Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Sunday, June 23, 2013

காதல் படுத்தும் பாடு! ஆனந்தம்

      


      பஸ்ஸில் மிக அழகான ஒரு பெண்ணை அடிக்கடி பார்க்கிறேன். அவள் முகம் என் மனதில் அப்படியே ஒட்டிக் கொண்டுவிட்டது. கல்லூரி செமஸ்டர் நேரம் இது. படிப்பதற்காகப் புத்தகங்களைத் திறந்தால், அந்தப் பெண்ணின் முகமே வந்துவந்து என்னைத் தொந்தரவு செய்கிறது. அவள் முகம் தரும் சந்தோஷம் ஒருபுறம், படிக்க முடியவில்லையே என்கிற துக்கம் மறுபுறம்… இரண்டும் சேர்ந்து வறுத்தெடுக்கின்றன. நான் என்ன செய்வது?”

சத்குரு:

      யாரோ ஒருத்தியின் நினைவு உங்களுக்குச் சந்தோஷம் தரமுடியும் என்பதெல்லாம் சுத்தப் பேத்தல். ஒரு பெண்ணைப் பார்த்தீர்கள். அது மகிழ்ச்சியைத் தந்தது. அவ்வளவுதானே? கவனியுங்கள். அந்தப் பெண்ணைப் பற்றி நினைத்ததும் மகிழ்ச்சி எங்கே பிறக்கிறது? உங்களுக்கு வெளியிலா, உள்ளேயா? உள்ளேதானே? தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். ஆனந்தத்தை உங்களால் கொடுக்கவும் முடியாது. வாங்கவும் முடியாது. அதை அனுபவிக்கத்தான் முடியும். அது எப்போதும் உங்களுக்குள்தான் இருக்கிறது. அதைத் தூண்டி உயிர்ப்பிக்கும் சக்தியை வெளியில் யார் கையிலோ ஒப்படைத்துவிட்டீர்கள். அதனால், குரங்காட்டியின் கோலுக்கு ஆடும் குரங்கைப் போல் ஆடுகிறீர்கள்.

      படிப்பு முக்கியமா, காதலி முக்கியமா என்பது இல்லை இங்கே பிரச்சனை. உங்கள் ஆனந்தம்தான் முதல் முக்கியம். சந்தோஷம் என்று நீங்கள் நினைத்தது உங்களுக்கு வேதனையாக மாறிவிட்டபோது, அதைச் சுமப்பதா புத்திசாலித்தனம்?
     
      படிப்பு முக்கியம் என்று தோன்றினால், முழுமையான ஈடுபாட்டுடன் உங்களை அதனுடன் பிணைத்துக் கொள்ளுங்கள். மற்றதெல்லாம் தானாக மறைந்துவிடும். மாறாக, ஒரு குறிப்பிட்ட நினைவை மனதிலிருந்து போராடிப் பிய்த்து எறிவது என்பது நடவாத காரியம். அப்படி முயற்சி செய்ய ஆரம்பித்தீர்கள் என்றால், அதுவே உங்கள் முழுநேர வேலையாக ஆகிவிடும்.
பனிப் பிரதேசத்தில் இருந்த ஒரு சித்தரைத் தேடிப் போனார் சங்கரன்பிள்ளை. “மண்ணைத் தங்கமாக்கும் மந்திரம் உங்களுக்குத் தெரியுமாமே? எனக்கு சொல்லித் தருவீர்களா?” என்று மண்டியிட்டார். சித்தர் சம்மதித்தார். மந்திரங்களை சங்கரன்பிள்ளை காதில் ரகசியமாகச் சொன்னார்.

      சங்கரன்பிள்ளைக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. “இது வெகு சுலபமாக இருக்கிறதே! இந்த மந்திரங்கள் நிச்சயம் வேலை செய்யும்தானே?” “நிச்சயம் இது மண்ணைப் பொன்னாக்கும். ஆனால், ஒரு நிபந்தனை. மந்திரங்களை உச்சரிக்கும்போது, குரங்குகளைப் பற்றி நீ நினைக்கக்கூடாது” என்றார் சித்தர்.

      சங்கரன்பிள்ளை சிரித்தார். “போயும் போயும் குரங்குகளை நான் ஏன் நினைக்கப் போகிறேன்?”

