Showing posts with label தேடல். Show all posts
Showing posts with label தேடல். Show all posts

Friday, January 7, 2011

கடவுளைத் நம்பாதீர்கள் ஆனந்தம்

       வாழ்க்கையின் ஒவ்வொரு கோணத்தையும், படைபின் ஒவ்வொரு ரகசியத்தையும் நுணுக்கமாக கவனித்து உருவான கலாச்சாரம், இங்கு போல் உலகத்தில் வேறு எங்கும் இல்லை.
       வாழ்க்கையின் பூரணத்துவத்தை வேர் வரை உய்ந்து உணரக்கூடிய கலாச்சாரத்தில் பிறந்தும், உலகில் நாம் கோமாளிகளாகத் தோற்றம் அளிக்கக் காரணம் என்ன?
       அடிப்படையான பிழைப்புக்குக் கூட நம்மை நம்புவதை குறைத்துக் கொண்டு, கடவுளை நம்பி இருப்பது தான்!
       இந்த உலகில் த்ங்களுக்குத் தேவையானதை தேடிப் பெற, மண்புழுவிலிருந்து மாபெரும் யானை வரை யாவும் த‌ங்கள் திறமையை நம்பித்தான் இருக்கின்றன. யாரிடமும் போய் உதவி கேட்பதில்லை.
       அவற்றையெல்லாம் விட மிக அதிகமான புத்திசாலித்தனம் கொண்ட மனிதன் மட்டும்தான் தனக்குத் தேவையானதைக் கடவுளிடம் கேட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான்.
       நீங்களும் பிழைத்திருக்க உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கைகளும் கால்களுமே போதும்!
       உங்கள் உடலையும் மனதையும் எப்படி திறம்படப் பயன்படுத்துவது என்பதற்கான பயிற்சிகள் கொடுத்தால் போதும்!
       அதை விட்டுவிட்டு, கடவுளை உங்கள் பிழைப்புக்காக உதவுவதற்கு அழைப்பது கேவலம்.
       ஆம், தினப்படி வாழ்க்கைக்குக் கடவுள் தேவையில்லை!
       பல லட்சம் கோயில்கள் இருந்தும், எங்கு திரும்பினாலும் ஏன் வேதனை மிகுந்த முகங்களைப் பார்க்கிறோம்?
       உண்மையையும், உபதேசத்தையும் போட்டுக் குழப்பிக் கொண்டதால் வந்த பிரச்சனை இது.
       கடவுள் உங்களை விட மிக சக்தி வாய்ந்தவர்; அவர் இல்லாமல் ஓர் அணுவும் அசையாது என்பீர்கள்.
       ஆனால் அவரை நம்பி உண்மையிலேயே உங்களை ஒப்படைப்பீர்களா? மாட்டீர்கள்?
       அவரின் புத்திசாலித்தனத்தின் மீது சந்தேகம் கொண்டு தினம் தினம் அவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் முன் நின்று கண்களை மூடிய படி, நீங்கள் அல்லவா அவருக்கு சொல்லிக் கொடுக்கிறீர்கள்?
       உழைக்காமல் சாப்பிடவும், படிக்காமல் தேர்வுகளில் பாஸ் செய்யவும், உங்கள் த‌வறுகள் கவனிக்கப்படாமல் போகவும் கடவுளைத் துணையிருக்கச் சொல்லுகிறீர்கள்.
       வாழ்க்கை திடுமெனப் புரண்டுவிட்டால் என்ன செய்வது என்று கடவுளை ஒரு இன்சூரன்ஸாக வைத்திருக்கிறீர்கள். கோயில் கோயிலாக அதற்கான பிரிமியம் கட்டுகிறீர்கள்.
       'இதையெல்லாம் கொண்டு வா!' ' இதிலிருந்து காப்பாத்து!' என்று உங்கள் சேவகனாகவும், பாதுகாப்பு சிப்பாயாகவும் கடவுளை நியமிக்கப் பார்க்கிறீர்கள்.
