Showing posts with label வெறுப்பு. Show all posts
Showing posts with label வெறுப்பு. Show all posts

Monday, December 3, 2012

உங்களால் கணக்கிடமுடியாதவையே மதிப்பானவை - ஆனந்தம்



   
      நான் ஒரு உயர்ந்த வணிகக் கல்வி நிறுவனத்தை பார்வையிடச் சென்ற பொழுது, அங்கு அவர்கள், “உங்களால் கணக்கிட முடியாதவை மதிப்பற்றவை” என்று கற்பிப்பதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இல்லை, உங்களால் எதை கணக்கிட முடியாதோ அதுவே மதிப்பானது. உங்கள் வாழ்க்கையில் எதை உங்களால் கணக்கிட முடியுமோ அதன் முக்கியத்துவம் குறைவுதான். உங்களால் கணக்கிட முடிந்தது என்பது உங்கள் வருமானம்தான். வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தலாம். ஆனால் ஒரு வாழ்க்கையை உருவாக்க முடியாது. பிழைப்பு நடத்தியே உங்கள் வாழ்க்கையை கழிக்க வேண்டுமா அல்லது ஓர் நல்ல வாழ்க்கையை உருவாக்க வேண்டுமா? ஒவ்வொரு மனிதனும் தேர்ந்தெடுக்க வேண்டியது இதைத்தான்.
      துரதிர்ஷ்டவசமாக இன்றைக்கு பெரும்பாலான மனிதர்களின் வாழ்க்கைமுறை செயற்கைத்தனமாகவும் விலை உயர்ந்ததாகவும் இருப்பதால் அவர்கள் வாழ்க்கை முழுவதும் பிழைப்புக்காகவே செலவிடுகிறார்கள். வீடு வாங்குகிறார்கள், 30 வருடம் வீட்டிற்கு அடைமானமாகி விடுகிறார்கள். வீடு அடமானமாகாது, அவர்கள் தான் அடமானமாகி விடுகிறார்கள். பின்னர் கார் வாங்குகிறார்கள், அதற்கு 10 வருடம் அடமானம். அவர்கள் கல்விக்கான கடன் தொகையை அடைப்பதற்கே 15 வருடங்கள் ஆகிவிடுகின்றன. இன்றைக்குத்தான் ஒரு செய்திதாளில் படித்தேன். வரும்காலத்தில், பூமியில் இனி பிறக்கும் மனிதர்களில் மூன்றில் ஒருவர் 100 வருடம் வரை வாழ்வார்களாம். கல்வியை 32 வயதில் முடித்து அதற்கான கடன் தொகையை 50 வயதில் அடைத்து, 45 வயதில் திருமணம் செய்து 70, 72 வயதில் ஒய்வுபெற்று விடுவார்கள். அதன் பிறகு உள்ள 30 வருடங்களுக்கு இருக்கவே இருக்கிறது மருத்துவ காப்பீட்டுத் திட்டம். மருத்துவர் பின் மருத்துவராக தேடிச் செல்ல வேண்டியதுதான்.
      நீங்கள் ஒரு நல்ல வாழ்க்கையை உருவாக்கத் தேர்ந்தெடுத்தால், இந்த சமூகத்திற்கு என்ன செய்ய முடியும் என்கிற ரீதியில் யோசிக்காதீர்கள். உங்களுக்கென்று ஏதாவது அற்புதமான செயலை செய்தீர்களேயானால், இயல்பாகவே அதை மற்றவருடன் பகிர்ந்துகொள்வதை நீங்கள் தவிர்க்க முடியாது. மிகவும் அற்புதமான ஒன்று உங்களுக்குக் கிடைத்தால் அதை பகிர்ந்துகொள்ளத் தோன்றாதா என்ன? உங்களுக்கு கணக்கிடக் கூடிய விஷயங்களைத் தான் பகிர்ந்துகொள்ளத் தோன்றாது. வாழ்க்கையில் கணக்கிட முடியாத சில அம்சங்கள் இருப்பதை நீங்கள் புரிந்துகொண்டால், அவை என்றுமே குறைவதில்லை என்று உணர்வீர்கள். மதிப்பிட்டு சேமித்து வைக்கக் கூடிய பொருட்கள்தான் ஒரு நாள் சென்று விடுமோ என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும். ஒரு கோடி ரூபாயை சேமித்து நீங்கள் வைத்திருந்தால், அதை வெளியே எடுத்தால் செலவழிந்துவிடும் என்ற பயம் இருந்து கொண்டேயிருக்கும். உங்களுக்குள் மகிழ்ச்சி இருந்தால், பரவசம் இருந்தால், ஞானோதயம் இருந்தால் அது செலவழியாது, எனவே பூட்டி வைக்கத் தேவையில்லை என்று அறிவீர்கள். அப்பொழுதுதான் உதவிக்கரம் நீட்டி என்ன தேவையோ அதை உங்களால் செய்ய முடியும்.
