Friday, December 24, 2010

மண் தொட்டியை உடைத்துப் போடுங்கள்-ஆனந்தம்:

    பல திறமையானவர்களை நீங்கள் கவனித்திருக்கலாம். கிடுகிடுவென உயர்ந்து வருவார்கள். சடாரென்று ஒரு கட்டத்தில் நிலைகுத்தி நின்றுவிடுவார்கள். அதன் பின் புதிதாக அவர்களிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது!
       ஏன்?
       அதற்க்குப் பிறகும் வளர வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு இருக்காதா என்ன? இருக்கும்.. ஆனால் கிடைத்திருப்பதை விட்டுவிடக் கூடாது என்று அச்சத்துடன் கெட்டியாக பிடித்துக்கொண்டு விடுவார்கள்.
       அதற்கு அப்புறம் எப்படி வளர்ச்சி இருக்கும்?
    குட்டி மண்தொட்டியில் வேரோடு வைத்து விற்க்கப்பட்ட ஒரு செடியை வாங்குகிறீர்கள்.
       பத்திரமாக நிழலில் வைத்து பார்த்துக்கொண்டால், தொட்டியில் செடி ஓரளவிற்கு வேகமாக வளரும். பிறகு ஒரு கட்டத்தில் போதிய இடமின்றி அது தன் வளர்ச்சியை குறுக்கிக்கொள்ளும்.
       அதே செடியை பூமியில் எடுத்து நட்டிருந்தால் அது பெரிய விருட்சமாக வளர்ந்திருக்கும். புதிது புதிதாக எல்லா திசைகளிலும் கிளைகளை அனுப்பிக்கொண்டிருக்கும்.
       உங்கள் வாழ்கையும் அப்படித்தான்!
       வளர வேண்டும் என்ற முனைப்பு உங்களுக்குள் தகதகத்துக்கொண்டு இருக்கிறது.
       இப்போதிருக்கும் மண் தொட்டியை உடைத்து போட தயங்குவதால், வளர முடியாமல் தவிக்கிறது.
       உங்க‌ளைச் சுற்றி நீங்களே பின்னிக் கொண்டிருக்கும் வலைகளிருந்து விடுபட்டால் தான் வளர்ச்சி என்பது சாத்தியம்!
       அரசனைத்தேடி அவ்வப்போது ஓர் இளைஞன் அரண்மனைக்கு வருவான். அவனுக்கு ராஜமரியாதை தந்து நிறைய செல்வங்கள் கொடுத்த‌னுப்புவான் அரசன்.
       அத்தனையும் தொலைத்துவிட்டு அவன் மீண்டும் வந்து நிற்பான். அரசனும் முகம் கோணாமல் மீண்டும் அவனுக்கு வாரி வழங்குவான்.
       ஒரு முறை தலைமை அமைச்சர் அரசனிடம் மெல்லக் கேட்டார்...
       "மன்னா, இவன் நீங்கள் வழங்கும் செல்வங்களை பொறுப்பில்லாமல் தவறான நண்பர்களோடு சேர்ந்து தொலைத்து விட்டு, வீணடித்துவிட்டு வருகிறான். எதற்காக அவனுக்கு மீண்டும் மீண்டும் செல்வத்தை வாரி வழங்குகிறீர்கள்?"
       "அமைச்சரே நான் பிறந்தபோதே என் தாய் இறந்துபோனாள். அரண்மனைப் பணியில் இருந்த இவன் தாய்தான் இவனுடன் சேர்த்து எனக்கும் தாய்ப்பால் கொடுத்து வளர்த்தாள். அதனால், இவனை என் சகோதரனாகவே நினைக்கிறேன்" என்றான் அரசன்.
       அடுத்த முறை அந்த முட்டாள் பையன் வந்த போது வேறு ஒரு விபரீத கோரிக்கையை முன் வைத்தான்.
       "உன்னைச் சுற்றி புத்திசாலிகள் இருப்பதால் என்னை விட மேன்மையாக இருக்கிறாய். உன் அமைச்சர் என்னுடன் இருந்தால் என்னாலும் ராஜ்ஜியத்தை ஆளமுடியும். அவரை என்னுடன் அனுப்பு!" என்று மன்னனிடம் கேட்டான் அவன்.
       என்ன செய்வது என்று புரியாமல் மன்னன் தினறினான்.
       "மன்னா... உஙளுடன் பால்குடித்து வளர்ந்த சகோதரனுக்கு உதவ என்னுடன் பால்குடித்து வளர்ந்த என் சகோதரனை அனுப்புகிறேனே" என்றார் அமைச்சர்.
