Monday, December 6, 2010

கடமையல்ல! அன்பே ஆனந்தம்:

     "என் அப்பாவுக்கு எழுபது வயது. நடமாட்டம் குறைந்துவிட்டது. 24 மணி நேரமும் தனக்கு தேவைப்படுவது பற்றியே கவலைப்படுகிறார். வயதானால் சுயந‌லம் மிகுந்து விடுமா? 'முதுமை கற்றுத் தருவதெல்லாம் ஒட்டுண்ணியாகும் தந்திரம்' என்று நான் அண்மையில் நான் படித்த கவிதை உண்மைதானோ?" ஆனால் நாங்கள் அவரை கவனிக்கும் கடமையில் இருந்து துளிகூட மாறவில்லை. முடிந்த அளவு (நானும், என் மனைவியும் வேலைக்கு போகிறோம். பிள்ளைகள் கல்லூரிக்கு போகிறார்கள்) கவனிக்கிறோம்.
     உங்களை மூப்பும் தள்ளாமையும் தாக்கும் போது,  நீங்கள் எப்பேர்ப்பட்ட ஒட்டுண்ணியாக இருக்கப்போகிறீர்கள் என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?
     ஏதோ ஒரு கவிஞர் சொன்னாலும் சரி,  நீங்கள் சொன்னாலும் சரி... முதியவர்களை ஒட்டுண்ணிகள் என்று நினைக்கும் சிந்தனையே மகா கேவலமானது.
     பாதுகாப்பின்மை உணர்வு வந்தால்தான், சுயநலம் வரும். உங்கள் மீது முழு நம்பிக்கை இருந்தால், அப்படிபட்ட உணர்வு அவர்களுக்கு ஏன் வரப்போகிறது?
     வயதானவர்களுக்கான தேவைகள் பற்றி உங்க‌ளுக்கு தெரியாதபோது, அவர்கள் அதைக் குறிப்பிட்டு கேட்கிறார்கள்.
இளமை காரணமாக இன்றைக்கு நீங்கள் யாரையும் சார்ந்திருக்க அவசியம் இல்லாமல் இருக்கலாம். இயலாமையும் தள்ளாமையும் முடக்கிவைத்து விட்டதால், உங்கள் அப்பாவால் உங்களுடன் உடல்ரீதியாக போட்டி போடமுடியாது, அதற்காக?

     ஓர் அரசன் தன் நாட்டில் வசிக்கும் முதியவர்களால் எந்த உதவியும் இல்லை என்பதால், 60 வயது நிறைந்தவர்கள் அனைவரையும் கண்காணாத தீவில் கொண்டுவிடச் சொல்லி உத்தரவு பிற‌ப்பித்தான்.
     மக்களின் கண்ணீருக்கு இடையில் உத்தரவு நிறைவேற்றப்பட்டது.
     சில மாதங்கள் கழித்து நாட்டில் கடும் மழை. ஊர் வெள்ளத்தில் மிதந்தது. நிலமையை சமாளிக்க சரியான தீர்வு கொடுப்பவருக்கு பெரும் பரிசு வழங்குவதாக மன்னன் அறிவித்தான்.
     குமரன் என்பவன் கொடுத்த யோசனை மற்றவர் எல்லோரும் கொடுத்த யோசனைகளை விட மிகச் சிறப்பாக இருந்தது. அதை அமல்படுத்தி வெள்ளத்தில் இருந்து மக்களைக் காப்பாற்றினான் அரசன்.
     அடுத்த வருடம் நாட்டில் கடும் தொற்று நோய் பரவியபோதும், குமரன் கொடுத்த‌ யோசனைதான் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதற்கடுத்த வருடம் பஞ்சம் தாக்கிய போதும், குமரனின் ஆலோசனைதான் நாட்டைக் காப்பற்றியது.
     குமரனால் மட்டும் எப்படி சரியான தீர்வு கொடுக்க முடிகிறது என்று அரசன் திகைத்துக் கேட்டான்.
     "அரசே, முதியவர்களை நீங்கள் நாடு கடத்தினீர்கள். ஆனால் நான் என் தந்தையை பிரிய மனமில்லாமல், அவரை என் வீட்டு பரணில் ஒளித்து வைத்து பராமரித்து வருகிறேன். உடலால் இயலாமல் போனாலும், அவருடைய பழுத்த அனுபவம் தான் நம் நாட்டில் ஒவ்வொரு முறை பிரச்சனை வரும் போது தீர்வு சொன்னது" என்றான் குமரன்.
     அரசன் தன் தவறை உணர்ந்து, நாடு கடத்திய முதியவர்களைச் சகல மரியதைகளோடு தன் நாட்டுக்கு மீட்டு வந்தான். உண்மைதான் வயதானவர்கள் மொத்தமாக பயணற்றவர்கள் அல்ல!
     நீங்கள் இந்த பூமியில் அடியெடுத்துவைத்த கணத்தில் இருந்து, உங்களுக்கான உணவைத்தேடிக் கொள்ளக்கூட உங்களிடம் எந்த திறனும் இல்லாத சமயத்தில் உங்களை உங்கள் அம்மா தன் மார்போடு அனைத்து பாலூட்டவில்லை என்றால், என்னவாகி இருப்பீர்கள்? உணவு மட்டுமல்ல மொத்த உலகமே உங்களுக்கு அவள் தந்தது தானே?
     என்றைக்காவது கடவுளை நீங்கள் நேரில் சந்திதது உண்டா? கடவுள் த்ன்மைக்கு நெருக்கமாக உணர்ந்த நபர் உங்கள் அம்மாவாகத்தானே இருக்கமுடியும்?

