Monday, June 27, 2011

கனவுகள் ஆனந்தம்

      இளமையாய் இருக்கும்போது எல்லோருக்குமே நிறைய கனவுகள் இருக்கும். சில லட்சியங்கள், எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்பது பற்றிய கற்பனைகள், வாழ்க்கையை எந்தவிதத்தில் அமைத்துக்கொள்ளலாம். என்பதைப்பற்றிய எண்ணங்கள் என நிறைய கனவுகள் இருக்கும். ஆனால், எல்லோருக்கும் அதே மாதிரியான கனவுகள் ஏற்படுவதில்லை. ஏனெனில் கனவு காண்பதற்குக்கூட கொஞ்சம் துணிச்சல் வேண் டும். நிறைய பேர் தங்கள் கனவுகள் நனவாகுமோ இல்லையோ என்கிற அச்சத்திலேயே கனவு காண்பதை நிறுத்திக்கொண்டு விட்டார்கள். 18லிருந்து 20 வயது வரை பார்த்தால் மிகப்பெரிய லட்சியக் கனவுகள் மனதுக்குள் குடிகொண்டிருக்கும். 25 வயது எட்டுவதற்குள் அவர்கள் தங்கள் கனவுகளை
      சராசரி தேவைகளாக சுருக்கிக்கொண்டு விடுகிறார்கள். அதுவும் அவரவர், அவரவரின் தனிப்பட்ட ஆசைகளைச் சார்ந்த தேவைகளாகவே இருக்கிறது. அவர்களைக் கேட்டால், "இதுதான் யாதார்த்தம்' என்று சொல்வார்கள். இதன் பெயர் யதார்த்தம் அல்ல. கோழைத்தனம். கனவுகளை நனவாக்கத் தெரியாத கோழைத்தனம்.35 வயதாகும்போது நிறைய பேரிடம் கனவுகளே இருப்பதில்லை. தொந்தரவு இல்லாமல் வாழ்ந்தால் போதும் என்கிற நிலைக்கு வந்துவிடுகிறார்கள். ஒரு தலைமுறை, கனவுகளை இழக்கிறபோது, எத்தனைதான் நற்பணிகள் செய்தாலும் அவற்றின் பயனை யாரும் அனுபவிக்க முடியாது. நீங்கள் எந்த ஒரு சமூகத்தையும், நாட்டையும் பாருங்கள். மனதில் மிக வலிமையான கனவுகளை சுமந்துகொண்டு வாழ்ந்தவர்களின் வாழ்க்கைதான் தீவிரத் தன்மையும் அர்த்தமும் நிறைந்ததாக இருக்கிறது. அவர்களிடம் ஒரு மகத்தான சக்தி இருந்திருக்கிறது. நமது நாட்டிலேயே சில ஆண்டுகளுக்கு முன்பு எத்தனையோ பேர் இந்த நாட்டிற்காக தங்கள் உயிரை துச்சமாக மதித்து தூக்கி எறிய தயாராக இருந்தார்கள். ஏனெனில் சுதந்திர இந்தியா பற்றி அவ்வளவு வலிமையான கனவு அவர்களுக்கு இருந்தது.
      உங்களுடைய கனவுகளையும் நினைத்துப்பாருங்கள். உங்களில் ஒருவருக்கொருவர் காணுகிற கனவுகளில் அப்படியொன்றும் பெரிய வேறுபாடு கிடையாது. தனிப்பட்ட சுயநலத்தை தள்ளிவிட்டுப் பார்த்தால் எல்லோருடைய கனவுகளின் அடிப்படையும் ஏறக்குறைய ஒன்றாகவே இருக்கிறது. உங்களுடைய கனவு, அவருடைய னவு, இன்னொருவருடைய கனவு... இதற்கெல்லாம் பெரிய வேறுபாடு இல்லை.இன்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பணிகளைச் செய்து வருகிறீர்கள். சிலபேர் படிக்கிறார்கள். சிலர் திருமணம் செய்துகொள்கிறார்கள். சிலர் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இவற்றைச் செய்வதெல்லாம் மகிழ்ச்சிக்காகத்தான். மகிழ்ச்சிக்கு இதுதான் வழி என்று ஒவ்வொருவரும் அவரவருக்கு பிடித்த
காரியங்களை செய்கிறார்கள். அப்படியானால் ஒவ்வொரு மனிதரும்
மகிழ்ச்சியாக இருக்கத்தான் விரும்புகிறார்கள் இல்லையா... இப்போது மகிழ்ச்சிக்காக நீங்கள் பின்பற்றுகிற வழிகள் எல்லாம் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் அடிப்படையில் அனைவரும் தேடுவது மகிழ்ச்சிதான்.

