர் பிரியாது. தலை வடக்கு நோக்கி வைக்கப்படும்போது காந்த ஈர்ப்பு காரணமாக அந்த உயிர் உடலைவிட்டு எளிதாகப் பிரியும்.
      மரணம் நிகழ்ந்த பிறகுகூட பிராண சக்தி ஸ்தூல உடலை விட்டு முழுவதும் அகன்றுவிடுவதில்லை. எனவே, அந்த உயிர் உடலை சுற்றிக் கொண்டே இருக்கிறது. ஆனால், உடல் வடக்கு தெற்காக வைக்கப்பட்டு உயிர் பிரியும்போது அந்த உடலில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. எனவே, அந்த உடலைச் சுற்றிக்கொண்டு இருப்பது பயன் தராது என்று அந்த உயிருக்குத் தெரிந்துவிடுகிறது. மற்ற சூழ்நிலைகளில் உயிரானது தொடர்ந்து உடலுக்குள் நுழைய முயற்சிக்கும். இந்தப் போராட்டம் அந்த இடத்தில் ஒருவிதமான சக்தியை ஏற்படுத்தும். இது இறந்துபோன மனிதருக்கும் நல்லதல்ல, வாழ்கிறவர்களுக்கும் நல்லதல்ல.
      இன்னொரு முக்கிய சடங்கு, இறந்த மனிதரின் இரண்டு கால் கட்டை விரல்களும் ஒன்றாகக் கட்டப்படுவது. பொதுவாகவே மரணம் நிகழ்கிறபோது கால்கள் அகலமாகத் திறந்துகொள்கின்றன. அந்த நிலையில் பின்புறத் துவாரம் திறந்திருக்கும். எனவே பிரிந்து போன உயிர் அந்த மூலாதாரம் வழியே உள்ளே நுழைய முயலும். அது அந்த உயிருக்கும் அந்தச் சூழலுக்கும் நல்லதல்ல.
      எனவே, கால் கட்டை விரல்களைக் கட்டுவதன் மூலம் மூலாதாரம் மூடப்படுகிறது. யோகக் கிரியைகள் செய்வதற்காக நீங்கள் கால்கட்டை விரல்களை ஒன்று சேர்க்கும்போது பின்புறத் துவாரம் இயல்பாகவே மூடிக்கொள்ளும். இதையேதான் இறந்தவர்களுக்கும் செய்கிறார்கள். எனவே உடலை கைக்கொள்ளலாம் என்கிற அந்த உயிரின் முயற்சி இப்போது பலிக்காது.
      மூலாதாரம் திறந்திருக்கிறபோது அந்த உடலின் உள்ளே நுழைய வேறு சில ஆவிகளும் முயலக்கூடும். மாந்திரீகப் பயிற்சி மேற்கொள்பவர்களும் அந்த உடலைப் பயன்படுத்தக்கூடும். அப்படி அந்த உடல் வேறு விதத்தில் பயன்படுத்தப்பட்டால், அது பிரிந்து சென்ற ஆன்மாவைப் பலவிதங்களில் துன்புறுத்துவதாக இருக்கும். அதனால்தான் ஒரு மனிதர் இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் அவரின் கால் கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டப்படுகின்றன!

Wednesday, May 22, 2013

இறந்த உடலை ஏன் எரிக்கிறோம்? ஆனந்தம்


நமது கலாசாரத்தில், இறந்தவர் உடலை எரிக்க வேண்டும் என்ற பழக்கம் எப்படி வந்தது?

      நமது கலாசாரத்தில் இறந்தவர் உடலைப் பாதுகாக்கும் வழக்கம் இல்லை. இந்தத் தேசத்தின் கலாசாரம், வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சமும் மனிதனை மேல்நோக்கிக் கொண்டுசெல்வதாக அமைய வேண்டும் என்றே நினைக்கிறது. உடலை எரிப்பது என்ற சடங்கும் அந்த நோக்கத்திலேயே அமைக்கப்பட்டது.

      உங்களைப் பொறுத்தவரையில் அவர் இறந்துவிட்டார். ஆனால் அந்த உயிரைப் பொறுத்தவரையில் உடலைவிட்டு நழுவிவிட்டதாகத்தான் நினைத்துக்கொண்டு இருக்கும்.