       வாழ்க்கையை பற்றிய அச்சம் மட்டுமே உங்களிடம் கடவுள் நம்பிக்கையை வளர்த்திருந்தால் உங்களிடம் தெய்வமும் தங்காது... வாழ்க்கையும் மிஞ்சாது!
       சங்கரன்பிள்ளையிடம் ஒரு வேலைக்காரன் இருந்தான். ஒரு முறை உப்பும் சர்க்கரையும் வாங்கி வர அவனை சங்கரன்பிள்ளை கடைத்தெருவுக்கு அனுப்பினார்.
       வேலைக்காரன் முத‌லில் பை நிறைய சர்க்கரை வாங்கினான். அடுத்ததாக உப்பு வாங்கப் போனபோது, 'இரண்டையும் கலந்து வாங்கி வந்து விடாதே' என்று சங்கரன்பிள்ளை எச்சரிக்கை செய்திருந்தது நினைவுக்கு வந்தது.
       பையை உள்ளும் வெளியுமாக புரட்டி விட்டால் வேறொரு பையாகி விடுமே என்று புரட்டினான், சர்க்கரையெல்லாம் தெருவில் கொட்டி வீணானது.
       பையில் உப்பை நிரப்பிக் கொண்டு வீடு திரும்பினான்.
       "உப்பு இருக்கிறது சர்க்கரை எங்கே?" என்று சங்கரன்பிள்ளை கேட்டார்.
       அந்த புத்திசாலி வேலைக்காரன், 'பையின் அந்தப் பக்கம் இருக்கிறது' என்று பையை மறுபடி புரட்டினான். உப்பும் பூமியில் கொட்டி மண்ணில் கலந்தது.
       அச்சமும் கடவுள் நம்பிக்கையும் இப்படித்தான். இரண்டையும் குழப்பிக்கொண்டால் எதற்கும் உதவாது. இத்ற்கு பக்தி என்று பெயர் சூட்டி ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.
       உண்மையில் கடவுளை உங்க‌ளுக்கு மேலானவராக எண்ணினால், உங்கள் வாழ்க்கை எதிர்பார்த்தபடி நடக்காத போது, ஆஹா, கடவுள் விருப்பப்படி நடக்கிறதே! என்று ஆனந்தமல்லவா கொள்ள வேண்டும்! முடிகிறதா?
       மாறாக, வாழ்க்கையை எப்படி நடத்தித்தர வேண்டும் என்று பிரார்த்தனை என்ற பெயரில் கடவுளுக்கு உத்தரவு அல்லவா கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்?
       சந்தேகம் இருக்கும் மனதில் பக்தி நிகழ்வதில்லை. கடவுளிடம் பணிவது போன்ற பாசங்கு தான் நிகழ்கிறது.
       பக்தி என்பது உங்கள் அடையாளங்களை இழந்து எதன் மீது பக்தி கொண்டீர்களோ அதனுடன் இரண்டரக் கரைவது.
       உங்கள் தவறுகளுக்கான பழியை சகமனிதர்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லாத‌ போது, தெய்வச் செயல் என்று அவற்றை சுமத்த வசதியான தோள்களாகக் கடவுளை வைத்திருக்கிறீர்கள்.
       அதன் பெயர் பக்தி இல்லை. போலித்தனம்!
       உங்கள் வாழ்க்கையை, கடவுளின் உதவியைக் கோராமல் நீங்களாக வாழக் கற்றுக் கொண்டீர்களானால், உங்கள் வாழ்க்கை மேன்மையாகிவிடும்.
       உங்களூக்குத் தேவையான உணவு கிடைத்துவிட்டது, விரும்பிய துணை, குழந்தைகள், வசதிகள் அனைத்தும் கிடைத்து விட்டது, இருந்தாலும் இன்னும் வேறு எதற்காகவோ மனம் ஏங்குகிறதே அதன் பெயர் என்ன?
       இந்தப் படைபின் வேர் என்ன என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் அப்போது தான் தலையெடுக்கிறது என்று அர்த்தம். அதுதான் உண்மையான தேடல்......
