Tuesday, July 26, 2011

உண்ணாவிரதப் போராட்டம் ஆனந்தம்


      இன்றைக்கு ஏதாவது பிரச்னை என்றால், அரசியல்வாதிகள் உண்ணாவிரதம் என்று அறிவிக்கிறார்கள். பிரபலம் அடைகிறார்கள். அவர்களுக்கு உடல்நலம் மோசமானால், மக்கள் கொதித்து எழுந்து வன்முறையில் ஈடுபடுகிறார்கள். ஆட்சியில் இருப்பவர்களை அச்சுறுத்தும் ஆயுதமாகிவிட்ட உண்ணாவிரதப் போராட்டத்தைத் தடைசெய்தால் என்ன?''
      ''பொதுவாக, போராட்டம் என்றால் என்ன நடக்கிறது? கடை அடைப்பு அறிவிக்கிறார்கள். தொழில் நடத்துபவர்கள் தாக்கப்படுகிறார்கள். வேலைக்குச் செல்பவர்கள் மிரட்டப்படுகிறார்கள். பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் அடைக்கப்படுகின்றன. தெருவில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, தீ வைத்துக் கொளுத்தப்படுகின்றன.
      நினைத்ததைச் சாதிப்பதற்காக, சாலை மறியல்களில் ஈடுபட்டு மக்களின் அன்றாட வாழ்வைப் புரட்டிப்போடுவதைவிட, உண்ணாவிரதம் சிறப்பான போராட்டம் இல்லையா?வாகனங்கள் மீது கல் எறிவதிலும், பேருந்துகளுக்குத் தீ வைப்பதிலும், கடைகளை உடைத்துச் சூறையாடுவதிலும் ஈடுபடாமல், உண்ணாவிரதம் அறிவித்து அமைதியாக
எதிர்ப்பைக் காட்டுவது கண்ணியமான போராட்டம்.
      இந்தியாவில் இரண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். வயிறு பெருத்தவர்கள். வயிற்றுக்குக் கிடைக்காதவர்கள். வயிறு பெருத்தவர்கள் உண்ணாவிரதம் இருந்தால், அது அவர்களுக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது.
      பிரேசிலில் ஒரு நாடோடிக் கதை உண்டு.
      ஒரு பாதிரியார் வாரத்துக்கு ஒரே ஒரு முறை உணவு அருந்தி ஓர் ஆண்டு முழுவதும் விரதம் இருந்தார். கேட்டால், பைபிளில் உள்ள குறிப்பிட்ட வாசகங்களுக்கு நேரடியாகக் கடவுளிடம் இருந்து அர்த்தம் அறியப்போவதாகச் சொன்னார். ஆனால், கடவுளிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை.
      ''சே, உணவையே விட்டுக்கொடுத்தேனே? கடவுளுக்குக் கருணையே இல்லை. வேறு அறிஞர் யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொண்டால் போயிற்று!'' என்று அவர் சொன்னதுதான் தாமதம், அவர் முன் ஒரு தேவதை தோன்றியது.
      ''ஒரு வருடம் உண்ணாவிரதம் இருந்தது, மற்றவர்களைவிட நீ உயர்ந்தவன் என்று காட்டிக்கொள்வதற்காக. அப்படிப்பட்டவர்களுக்குக் கடவுள் உதவுவது இல்லை. இப்போது மற்றவர்களிடம் கேட்டு அறியலாம் என்று உன்னிடம் பணிவு வந்தது. உனக்கு விளக்கம் கொடுக்கக் கடவுள் என்னை அனுப்பினார்'' என்றது.
      உங்கள் கொள்கைக்காக உண்ணாவிரதம் என்று நாடகம் போடுவது சரியல்ல. உண்மையான உறுதியுடன் உண்ணாவிரதம் இருந்தால், அது நிச்சயம் வெற்றிபெறும்.
      உண்ணாவிரதம் இருக்கும் தலைவருக்கு உடல்நிலையில் ஏதாவது பிரச்னை வந்தால், தொண்டர்கள் கொதித்துப்«¦பாகிறார்கள். எதையெல்லாம் தலைவர் தவிர்த்தாரோ, அவற்றில் தவறாமல் ஈடுபடுகிறார்கள். பஸ்களுக்குத் தீ வைக்கிறார்கள். கடை அடைப்பை
வற்புறுத்துகிறார்கள். ரயில் தண்டவாளங்களைப் பெயர்த்து எறிகிறார்கள்.
      இதை நிறுத்த வேண்டுமானால், உண்ணாவிரதத்தில் அமர்வதற்கு முன் தலைவர் இப்படி ஓர் அறிக்கை வெளியிட வேண்டும். வன்முறையில் ஈடுபடுவது நம் கொள்கைகளுக்கு எதிரானது. எனக்கு ஏதாவது நடந்தால், எதிர்ப்பைக் காட்ட நினைக்கும் தொண்டர்கள் அனைவரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட வேண்டும்.'
      ஒரு மனிதர் ஒற்றையாக உண்ணாவிரதம் இருந்தால், நாடு அவரை அலட்சியம் செய்யலாம். ஆனால், நூற்றுக் கணக்கானோர் அமைதியாக உண்ணாவிரதம் மேற்கொண்டால், நாடு அதைக் கவனிக்காமல் தவிர்க்க முடியாது.