      இறந்தவர் இந்த உடல்தான் தனது உயிர் என்று வாழ்ந்திருப்பார். அந்த உடலோடு மிகவும் ஆழமான தொடர்போடு வாழ்ந்திருப்பார். உங்களைப் பொறுத்தவரையில் அவர் இறந்துவிட்டார். ஆனால் அந்த உயிரைப் பொறுத்தவரையில் உடலைவிட்டு நழுவிவிட்டதாகத்தான் நினைத்துக்கொண்டு இருக்கும். எனவே மீண்டும் அந்த உடலுக்குள் நுழைந்துவிடலாம் என்றே அந்த உயிர் துடிக்கும். எனவே, வாய்ப்பை எதிர்நோக்கி அந்த உடலைச் சுற்றியே உயிர் சுற்றிக்கொண்டு இருக்கும். உடல் முழுமையாக இருக்கும் வரை அந்த உயிரால் அங்கிருந்து நகர முடியாது. அந்த மனிதர் ஞானம் அடைந்திருந்தால், அந்த உடலைவிட்டு நீங்கிய கணத்திலேயே அந்த உயிர் மகிழ்ச்சியாக அங்கிருந்து வெளியேறிவிடும். ஆனால், சரியான புரிதல் இல்லாத உயிர் அந்த உடலையே சுற்றிவரும். இது அந்த உயிருக்கும் நல்லதல்ல. இறந்தவருடன் பழகியவர்க்கும் அந்த உடலைப் பார்த்துப் பார்த்து பல நினைவுகளால் வருத்தம் அதிகமாகியே போகும்.

      உயிரை விட்டவரும் சரி, உறவினர்களும் சரி, உடல் அங்கிருக்கும் வரை, வேதனையோடு இருப்பர். எனவே விடைபெற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை அந்த உயிர் உணர வேண்டும் என்பதால், அந்த உடலை முழுமையாகவும் விரைவாகவும் அழிக்க வேண்டும் என்னும் நடைமுறை உண்டாக்கப்பட்டது. எனவேதான் இறந்த ஒன்றரை மணி நேரத்துக்குள் உடலை எரிக்க வேண்டும் என்ற விதி ஏற்படுத்தப்பட்டது. அவசரத்திலும் பதற்றத்திலும் தவறான முடிவெடுத்து உயிருடன் இருக்கக்கூடியவரையும் தவறுதலாக எரிக்கப்பட்டுவிடலாம் என்பதால், அதை நான்கு மணிநேரம் என பிற்பாடு மாற்றி அமைத்தார்கள்.

      தாம் அறிந்த அந்த உடல் இனி இல்லை, அடையாளமற்று எரிந்து கையளவு சாம்பலாகிவிட்டது என்னும் உண்மையை அறியும்போது, இறந்த உயிரும் அந்த இடத்திலேயே பரிதவித்துக்கொண்டு இருக்காது. இங்கு உயிருடன் இருப்பவர்களும் மாண்டவன் இனி மீளப்போவதில்லை என்று ஒருவித அமைதி கொள்வார்கள். எனவேதான் ஒருவர் இறந்துவிட்டால் அவரை உடனடியாக எரிப்பது நமது கலாசாரத்தில் இருந்து வருகிறது.

      போதிய விறகு இல்லாத பாலைவனங்களிலும், நெருப்பு நின்று எரியாத குளிர்ப் பிரதேசங்களிலும் எரிப்பதைவிட புதைப்பது சுலபமாக இருந்தது. எனவே அத்தகைய நாடுகளில் அதுவே அவர்களது நடைமுறையாக மாறிவிட்டது!

Wednesday, April 6, 2011

அனந்தமாக இறப்பதே மேல்


      ஆராய்ச்சிப் பயணம் என்பதன் பொருள் என்ன? நீங்கள் இதுவரை பயணப்படாத இடங்களுக்குச் சென்று அங்குள்ளதை முழுமையாக அறிவதுதான் ஆராய்ச்சிப் பயணம், அது ஒரு கருத்து அல்ல. நீங்கள் வீட்டில் இருந்து கொண்டு, ஆப்பிரிக்கக் கண்டத்தை ஆராய்ச்சி செய்தால், அது வெறும் கற்பனை மட்டுமே. ஆனால் நீங்கள் ஆப்பிரிக்கக் கண்டத்திற்குச் சென்று, அங்கு குறுக்கும் நெடுக்கும் சென்று அனைத்தையும் கண்டறிவது வெறும் கருத்தோ அல்லது கற்பனையோ ஆகாது. இதைத்தான் ஆராய்ச்சிப்பயணம் என்கிறோம்.

      ஒன்றை ஆய்ந்து கண்டறிவதற்கும் அல்லது அதைப்பற்றிய ஒரு கருத்தை மட்டும் உருவாக்கிக் கொள்வதற்கும் இடையில் பெரிய வேறுபாடு இருக்கிறது. ஒன்றைக் கண்டறிவதுதான் நமக்குத் தேவையே தவிர அதைப் பற்றிய வெறும் கருத்து உருவாக்கிக் கொள்வது அல்ல. ஒன்றைப் பற்றிய முடிவுக்கு வந்து விட்டீர்கள் என்பது கருத்து.
    
      வாழ்க்கை பற்றி நீங்கள் ஒரு கருத்துக்கு வந்து விட்டீர்கள் என்றால வாழ்க்கை பற்றிய ஒரு முடிவுக்கு வந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். 10 நிமிடங்களில் நீங்கள் கணக்குப் போடுமளவுக்கு வாழ்க்கை அவ்வளவு சிறியதாக இல்லை. அது உங்கள் கணக்கிற்குள் வருவதாக இருந்தால், இவ்வளவு வருடங்கள் நாம் வாழத் தகுதியானதே இல்லை. வாழ்க்கையை உங்களால் அப்படித் தொகுக்க முடியாது. சிறிது சிறிதாக ஆராய்ந்து அறியத்தான் முடியும். அதைத்தான் உங்களால் செய்ய முடியும். அப்படிச் நீங்கள் வாழ்க்கையை தொகுக்க முனைந்து விட்டால் எதையோ தவற விட்டீர்கள் என்பதுதான் பொருள்.