       அப்போது தான் கடவுளைப் பார்க்க நீங்கள் தயார். உண்மையான ஆனந்தத்தை அடைய நீங்கள் தயார்..........அதுவரை கடவுளைத் துரத்தாதீர்கள், விட்டுவிடுங்கள்........
வாழ்க வளமுடன்!

Monday, January 3, 2011

மனிதர்களின் அனைத்துத் தேடுதல்களின் முடிவு எது தெரியுமா?ஆனந்தம்

       ஒரு பழைய கதை .... ஒரு விறகுவெட்டி வயதானவன், ஏழை, அனாதை. அவன் சாப்பாட்டிற்கு ஒரே வழி நாள்தோறும் காட்டிற்கு வந்து விறகு வெட்டி கொண்டு சென்று விற்று வரும் பணத்தில் சாப்பிடுவதுதான். காட்டிற்குள் நுழையும் இடத்தில் ஒரு அழகிய அரசமரம் இருந்தது.
       இந்த விறகுவெட்டி அந்த மரத்தின் கீழ் ஒரு வயதான ஞானி உட்கார்ந்திருப்பதை பார்ப்பான். அவர் இரவு, பகல், வெயி்ல், மழை, குளிர் என எல்லாநேரங்களிலும் எல்லா காலங்களிலும் அங்கே இருப்பதை பார்ப்பான். அதனால் காட்டிற்குள் நுழையும் முன் அவர் காலில் விழுந்து வணங்குவான். அவன் வணக்கம் சொல்லும் ஒவ்வொரு முறையும் அவர் அவனைப் பார்த்து, சிரித்தபடி,"நீ ஒரு முட்டாள்" எனக் கூறுவார்.
       விறகுவெட்டி ஆச்சரியமடைவான். ஒவ்வொரு முறை வணங்கும்போதும் அவர் ஆசி கூறுவதற்கு பதிலாக முட்டாள் எனக் கூறுகிறாரே என நினைத்துக் கொண்டு போவான்.
       ஒருநாள் தைரியத்தை வளர்த்துக் கொண்டு அவரிடம்,"ஏன் இப்படி கூறுகிறீர்கள்?" என்று கேட்டான்.
       அதற்கு அவர், "நீ தினமும் இந்த காட்டினுள் சென்று விறகு வெட்டி கொண்டு வருகிறாய். ஆனால் இதனுள் இன்னும் சிறிது தூரம் சென்றால் செம்பு சுரங்கம் உள்ளது. அங்கு சென்று செம்பு எடுத்து சென்றால் ஏழு நாட்களுக்கு கவலையில்லாமல் உட்கார்ந்து சாப்பிடலாம். ஒரு முட்டாளுக்கு மட்டுமே அது தெரியாமல் போகும். உனது வாழ்நாள் முழுவதும் நீ இந்த காட்டினுள் சுற்றிக் கொண்டு இருக்கிறாய். நீ அதை பார்த்திருந்தால் இப்படி தினமும் வந்து விறகு வெட்டிகொண்டு செல்ல வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது." என்றார்.
       விறகுவெட்டியால் அவர் சொல்வதை நம்ப முடியவில்லை. ஏனெனில் அவனுக்கு அந்த காடு முழுவதும் நன்றாகத் தெரியும். அவர் ஏதோ கேலி செய்கிறார் என நினைத்தான். ஆனாலும் அவர் சொல்வதில் ஏதேனும் உண்மை இருக்குமானால்..............சரி, சிறிதுதூரம் போய் தேடுவதால் என்ன தீங்கு வந்துவிடப் போகிறது என நினைத்துகொண்டு இன்னும் சிறிது தூரம் காட்டினுள் சென்று ஏதேனும் செம்பு சுரங்கம் இருக்கிறதா என்று கவனமாகவும் விழிப்போடும் தேடினான்.
       அங்கே அவன் செம்பு சுரங்கத்தை கண்டான். அவர் எப்போதும் நீ ஒரு முட்டாள், தேவையில்லாமல் இந்த வயதான காலத்திலும் தினமும் வேலை செய்துகொண்டிருக்கிறாய் என ஏன் சொல்லிக் கொண்டு இருந்தார் என்பது இப்போது அவனுக்கு புரிந்தது.