      ஆனால், சங்கரன்பிள்ளை மந்திரங்களைச் சொல்லக் கண்களை மூடினால் போதும், குரங்குகளைப் பற்றி நினைக்கவே கூடாது என்ற நினைப்பே அவர் நினைவு பூராவும் ஆக்கிரமித்தது. இருபத்து நான்கு மணி நேரமும் சிந்தனையில் குரங்குகள் நிரம்பி வழிந்தன.

      இரண்டு நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல், சித்தர் காலில் போய் விழுந்தார் சங்கரன்பிள்ளை. “பொன்னே எனக்கு வேண்டாம். என்னைச் சுற்றிக் கும்மாளமிடும் குரங்குகளிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள். அது போதும்!” என்று கதறினார்.

      மனித மனம் அப்படித்தான். எதையாவது தவிர்க்க நினைத்தீர்கள் என்றால், அதையேதான் வட்டமிடும். உங்கள் மனதை உங்கள் வசப்படுத்திக் கொள்ளும் தந்திரத்தை நீங்கள் தெரிந்து கொள்ளும் வரை, எதை நிராகரிக்கப் பார்க்கிறீர்களோ, அதுதான் உங்கள் மனதில் நிரம்பி வழிந்து ஆக்கிரமிக்கும்.

      உங்களுக்கு என்ன நடக்கிறது என்கிற விழிப்புணர்வு இல்லாமல், உங்கள் வாழ்க்கையைக் கடைசி வரை செலுத்தப் போகிறீர்களா?

      இன்றைக்கு ஒரு வேலை செய்யுங்கள். கண்களை இறுக மூடிக் கொண்டு, போக்குவரத்தில் வண்டியை ஓட்டிப் பாருங்களேன். அதிர்ஷ்டம் இருந்தால், அங்கே இங்கே சிலரை இடித்துத் தள்ளிவிட்டு, இந்த முறை வீட்டுக்குக்கூட போய்ச் சேரலாம். ஆனால், ஒவ்வொரு முறையும் அந்த அதிர்ஷ்டம் உங்களுக்குத் துணையிருக்குமா? சீக்கிரமே உங்களை அள்ளிப்போக ஆம்புலன்ஸ் வந்து சேரும்.

      சங்கரன் பிள்ளை டாக்டரைத் தேடிப் போனார்.
“டாக்டர், என் காதுகளைப் பாருங்கள்!”
“ஐயையோ! இந்தளவுக்கு எப்படித் தீய்ந்து போனது?” என்று டாக்டர் பதறினார்.

“நான் சட்டைக்கு இஸ்திரி போட்டுக் கொண்டு இருந்தேன். அந்த நேரம் பார்த்து என் மனைவியிடமிருந்து போன் வந்தது. குழப்பத்தில் போன் என்று நினைத்து கொதிக்கும் இஸ்திரிப் பெட்டியை எடுத்துக் காதில் வைத்துக் கொண்டுவிட்டேன்…!”

“அடக் கடவுளே… சரி, இடக்காது எப்படித் தீய்ந்தது?”
சங்கரள்பிள்ளை பற்களை நறநறத்தார்.
“அந்த ராட்சஸி மறுபடியும் போன் செய்து தொலைத்தாளே!”

      நீங்கள் கவனத்துடன் நடந்து கொள்வதோ, சங்கரன்பிள்ளை போல் நடந்து கொள்வதோ யார் கையில் இருக்கிறது? உங்கள் கையில்தானே?

      ஆனந்தமோ, துக்கமோ.. கவனமின்றி நீங்கள் அதன் திரியை வெளியே வைத்திருக்கும்வரை, அதை வெளியிலிருந்து ஒருவர் சுலபமாகப் பற்ற வைக்க முடியும். உங்களை அலைக்கழிக்கக் கூடிய ஸ்டார்ட் பட்டனை ஏன் வேறு யார் கையிலோ கொடுத்துவிட்டு அவதிப்படுகிறீர்கள்?

      உங்கள் அடிப்படைப் பிரச்சனை என்ன தெரியுமா? நீங்கள் இங்கே இருக்கும்போது, அங்கே இருக்க விரும்புகிறீர்கள். அங்கே இருக்கும்போது, இங்கே இருக்க விரும்புகிறீர்கள்.

      நீங்கள் எங்கே இருக்க வேண்டுமோ, அங்கே இல்லையென்றால், உங்கள் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். முழுமையான ஈடுபாட்டுடன் இப்போது செய்ய வேண்டியதைச் செய்யுங்கள். தேவையற்றது தானாக விலகிப் போகிறதா இல்லையா, பாருங்கள்.

