Showing posts with label மரணம். Show all posts
Showing posts with label மரணம். Show all posts

Sunday, November 25, 2012

நீங்கள் சாகத்தான் வேண்டும்! ஆனந்தம்


     
      முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, அந்த மாலைப்பொழுதில், பேரானந்த வெள்ளத்திலிருந்து, தன்உணர்தல் அனுபவத்திலிருந்து வெளிவந்த நான், இயல்புநிலைக்கு வந்த போது, “இது மிகவும் எளிமையானது. இது உலகம் முழுவதும் பற்றிக்கொள்ளுமாறு செய்யப் போகிறேன்” என்று நினைத்தேன். அன்று முதல், மிகவும் மெதுவாக ஆனால் தொடர்ச்சியாக, இந்த உலகம், என்னைப் பணிய வைத்து, என் பூகோள எல்லைகளைக் குறைக்க முயற்சித்து வருகிறது.
      நான் இவ்வுலகை குறை சொல்லவில்லை. வாழ்க்கை என்று எடுத்துக் கொண்டால், உள்நிலையில் எனக்கு அது மிகச் சிறந்ததாகவே அமைந்துள்ளது. வெளியிலும் கூட அது மிகச் சிறந்ததாகவே உள்ளது. எனவே நான் அதையும் குறை சொல்லமுடியாது. ஆனாலும் கூட இது எனக்கு நெருடலாகவும் மிகவும் சஞ்சலமாகவும் இருக்கிறது. முப்பது ஆண்டுகள் ஆகியும், நான் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.
      மக்களிடம், என் குறிக்கோள்களின் எல்லையைக் குறைத்துக் கொண்டு நான் பேச ஆரம்பித்து விட்டாலும், உள்ளுக்குள், ‘இது ஏன் எல்லோருக்கும் நிகழக்கூடாது?’ என்ற இச்சையுடன் இன்றளவிலும் தகித்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஏனெனில் காரண அறிவு கொண்டு பார்த்தாலும், இது ஏன் அனைவருக்கும் நிகழக்கூடாது என்பதற்கு எனக்கு ஒரு காரணம் கூட கிடைக்கவில்லை. இது ஏன் அனைவருக்கும் சாத்தியமற்றது என்பதற்கு என் அறிவிற்கு எட்டியவரை ஒரு காரணமும் கிடைக்கவில்லை.
      இதை, மக்கள் தங்களுக்குப் புரிந்தபடி பல அற்புதமான பெயர்களில் அழைக்கிறார்கள். மக்கள் இதை ‘ஞானமடைதல்’ என்கிறார்கள். அப்படிச் சொல்லும்போது அது உங்களைக் கடந்து இருக்கும் ஒன்று என்று அர்த்தமாகிறது. சிலர் அதை ‘கடவுள் உணர்தல்’ என்பதாக – உங்கள் உயரத்திற்கு எட்டாத அளவில் அது ஏதோ சொர்க்கத்தில் இருப்பதாக – சொல்கிறார்கள். இன்னும் சிலர் அதை ‘தன்னை உணர்தல்’ என்று சொல்லும்போது, அது இன்னும் கொஞ்சம் பணிவான வர்ணனையாக இருக்கிறது. அல்லது இது ஒரு விழித்தெழுதலாக இருக்கலாம். நான் இதை ‘நினைவூட்டல்’ என்பேன்.
      ஏதோ ஒன்றைக் குறித்து உங்களுக்கு பல வழிகளில் நினைவூட்ட முடியும். நாளை காலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் எழ வேண்டும். இதை உங்களுக்கு நீங்களே நினைவூட்டிக் கொள்ளலாம். அது முடியவில்லை என்றால் ஒரு கடிகாரத்தில் அலாரம் வைத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் யாரோ ஒருவர் சிறுமுரசு கொட்டி எழுப்பலாம். அல்லது உதைத்து எழுப்பலாம். அந்த தேர்வு உங்களிடம் உள்ளது. ஆனால் நீங்கள் விழிப்படைய முடியும். அல்லது நாங்கள் உங்களை நினைவூட்ட முடியும். அது வெறும் நினைவூட்டல் மட்டும்தான், அது ஒரு பெரிய சாதனை அல்ல. அது எங்கோ சென்றடைவது பற்றியும் அல்ல.
      ஒருமுறை இப்படி நிகழ்ந்தது. ஒரு பெண்மணி ஒரு ஆற்றங்கரையில் நின்று கொண்டிருந்தாள். அங்கிருந்து பார்த்தபோது, அந்த ஆற்றின் அகலமும் மறுகரையும் மிகவும் அழகாக இருந்தது. மறுகரையில் இன்னொரு பெண் இருப்பதை அப்போதுதான் கவனித்தாள். எனவே அவளை உரக்க அழைத்து, “நான் எப்படி அக்கரைக்கு வருவது?” என்று கேட்டாள். அதற்கான வழி கண்டுபிடித்து சொல்வதற்காக ஆற்றை அங்குமிங்கும் பார்த்த அவள் பிறகு சொன்னாள், “நீ ஏற்கனவே அக்கரையில்தான் இருக்கிறாய்!”
      இது அத்தனை எளிமையானது. அத்தனை தெளிவானது. ஆனால் நமக்கு குறிப்பிட்ட திறனுடன் கூடிய மனம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்காலத்தில் நிறைய மக்கள் ‘மனமற்ற நிலைக்கு’ நீங்கள் செல்ல வேண்டும் என்று பேசி வருவது எனக்குத் தெரியும். ஏற்கனவே நிறைய பேர் அப்படித்தான் ஆகிவிட்டார்கள். இதுதான் இந்த உலகில் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. உலகின் மிகப்பெரிய பிரச்சனையே, சில மனிதர்கள் தங்கள் மனங்களை பயன்படுத்த மறுப்பதுதான். இந்த மனத்தைக் கொண்டு அடுத்த கணம், அடுத்த நாள், அல்லது ஆயிரம் வருடங்கள் கழித்து, இலட்சம் வருடங்கள் கழித்து, போன்றவற்றை யோசிக்கமுடியும். நீங்கள் ஒரு வரலாற்று ஆராய்ச்சியாளரா அல்லது ஜோதிட நிபுணரா என்பதைப் பொறுத்து காலத்தால் முன்னும் பின்னும் சென்று யோசிக்கமுடியும். அதற்காகத்தான் இந்த மனம் உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
      நீங்கள் எப்போதும் இந்த விளையாட்டைத்தான் விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த இரண்டு தொழில்களுக்கு இடையேதான் எப்போதும் ஊசலாடிக் கொண்டே இருக்கிறீர்கள். சிலர் நேற்று நிகழ்ந்தது குறித்து வருந்திக் கொண்டிருக்கிறீர்கள். சிலர் எதிர்காலத்தில் அற்புதம் நிகழும் என்றோ அல்லது எதிர்காலம் குறித்து பயத்துடனோ இருக்கிறீர்கள். எனவே நீங்கள் வரலாற்று ஆராய்ச்சியாளர் அல்லது ஜோதிட நிபுணர் என்ற நிலையில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இதுதான் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதில் தவறேதும் இல்லை. அது மனதின் திறன். அதை அது அற்புதமாகவே செய்கிறது.
      ஒரே பிரச்சனை என்னவென்றால், உங்கள் கணிப்புகள் மிகவும் உண்மை போலாகி, நிகழ்வில் இருக்கும் உண்மையை முற்றிலும் அழித்துவிடுகிறது. அந்தக் கணிப்புகள், உங்கள் உடல் சார்ந்த, இரசாயனம் சார்ந்த, சுரப்பிகள் சார்ந்த, கர்மா மற்றும் சமூகம் சார்ந்த பலவித கட்டாயங்களின் குவியலில் இருந்து தோன்றுகிறது. உடலும் மனமும் இது போன்ற கட்டாயங்களின் பேரில் செயல்படுவதால், உங்கள் இயல்பான தன்மையை உங்களுக்கு நினைவூட்டுவதுகூட, மிகவும் சிக்கலானதாகத் தோன்றுகிறது.
      தேவாலயத்தைச் சார்ந்த ஒரு ஞாயிறு பள்ளியில் இருந்த ஆசிரியர், வாழ்வின் உயர் இலட்சியம் குறித்து குழந்தைகளுக்கு ஆர்வமூட்ட விரும்பினார். அப்பள்ளிகளில், இறைவனை விடவும் சுவர்க்கம்தான் உயர்வானது. அந்த ஆசிரியர் தன் மாணவர்களிடம், “நான் என் சொத்து முழுவதையும் இந்த தேவாலயத்திற்கு வழங்கி, இங்கேயே தொண்டு செய்தால், நான் சொர்க்கத்தை அடைவேனா?” என்று கேட்டார். மாணவர்கள் ஒரே குரலில், “இல்லை” என்றார்கள். “நான் ஏழைகளுக்குத் தொண்டு செய்து, தொழுநோயாளியின் கால்களைக் கழுவி, குழந்தைகளின் கண்ணீரைத் துடைத்தால் சொர்க்கம் சேர்வேனா?” என்று கேட்டார். குழந்தைகள் “இல்லை” என்றனர். “நான் என் மனைவி மக்களை நேசித்து, என் குடும்பத்தை நன்றாக கவனித்து, என் தேசத்துக்கு ஆற்றவேண்டிய கடமைகளை ஆற்றினால் சொர்க்கத்தை அடைவேனா?” என்றார். அவர்கள் மீண்டும், “இல்லை” என்றார்கள். “அப்படியானால் நான் சொர்க்கத்துக்குப் போகவேண்டும் என்றால், என்னதான் செய்யவேண்டும்? “என்று கேட்டார். கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்த சிறிய பையன் டாமி எழுந்து, “சொர்க்கம் அடைய வேண்டும் என்றால், அதற்கு நீங்கள் சாக வேண்டும்” என்றான்.
      அவ்வளவுதான் விஷயம்! நீங்கள் சாகவேண்டும். இதுதான் இருக்கும் ஒரே பிரச்சனை. ‘நான்’ என்று எதை நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ, அது உங்கள் மனம் உருவாக்கியுள்ள பிம்பம் என்பது தான் அந்த நினைவூட்டல். அந்த பிம்பத்தை நீங்கள் கொன்றுவிட்டால், பின்னர் எல்லாமே இங்குதான் இருக்கிறது; வாழ்க்கை என்பது ஆனந்தத்தின் பிரவாகமாக ஆகிவிடும். நீங்கள் உலகைக் கொல்லவேண்டாம்; இந்த ஒன்றை, ‘நான்’ என்பதை, மட்டும் கொன்றால் போதும்.
      உங்கள் உடலைக் கொல்வதற்கு உங்களுக்கு உரிமை இல்லை; ஏனென்றால் அதை நீங்கள் உருவாக்கவில்லை. ஆனால் நீங்களே உருவாக்கிய அனைத்தையும் கொல்லும் உரிமை உங்களுக்கு உண்டு; படைத்தவன் உருவாக்கியதை கொல்லும் உரிமை உங்களுக்கு இல்லை. உங்களால் உருவாக்க இயலாத எதையும் அழிக்கும் உரிமை உங்களுக்கு இல்லை. ஆனால் ‘நான்’ என்று நீங்கள் சொல்லிக்கொள்ளும் நபர் உங்கள் உருவாக்கமே. அந்த ஒரு நபரை நீங்கள் கொன்றுவிட்டால், பிறகு எல்லாமே உங்களுடையது; பிரபஞ்சமே உங்களுடையது.
      இது ஒரு வணிகம் – உங்களுக்கு ‘நான்’ வேண்டுமா? பிரபஞ்சம் வேண்டுமா? உங்களுடன் வணிகம் செய்பவர் பணம் கேட்கவில்லை; உங்களைத்தான் கேட்கிறார். இந்த வணிகமே இவ்வளவுதான். ஞானோதயம் குறித்த முழு வணிகமும் இவ்வளவுதான். கடவுள் உணர்தல், விழித்தெழுதல், நினைவூட்டல் என்று எப்படி அழைத்தாலும் சரி, மொத்தமும் இவ்வளவுதான். நீங்களே உருவாக்கியவற்றை முழுமையாகக் கொல்லுங்கள், பிறகு படைத்தவனின் படைப்பு உங்களுக்குள் வெடித்தெழும். வாழ்க வளமுடன்!
                                                                                                  அன்பும் அருளும்,
                                                                                                  சத்குரு