       இப்போது அவன் வாரத்திற்கு ஒருமுறைதான் சென்றான். ஆனாலும் அந்த பழைய வழக்கம் தொடர்ந்தது. அவர் காலை தொட்டு வணங்கினான். அவர் மறுபடியும் அதேபோலவே சிரித்தபடி,"நீ ஒரு முட்டாளேதான்" என்றார்.
       அவனுக்கு குழப்பமாக இருந்தது. "ஏன்? நான்தான் செம்பு சுரங்கத்தை கண்டுபிடித்து விட்டேனே! பிறகும் ஏன் இப்படி கூறுகிறீர்கள்?" எனக் கேட்டான்.
       அவர் இன்னும் சிறிது தூரம் சென்றால் வெள்ளி சுரங்கம் இருக்கிறது என்று கூறினார்.
       விறகுவெட்டி அதிர்ச்சியுற்றான். "ஏன் இதை முதலிலேயே கூறவில்லை?" எனக் கேட்டான். அதற்கு அவர்,"நீ என்னை செம்பு சுரங்கம் பற்றி கூறியபோதே நம்பவில்லை. பிறகு எப்படி வெள்ளி சுரங்கம் பற்றி கூறினால் நம்புவாய்? இன்னும் சிறிது தூரம் உள்ளே செல்" எனக் கூறினார்.
       அது எப்படி இருக்கும் என்ற சந்தேகம் தோன்றினாலும் இந்த தடவை ஒருவிதமான நம்பிக்கையுணர்வு அவனுள் தோன்றியிருந்ததால் அவன் இன்னும் சிறிது தூரம் உள்ளே தேடிச் சென்ற போது வெள்ளி சுரங்கத்தை கண்டறிந்தான்.
       வெள்ளியை எடுத்துக் கொண்டு அவரிடம் திரும்பி வந்து, "இப்போது மாதத்திற்கு ஒருமுறை வந்தால் எனக்கு போதும். ஆனால் எனக்கு உங்களை பிரிவது மிகவும் கடினமானதாக இருக்கிறது. உங்களை பார்க்காமல் நான் எப்படி இருக்கப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. உங்களிடமிருந்து நீ ஒரு முட்டாள் என்பதை இனி நான் கேட்க முடிய போவதில்லை என்பது எனக்கு மிகவும் வருத்தமானதாக இருக்கிறது. நீங்கள் என்னை நீ ஒரு முட்டாள் என்று கூறுவதை நான் விரும்ப தொடங்கி விட்டேன்." என்றான்.
       அதற்கு அவர்,"நீ சர்வ நிச்சயமாக முட்டாளேதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை" என்றார்.
       அதற்கு அவன்,"நான் வெள்ளி சுரங்கத்தை கண்டு விட்டபிறகுமா இப்படிக் கூறுகிறீர்கள்?" எனக் கேட்டான். "ஆம், இதன் பின்னும் நீ முட்டாள்தான்! அதைத் தவிர வேறில்லை. ஏனெனில் இன்னும் சிறிது தூரம் சென்றால் அங்கு தங்க சுரங்கம் இருக்கிறது. அதனால் இன்னும் ஒரு மாதம் வரை காத்திருக்கத் தேவையில்லை. நாளையே வா." என்றார்.
       இந்த முறை அவர் நிச்சயமாக கிணடல் செய்கிறார் எனத் தோன்றியது. ஏனெனில் அப்படி அங்கே தங்கம் இருந்திருக்குமானால் இவர் ஏன் இப்படி இந்த மரத்தடியில் மற்றவர்கள் கொணடு வந்து தரும் உணவை நம்பி, -அவர்கள் கொண்டு வருகிறார்கள் பலதடவை கொண்டு வருவதில்லை.- இதுபோல வெயிலுக்கு ஒரு மறைப்பின்றி, மழைக்கு குடையின்றி குளிருக்கு போதுமான கம்பளியின்றி கஷ்டப் பட வேண்டும். அதனால் அவர் இந்த தடவை கேலிதான் செய்கிறார். ஆனால் அவர் சொல்வது எப்போதும் உண்மையாகத் தான் இருந்திருக்கிறது. மேலும் இதில் என்ன தீங்கு இருக்கிறது. யாருக்குத் தெரியும்? இந்த கிழவன் ஒரு புதிரான ஆளாகத் தான் இருக்கிறார்!
