Friday, September 23, 2011

நம்மை பற்றிய நமது கருத்து ஆனந்தம்


      ஓ-நமி – மாபெரும் அலைகள் என்று பொருள் – என்ற பெயர்கொண்ட ஒரு குத்துச் சண்டை வீரன் ஜப்பானில் இருந்தான். அவன் மிகவும் வலிமையானவன். மேலும் குத்துச்சண்டையில் மிகவும் ஆற்றல் படைத்தவனாக இருந்தான். தனிப்பட்ட முறையில், பள்ளியில் பயிலுகையில் அவன் தனது ஆசிரியரைக் கூட வீழ்த்திவிடுவான். ஆனால் பொதுமேடையில் அவனைவிடச் சிறியவர்கள் கூட அவனை தூக்கி வீசி விடுவர்.
      அவனது இந்த பிரச்சனைக்காக அவன் ஒரு ஜென் குருவிடம் சென்றான். அவரது குருகுலம் கடற்கரையோரம் இருந்தது.
      ஜென் குரு அவனிடம், மாபெரும் அலைகள் என்பது உனது பெயர். ஆகவே இந்த குருகுலத்தில் இன்றிரவு தங்கி கடலின் அலையோசையை கேள். உன்னை அந்த கடலின் அலை என நினைத்துக்கொள். நீ ஒரு குத்துச்சண்டை வீரன் என்பதை மறந்துவிட்டு அந்த கடலலை என எண்ணிக்கொள். அது எப்படி எது எதிரே வந்தாலும் அதை மூழ்கடிக்கிறதோ அது போல உன்னையும் நீ பெரும் அலை என எண்ணிக்கொள். என்றார்.
      ஓ-நமி அங்கே தங்கினான். அவன் அந்த அலையை நினைத்துப்பார்க்க முயன்றான். அவனுக்கு பல்வேறு விஷயங்கள் நினைவுக்கு வந்ததே தவிர அலையை மட்டும் அவனால் நினைக்க முடியவில்லை. பிறகு மெதுமெதுவாக அவன் அந்த அலைகளை மட்டுமே நினைத்தான். இரவு ஏறஏற அலைகள் மேலும் அளவில் பெரிதாகிக் கொண்டே வந்தன. முதலில் புத்தர் சிலைக்கு முன்னே இருந்த பாத்திரத்திலிருந்து பூக்களை கொண்டு சென்றது. பின் அந்த பாத்திரத்தையே கொண்டு சென்றது. பின் புத்தர் சிலையையே கொண்டு சென்றது. அதிகாலையில் அந்த குருகுலம் முழுமையும் நீரால் சூழப்பட்டு இருந்தது. ஓ-நமி முகத்தில் புன்னகையுடன் அங்கே அமர்ந்திருந்தான்.
      அன்று அவன் பொதுமேடையில் குத்துச்சண்டைக்கு சென்றான், வென்றான். அன்றிலிருந்து ஜப்பானில் யாராலும் அவனை வெல்ல முடிந்ததில்லை.
      இது நம்மை பற்றிய நமது கருத்தை எப்படி இழப்பது, எப்படி விடுவது, எப்படி அதிலிருந்து வெளியே வருவது என்பதைப் பற்றிய கதை.
      ஒவ்வொருவரும் அளவற்ற ஆற்றல் படைத்தவர்கள்தாம். உனக்கு உன் பலம் தெரியாது. அது வேறு விஷயம். ஒவ்வொருவரும் பலம் பொருந்தியவர்கள்தாம். அப்படித்தான் இருக்க வேண்டும். ஏனெனில் எல்லோரும் கடவுளிலிருந்து வந்தவர்கள்தான். ஒவ்வொருவரும் இந்த பிரபஞ்சத்திலிருந்து பிறந்தவர்கள்தான். நீ பார்ப்பதற்கு எவ்வளவு சிறியவனாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நீ சிறியவனல்ல. இருக்கவும் முடியாது. இயல்புப்படி அது அப்படி இருக்கமுடியாது. இப்போது பௌதீக விஞ்ஞானம் சின்னஞ்சிறு அணுவிற்குள் அதீத அளவு சக்தி இருக்கிறது என்று கூறுகிறது. ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்களும் அணுசக்தியால்தான் அழிக்கப்பட்டன. அணு மிகவும் சிறியது. யாராலும் அதைப்பார்க்க முடியாது. அது மிகச்சிறிய புள்ளி போன்றது. மிகவும் கடுகளவானது. இன்றைய விஞ்ஞானத்தால் கூட மிகப்பெரிதாக்கிக் காட்டும் கருவிகளின் உதவியால்தான் அதைப் பார்க்க முடிகிறது. ஆனால் அந்த அளவு சிறிய அணுவிற்கே அளவற்ற ஆற்றல் இருக்குமானால் மனிதனைப்பற்றி என்ன சொல்ல. மனிதனுக்குள்ளே உள்ள தன்ணுணர்வுச் சுடரைப்பற்றி என்ன சொல்ல. என்றாவது ஒருநாள் அந்தச்சுடர் மிகப் பெரிதாகி வெடிக்கும். அப்போது அளவற்ற ஆற்றலும் ஒளியும் வெளிப்பட்டே தீரும். அதுதான் ஒரு புத்தருக்கும், ஒரு ஜீஸஸூக்கும் நிகழ்ந்தது.
      இந்த சூத்திரத்தை நினைவில் கொள். நீ உன்னை நினைவில் கொள்ளும்போது கடவுளை மறந்து விடுகிறாய். நீ உன்னை மறந்துவிடும்போது நீ கடவுளை நினைவில் கொள்கிறாய். உன்னால் இரண்டையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. அலை தன்னை அலை என்று நினைவில் வைத்துக்கொள்ளும்போது, அது தான் கடல் என்பதை மறந்து விடுகிறது. அலை தன்னைக் கடலாக உணரும்போது, அது தான் அலை என்பதை எப்படி நினைவில்கொள்ள முடியும். ஏதாவது ஒன்றுதான் சாத்தியம். அலை தன்னை அலை அல்லது கடல் என ஏதாவது ஒன்றைத்தான் நினைவில் கொள்ள முடியும். அது ஒரு கண்கட்டி வித்தை. உன்னால் இரண்டையும் நினைவு கொள்ள முடியாது. அது சாத்தியமில்லை.
      தனிப்பட்ட முறையில் அவனால் தனது அகங்காரத்தை, தன்னை முழுமையாக மறந்துவிட முடியும். அப்போது அவன் மிகவும் ஆற்றல் உள்ளவனாய் இருக்கிறான். ஆனால் பொது மேடையில் அவன் தன்னை மிகவும் நினைவில் வைத்துக் கொள்கிறான். அப்போது அவன் பலவீனமடைந்து விடுகிறான். நான் – என்பதை நினைவில் வைத்துக் கொள்வது பலவீனம். நான் – என்று நினைவில் கொள்ளாமல் இருப்பது பலம்.
      அவனது இந்த பிரச்சனைக்காக அவன் ஒரு ஜென் குருவிடம் சென்றான். அவரது குருகுலம் கடற்கரையோரம் இருந்தது. ஜென் குரு அவனிடம், மாபெரும் அலைகள் என்பது உனது பெயர். ஆகவே இந்த குருகுலத்தில் இன்றிரவு தங்கி கடலின் அலையோசையை கேள்.....................
      ஒரு குரு என்பவர் ஒவ்வொருவருக்கும் ஏற்ற வழிமுறையை உருவாக்குபவர். ஒரு குரு என்பவர் குறிப்பிட்ட வழிமுறை ஏதும் இல்லாதவர். அவர் இந்த ஓ-நமி – மாபெரும் அலைகள் – என்ற மனிதனைப் பார்த்தார். அவனது பெயரிலிருந்தே அவனுக்கு ஒரு வழிமுறையை உருவாக்கிக் கொடுத்தார்.