      சுமார் 50 வருடங்களுக்கு முன்பு ஆந்திராவில் நடந்த சம்பவம் இது. குறிப்பிட்ட ஒரு கோரிக்கைக்காக 58 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணம் அடைந்தார் ஒருவர். அதே கோரிக்கைக்காக அடுத்த நபர் உண்ணாவிரதத்தில் அமர்ந்தபோது, பத்தே நாட்களில் தீர்வு கிடைத்தது.
      1814. பிரான்ஸ் தேசத்துக்கும் பிரிட்டனுக்கும் நடந்த போர் முடிந்திருந்தது. சிறைப்பிடிக்கப்பட்ட ஆங்கிலேய ராணுவக் கைதிகளைச் சொந்த நாட்டுக்கு அனுப்ப பிரான்ஸ் அரசு முடிவு செய்தது. அவர்களை அழைத்துச் செல்ல கப்பல் வரும் வரை, அவர்களை விருந்தினர்களாக ஏற்று, கவனித்து உணவு வழங்கும் பொறுப்பு உள்ளூர் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
      இரண்டு நாட்கள் சென்றிருக்கும்... ஆங்கிலேயத் தளபதி ஒருவர் பிரான்ஸ் அதிகாரியைச் சந்தித்தார்.
      'கப்பல் வரும் வரை எங்களை மறுபடி சிறையிலேயே அடைத்துவிடுங்கள், பிரபு' என்றார் பிரிட்டிஷ் தளபதி.
      'ஏன்? உங்களைக் கவனித்துக்கொள்ள வேண்டிய குடும்பம் உங்களிடம் மோசமாக நடந்துகொண்டதா?'
      'ஐயோ, அப்படி இருந்தால் பிரச்னை இல்லையே? நாங்கள் தங்கியிருப்பது ஒரு விவசாயியின் வீட்டில். அந்தக் குடும்பத்தில் கணவன், மனைவி, ஆறு குழந்தைகள் இருக்கின்றனர். போர் காரணமாக எங்கும் உணவுப் பற்றாக்குறை. அவர்களிடம் இருக்கும் தானியங்கள் அவர்களுக்கே அரை வயிற்றுக்குத்தான் காணும். அதையும் எங்களுக்கு இன்முகத்துடன் வழங்கிவிட்டு, அவர்கள் இரண்டு நாட்களாகப் பட்டினி கிடப்பதைக்
கண்டுபிடித்தோம். சிறையின் கொடுமைகளை எங்களால் தாங்க முடிகிறது. இந்த ஏழைகளின் கருணையை எங்களால் தாங்க முடியவில்லை' என்றார் பிரிட்டிஷ் தளபதி.
      பிரான்ஸ் அரசு, ஆங்கிலேயர் முன் பெருமையுடன் தலை நிமிர்ந்தது. அதே சமயம், அதன் குடிமக்கள் முன் நன்றியுடன் தலை குனிந்தது. விருந்தோம்பலில் ஈடுபட்ட அத்தனைக் குடும்பங்களுக்கும் மகிழ்ச்சியுடன் பரிசளித்தது.
      நீங்கள் உணவு அருந்தாமல் இருப்பது, வெறும் அரசியல் நாடகமாக இல்லாமல், இது போல் மற்றவர் இதயத்தைத் தொட வேண்டும்.
      அமெரிக்காவில், சாலை விபத்தில் உங்கள் மனைவியை, குழந்தையை, நெருக்கமான உறவினரை, நண்பரை நீங்கள் இழந்திருக்கலாம். ஆனால், அந்த விபத்தில் பொதுச் சொத்து எதையாவது
உங்கள் வாகனம் சிதைத்திருந்தால், அதற்கான கட்டணத்தை நீங்கள் கட்டித்தான் ஆக வேண்டும்.
      பொதுச் சொத்துக்களை விறகுகளைப்போல் நினைத்து தீக்கு இரையாக்கும் வன்முறையாளர்கள் நிச்சயம் நிறுத்தப்பட வேண்டும்.
      நீங்கள் எரித்த வாகனத்துக்காக அதன் சொந்தக்காரன் தன் வாழ்க்கையையே அடமானம் வைத்திருக்கக்கூடும். அதை ஓட்டித்தான் அவனுடைய வயிற்றுப்பிழைப்பே நடக்கக்கூடும். மற்றவர் சொத்தை எரிப்பதற்கு உங்களுக்கு ஏது உரிமை?
      மகாத்மா காந்தி வன்முறையில் நம்பிக்கை இல்லாதவர். அதனால், தன் கொள்கைகளை அடுத்தவர் கவனத்துக்குக் கொண்டுவர மற்றவரை வருத்துவதை விடுத்து, தன்னை வருத்திக்கொள்ள உண்ணாவிரதம் இருந்தார்.
      'என் முன் எரியும் பிரச்னை ஒன்று இருக்கலாம். ஆனால், அதற்காக என் உயிரை முன்வைத்தேனே தவிர, உங்கள் உயிரை நான் துச்சமாக நினைக்கவில்லை' என்பதே மகாத்மா காந்தி மற்றவர்களுக்கு முன்வைத்த சேதி.
      'என் கொள்கைக்காக, உங்கள் உயிரையோ, அன்றாட அலுவல்களையோ எந்தவிதத்திலும் ஆபத்துக்கு உள்ளாக்க மாட்டேன்' என்பதுதான் அரசியல்வாதிகள் விடுக்கும் சேதியாக இருக்க வேண்டும். தொண்டர்களும் அதை முழுமனதாகப் புரிந்துகொண்டு தலைவருக்கு
ஆதரவு தெரிவிக்க வன்முறையை நாடாமல், உண்ணாவிரதங்களையே நாட வேண்டும்!''