       இன்னும் சிறிது தூரம் சென்றபின் அங்கே மிகப் பெரிய தங்க சுரங்கத்தைக் கண்டான். அவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. இந்த காட்டில்தான் அவன் தன் வாழ்நாள் முழுவதும் விறகுவெட்டி கழித்து வந்தான். அந்த கிழவன் இந்த காட்டின் ஆரம்பத்தில் உள்ள மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு இருக்கிறான். ஆனால் அவனுக்குத் தெரிந்தது, தனக்குத் தெரியவில்லை.
       பை நிறைய தங்கத்தை எடுத்துக் கொண்டுவந்தவன் ஞானியிடம் வந்து, "இனிமேலும் நீ ஒரு முட்டாள் என்று சொல்ல மாட்டீர்கள் என நினைக்கிறேன்." என்றான்.
       அதற்கு அவர், "அப்படியேதான் தொடர்ந்து சொல்லுவேன். இது ஆரம்பம்தான். முடிவல்ல, அதனால் நாளை வா." என்றார்.  
       அவன், "என்னது தங்கம் கிடைத்தது முடிவல்லவா, ஆரம்பம்தானா!" என வியந்தான். அதற்கு அவர், "ஆம், நாளை இன்னும் சிறிது தூரம் உள்ளே சென்றால் அங்கே வைரங்களைக் காண்பாய். ஆனால் அதுவும் முடிவல்ல, ஆனால் நான் உனக்கு அதிகப்படியாக எதுவும் சொல்லமாட்டேன். ஏனெனில் சொல்லிவிட்டால் உன்னால் இன்று இரவு தூங்க முடியாது. அதனால் வீட்டிற்குப் போ. நாளை காலை முதலில் காட்டிற்குள் போய் வைரங்களை எடுத்துக் கொண்டு பின் வந்து என்னை சந்தி." என்றார்.
       அவனால் இரவு முழுவதும் தூங்கவே முடியவில்லை. ஒரு ஏழை விறகுவெட்டி அவனுக்கு செம்பு, வெள்ளி, தங்கம், மற்றும் வைர சுரங்கமும் கூட சொந்தமாகப் போகிறது என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. ஆனால் அவர் இதை ஆரம்பம் என்றல்லவோ கூறுகிறார், வைரத்திற்கு மேல் என்ன இருக்கமுடியும் என்பது அவனுக்கு புரியவில்லை. யோசித்து, யோசித்து பார்த்தபோதும் அவனுக்கு விளங்கவேயில்லை.
       அடுத்தநாள் காலை அதிகாலையிலேயே அவன் அங்கே வந்துவிட்டான். அவர் உறங்கிக் கொண்டு இருந்தார். அவர் காலைத் தொட்டு வணங்கினான். அவர் கண் விழித்து அவனைப் பார்த்தார். "வந்து விட்டாயா? எனக்குத் தெரியும். உன்னால் இரவு முழுவதும் உறங்கியிருக்க முடியாது. போய் அந்த வைரங்களை பார்த்துவிட்டு வா." என்றார்.
       அவன் "வைரங்களை விட உயர்வானவையாக என்ன இருக்க முடியும் எனச் சொல்லுங்கள்." எனக் கேட்டான். அதற்கு அவர் "முதலில் வைரங்கள், பின்பு அடுத்தது, ஒன்றன் பின் ஒன்று! இல்லாவிடில் உனக்கு பைத்தியம் பிடித்துவிடும்." என்றார்.
       அவன் சென்று வைரங்களை எடுத்துக் கொண்டு சந்தோஷத்தில் நடனமாடிக் கொண்டே வந்து அவரிடம்,"நான் வைரங்களை கணடுவிட்டேன், இப்போது நீங்கள் என்னை முட்டாள் என சொல்லமுடியாது." என்றான்.