Wednesday, November 14, 2012

நீங்கள் இறந்திருக்கிறீர்களா? ஆனந்தம்



      மரணம் குறித்த சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவியிருக்கிற விதத்தைப் பார்த்தால் விசித்திரமாக இருக்கிறது. நீங்கள் இதற்குமுன் இறந்திருக்கிறீர்களா? மரணம் குறித்த அனுபவம் உங்களுக்கு இல்லை. மரணமடைந்த யாரையாவது பார்த்திருக்கிறீர்களா? அவர்களுடைய உடல்களை வேண்டுமானால் பாத்திருப்பீர்கள். மரணமடைந்த யாரேனும் உங்களிடம் வந்து ‘என் மரண அனுபவம் இப்படி இருந்தது’ என்று சொல்லியிருக்கிறார்களா? அதுவும் இல்லை.
      மரணத்தை நீங்கள் அனுபவித்ததில்லை. அதை நீங்கள் பார்த்ததில்லை. அது குறித்த நேரடி அனுபவம் பெற்ற யாரும் விளக்கம் சொல்லிக் கேட்டதும் இல்லை, அப்படியானால் மரணம் குறித்த இந்த யோசனைகள் உங்களுக்கு எங்கிருந்து வந்தன? அறியாத சிலர் ஏற்படுத்திய மாயைதான் மரணம் என்பது. விழிப்புணர்வே இல்லாமல் வாழ்க்கையை வாழ்பவர்களின் உருவாக்கம் அது. வாழ்க்கை என்ற ஒன்று மட்டுமே நிகழ்கிறது. ஒரு பரிமாணத்திலிருந்து மற்றொரு பரிமாணம் நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது. வாழ்க்கைக்கென்று எத்தனையோ பரிமாணங்கள் உண்டு. உடல் என்ற எல்லையைத் தாண்டிய பரிமாணத்துக்குள் வாழ்க்கை செல்கிறபோது அதனை மரணம் என்கிறீர்கள்!

மரணம் நல்லதா? கெட்டதா?