மாபெரும் மனிதராக வேண்டுமா? ஆனந்தம்


      சமூகத்தில் மாபெரும் மனிதராக வேண்டும் என்று நினைப்பதே சிறுமையான மனநிலை. அற்பமாக உணர்பவர்கள் தான் வித்தியாசமாகத் தங்களைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்று முனைவார்கள். சிறப்பானவராகவோ, பெருமைக்கு உரியவராகவோ ஆக வேண்டும் என்று ஆசைப்படுவதற்கு அவசியமே இல்லை.
      மற்றவர்கள் உங்களைக் கவனிக்க வேண்டும் என்று எதற்காக நினைக்கிறீர்கள்?
      அந்தத் திரையரங்கம் நிரம்பிவிட்டது.
      ''எங்கள் இருக்கைகளை வேறு ஒருவன் ஆக்கிரமித்து இருக்கிறான். எவ்வளவு சொன்னாலும் நகர மறுக்கிறான்'' என்று ஒரு தம்பதி மேனேஜரிடம் புகார் செய்தனர்.
      மேனேஜர் கோபமாக உள்ளே சென்றார். ஒரு ஆள் அடுத்தடுத்து மூன்று இருக்கைகளை ஆக்கிரமித்து மல்லாந்து படுத்துக்கிடப்பதைக் கவனித்தார்.
      ''தம்பி, குடித்துவிட்டு வந்திருக்கிறாயா? படம் ஆரம்பிக்கப் போகிறது. உனக்கான இருக் கையில் உட்கார். மற்ற இரண்டு இருக்கைகளை உடனே காலி செய்.''
      படுத்துக்கிடந்தவன் ஏதோ முனகினானே தவிர, அசையவில்லை. மேனேஜர் கோபமாகி போலீஸ்காரரை அழைத்து வந்தார்.
      போலீஸ்காரர் மிரட்டலாகக் கேட்டார்.
      ''டேய், உன் பெயர் என்ன?''
      அவன் இமைகளைக் கஷ்டப்பட்டுத் திறந்தான்.
      ''சங்கரன்'' என்றான்.
      ''எங்கே இருந்து வருகிறாய்?'' என்று அதட்டலாக அடுத்த கேள்வி வந்தது.
      வலி கலந்த முனகலாகப் பதில் வந்தது: ''பால்கனியிலிருந்து.''
      இப்படி மற்றவர்கள் கவனத்தைக் கவர்ந்தவராக மாறவா ஆசை? 'இல்லை. என்னை மற்றவர்கள் போற்றும் அளவு நடக்க வேண்டும்' என்று சொல்கிறீர்களா?
      வாழ்க்கையில் எதை அணுகினாலும், 'நான் என்ன ஆவேன்? எனக்கு என்ன கிடைக்கும்?' என்ற கணக்குகளை நீக்கிவிட்டு வாழ்ந்து பாருங்கள். உங்கள் திறனை 100 சதவிகிதம் முழுமையாகப் பயன்படுத்திச் செயல்படுங்கள். உங்களுக்கான ஆதாயங்களைப் பற்றிய கவனம் இல்லாமல் உங்கள் வாழ்க்கையின் நோக்கம் அமைந்துவிட்டாலே நீங்கள் பெருமைக்கு உரியவராகிவிடுவீர்கள்.
      தவிர, ஒருவர் வாழும் நாட்கள் சரித்திரத்தில் எந்தக் கட்டத்தில் இருக்கின்றன என்பதைப் பொறுத்து அவருக்கான பெருமையும் மாறும். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற நபர் இந்தத் தேசத்துக்கு மிகத் தேவையாக இருந்தபோது கிடைத்ததால்தான் மகாத்மா காந்தி ஆனார். மகாத்மா என்றால், மிகச் சிறந்த உயிர் என்று அர்த்தம். இன்றைய காலகட் டத்தில் அவர் அரசியலுக்கு வந்தால், மற்றவர்க ளோடு தாக்குப்பிடிப்பாரா... யோசியுங்கள்.
      ஊழலிலே மூழ்கிப்போன ஓர் அரசியல்வாதி தனியே ஓய்வு எடுக்க கடற்கரைக்குச் சென்றார். தண்ணீரில் கால்களை நனைத்து அவர் நின்றிருந்த போது, திடீரென்று அலைகள் அவரை உள்ளே இழுத்துச் சென்றுவிட்டன.
      இதைக் கவனித்த இளைஞன் ஒருவன் தண்ணீரில் பாய்ந்தான். அவரைக் காப்பாற்றிக் கரை சேர்த்தான்.