      இந்த உலகிற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்களுக்குப் பிடித்தமானது அல்ல. இந்த உலகிற்கு என்ன தேவையோ அதைத்தானே செய்ய வேண்டும்? உங்களுக்கு எது பிடித்ததோ அதைச் செய்யாமல் எது தேவையோ அதைத் செய்ய வேண்டும். குறிப்பாக மேற்கத்திய கலாச்சாரங்களில் இதை மாதிரி தவறான பிரச்சாரம் செய்கிறார்கள், “உங்களுக்கு விருப்பமானதைச் செய்வதே சுதந்திரம்.”
      உங்களுடைய விருப்பு வெறுப்புகள் என்பது ஒரு கட்டுப்பாட்டு நிலை. உங்களுக்கு விருப்பமானதைச் செய்ய முடியவில்லையென்றால் வேதனைப்படுவீர்கள். நீங்கள் வெறுப்பதைச் செய்ய நேர்ந்தால் வேதனைப்படுவீர்கள், இது ஒரு கடுமையான கட்டுப்பாடு, ஒரு பொறி என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய விருப்பங்களுக்காகவே உங்கள் வாழ்க்கையை நீங்கள் செலவழித்தால், ஒரு ஆழமான பொறிக்குள் சிக்கிக்கொள்வீர்கள். உங்களுடைய விருப்பங்ள் எந்நேரமும் உங்களைத் துன்புறுத்திக்கொண்டே இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
      உங்களுக்கு என்ன பிடிக்கும் என்பதைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். முதலில் அந்த மாதிரி ஒரு மனநிலையை உருவாக்காதீர்கள். என்ன தேவையோ அதை மட்டும் செய்யுங்கள். தேவையானதை நீங்கள் செய்துகொண்டே இருந்தால், எந்நேரமும் எல்லாம் நன்றாகவே இருக்கும். கட்டுப்பாடு என்ற ஒன்றிற்கு இடமே இல்லை. இயல்பாகவே நீங்கள் விழிப்புணர்வு நிலையை அடைந்து விடுவீர்கள். வாழ்க்கையை அனுபவிக்க ஒரே ஒரு வழி விழிப்புணர்வு நிலையடைவதுதான். உங்கள் விழிப்புணர்வு குறைந்து கொண்டே போனால் நீங்கள் வாழ்க்கையை அனுபவிக்க முடியாது.
      நீங்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருந்தால்தான் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க முடியும். உண்மையான விழிப்புணர்வுடன் இருந்தால் எல்லாமே அற்புதமாக இருக்கும். நீங்கள் விழிப்புணர்வு இழந்துவிட்டால் இறந்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.
      எனவே எவ்விதமான வாழ்க்கை வாழ்வது என்பது உங்கள் விருப்பமாக இருக்கக் கூடாது. வாழ்வா சாவா என்பதைப் பற்றிதான் இருக்க வேண்டும். ஏனென்றால் விழிப்புணர்வு ஒன்றுதான் வாழ்க்கையை நடத்திச் செல்லும்.
      விழிப்புணர்வில்லாத நிலையில் நீங்கள் இருந்தால் மரணத்தை நோக்கி தவணை முறையில் செல்கிறீர்கள் என்று அர்த்தம். வாழ்க்கையில் கணக்கிடக்கூடிய விஷயங்களில் நீங்கள் அதிக நேரம் செலவழித்தால் நீங்கள் மேலும் மேலும் விழிப்புணர்வில்லாத நிலையடைகிறீர்கள்.
      கர்நாடகாவில் ஒர் அற்புதமான துறவி இருந்தார். அல்லமா மஹா பிரபு என்று பெயர். பல்லாயிரக்கணக்கான கவிதைகள் எழுதியவர். ஒரு கவிதையில் அவர் இப்படி வருந்துகிறார் “ஒரு மனிதன் நீரில் மூழ்கிக்கொண்டிருக்கும்பொழுது கூட அவனுடன் பேச முடியும். ஒருவனைப் பாம்பு கடித்து விட்டால் அந்த நிலையில் கூட அவனுடன் பேச முடியும். ஆனால் பணம், செல்வம் முதலியவை ஒரு மனிதனைக் கடித்து விட்டால் அவனுடன் பேசவே முடியாது ஏனென்றால் அவன் உணர்விழந்த நிலையில் இருப்பான்,” என்கிறார்.
      கையில் கொஞ்சம் காசு இருந்தால் அது நிலைமையை எளிதாகவும், சாதாரணமாகவும் ஆக்குகிறது. அதற்கு பின்விளைவு எதுவும் இல்லை. உங்களால் கணக்கிட முடியாதவையே வாழ்க்கையில் வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன. எனவே வாழ்க்கையில் கணக்கிட முடியாதவற்றில் உங்கள் வாழ்க்கையை செலவழியுங்கள். என்ன செய்தாலும், நீங்கள் இந்த உலகத்திற்கு பெரிய அர்ப்பணிப்பாக இருப்பீர்கள்.
‍                                               சத்குரு. வாழ்கவளமுடன்!