      மாபெரும் அலைகள் என்பது உனது பெயர். ஆகவே இந்த குருகுலத்தில் இன்றிரவு தங்கி கடலின் அலையோசையை கேள்.....................
      கடவுளின் கோவிலுக்குள் நுழைவதற்கான அடிப்படை ரகசியங்களில் ஒன்று கவனிப்பது.கவனிப்பது என்றால் ஒன்றுவது. கவனிப்பது என்றால் உன்னை முற்றிலுமாக மறந்து விடுவது. அப்போது மட்டுமே உன்னால் கவனிக்க முடியும். யாரையாவது நீ கவனித்தால் அப்போது உன்னை நீ மறந்து விடுவாய். உன்னை உன்னால் மறக்கமுடியாவிட்டால் நீ கவனிக்கமாட்டாய். நீ உன்னைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தால் நீ கவனிப்பது போல பாசாங்குதான் செய்து கொண்டிருப்பாய். கவனிக்க மாட்டாய். நீ உனது தலையை ஆட்டிக் கொண்டிருப்பாய். ஆம் என்றோ இல்லை என்றோ சிறிது நேரத்திற்கொருமுறை சொல்லிக் கொண்டிருப்பாய். ஆனால் நீ கவனிக்கமாட்டாய்.
      கவனிக்கும்போது நீ வெறும் வழி போல, கருவறை போல, பெற்றுக் கொள்ளுதல் போல மாறி விடுகிறாய். ஒரு பெண்மை போலாகிவிடுகிறாய். மேலும் சென்றடைய ஒருவர் பெண்மைதன்மை அடைந்தாக வேண்டும். போராடிக்கொண்டு, சண்டையிட்டுக் கொண்டு நீ கடவுளை சென்றடைய முடியாது. நீ கடவுளை சென்றடைய வேண்டுமானால்.......அல்லது இப்படி சொன்னால் சரியாக இருக்கும். நீ பெற்றுக் கொள்பவனாக, பெண்மை தன்மையுடன் இருக்கும்போதுதான் கடவுள் உன்னை வந்தடைவார். நீ‍இன் என்பது போல, ஒரு பெறுபவனாக மாறும்போது கதவு திறக்கிறது. நீ காத்திருக்கிறாய்.
      பொறுமையாளனாக மாற கவனிப்பது உதவும். புத்தர் கவனிப்பதை மிகவும் வலியுறித்தினார். மகாவீரர் கவனிப்பதை மிகவும் வலியுறுத்தினார். கிருஷ்ணமூர்த்தி சரியான கவனித்தல் என்பதை திரும்ப திரும்ப கூறினார். காதுதள் அதன் சின்னம் போல உள்ளதை நீ கவனித்திருக்கிறாயா. உன்னுடைய காதுகள் வெறுமனே ஓட்டைகள் மட்டுமே. வழிதான். வேறெதுவும் இல்லை. உனது காதுகள் உனது கண்களை விட அதிகம் பெண்மையானவை. கண்கள் அதிக ஆண்மையானவை. காதுகள் – இன் – பாகம். கண்கள் – யாங் – பாகம். யாரையாவது பார்க்கும்போது நீ ஆக்கிரமிக்கிறாய். கேட்கும்போது நீ பெறுபவனாகிறாய்.
      அதனால்தான் யாரையாவது உற்றுப்பார்ப்பது நாகரீகமற்றதாக, வன்முறையானதாக மாறுகிறது. அதற்கு அளவு உள்ளது. மனோவியலார் மூன்று நிமிடங்கள் என்று கூறுகின்றனர். மூன்று நிமிடங்கள் ஒருவரை உற்று பார்த்தால் சரி, அதை தாங்கி கொள்ள முடியும். அதற்கு மேல் என்றால் நீ பார்க்கவில்லை. நீ உறுத்துகிறாய். அவரை நீ தண்டிக்கிறாய். நீ அத்துமீறுகிறாய்.
      ஆனால் கவனிப்பதற்கு எல்லை இல்லை. ஏனெனில் காதுகள் அத்து மீறுவதில்லை. அவை எங்கே உள்ளனவோ அங்கேயே இருக்கின்றன. கணகளுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. இரவில் கவனித்திருக்கிறாயா, கண்களுக்கு ஓய்வு தேவை. காதுகளுக்கு ஓய்வு தேவையில்லை. அவை 24 மணி நேரமும் திறந்திருக்கின்றன – வருடம் பூராவும். கண்கள் சில நிமிடங்கள் கூட திறந்திருப்பதில்லை. தொடர்ந்து சிமிட்டிக் கொண்டே இருக்கின்றன. தொடர்ந்து களைப்படைந்து கொண்டே இருக்கின்றன. ஆக்கிரமித்தல் களைப்படைய செய்யும். ஏனெனில் ஆக்கிரமித்தல் உனது சக்தியை வெளியே எடுக்கிறது. இதனால் கண்கள் ஓய்வெடுப்பதற்காக தொடர்ந்து சமிட்டிக் கொண்டே இருக்கின்றன. அது ஒரு தொடர் செயல். ஆனால் காதுகள் ஓய்வில்தான் இருக்கின்றன.
      அதனால்தான் பல மதங்களும் இசையை பிராத்தனைக்கு உபயோகிக்கின்றன. ஏனெனில் இசை உனது காதுகளை மேலும் துடிப்புள்ளதாக, மேலும் உணர்வுள்ளதாக ஆக்குகிறது. ஒருவர் காதுகளாக அதிக அளவிலும் கண்களாக குறைந்த அளவிலும் இருக்க வேண்டும்.
நீ உன்னுடைய அகங்காரத்தை விட்டுவிட்டால் எல்லா தோல்விகளையும் எல்லா விரக்திகளையும் எல்லா அவமானங்களையும் விட்டுவிட்டாய். அதை சுமந்து சென்றால் நீ தோல்வியில்தான் முட்டிக் கொள்ள வேண்டும். அந்த அகங்காரத்தை விட்டுவிடு. முடிவற்ற ஆற்றல் உன் மூலம் பெருகியோட ஆரம்பிக்கும். அந்த அகங்காரத்தை விடுவதன் மூலம் நீ நதியாகிறாய், நீ ஓட ஆரம்பிக்கிறாய், நீ கரைகிறாய், நீ பெருகியோடுகிறாய். – நீ உயிர் துடிப்புள்ளவனாகிறாய்.
      நீ உன் முயற்சிப்படி வாழ ஆரம்பத்தால் நீ மடத்தனம் செய்கிறாய். அது ஒரு மரத்தில் உள்ள இலை அதன் முயற்சிப்படி வாழ ஆரமபிப்பதை போன்றது. அது மட்டுமல்ல, அது மரத்துடன் சண்டையிடும், வேருடன் சண்டையிடும். இவை யாவும் அதற்கு கெடுதல் செய்வதாக நினைக்கும். நாம் ஒரு மிகப் பெரிய மரத்தில் உள்ள இலைகள்தான். அதை கடவுள் என்றோ, இயற்கை என்றோ, முழுமை என்றோ எப்படி வேண்டுமானாலும் அழை. ஆனால் நாம் அடிமுடியற்ற வாழ்வெனும் மரத்தில் இருக்கும் சிறிய இலைகள்தான். போராட வேண்டிய அவசியம் இல்லை.
      உயிர் துடிபுள்ளவனாகும் போது உன்னிடம் இருந்து அகங்காரம் மறைகிறது. அகங்காரம் மரையும் போது நீ கடவுள் தன்மை உள்ளவனாகிறாய். கடவுள் தன்மை வரும்போது அளவற்ற ஆற்றலும் நிதானமும் சரியாக சிந்திக்கும் திறனும் வரும். வெற்றிக்காக உழைக்க வேண்டாம். அது உன் செயலிலேயே ஒளிந்துள்ளது, தானாக் கிடைக்கும். அப்போது மகிழ்ச்சியாக உண‌ர்வாய். இந்த மாதிரி வெற்றியே உனக்கு முழுமை கொடுக்கும்.