      அரசியல்வாதி வெலவெலத்துப் போயிருந்தார். ''நன்றி, தம்பி. எனக்குப் பெரும் செல்வாக்கு இருக்கிறது. உனக்கு என்ன வேண்டுமோ கேள். நிறை வேற்றிவைக்கிறேன்.''
      ''ஐயா, என் இறுதிச் சடங்குகளை ராணுவ மரியாதையுடன் செய்ய வேண்டும். இதுவே என் ஆசை.''
      அரசியல்வாதி திகைத்தார்.
      ''தம்பி, இவ்வளவு இளைஞனாக இருக்கிறாய். அதற்குள் உனக்கு எதற்கு மரணத்தைப் பற்றிய கவலை?''
      ''நான் கடலில் இருந்து யாரைக் காப்பாற்றி இருக்கிறேன் என்பது வெளியில் தெரிந்தால், என் உயிருக்கு ஏது ஐயா உத்தரவாதம்?'' என்றான், இளைஞன் நடுக்கத்துடன்.
      இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் நிறைந்த இன்றைய இந்தியாவில், மகாத்மா காந்தி தனது நேர்மையான கொள்கைகளை வைத்துக்கொண்டு தேர்தலில் நின்றால், வெற்றி பெற முடியுமாஎன்பதே சந்தேகம்தான்.
      அவர் வாழ்ந்த காலகட்டத்திலும் தான் பெருமைக்கு உரியவராக அறியப்பட வேண்டும் என்ற முனைப்புடனா செயல்பட்டார்? இல்லை. தன் தனிப்பட்ட தேவைகளைப் பின்தள்ளி வைத்துவிட்டு, தேசத்துக்கு எது தேவையானதோ, அதற்கு அவர் முக்கியத்துவம் தந்தார். அதனால், பெருமை பெற்றார்.
      உங்களுக்கு என்ன கிடைக்கும் என்ற ஆதாயக் கணக்கை நீக்கிவிட்டு உங்களைச் சுற்றியுள்ள வாழ்க்கையைக் கவனியுங்கள். தானாகவே உங்களால் என்ன செய்ய முடியும் என்பதைத்தான் கவனிப்பீர்கள். தேவையானதைச் செய்வதற்கு உங்கள் திறமையை இன்னும் எப்படி மேலோங்கச் செய்யலாம் என்று யோசிப்பீர்கள். திறமைகளைக் கூர்தீட்டிக்கொள்வீர்கள்.
      இந்தியாவிலேயே செய்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் பாக்கி இருக்கும் போது, வேலையில்லாத் திண்டாட்டம் என்று பேசுவது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. செய்து முடிப்பதற்கு இன்னும் பல நூறு விஷயங்கள் மிச்சம் இருக்கின்றன. அவற்றைக் கவனிக்காமல், உங்கள் தேவைகளை முன்னிறுத்தி மட்டுமே வேலைகளைத் தேடுவதால்தான் அவை கிடைப்பது இல்லை.
      'எனக்கு என்ன கிடைக்கும்?' என்ற கணக்கு விலகியவுடன் நீங்கள் பிரகாசிக்கத் துவங்கிவிடுவீர்கள்.
      உங்களுக்கு எந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும், எந்த அளவுக்கு மதிப்பு கிடைக்கும் என்பதெல்லாம் உங்கள் திறனைப் பொறுத்துதான் அமையும். தேசத்தில் உயர்ந்தவராக நீங்கள் அறியப்படலாம். அல்லது, உங்கள் ஊரில் பெருமைமிக்கவராக மாறலாம். உங்கள் தெருவில் கவனிக்கப்படுபவராக இருக்கலாம். எதுவும் இல்லாமல், உங்கள் வீட்டளவில் மட்டுமே நீங்கள் சிறப்பானவராக மதிக்கப்படலாம். அதனால் என்ன?
      மற்றவர்கள் உங்களை மகாத்மா என்று அழைக்கட்டும். அழைக்காமல் போகட்டும். அது ஒரு பொருட்டல்ல. உங்கள் அளவில் நீங்கள் மகாத்மாவாக உணர்வீர்கள். மகாத்மாவாக வாழ்வீர்கள்!