      இந்தக் கேள்வியே அபத்தமானது. அது நல்லதோ, கெட்டதோ, நிகழத்தான் போகிறது. நீங்கள் பிறந்த விநாடியே உங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது. எங்கே, எப்போது நிகழும் என்பதுதான் கேள்வி. பிறந்ததும் ஒருவர் கல்வி கற்பாரா, கல்யாணம் செய்வாரா, ஆனந்தமாய் இருப்பாரா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. பிறந்தால் இறந்து போவார் என்பது மட்டும் உறுதி.
      மரணம் என்ற ஒன்று இருப்பதாலேயே வாழ்க்கை என்ற ஒன்றும் இருக்கிறது.
      மரணத்தில் எந்தத் தவறும் இல்லை. அது நிகழ்ந்தே தீரும். மரணம் என்ற ஒன்று இருப்பதாலேயே வாழ்க்கை என்ற ஒன்றும் இருக்கிறது. மரணமென்றால் என்னவென்று தெரியாததால்தான் அச்சம் ஏற்படுகிறது. வாழ்க்கை பற்றி என்னென்ன எண்ணங்கள் உங்களுக்கு இருந்தாலும் மரணம் வருகிறபோது அது காணாமல் போய்விடுகிறது. மனித மனத்தால் மாசுபடுத்த முடியாத ஒரே பகுதி அதுதான். அன்பு, உறவு, கடவுள், புனிதம், அனைத்தையும் மனிதர்கள் பலவிதமாக மாசுபடுத்தியும் திரித்தும் பேசிவருகிறார்கள். மரணம் குறித்துதான் அவர்களால் உறுதிபட எதையும் சொல்ல முடியவில்லை. ஒரு சிலர் அது குறித்தும் பேசுகிறார்கள். தாங்கள் சொர்க்கத்துக்குத்தான் போகப்போவதாக அடித்துச் சொல்கிறார்கள். அவ்வளவு தூரம் உறுதியாக இருப்பவர்கள் புறப்படலாம். எதற்காகக் காத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இதைவிடவும் சிறந்த இடத்துக்குச் செல்வதென்று நிச்சயமாகத் தெரிந்தால், விரைந்து போகத் தோன்றும். எங்கே எப்படி போவதென்று தெரியாதபோது, ஆறுதலுக்காக இப்படிச் சில கற்பனைகளை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள்!
      மரணம் குறித்த விழிப்புணர்வு இல்லாததாலேயே, அது பெரிய சிக்கலாக உங்களுக்குத் தோன்றுகிறது. உங்கள் உடல், இந்த பூமியின் ஒரு பகுதி. பூமியிலிருந்து தோன்றியது பூமிக்குள் மீண்டும் போகப் போகிறது. நீங்களும் நானும் இந்த பூமிக்கு வரும் முன்பு எண்ணிலடங்காத எத்தனையோ பேர் வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள். அவர்கள் இந்த மண்ணின் மேற்பரப்பாக மாறிவிட்டார்கள். ஆழப் புதைத்துவைக்காத பட்சத்தில் நீங்களும் இந்த மண்ணின் மேற்பரப்பாக மாறிவிடுவீர்கள்!
      உடலைக்கொண்டு சில அற்புதங்களை நிகழ்த்தியிருந்தால், இதைத் திருப்பித் தருகிற நேரம் வரும்போது மகிழ்ச்சியடைவீர்கள். இல்லையென்றால் நடுநடுங்கிப் போவீர்கள்.
      நான் உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் கடன் தருவதாக வைத்துக்கொள்வோம். அதனைப் பத்து கோடியாக நீங்கள் பெருக்கிவிட்டீர்கள். பத்தாண்டுகள் கழித்து நான் உங்களைத் தேடி வந்தால் என்னை மகிழ்வுடன் வரவேற்று, ஒரு கோடிக்கு இரண்டு கோடியாய் திருப்பித் தருவீர்கள். ஒருவேளை அந்த ஒரு கோடி ரூபாயை நீங்கள் வீணடித்திருந்தால் கடன்காரர் வரும்போது அஞ்சுவீர்கள்.
      இந்த உடம்பும் அப்படித்தான். உலகத்திடம் நீங்கள் பெற்ற கடன் இது. இதைக் கொண்டு சில அற்புதங்களை, மிக முக்கியமானவற்றை நீங்கள் நிகழ்த்தியிருந்தால் இதைத் திருப்பித் தருகிற நேரம் வரும்போது மகிழ்ச்சியடைவீர்கள். இல்லையென்றால் நடுநடுங்கிப் போவீர்கள். நீங்கள் எப்படி மரணமடைகிறீர்கள் என்பதே, உங்களுக்குள் எப்படி வாழ்ந்திருக்கிறீர்கள் என்பதன் அடையாளம்தான். ஒரு மனிதனின் கடைசி விநாடி குறித்து பல ஆன்மீக மரபுகள் ஆழமாகப் பேசுகின்றன. அந்த விநாடியில் உங்களால் விழிப்புணர்வுடன் இருக்க முடிந்தால், அந்தத் தன்மையே காலங்கடந்தும் தொடர்கிறது. இன்றிரவு தூங்கச் செல்லும்போது, அன்புமயமான உள்நிலையை உருவாக்கிக் கொண்டு, புன்னகையுடன், விழிப்புணர்வுடன் தூங்கச் செல்லுங்கள். இரவு முழுவதும் அன்பு நிலை உங்களுக்குள் ததும்பி, காலை வேளையிலும் வெளிப்படுவதை உணர்வீர்கள்!
      இன்றிரவு படுக்கப் போகும்போது, விழிப்பு நிலையிலிருந்து உறக்கத்துக்குள் நீங்கள் ஆழ்கிற அந்தக் கடைசி விநாடியில் விழிப்புணர்வுடன் இருக்க முடிகிறதா என்று பாருங்கள்.
      உங்களுக்கு அது சாத்தியமானால், நீங்கள் கற்பனை செய்துகூடப் பாராத பல அம்சங்கள் உங்கள் வாழ்வில் நிதர்சனமாய் நடப்பதை உணர்வீர்கள். விழிப்பு நிலையிலிருந்து உறக்கத்துக்குள் அமிழ்கிற விநாடியில் விழிப்புணர்வுடன் இருக்க முடிந்தால், வாழ்விலிருந்து மரணத்துக்குள்ளும் முழு விழிப்புணர்வுடன் நுழைய முடியும்! வாழ்க வளமுடன்!