Wednesday, August 31, 2011

மனித நாகரீகம் என்பது இதுவா? ஆனந்தம்


      எந்தப் புலியாவது தன்னை நல்ல புலியாக காட்டிக்கொள்ள வேண்டும் என்று தன் இயல்பை மறைத்து மாறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறதா? எந்த எருதாவது தன்னை கெட்ட எருதாக காட்டிக்கொள்ளக் கூடாது என்று கபடமாக நடந்து கொள்கிறதா?
      பசி எடுத்தால் உணவு, இச்சை பிறந்தால் இணை என்ற இரண்டே வேட்கைகளில் தான் அதற்க்குள் சண்டை நடக்கிறது. அது மிருக இனம் பிழைத்திருப்பதற்கும் இனப்ப்பெருக்கம் செய்வதற்க்கும் இயற்க்கை விதித்திருக்கும் விதி.
      மற்ற‌படி மிருகங்கள் ஒன்றை ஒன்று பார்த்து, பொறாமைப்படுவது இல்லை, வஞ்சம் கொள்வது இல்லை, சதிச் செயல்களில் ஈடுபடுவது இல்லை.
      மனிதன் தான் இயல்பை உணராமல் தடுமாறுகிறான். ஆரம்பத்தில் அவனும் தன் உணவுக்காக, உடைக்காக, உறைவிடத்திற்க்காக சண்டைபோடத்துவங்கினான். பிற்பாடு நாகரீகம் வளர வளர அவனுடைய தேவைகளும் பெருகிவிட, கூடுதலான வசதிகளுக்காகவும் தன் பெருமைகளுக்காகவும் போரிடும் குணம் அவன் அடிப்படை குணம் ஆகிவிட்டது. அதை மறைத்து தன்னை நல்லவனாக காட்டிக் கொள்ளும் முனைப்பு அவன் இயல்பு ஆகிவிட்டது.
      சட்ட திட்டங்களால் ஆளப்படுவதால் மட்டுமே எந்த சமூகமும் நாகரீகம் அடைந்து விட்டதாக சொல்ல முடியாது. லண்டன், பாரீஸ், மும்பை, நியூயார்க் என இன்றைக்கு மிக நாகரீக நகரம் என்று நீங்கள் கருதும் எந்த நகர‌த்தை வேன்டுமானால் எடுத்துக்கொள்ளுங்கள் அங்கே சட்டத்தை விலக்கி காவல்த்துறையை கலைத்து விட்டு பாருங்கள்....மூன்றே நாளில் எல்லாம் தலைகீழாகிவிடும். மிக நாகரீகமான மனிதன் என்று நீங்கள் கருதியவர் கூட குகை மனிதனை விடக் கேவலமானவனாக நடந்து கொள்வதை நீங்கள் பார்க்கலாம்.
      சங்கரன்பிள்ளை ஒருநாள், தன் தோட்டக்காரன் திண்ணையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார்.
      "ஏய், ஏன் தோட்டத்திற்க்கு த‌ண்ணீர் ஊற்றப் போகவில்லை?" என்றார்.
      தோட்டக்காரன் அவரை சந்தேகத்தோடு பார்த்து, "வெளியே மழை கொட்டிக்கொண்டு இருக்கிறதே ஐயா" என்றான்.
      "அதனால் என்ன குடையை எடுத்துகொண்டு போ" என்று விரட்டினார் சங்கரன்பிள்ளை.
      மனிதன் வகுத்த சட்டங்கள் இப்படித்தான்...., சூழ்நிலையை கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால், அந்த சமயங்களில் சட்டங்கள் அர்த்தமற்றுப் போகின்றன.
      காடுகளில் வாழ்க்கை கடினாமாக இருக்கின்றது என்று தான் மனிதன் நகரங்களை உருவாக்கினான், இப்போது நகரங்களில் நகரங்களில் வாழ்க்கை அதை விடக் கடுமையானதாக ஆகிவிட்டிருக்கிறது.
      அட்த்தவனை விட தான் குறைவான நிலையில் இருந்தால் கூசிக்குறுகிப் போகின்றான். எந்த நிலையில் வாழ்கிறானோ அதில் சிறிதளவு குறைந்து விட்டால் கூட, தன் நிலை தாழ்ந்து விட்டதாக எண்ணி, நிம்மதியை தொலைக்கிறான், உயிரே போய்விட்டது போல் துக்கப்படுகிறான்.
      எப்போது மனிதன் தன்னை உடலோடு அடியாளப் படுத்திக் கொள்ள ஆரம்பித்தானோ, அப்போதே இந்தப் பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது.
      உடல் என்பது மிருகம் தான். உடலின் அபாரத் தேவைகளுக்காக நீங்கள் இறங்குகையில் அந்தப் போரட்டத்தில் உங்களுடைய பெரும்பாலான சக்தி விரயமாகிறது.
      நாகரீகம், கல்வி உங்களின் மிருக குணங்களைப் பின்னிழுக்க வைத்து உங்களை போலியாக வெளியுலகில் காட்டிக் கொள்ளத் தூண்டுகின்றன. எப்பொழுதெல்லாம் நாகரீகமும், கல்வியும் மறந்து போகின்றதோ அப்பொழுதெல்லாம் உங்களின் அடக்கி வைத்த குணம் தன்னை முன் தள்ளி வெடித்துக் கிளம்புகின்றது.
      உங்களை உடலுடன் அடையாளபடுத்திப் பார்க்கும் தன்மை விலகி, உள்ளத்தின் நிலையை புரிந்து கொள்ளும் தன்மை வரவேண்டும். அப்போது தான் உங்களின் உயிர்த்தன்மை வெளிப்ப‌ட்டு உங்களை சீர்படுத்தும். உண்மையான ஆன்மீகமும் அதுவே. என்றென்றும் உங்களை ஆனந்தமாக வைத்திருக்கும்.