Saturday, July 23, 2011

அற்புதமனிதன் ஆனந்தம்


      அனைவரும் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் அன்பும் அக்கறையுமாக இருக்க வேண்டும். அந்த மாதிரி இந்த உலகம் மாற வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு மனிதருக்குமே இருக்கிறது.ஆனால் அதைத் தவறான இடத்திலிருந்து தொடங்க முயற்சிக்கின்றனர்.
      தான் அன்பும் அக்கறையுமாக இருப்பதற்கு முன் மற்றவர் எல்லோரும் அன்பும் அக்கறையுமாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். ஒருவருக்கு அன்பும் அக்கறையும் எப்போது வரும்? மகிழ்ச்சியாகவும் ஆனந்தமாகவும் இருக்கிற நேரங்களில் இயல்பாகவே அன்புடனும், தாராள சிந்தையுடனும் அற்புதமான மனிதராகவும் இருக்கிறார்கள்.
      இதை உங்களிடமே பலமுறை நீங்கள் கவனித்திருக்க முடியும். அதே நேரத்தில் நீங்கள் மகிழ்வற்ற தன்மையிலும் மனவேதனையிலும் இருக்கும் போது காரணமில்லாமலே கூட அனைவர் மீதும் எரிந்து விழுபவராக இருக்கிறீர்கள்.
      எனவே நீங்கள் முதலில் மகிழ்ச்சியானவராகவும் ஆனந்தமானவராகவும் மாற வேண்டியது முக்கியம். உங்களுக்குள் முதலில் இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இல்லாமல் அடுத்தவர் மீது முயற்சி செய்து அன்புடன் இருக்க விரும்பினால் அப்படி அது நடக்காது. எனவே ஒவ்வொருவரும் தாங்கள் முதலில் ஆனந்தம் மிகுந்தவராக மாறுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
      உங்களுக்குள் முதலில் நீங்கள் ஆனந்தமாக இல்லாமல் வெறுமனே நல்ல மனிதர்களை உருவாக்கும் முயற்சி என்றைக்குமே சரியாக பலன் அளித்ததில்லை.மக்கள் ஆனந்தமாக இருக்கும்போது அற்புத மனிதர்களாக இருக்கின்றனர். ஆனந்தமானது அனைத்து தீமைகளுக்கும் எதிரான காப்பீடாக இருக்கின்றது. மக்கள் ஆனந்தமாக இருக்கும்போது தங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் இயல்பாகவே அன்பையும் ஆனந்தத்தையும் பொழிகின்றனர். எனவே மனிதர்களை உண்மையாகவே ஆனந்தம் கொண்டவர்களாக செய்வது தான் ஒட்டுமொத்த வேலையாக இருக்கவேண்டும்.
      அதற்கு ஆன்மீக செயல்முறை அவசியமாக இருக்கிறது. ஆன்மீகம் என்றால் வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்வது என்று பொருளல்ல. ஆன்மீகம் என்றால் முழு அளவில் நீங்கள் உயிரோட்டமாக இருப்பதுதான். வாழ்க்கையின் மையம் வரையில் உயிர்ப்புடன் இருப்பது நீங்கள் ஐந்து வயதாக இருக்கும்போது எவ்வளவு உயிர்ப்புடனும், முழுமையான ஆனந்தத்துடனும் இருந்தீர்கள் என்பதுடன் இப்போது எந்தளவு உயிர்த்தன்மையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறீர்கள். என்று ஒப்பிட்டுப் பார்த்தால் அதன் அளவு குறைந்து காணப்படுகிறதா அல்லது அதிகரித்துள்ளதா?
      பெரும்பாலான மக்களுக்கு அது மிகவும் கீழ் நிலையில் உள்ளது. ஆனால் அது அப்படி இருக்கக் கூடாது வயது கூடுவதனால், உடல்திறன் குறையலாம். ஆனால் மகிழ்ச்சின் அளவும் உயிர்த்துடிப்போடு விளங்கும் தன்மையும் குறையத் தேவையில்லை. ஆனால் வயதாக வயதாக உங்களுடைய மகிழ்ச்சியின் அளவும், உயர்த்துடிப்பும் குறைந்து கொண்டே போகிறது என்றால் நீங்கள் தவணை முறையில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதுதானே அர்த்தம்.