Friday, November 11, 2011

மரணத்தின் கதை ஆனந்தம்


      இது கண்டிப்பாக எப்பேர்பட்டவனுக்கும், எப்படியாகிலும் மரணம் நிகழ்ந்தே தீரும் என்பதற்க்கான  ஒரு மிகவும் பிரசித்தி பெற்ற சூஃபி கதை.  ஒரு அரசன் தன் கனவில் ஒரு கறுப்பு உருவம் ஒன்றைக் கண்டார். அது கனவு என்ற போதிலும் அவர் அரண்டு விட்டார். அவர்,“நீ யார்? எதற்காக என் கனவில் வந்தாய்?” என்று கேட்டார்.
      அதற்கு அந்த உருவம், “நான் தான் உன் மரணம். நாளை சூரிய அஸ்தமனத்தில் நாம் சந்திப்போம். உனக்கு மிகவும் பொறுப்புக்கள் இருப்பதால் நான் உன்னிடம் இதை தெரிவிக்கலாம் என்று வந்தேன். சாதாரணமாக நான் யாரிடமும் முன்கூட்டியே தெரிவிக்க போவதில்லை. ஆனால் நீ ஒரு அரசன், மிக முக்கியமானவன், மிக மிக அரிதானவன். என்னால் உன்னை சரியான இடத்தில் சந்திக்க முடியாமல் போய்விடுமோ என்று பயப்படுகிறேன். நீ வேறு எங்காவது சந்திப்பில் சிக்கிக் கொண்டு விட்டால் நான் என்ன செய்வது நீ என்னை சரியான இடத்தில் சரியான நேரத்தில் சந்திக்க வேண்டும் நினைவில் கொள்.” என்று சொல்லியது.
      அரசர், “எது சரியான இடம்?” என்று கேட்பதற்கு முன் பயத்தினால் அவரது தூக்கம் கலைந்துவிட்டது. நிழல் உருவம் மறைந்துவிட்டது. நேரம் தெரிந்துவிட்டது, சரியான காலம் – நாளை சூரிய அஸ்தமனம் – ஆனால் இடம் எது நான் உன்னை சந்திக்க வேண்டிய இடம் எங்கிருக்கிறது என்று கேட்பதற்க்காக அவர் பலமுறை கண்களை மூடி அந்த நிழல் உருவத்தை பார்க்க முயற்சித்தார். இறப்பை சந்திக்கவேண்டும் என்று அவர் விரும்பினார் என்பதல்ல. அந்த இடம் எது என்று தெரிந்தால் அதை தவிர்த்து விடலாம். ஆனால் இந்த முழு உலகத்தில் அந்த இடம் எது
      ஆனால் உன்னால் கனவை தொடர முடியாது  -அது மிகவும் கடினம். ஒரு முறை கனவு கலைந்துவிட்டால் எவ்வளவு முயற்சி செய்து கண்களை மூடி கனவை தொடர முயன்றாலும் அது வராது.
      அரசர் மிகவும் பயந்து போய் தனது அரசவை ஜோதிடர்கள், குறி சொல்பவர்கள், அமைச்சர்கள், குருமார்கள், பூசாரிகள், ரேகைசாஸ்திரம் சொல்பவர்கள் என யாவரையும் அழைத்து,“அந்த சரியான இடம் எது என்று எனக்கு கண்டுபிடித்து சொல்லுங்கள். அப்போதுதான் நான் அங்கு செல்லாமல் அதை தவிர்க்க முடியும்” என கூறினார்.
      உடனே அவர்கள் அனைவரும் தங்களது பழமையான நூல்களில் பதில் தேட ஆரம்பித்தனர். காலை வந்து சூரியன் எழுந்தது. காலை முழுமையாக விடிந்தவுடன் அரசர் மிகவும் பயந்து போனார். ஏனெனில் பொழுது விடிந்தால் முடியுமே! முடிவின் ஆரம்பம் தானே விடியல். சூரியன் விடிந்தால் அஸ்தமனம் வெகு தொலைவில் இல்லையே.
      சூரியன் ஏற்கனவே அஸ்தமனத்தை நோக்கி செல்ல துவங்கி விட்டான். இன்னும் இவர்கள் எந்த முடிவுக்கும் வரவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் தங்களுக்குள் சண்டையிட ஆரம்பித்துவிட்டனர். அரசர்,“உங்களுடைய நூல்களைப் பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை. அது எந்த இடம் என்று மட்டும் சொல்லுங்கள், போதும். அப்போதுதான் அங்கு நான் போகாமல் இருக்கமுடியும் ” என்றார்.
      அவர்கள், “ இருங்கள். இது ஒரு எளிமையான கேள்வி அல்ல. நாங்கள் அதற்கான வழிமுறைகளை கண்டு, பின் ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஜோதிடர் ஒன்றை சொல்கிறார், பூசாரி வேறு ஒன்றை சொல்கிறார். நாங்கள் உங்களுக்கு பதினைந்து பதில்கள் கொடுத்தால் அதனால் என்ன பயன் ? ஆகையால் நாங்கள் ஒரு முடிவுக்கு வந்த பின் சொல்கிறோம்” என்றனர்,
      அரசரின் வயதான வேலையாள் ஒருவன் அருகில் நின்று கொண்டிருந்தான். அவன் அரசரது காதில் மெதுவாக, “ நான் கிழவன். நான் இந்த பெரிய மனிதர்களின் வாக்குவாதத்தில் தலையிடகூடாது. நான் ஒரு வேலையாள். ஆனால் வயதானவன், எனக்கு உன் தந்தையின் வயதிருக்கும். உங்களது சிறிய வயதிலிருந்து நான் உங்களை வளர்த்திருக்கிறேன். நான் சொல்வதை கேளுங்கள். இவர்கள் ஒருபோதும் ஒரு முடிவுக்கு வர மாட்டார்கள்.
      இவர்கள் தங்களுக்குள் வருடக்கணக்கில் சண்டையிடுவார்களே தவிர ஒரு போதும் ஒரு முடிவுக்கு வர மாட்டார்கள். இரண்டு தத்துவவாதிகளோ, இரண்டு ஜோதிடர்களோ, இரண்டு குறி சொல்பவர்களோ ஒரு போதும் ஒத்துப் போக மாட்டார்கள். ஒத்துப் போகாமைதான் அவர்களது வியாபாரம், அவர்கள் அப்படி ஒத்துப் போகாமல் இருப்பதில்தான் வாழ்கிறார்கள். அதனால் காத்திருக்காதீர்கள். காலம் மிகவும் குறைவாக உள்ளது. நீங்கள் என்னைக் கேட்டால் உங்களிடம் உள்ள மிகச் சிறந்த குதிரை ஒன்றை எடுத்துக் கொண்டு – உங்களிடம் அப்படிபட்ட சிறப்பான குதிரைகள் உள்ளன. – இந்த இடத்திலிருந்து ஓடிப் போய்விடுங்கள். ஒரு விஷயம் நிச்சயம். நீங்கள் இந்த இடத்தில், இந்த அரண்மனையில், இந்த நகரத்தில், உங்களது ராஜ்ஜியத்தில் இருக்கக்கூடாது. எங்காவது தப்பிச் சென்று விடுங்கள்” என்று கூறினான்.
      அரசருக்கு இது சரியென்று பட்டது. அரசர், “ நீ சொல்வது சரிதான். ஏனெனில் இவர்கள் இதை சூரிய அஸ்தமனத்திற்க்குள் முடிக்க மாட்டார்கள் போலிருக்கிறது.” என்றவாறே அவர் தன்னுடைய குதிரைகளில் சிறப்பான ஒன்றை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடினார். மாலையாவதற்குள் அவர் தனது ராஜ்ஜியத்தின் எல்லையை கடந்து வேறொரு ராஜ்ஜியத்திற்க்குள் நுழைந்து விட்டார். அவர் தான் தப்பியதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இப்போது இவர் எங்கிருக்கிறார் என்று இறப்பினால் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை.
      இரவு ஓய்வெடுப்பதற்காக அவர் ஒரு சோலையினுள் நுழைந்தார். அவர் தனது குதிரைக்கு மிகவும் நன்றி செலுத்தினார். ஏனெனில் இந்த குதிரை உண்மையிலேயே ஒரு அற்புதமான விஷயத்தை செய்து முடித்திருக்கிறது. நாள் முழுவதும் அது மிகவும் வேகமாக ஓடி வந்திருக்கிறது. அது அப்படி ஓடி அரசர் கூட இது வரை பார்த்ததேயில்லை. அது தண்ணீர் குடிக்கக் கூட ஓய்வெடுக்கவில்லை. அது ஒரு வினாடி கூட ஓய்வெடுக்க நிற்கவும் இல்லை. அது இந்த அவசரத்தை புரிந்து கொண்டதைப் போல நடந்து கொண்டது.
      அரசர் அதற்கு நன்றி கூறினார். அவர் அதனிடம், “ நீ என்னை காப்பாற்றி விட்டாய். நான் உனக்கு நன்றி கூறுகிறேன், எனக்கு உன் மேல் அன்பு பெருகுகிறது, நான் உனக்கு தகுந்த சன்மானம் அளிப்பேன். நாளை நாம் நமது ராஜ்ஜியத்திற்க்குள் சென்றவுடன் எனக்கு அளிக்கப்படும் அதே அளவு மரியாதையை நீயும் பெறுவாய் ” என்றார்.
      அந்த நேரத்தில் சூரிய அஸ்தமனம் ஆனது, அப்போது ஒரு கரம்....... அரசர் தனது தோள் மீது ஒரு கரம் படிவதை உணர்ந்தார். அவர் திரும்பி பார்த்தார். அவர் கனவில் பார்த்த அதே கறுப்பு நிழல் உருவம் அங்கே இருந்தது.
      அந்த நிழல் உருவம் சிரித்தபடி, “நீ அந்த குதிரைக்கு நன்றி சொல்லக் கூடாது. நான் தான் அந்த குதிரைக்கு நன்றி சொல்ல வேண்டும். இதுதான் நான் காத்துக் கொண்டிருக்கும் இடம். உன்னுடைய குதிரையால் இங்கு வர முடியுமோ வர முடியாதோ என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அது வந்து சேர்ந்து விட்டது. இந்த உலகிலேயே மிக அற்புதமான குதிரை உன்னுடையது. நீ சரியான நேரத்திற்கு சரியான இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டாய்.” என்றது.
      நீ என்ன செய்து கொண்டிருந்தாலும் இறப்பை சந்திக்க சரியான இடத்திற்கு சரியான நேரத்திற்கு வந்தடைந்து விடுவாய்.

