Sunday, January 8, 2012

புத்தர் கூறிய கதை-ஆனந்தம்


      ஒரு முறை புத்தருடைய சீடர்களில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. அவர்களுடைய அறியாமையை விலக்கி, அஹிம்சா வழியை போதிக்க எண்ணிய புத்தபிரான் அவர்களுக்கு கீழ் கண்ட கதையைக் கூறினார்.
      முன்னொரு காலத்தில் பனாரஸ் என்ற ( வாரணாசி) பகுதியில் கௌசலா என்ற பகுதியை திர்கதி என்ற மன்னன் ஆண்டு வந்தான். ஆனால் பக்கத்து நாட்டு அரசனான பிரும்மதத்தா என்ற மன்னன் எல்லா நாடுகளின் மீதும் படையெடுத்தபடி கௌசலா நாட்டையும் கைப்பற்றிய பின் அந்த அரசனையும், அரசியையும் கொன்று விட்டால் பிறகு வேறு எவரும் தலை தூக்க முடியாது என எண்ணியதால் அவர்களைத் தேடத் துவங்கினான். ஆனால் அதற்கு முன்னரே அவர்கள் தப்பி ஓடி மாறு வேடத்தில் தங்கி இருந்து தமது நண்பனான ஒரு குயவன் வீட்டில் தங்கி இருந்தனர். அவர்கள் அங்கு எந்தவிதமான பிரச்சனையும் இன்றி வாழ்ந்து கொண்டு இருந்த பொழுது ஒரு குழந்தையும் பிறந்து பெரியவனாகியது. ஆனாலும் பிரும்மதத்தா அவர்களை கொன்று விட வேண்டும் என்ற கவலையில் அவர்களை தேடிக் கொண்டு இருந்தான்.
      ஒரு நாள் திர்கதியின் மகன் திர்காயு வெளியில் சென்று இருந்த பொழுது மாறு வேடத்தில் இருந்த மன்னனை அடையாளம் கண்டு கொண்ட முடி வெட்டுபவன் காசுக்கு ஆசைப்பட்டு அவர்களை அரசனிடம் காட்டிக் கொடுத்துவிட அவர்களை கைது செய்த அரசன் அவர்களை மக்கள் முன் சிரச்சேதம் செய்து கொல்ல ஏற்பாடு செய்தான். அந்த கொடுமை நடக்க இருந்த இடத்தில் கூடி இருந்த மக்கள் மத்தியில் திர்காயுவும் இருந்தான். மரணம் அடைய இருந்த திர்கதியோ எங்கே தன்னுடைய மகன் கோபப்பட்டு கூட்டத்தில் இருந்து வந்து சண்டையிடத் துவங்கி விடுவானோ, அப்படி வந்தால் அவனையும் அல்லவா மன்னன் கொண்று விடுவான் என பயந்து, உரத்த குரலில் கூவினான் ‘ மகனே, நீ நீண்ட தூரம் பார்க்காதே, குறைந்த தூரத்தையும் பார்க்காதே, வெறுப்பை வெறுப்பினால் அழிக்க முடியாது, அஹிம்சையே சிறந்த வழி’ அதைக் கேட்ட மன்னன் அதன் அர்த்தம் தெரியாமல் குழம்பினான். ஆனால் அவன் புரிந்து கொண்டான் கூட்டத்தில் திர்கதியின் மகனும் உள்ளான். ஆகவே திர்கதியையும், அவன் மனைவியையும் கொன்ற பின் திர்காயுவைத் தேடினான், அவன் கிடைக்கவில்லை. திர்காயுவின் மனதில் ஆத்திரம் நிறைந்து இருந்தது. தன் பெற்றோரைக் கொன்ற மன்னனை பழி தீர்க்க சமயம் பார்த்துக் கொண்டு இருந்தான்.