      படிப்பு முக்கியமா, காதலி முக்கியமா என்பது இல்லை இங்கே பிரச்சனை. உங்கள் ஆனந்தம்தான் முதல் முக்கியம். சந்தோஷம் என்று நீங்கள் நினைத்தது உங்களுக்கு வேதனையாக மாறிவிட்டபோது, அதைச் சுமப்பதா புத்திசாலித்தனம்?

     எது ஆனந்தமோ, அதை எப்போதும் செய்யுங்கள். தப்பே இல்லை.

      ஆனால், அப்படி எதைச் சந்தோஷமாகச் செய்தாலும், அதன் பின்விளைவுகளையும் அதே சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள்!
                         வாழ்க வளமுடன்!

Friday, May 20, 2011

காதல் ஆனந்தம்

      கொஞ்சம் ஆழமாகப் பார்த்தீர்கள் என்றால், காதல் என்பது ஒரு மனிதனுக்கு ஆழமான, மகிழ்ச்சியான, ஆனந்தமான உணர்வாக இருக்கிறது. இந்த உணர்வை ஏதோ ஒரு காரணம் தூண்டிவிடுகிறது.
      ஆங்கிலத்தில் அழகாக 'Falling in Love’ என்று சொல்வார்கள். காதலில் ஏற முடியாது, இறங்க முடியாது. நிற்க முடியாது, பறக்க முடியாது. விழத்தான் முடியும். 'நான்' என்ற தன்மை கொஞ்சம் நொறுங்கிக் கீழே விழுந்தால்தான், காதல் பிறக்க முடியும்.
      சென்ற கணம் வரை உங்கள் வாழ்க்கையில் நீங்கள்தான் ஹீரோ. காதல் வந்துவிடட்டுமே, உங்களைவிட இன்னொருவர் முக்கியமாகி விடுகிறார். எப்போது இன்னோர் உயிர் நம்மை விட முக்கியமாக ஆகிவிட்டதோ, அதற்குப் பெயர்தான் காதல்.
      கல்லூரி நண்பர்கள் சிலர் பல வருடங்கள் கழித்து தங்கள் புரொஃபசர் வீட்டில் சந்தித்தனர். எங்கெங்கோ சுற்றிவிட்டு பேச்சு அவர்களுடைய காதல் வாழ்வு பற்றித் திரும்பியது. ஒவ்வொரு நண்பரிடத்திலும் ஏதோ ஓர் ஏமாற்றம், ஏதோ ஒரு வருத்தம்.
      புரொஃபசர் ஒரு ஜாடியில் தேநீர் கொண்டுவந்து வைத்தார். 'அந்த அலமாரியில் நிறையக் கோப்பைகள் இருக்கின்றன. உங்களுக்குப் பிடித்த கோப்பையில் தேநீரை எடுத்துக்கொள்ளுங்கள்' என்றார்.
      பீங்கான் கோப்பை, கண்ணாடிக் கோப்பை, வெள்ளிக் கோப்பை என்று விதவிதமான கோப்பைகள். நண்பர்கள் ஆளுக்கு ஒரு கோப்பையை எடுத்து தேநீர் நிரப்பி அமர்ந்ததும், புரொஃபசர் சொன்னார்...