Friday, June 17, 2011

அதிர்ச்சி மரணம்? ஆனந்தம்


      மனிதனுக்கு ஆக்க வாழ்வுக்காக நமது முன்னோர்கள் அமைத்துக் கொடுத்திருக்கும் இன்றியமையாத தேவைகள் நான்கு 1. அறம் 2. பொருள் 3. இன்பம் 4. வீடு பேறு. அறவழியில் பொருளீட்டி அதன் மூலம் இன்பம் துய்த்தால், தானாகவே அறிவு தடையற்ற வளர்ச்சி பெற்று முழுமைப்பேறாகிய வீடுபேறு கிட்டும். எனவே மனிதன் செய்யும் தொழில் இந்த நான்கில் ஒன்றைக் குறி வைத்துச் செயல்புரியும்போது மற்ற மூன்றும் சிறிதும் கெடாதவாறு காத்து விழிப்பு நிலையில் ஆற்ற வேண்டும். இந்த முறையில் தான் மனித வாழ்வு கெடாமலும் சீர்குலையாமலும் இனிமை காக்கப்படும்.
      அறம் என்றால் உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஒழுக்கம், கடமை, ஈகையெனும் மூன்றுறுப்புக்கள் ஒன்றிணைந்த எந்தச் செயலும் அறமேயாகும். இல்ல‌றவாழ்வில் பொருளீட்டி வாழ்வது மனிதனுக்குள்ள இயல்பான ஆற்றல்தான். இதனை அறவ‌ழியில் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அறநெறி இயல்பாகவும் எளிதாகவும் அமைந்து விடும். அறவழியில் பொருளீட்டி வாழ்வை நடத்தி மிஞ்சிய பொருளைச் சேர்த்து வைப்பதும் மனித சமுதாயச் சூழ்நிலையில் ஒப்புக் கொள்ளப்பட்ட நீதியேயாகும்.
      மரணம் நெருங்கும்போது அறவழியில் ஈட்டிப் பொருள் சேர்த்து வைப்பவரிடம் அறிவில் ஒரு தெளிவு பிறக்கிறது. அவன் சேர்த்து வைத்திருக்கும் பொருள் தனக்குப் பின்னால் நல்ல வழியில் மனித சமுதாயத்திற்கும் பயன்பட வழி வகுத்து விடுகிறான். பொருள்பற்று என்ற தளையிலிருந்து தன்னைத்தானே விடுவித்துக் கொள்கிறான். அந்த அளவிற்கு அருள் பற்று மலர்ந்து விடுகிறது. மனம் இனிமையான அமைதியில் இணைகிறது. மரணம் நெருங்க நெருங்க அந்த இன்ப வெள்ளத்திலேயே மிதந்து கொண்டு இறைநிலையோடு கலந்து விடுகிறான். அறநெறி மறந்து பொருள் சேர்த்தவன் மரணம் நெருங்கும் போது அப்பொருளை எண்ணி வருந்துகிறான். இவ்வளவு பொருளையும் தவிர்க்க முடியாமல் விட்டு விட்டுப் போக வேண்டியிருக்கிறதே என்று மனம் கலக்கம் அடைகிறான். அறிவில் இருள் சூழ்ந்து கொள்கிறது. மரணம் நெருங்க நெருங்க நிமிடந்தோறும் அதிர்ச்சியோடு அச்சப்படுகிறான்.
      இந்த அச்சத்தின் அதிர்ச்சியோடு அமைதியற்ற மரணம் அடைகிறான். பொருள்பற்று என்ற இருளிலிருந்து அவனால் மீள முடியவில்லை. அந்தோபரிதாபம் இவன் சேர்த்து வைத்த பொருளோ அறம் தெரியாத குருடர்களிடமே சேருகிறது. சூது, குடி, விபசாரம் என்னும் மூன்று வழியில் இந்தப் பொருள்கள் அனைத்தும் சூரை விடப்படுகிறது. சூரை விடுபவர்களும் அவர்கள் புரியும் பாவச் செயல்களால் தீவினைப் பதிவுகளை ஏற்றுத் தலைமுறை தலைமுறையாக உடல், மனநோய்களில் சிக்கித் தவிக்கிறார்கள் எனவே அன்பர்களே அறவழியில் பொருளீட்டுங்கள். பொருள் செழிப்பு நிச்சயமாக உண்டாகும். மீதமுள்ள பொருளில் ஈட்டும் போதே பிறர் நலத்துக்காக ஒரு சதவீதம் ஒதுக்கிச் செலவு செய்து பழகிக் கொண்டு எஞ்சிய பொருளை நல்ல முறையில் பங்கிட்டுக் கொடுங்கள். எப்போதும் மனம் பளுவற்றதாகவும் இனிமையாகவும், அமைதியாகவும் இருக்கும். நிலையான வாழ்வு பெறலாம். நீங்கள் விட்டுச் செல்லும் பொருள்கள் பலருக்கும் நலமளிக்கும் வழியில் செலவாகும் அதன் பயன் இன்பம் இன்பம் இன்பம்.
---------------------------------யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி--------------------------------

Monday, May 23, 2011

மரணத்திற்க்குப் பின்? ஆனந்தம்


      "மரணத்துக்குப் பின் எங்கேதான் போகிறோம்?"