      திர்காயு யானைகளை அடக்குவதில் சிறந்து இருந்ததினால் அவனுக்கு அரண்மணையில் யானைக் கொட்டத்தில் வேலை கிடைத்தது. அவனுடைய சாதூர்யத்தை பலமுறை கண்ட மன்னன் அவன் மீது நம்பிக்கை கொண்டு அவனை தன் காவல் பணியில் வைத்துக் கொண்டான். ஆனால் அவனுக்கு திர்காயு யார் என்பது தெரியாது. ஒரு நாள் வேட்டையாடச் சென்ற பொழுது அவர்கள் இருவரைத் தவிற மற்றவர்கள் எங்கோ போய் விட்டனர். களைப்படைந்த மன்னனை ஒரு மர நிழலில் தன் தொடை மீது தலையை வைத்துக் கொண்டு படுத்து உறங்குமாறும், அதன் பின் கிளம்பிப் போகலாம் எனவும் திர்காயு கூற மன்னனும் உறங்கத் துவங்கினான். தான் எதிர் பார்த்து வந்த தருமணம் வந்து விட்டது என எண்ணிய திர்காயு மன்னனைக் கொல்ல வாளை கையில் எடுத்த பொழுது, தன் தந்தை கூறிய அறிவுறை மனதில் தோன்ற தனது முடிவை மாற்றிக் கொண்டு வாளை உறையில் வைக்க, திடுக்கிட்டு எழுந்த மன்னன் கூறினான் ‘எனக்கு பயமாக உள்ளது. என்னைக் கொல்ல எவனோ என் அருகில் வாளை எடுத்துக் கொண்டு வந்ததைப் போல இருந்தது.’ .அதற்கு திர்காயு பதிலளித்தான் ‘ அது நான்தான்’. மன்னன் கதறினான், கெஞ்சினான் ‘ ஐயோ என்னைக் கொன்று விடாதே, விட்டுவிடு’. திர்காயு அமைதியாகக் கூறினான் ‘உன்னை நான் விட்டு விடுகின்றேன். என்னையும் நீ கொல்ல மாட்டேன் என வாக்குறுதி கொடு’. உடனேயே மன்னனும் வாக்குறுதி அளிக்க தான் யார் என்பதை வெளிப்படுத்தினான் திர்காயு.
      அதன் பின் சற்று நேரம் கழித்து மன்னன் திர்காயுவிடம் அவனுடைய தந்தை தான் மரணம் அடையும் முன் கூறிய ‘ நீ நீண்ட தூரம் பார்க்காதே, குறைந்த தூரத்தையும் பார்க்காதே,’ என்ன கூறினாரே அதன் பொருள் என்ன என்பதை விளக்குமாறு கேட்க திர்காயு கூறினான் ‘நீண்ட தூரம் பார்க்காதே என்றால் உன் வெறுப்பை வளர்த்துக் கொண்டே இருக்காதே என்று பொருள், குறைந்த தூரத்தையும் பார்க்காதே என்றால் அவசரப்பட்டு இப்போது எதுவும் செய்து விடாதே என்ற அர்த்தம். அன்று அவசரப்பட்டு நான் ஓடி வந்து உங்களை கொன்று இருந்தால் மக்கள் என்னைக் கொன்று இருப்பார்கள். அதன் பின் என் ஆட்கள் என்னைக் கொன்றவர்களை பழி தீர்க்க சமயம் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். இரண்டும் தொடர் கதையாகி இருக்கும். இப்போது நாம் இருவரும் ஆத்திரத்தை விட்டுவிட்டு அஹிம்சையை பின் பற்றினால் அனைவருக்கும் நல்லது அல்லவா, என்று கூற விரோதிகள் இருவரும் இணைந்தனர்.
      இந்த கதையைக் கூறிய புத்தர் தம் சீடர்களுக்கு வெறுப்பை வளர்த்துக் கொள்வது ஒருவருக்கொருவர் அழிய அவரவர்களே காரணமாகி விடுவதினால், ஆத்திரத்தை அடக்கி, அமைதியாக எதற்கும் தீர்வு காண வேண்டும் என்றார்.