     இன்றைக்கு நீங்கள் ஏதோ ஒரு நிலையில் இருக்கிறீர்கள் என்றால், அது உங்கள் இளமைக்காலத்தை உங்கள் பெற்றோர் பராமரித்து வந்ததால் தானே?
     வேர்களைக் கத்தரித்து விட்டு பூக்கள் செழிக்கவேண்டும் என்றால், எப்படி நடக்கும்?
     உங்க‌ளைச் சுற்றி இருப்பவர்களை கவனித்துக்கொள்வதை, ஒரு கடமையாக மட்டுமே நினைத்தால், அது அவர்களை இழிவு படுத்துவதற்குச் சமம்.
     குழந்தையுடன் தினம் 15 நிமிடம் செலவு செய்வதை, உங்கள் கடமை என்று நினைத்து செய்தால், நீங்கள் ஒரு மோசமான தந்தை. மனைவியிடம் கடமை உணர்வோடு காதல் வார்த்தைகளை உதிர்ப்பவரானால், நீங்கள் ஒரு மோசமான கணவன். வயது முதிர்ந்த அப்பவை கவனித்துக்கொள்வதை கடமையாக நினைத்தால், நீங்கள் ஒரு மோசமான மகன்.
     கடமையாக செய்வதில் பாதியளவு செய்தால் கூட, அன்பினால் செய்வதே மேன்மையானது. எந்தக்கட்டத்திலும் கடமை என்பது அன்புக்கு ஒரு மாற்றாக முடியாது.
     இழப்பினாலோ வருத்ததினாலோ வரும் குடம் குடமான கண்ணீரைவிட, அன்பினால் வெளிப்படும் ஒற்றைத் துளி கண்ணிருக்கு மதிப்பு அதிகம்.
     இதயத்தில் அன்பு இல்லாமல், கடமை உணர்வோடு உங்கள் கைகள் வழங்கும் எதையும், அடுத்தவர் சந்தோசமாக எற்றுக்கொள்வது இல்லை. ஒரு குற்ற உணர்வுடன் தான்,  அவர்களின் இயலாமையால் தான் எற்கிறார்கள். இந்த நிலமைக்கு ஆளாகிவிட்டோமே என்று அவர்களுக்கு அது வேதனையைத்தான் தருகிறது..
     உறவுகள் கசந்து போவதற்கு முக்கிய காரணமே, அன்பை வற்றிப் போக விட்டுவிட்டு, வெறும் கடமை உணர்வோடு செய்யப்படும் செயல்கள் தாம்.
     அன்பு என்பது பூரணமானது, உண்மையான அன்பில் எதிர்பார்ப்புகள் கிடையாது. ஏமாற்றங்கள் கிடையாது.
     செய்வதை கடமையாக நினைத்து செய்யாமல், அன்பு உணர்வோடு செய்து பாருங்கள். உறவுகள் அமுதமாக இனிக்கும்........ உங்கள் வாழ்கையிலும் ஆனந்தம் மலரும்......

வாழ்க வளமுடன்!

No comments:

Post a Comment