      "சங்கரன் பிள்ளை ஒரு முறை தன் நண்பரிடம் சொன்னார், "செத்துப்போனால், மற்றதெல்லாம் இல்லாமல்கூடச் சமாளித்துவிடலாம். ஆனால், மேல் உலகத்தில் கிரிக்கெட் இல்லை என்றால், போரடிக்குமே. அங்கே கிரிக்கெட் இருக்குமா?"
      நண்பர் சொன்னார், "நீ முதலில் போனால், நீ பார்த்துச் சொல். நான் முதலில் போனால், நான் பார்த்துத் தெரிவிக்கிறேன்".
      அந்த நண்பர்தான் முதலில் இறந்தார். அவர் இறந்த மூன்றாவது நாள் சங்கரன் பிள்ளைக்கு மேலே இருந்து அவர் குரல் மட்டும் கேட்டது.
       "கிரிக்கெட் பற்றிக் கேட்டாயே, ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி. எது முதலில் வேண்டும்?"
      "ஐயோ, நல்ல செய்தியை முதலில் சொல்."
      "இங்கே கிரிக்கெட் இருக்கிறது."
      "கெட்ட சேதி?'"
      "திங்கள்கிழமை நடக்கும் மேட்ச்சில் நீதான் ஓப்பனிங் பேட்ஸ்மேன்!"
      ஏதோ சங்கரன்பிள்ளைக்கு வருகிறது என்றவுடன் உங்களால் சிரிக்க முடிகிறது. ஆனால், எந்த ஒரு மனிதனும் இதில் இருந்து தப்பிக்க முடியாது.
      உங்கள் உயிர் எங்கே இருக்கிறது என்று கவனித்திருக்கிறீர்களா? மூச்சு உள்ளே வருகிறது. வெளியே போகிறது. வெளியே போன மூச்சு திரும்பவும் உள்ளே வராவிட்டால், மரணம் நிகழ்கிறது. அதாவது, ஒவ்வொரு சுவாசத்திலும் உயிர் வெளியே போய்விட்டு உடல்கூட்டுக்குள் திரும்புகிறது. அப்படித் திரும்பும் போது, அதை ஏற்கும் நிலையில் உடல் இருந்தாக வேண்டியிருக்கிறது.
      அப்படியானால், நம் உயிருக்கு அடிப்படையானது நமக்கு உள்ளே மட்டும் இல்லை. வெளியேயும் இருக்கிறது என்று புரிகிறதா? உங்கள் உயிர் இங்கேதான் இருக்கிறது என்றோ, அங்கேதான் இருக்கிறது என்றோ சொல்ல முடியவில்லை என்றால், என்ன அர்த்தம்? அது எல்லை இல்லாமல் இருக்கிறது.
      நம் கற்பனைதான் இது ஒரு தனி உயிர், அது ஒரு தனி உயிர் என்றெல்லாம் பிரித்துப் பார்க்கிறது. எப்படி இருந்தாலும், மரணத்தில் இருந்து தப்பிக்க முடியாது. அப்புறம் எப்படி வாழ்ந்தால் என்ன என்று வாழப்பார்த்தால், வாழ்க்கை பலவிதமாகப் புரட்டிப் போட்டுவிடும்.
      அப்படி இல்லாமல், ஆனந்தமாக வாழ வேண்டும், ஆனந்தமாக முடிய வேண்டும் என்றால், அதற்கு விழிப்பு உணர்வு தேவைப்படுகிறது. விழிப்பு உணர்வு இல்லாதவர்கள் உடல் கீழே விழுகையில் மட்டும்தான் இறப்பைப் பார்க்கிறார்கள். விழிப்பு உணர்வோடு இருப்பவர்கள் வாழும் ஒவ்வொரு கணத் திலும் மரணத்தையும் சேர்த்துப் பார்க்கிறார்கள். அப்படி மரணத்தை வாழ்வின் ஓர் அங்கமாகக் கவனித்துவிட்டால், அப்புறம் மரணத்தால், நம்மைத் தளையிட முடியாது.
      ஆனால், இந்தப் புரிதல் இல்லாமல், மரணமற்ற ஒரு வாழ்க்கை வேண்டும் என்ற வெறி புராண காலத்திலேயே இருந்திருக்கிறது. ஆயிரம் நிபந்தனைகள் போட்டு ஹிரண்யகசிபு வரம் வாங்கினான். அவன் உயிரை எடுப்பதற்கு கடவுளே தந்திரமாக மனிதனும் அல்லாத, மிருகமும் அல்லாத நரசிம்ம அவதாரம் எடுக்க வேண்டியிருந்தது.
      பஞ்சதந்திரத்தில் ஒரு கதை இருக்கிறது. குரங்கு ஒன்று குடுவையில் இருக்கும் கடலைகளை அள்ளி எடுக்கப் பார்த்தது. கை நிறையக் கடலைகளை எடுத்து விட்டால், குடுவையின் சிறு கழுத்துப்பகுதியைத் தாண்டி கையை வெளியே எடுக்க முடியவில்லை. கடலைகளை விட்டால்தான் கை வெளியே வரும். ஆனால், ஆசையோடு அள்ளிய கடலைகளை விட குரங்குக்கு
மனம் வரவில்லை. கையை வெளியே எடுக்கவும் முடியாமல், கடலைகளை விடவும் முடியாமல் குரங்கு அல்லாடியதைப் போல்தான் அல்லாடுகிறது மரணத்தை மறுக்க நினைக்கும் மனது.
      மரணம் என்பது இல்லாமல் போனால் என்ன ஆகும்?
      ஓர் இளைஞன் இமயத்தில் இருந்த யோகிகளைச் சந்தித்து சில அபூர்வ சக்திகளைப் பெற்று தன் ஊருக்குத் திரும்பினான். தன் தெருவில் முக்காடு போட்டபடி, முகமே இல்லாத ஓர் உருவம் தன் வீட்டுக்குள் நுழையப் பார்ப்பதைக் கவனித்து அதை வழி மறித்தான். 'வழிவிடு. நான் மரணதேவன். உன் தாயின் மரண நாள் வந்துவிட்டது' என்றது அந்த உருவம். இளைஞன் தன் சக்தியைப் பிரயோகித்து மரணதேவனைப் பிடித்து தன் கமண்டலத்தில் அடைத்தான். கமண்டலத்தைப் பூமியில் புதைத்துவிட்டு, வீட்டுக்குப் போனான்.
      அவனுடைய அம்மா வுக்குப் பல வருடங்கள் கழித்து மகனைப் பார்த்ததும், அளவற்ற மகிழ்ச்சி. அவனுக்குப் பிடித்த கோழிக்கறி யைச் சமைத்துப் போட விரும்பினாள்.
      கோழியைப் பிடித்துக் கழுத்தை வெட்டினாள். எத்தனை தடவை வெட்டினாலும், வெட்டுப் பட்ட கழுத்து மறுபடி சேர்ந்துகொண்டது. கோழி சாக மறுத்தது. இது என்னடா அதிசயம்?
      ஒரு வேளை மகன் பூரண சைவத்துக்கு மாறிவிட்டானோ என்று குழப்பம் வந்தது. தோட்டத்துக்குப் போய் கீரையைப் பிடுங்கினாள். கீரை வரவில்லை. காய்களைப் பறித்தால், அவை மறுபடி செடியில் போய் ஒட்டிக்கொண்டன. அம்மா மிரண்டுபோய் மகனிடம் வந்தாள். நடந்ததைச் சொன்னாள்.
      "ஏதோ மந்திர தந்திரம் எல்லாம் கற்று வந்திருக் கிறாயே! என்னடா செய்தாய்?" என்று கேட்டாள். மகன் அவளைத் தேடி வந்த மரண தேவனைப் பிடித்து புதைத்துவிட்டதைச் சொன்னான்.
      "வேண்டாமடா இந்த விபரீதம்! முதலில் அவனை விடுவித்துவிடு. அவனுடைய வேலையை அவன் செய்யட்டும். நம் வேலையை நாம் செய்வோம். இல்லை என்றால், உலகத்தில் யாரும் உண்ண முடியாது. எதுவும் செய்ய முடியாது" என்றாள், அவன் அம்மா.
      மரணத்தை நிறுத்தினால், அப்படித்தான் ஆகி விடும். ஏனென்றால், உயிர் என்பதோ, மரணம் என்பதோ தனித்தனியாக வரவில்லை. இரண்டும் சேர்ந்துதான் வந்திருக்கின்றன.
      இதை நீக்கினால், அது நடக்காது. அதை நீக்கினால், இது நடக்காது.
      ஓர் அறைக்குள் நீங்கள் உள்ளே போக முடி யும்; வெளியேயும் வர முடியும் என்றால், அதை உங்கள் குடியிருப்பு என்கிறீர்கள். உள்ளே போனீர்கள், வெளியே வர முடியவில்லை என்றால், அது அரண்மனையாகவே இருந்தாலும், அதைச் சிறை என்கிறீர்கள். ஆக, வெளியே வந்துவிட்டு உள்ளே போக முடியாது என்றாலும் பிரச்னைதான். இங்கே வந்தால் இங்கே
சிக்கிப்போவீர்கள். அங்கே போனால், அங்கே சிக்கிவிடுவீர்கள் என்றால், அதைச் சுதந்திரம் என்று எப்படிச் சொல்ல முடியும்?
      வாழ்ந்தாலும் ஒருவிதச் சிறை. செத்தாலும் ஒரு விதச் சிறை என்பதை எப்போது நாம் உணர்வுபூர்வமாகப் புரிந்துகொள்கிறோமோ, அப்போது இதைத் தாண்டிப் போக வேண்டும் என்ற ஆர்வம் நமக்கு வந்துவிடும். உயிரின் தன்மையைப் புரிந்துகொள்ளும் தேடுதல் துவங்கிவிடும். முக்திக்கான முதல் அடிஎடுத்து வைத்துவிடுவோம்.
      விழிப்பு உணர்வோடு இருந்தால், உங்களுக்குள்ளேயே ஒரு பகுதியில் பிறப்பு நிகழ்வதும், இன்னொரு பகுதியில் மரணம் நிகழ்வதையும் பார்க்க முடியும். இதை முழுமையாக உணர்ந்து, அடுத்த கணத்தில் உயிர் பிரியும் என்று தெரிந்தாலும் ஒரு மனிதன் ஆனந்தமாக இருக்க முடிந்தால், அதுவே அவன் மேன்மையான நிலையை எட்டிவிட்டதற்கு அடையாளம். ஆனந்த வாழ்வே மேண்மையான நிலை....
      மரணத்துக்குப் பின் எங்கே போவோம் என்ற கேள்வி இன்னும் உங்கள் மனதில் தொக்கி நின்றால், அனுபவித்துப் பார்த்தால்தான் புரியும் என்று சொல்வேன்!