Wednesday, June 22, 2011

எது வேண்டாம் என்பதை விட என்ன வேண்டும் என சிந்திப்போமா!



      ஆனந்தமான சூழ்நிலை உருவாக வேண்டுமானால் ஆனந்தமாக இருக்கிற மனிதர்களால் மட்டுமே முடியும். பதட்டமானவர்களால் ஆனந்தத்தை ஏற்படுத்த முடியாது. எனவே, எப்போதும் ஆனந்தமாக இருக்க பழகுங்கள்.
      வாழ்க்கையோடு விளையாடுவது, ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் மிகப்பெரிய அற்புதமாகும், ஆனால், வாழ்க்கை நம்மோடு விளையாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
      உடலையும், மனதையும் மேல் நிலைக்குக் கொண்டு செல்வதுடன், அவற்றை புதிய பரிணாமத்திற்கு கொண்டு போய், அவற்றின் மூலம் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்று எண்ணிபாருங்கள்.
      எத்தகைய உலகில் வாழ விரும்புகிறீர்கள் என்று கேட்டால், அனைவரும் அமைதியான உலகில் வாழ விரும்புவதாகவே கூறுகின்றனர். அப்படியானால் அனைவருடைய கனவும் ஒன்றாகவே இருக்கிறது.
      வாழ்க்கையில் இறுக்கமில்லாமல் இயல்பாக செயல்படுகிற போதுதான் மனிதர்கள் பல மகத்தான கண்டுபிடிப்புகளை செய்கின்றனர்.
      எண்ணங்கள் குவியலாக கிடக்கும் போது, குழப்பங்கள் தான் மிஞ்சுகிறது. மனதுக்குள்ளே ஒரு வரிசையை, ஒழுங்கை, அழகை ஏற்படுத்த தியானம் உதவுகிறது.
      மனிதன் தனக்குள் இருக்கிற மிகப்பெரிய சக்தியை வெளிப்படுத்த வேண்டுமானால் அதற்கு ஒரே வழி இயல்பாக இருப்பது தான். இயல்பாக இருப்பது என்பதை, சோம்பலோடு இருப்பது என்று தவறாக பொருள் கொள்ளக்கூடாது. ஆனால், முயற்சிகளை மேற்கொண்ட பிறகும் சுமையோ, சோர்வோ தெரியாத ஒரு நிலைக்குப் பெயர் தான் இயல்பான வாழ்க்கை.
      வாழ்க்கையில் விலக்க வேண்டிய விஷயங்கள் குறித்து திரும்பத் திரும்ப சிந்தித்து பட்டியல் போடுகின்றனர். எது வேண்டாம் என்பதைச் சிந்திப்பதைவிட, என்ன வேண்டும் என்று எண்ணங்களைப் புகுத்துவதுதான் சரியான அணுகுமுறை.
      நதிகள் சங்கமித்திருக்கும் கடலின் நடுப்பகுதியும், தேங்கிப் போகிற குட்டையும் அமைதியாக காணப்படுகிறது. தியானம் என்பது மனிதனை, இயக்கங்கள் கடந்த ஒரு சமுத்திர நிலைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சியாகும். இயல்பான வாழ்க்கை அமைய, தியானம் மிகப்பெரிய சக்தியைக் கொடுக்கும்.
      உங்கள் வாழ்க்கையை நீங்களே தான் வடிவமைக்க வேண்டும், உங்களுடைய வாழ்வை நீங்கள் வடிவமைக்கிற முறையில் தான் உங்களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கை, இந்தச் சமூகத்தின் வாழ்க்கை, இந்த தேசத்தின் வாழ்க்கை அனைத்துமே அடங்கி இருக்கிறது என்பதை அனைவரும் உணரவேண்டும்.
      விருப்பு, வெறுப்பு என்று சிலவற்றை வைத்துக் கொண்டிருக்கும் வரை வாழ்க்கை போராட்டமாகத்தான் இருக்கும் என்பதால், இவற்றை தவிர்த்து வாழ்க்கைக்கு தேவையான நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும்.
      தனக்குள் கடவுளை தேடி உணர்ந்தவர்கள் மற்றவர்களோடு சண்டையிடும் முட்டாள்தனத்தில் ஈடுபடமாட்டார்கள். 