      இது எதனால் என்றால் வாழ்வின் குறிப்பிட்ட சில அம்சங்களில் மட்டும்தான் நீங்கள் கவனம் செலுத்துகிறீர்கள். ஆனால் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் நீங்கள் கவனம் செலுத்தவில்லை யென்றால், நீங்கள் ஒரு முழுமையான வாழ்க்கையை வாழ முடியாது. எனவே உங்கள் மகிழ்ச்சியும் உயிர்த்துடிப்பும் அதிகரிக்க ஆன்மீகத் தேடுதலும் உதவுகிறது.
      ஆன்மீகம் என்பது எப்போதும் தாகமும், தேடுதலும் உள்ளடக்கியது. அதனால்தான் ஆன்மீகப் பாதையில் இருப்பவர்கள் நான் தேடுதலில் உள்ளேன் என்று கூறுகிறார்கள். மாறாக நான் மத நம்பிக்கை கொண்ட வன் என்று கூறும்போது ஏதோ ஒன்றில் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளீர்கள் என்று அர்த்தம். இரண்டிற்கும் குறிப்பிடத்தக்க வேறு பாடு உள்ளது.
     எனென்றால் நம்பிக்கை என்பது உங்களுக்குத் தெரியாத ஒன்றைக் குறித்து ஒரு முடிவுக்கு வருவது அதற்கு மாறாக தேடுதல் என்று கூறும்போது எனக்குத் தெரியாது என்று உணர்ந்து தேட முயற்சிப்பது,
      துரதிஷ்டவசமாக பெரும்பாலான நேரங்களில் நம்பிக்கை முறைகளையே ஆன்மீகம் என்று தவறாகக் கருதிக் கொள்கின்றனர். நீங்கள் எதையோ ஒன்றை இதுதான் என்று உறுதியாக நம்ப ஆரம்பிக்கும் கணத்திலேயே உங்களுடைய வாழ்வின் போக்கில் ஓரளவு இறுக்கத்தைப் புகுத்தி விடுகிறீர்கள். அப்போது அங்கு தளர்வு நிலை இருக்காது. உங்களுக்குள் இறுக்கமாக இருப்பது என்றைக்குமே ஆன்மீகம் அல்ல.
     எப்போது உங்களுக்குத் தெரியாது என்று உணர்ந்து ஒப்புக்கொள்கிறீர்களோ, அப்போது உங்களுக்குள் நீங்கள் தளர்வாக இருக்கிaர்கள். எப்பொழுதெல்லாம் நீங்கள், ‘இது எனக்குத் தெரியும்’ என்று நம்புகிறீர்களோ அப்பொழுது உங்களுக்குள் இறுக்கம் வந்து விடுகிறது. இந்தக் கடுமை உங்கள் செயல்களில் மட்டும் இருப்பதில்லை. உங்கள் வாழ்க்கையின் எல்லாப் பக்கங்களிலும் இந்தக் கடுமையைப் பரவ விடுகிறீர்கள். இந்தக் கடுமைதான் உலகின் பெரும்பாலான துன்பங்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
      மனிதர்கள் எப்படி இருக்கின்றனரோ அதே விதமாகத்தான் சமூகமும் இருக்கும். ஆகவே, தங்கள் கருத்துக் களிலேயே சிக்கிப் போகும் மனிதர் களைக் காட்டிலும் வளைந்து கொடுக்கும் தன்மை, திறந்த மனத்துடன் இருக்கும் தன்மை கொண்ட மனிதர்களையே நாம் உருவாக்கத் தேவையி ருக்கிறது.
      தங்களுக்குள் ஆனந்தமாக இருக்கும் மனிதர்கள்தான் வளைந்து கொடுக்கும் தன்மை தளர்வு நிலை போன்றவற்றுடன் இருக்க முடிகிறது. எனவே நீங்கள் முதலில் ஆனந்தமானவராக மாறும்போது உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலை ஆனந்தமானதாக மாறுகிறது. உங்களின் ஆனந்தமான சூழ்நிலையே அடுத்தவரின் மனத்திலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
      இப்படி சமூகத்தில் ஒவ்வொருவரும் தங்களுக்குள் ஆனந்தமானவராக மாறும்போது ஒருவருக்கொருவர் அன்பும் அக்கறையுமாக இருப்பது இயல்பாகவே நிகழ்ந்து விடும். அப்போது அந்த சமூகமே அற்புதமானதாக இருக்கிறது.