Saturday, January 7, 2012

பதினாறு பேறு எது எது? ஆனந்தம்



பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்வீர்
அகிலமதில் நோயின்மை, கல்வி, தன, தானியம்,
     அழகு, புகழ், அறம், வாழ்க்கைத் துணைநலம், இளமை,
அறிவு, சந்தானம், வலிவு, துணிவு, ஆண்மை, வெற்றி
     ஆகும் நல்லூழ் விளக்கம் பதினாறும் பெறுவீர்.

பதினாறும் பெற்று வாழ்க! 
இறையுணர்வும், அறநெறியும், கல்வி, தனம், தானியம்,
     இளமை, வலிவு, துணிவு, நன்மக்கட் பேறு,
அறிவிலுயர்ந்தோர் நட்பு, அன்புடைமை, அகத்தவம்,
     அழகு, புகழ், மனித மதிப்புணர்ந்தொழுகும் பண்பு,
பொறையுடைமை எனும்பேறு பதினாறும் பெற்று
     போற்றலுக்கும் தூற்றலுக்கும் வாழ்த்துக்களே கூறி
மறைவிளக்கம் உயர் வாழ்வை மதித்து ஒழுக்கம் காத்து
     மனையறத்தின் ஒளிவிளக்காய் வளம் ஓங்கி வாழ்க

தெய்வத்தின் திருவிளையாடல் ஆனந்தம்


      உண்மையிலேயே விஞ்ஞான வளர்ச்சி பெற்ற இக்காலத்தில் பொருள் வறுமை இல்லவே இல்லை. மக்கள் அறிவு வறுமையால்தான் பொருட்கள் நிரவி வராமல் தேங்கியும், அவசியமற்ற பொருட்கள் பெருக்கமும், அவசியமான பொருட்கள் மீது அலட்சியமும் ஏற்பட்டுப் பொருள் வறுமை போன்ற ஒரு மயக்க நிலை உருவாகி நிலைத்து வருகிறது என உணர்ந்து கொண்டேன்.
      தெய்வநிலை அறிந்த உங்களால் ஏன் இந்த நிலைகளைச் சீர்திருத்தி உலக மக்கள் வாழ்வில் அமைதி ஏற்படுத்தக் கூடாது? என்று பல அன்பர்கள் நினைக்கலாம். தெய்வத்தை அறிந்து கொண்டால் பல நன்மைகளை உலகுக்கு சாதித்துவிட முடியும் என்றுதான் நானும் தெய்வ அறிவு பெறாத முன்னம் நினைத்திருந்தேன். ஆனால் தெய்வ நிலையுணர்ந்த பிறகுதான் உண்மையில், உண்மை விளங்கிற்று. எல்லாம் வல்ல முழுமுதற் பொருளான தெய்வம் கேட்டால் கொடுப்பதில்லை. செய்யும் செயலுக்குத்தான் ஏற்றபடி விளைவைக் கொடுக்கிறது, நோக்கம், திறமை, இடம், காலம், தொடர்பு கொள்ளும் பொருள் இவ்வைந்துக்கும் ஏற்ப ஒவ்வொரு செயலிலும் தக்கபடி சிறிது கூடத் தவறாத நீதியோடு விளைவைக் கொடுக்கிறது.
      முதலில் இவ்வுண்மை உணர்ந்து வாழ்வில் ஒவ்வொரு செயலிலும் ஒப்பிட்டுப் பார்த்தபோது தெய்வத்தன்மை அளிக்கும் விளைவுகள் ஒவ்வொன்றும் அற்புதமாகவே கருதினேன். நாட்கள் செல்லச் செல்ல, சிந்தனை மேலும் உயர, உயர நான் கண்ட உண்மை இவ்வற்புதங்கள் இறைநிலையின் இயல்பு என்பதாகும். எங்கும், எல்லாவற்றிலும், எப்போதும் விளைந்துகொண்டே இருக்கும் நிகழ்ச்சிகள் எவ்வாறு அற்புதமாக இருக்க முடியும்? ஏதோ ஒரு இடத்தில், ஒரு சமயத்தில், ஒரு பொருளில் நிகழ்ந்தால் அதை அற்புதம் என்று எண்ணலாம். இப்போது அவ்வற்புதங்கள் அனைத்தும் இறைநிலையின் இயல்பாகவே உணர்கிறேன். இதனையே நமது முன்னோர்கள் தெய்வத்தின் திருவிளையாடல் என்று கூறினார்கள்.