Monday, May 30, 2011

விருப்பு‍-வெறுப்பு அமைதி ஆனந்தம்


      சில விஷயங்கள் எனக்கு வசதியாகவே இல்லை” என்று பலபேர் சொல்லக் கேட்டிருக்கிறோம். வேண்டிய வசதி வாய்க்காததால், வாழ்க்கை சிலருக்கு நரகமாய் இருக்கிறது. ஒரு உண்மை தெரியுமா? உள்ளபடியே வாழ்க்கை எப்போது வசதியாகுமென்றால், சில வசதிகளுக்கான தேவைகள் நம் மனதிலிருந்து நீக்கும் போதுதான்.
      “ஒரு காலத்தில் விஷமாய் இருந்தது. இன்னொரு காலத்தில் அமுதம்”, “ஒரு காலத்தில் அமுதமாய் இருந்தது இன்னொரு காலத்தில் விஷம்” என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். இதுதான் வாழ்க்கையின் அடிப்படை உண்மை. விருப்பு, வெறுப்பு என்று சிலவற்றை வைத்துக் கொண்டிருக்கும் வரை, வாழ்க்கை போராட்டமாகத்தான் இருக்கும்.
      வாழ்க்கையை, தன் தன்மையோடு முழுமையாக நாம் ஏற்றுக்கொள்ளுகிறபோது, வசதி குறைவு என்கிற ஒன்றே வராது. மாறாக ஆனந்தம் மட்டும்தான் நிலைத்திருக்கும். சிலபேர் நிலையான மகிழ்ச்சியை ஆனந்தம் என்று சொல்லுவதைவிட பேரானந்தம் என்று சொல்வதில் கூடுதல் சுகம் காண்கிறார்கள். ஆனந்தம் என்றாலே அது உச்சநிலைதான். பேரானந்தம் என்கிற சொல் மிகையானது. ஆனந்தம் என்பதே பொதுவானது. மகிழ்ச்சிக்கும், ஆனந்தத்திற்கும் இருக்கும் அடிப்படை வேற்றுமை அதுதான்.
      மகிழ்ச்சியை நீங்கள் விலைக்கு வாங்கலாம். அது நீண்டகாலம் நிலைத்திருக்காது. உதாரணத்திற்கு இரண்டு சக்கர வாகனம் வைத்திருப்பவர் ஒரு கார் வாங்கினால் மகிழ்ச்சியடைவார். அந்தக் கார் நிறைய தொந்தரவு தரத் தொடங்கினால், அதே கார் அவருடைய துன்பத்திற்கும் காரணமாகி விடுகிறது. ஆனால், ஆனந்தம் என்பது நம் உள்ளிருந்து ஏற்படுவது. இந்த ஆனந்தம், இன்பம், துன்பம் இரண்டுக்குமே அப்பாற்பட்டது.
      ஒரு மனிதன் எப்போதும் ஆனந்தமயமாக இருப்பானேயானால் சராசரி வாழ்க்கையின் இன்ப, துன்பங்கள் அவனைப் பாதிப்பதில்லை. அதற்காக வாழ்க்கையின் அன்றாட அம்சங்களிலிருந்தும் அவன் விடுபட்டிருப்பான் என்பதும் அர்த்தமல்ல.
      ஒரு மரணம் நிகழ்கிறதென்றால் அதற்காக வருந்திக்கொண்டே அவனால் ஆனந்தமாக இருக்க முடியும். அவனுடைய அடிப்படைத் தன்மையாகிய ஆனந்தத்தை யாராலும், எந்த சம்பவத்தாலும் மாற்ற முடியாது. அதற்கு ஒரே வழி விருப்பு, வெறுப்பு போன்றவற்றைக் கடந்து வருவது.