      எனவே "மகிழ்ச்சி' என்ற பொதுவான கனவு எல்லோருக்கும் தேவையாய் இருக்கிறது. அன்பு எல்லோருக்கும் தேவையாய் இருக்கிறது. ஆனால் இந்த கனவுகளை சின்னச்சின்ன ஆதாயங்களுக்காக அடைத்து வைத்து விடுகிறீர்கள். இந்தக் கனவுகளை எட்டுவது சாத்தியமில்லை என்றுகருதி, சின்னச்சின்ன சுய லாபங்களிலேயே அமைதி அடைந்துவிடுகிறீர்கள். இது வெறும் கோழைத்தனம். குறிப்பாக, இளமையில் கனவுகளை கைவிடலாகாது. கோழைத்தனம் கூடவே கூடாது. இளைஞர்களுக்கு இருக்கிற சக்திக்கு அவர்களை கோழைத்தனம் நெருங்கவே கூடாது. பல இளைஞர்கள் 18 வயதிலேயே வாழ்க்கை குறித்தும் மரணம் குறித்தும் 60 வயது ஆனவரைப் போல் அச்சப்படுகிறார்கள். எனக்கு இப்படி நடந்துவிட்டால் என்ன செய்வது, அப்படி நடந்துவிட்டால் என்ன செய்வது... என்றெல்லாம் கவலைப்படுகிறார்கள். எதுவுமே நிகழாவிட்டால் உங்களுக்கு வாழ்க்கை என்ற ஒன்றே இல்லை. வாழ்க்கை என்றால் ஏதாவது ஒன்று நிகழ்ந்தாக வேண்டும். எதிர்பாராத ஒன்று ஏற்படுமேயானால் அதற்குப் பெயர்தான்வாழ்க்கை.எனவே இன்றைய இளைஞர்களுக்கு வாழ்க்கை பற்றிய நம்பிக்கை, கனவுகள், லட்சியங்கள், அதே நேரம் அச்சம், பதட்டம் அனைத்தும் ஒன்றாக இருப்பதைப் பார்க்கிறோம்.
      இப்போது உங்களை நீங்களே சில கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் செய்ய விரும்புவதை, அது எதுவாக இருந்தாலும் சரி, அதனை முழுமையாக எவ்வளவு சிறப்பாக முடியுமோ, அவ்வளவு சிறப்பாக செய்ய முடியுமா என்று கேட்டுப் பாருங்கள். முதலில், நீங்கள் யார் என்றுகூட தெரிந்துகொள்ளாமல் என்ன செய்ய முடியும் என்பதை உணர்ந்து செயல்பட முடியுமா? இப்போது உங்களைப்பற்றி நீங்கள் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிற விஷயங்கள் அனைத்துமே, மற்றவரோடு ஒப்பிட்டு நீங்களே எடுத்திருக்கிற முடிவுகள்தான்.
      உதாரணத்திற்கு ""நான் உயரமானவன்'' என்று ஒருவர் சொல்கிறார் என்றால் தன்னைவிடகுள்ளமானவர்களோடு ஒப்பிடும்போது தான் உயரம் என்று சொல்கிறார். அவர் ஆறடி உயரம் இருக்கிறார் என்றால் அவரைச் சுற்றி இருப்பவர்கள் ஐந்தடி, ஐந்தரை அடி இருக்கலாம். ஏழடி உயரம் உள்ளவர்கள் அருகில்சென்றால் மிகவும் குள்ளமாக தன்னை உணர்வார். அப்படியானால் தன்னைப்பற்றி அவருக்கு இருந்த மதிப்பீடு ஒப்பீட்டில் விளைந்த மதிப்பீடே தவிர, உண்மையான மதிப்பீடு அல்ல.
      ஒவ்வொரு மனிதரும் தனக்குள்ளேயே ஒரு அற்புதத்தை நிகழ்த்துகிற வல்லமை படைத்தவர்கள். உங்களுக்குள் அது நிகழ்ந்துவிட்டால் கண்டிப்பாக வெளிச்சூழலிலும் அது நிகழ்ந்தே தீரும்.வாழ்க்கை முழுவதும் ஒருவர் கண்மூடி அமர்ந்துவிட்டால்கூட இந்த உலகத்தை அவரால் இன்னும் அழகாக்க முடியும். எனவே உள்நோக்கி பாருங்கள். உங்கள் உடலையும் மனதையும் மேல்நிலைக்கு கொண்டு செல்லுங்கள். இந்த உடலையும் மனதையும் முற்றிலும் புதிய பரிமாணத்திற்கு கொண்டுபோய் அவற்றை எப்படியெல்லாம் பயன்படுத்த முடியும் என்று பாருங்கள், ஆனந்தம் தொடரும்.

1 comment:

NADESAN said...

arumayana pathivu sir

Vazha Valamudan

Nellai P. Nadesan
dubai

Post a Comment