Tuesday, August 30, 2011

மூன்றின் மகிமை ஆனந்தம்


      வாழ்க்கையின் அடிப்படையை புரிந்துகொள்ள வேண்டுமென்றால் உங்கள் வாழ்க்கையை கவனித்தால் போதும். உங்கள் வாழ்க்கை ஒன்றுமில்லாது போய்விடக்கூடாது என்ற அச்சம் உங்களைச் செலுத்துகிறது. அதனால் படிப்பு, வேலை, பணம், பதவி, உறவு, குடும்பம், பட்டம் என்று இவையெல்லம் மகிழ்ச்சி தரும் என நினைப்பவற்றை எல்லாம் வேட்டையாடிக் கொண்டிருக்கிறீர்கள். எல்லவற்றையும் உடமையாக்கிக் கொண்டால் முழுமை கிடைத்து விடும் என்ற போதையில், வெறியோடு எப்போதும் எதையாவது வைத்து உங்களை நிர‌ப்பிக்கொண்டே இருக்கிறீர்கள்.
      உங்கள் பணப்பெட்டி, உங்கள் மூளை, உஙகள் இதயம் இந்த மூன்றைத்தவிர வேறு எதை நிர‌ப்பும் திறன் உங்களிடம் இருக்கின்றது. இந்த மூன்றையும் நிர‌ப்பும் திறனாவது உங்களிடம் முழுமையாக இருக்கிறதா?
      உலகின் அத்தனை நூலகங்களின் நூல்களைக் கரைத்து உங்கள் மூளைக்குள் ஊற்றினாலும் அவற்றில் இடம்பெறாத புதிய தகவல்கள் தினம் பிறக்கும்.
      பல கோடி பேரை உறவாக ஏற்றிருந்தாலும், அடுத்து பிறக்கப் போகும் குழந்தைகளை ஏற்க இதயத்தில் இடமிருக்கும்.
      இந்த மூன்று வேட்கைகள் தானே உங்கள் போராட்டங்கள் அத்தனைக்கும் அடிப்படை? ஆனால் இவை எதிலும் நிறைவு இல்லை, முழுமை இல்லை இல்லையா?
      இப்படி செல்வம், அறிவு, உறவு இவற்றை நினைத்து ஓடுகிறீகள், கிடைத்தமட்டும் எடுத்துக்கொண்டு மேலும் ஓடுகிறீகள், சற்றே ஓடுவதை நிறுத்திவிட்டு, கவனியுங்கள்.
      முழுமைதருவதாய் இருந்திருந்தால் அவை வாழ்வில் உங்களுக்கு ஆனந்தத்தை அல்லவா கொண்டு வந்து வழங்கியிருக்க வேண்டும். அப்படியா உணருகிறீர்கள், பல சமயங்களில் உங்கள் வேட்கையிம் கசப்பும், காழ்ப்பும், எதிர்ப்பும், ஏமாற்றமும், வருதமுமல்லவா அடைகிறீர்கள். இவை ஏன் என்று சிந்தித்தீர்களா?
      இந்த பூமியில் மகிழ்ச்சி என நினைப்பவற்றின் பின்னே ஓடுபவர்கள், தங்கள் வாழ்க்கையே தொலைக்கிறார்கள். தொங்கிய முகங்களுடன் ஆனந்தமின்றி கிடக்கிறார்கள்.
      மாறாக அரண்மனையும், ஆள்பலமும், ஊரும், உறவும் வேண்டாம் என்று உதறி விட்டுப் போன புத்தர் தன் தேடலில் உச்சபட்ச ஆனந்தத்தையல்லவா ஞானமாகக் கண்டார்? நீங்கள் தேடும் இந்தத் தேடுதலை விட்டுவிட்டு, அந்த ஆனந்ததை அவரைப்போல் எத்தனையோ ஞானிகள் அடைந்திருக்கிறார்களே எப்படி?
      ஒவ்வோரு விசயத்திலும் மனிதன் ஆனந்தத்தை தேட ஆரம்பித்தால், அதன் சூட்ட்சுமத்தை புரிந்து கொண்டால், அவன் அன்றாடம் சந்திக்கும் நரகங்களை சொர்கங்களாக‌ மாற்றிக் அமைக்க முடியும்.

