Showing posts with label பணம். Show all posts
Showing posts with label பணம். Show all posts

Monday, December 3, 2012

உங்களால் கணக்கிடமுடியாதவையே மதிப்பானவை - ஆனந்தம்



   
      நான் ஒரு உயர்ந்த வணிகக் கல்வி நிறுவனத்தை பார்வையிடச் சென்ற பொழுது, அங்கு அவர்கள், “உங்களால் கணக்கிட முடியாதவை மதிப்பற்றவை” என்று கற்பிப்பதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இல்லை, உங்களால் எதை கணக்கிட முடியாதோ அதுவே மதிப்பானது. உங்கள் வாழ்க்கையில் எதை உங்களால் கணக்கிட முடியுமோ அதன் முக்கியத்துவம் குறைவுதான். உங்களால் கணக்கிட முடிந்தது என்பது உங்கள் வருமானம்தான். வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தலாம். ஆனால் ஒரு வாழ்க்கையை உருவாக்க முடியாது. பிழைப்பு நடத்தியே உங்கள் வாழ்க்கையை கழிக்க வேண்டுமா அல்லது ஓர் நல்ல வாழ்க்கையை உருவாக்க வேண்டுமா? ஒவ்வொரு மனிதனும் தேர்ந்தெடுக்க வேண்டியது இதைத்தான்.
      துரதிர்ஷ்டவசமாக இன்றைக்கு பெரும்பாலான மனிதர்களின் வாழ்க்கைமுறை செயற்கைத்தனமாகவும் விலை உயர்ந்ததாகவும் இருப்பதால் அவர்கள் வாழ்க்கை முழுவதும் பிழைப்புக்காகவே செலவிடுகிறார்கள். வீடு வாங்குகிறார்கள், 30 வருடம் வீட்டிற்கு அடைமானமாகி விடுகிறார்கள். வீடு அடமானமாகாது, அவர்கள் தான் அடமானமாகி விடுகிறார்கள். பின்னர் கார் வாங்குகிறார்கள், அதற்கு 10 வருடம் அடமானம். அவர்கள் கல்விக்கான கடன் தொகையை அடைப்பதற்கே 15 வருடங்கள் ஆகிவிடுகின்றன. இன்றைக்குத்தான் ஒரு செய்திதாளில் படித்தேன். வரும்காலத்தில், பூமியில் இனி பிறக்கும் மனிதர்களில் மூன்றில் ஒருவர் 100 வருடம் வரை வாழ்வார்களாம். கல்வியை 32 வயதில் முடித்து அதற்கான கடன் தொகையை 50 வயதில் அடைத்து, 45 வயதில் திருமணம் செய்து 70, 72 வயதில் ஒய்வுபெற்று விடுவார்கள். அதன் பிறகு உள்ள 30 வருடங்களுக்கு இருக்கவே இருக்கிறது மருத்துவ காப்பீட்டுத் திட்டம். மருத்துவர் பின் மருத்துவராக தேடிச் செல்ல வேண்டியதுதான்.
      நீங்கள் ஒரு நல்ல வாழ்க்கையை உருவாக்கத் தேர்ந்தெடுத்தால், இந்த சமூகத்திற்கு என்ன செய்ய முடியும் என்கிற ரீதியில் யோசிக்காதீர்கள். உங்களுக்கென்று ஏதாவது அற்புதமான செயலை செய்தீர்களேயானால், இயல்பாகவே அதை மற்றவருடன் பகிர்ந்துகொள்வதை நீங்கள் தவிர்க்க முடியாது. மிகவும் அற்புதமான ஒன்று உங்களுக்குக் கிடைத்தால் அதை பகிர்ந்துகொள்ளத் தோன்றாதா என்ன? உங்களுக்கு கணக்கிடக் கூடிய விஷயங்களைத் தான் பகிர்ந்துகொள்ளத் தோன்றாது. வாழ்க்கையில் கணக்கிட முடியாத சில அம்சங்கள் இருப்பதை நீங்கள் புரிந்துகொண்டால், அவை என்றுமே குறைவதில்லை என்று உணர்வீர்கள். மதிப்பிட்டு சேமித்து வைக்கக் கூடிய பொருட்கள்தான் ஒரு நாள் சென்று விடுமோ என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும். ஒரு கோடி ரூபாயை சேமித்து நீங்கள் வைத்திருந்தால், அதை வெளியே எடுத்தால் செலவழிந்துவிடும் என்ற பயம் இருந்து கொண்டேயிருக்கும். உங்களுக்குள் மகிழ்ச்சி இருந்தால், பரவசம் இருந்தால், ஞானோதயம் இருந்தால் அது செலவழியாது, எனவே பூட்டி வைக்கத் தேவையில்லை என்று அறிவீர்கள். அப்பொழுதுதான் உதவிக்கரம் நீட்டி என்ன தேவையோ அதை உங்களால் செய்ய முடியும்.