       அவர் சிரித்துக் கொண்டே, "இன்னும் நீ முட்டாள்தான்." என்றார்.
       அவன்,"இதை நீங்கள் விளக்கிச் சொல்லாவிட்டால் நான் இங்கிருந்து போகப் போவதில்லை" என்றான். அதற்கு அவர், இந்த செம்பு, வெள்ளி, தங்க, வைர சுரங்கங்களைப் பற்றி எனக்குத் தெரியும். ஆனால் நான் அவைகளைத் தேடி போவதில்லை. நான் அவைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஏனெனில் அவைகளை விட மதிப்புள்ள விஷயம் சிறிது தூரத்தில், வெளியே காட்டின் உள்ளே அல்ல – உள்ளே சிறிது தூரத்தில் உள்ளது. அதை நான் கண்டு விட்டதால் வெளியே உள்ள வைரங்களைப் பற்றி கவலைப் படுவதில்லை. இப்போது நீதான் முடிவெடுக்க வேண்டு்ம். உன்னுடைய பயணம் இந்த வைரங்களோடு முடிவடைந்து விட்டது என்றால் என்னைப் பொறுத்தவரை நீ இன்னும் முட்டாள்தான். எனக்கு இந்த சுரங்கங்களைப் பற்றித் தெரியும், ஆனால் நான் அவற்றைப் பற்றிக் கவலைப் படவில்லை. எவ்வளவுதூரம் வெளியே போனாலும் கிடைக்காத ஏதோ ஒன்று உள்ளே கிடைக்கிறது என்பதற்கு நானே சிறந்த சாட்சி. அது உன் உள்ளேதான் கிடைக்கும்," என்றார்.  
       அவன் வைரங்களை கீழே போட்டான். "நான் உங்கள் அருகே உட்காரப் போகிறேன். நான் ஒரு முட்டாள் என்ற உங்களுடைய எண்ணத்தை நீங்கள் மாற்றிக் கொள்ளும்வரை நான் இங்கிருந்து நகரப் போவதில்லை." என்றான்.   
       அவன் ஒரு அப்பாவி, வெகுளித்தனமான விறகுவெட்டி.
       தகவல் அறிவுநிரம்பிய ஆசாமிகளுக்கு உள்ளே செல்வது கடினம். அந்த விறகு வெட்டிக்கு அது கடினம் அல்ல.
       விரைவிலேயே அவன் ஒரு ஆழ்ந்த அமைதிக்கு, ஒரு ஆனந்தத்திற்கு, ஒரு உள்ளார்ந்த மௌனத்திற்கு ஆளானான்.  
       ஞானி அவனை உலுக்கி, "இதுதான் அது! இனி நீ காட்டிற்குள் போக வேண்டிய அவசியம் இல்லை. நான் உன்னை சொன்ன முட்டாள் என்ற வார்த்தைகளை விலக்கிக் கொள்கிறேன். நீ ஒரு விவேகி. இப்போது நீ உன் கண்களைத் திறக்கலாம். இந்த உலகம் முன்பு எப்படி எந்த கலரில் இருந்ததோ, அப்படி இல்லாமல் புது விதமாக புது மாதிரியாக, தோன்றுவதைப் பார்க்கலாம். மக்கள் என்பு தோல் போர்த்திய உடம்பாக இல்லாமல், அவர்களும் ஒளிவிடும் ஆன்மீக உயிர்களாக ......... இந்த பிரபஞ்சத்தில் தன்னுணர்வு எனும் கடலாக பார்க்கலாம்." என்றார்.  
       விறகுவெட்டி கண்களைத் திறந்தான்.
       அவன் ஞானியைப் பார்த்து, "நீங்கள் மிகவும் வித்தியாசமானவர். இதை நீங்கள் முன்பே கூறியிருக்க வேண்டும். நான் கிட்டதட்ட என் வாழ்நாள் முழுவதும் இந்த காட்டிற்கு வந்து கொண்டு இருக்கிறேன்.. நீங்கள் இந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஏன் இவ்வளவு நாள் காத்திருந்தீர்கள்?" என்று கேட்டான்.