      சில விஷயங்கள் நமக்கு வேண்டும், வேண்டாம் என்கிற போதே சில எதிர்பார்ப்புகள், தொடங்கி விடுகின்றன. அந்த எதிர்ப்பார்ப்புகள் அகந்தையின் காரணமாக எழுபவை. அகந்தை உங்களைக் கட்டி வைக்கிற ஒரு கயிறு போல. அதனை அறிவு என்கிற நெருப்பு கொண்டு நீங்கள் எரித்து விட முடியும். எரித்த போதும் அது ஒரு கயிறு போலத்தான் தோன்றுமே தவிர, அந்த கயிற்றால் யாரையும் கட்டிவிட முடியாது.
      அகந்தை என்கிற கயிறு எரிக்கப்படாத வரையில் அது நமை வாழ்வில் கட்டிப்போடுகிறது. அதை எரித்தபிறகு அகந்தை இருப்பது போல் தோன்றினாலும், அதனால் நம்மை எதுவும் செய்ய இயலாது. அப்போதுதான் முழுமையான, ஆனந்தத்தை நம் மனம், உணரத் தொடங்கும்.
      உள்ளுணர்வில் ஆனந்தம் இருக்கிறபோது, வாழ்வின் சகல அம்சங்களிலும், நம்மால் முழுமையாக பங்கேற்க இயலும். வீண் விவாதங்கள், தேவையில்லாத வாக்குவாதங்கள் போன்றவற்றில் நாம் ஈடுபட மாட்டோம். ஒரு முட்டாளும் எப்போதும் அமைதியாக இருப்பான், முற்றும் உணர்ந்த ஞானியும் அமைதி நிலையிலிருப்பார். ஆனால் இருவரின் அமைதியும் ஒன்றே அல்ல.
      முட்டாளின் அமைதிக்கும், ஞானியின் அமைதிக்கும் மூலத்திலேயே வேறுபாடு உண்டு. ஒருமுட்டாள் எப்படிப் பேசுது என்று தெரியாததால் அமைதியாக இருக்கிறான். ஒரு ஞானியோ வெறுமனே விவாதிப்பதால் பயனில்லை என்று உணர்ந்து அமைதியாக இருக்கிறார். ஒரு முது மொழி உண்டு. “ஒரு மனிதன், தான் எண்ணுவது சரி என்று உணர்ந்தும், அமைதியாக இருப்பாரேயானால் அவர் இறைத்தன்மைக்கு மிக நெருக்கமானவர்” என்று, இது மிக முக்கியம்.
      நம் கருத்து சரியென்று தெரிந்துவிட்டால், வாழ்க்கை முழுக்க விவாதித்துக் கொண்டு இருக்கத்தான் தோன்றும். ஆனால் நம் உள்ளுணர்வுக்கு சரியென்று பட்டாலே போதும். அதை உலகுக்கு அறிவிக்க வேண்டிய அவசியம் கிடையாது.
     விருப்பு, வெறுப்பால் ஏற்படுகிற தீமை என்னவென்றால், நமது கண்ணோட்டங்களுக்கு ஏற்ப இந்த உலகம் முழுவதையும் வளைப்பதற்கு நாம் வாழ்க்கை முழுவதும் முயன்று கொண்டிருப்போம். விருப்பு, வெறுப்பின் அடிப்படையில் உலகத்தைப் பார்க்கிறபோது, நிபந்தனை இல்லாத வாழ்க்கையை நம்மால் முழுமையாக நுகர முடியாது. 
      விருப்பு, வெறுப்பு ஆகிய நிலைகளைக்கடந்து நிற்கிற மனிதர், வாழ்க்கையிலிருந்து விலகி ஓடுபவரல்ல. வாழ்க்கையில் முழுமையாக ஈடுபடுபவர். ஆனந்தமானவர். ஆனந்தத்தில் திழைப்பவர்...