Friday, July 22, 2011

வாழ்வின் அருமையான தருணங்கள் ஆனந்தம்


      அமைதி என்பது நம் உள்ளம் சார்ந்த விஷயமே. எந்த இடத்தில் இருந்தாலும் மனம் கூடவே தான் இருக்கும். அமைதியைத் தேடி மலைகளுக்குச் செல்கிறீர்கள் என்றால், மலை அமைதியாக இருப்பதாகத் தான் அர்த்தமே தவிர நீங்கள் அமைதியாக இருப்பதாக அர்த்தம் அல்ல. இரைச்சல் மிக்க சந்தைக்கு நடுவிலும் அமைதியாக இருக்க முடிந்தால் தான் நீங்கள் அமைதியானவராக இருப்பதாக அர்த்தம்.
      மகிழ்ச்சியாக இருக்கும் போது, உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு நீங்கள் அற்புதமான மனிதர் தான். ஆனால், மகிழ்ச்சியின்றி இருக்கும்போது, இந்த உலகுக்கு நீங்கள் ஒரு ஆபத்தான மனிதர். நமது மனநிலை நாம் இருக்கும் சூழ்நிலையை வெகுவாகப் பாதிக்கிறது.
      உங்கள் வாழ்வின் மிக அழகான தருணங்கள் நீங்கள் மகிழ்ச்சியைத் தேடிக் கொண்டு இருந்த கணங்கள் அல்ல. நீங்கள் மனமகிழ்ச்சியை வெளிப்படுத்திய நல்ல தருணங்களே. அமைதியும் ஆனந்தமும் வாழ்வின் உச்சக்கட்ட நிலை அல்ல. அவை வாழ்வின் தொடக்கமே.
      அன்பு என்பது வெறும் பேச்சளவில் இருக்கக் கூடாது. அது செயல் வடிவம் பெற வேண்டும். மற்றவர்களுக்காக பொறுப்பேற்றுக் கொள்வது தான் உண்மையான அன்பின் அடையாளம் ஆகும். முழுமையான பொறுப்புணர்வில் தான் மனிதன் அற்புதமான அனுபவங்களைப் பெறுகிறான்.

Wednesday, July 20, 2011

முன்னோர்களுக்காக திதி செய்ய வேண்டுமா? ஆனந்தம்

      பெற்றோர், முன்னோர் மூலமாகத் தான் நாம் இந்த உலகிற்கு வந்தோம். அவர்கள் உயிரைக் கொடுக்கா விட் டாலும் இந்த உடலைக் கொடுத்தவர்கள் அவர்களே. எனவே, நன்றி உணர்வோடு திதி செய்ய வேண்டும்.
      மறைந்தவர்களின் புகைப் படத்தை சுவரில் மாட்டி வைத்தால் மட்டும் போதாது. அவர்களை வருடத்திற்கு ஒரு முறையாவது அவசியம் சிந்திக்க வேண்டும். அவர்கள் பெயரில் முடிந்த நல்லவற்றை செய்யுங்கள். காகம், பசு போன்ற உயிர்களுக்கு உணவளியுங்கள். அதாவது திதி எனபது இவ்வாறாக இருக்க வேண்டும். அதனால், நல்ல மாற்றத்தை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் காண்பீர்கள்.
      அவர்களது நினைவு நாளில் உணவுக்காக வாடும் ஏழைகளுக்கு உணவளியுங்கள். உறவினர்களை மட்டும் அழைக்காமல் ஏழை, எளியவர்களையும் அழைத்து உணவிடுவது தான் சாலச்சிறந்தது.
      ஏழைகள் உண்பதால் இறந்தவரின் ஆன்மா சாந்தி அடைகிறதோ இல்லையோ நிச்சயமாக நமக்கு நன்மையகள் உண்டு. நம் நிம்மதிக்காகவும், ஆனந்தத்திற்க்காகவும் அமைதிக்காவும் இந்த நல்ல விஷயத்தை மேற்கொள்ள வேண்டும்.