      இந்த உலகிற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்களுக்குப் பிடித்தமானது அல்ல. இந்த உலகிற்கு என்ன தேவையோ அதைத்தானே செய்ய வேண்டும்? உங்களுக்கு எது பிடித்ததோ அதைச் செய்யாமல் எது தேவையோ அதைத் செய்ய வேண்டும். குறிப்பாக மேற்கத்திய கலாச்சாரங்களில் இதை மாதிரி தவறான பிரச்சாரம் செய்கிறார்கள், “உங்களுக்கு விருப்பமானதைச் செய்வதே சுதந்திரம்.”
      உங்களுடைய விருப்பு வெறுப்புகள் என்பது ஒரு கட்டுப்பாட்டு நிலை. உங்களுக்கு விருப்பமானதைச் செய்ய முடியவில்லையென்றால் வேதனைப்படுவீர்கள். நீங்கள் வெறுப்பதைச் செய்ய நேர்ந்தால் வேதனைப்படுவீர்கள், இது ஒரு கடுமையான கட்டுப்பாடு, ஒரு பொறி என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய விருப்பங்களுக்காகவே உங்கள் வாழ்க்கையை நீங்கள் செலவழித்தால், ஒரு ஆழமான பொறிக்குள் சிக்கிக்கொள்வீர்கள். உங்களுடைய விருப்பங்ள் எந்நேரமும் உங்களைத் துன்புறுத்திக்கொண்டே இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
      உங்களுக்கு என்ன பிடிக்கும் என்பதைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். முதலில் அந்த மாதிரி ஒரு மனநிலையை உருவாக்காதீர்கள். என்ன தேவையோ அதை மட்டும் செய்யுங்கள். தேவையானதை நீங்கள் செய்துகொண்டே இருந்தால், எந்நேரமும் எல்லாம் நன்றாகவே இருக்கும். கட்டுப்பாடு என்ற ஒன்றிற்கு இடமே இல்லை. இயல்பாகவே நீங்கள் விழிப்புணர்வு நிலையை அடைந்து விடுவீர்கள். வாழ்க்கையை அனுபவிக்க ஒரே ஒரு வழி விழிப்புணர்வு நிலையடைவதுதான். உங்கள் விழிப்புணர்வு குறைந்து கொண்டே போனால் நீங்கள் வாழ்க்கையை அனுபவிக்க முடியாது.
      நீங்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருந்தால்தான் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க முடியும். உண்மையான விழிப்புணர்வுடன் இருந்தால் எல்லாமே அற்புதமாக இருக்கும். நீங்கள் விழிப்புணர்வு இழந்துவிட்டால் இறந்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.
      எனவே எவ்விதமான வாழ்க்கை வாழ்வது என்பது உங்கள் விருப்பமாக இருக்கக் கூடாது. வாழ்வா சாவா என்பதைப் பற்றிதான் இருக்க வேண்டும். ஏனென்றால் விழிப்புணர்வு ஒன்றுதான் வாழ்க்கையை நடத்திச் செல்லும்.
      விழிப்புணர்வில்லாத நிலையில் நீங்கள் இருந்தால் மரணத்தை நோக்கி தவணை முறையில் செல்கிறீர்கள் என்று அர்த்தம். வாழ்க்கையில் கணக்கிடக்கூடிய விஷயங்களில் நீங்கள் அதிக நேரம் செலவழித்தால் நீங்கள் மேலும் மேலும் விழிப்புணர்வில்லாத நிலையடைகிறீர்கள்.
      கர்நாடகாவில் ஒர் அற்புதமான துறவி இருந்தார். அல்லமா மஹா பிரபு என்று பெயர். பல்லாயிரக்கணக்கான கவிதைகள் எழுதியவர். ஒரு கவிதையில் அவர் இப்படி வருந்துகிறார் “ஒரு மனிதன் நீரில் மூழ்கிக்கொண்டிருக்கும்பொழுது கூட அவனுடன் பேச முடியும். ஒருவனைப் பாம்பு கடித்து விட்டால் அந்த நிலையில் கூட அவனுடன் பேச முடியும். ஆனால் பணம், செல்வம் முதலியவை ஒரு மனிதனைக் கடித்து விட்டால் அவனுடன் பேசவே முடியாது ஏனென்றால் அவன் உணர்விழந்த நிலையில் இருப்பான்,” என்கிறார்.
      கையில் கொஞ்சம் காசு இருந்தால் அது நிலைமையை எளிதாகவும், சாதாரணமாகவும் ஆக்குகிறது. அதற்கு பின்விளைவு எதுவும் இல்லை. உங்களால் கணக்கிட முடியாதவையே வாழ்க்கையில் வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன. எனவே வாழ்க்கையில் கணக்கிட முடியாதவற்றில் உங்கள் வாழ்க்கையை செலவழியுங்கள். என்ன செய்தாலும், நீங்கள் இந்த உலகத்திற்கு பெரிய அர்ப்பணிப்பாக இருப்பீர்கள்.
‍                                               சத்குரு. வாழ்கவளமுடன்!