அதிசயத்தை நிகழ்த்துவோம் ஆனந்தம்


      சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முந்தைதொரு தினம், இன்றைக்கு மத்தியபிரதேசம் என்று அழைக்கப்படும் ஒரு பகுதி. அங்கு பில்வா என்று ஒரு தீவிரமான ஒரு பக்தன் இருந்தான். அவன் அழைத்தால் பாம்புகள் அவனைச் சுற்றிக்கூடும் அந்த அளவுக்கு பாம்புகளுக்கு நெருக்கமாக இருந்த இனத்தைச் சேர்ந்தவன்.
      அன்றைய சமூகத்தின் சில முட்டாள்த் தனமான சில கட்டுபாடுகளுக்கு கட்டுப்படாததால் அவன் பலமுறை தண்டிக்கப் பட்டான். அவனுடைய ஒரு செயலை அச்ச்மூகம் அன்று மன்னிக்கத் தயாராக இல்லை. உச்சபட்ச தண்டனையாக அவனுக்கு மரணதண்டனை என்று அன்று தீர்மானிக்கப்பட்டது. அவன் எந்த பாம்புகளுக்கு நெருக்கமாக இருந்தானோ, அந்த பாம்புகளாலேயே அவனுக்கு மரண தண்டனை என்று அப்போது தீர்மாணிக்கப்பட்டது.
      அசைய முடியாதபடி அவனை ஒரு மரத்துடன் பினைத்தார்கள். கருநாகம் ஒன்றை உசுப்பி அவனைக் கடிக்க வைத்தார்கள். அவனை சாகவிட்டு விலகிப்போனார்கள். உடலில் விஷம் பாய்ந்ததால், அவன் ரத்தம் அடர்த்தியாகிக் கொண்டேபோனது. ரத்தத்தை உடலின் பல்வேறு பாகங்களுக்கு பம்ப் செய்ய முடியாமல் இதயம் திணறியது. மூச்சு முட்டியது.
      அத‌ற்க்கு முன்பாக அவன் சுவாசத்தைக் கவணித்ததில்லை. தன்னிச்சையாக நட‌ந்தேரும் எந்த விசயத்தையும் மனிதன் கவனிப்பதில்லை. அதில் தடுமாற்றம் ஏற்ப்பட்டால் தான் அதன் முக்கியத்துவம் அவனுக்கு புரிகிறது.
      மரணத்தின் வாயிலில் இருந்த பில்வா, வேறு ஏதும் செய்ய இயலாததால் தனது திண‌றும் முச்சை கவணிக்கத் தொடங்கினான். உள்ளே போவதும் வருவதுமாக இருந்த காற்று, அந்த உடலுடன் உயிரை பிணைத்து வைதிருந்ததை அப்போதுதான் அவன் கவனித்தான்.
      அது ஒருவகை தியானம் என்று தெரியாமலேயே அவன் அதில் ஈடுபட்டான். அடங்கும் மூச்சை அவன் இடைவிடாமல் மிகவும் விழிப்புணர்வுடன் கவனித்தான். அவனுள் பெரும் மாற்றம் நிகழ்ந்தது, முக்தியின் பாதையில், ஆனந்தத்தின் திசையில் செலுத்தப்பட்டுவிட்டான். விஷம் என்று நினைத்து அவனுக்கு செலுத்தப்பட்டது பேரமிர்தமாக மாறிற்று.

