Showing posts with label அச்சம். Show all posts
Showing posts with label அச்சம். Show all posts

Friday, June 17, 2011

அதிர்ச்சி மரணம்? ஆனந்தம்


      மனிதனுக்கு ஆக்க வாழ்வுக்காக நமது முன்னோர்கள் அமைத்துக் கொடுத்திருக்கும் இன்றியமையாத தேவைகள் நான்கு 1. அறம் 2. பொருள் 3. இன்பம் 4. வீடு பேறு. அறவழியில் பொருளீட்டி அதன் மூலம் இன்பம் துய்த்தால், தானாகவே அறிவு தடையற்ற வளர்ச்சி பெற்று முழுமைப்பேறாகிய வீடுபேறு கிட்டும். எனவே மனிதன் செய்யும் தொழில் இந்த நான்கில் ஒன்றைக் குறி வைத்துச் செயல்புரியும்போது மற்ற மூன்றும் சிறிதும் கெடாதவாறு காத்து விழிப்பு நிலையில் ஆற்ற வேண்டும். இந்த முறையில் தான் மனித வாழ்வு கெடாமலும் சீர்குலையாமலும் இனிமை காக்கப்படும்.
      அறம் என்றால் உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஒழுக்கம், கடமை, ஈகையெனும் மூன்றுறுப்புக்கள் ஒன்றிணைந்த எந்தச் செயலும் அறமேயாகும். இல்ல‌றவாழ்வில் பொருளீட்டி வாழ்வது மனிதனுக்குள்ள இயல்பான ஆற்றல்தான். இதனை அறவ‌ழியில் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அறநெறி இயல்பாகவும் எளிதாகவும் அமைந்து விடும். அறவழியில் பொருளீட்டி வாழ்வை நடத்தி மிஞ்சிய பொருளைச் சேர்த்து வைப்பதும் மனித சமுதாயச் சூழ்நிலையில் ஒப்புக் கொள்ளப்பட்ட நீதியேயாகும்.
      மரணம் நெருங்கும்போது அறவழியில் ஈட்டிப் பொருள் சேர்த்து வைப்பவரிடம் அறிவில் ஒரு தெளிவு பிறக்கிறது. அவன் சேர்த்து வைத்திருக்கும் பொருள் தனக்குப் பின்னால் நல்ல வழியில் மனித சமுதாயத்திற்கும் பயன்பட வழி வகுத்து விடுகிறான். பொருள்பற்று என்ற தளையிலிருந்து தன்னைத்தானே விடுவித்துக் கொள்கிறான். அந்த அளவிற்கு அருள் பற்று மலர்ந்து விடுகிறது. மனம் இனிமையான அமைதியில் இணைகிறது. மரணம் நெருங்க நெருங்க அந்த இன்ப வெள்ளத்திலேயே மிதந்து கொண்டு இறைநிலையோடு கலந்து விடுகிறான். அறநெறி மறந்து பொருள் சேர்த்தவன் மரணம் நெருங்கும் போது அப்பொருளை எண்ணி வருந்துகிறான். இவ்வளவு பொருளையும் தவிர்க்க முடியாமல் விட்டு விட்டுப் போக வேண்டியிருக்கிறதே என்று மனம் கலக்கம் அடைகிறான். அறிவில் இருள் சூழ்ந்து கொள்கிறது. மரணம் நெருங்க நெருங்க நிமிடந்தோறும் அதிர்ச்சியோடு அச்சப்படுகிறான்.
      இந்த அச்சத்தின் அதிர்ச்சியோடு அமைதியற்ற மரணம் அடைகிறான். பொருள்பற்று என்ற இருளிலிருந்து அவனால் மீள முடியவில்லை. அந்தோபரிதாபம் இவன் சேர்த்து வைத்த பொருளோ அறம் தெரியாத குருடர்களிடமே சேருகிறது. சூது, குடி, விபசாரம் என்னும் மூன்று வழியில் இந்தப் பொருள்கள் அனைத்தும் சூரை விடப்படுகிறது. சூரை விடுபவர்களும் அவர்கள் புரியும் பாவச் செயல்களால் தீவினைப் பதிவுகளை ஏற்றுத் தலைமுறை தலைமுறையாக உடல், மனநோய்களில் சிக்கித் தவிக்கிறார்கள் எனவே அன்பர்களே அறவழியில் பொருளீட்டுங்கள். பொருள் செழிப்பு நிச்சயமாக உண்டாகும். மீதமுள்ள பொருளில் ஈட்டும் போதே பிறர் நலத்துக்காக ஒரு சதவீதம் ஒதுக்கிச் செலவு செய்து பழகிக் கொண்டு எஞ்சிய பொருளை நல்ல முறையில் பங்கிட்டுக் கொடுங்கள். எப்போதும் மனம் பளுவற்றதாகவும் இனிமையாகவும், அமைதியாகவும் இருக்கும். நிலையான வாழ்வு பெறலாம். நீங்கள் விட்டுச் செல்லும் பொருள்கள் பலருக்கும் நலமளிக்கும் வழியில் செலவாகும் அதன் பயன் இன்பம் இன்பம் இன்பம்.
---------------------------------யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி--------------------------------