Tuesday, November 23, 2010

நம்பிக்கை வெளிச்சம்1:

     அந்த சிறுவனுக்கு பன்னிரெண்டு வயதாகும் போது, மோசமான போலியோ தாக்கியது...
     "உங்கள் மகன் இந்த இரவைத் தாண்டுவது கஷ்டம்" என்று தன் பெற்றோரிடம் மருத்துவர் சொல்வதைக் அவன் கேட்டான். அவன் அம்மா அழுகையின் உச்சத்துக்கு போனாள். அந்த இரவைக் கடந்து விட்டால் அம்மாவின் துயரம் சற்றே தீரும் என்று அவன் நம்பினான், இரவு முழுக்க தூங்காமல் விழித்திருந்தான்.
     விடிந்ததும் அம்மாவை எழுப்பி, "அம்மா, பாருங்கள் நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்! என்று அம்மாவைக் கட்டிக்கொண்டான்.
     அம்மாவின் சந்தோசக் கண்னீர், அவன் மனதில் ஓர் வைராக்கியத்தை எற்படுத்தியது. அடுத்து வரும் ஒவ்வொர் இரவையும் இதே போல் கடக்க வேண்டும் என்று உறுதி பூண்டான். அவ்வாறே கடந்தான்……..
     கடைசியாக அவனை மரணம் வென்ற போது அவன் வயது எழுபத்திஐந்து.
     அந்த சிறுவன் - மில்டன் எரிக்சன்.
     மனிதனுக்கு அவனே தான் தடை என்பது பற்றிய அவர் எழுதிய ப‌ல புத்தகங்கள் இன்றைக்கும் பிரபலம். மனநல சிகிச்சைகளில் பல புதிய முறைகளை அறிமுகப்படுத்தி, உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர்.
     பன்னிரெண்டு வயதோடு முடிந்து போயிருந்தால், உலகம் மில்டன் எரிக்சனை இழந்திருக்கும்.
     புரிந்து கொள்ளுங்கள்.... உலகில் எந்த உயிரும் அர்தமில்லாமல் இவ்வுலகுக்கு வருவதில்லை.....

வாழ்க வளமுடன்!

Wednesday, October 27, 2010

சித்தார்தன் புத்தர் ஆனார்:

புத்தர் இன்றைக்கு நேபாளம்  என்று சொல்லப்படும் நாட்டின், லும்பினி என்கிற  இடத்தில் கபிலவஸ்து என்கிற ஊரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த சாக்கிய அரச வம்சத்தை சார்ந்த ராஜா சுதோதனாவுக்கும், ராணி மகாமயாவுக்கும் கி.மு.563  ஆண்டில் பிள்ளையாக பிறந்தார். கௌதமர் என்பது அவர்களின் குடும்பப் பெயராகும் . ராணி மகாமயா சித்தார்த்தர் பிறந்தவுடனே இறந்து விட்டார். அக்குழந்தையின் ஜாதகத்தை கணித்த ஜோசியர்கள் இப்பிள்ளை பிற்காலத்தில் மிகப் பெரிய‌ பேரரசனாக விளங்குவார் அல்லது மனித ஆசைகளை ஒதுக்கி தள்ளி அரச சுக போகங்களை வெறுத்து மக்கள் போற்றும் மகானாக விளங்குவான் என தெளிந்தனர். அது கேட்டு நடுங்கிப் போன தந்தை சுதோதன தன் மகனை அவ்வாறு செல்ல தான் விட்டு விட மாட்டேன் என்றும், தன்  மகனுக்கு அவன் பிறந்த முதலே, உலக சுகங்களை காட்டி ராஜ போகத்தில் வாழ வைப்பேன் என்றும் சபதம் பூண்டான்.

தந்தை சுதோதனா தன் மகனுக்காக அகண்ட நிலப்பரப்பில் மிகப் பெரிய அரண்மனை கட்டினான். அதன் மதில் சுவர்களை வானளாவ கட்டினான். வெளியுலம் என்பதே தன் மகன் அறியா வண்ணம் அவனை உள்ளுக்குள் வைத்து அவனை கவனித்துக் கொள்ள, அவன் சித்தியாகிய ராணி மஹாபஜபதி மேற்பார்வையில் பத்து ஈரத்தாய்களை நியமித்தான், தன் பிள்ளை நினைத்த நேரத்தில் பிடித்த தாயிடம் பாலருந்த. அவன் விளையாட அனைத்தும் வைத்தான். புறாக்கள், கிளிகள், மயில்கள், பூனைக்  குட்டிகள், ஆனைக் குட்டிகள், மான் குட்டிகள், சிங்கக் குட்டிகள், புலிப் போந்துகள் என அன்டிது பறவை மிருக வகைகளையும் ஆங்கே வைத்தான். அனைத்து பழத் தோட்டங்களும், மலர் தோட்டங்களும், நீச்சல் குளங்களும் செய்தான். அவன் கூட சேர்ந்து விளையாட தோழர்களும் தோழியரும் (இளமையனவர்கள் மட்டுமே)ஏற்பாடு செய்யப்பட்டனர். வெளியுலகத்தை சித்தார்த்தனின் கண்களிலிருந்து முழுவதுமாக மறைத்தான் அரசன். சித்தார்த்தனுக்கு மனிதனுக்கு வயதாகும், பூக்கள் வாடிவிடும் என்பது கூட தெரியாது

சித்தார்த்தா தான் இருந்த அரண்மனையையும் அதன் சுற்று சுவரையுமே மொத்த உலகம் என நினைத்து வாழ்ந்து வந்தான். இவ்வாறு இருக்கும் வேளைகளில் சித்தார்த்தா தன் நண்பர்கள்வேலைகாரர்கள், தன் தேரோட்டியாய் இருக்கக்கூடிய சன்னா என்பவனும் கூட சில வேளைகளில் தன் கூட இருந்து விட்டு பல வேளைகளில் எங்கோ மறைந்து விடுவதை உணர்ந்தான். தான் மட்டுமே இந்த அரண்மனையில் எந்த நேரமும் இருந்துக் கொண்டு இருப்பதை போலவும் உணர்ந்தான். மற்ற அனனைவரும் குறிப்பிட நேரங்களில் மட்டுமே தன் முன்னே வந்து நிற்பதை கவனிக்கலானான். இப்படியாக அவன் வாழ்ந்து தன் பதினாறு வயதினை அடைந்தவுடம் அவன் தந்தை ராஜா சுதோதனா அவனுக்கு தன் தங்கை மகள் யசோதராவை மணமுடித்து வைத்தான். அவர்கள் இன்பமாக கூடி வாழ்ந்து ஒரு மகனையும் பெற்று ரஹூலா எனவும் பெயரிட்டார்கள். இத்தனை  சந்தோஷமான வாழக்கையின் ஊடே சமயத்தில் தன் தந்தை. அவ்வளவு ஏன், தன்  மனைவியும் கூட தன் மகனை தூக்கி கொண்டு அவ்வபோது எங்கோ போய் விடுவதை உணர்ந்து அவன் கலங்கி வானைத்தை பார்க்கும் வேளைகளிலே மேலே உயரத்தில் பல பறவைகள், தன் அரண்மனையில் இருந்த இறக்கை கத்தரிக்கப்பட்ட பறவைகள் போலே அல்லாத வேறு பறவைகள், உயரே பறந்து பறந்து தன் அரண்மனையின் சுற்று சுவரை தாண்டி அதற்கும் அப்பால் எங்கோ சென்று இறங்குவதை கண்டான். இது பற்றி அவன் தன் தேரோட்டி சன்னாவிடம் கேட்கிறபோது அவன் எதையோ சொல்லி மழுப்புவதை கவனித்தான். பல வேளைகளில்  யாருமற்ற  பொழுதுகளில் அவன் அந்த சுற்று சுவரின் பக்கத்தில் நின்று கூர்ந்து கவனித்த போது அதற்கு அப்பாலும் மனித குரல்கள் ஒலித்ததை கேட்டான்.

ஒரு நாள் தன் தேரோட்டியை மடக்கினான் சித்தார்த்தன். "சென்னா, நீ எங்கே அடிக்கடி காணமல் போய் விடுகிறாய்? நேற்றுக் கூட உன்னைத் தேடினேனே,எங்கே போய் விடுகிறாய், சொல்" என்றான். அதற்கு தேரோட்டியோ, " நான் எங்கே போய் விட போகிறேன், இங்கே தான் இருக்கிறேன்" என்றான். " இல்லை நீ பொய் சொல்லாதே, நான் சின்ன குழந்தையல்ல, நீ சொல்வதை கேட்டுக் கொள்ள, எனக்கு தெரியும், நீ எங்கோ இந்த உலகுக்கு அப்பால் போய் வருகிறாய்." என்றான். "உலகுக்கு அப்பாலா!" தேரோட்டிக்கு ஆச்சரியமான ஆச்சர்யம். இளவரசர் இந்த அரண்மனையும் இந்த சின்ன வெளியையுமா உலகம் என நம்பிக் கொண்டு இருக்கிறார், கடவுளே, சித்தார்த்தன் விடவில்லை, "சென்னா, அதோ அந்த பறவைகளை பார், அவை எங்கோ அந்த சுவருக்கு பின்னால் சென்று மறைகின்றன, அங்கே என்ன இருக்கிறது, நீயும் அங்கே தான் சென்று வருகிறாய், சொல், அங்கே என்ன இருக்கிறது, என்னையும் அங்கே கூட்டி செல்" என்றான். சென்னாவும் சம்மதித்தான்.