       மறு நாள் அரசவைக்கு அமைச்சர் வந்த போது ஒரு எருமைக்கடாவை கயிறு கட்டி இழுத்து வந்தார்.
       ஏன் சிரிக்கிறீர்கள் இவனும் நானும் ஒரே எருமைத்தாயின் பாலைக்குடித்து தான் வளர்ந்தோம். மன்னனின் சகோதரனுக்கு அமைச்சராக இருக்க இந்த என் சகோதரனை அனுப்புகிறேன்" என்றார்.
       நாம் ஒரே தாயிடம் பால்குடித்து வளர்ந்திருக்கலாம். ஆனால் நம் உடலை, மனதை, உண்ர்ச்சிகளை, சக்தியை எப்படி திறம்பட பயண்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து தானே நம் வளர்ச்சி அமையும்!
       பொதுவாக உங்கள் நண்பர்களைச் சந்திக்கும் போது என்னவெல்லாம் பேசுவீர்கள்?
       பட்ஜெட்டில் வரிகளை எப்படி விதிக்க வேண்டும், எந்ததெந்த கட்சிகள் கூட்டணி வைத்துக்கொண்டால் வெற்றி பெற முடியும்... அரசாங்கம் எப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்றெல்லாம் விவாதிப்பீர்கள்.
       முஷாரப் பற்றியும், ஜார்ஜ்புஷ் பற்றியும், பின்லேடன் பற்றியும் எல்லா விவரங்களும் வைதிருப்பீர்கள்.
       இப்படி உலக விவரங்களை எல்லாம் விரல் நுனியில் வைத்திருக்கிறீர்களே, உங்களைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?
       உங்களுடைய திறமையின் வீச்சு பற்றி உங்க‌ளுக்கு முழுமையாகத் தெரியுமா?
       கண்ணாடி அணிபவர்களுக்கு முதன்முதலாக அதை அணிபவர்களுக்கு அணியும்போது அது வேண்டாத பாரமாகத் தெரியும். பழக்கமான பின் அதைப்பற்றியே கவனமிருக்காது. கவனிக்கப்படவிட்டாலும் அது தன் வேலையை திறம்பட செய்துகொண்டிருக்கும்.
       அதே போலத்தான் உங்கள் திறமையும்!
       இருபத்தி நாண்கு மணிநேரமும் அதனைக் கூர்மையாக வைத்திருக்க முதலில் கவனத்துடன் பயிற்சி செய்யுங்கள். பழக்கவசத்தால் அது உங்கள் இயல்பான குணமாகிவிடும். பிறகு எந்த சந்தர்ப்பத்திலும் அது பயண் படத்தயாராக இருக்கும்.
       சாலையில் வண்டி ஓட்டிப் பழகும் போது, உங்கள் மொத்த கவனமும் அதிலேயே இருக்கும். நல்ல பயிற்சி பெற்ற பிறகு, அது பற்றிய பயமோ, பதற்றாமோ இல்லாமல், மிக இயல்பாக வண்டியில் பயணம் செல்ல ஆரம்பித்திருப்பீர்களே, அது போல்!
       மோட்டார் வாகனத் தொழிலில் பெரும் சாதனை புரிந்த ஹென்றிபோர்டு ஒரு முறை...
       "நீங்கள் பெரிய ஜீனியஸ்" என்று புகழப்பட்ட போது அவர் என்ன சொன்னார் தெரியுமா?
       "அதிமேதவித்தனமாவது, மண்ணாங்கட்டியாவது! உங்களிடம் இருக்கும் அதே புத்திசாலித்தனம் தான் என்னிடமும் இருக்கிறது. விடாமுயற்ச்சியுடன் உழைத்து, நான் அதைப் பயண்படுத்தினேன் அவ்வளவு தான்!" என்றார்.
       கிடங்கில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் தானியம் விநியோகம் செய்யப்படதவரை, யாருக்கும் உபயோகம் இல்லை. வீணாகி மக்கி குப்பைக்கு தான் போய் சேரும்.
       திறமைகளைத் தேக்கி வைக்காதீர்கள், அவற்றைப் பயண்படுத்தி கொண்டே இருந்தால் தான் பலன்!
       புதிய வாய்புகளை திறமையோடு எதிர்கொள்ள பழகினால் தான், உங்கள் திரமையும் முழுதாக பரிமளிக்கும். அது உங்களை அடுத்தடுத்த தளங்களுக்கு உயர்த்திக் கொண்டே இருக்கும்!

வாழ்க வளமுடன்! 

No comments:

Post a Comment