Friday, November 19, 2010

அச்சம் தவிர்த்தால் ஆனந்தம்:

            “நான் வண்டி ஓட்டும்போதெல்லாம் விபத்தில் சிக்கப்போகிறேன் என்கிற ஒருவித பயம் எழுகிறது, என்ன செய்ய?"
      ஆபத்து என்று பயந்து எதைச் செய்யாமல் விட முடியும்?
      அறையில் உட்கார்ந்திருந்தாலும் சுழலும் மின்விசிறி திடீரென்று கழன்று உங்கள் தலை மேலே விழலாம். சுவிட்சை போடும்போது மின்சாரம் தாக்கலாம். மழைகாலத்தில் இடி விழுந்து பொசுக்கலாம். வாழ்க்கையில் எதில்தான் ஆபத்தில்லை?
      வாகனத்தை சாலையில் செலுத்தும் முன், அது எப்படி வேலை செய்கிறது என்று அறிந்து கொள்ளுங்கள், அதை சீராக செலுத்தும் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். சாலை விதிகளை மீறாமல், போக்குவரத்தை மதியுங்கள்.
      வாகனத்தை செலுத்தும் போது, வேறு சிந்தனையில் மூழ்கிப்போகாமல், செல்போன் பேசிக்கொண்டு இராமல், வாகனத்தின் மீதே முழுகவனம் செலுத்தி ஒட்டுங்கள், எப்படி விபத்து நேரும்? செய்யும் வேலையை முழுகவனத்தோடு செய்தால் எதற்கு பயம்?
      வாகனம் ஓட்டும் போது, இயல்பாக எழும் அச்சத்தை எவ்வாறு அடக்குவது?
      அச்சத்தை அடக்குவது என்றால் என்ன? அதன் மீது எறி உட்கார்ந்து கொள்வதா? அப்படி அதை அசைய விடாமல் அதன் மீது அழுத்தி உட்கார்ந்து கொண்டால், என்ன ஆகும்? அதனுடன் நீங்கள் தீராத உடன்படிக்கை போட்டுக்கொண்டவராகி விடுவீர்கள். எப்போது நீங்கள் அசைந்தாலும், அது விருட்டென்று நழுவி வெளியே வரப்பார்க்கும். நீங்கள் எழுந்து நின்றால், அது வான்வரை வளர்ந்து, பூதாகரமாக எழுந்து நின்று, படமெடுத்து ஆடும்.
ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது….
      ஓர் அமெரிக்க பெண்மணி சென்னைக்கு சுற்றுலா வந்திருந்தார். சென்னையின் ஆட்டோக்களால் கவரப்பட்டு, அதில் ஒரு ஆட்டோவில் எறி உட்கார்ந்தார், தான் செல்ல வேண்டிய இடத்தை சொன்னார்.
      உடனே ஆட்டோ பந்தய வேகத்தில் சீறிப் புறப்பட்டது. சென்னையின் நெரிசலான போக்குவரத்தினுடையே அந்த ஆட்டோ சடார் சடார் என்று புகுந்து விரைய, அமெரிக்க பெண்மணி பயத்தில் வீறிட்டார்.