      'சாதாரணமான மண் கோப்பைகளை யாரும் எடுக்கவில்லை. விலை உயர்ந்த அழகான கோப்பைகளைத்தான் நீங்கள் எல்லோரும் எடுத்திருக்கிறீர்கள் என்பதைக் கவனித்தீர்களா? கோப்பையைக் கையில் வைத்திருக்கப்போகிறீர்கள். அவ்வளவுதான். தேநீர்தான் உள்ளேபோய் உங்களுடன் ஒன்றாகப்போகிறது. ஆனால், உங்கள் கவனம் கோப்பையில் நின்றுவிட்டது.
      எனக்கு என்ன கிடைத்தது, அடுத்தவருக்கு எந்தக் கோப்பை போய்விட்டது என்பதில் சிந்தனை போய்விட்டதால், தேநீரின் உண்மை யான ருசியைக் கவனிக்கத் தவறுகிறீர்கள். காதலும் அப்படித்தான். அந்த அற்புதமான உணர்வு கொண்டுவரும் ஆனந்தத்தை வெளித் தோற்றங்களுடன் தொடர்புபடுத்தி, ருசிக்கத் தவறுகிறீர்கள்... வேதனையில் அல்லாடுகிறீர்கள்!’
      உண்மைதான். மாட்டுக்குக்கூடக் காதல் இருக்கிறது. கழுதைக்குக்கூடக் காதல் இருக்கிறது. புழு, பூச்சிக்கும் காதல் இருக்கிறது. காதலிக்கத் தெரியாதவர்கள் அதற்கும் கீழே இருப்பவர்கள். காதல் என்பது மிக ஆழமான ஈடுபாடு. துறவறம் பூணுபவர்கள் காதல் அற்றவர்கள் அல்ல... குறிப்பிட்ட நபரோடு மட்டும் பிரியத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், அவர்களுக்கு எல்லாவற்றின் மீதும் காதல் வந்துவிட்டது என்று அர்த்தம்.
      வாழ்க்கை என்றாலே காதல்தான். நீங்கள் சுவாசிக்கும் காற்றைக் காதலோடு கவனியுங்கள். நமக்குள் போய், நம்மில் ஒரு பாகமாகவே மாறும் உணவைக் காதலோடு புசியுங்கள்.
      காதலாக இருக்கும்போது, உங்களுடைய உணர்வு இனிப்பாக இருக்கிறது. உயிர் போனாலும் சரி என்ற ஆனந்த உணர்வு நிறைகிறது. ஒரே ஒருவராலேயே இவ்வளவு கிடைக்கும் என்றால், எல்லா ஜீவராசிகளிடமும், ஜீவனுக்கு மூலமாக இருக்கிற காற்றிடமும், மண்ணிடமும், கல்லிடமும், செடியிடமும் காதல்கொண்டால், எப்பேர்ப்பட்ட அளவில்லாத ஆனந்தம் கிடைக்கும் என்று கற்பனை பண்ணிப் பாருங்கள். மலை, நதி, பூ, புல்வெளி, பட்டாம்பூச்சி, ஆடு, மாடு என்று காணும் ஒவ்வொன்றின் மீதும் காதல்கொள்ளலாம்.
      காதலிப்பது கையில் கிடைக்க வேண்டும் என்று நினைத்தால்தான், பிரச்னை. அதைத் தவிர்த்துவிட்டால், கடலின் மீதும், ஆகாயத்தின் மீதும், நிலவின் மீதும்கூட உண்மையான காதல்கொள்ளலாமே? அந்த உணர்வை உங்களிடம் இருந்து யாரால் தட்டிப் பறிக்க முடியும்?''
      காதலியோடு நின்றுவிடாமல், அனைத்தையும் காதலியுங்கள் ஆனந்தமாக வாழ.....காதலே ஆனந்தம்.....

