Showing posts with label ராமகிருஷ்ணர். Show all posts
Showing posts with label ராமகிருஷ்ணர். Show all posts

Sunday, October 20, 2013

ஞானமடைந்தவர் உடலோடு இருக்க முடியுமா? ஆனந்தம்

      


      ஞானோதயம் அடைந்த மனிதர், உயிர் விடாமல் தன் உடலை தக்க வைத்துக் கொள்வது சிரமம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உயிரை தக்க வைத்துக் கொள்ள அவர் என்னென்ன தந்திரங்கள் செய்கிறார் என்று சொல்ல முடியுமா?

சத்குரு:

      ஒரு மனிதர் ஞானமடையும் வரை எல்லா பிறவிகளிலும் தன் கர்மவினையை கரைப்பதற்காக முயல்கிறார்; ஞானமடைந்த பிறகு. விழிப்புணர்வோடு கர்மவினைகளை உருவாக்குகிறார். ஏனென்றால் போதிய கர்மவினை இல்லையென்றால், அவருடைய பக்கம் சமநிலையாக இல்லையென்றால், இந்த உடலில் அவரால் இருக்கமுடியாது.

      90 சதவிதம் பார்த்தால், ஞானமடைகிற நேரமும் உடலை விடுகிற நேரமும் ஒன்றாகவே இருந்திருக்கிறது. இந்த உடல் இயக்கம் குறித்து நிபுணத்துவம் இருக்கிற மனிதர்கள்தான் உடலிலே தொடர்ந்திருக்கிறார்கள். பிறரால் முடிவதில்லை. இதற்கென்று பல வழிகள் உண்டு. உங்கள் இயக்கத்தின் மேல் உங்களுக்கு நிபுணத்துவம் இல்லையென்றால் இன்னொரு வழி, விழிப்புணர்வோடு கர்மவினைகளை ஏற்படுத்திக்கொண்டே போவது. நான் இங்கே என்ன செய்கிறேன் என்பது குறித்து இந்த நேரத்தில் நான் பேச விரும்பவில்லை.

      இராமகிருஷ்ண பரமஹம்சரை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். அவர் தெளிந்த விழிப்புணர்வில் இருந்தவர். மிக அற்புதமான ஒரு உயிர். பல எல்லைகளையும் கடந்தவர். ஆனால் உணவின் மீது அவருக்கு ஒரு வெறியே இருந்தது. சீடர்களோடு பேசிக்கொண்டே இருப்பார். “கொஞ்சம் இருங்கள்”’ என்று சொல்லிவிட்டு சமையலறைக்குச் சென்று சாரதா தேவியாரைப் பார்த்து, “இன்று என்ன சமையல்?” என்று கேட்பார். சாரதாதேவிக்கு வெட்கமாக இருக்கும். இந்த மனிதர் கடவுளைப் போல் இருக்கிறார். எல்லோரும் இவரை வணங்குகிறார்கள். ஆனால் உணவின் மீது இவ்வளவு பைத்தியமாக இருக்கிறாரே என்று.

      புராணங்கள் எல்லாம் என்ன சொல்கின்றன? நீங்கள் ஆன்மீகவாதியாகிக் கொண்டிருந்தால் உணவிலே நாட்டம் குறையவேண்டும் என்று, இல்லையா? ஆனால் இங்கே கடவுளாகவே கருதி வழிபடக்கூடிய ஒரு மனிதர், உணவின் மீது இவ்வளவு பிரியத்துடன் இருக்கிறார். பலவிதங்களில் அவரை சாரதாதேவி கேட்பார். ஆனால் இவர் பதில் எதையும் சொல்லமாட்டார். ஒவ்வொரு நாளும் சாரதாதேவி உணவு பரிமாறுவார். இவர் ஒரு ஊஞ்சலில் அமர்ந்துகொண்டு சாப்பிடுவார்.