      ஒரு திருப்பத்தில் இரண்டு லாரிகள் ஒரு குறுகளான தெருவில் ஒன்றை ஒன்று முந்திய படி தெருவையே அடைத்தபடி வர, அவள் நெஞ்சைக் கையில் பிடித்துக்கொண்டு, ஆட்டோவை நிறுத்தச் சொல்லி கதறினார்.
      ஆனாலும் சற்றும் வேகம் குறையாமல், அந்த ஆட்டோ இரண்டு லாரிகளுக்கிடையே புகுந்து விரைந்தது. காற்றை அதிரடித்து விரைந்து திருப்பி அவர் குறிப்பிட்ட முகவரியில் வந்து நின்றது.
      அந்த அமெரிக்க பெண்மணி அச்சத்தில் நடுங்கியபடி, "லாரிகளுக்கு நடுவில் அவ்வளவு சிறிய இடை வெளியில் எவ்வாறு உன்னால் தைரியமாக‌ வண்டியை செலுத்த முடிந்தது" என்று கேட்டாள்.
            “தைரியமாவது.... அந்த மாதிரி ஆபத்தான சமயங்களில் பயப்படக்கூடாது என்று என் கண்களை இறுக்க மூடிக்கொண்டு விடுவேன்" என்றார் ஆட்டோ டிரைவர்.
      கண்களை இறுக்க மூடிக்கொண்டு விட்டால், அச்சம் அகன்று விடுமா? முதலில் அச்சம் என்பது அகற்றப்பட வேண்டியதோ, அடக்கப்பட வேண்டியதோ இல்லை;
      அச்சம் என்பதே ஓர் அர்தமற்ற உணர்வு என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
      அச்சம் என்பது அடுத்த கனத்தைப் பற்றியது தானே. அடுத்த கனம் என்பது இன்னும் உங்கள் அனுபவத்தில் வராத ஒரு கற்பனை. அப்படியானால் அச்சம் என்பதும் கற்பனை தானே? இந்த கனம் பற்றிய கவனம் மட்டும் இருந்தால், அந்த அனாவசிய கற்பனைகள் உங்களை ஏன் வதைக்கப் போகின்றன?
      உண்மையில், தைரியம் அற்றவர்கள், வாகனத்தை செலுத்துவது மற்றவர்களுக்கு தான் ஆபத்து! உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லையென்றால், பேச்சாமல் பொது வாகனங்களில் செல்லுங்கள். உங்கள் வாகனத்தால் சுற்றுப்புற சூழலுக்கும் ஆபத்தில்லை. எரிபொருள் தட்டுப்பாட்டை கணக்கில் கொண்டால் அது நாட்டுக்கும் நல்லது தானே.
      உங்கள் கற்பனை அச்சத்தால் வாழ்க்கையை வீணடிக்காதீர்கள், இந்தகனம் மட்டும் வாழ்ந்து ஆனந்த்தை பருகுங்கள், ஆனந்தமாக வாழுங்கள்..
வாழ்க வளமுடன்!