Wednesday, November 7, 2012

பணம் வந்தால் துன்பமும் சேர்ந்து வருமா? ஆனந்தம்


      பணம் உங்களுக்குத் துன்பத்தை வரவழைப்பதில்லை. முட்டாள்தனம்தான் உங்களுக்குத் துன்பத்தை வரவழைக்கிறது. பணம் உங்கள் வாழ்க்கையில் நுழையும்போது முட்டாள்தனமும் உங்கள் வாழ்க்கையில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அந்த நிலையில் துன்பமும் சேர்ந்து வரலாம். அதற்காக பணம் வந்துவிட்டாலே துன்பமும் வந்தாக வேண்டும் என்று கிடையாது. பணம் உங்களுக்கு நிச்சயமாக வசதிகளைக் கொண்டு வருகிறது.
      ஆனால் வசதிகள் ஏன் துன்பமாக மாற வேண்டும்? நாம்தானே வசதியை தேடினோம்? அப்படியிருக்க, நாம் விரும்பியதே நமது துன்பத்திற்கு ஏன் காரணமாக வேண்டும்? ஏதோ ஒன்று நமது கையில் இருக்கும்போது, அதனுடன் சேர்ந்த மற்றொன்றை முழுவதுமாக மறந்து விடுகிறோம். மனிதர்களின் பெரிய பிரச்சினை இது. காலையில் சாப்பிட உட்கார்கிறீர்கள். ஊறுகாய் மிகவும் சுவையாக இருக்கிறது. இப்போது மற்றவற்றை மறந்து விடுகிறீர்கள். ஊறுகாய், ஊறுகாய், ஊறுகாய் மட்டுமே வயிறு நிரம்ப சாப்பிடுகிறீர்கள். மாலையே பிரச்சினை ஆரம்பித்து விடுகிறது. அடுத்த நாள் காலை வரை கூட அது காத்திருக்காது.
      அதே போலத்தான் செல்வமும் செழுமையும். அவை உங்கள் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் வரும்போது மிகவும் அழகாக இருக்கும். உங்களிடம் போதுமான பணம் இருந்தால் அடுத்த நாள் வேலை செய்வதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. நீங்கள் விரும்பினால் கண்ணை மூடிக் கொண்டு தியானத்தில் உட்கார்ந்து விடலாம். இன்று சம்பாதித்தால்தான் நாளை உணவு என்ற நிலையிலிருப்பவர், விரும்பினாலும் அப்படி தியானத்தில் உட்கார முடியாது. எனவே பணம் உங்களுக்கு துன்பத்தை வரவழைப்பதில்லை. முட்டாள்தனம்தான் உங்களுக்கு துன்பத்தை வரவழைக்கிறது.
      ஏராளமானோர் தினமும் கோவில், மசூதி, மாதா கோவிலுக்குச் செல்கிறார்கள். அவர்கள் அங்கிருந்து திரும்பிவரும்போது அவர்கள் முகத்தைக் கவனித்திருக்கிறீர்களா? அவர்கள் முகம் மகிழ்ச்சியாக மாறியிருக்கிறதா? கடவுளைப் பார்த்து வந்த பின் அவர்கள் முகம் பிரகாசமாக மாறியிருக்கிறதா?  கோவிலிலிருந்து திரும்பிவரும் போது ஒருவருக்கொருவர் ‘கிசுகிசு’வோடு திரும்பி வருவார்கள். கடவுளைப் பற்றி பேசுவதை விட கோவிலில் பார்த்த மற்ற மனிதர்களைப் பற்றிக் கிசுகிசுவோடு தான் வெளிவருவார்கள். அல்லது அவர்கள் விட்டுச் சென்ற செருப்பு வேறு யாரோடாவது நடந்து போய் விடடால் இந்த உலகத்தையே, ஏன் கடவுளைக் கூட சபிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