Monday, January 3, 2011

நேசித்தல்: ஆனந்தம்

          நேசத்திலிருந்து சந்தோஷம் பிறக்கிறது. அதுதான் ஒரே சந்தோஷம். நீ எப்போதெல்லாம் நேசிக்கிறாயோ, அப்போதெல்லாம் நீ சந்தோஷமாக இருக்கிறாய். எப்போதெல்லாம் நேசமாக இருக்க முடிவதில்லையோ, அப்போதெல்லாம் நீ சந்தோஷமாக இருக்க முடிவதில்லை. சந்தோஷம் நேசத்தின் விளைவு, நேசத்தின் நிழல். அது நேசத்தை பின்தொடரும். நீ மேலும் மேலும் நேசமாக இருக்க இருக்க நீ மேலும் மேலும் சந்தோஷப்படுவாய்.
           உன்னுடைய நேசம் திரும்ப வருகிறதா இல்லையா என்பதைப் பற்றி கவலைப்படாதே. அது முக்கியமல்ல. அது திரும்ப வருகிறதோ இல்லையோ, மற்றவர்கள் பெற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நீ நேசித்தால் சந்தோஷம் நேசத்தை தானாகவே பின்தொடரும்.
           நீ சந்தோஷமாயிருப்பாய், அதுவே போதும். ஒருவர் எதிர்பார்ப்பதை விட போதும். அதுதான் நேசத்தின் அழகு – அதன் விளைவு – அதன் அர்த்தம் - அது அடுத்தவரின் எதிர்விளைவை பொறுத்ததல்ல, அது முழுமையாக உன்னுடையது.
           மக்கள் எப்போதும் திரும்ப எதையாவது எதிர்பார்கிறார்கள். அவர்களது நேசம் நிபந்தனைக்குரியது. அவர்கள் என்னை சந்தோஷப்படுத்து, பின் நான் உன்னை நேசிக்கிறேன் என்கின்றனர். அவர்களது நேசத்தில் கட்டுப்பாடு உள்ளது, அதில் பேரம் உள்ளது. அவர்கள் முழுமையான குருடர்களாக உள்ளனர். நேசிப்பதன் மூலம் சநேதோஷம் தானாகவே மலரும் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. அது ஒரு தொடரும் பின்விளைவு. அதனால் நேசி, நீ யாரை அல்லது எதை நேசிக்கிறாய் என்பது முக்கியமல்ல – பூனை, நாய், மரம், பாறை எதுவாக இருந்தாலும் சரி, ஒரு பாறையின் அருகில் உட்கார்ந்து அதை நேசி! அதனுடன் பேசு! அதை முத்தமிடு.
          அந்த பாறை மீது படுத்துக்கொள். அந்த பாறையுடன் ஒன்றாக உணர்ந்து பார்! திடீரென ஒரு சக்திபிரவாகம், ஒரு சக்தி வெள்ளம் வருவதை உணர்வாய். நீ அளவற்ற மகிழ்ச்சியடைவாய். அந்தப் பாறை திரும்ப எதுவும் கொடுக்காமல் இருக்கலாம், கொடுக்கலாம் – ஆனால் அது முக்கியமல்ல! நீ நேசிப்பதன் மூலம் நீ மகிழ்ச்சியடைகிறாய்.
          யார் நேசிக்கிறார்களோ அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். ஒருமுறை உனக்கு இந்த சாவி கிடைத்துவிட்டால், உன்னால் இருபத்திநான்கு மணி நேரமும் சந்தோஷமாக இருக்க முடியும். நீ இருபத்திநான்கு மணி நேரமும் நேசமாக இருந்தால் பின் நேசிக்க பொருளை தேட மாட்டாய். மேலும் மேலும் நீ விடுதலை பெற்றவனாக இருப்பாய். ஏனெனில் உன்னால் நேசிக்க முடியும் என்பதை மேலும் மேலும் அதிகமாக அறிந்து கொள்வாய் – அங்கு யாரும் இல்லையென்றால் கூட உன்னைச் சுற்றியுள்ள அந்த வெறுமையை நேசிப்பாய். உன்னுடைய அறையில் தனிமையில் அமர்ந்திருக்கும்போதுகூட அந்த அறையை உனது அன்பால் நிறைத்துவிடுவாய். நீ சிறையில் இருக்கலாம், நீ அதை கோவிலாக ஒரு வினாடிக்குள் மாற்றி விடுவாய். நீ அதை நேசத்தால் நிறைக்கும்போது அது ஒரு சிறையாக இருக்காது!
          மரங்கள், பாறைகள், அன்னியர்கள், மக்கள், நண்பர்கள் ஆகிய எல்லோரையும் நேசிக்க ஆரம்பி.
          ஒரு பாறை மேல் உட்கார்ந்து அதை நீ காதலிப்பதுபோல உணர்ந்து தொட்டுப்பார்! நீ உடனடியாக பதில்விளைவை உணர்வாய்! ஒரு மரத்தை ஆழ்ந்த நேசத்துடன் தொட்டுப்பார்! திடீரென அது ஒரு வழிப்பாதையல்ல என்பதை உணர்வாய்! உணவை சாப்பிடும்போது, உணவை அன்புடன் மெல்லு! குளிக்கும்போது தண்ணீரை தெய்வீகம் போன்று ஆழ்ந்த அன்புடன் நன்றியுடன் பெற்றுக் கொள்! ஏனெனில் தெய்வீகம் எல்லாவற்றிலும் எல்லா இடத்திலும் உள்ளது.
          ஒருமுறை எல்லாமும் தெய்வீகம் என்று உணர ஆரம்பித்துவிட்டால் பின் நீ நேசத்திற்காக ஏங்க மாட்டாய், ஏனெனில் எல்லா இடங்களிலும் அது நிறைந்திருப்பதை நீ உணர்வாய். அது தான் ஆனந்தம் என்பதை உணர்வாய்........ ..................................................................ஓஷோ.................................................................................