Monday, August 22, 2011

எங்கே தனித்தன்மையும் அகங்காரமும் வேறுபடுகிறது ? ஆனந்தம்


      தனித்தன்மை என்றால் தனித்துவம் – யாருடனும் ஒப்பிடமுடியாது. ஒப்பிடமுடியாத தனித்துவம் அதுதான் தனித்தன்மை. தனித்தன்மை அழகானது. அப்படித்தான் கடவுள் உங்களை உருவாக்கினார். தனிப்பட்ட விதத்தில். அகம்பாவம் ஒப்பிடுவதால் வருவது, அகம்பாவம் உன்னுடைய கண்டுபிடிப்பு. கடவுள் உனக்கு அகம்பாவத்தை கொடுக்கவில்லை, அவர் உனக்கு ஒரு தனிதன்மையைத்தான் கொடுத்துள்ளார்.
      அகம்பாவம் ஒப்பிடுதல்தான். நீ மற்றவர்களை விட அதிக புத்திசாலியாக உன்னை நினைத்துக் கொண்டிருக்கிறாய். நீ உன்னை அடுத்தவரைவிட உயர்வாக அல்லது தாழ்வாக நினைத்துக்கொள்கிறாய். அடுத்தவரை விட நீ அழகாக இருப்பதாக நீ நினைத்துக்கொள்கிறாய். அப்போது நீ அகம்பாவத்தை உள்ளே கொண்டுவருகிறாய். நீ யாருடனாவது உன்னை ஒப்பிடும்போது அந்த ஒப்பிடுதல் மூலம் வரும் முடிவு தான் அகம்பாவம்.
      நீ ஒப்பிடுவதை நிறுத்தும்போது நீ மட்டுமே அங்கிருக்கிறாய். அளவற்ற அழகோடும் தனித்துவமாகவும் இருக்கிறாய். எல்லா உயர்வு தாழ்வுகளும் நான் யார், எங்கிருக்கிறேன், எனக்கு மேல் யார் இருக்கிறார்கள், எனக்கு கீழ் யார் இருக்கிறார்கள் என்பது எல்லாமே அகம்பாவத்தின் பிரச்னைகளே. உயர்ந்தவன் என்ற உணர்ச்சி கொண்ட மனிதனும் சிரமப்படுகிறான், தாழ்வுணர்ச்சி கொண்ட மனிதனும் சிரமப்படுகிறான், இருவருமே சிரமப்படுகிறார்கள், ஏனெனில் மிக உயர்ந்தவனும் கூட திருப்தி அடையக்கூடிய நிலை என்பதே கிடையாது.
      ஆபிரஹாம் லிங்கனின் முகம் மிகவும் அழகற்றது. அது அவரை மிகவும் கொடுமைப்படுத்தியது. அவர் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடும் போது அவர் வோட்டு கேட்க சென்ற இடத்தில் ஒரு சிறிய பெண், “நீங்கள் தாடி வைத்துக் கொள்ளுங்கள், அது உங்களை சிறிது அழகாக காட்டும்” என்று கூறினாள். அப்போதிலிருந்து அவர் தாடி வைத்துக் கொண்டார். ஆனாலும் அவருக்கு அவரது முக அழகைப்பற்றிய கவனம் எப்போதும் இருந்தது. அவர் ஜனாதிபதியாகி விட்டார். ஆனாலும் எங்கே அழகான ஒரு முகத்தை காண நேர்ந்தாலும் அவர் மனம் புண்பட்டது.
      நெப்போலியன் போனபார்ட் அதிக உயரமில்லை, 5.5 – என் உயரமும் அதுதான். அவர் தனது வாழ்நாள் முழுவதும் வருத்தப்பட்டார். எப்போதும் யாருக்கும் 5.5 உயரம் கொண்டவராக இருப்பதில் எந்த பிரச்னையும் இல்லை, அதில் என்ன பிரச்னை இருக்கிறது ? நான் 5.5 உயரம் கொண்டவராக இருப்பதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. 5.7 அல்லது 5.8 ஆக இருந்தால் மட்டும் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது ? எதுவும் நடக்கப் போவதில்லை? நீ அப்படியே தான் இருக்கப் போகிறாய். 5.5 அல்லது 5.7 அல்லது 5.8 என்பது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது ஆனால் அவருக்கு அது மிகப் பெரிய அளவில் தொந்தரவாக இருந்தது. அவர் அதில் மிகவும் கவனம் கொண்டவராக இருந்தார்.
      ஒருநாள் அவர் சுவரில் படம் ஒன்றை மாட்ட முயன்று கொண்டிருந்தார். ஆனால் அந்த இடம் அவரைவிட கொஞ்சம் உயரமாக இருந்தது. அதனால் அவரது மெய்காப்பாளன்,“சார், நான் உங்களை விட உயர்ந்து இருப்பதால் நான் இதை செய்து விடுகிறேன்” என்று கூறினான். உடனே நெப்போலியன், “நிறுத்து! அப்படி சொல்லாதே! உயர்ந்தவன் என்று கூறாதே, வளர்ந்தவன் என்று வேண்டுமானால் சொல் “என்று கூறினார்.
      அவர் அதை பற்றிய மிகுந்த உணர்வோடு இருந்தார். “உயர்ந்தவனா,? வளர்ந்தவன் என்று வேண்டுமானால் சொல்” என்றார். நெப்போலியன் கூட சந்தோஷமாக இல்லை என்றால் வேறு யார் சந்தோஷமாக இருக்க முடியும்?
      ஒப்பிடும் மக்கள் சந்தோஷமாக இருக்க முடியாது. இந்த மரங்கள் சந்தோஷமாக இருக்கின்றன. சிறிய மரம் பெரிய மரத்தை பற்றி கவலைப்படுவதில்லை. அவை ஒன்றையொன்றை பற்றி கவலைப்படுவதில்லை. சிறியது, சிறியதுதான், பெரியது பெரியதுதான். உண்மையில் சிறியது பெரியது உயர்ந்தது தாழ்ந்தது எல்லாமே மனித பிரிவினைதான். அவை மரங்களின் உலகில் இருப்பதில்லை.  ஒரு மிகப்பெரிய ஓக் மரம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறதோ அவ்வளவு மகிழ்ச்சியாக ஒரு ரோஜாசெடியும் இருக்கும். அதில் எந்த பிரச்னையும் இல்லை. ரோஜாசெடி மட்டுமல்ல, புல் கூட ஒரு தாமரை மலரைப் போல மகிழ்வோடுதான் இருக்கும். அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது.
      கடவுள் ஒவ்வொருவரின் மேலும் பொழிகிறார். ரோஜாசெடி, புல், தாமரை ஆகிய எல்லாவற்றின் மேலும் எல்லா இடத்திலும் பொழிகிறார். இந்த முழு பிரபஞ்சமும் மகிழ்வோடு இருக்கிறது. மனிதன் மட்டுமே பிரச்னையில் இருக்கிறான். ஒப்பிடுதலால் அகம்பாவம் வருகிறது. தனிதன்மை உனக்கு இருக்கிறது, தனித்துவமான தனித்தன்மை உன்னிடம் உள்ளது. ஒப்பிடுதலால் எவ்வளவு பிரச்னைகள் எழுகின்றன.?