       அதற்கு அவர். "நான் சரியான தருணத்திற்கு காத்திருந்தேன்". காலம் கனிவது என்பதன் பொருள், கேட்பது மட்டுமல்லாமல் புரிந்து கொள்ளப்படவும் வேண்டும். பயணம் மிகச் சிறியதுதான். ஆனால் புரிந்துகொண்டு ஒவ்வொரு அடியையும் சென்றடைந்தால்தான், அதையும் தாண்டி செல்லலாம், செல்லவேண்டும் என்பது தெரியும்,
       மீண்டும் தேடல் தலைதூக்கும்...
       தேடலின் முடிவே முடிவற்ற ஆனந்தம்தான் என்பது தெரியும்....
       அதற்கு ஒவ்வொரு செயலிலும் ஆனந்தத்தை காண வேண்டும்....
       முடிவற்ற ஆனந்தநிலை அடைவீர்கள்.....

Friday, December 31, 2010

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? - 2 ஆனந்தம்:

      கடவுள் இருக்கிறார் என்று யாரோ சொன்னதற்க்காக நம்புவதோ, கடவுள் இல்லை என்று யாரோ சொன்னதற்க்காக மறுதலிப்பதோ எப்படி புத்திசாலித்தனம் ஆகும்?
       கடவுளை நம்புவதும் நம்பாததும் கடவுளின் பிரச்சனை இல்லை அது முழுக்க முழுக்க உங்கள் பிரச்சனை.
       ராமர் இருந்தாரா, கிருஷ்ணர் வந்தாரா, ஜீஸஸ் இருந்தாரா, நபிகள் வந்தாரா என்பதா பிரச்சனை?
       உங்கள் அனுபவம் என்ன?
       யூதர்கள் கடவுளுடன் நேரடித் தொடர்பு வைத்திருப்பதாகச் சொல்லிக் கொள்பவர்கள். அவர்களைப் பற்றி ஒரு வேடிக்கைக் கதை.....
       யூதர்களின் தலைவரான ஜோஷ்வா கோல்டுபெர்க் வருடத்திற்கொரு தடவை சொர்கத்திற்குப் போய் கடவுளுடன் அமர்ந்து விருந்து உண்ணும் உரிமை பெற்றிருந்தான்.
       அப்படி ஒருமுறை கடவுளுடன் விருந்துக்கு அமர்ந்திருந்த நேரம்.... வருடா வருடம் மாற்றமில்லாமல் வறட்டு ரொட்டிகள் தான் பரிமாரப்படுவது தான் வழக்கம்.
       'கடவுளே ஒரு சந்தேகம் என் மனதை அரித்துக் கொண்டிருக்கிறது' என்று கேட்டு விட்டு ரொட்டியை கஷ்டப்பட்டு மென்றான் ஜோஷ்வா.
       'கேள்,மகனே!'
       'உங்கள் சாம்ரஜ்ஜியத்தில் உங்களுக்கு நெருக்கமானவர்கள் நாங்கள் மட்டும் தானா? வேறு யாராவது உண்டா?' என்று அடுத்த ரொட்டித் துண்டை விழுங்கித் தண்ணீரைத் தொண்டையில் சரித்துக் கொண்டான்.
       'சந்தேகமே வேண்டாம். வேறு யாருக்கும் அந்த சிறப்புரிமை இல்லை. அதனால் தான் உன்னை மட்டும் விருந்துக்கு அழைத்தேன்...'
       ஜோஷ்வா கையில் எடுத்த ரொட்டித்துண்டை கீழே போட்டுவிட்டு எழுந்து, 'எத்தனை நாட்களுக்கு எங்களுக்கே இந்த அவஸ்த்தை? வேறு யாரையாவது உங்களுக்கு நெருக்கமானவர்களாக தேர்ந்தெடுத்துக் கொள்ளக்கூடாதா?' என்றான் கோபமாக.
       இப்படிக் கடவுளுக்கு நெருக்கமானவர்களாக சொல்லிக் கொள்பவர்களுக்குத் தானே அதிக வேதனை?
