Thursday, June 2, 2011

தோல்வி ஆனந்தம்


      ஒரு காரியத்தைச் சாதிக்க முற்பட்டு நீங்கள் தோல்வியடையும் ஒவ்வொரு முறையும் வெற்றிப்பாதையில் அடியெடுத்து வைக்கிறீர்கள் என்பதே உண்மை! நீங்கள் தடுமாறியபடி அடியெடுத்து வைத்திருக்கலாம். வெற்றி என்பது அநேகமாக முன்னோக்கித் தடுமாறி… முன்னோக்கி விழுந்து… விழும் போதெல்லாம் மீண்டும் எழுந்து கொள்வதைப் பொறுத்ததே!!! தோல்வி தவிர்க்க முடியாதது… அவசியமானது… உபயோகமானது… வெற்றியின் ஓர் அங்கமாக உள்ளது.
      வெற்றியிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளக்கூடிய பாடத்தைக் காட்டிலும் தோல்வியிலிருந்து கற்றுக் கொள்ளக்கூடிய பாடம் அதிகம். ஏனெனில் என்னென்ன செய்யக்கூடாது என்பதை தோல்வி உங்கள் மனத்தில் அழுத்தமாகப் பதித்து விடுகிறது. மறக்க முடியாதபடி பதித்து விடுகிறது. முதுகில் தட்டிக் கொடுக்கப்பட்டால் விரைவில் மறந்து போகும். கன்னத்தில் விழுந்த குத்து சீக்கிரத்தில் மறந்து போகாது. தோல்வியானது உங்களை வெற்றிக்குத் தயார்ப்படுத்துகிறது. இடுக்கண்களை வெல்வதற்குத் தேவையான பலத்தைக் கொடுக்கிறது. நீங்கள் வெற்றிகரமாகத் தோற்கக் கற்றுக் கொள்ள வேண்டும்! தோற்பதன் மூலம்தான் வெற்றி பெறுவது எப்படி என்று கற்றுக் கொள்ள இயலும். தோல்வி கற்றுத்தரும் விலை மதிப்பிட முடியாத பாடங்களைப் படித்துக் கொள்வது முக்கியமானது.
      எது செல்லுபடியாகாது என்று தோல்வி உங்களுக்குச் சொல்லித் தரும். போதுமான முறை தோல்வியடைந்தீர்களானால், எது எதெல்லாம் செல்லுபடியாகதோ அவை அனைத்தையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
      தோல்வியிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான பாடம் தோல்வியைச் சரியான முறையில் சந்திக்க உதவக்கூடிய உணர்ச்சிப் பக்குவம்தான்! தோல்வியை எப்படி ஏற்றுக் கொள்வது என்று தோல்வியே உங்களுக்குக் கற்றுத் தரும்!
      எதிரியின் குத்துக்கு இலக்காகாத அடியே வாங்காத குத்துச் சண்டை வீரர் யாரையாவது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
      கால்பந்து விளையாட்டில் ஒரு முறை கூடக் கோட்டைவிடாத கோல்கீப்பர் இருக்க முடியுமா?
      சந்தித்த ஒவ்வொருவரிடமும் வெற்றிகரமாக விற்பனை செய்த விற்பனையாளர் இருக்க முடியுமா?
      ஒவ்வொருமுறையும் நீங்கள் வெற்றியடைய வேண்டும் என்று கட்டாயமில்லை… கிட்டத்தட்ட எல்லா முயற்சிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்பதும் அவசியமில்லை.. போதிய முறை வெற்றியடைந்தாலே போதும். நீங்கள் விரும்பிய எதையும் அடைந்துவிடலாம்!
      “நீங்கள் தோல்வியின் மூலம் வெற்றி பெற முடியும்”.
      “சில முறையேனும் தோற்காமல் பெரிய வெற்றியை அடைவது என்பது இயலவே இயலாது”.
                     ஒன்றி புள்ளியாய் ஒடுங்கி நீ இரு,
                     அன்றி விரிந்திடில் ஆராய்ச்சியோடிரு,
                     நின்றிடு அகண்டாகார நிலையினில்
                     வென்றிடுவாய் புலன் ஐந்தையும் வெற்றியே.
         ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍            ---------------தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி---------------

1 comment:

rajamelaiyur said...

Very true statements

Post a Comment