      கோவிலிலிருந்து வெளிவரும் மனிதர்களின் முகத்தைவிட ஹோட்டலிலிருந்து வெளிவரும் மனிதர்களின் முகம் அதிகப் பிரகாசமாக இருக்கிறது. அதிக மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் வெளிவருகிறார்கள். இது மிகவும் வெட்கக் கேடானது, இல்லையா? தெய்வீகத்தை விட தோசை அவர்களுக்கு அதிக திருப்தியைத் தந்திருக்கிறது. எனவே தெய்வீகமா, செழுமையா, தோசையா என்பதல்ல கேள்வி. மனிதர்கள் விஷயங்களை மோசமாகக் கையாண்டால் எப்படியும் துன்பம் வருகிறது என்பதைப் பாருங்கள்.
      துன்பம் பணத்தால் வரவில்லை. பணம் உங்களின் சட்டைப் பைக்குள் போவதற்கு பதிலாக உங்கள் தலைக்குள் போனதால்தான் துன்பம் வருகிறது. அதை சட்டைப் பைக்குள் மட்டும் வைத்துச் கொண்டால் அது மிகவும் அற்புதம். பணம் இருக்க வேண்டிய இடம் அதுதான், உங்கள் தலை இல்லை. பணத்தை சட்டைப்பைக்குள் வைத்துக்கொண்டு இவ்வுலகில் அற்புதமான பணிகள் பலவற்றை செய்யமுடியும்.நீங்கள் வசதியாக இருப்பதற்கும், மற்றவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தருவதற்கும் பணம் பயனுள்ளதாக இருக்கிறது.
      உலகில் மனிதர்களுக்கிடையே இதுதான் ஒரு பெரிய போராட்டமாக இருக்கிறது. உலகின் மேற்கு பகுதியில் உள்ளவர்கள் உள்நிலையை சரியாகக் கையாள்வதில்லை. அமெரிக்க நாட்டில் 40 சதவீத மக்கள் அவர்களின் வாழ்க்கையில் ஏதாவது ஒரு முறையாவது மன அழுத்தத்திற்கான மருந்தை எடுத்துக் கொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் வெளியில்தான் அனைத்தும் இருக்கிறது என நினைத்து உள்சூழ்நிலையைக் கவனிக்க மறந்து விடுகிறார்கள். எனவே அவர்களுக்கு வாழ்க்கை ஒரு குழப்பமாகி விடுகிறது.
      இங்கு, இந்தியாவில் வேறு விதமான தவறு நடக்கிறது. சொர்க்கம்தான் எல்லாமே என்று நினைத்து தற்போது வாழும் வாழ்க்கையை மறந்து விடுகிறார்கள். இங்கு பெரிய கோவிலைக் கட்டுவார்கள், ஆனால் சரியான கழிவறை இருக்காது. இது இந்தியர்களின் பிரச்சினை. எல்லாமே சொர்க்கத்தில் இருக்கிறது என்று நினைத்து தற்போது தாங்கள் வாழும் உலகை மறந்து விடுகிறார்கள், எனவே அதற்கான விலையைக் கொடுக்கிறார்கள். எனவே எப்போதும் இந்த இரண்டிற்கும் இடையிலான ஒரு சமநிலையைக் கொண்டு வர வேண்டும். அதற்கு தான் யோகா துனைபுரிகிறது. வாழ்க வளமுடன்!