Tuesday, November 9, 2010

ஆனந்தமாக செயலாற்றுங்கள்:

      உங்களுடைய ஆசை என்ன? எதைத்தொட்டாலும் வெற்றி கிடைக்கவேண்டும் என்பது தானே.
     மேல்நாட்டு உளவியல் நிபுணர்கள் என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள், 'ஜெயிக்கவேண்டும், ஜெயிக்கவேண்டும் என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். வெற்றியை குறிவைத்தே உங்களுடைய ஒவ்வொரு செயலும் இருக்கட்டும்' என்கிறார்கள்.
     பெரும்பாலும் இந்த முயற்சி உங்கள் ரத்தக் கொதிப்பை தான் அதிகரிக்கும், ஏன்?  
  வெற்றியையே நினைத்து உழைத்தால், அது கிடைக்குமா கிடைக்காதா என்ற சந்தேகத்தில் படபடப்பு, அச்சம், கவலை, மனஉளைச்சல் என்று ஏராள‌மான பிசாசுகள் உங்கள் மீது வந்து ஏறிக்கொள்ளும்.
     இலக்கின் மீது ஒரு கண்ணை பதித்துக்கொண்டால், அவன் பாதிக்குருடனாகி விடுகிறான் என்கிறது, ஜென் தத்துவம். மிச்சமிருக்கும் ஒரு கண்ணை வைத்துக்கொண்டு எவ்வளவுதூரம் செயலாற்ற முடியும்.

     அப்படி அரைகுறை கவனத்துடன் செயலாற்றாதீர்கள். இந்த கனம் செய்ய வேண்டியதை இரண்டு கண்களையும் பயன்படுத்தி முழுமையாகச் செய்யுங்கள். எட்டிப்பிடிக்க வேண்டிய அவசியமில்லாமல், வெற்றி இலக்கை சுலபமாக தொட்டு விடமுடியும்.
     நீங்கள் கவனமாக உழைக்க வேண்டுமே தவிர, கடுமையாக உழைக்கத் தேவையில்லை. இதை விளக்க ஜென்னில் ஒரு அருமையான சம்பவம் உண்டு...
     சான்ஸு என்ற ஒரு ஜென் குரு இருந்தார், மிகச்சிறந்த வாள் வீரர். அவரிடம் ஒரு புதிய சீடன் சேர்ந்தான். 'இந்த நாட்டிலேயே ஒரு சிறந்த வாள் வீரனாக என்னை ஆக்க முடியுமா?' என்றான்.
     ' அதற்கென்ன பத்து வருடங்களில் உன்னை தயார் செய்துவிடுகிறேன்' என்றார் குரு. 'என்னது பத்து வருடங்களா? ஐந்தே வருடங்களில் சாதிக்க வேண்டும் குருவே, மற்றவர்களை விட இரண்டு பங்கு அதிகமாக உழைக்கத் தயாராக இருக்கிறேன்.'
'அப்படியானால் இருபது வருடங்களாகும்என்றார், சான்ஸு.

     சீடன் திகைத்தான், 'போதாது என்றால், இன்னும் நான்கு பங்கு உழைக்கத்தயாராக இருக்கிறேன்' என்றான்.
     'அப்படி செய்தால், நாற்பது வருடஙளாகுமே' என்றார் குரு. ஆம் உங்களை வருத்திக்கொள்ள வருத்திக்கொள்ள‍, நீங்கள் நினத்ததை அடைய இன்னும் அதிக காலமாகும். அதைத்தான் சன்ஸு அந்த சீடனுக்கு புரியவைத்தார்.
     கடுமையாக உழைப்பவர்கள் சில சமயம் வெற்றி பெறலாம். ஆனால் அதன் சந்தோசத்தை அனுபவிக்க முடியாது.
     உலகின் மிக அற்புதமான கண்டுபிடிப்புகள், விஞ்ஞானிகள் ஓய்வாக இருந்த‌ போதுதான் நிகழ்ந்திருக்கின்றன. மரத்தடியில் சும்மா உட்கார்ந்திருந்த போது தான், ஆப்பிள் விழுவதைக் கவனித்தார் ஐசக் நியுட்டன். புவியீர்ப்பு பற்றிய விதியை கண்டுபித்தார்.
     'பாத் டப்'பில் ஓய்வாக குளித்துக் கொண்டிருந்தபோது தான், மிதப்பது பற்றிய விதிகளை கண்டுணர்ந்தார், ஆர்கிமிடீஸ்.
     டென்சனில்லாமல், ரசித்து முழு ஈடுபாட்டுடன் பணிகளை செய்யும் போதுதான், மூளை அதன் உச்சத் திறனுடன் வேலை செய்யும்.