      சில நாட்களுக்கு முன் ஒரு பெண் அவளால் அவளது உடலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று என்னிடம் கூறினாள். அவள் குண்டாக இருக்கிறாள் என்பதுதான் காரணம். அவளுக்கு தான் குண்டாக இருக்கிறோம் என்ற எண்ணம் எப்படி வந்தது, ? எதனால் வந்தது,? ஒப்பிடுவதால் வந்தது.
      உன்னுள் ஒல்லியாக இருக்கும் பெண்களைப் பற்றிய ஏதோ ஒரு கருத்து இருக்க வேண்டும், அதனால்தான் ஒப்பிடுகிறாய், அந்த பெண்ணிடம் எந்த பிரச்னையும் இல்லை, நான் அந்த பெண்ணை பார்த்தேன். அவள் ஒரு அழகான பெண். ஒரு தனித்துவமான பெண், தனித்தன்மைவாய்ந்தவள். ஆனால் தேவையின்றி வேதனையை கவலையை கஷ்டத்தை உருவாக்கிக் கொள்கிறாள். அவள் தான் சிறிது குண்டாக இருப்பதால் தன்னை யாரும் நேசிப்பார்கள் என்பதையே அவளால் நம்ப முடிவதில்லை.
      யார் இதை கொடுத்தது ? இதுதான் சரியானது என்பதை எப்படி நீ தீர்மானிக்கமுடியும்? இதுதான் சரியானது என்பதில் யாருக்கும் எந்த தெளிவும் கிடையாது. எல்லா சராசரிகளும் பொய்யானவையே. இந்த உடலுக்கு எந்த அளவு குண்டாக இருக்கலாம் என்பது யாருக்கும் தெரியாது. அந்த உடலுக்கு மட்டுமே தெரியும். உனது உடலை நேசி, உனது உடல் சொல்வதை கேள். ஒப்பிடாதே.
      இந்த ஒப்பிடுதலால் அவள் தனது முழு வாழ்க்கையையும் தவறவிடுகிறாள். இந்த ஒப்பிடுதல் பிரச்னையை உருவாக்குகிறது. அவளால் நேசிக்க முடிவதில்லை. அவளால் தன்னை யாரும் நேசிப்பதை அனுமதிக்க முடிவதில்லை, ஏனெனில் தன்னை யாரும் நேசிக்க முடியும் என்பதையே அவளால் நம்ப முடிவதில்லை. அந்த மனிதன் விகார மனம் படைத்தவனாகத்தான் இருக்கமுடியும் இல்லாவிடில் எப்படி அவனால் ஒரு அசிங்கமான பெண்ணை நேசிக்க முடியும் ? அழகைப்பற்றிய உனது கருத்து விகாரமானதாக இருக்க வேண்டும் அல்லது நீ ஏமாற்றவேண்டும் என்றுதான் அவள் நினைத்துக் கொள்கிறாள்.
      அவள் யாரையும் நம்புவதில்லை. யாராவது வந்து அவளிடம் வந்து நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னால் அவளால் நம்ப முடிவதில்லை. அவளே அவளை நேசிப்பதில்லை, பின் எப்படி வேறு யாராவது வந்து அவளை நேசிக்க முடியும் சாத்தியமேயில்லை. உனக்கு வேறு ஏதாவது எண்ணம் இருக்க வேண்டும் அல்லது உனக்கு வேறு ஏதாவது கருத்து இருக்க வேண்டும் நீ வெறும் காமத்தில் மட்டும் ஆர்வம் கொண்டவனாக இருக்கலாம், அல்லது வேறு ஏதாவது உனக்கு ஈர்ப்பு இருக்கலாம், அவளது பணத்தின் மீது உனக்கு ஆசை இருக்கலாம். உன்னால் அவளை காதலிக்க முடியாதே, எப்படி அவளை காதலிக்க முடியும் அவள் தான் கண்ணாடியில் பார்க்கும் தனது சொந்த முகத்தையே காதலிப்பதில்லை. நீ அவளை வற்புறுத்தினால் கூட அவள் வேறு ஏதாவது வழியில் உனது காதலை அழிக்க முயற்சிப்பாள். அப்போதுதான் தான் சொன்னது தான் சரி, நீ சொல்வது தவறு என்று நிரூபிக்கமுடியும். உன்னை ஒத்துக் கொள்ள வைக்கும் அளவு சவாலை ஏற்கும் ஒரு காதலனை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். அவள் காதலன் இன்றியே இருப்பாள். அவள் காதலன் இன்றி இருக்க இருக்க தான் அசிங்கமானவள் என்று தான் நினைத்ததுதான் சரி என்று அதில் நிலைப்படுவாள்.
      அவள் அசிங்கமானவள் அல்ல.
      நான் என் வாழ்வில் ஒரு அசிங்கமான நபரைக் கூட பார்த்ததேயில்லை. எப்படி ஒருவர் அசிங்கமாக இருக்க முடியும் ? நீ அசிங்கமான காக்கையை பார்த்திருக்கறாயா ? சாத்தியமேயில்லை. ஒரு அழகற்ற மரத்தை பார்த்திருக்கிறாயா  ?முடியவே முடியாது. எல்லாமும் அதனதன் படி அழகுதான். ஆனால் மனித இனத்துடன் மட்டும் இந்த ஒப்பிடுதல் வருகிறது, உடன் கூடவே பிரச்னையும் வருகிறது.
      ஒப்பிடாதே. அவசியமேயில்லை. மனித இனத்தில் இருக்கும் குழப்பத்திற்கு ஒப்பிடுதலும் ஒரு மிகப் பெரிய காரணம். நீ எப்படி இருக்கிறாயோ அப்படி மிகச் சரியாக இருக்கிறாய். உன்னை நேசி, உன்னை மதி. உனக்கு நீயே மதிப்பு கொடுக்காவிட்டால் வேறு யார் உனக்கு மதிப்பு கொடுக்கப் போகிறார்கள்,? உன்னை நீயே நேசிக்காவிட்டால் வேறு யார் உன்னை நேசிக்கப் போகிறார்கள். ? மக்கள் தங்களை தாங்களே மதிப்பதில்லை, ஆனால் மற்றவர்கள் மதிப்பு கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் தங்களை தாங்களே நேசிப்பதில்லை, ஆனால் இந்த முழு உலகமும் தங்களை நேசிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இப்போது நீ சாத்தியமற்றதை எதிர்பார்க்கிறாய். அப்படி நடக்காது. உன்னை நேசி, உனக்கு மதிப்பு கொடு, தனக்கு மதிப்பு கொடுக்கும் மனிதன் ஒப்பிடுவதில்லை, ஒப்பிடுவது மதிப்பு கொடுக்கவில்லை என்பதையே காட்டுகிறது.
      இதன் சாராம்சம் என்னவென்றால் அகம்பாவம் உள்ளவனாக இருப்பது உனக்கு நீயே மதிப்பு கொடுப்பதில்லை என்பதை காட்டுகிறது. தனித்தன்மை உள்ளவனாக இருப்பது மிகவும் சரியானது, ஆனால் அகம்பாவம் பிடித்தவனாக இருப்பது உன்னிடம் உனக்கு மதிப்பு இல்லை என்பதையே காட்டுகிறது. அகம்பாவத்தை விடு அது உண்ணை ஆனந்தமானவனாக மாற்றும்.
..................................................................ஓஷோ.............................................................................