      ஒருநாள் மிகவும் கோபம் வந்து சாரதாதேவி சொன்னார். “உங்களை நினைத்தாலே எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கிறது. உணவின் மீது ஏன் இவ்வளவு பைத்தியமாக இருக்கிறீர்கள்? பலர் உங்களைத் தேடி வருகிறார்கள். அவர்கள் உணவைப்பற்றி நினைப்பதே இல்லை. உணவே இல்லாமல் உங்கள் முன் அமர்ந்திருக்க விரும்புகிறார்கள். நீங்கள் உணவின் மீது இவ்வளவு பைத்தியமாக இருக்கிறீர்கள், ஏன்?” என்று. அப்போது இராமகிருஷ்ணர் சொன்னார், “சாரதா, நீ என்னிடம் உணவு கொண்டு வந்து, நான் அந்த நாளில் அதில் ஈடுபாடு காட்டவில்லை என்றால், அன்று தொடங்கி 3 நாட்கள் வரையே நான் உயிரோடு இருப்பேன் என்று தெரிந்து கொள்,” என்றார்.

      ஏழு ஆண்டுகள் கழித்து சாரதாதேவி உணவு கொண்டுவந்து அந்த ஊஞ்சலில் வழக்கமான இடத்தில் வைத்தபோது, ராமகிருஷ்ணர் உணவில் நாட்டம் கொள்ளவில்லை. நேரம் வந்துவிட்டது என்று தெரிந்து சாரதாதேவி அழத்தொடங்கினார். ராமகிருஷ்ணர் சொன்னார், “இப்போது அழுது எந்தப் பயனும் இல்லை. நேரம் வந்துவிட்டது, அது எல்லோருக்கும் வரும்,” என்றார்.

      இது கர்மவினையை உருவாக்குகிற முறை. தெரிந்தே உணவில் ஒரு விருப்பத்தை வளர்த்துக்கொள்வது. விழிப்புணர்வோடு வேண்டுமென்றே எப்போதும் உணவை விரும்புவது. இந்த விருப்பம் இல்லை என்றால் அவரால் அந்த உடலில் இருந்திருக்க முடியாது. நான் இந்த உடலில் தொடர்ந்து இருக்க என்னென்ன தந்திரங்கள் செய்கிறேன் என்று எனக்கு நெருக்கமாக இருப்பவர்களுக்குத் தெரியும்.

      நீங்கள் விழிப்புணர்வோடு இத்தகைய கர்மவினையை ஏற்படுத்தவில்லை என்றால் உடலில் இருப்பது என்பது முடியாது. கர்மவினையின் கட்டமைப்பு இல்லாமல் உங்களுக்கும் உங்கள் உடம்புக்கும் ஒன்றுக்கொன்று செய்துகொள்ள ஒன்றுமே இல்லை.
................வாழ்க வளமுடன்!

Monday, December 13, 2010

நல்லவராக அல்ல ஆனந்தமானவராக‌:

       எது நல்லது? எது கெட்டது?
       உண்மையில் இதை உங்கள் உள்ளுணர்வுதான் முடிவு செய்யவேண்டும்.
       ஆனால் இன்றைக்கு யார் முடிவுசெய்கிறார்கள்?
       உங்கள் மீது...சமூகத்தாலும், குடும்பத்தாலும் சுற்றியுள்ளவர்களாலும் நிறைய எதிர்பார்ப்புகள் வைக்கப்படுகிறது. அவற்றை நிறைவேற்றினால் நீங்கள் நல்லவராகவும், நிறைவேற்றாவிடில் கெட்டவராகவும் கருதப்படுகிறீர்கள்.
       சூதாடுவது கெட்ட பழக்கம் என்று சிறு வயதிலிருந்தே கற்பிக்கப்பட்டிருந்தால், வீட்டில் அதைப் பற்றிப் பேசுவது கூடக் குற்றமாகத் தோன்றும். அதே சமயம் நீங்கள் சூதாட்டக் கிளப்பில் போய் உட்கார்ந்து கொண்டால், அந்தக் குற்றஉணர்வு மாயமாய் மறைந்துவிடும்.அங்கே சூதாடாமல் இருந்தால் தான் பலவீனமானவர்களாக கருதப்படுவீர்கள்.
       சில கொள்ளைக்கார சமூகங்களில் சிறு வயதிலிருந்தே திருடுவதற்கும், கொள்ளையடிப்பதற்கும் சொல்லித்தரப்படுகிறது.
அந்தக் கலையில் மேன்மை பெற, அதற்கென்று இருக்கும் கடவுள்களை வேண்டிக்கொள்ளும் பழக்கம் கூட அங்கே இருக்கிறது.
       அங்கு பிறந்து வளர்ந்தவராயிருந்தால், திருட்டுத் தொழிலில் மேன்மையானவராக இருந்தால் தான் நீங்கள் வல்லவர், நல்லவர்....
       வளர்க்கப்பட்ட விதத்தில், மறுபடி மறுபடி சொல்லிக் கொடுக்கப்பட்டதை வைத்து தான் நல்லது, கெட்டது என்று பிரித்துக்கொண்டீர்கள்.
       சமூகத்தில் உங்களை நல்லவராக காட்டிக்கொள்ள, இயல்பை மறைத்து வாழத்துவங்கினால் தான் பிரச்சனை!
       இப்படித்தான் நல்லது செய்பவனே சொர்கத்துக்குப் போவான் என்று மற்றவர்கள் சொல்லி சொல்லி மிகக் கவனமாக வாழ்ந்தார் சங்கரன்பிள்ளை. ஒரு நாள் அவர் வாழ்க்கை முடிந்து போனது.
அடுத்த காட்சி சொர்கத்தின் வாசலில் அறங்கேறியது. அவரைக் காக்க வைத்துவிட்டு அங்கிருந்த தேவதைகள் கூடி கூடி பேசினர். பின்பு அவரிடம் வந்தனர்.
       "ஒரே ஒரு கெட்டது செய்திருந்தால் முதல் மாடி. இரண்டு கெட்டகாரியங்கள் செய்திருந்தால் இரண்டாவது மாடி என்று சொர்கத்தில் வெவ்வேறு மாடிகள் இருக்கின்றன. ஒரு பாவமும் செய்யாமல் உங்களைப் போல் இதுவரை யாரும் இங்கே வந்தது இல்லை. உங்களை எங்கே அனுப்புவது என்று ஒரே குழப்பமாக இருக்கிறது!" என்றனர்.
       சங்கரன்பிள்ளை அதிர்ந்தார்."என்னது நல்லவனாயிருந்ததால் பூமியில் தான் என்னை யாரும் சேர்த்துக் கொள்ளவில்லை. இங்கேயுமா?"
       "ஆமாம் மிஸ்டர் பிள்ளை! அடுத்த மூன்று மணி நேரத்திற்க்கு உங்கள் உயிரைத் திரும்பத் தருகிறோம், சீக்கிரம் போய் ஏதாவது தப்பை செய்து விட்டு வாருங்கள்."
       பூமியில் சங்கரன்பிள்ளையின் உடல் எழுந்தது. அவசரத்துக்கு என்ன பாவம் செய்வது? என்று யோசித்தார்.
       பக்கத்துத் தெருவில் இருக்கும் முதிர்கன்னி எப்போதும் அவரைப் பார்த்தால் கண்ணால் அழைப்பாள்.