     கவனித்து பாருங்கள், விளையாட்டில் கூட, வெற்றியை நினைத்து அதிக படபட‌ப்புடன் விளையாடும் குழு தான் தோற்கிறது. விளையாட்டை அனுபவித்து ஆடுபவர்கள் வெற்றி பெறுவார்கள்.
     வெற்றி...வெற்றி... என்று உங்களை நீங்களே வருத்திக்கொள்ளும் சந்தர்ப்பங்களில் உடலள‌விலும், மனதளவிலும் நீங்கள் பலவீனமாகிப் போவீர்கள்.
     வெற்றியை பற்றிய அச்சத்தை விட்டுவிட்டு, மனதை அமைதியாக வைத்திருங்கள், உடல் தானாகவே வேகமாக உழைக்கும்.
     ஆனால், உங்களில் பெரும்பாலானவர்கள் நேரெதிராக அல்லவா இருக்கிறீர்கள், உங்கள் மனம் நிலையில்லாமல் வேகமாக இயங்கிக்கொண்டிருக்கிறது, அதனால் உடலின் வேகம் குறைந்துவிடுகிறது.
     இப்படித்தான் சங்கரபிள்ளையின் வாழ்கையில் ஒரு வேடிக்கை நடந்தது.
     'ஒரு வேலையை, மாலையில் வீட்டுக்குப் போனதும் மறக்காமல் செய்யவேண்டும்' என்று  கைக்குட்டையில் ஒரு முடிச்சுப் போட்டுக்கொண்டார்.
     ஆனால், 'வீட்டுக்குப் போனதும் எதற்காக அந்த‌ முடிச்சுப் போட்டுக்கொண்டோம் என்பது அவருக்கு சுத்தமாக மறந்துவிட்டது.
     படபடப்பானார், மூளையை கசக்கினார், மொட்டை மாடியில் உலாத்தினார், நெற்றியில் தட்டிக்கொண்டார், நோட்டில் என்னென்னவோ கிறுக்கினார்.... உஹூம் நினைவுக்கு வரவேஇல்லை.
     'பேசாமல் படுத்தூங்குங்கள், எதுவாக இருந்தாலும் நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம்' என்று அவர் மனைவி அறிவுரை சொன்னார்.
     'மாட்டேன், எதாவது முக்கியமன விசயமாக இருக்கும், எப்படி தூங்குவது' என்று படுக்கையில் உட்கார்ந்தே இருந்தார்.
     இதுவா, அதுவா என்று மண்டைக்குள் நூறாயிரம் யோசனைகள் போச்சி மாதிரி பறந்தன. கடைசியில் இரண்டு மணிக்கு சலித்துப் போய் கைக்குட்டையை தூக்கி தூர எறிந்தார், சடக்கென ஞாபத்துக்கு வந்தது.
     ' இன்றைக்கு ஒண்பது ம்ணிக்கே தூங்கப் போகவேண்டும்' என்று நினைவுபடுத்திக்கொள்ள‌ போடப்பட்ட முடிச்சு அது.
     படபடப்பாக‌ மூளையை இயங்க விட்டால், சங்கரன்பிள்ளைக்கு நேர்ந்தது தான் உங்களுக்கு நேரும்.
     முடிவைப்பற்றிய கவலையை விடுங்கள், ஒவ்வொரு முறையும் முழுமையான ஆனந்தமான ஈடுபாட்டுடன் செயலாற்றுங்கள், வெற்றி தானாக உங்கள் கதவைத் தட்டும்….