Wednesday, June 22, 2011

ஆன்மீகம் கல்வி ஆனந்தம்


      கடவுளைப் பற்றி நினைக்கிறீர்கள். உயிரைப் பற்றி நினைக்கிறீர்கள். உண்மையைப் பற்றி நினைக்கிறீர்கள். ஆனால், உங்கள் பார்வை மட்டும் வெளியுலகைப் பற்றியே இருக்கிறது. உலகம் எப்படி இருக்க வேண்டும் என்று பார்ப்பதற்கு முன்பாக, உங்களுக்குள் நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என பார்க்க வேண்டும். உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்காவிட்டால் உலகை அமைதியாக வைத்திருக்க முடியாது.
      வாழ்க்கை தற்செயலாகவோ மற்றொருவருடைய கருணையாலோ நடப்பது நல்லதல்ல. உங்கள் தெளிவினாலும் திறமையாலும் நடக்க வேண்டும்.
      கடந்த வினாடியை, இந்த வினாடிக்கு சுமந்து கொண்டு வராத மனிதர் தான் அனைத்திலிருந்தும் விடுபட்டு சுதந்திரமானவராக இருக்கிறார்.
      காலையில் கண் விழிப்பதிலிருந்து சிற்றுண்டி சாப்பிடுவது வரை பலர் போராட்டத்தின் உச்சியில் இருக்கின்றனர். வெறுமனே உங்கள் கணவன், மனைவி அல்லது குழந்தைகளைப் பார்க்காதீர்கள். அவர்களுடைய தந்திரங்கள் அனைத்தும் ஏற்கனவே உங்களுக்கு பழக்கமானவை, எதுவும் உங்களுக்குப் புதிதல்ல, அவர்களின் குணம் இன்னதென்று தெரிந்திருந்தும், காலை உணவை முடிப்பதற்குள்ளாக, போராட்டத்தின் உச்சிக்கே போய் விடுகிறீர்கள். நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை மனதின் கட்டுப்பாட்டில் விட்டுவிட்டால் பதட்டமாகத் தான் இருப்பீர்கள் என்பதை உணருங்கள்.
      எது மிக உயர்ந்ததோ அதைப் பெறுவதற்கான எண்ணத்திலேயே இருங்கள். அவ்வாறு இருந்தால், மனதிற்கு உள்நிலையிலும், வெளிநிலையிலும் தூய்மை தானாகவே கிடைக்கும்.
      மனம் என்பது எதையும் பாகுபடுத்தி பார்க்கும் தன்மையுடையது. இல்லையென்றால் மனதால் எந்த பயனும் இல்லை, மனம் எந்த வகையில் உங்களுக்குப் பயன்படக்கூடியது என்றால் எது நல்லது, எது கெட்டது, எது சரி, எது தவறு, என்பதை அது பகுத்துப்பார்ப்பதாக உள்ளது.
      எந்த மூலதனத்துடனும் உலகத்துக்கு நீங்கள் வரவில்லை. எனவே, உங்கள் வாழ்க்கையில் எது நடந்தாலும் லாபம் தான்.
      குழந்தைகளுக்கு எழுதப்படிக்க மட்டும் கற்றுக் கொடுக்காமல், மூளையை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
      பெரும்பாலான மக்கள் தங்கள் இயல்புப்படி வாழாமல், தங்கள் மேல் சுமத்தப்பட்ட கல்வியறிவின்படி வாழ்வதாலேயே, ஆன்மிகம் என்பது அவர்களது வாழ்வில் அதிதொலைவில் உள்ளது.
      கல்வியென்பது குழந்தைகளுக்கு திணிக்கப்பட்டதாக இல்லாமல், அறிந்துகொள்வதற்கான தாகத்தினை அதிகப்படுத்துவதாகவும், புத்திசாலித்தனம் குறைவுபடாமல் வளருமாறும் இருக்க வேண்டும்.
      உயிர்வாழ்வது மட்டும் நோக்கமாக இருந்தால் ஐம்புலன்கள் போதும். அதையும் கடந்த நிலைக்கு செல்லவேண்டுமானால், ஐம்புலன்கள் என்ற கருவிகள் உங்களுக்குப் போதாது.
      நாம் மட்டும் வாழ,நமக்கு நாமே செய்யும் செயல்களால் மட்டும் நம் வாழ்க்கை அழகாவதில்லை. நம்மைச் சூழ்ந்திருக்கும் அனைவரும் அவ்வாறு வாழ வேண்டும் என்று நினைக்கிற போது தான், அது அழகாகிறது.
      ஒரு காலத்தில் பணத்தை தேடுவீர்கள், ஒரு காலத்தில் சொந்த வீட்டைத் தேடுவீர்கள், ஒரு காலத்தில் அறிவைத் தேடுவீர்கள், தேடுகிற பொருட்கள் மாறுமே தவிர உங்கள் வாழ்க்கை மாறுவதில்லை. இத்தனையையும்தேடி வாழ்க்கையைவிட்டுவிடுகிறீர்கள்.இதை எப்படி அனுபவத்தில் உணர்கிறீர்கள்என்பதைப் பொறுத்தே வாழ்க்கையின் சாரம் இருக்கிறது.

No comments:

Post a Comment