Tuesday, August 30, 2011

மூன்றின் மகிமை ஆனந்தம்


      வாழ்க்கையின் அடிப்படையை புரிந்துகொள்ள வேண்டுமென்றால் உங்கள் வாழ்க்கையை கவனித்தால் போதும். உங்கள் வாழ்க்கை ஒன்றுமில்லாது போய்விடக்கூடாது என்ற அச்சம் உங்களைச் செலுத்துகிறது. அதனால் படிப்பு, வேலை, பணம், பதவி, உறவு, குடும்பம், பட்டம் என்று இவையெல்லம் மகிழ்ச்சி தரும் என நினைப்பவற்றை எல்லாம் வேட்டையாடிக் கொண்டிருக்கிறீர்கள். எல்லவற்றையும் உடமையாக்கிக் கொண்டால் முழுமை கிடைத்து விடும் என்ற போதையில், வெறியோடு எப்போதும் எதையாவது வைத்து உங்களை நிர‌ப்பிக்கொண்டே இருக்கிறீர்கள்.
      உங்கள் பணப்பெட்டி, உங்கள் மூளை, உஙகள் இதயம் இந்த மூன்றைத்தவிர வேறு எதை நிர‌ப்பும் திறன் உங்களிடம் இருக்கின்றது. இந்த மூன்றையும் நிர‌ப்பும் திறனாவது உங்களிடம் முழுமையாக இருக்கிறதா?
      உலகின் அத்தனை நூலகங்களின் நூல்களைக் கரைத்து உங்கள் மூளைக்குள் ஊற்றினாலும் அவற்றில் இடம்பெறாத புதிய தகவல்கள் தினம் பிறக்கும்.
      பல கோடி பேரை உறவாக ஏற்றிருந்தாலும், அடுத்து பிறக்கப் போகும் குழந்தைகளை ஏற்க இதயத்தில் இடமிருக்கும்.
      இந்த மூன்று வேட்கைகள் தானே உங்கள் போராட்டங்கள் அத்தனைக்கும் அடிப்படை? ஆனால் இவை எதிலும் நிறைவு இல்லை, முழுமை இல்லை இல்லையா?
      இப்படி செல்வம், அறிவு, உறவு இவற்றை நினைத்து ஓடுகிறீகள், கிடைத்தமட்டும் எடுத்துக்கொண்டு மேலும் ஓடுகிறீகள், சற்றே ஓடுவதை நிறுத்திவிட்டு, கவனியுங்கள்.
      முழுமைதருவதாய் இருந்திருந்தால் அவை வாழ்வில் உங்களுக்கு ஆனந்தத்தை அல்லவா கொண்டு வந்து வழங்கியிருக்க வேண்டும். அப்படியா உணருகிறீர்கள், பல சமயங்களில் உங்கள் வேட்கையிம் கசப்பும், காழ்ப்பும், எதிர்ப்பும், ஏமாற்றமும், வருதமுமல்லவா அடைகிறீர்கள். இவை ஏன் என்று சிந்தித்தீர்களா?
      இந்த பூமியில் மகிழ்ச்சி என நினைப்பவற்றின் பின்னே ஓடுபவர்கள், தங்கள் வாழ்க்கையே தொலைக்கிறார்கள். தொங்கிய முகங்களுடன் ஆனந்தமின்றி கிடக்கிறார்கள்.
      மாறாக அரண்மனையும், ஆள்பலமும், ஊரும், உறவும் வேண்டாம் என்று உதறி விட்டுப் போன புத்தர் தன் தேடலில் உச்சபட்ச ஆனந்தத்தையல்லவா ஞானமாகக் கண்டார்? நீங்கள் தேடும் இந்தத் தேடுதலை விட்டுவிட்டு, அந்த ஆனந்ததை அவரைப்போல் எத்தனையோ ஞானிகள் அடைந்திருக்கிறார்களே எப்படி?
      ஒவ்வோரு விசயத்திலும் மனிதன் ஆனந்தத்தை தேட ஆரம்பித்தால், அதன் சூட்ட்சுமத்தை புரிந்து கொண்டால், அவன் அன்றாடம் சந்திக்கும் நரகங்களை சொர்கங்களாக‌ மாற்றிக் அமைக்க முடியும்.