      அதே போல் வாழ்க்கையில் பாதுகாப்பைத் தேடுவதும் சரியல்ல. வாழ்க்கையில் பாதுகாப்பைத் தேடுவது என்பது வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சிப் பயணத்தில் ஒரு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும். நீங்கள் வாழ்க்கையில் ஏதாவது சிறிய அளவில் சாதித்திருந்தாலும் அதை முக்கியமாகக் கருதுகிறீர்கள். அதை வைத்து அஸ்திவாரம் எழுப்பப் பார்க்கிறீர்கள்.
    
      திரவம் போல இலகுவாக இருப்பதை விடுத்து எதையோ வைத்து அஸ்திவாரம் எழுப்பி ஒரே இடத்திலேயே இருக்க விரும்புகிறீர்கள். வாழ்க்கை இப்படி தேங்கிப் போகும்போது, மிகவும் மோசமான நிலைக்குப் போய்விடுகிறது. அப்போது உங்களுக்கு என்ன நடக்கும் என்றால் நீங்கள் நன்றாகக் கண்ணீர் விட்டுக் கதறவும் மாட்டீர்கள், மனம் விட்டுச் சிரிக்கவும் மாட்டீர்கள். உங்கள் கண்ணீருக்கும் வேலையிருக்காது, மலர்ந்த சிரிப்புக்கும் வேலையிருக்காது. ஒரே இடத்தில் தங்கி விடுவீர்கள்.
    
      மாறாக வாழ்க்கையை முழுமையாக ஆய்ந்து வாழும்போது, ஒன்று மிகவும் உயிரோட்டத்துடன் வாழ்வீர்கள். அது மிகவும் மகத்தானதாகது. அல்லது வீழ்ந்து மடிவீர்கள். அதுவும் சரிதான். ஆனால் இப்போது நீங்கள் உயிர்ப்போடும் இல்லை. இறக்கவும் இல்லை. கடைசியில் உண்மையிலேயே நீங்கள் இறக்க வேண்டிய நேரம் வரும்போது, அந்த கடைசி தருணத்தில்தான், இதுவரை வாழாமலே போய்விட்டோம் என்பதை அறிந்து கொள்வீர்கள். அது மிகவும் துயரமானது. உலகில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் இப்படித்தான் இறக்கிறார்கள்.

மனிதர்கள் 70 - 80 வருடங்கள் வாழ்ந்திருப்பார்கள். ஆனால் இறந்து போகும் நேரத்தில் அவர்களைப் பார்த்தால் வெறும் பயமும், குழப்பமுமாகத்தான் இருப்பார்கள். வாழ்க்கையை வாழ்ந்து பார்க்காமலேயே இறக்கிறோம் என்பதை அந்த கடைசி நேரத்தில் கண்டு கொள்கிறார்கள். வாழ்க்கையின் ஒரு அணுவைக்கூட அறிந்து கொள்ளாமல் அவர்கள் இறந்து போகிறார்கள்.

      எனவே வாழ்க்கைப் பயணத்தில் முழுமையாக இறங்கி ஒவ்வொன்றையும் கண்டறியுங்கள். அப்படி வாழ்ந்து இறக்கும் தருவாயில் ஆனந்தமாக இறந்தால் அது அற்புதமானது. குறைந்தபட்சம் அமைதியாக இறந்தாலும் சரிதான். அல்லது உள்நிலையில் ஆனந்தத்தை அடையும் முயற்ச்சியில் வலியுடன் இறக்கிறீர்கள். அதுவும் நல்லதுதான். ஆனந்தம்தான் ஏற்படவில்லை, அதற்கான முயற்சியில் குறைந்த பட்சம் வலி வந்தாலும் நல்லதுதான். அந்த வலி கூட உங்களுக்கு நிகழாமல் நீங்கள் இறப்பது மிகவும் துயரமானது, இல்லையா?

      இறுதி நேரத்தில், வாழாமலேயே போகிறோமே என்று நீங்கள் குழப்பத்திலும் திகைப்பிலும் இறக்கிறீர்கள் என்றால் அது மிகவும் கொடூரமானது. நீங்கள் ஆனந்தத்துடன் இறந்து போங்கள், அமைதியாக இறந்து போங்கள், அல்லது (ஆனந்தத்தை அடையும் முயற்ச்சியில்) வலியுடனாவது இறந்து போங்கள். ஆனால் நாம் யாருமே திகைப்பிலும், குழப்பத்திலும், ஏக்கத்திலும் இறப்பது சரியானதல்ல‌..............