       மனைவி இருக்கும் போது அடுத்த பெண்னைப் பார்ப்பதே பாவம் என்று அவளைத் தவிர்த்து வந்தார்.
       இப்போது அங்கே விரைந்தார்.
       "உன்னோடு சந்தோசமாக இருக்கவே வந்தேன்" என்றார். அவளும் ஆச்சர்யமாகி விருப்பத்தோடு இண‌ங்கினாள்.
       எல்லாம் முடிந்து புறப்பட்ட போது,"அப்பாடா! ஒரு கெட்ட காரியம் செய்துவிட்டேன். சொர்க்கத்தில் ஈடம் உண்டு" என்று சங்கரன்பிள்ளை நிம்மதியானார்.
       அவளோ, அவரது கரங்களைப் பற்றிக் கொண்டு நன்றியுடன் சொன்னாள்..." இன்பத்தையே அனுபவிதிராத ஒரு பெண்ணுக்கு நீங்கள் எப்பேர்பட்ட நல்லகாரியம் செய்திருக்கிறீர்கள் தெரியுமா?"
       சொர்க்கத்தின் கதவுகள் அறைந்து மூடப்படும் சத்தம் இங்கேயே சங்கரன்பிள்ளையின் காதுகளில் விழுந்தது.
       நல்லவர்களாக் தங்களை நினைத்துக்கொள்பவர்கள் இப்படித்தான் இங்கேயும் வாழாமல், அங்கேயும் இடமில்லாமல் அல்லாடுகிறார்கள்.
       உலகில் பெரும்பாலான துன்பங்கள் தங்களை நல்லவர்கள் என்று நினைத்துக் கொள்பவர்களால்தான் நிகழ்கின்றன.
       உண்மையில் நல்லது, கெட்டது என்பது செயலில் இல்லை. எண்ணத்தில் இருக்கிறது.
       இதைப் பற்றி ராமகிருஷ்ண பரமஹம்சர் வழக்கமாக சொல்லும் ஒரு கதை......
       வாரக்கடைசியில் விலைமகளைத் தேடிப்போகும் இரு நபர்கள் இருந்தார்கள்.
       ஒருமுறை பகவத் கீதை சொற்ப்பொழிவு அங்கே வாரக் கடைசியில் நடந்தது. ஒருவன் அதற்குப் போவது என்று முடிவு செய்தான். அடுத்தவனோ வழக்கம் பொல் விலைமகளைத் தேடிப் போனான்.
       சொற்பொழிவில் இருந்தவனுக்கோ மனதில் "முட்டாள்த் தனமாக இங்கே வந்து சிக்கிக் கொண்டுவிட்டோமே, அங்கே நமது நண்பன் ஜாலியாக இருப்பானே" என்று எண்ணிக்கொண்டிருந்தான்.
       விலைமகளிடம் போனவனோ, " அடடா, வாழ்க்கையில் வளர்ச்சிக்கு முக்கியமான தேவை பகவத்கீதையல்லவா! நண்பனுக்கு இருந்த தெளிவு நமக்கில்லையே?" என்று வருந்தினான்.
       இதில் யார் நல்லவன்... யார் கெட்டவன்?
       கீதையைக் கேட்டாலே புண்ணியம் என்று தன்னை ஏமாற்றிக்கொண்டு, விலைமகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தவனை விட, விலைமகளுடன் இருந்தாலும் கீதையை நினைத்தவன் மேலல்லவா?
       வஞ்சமோ, வேதனையோ இன்றி, அன்போடு செய்யும் எந்தக் காரியமும், ஆனந்தத்தை (உங்களுக்கும், பிறருக்கும்) வழங்கும் எந்தக் காரியமும் நல்லகாரியம் தான்.
       ஒரு மானை புலி வேட்டையாடுவது அதன் மீதுள்ள வஞ்சத்தால் அல்ல... பசியால்! சக மனிதனை மனதாலும் உடலாலும் வருந்தச் செய்யும் பாவமல்லவா முற்றிலும் கொடியது?
       மற்றவர்கள் கண்களீல் நல்லவராகத் தெரிய வேண்டும் என்று முயற்சிப்பதை விட்டுவிட்டு, உண்மையானவராக, அன்பானவராக, ஆனந்தமானவராக, தூய்மையானவராக் வாழப்பழகுங்கள்...

வாழ்க வளமுடன்!