மறுநாள் சித்தார்த்தன் தேரோட்டி சின்னாவின் உதவியுடன் அரண்மனைக்கு வெளியே வந்தான். வந்தவன் எங்கெங்கும் விரவிக் கிடந்த பெருநிலத்தை கண்டான். தேங்காமல் ஓடி வந்த தென்றற்காற்றை உணர்ந்தான். விரைந்து சென்றுக் கொண்டு இருக்கும் மக்கள் கூட்டம். விரிந்து கிடக்கும் பச்சை பசேல் வயல்கள், நெடுநெடு ஏரிகள், வாத்துக் கூட்டங்களை, வானத்தை முகர்ந்து நிற்கும் மலை முகடுகள். திறந்த கண்ணும் வாயும் மூடாமல் பார்த்தது பார்த்தப்படி தேரில் முனையில் நின்றுக் கொண்டு '' என்று பார்த்துக் கொண்டு வந்தான். தேரோட்டி சென்னா சொன்னான். " போதுமா இளவரசே, திரும்பி விடலாமா?", "இல்லை, இன்னும் போ, அந்த கடைசி மரத்தை வரை பாப்போம்." தேர் விரைந்தது. அந்த கடைசி மரம் கடைசியில்லை, அதற்கு அப்பாலும் மரங்கள் வந்துக் கொண்டே இருந்தன. சித்தார்த்தன் வியந்தான். "இன்னும் போ, இன்னும் போ, " என்றான். தேரோட்டி "போதும் இளவரசே, குதிரைகள் களைத்து விட்டன, திரும்புவோம்." என்றான். அப்படியானால் குதிரைகளை கொஞ்சம் களைப்பாற்று. நான் சிறிது தூரம் நடந்து செல்கிறேன்" என்று சொல்லி தேரை விட்டு இறங்கியே விட்டான் சித்தார்த்தன். குதிரைகளை அவிழ்த்து விட்டு புல் மேய விட்ட சின்னா பின்னாலையே ஓடி வந்தான். சிறிது தூரத்தில்;. ஒருவர் மரத்தடியே அமர்ந்துக் கொண்டு பிட்சைக்காக கை ஏந்திக் கொண்டு இருந்தார். அதுக கண்ட சித்தார்த்தன் சின்னாவிடம் கேட்டான், "இவர் யார், இங்கே ஏன் அமர்ந்துக் கொண்டு ஏதோ கேட்பவர் போல் இருக்கிறார்?", "இளவரசே, இவன் ஒரு பிச்சைக் காரன், சிலர் இவனை ஞானி என்றும் சொல்கிறார்கள், இவன் மற்றவர் தருவதை உண்டு உயிர் வாழ்கிறார்" என்றான். அந்த உலகம் அறிய இளவரசு, மேலும் கேட்டான், "இவர் சொந்தங்கள், சொத்துக்கள் மாளிகைகள் எல்லாம் எங்கே இருக்கின்றன, இவர் இங்கு இருக்க காரணம் என்ன?" , இவனுக்கு அப்படியெல்லாம் ஏதும் இல்லை, இளவரசே, இவன் ஒரு தனிக்கட்டை" ,.
" இவர் எங்கே தங்குவார்?" , "இவன் இங்கேயே தங்குவான் இளவரசே" என்றான் சென்னார். சித்தார்த்தன் தன வாழ்க்கையில் முதல் முறையாக முகம்மாறி விழிக்க ஆரம்பித்தான்.

இவ்வாறு சித்தார்த்தன் வெளியே அடிக்கடி வர ஆரம்பித்தான். தந்தைக்கும் விசயம் தெரிந்தது. ஆனால் ஜோசியர்கள் குறித்த காலம் தாண்டிவிட்டதே என்று அவரே அனுமதித்தார். ஓரு நாள் தன் தேரோட்டி சின்னாவுடன் பக்கத்து கிராமத்துக்கு ஒரு விழாவுக்கு சென்று கொண்டிருந்தனர்.

ஆப்போது அவ்வ‌ழியே ஒரு மிகவும் முதிய‌வ‌ர் க‌ம்பு ஊன்றிக்கொண்டு சென்றார், அதை பார்த்த‌ சித்தார்த்தன் யார் இவ‌ர்? இப்ப‌டியும் ம‌னித‌ர்க‌ள் உண்டா? என்று கேட்டான். அத‌ற்க்கு சின்னா, இளவரசே, இவர் ஒரு முதிய‌வ‌ர் வ‌ய‌து தொண்ணூற்றுக்கு மேல் என்றான்? இதே போல் நாமும் ஒரு நாள் முதுமை அடைவோம் என்றான். உட‌னே சின்னா தேரை திருப்பு அரண்மணைக்கு நான் இப்போதே முதுமை அடைந்துவிட்டேன் என்றான். இல்லை அர‌சே ந‌ம‌க்காக விழாவில் ப‌ல‌ர் காத்துக்கொண்டு இருக்கிறார்க‌ள் நாம் போய்விட்டு திரும்புவோம் என்று கூறி அழைத்து சென்றான்.

மேலும் சிறிது தூர‌ம் சென்ற‌வுட‌ன் ஒருவ‌ரை ப‌டுக்க‌வைத்து நான்கு பேர் தூக்கிகொண்டு செல்வ‌தை பார்த்தார். யார் அது? ஏன் ஒரு ம‌னித‌ரை படுக்க‌வைத்து தூக்கி செல்கின்ற‌ன‌ர் என்று கேட்டார்? அத‌ற்க்கு சின்னா, இளவரசே, இது ஒரு சவம், உயிர் பிரிந்த பின் இந்த உடலுக்கு பெயர் சவம். இயங்காது இதே போல் நாமும் ஒரு நாள் மரணமடைவோம் என்றான். உட‌னே சின்னா தேரை திருப்பு அரண்மணைக்கு நான் இப்போதே மரணமடைந்துவிட்டேன் என்றான். இல்லை அர‌சே ந‌ம‌க்காக விழாவில் ப‌ல‌ர் காத்துக்கொண்டு இருக்கிறார்க‌ள் நாம் போய்விட்டு திரும்புவோம் என்று கூறி அழைத்து சென்றான்.

க‌டைசியில் அந்த‌ விழாவுக்கு சென்று திரும்பின‌ர். திரும்பி வ‌ந்த‌பின் அர‌ண்ம‌ணையில் உள்ள‌ ம‌ற்றும் நாட்டிலுள்ள‌ அனைத்து ம‌கான்க‌ளிட‌மும் அறிவாளிக‌ளிட‌மும் அந்த சில‌ கேள்விக‌ளை சித்தார்த்தன் கேட்டான் யாரும் அவ‌ருக்கு திருப்தியாக‌ ப‌திள் அளிக்க‌வில்லை. ஓரு நாள் அர‌ண்ம‌ணையை விட்டு அந்த‌ கேள்விகளுட‌ன் புற‌ப்ப‌ட்டான், காடு, மேடெல்லாம் அலைந்தான். தீட்சை பெற்றான், போதி ம‌ர‌த்த‌டியில் அம‌ர்ந்து அந்த‌ கேள்விக‌ளுக்கு விடைக‌ண்டுபிடித்தான். ஞான‌ம் பிற‌ந்த‌து.............. அந்த‌ கேள்விக‌ள்


1) உயிர் என்ப‌து என்ன‌? அல்ல‌து எது?
2) முதுமை ஏன் வ‌ருகிற‌து?
3) ம‌ர‌ண‌ம் ஏன் வ‌ருகிற‌து? அல்ல‌து என்ன‌?
4? க‌ட‌வுள் என்ப‌து யார்? அல்ல‌து எது?