       இவர்கள் கடவுள் என்பதன் உன்னதத்தை புரிந்து கொள்ளவில்லை. கடவுளைப் பற்றிய உண்மையான அனுபவத்தை பெற்றதில்லை.
       ஆனாலும் கடவுளுக்கும் மற்றவர்களுக்கும் இடைத்தரகர்களாக இருந்து ஆதாயம் தேட, இவர்கள் போடும் நாடகங்கள் சகிக்க முடியாதவை.
       கடவுளை நீங்கள் முழுமையாக நம்பி வாழ்ந்திருக்கிறீர்களா?
       சிலர் இருக்கிறார்கள்... நெருக்கமானவர்களுக்கு உடல்னிலை மோசமாக இருந்தால் கடவுளிடம் வேண்டிக்கொள்வார்கள்.
       அப்படியும் அவர்கள் பிழைக்கவில்லை என்றால் 'கடவுள் என்பதெல்லாம் பொய்' என்று வீட்டில் இருக்கும் படங்களை எல்லாம் கழற்றி விட்டெறிவார்கள்.
       தனக்கு ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்று கேட்டு நடக்கவில்லை என்றால், கடவுளே இல்லை என்று சொல்வார்கள்.
       வளர்க்கப்பட்ட விதத்திலும், விதைக்கப்பட்ட் விதத்திலும் தானே உங்களுக்கு கடவுளை நம்பத் தெரிந்திருக்கிறது?
       கடவுள் இருக்கிறார் என்பது ஒரு நம்பிக்கை. இல்லை என்பது இன்னொரு நம்பிக்கை. இருக்கிறாரா? இல்லையா? என்பது உஙளுக்குத் தெரியாது என்பதே பட்டவர்த்தனமான உண்மை.
       எனக்குத் தெரியாது என்று எப்பொது தைரியமாக ஒப்புக்கொள்கிறோமோ, அப்போது தானே எதைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்க்கான வாய்ப்பு முழுமையாகக் கிடைக்கும்!
       வெறும் நம்பிக்கைகளை வைத்துப் பின்னப்படும் கற்பனைகளை எதற்கு ஏற்றுக்கொள்ள வேண்டும்?
       கடவுளைப் பற்றி அறிந்துகொள்ளும் பற்றி அறிந்துகொள்ளும் தாகம் உண்மையிலேயே உங்களுக்கு இருந்தால், மற்ற‌வர்கள் சொல்லிக் கொடுத்ததை குருட்டுத்தனமாக நம்புவதை முதலில் விட்டுவிடுங்கள்.
       கடவுள் இருக்கிறாரா? என்று நீங்களே தேடுங்கள்,
       உங்கள் தேடலை உங்களிடமே ஆரம்பியுங்கள்.
       எல்லையற்ற கடவுள் என்றொருவன் எல்லா இடங்களிலும் இருப்பது உண்மையாக இருந்தால், அந்தத் தன்மை உங்களிலும் இருக்கவேண்டுமே?
       உருவமாகத் தேடாமல் கடவுள் தன்மை என்பதை முதலில் உங்களில் தேடிப் பாருங்கள்.
       உங்களுக்குள் கடவுளைக் கவனித்து அனுபவமாகப் பெற்றுவிட்டால். அப்புறம் அவன் எங்கும் இருப்பதை உணர்ந்து கொள்ளலாம், கடவுள் இருப்பதாக ஒப்புக்கொள்ளலாம்.
       ஒரு விசயத்தை முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.
       உங்களுக்குப் புத்திசாலித்தனமாக வாழ்க்கையை நடத்தத் தெரிந்திருந்தால், கடவுள் இல்லாமலும் சுகமாக வாழலாம்.
       வாழ்க்கையைப் பற்றி புரிந்து கொள்ளாமல், மூடத்தனமாக வாழ்பவராக இருந்தால் பூஜை அறையில் எத்தனை கடவுள் படங்களைத் தொங்க விட்டிருந்தாலும் புண்ணியமில்லை......

வாழ்க வளமுடன்!