Wednesday, August 10, 2011

இளைஞ‌ர்களுக்கு அறிவுரை தேவையா? ஆனந்தம்


      கல்லூரி படிப்பை முடிக்கும் கட்டத்தில் இருக்கிறேன். என் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஒருவிதமாக அறிவுரை சொல்கிறார்கள் என்ன செய்ய? அறிவுரை சொல்பவர்கள் அவர்கள் வாழ்க்கையில் அதைக் கடைப்பிடித்தாக தெரியவில்லை எப்படி அவர்கள் சொல்வதைக் கேட்பது?
      உங்கள் வயதில் நான் இருந்தபோது, நான் எந்த சுவாமிஜி முன்னாலும் உட்கார்ந்து கொண்டு இந்த மாதிரி கேள்விகள் கேட்கவில்லை. யாரோ அறிவுறுத்தி  நான் இந்த பாதைக்கும் வரவில்லை.
      எதையும் நேரடியாக அனுபவித்து உணரும் துடிப்பும் தவிப்பும் எனக்கு இருந்தது. அந்த தவிப்பும் துடிப்பும் உங்களுக்கும் இருந்தால் நீங்கள் யார் அறிவுரையையும் கேட்க வேண்டியதில்லை.
      உங்கள் அனுபவத்தில் இல்லாதது எதுவாக இருந்தாலும், அதை உண்மை என்று நம்புவது எப்படி முட்டாள்த் தனமோ, அதே போல் அதை பொய் என்று சொல்லி ஒதுக்குவதும் அதே அளவு முட்டாள்தனம்தான்.
      சிலர் சும்மா இதை செய்யப்போகிறேன் அதை சாதிக்கப்போகிறேன் என்று சும்மா திட்டம் போட்டுக்கொண்டே இருப்பார்கள். அதற்க்கு யாரிடமாவது ஆலோசனை கேட்டுக்கொண்டே காலம் தள்ளுவார்கள். அறிவுரை கேட்பதிலேயே சந்தோசம் கொள்ளுபவர்கள் இவர்கள்.
      ஒருநாள் தன் கடுகடு மேலதிகாரி வீட்டுக்கு போன் செய்தார் சங்கரன்பிள்ளை வேலைக்காரன் பதில் சொன்னான் "ஐயா ஒரு விபத்தில் காலை  உடைத்துக்கொண்டார், இப்போது மருத்துவமனையில் இருக்கின்றார்!"
      மறுநாளும் அதே எண்ணுக்கு போன் செய்தார். அதே பதில் வந்தது. இப்படி தினம் தினம் காலையில் போன் செய்யவும், ஒரு நாள் அந்த மேலதிகாரியின் வீட்டு வேலைக்காரன் கோபமானான். "ஒரு முறை சொன்னால் உனக்கு புரியாதா? மறுபடி மறுபடி போன் செய்கிறாயே?" என்றான்.
      "அது ஒன்றும் இல்லை அந்த இனிமையான பதிலை தினமும் கேட்ப‌தில் ஒரு தனி சுகம் அதனால் தான்" என்றார் சங்கரன்பிள்ளை.
      இப்படி சிலருக்கு திரும்ப திரும்ப சில விசயங்களைக் கேட்பதே சுகமாக இருக்கும். எல்லாப் பிரசங்களுக்கும் போய் விடுவார்கள். அங்கு சொல்லப் படுவதெல்லாம் புரிந்தது போல் தலையாட்டுவார்கள். இவர்களுக்கு யாருடைய குரலையாவது கேட்டுக்கோண்டிருந்தாலே போதும் அதனால் தங்கள் வாழ்க்கை சீர்பட்டு விடும் என்று நம்புவார்கள்.
      அதற்க்காக அறிவுரை சொல்பவர்களை எல்லாம் நீங்கள் எதிரிகளாக பார்க்கவேண்டியதில்லை. அவர்களுக்கு தகுதி இருக்கிறதா என்று தீர்ப்பு எழுதுவது தவறு.
      யாரோ ஒருவர் குடிகாரராக இருக்கிறார். அதனால் அவருக்கு எல்லாநோய்களும் வந்துவிட்டன. அவர் குடித்து விட்டு தெருவோரம் விழுந்து கிடக்கிறார். ஒயின் ஷாப் வாசலில் கூடுபவர்களைப் பார்த்து கூக்குர‌லிடுகிறார் "டேய் குடிக்காதீங்கடா, உடம்புக்கு கெடுதல்!"
      "அட இவனே குடிகாரன், இவன் என்ன நமக்கு சொல்வது?" என்று நீங்கள் குடிக்க ஆரம்பித்தால் பாதிப்பு யாருக்கு? அவ‌ருடைய மோசமான அனுபவத்தில் அவர் அறிவுரை சொல்கிறார். தகுதி இல்லாத‌வரின் அறிவுரை என்று அதைக்கேட்க மறுப்பது எப்படி புத்திசாலித்தனம் ஆகும்.
      "சிகரெட் பிடிக்காதெ என்று என் அப்பா சொல்கிறார், ஆனால் அவரே செயின் ஸ்மோக்கர்" என்று எத்தனையோ இளைஞர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.
      உங்கள் அப்பா உங்க‌ளுக்காக எதைஎதையோ கொடுத்த போது அவர் அதே போல் தனக்கும் வைத்துக்கொண்டிருக்கிறாரா என்று என்றைக்காவது கவலைப்பட்டீர்களா? அறிவுரை கொடுக்கும் போது மட்டும் அது அவருக்கும் பொருந்த வேண்டும் என்று நினைக்கிறீகளே? அறிவுரை உங்களுக்காக கொடுக்கப்பட்டது என்ற கண்ணோட்டத்தில் தான் அதைப் பார்க்க வேண்டும்.
      பிரபல சைக்கியாட்ரிஸ்ட்டிடம் அந்த தம்பதி வந்திருந்தனர்.
      "என் மீது இவருக்கு அக்கறையே இல்லை" என்றாள், மனைவி.
      இவளுக்கு என்ன குறை வைத்தேன்? பெண்கள் கிளப்பில் உறுப்பினர் ஆக்கியிருக்கிறேன். வீட்டில் நீச்சல் குளம், ஜிம், ஹோம் தியேட்டர் என எல்லா வசதிகளும் செய்து கொடுத்திருக்கிறேன். அக்கறையில்லாமலா அவையெல்லாம் செய்து கொடுத்திருக்கிறேன்?" என்றான், பிஸியான கணவன்.
      இருவரிடமும் விவரங்களையெல்லாம் கேட்டு முடித்த சைக்கியாட்ரிஸ்ட் எழுந்தார்.
      "இங்கே கவனியுங்கள்" என்று கணவனிடம் சொல்லிவிட்டு, அந்த மனைவியின் முகத்தை தன் கைகளில் தாங்கிப் பிடித்தார். ஆசையாக வருடிக்கொடுத்தார். "நீ மிகவும் அழகாக இருக்கிறாய்" என்று அவர் காதில் கிசுகிசுத்தார். கடைசியில் அழுத்தமாக அவளுக்கு ஒரு முத்தமிட்டார். அந்த பெண் திகைத்து போயிருந்தாள், அடுத்து அந்த‌ சைக்கியாட்ரிஸ்ட் அந்த கணவனிடம் திரும்பினார்.
      "உங்கள் மனைவிக்கு வாரத்திற்க்கு இரண்டு தடவையாவது இந்த காதலும் அன்பும் தெவைப்படுகிறது" என்றார்.
      கணவன் தன் டைரியை புரட்ட்டிப் பார்த்து விட்டு சொன்னான்..... "திங்கள் மற்றும் வியாழிக்கிழமைகளில் இவளை இங்கு அழைத்து வரமுடியும், உங்களுக்கு வசதிப்படுமா?"
      உங்களுக்காக சொல்லப்படுவதை சொல்பவர்களுக்கே பொருத்திப் பார்ப்பது அந்தக் கணவன் சைக்கியாட்ரிஸ்ட்டைப் புரிந்து கொண்டது போல் ஆகிவிடும்.
      எந்த அறிவுரையானாலும், அது உங்கள் வாழ்க்கைக்கு தேவையானதா? என்று பாருங்கள். யாரோ நமக்கு எதிரில் உட்காந்துகொண்டு நமக்காக சொல்லிக் கொண்டு இருகின்றாரே, அது என்னவென்று பார்ப்போம் என்ற திறந்த மனதுடன் அறிவுறுத்த்ல்களை அணுகுங்கள்.
      திறந்த மனதுடன் இருப்பது தான் உங்கள் வாழ்க்கையை உயிரோட்டத்துடன் வைத்திருக்கும்.

.......................................................................சத்குரு ஜக்கி வாசுதேவ்.......................................................................................

Sunday, August 7, 2011

சாதாரணமான வாழ்க்கை ஆனந்தம்


      இரண்டு ஜென் மாஸ்டரின் சிஷ்யர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

      அகிரா என்ற சீடன் தனது மாஸ்டரின் அருமை பெருமைகளை எல்லாம் விளக்கினான்.

      "எங்கள் மாஸ்டர் மாயா ஜாலங்களின் மன்னன். ஆற்று நீரின் மேல் நடப்பார், காற்றிலே பறப்பார், தீயிலே குளிப்பார், புயலை எதிர்ப்பார். இப்படி பல அதிசயங்களை செய்வார். உங்கள் மாஸ்டர் என்ன செய்வார்?", என்று அகிரா, ஜிங்ஜுவிடம் கேட்டான்.

      ஜிங்ஜு "எனது மாஸ்டர் ஆற்று நீரில் குளிப்பார், காற்றை சுவாசிப்பார், தீயை பயன்படுத்தி சமைப்பார், புயலைக் கண்டால் மடத்தில் ஒளிந்து கொள்வார். நீ சொல்வது போல் எல்லாம் எதுவும் செய்ததில்லையே. எதற்கும் அவருக்கு என்ன மாயாஜாலம் தெரியும் என விசாரித்து விட்டு வருகிறேன்", என்றான்.

      அடுத்த நாள் அகிராவும், ஜிங்ஜுவும் சந்தித்து கொண்டனர். `எங்கள் மாஸ்டரிடம் உங்களுக்கு என்ன மாயாஜால அதிசயங்கள் செய்ய தெரியும்? என்று கேட்டான்.

      "அதிசயங்கள் எதுவும் நிகழ்த்தாமல் சாதாரணமாக இருப்பதுதான் எனது அதிசயம்" என்று மாஸ்டர் சொன்னார் என்றான் ஜிங்ஜு.

      சாதாரண மனிதனாகவே இரு. அதுவே உன்னை அசாதாரணமானவனாக மாற்றும்.