Monday, July 18, 2011

அன்பினால் வியாபாரம் ஆனந்தம்

      அனைவரிடமும் அன்பாக இருக்க வேண்டும், நேசம் செலுத்தி அவர்களால் விரும்பப்படுபவராக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறோம். ஆனாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களால் அவ்வாறு இருக்க முடிவதில்லை. இந்த அன்பு நிலையை அடைவதற்கு, மற்றொருவரின் உதவி தேவையில்லை.
      ஆனால், அன்பு என்பது மற்றொரு நபரின் தூண்டுகோல் இருந்தால் மட்டுமே வெளிப்படும் என்ற மாயையான நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளார்கள். அன்பு என்பதை தனிமையில் இருக்கும்போது நமக்கு நாமே கூட செலுத்திக் கொள்ளலாம். பிறர் மீது, அன்பு செலுத்த விரும்புபவர்கள், அதற்கான சூழலை உருவாக்கிக் கொண்டாலே போதும்.
      தற்போது மற்றவர்களை எப்படி பயன்படுத்துவது என்பதின் இலக்கணமாகத்தான் அன்பு கருதப்படுகிறது. ஒருவர் யார் மீது அன்பு செலுத்துகிறாரோ, அவர் இவரது விருப்பத்திற்கேற்ப நடந்து கொள்பவராக இருக்க வேண்டும் என்ற வரைமுறையும் வகுக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் தங்களுக்கு பிடிக்காத கொள்கை உடையவர்களை விரும்புவதில்லை. இத்தகைய செயல் வியாபாரமாக கருதப்படுமே தவிர நிச்சயமாக அன்பாக இருக்காது.
      ஒருவருக்கு பொருளோ, இன்பமோ தேவைப்படும் நேரத்தில் அதனை அடைவதற்காக சம்மந்தப்பட்ட நபரிடம் அன்பு செலுத்தக்கூடாது. உண்மையான அன்புடன் இருந்தால் விரும்பும் அனைத்தும் எளிதாக கிடைக்கும் என்ற மனப்பக்குவம் அனைவருக்கும் வர வேண்டும். இந்த மாதிரியான அன்பு இருந்தால் வாழ்க்கை முழுதும் ஆனந்தம் நிறைந்திருக்கும்.

Sunday, July 17, 2011

பசுவதை ஏன் கூடாது? ஆனந்தம்

      நமது கலாச்சாரத்தில் பசு, பாம்பு மற்றும் காகம் ஆகிய மூன்று உயிரினங்களுக்கம் தனி இடம் தரப்பட்டுள்ளது. உடலின் பரிணாம வளர்ச்சியைப் பார்க்கும்போது, குரங்கு நமக்கு மிக அருகில் இருக்கிறது. ஆனால், ஆத்மாவின் பரிணாம வளர்ச்சியைப் பார்க்கும் போது இம்மூன்றுமே நமக்கு அருகாமையில் உள்ளன. இந்த உயிர்களைக் கொல்வது என்பது கிட்டத்தட்ட மனித உயிர்களைக் கொல்வது போலத்தான்.
      கிராமங்களில் இன்னமும் மனிதர்கள் பசுக்களுடன் மிக ஆழமான உறவு வைத்துள்ளனர். உயிரினங்களில் பசுமட்டுமே மனிதனைப் போல ஆழமான உணர்வுகளைக் கொண்டுள்ளது. நீங்கள் துக்கமாக இருந்தால் பசு உங்களுக்காக உண்மையாகவே கண்ணீர் விடும்.
      இயற்கையில் எந்த வனவிலங்கைத் தொட்டாலும் எதிர்ச்செயல் புரியும். ஆனால், நளினமாகக் கையாண்டால் விஷப்பாம்பு கூட எதிர்ப்பினைக் காட்டுவதில்லை.
      ஆன்மிகசக்தி உள்ள இடங்களை நாடி பாம்புகள் தானாகவே வந்து விடும். சில யோகிகள் பாம்பு மற்றும் பசுவிற்கு பிறவிச்சுழற்சியிலிருந்து விடுதலை அளித்த சம்பவங்களும் உண்டு. மற்ற உயிரினங்களை அப்படி விடுவிக்க முடியாது. பசுவையோ, பாம்பையோ தெரிந்தோ, தெரியாமலோ கொல்ல நேர்ந்தால் மனிதர்களைப் புதைப்பது போல அதைப் புதைக்கவேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.