Thursday, January 5, 2012

பக்தி-ஆனந்தம்

      தொடர்ந்துவந்த பழக்கத்தால், எனக்கும் கற்பிக்கப்பட்ட முறைப்படி, வணக்க முறைகளை நான் நடத்தி வந்தேன்.
      வணங்குபவன் யார்? வணக்கத்துக்கு உரியவர் யார்? வணங்குவதன் பயன் இதுவரை என்ன? இனி என்ன? என்று ஆராய்ந்தேன். என் அறிவு நிலையை இந்த அளவுக்கு உயர்த்துவதற்காக முன்னோர்களால் கற்பிக்கப்பட்டது, தான் வணக்க முறை என்று அறிந்துகொண்டேன். எந்த ஒரு பெரும் அகண்டாகார அரூப சக்தியை அறிய என்னை வணங்கச் சொன்னார்களோ, அந்தச் சக்தி என்னிடத்திலும் நிறைவு பெற்றுத்தானே இருக்க வேண்டும்? அப்படி என்னிடத்தில் நிறைவு பெற்று இருந்தால், நான் வேறு அது வேறாகப் பிரிந்து இருக்க முடியாது. ஆகையினால், என்னிலை என்ன? என்று ஆராய வேகம் கொண்டேன். அன்று முதல் வணக்கத்தை விட்டுவிட்டேன்.
      எந்தப் பொருளோ சக்தியோ ஒருவன் தன் வாழ்வுக்கு ஆதாரமாக இருப்பதாகக் கருதினாலும் அதையே அவன் வணங்குகிறான். அவனவன் அறிவின் வளர்ச்சிக்கேற்றவாறு வணக்கத்திற்குரிய பொருள்கள் மாறுபடும். ஆகாரம் தான் வாழ்வுக்கு ஆதாரம் என்று கொண்டவன் உணவை வணங்கினான். ஆகாரம் பூமியில் கிடைக்கிறது. அதுதான் வாழ்வுக்கு ஆதாரம் என்று கண்டவன் பூமியை வணங்கினான். தண்ணீரில் வாழ்வுக்கு அனைத்தும் கிடைக்கிறது அதுதான் ஆதாரம் என்று கொண்டவன் தண்ணீரை வணங்கினான்.
      மேலும் மேலும் ஆராய்ச்சி வேகம் கூடக் கூட, காற்று, ஆகாயம், வெட்டவெளி என்றும், ஆயுதங்கள்  சிலைகள்  செங்கல் முதலியவற்றால் தொழில் செய்து பிழைத்தவன் அவையவைகளை அவன் வாழ்வின் ஆதாரப் பொருள் என்றும் வணங்கினான், வணங்குகிறான்.
----------------------------------------வேதாத்திரி மகரிஷி----------------------------------------

வாழ்வில் வெற்றி ஒளி-ஆனந்தம்

      நெருப்பு சுடும். இது தான் இயல்பு எனினும் நெருப்பு நமது வாழ்வில் தவிர்க்க முடியாத தேவைப் பொருளாக இருக்கிறது. முறையோடும் அளவோடும் இடத்திற்கும் தேவைக்கும் ஏற்ப நெருப்பை பயன்படுத்தி வாழ்வில் பயன்பெறுகிறோம். உணவு சமைக்கும் போது அடுப்பின் மீது உள்ள பாத்திரத்தைக் கையால் எடுத்தாலும், தொட்டாலும் சுட்டு விடுகிறது. அதற்கு என்ன செய்கிறோம் அதை அப்படியே விட்டு விடுகிறோமா? ஒரு கந்தைத் துணியைக் கையில் பிடித்துக் கொண்டு அடுப்பின் மீது உள்ள பாத்திரத்தை நகர்த்துகிறோம், எடுக்கிறோம், பயன்பெறுகிறோம்.
      இது போன்றே நாம் நமது வாழ்வில் கருத்து வேறுபாடு உடைய பலரோடு தொடர்பு கொள்ள வேண்டியுள்ளது. ஒவ்வொருவரும் தேவை, பழக்கம், சந்தர்ப்ப சூழ்நிலைகள், அறிவின் வளர்ச்சி என்ற நான்கு தவிர்க்க முடியாத நிர்ப்பந்த நிலைகளுக்கு உட்பட்டே வாழ்ந்து வருகின்றனர்.
      இதனால் ஒருவரோடு ஒருவர் கருத்து வேறுபாடு கொள்வது இயல்பு. தவிர்க்க முடியாதது. இக்கருத்து வேறுபாடுகளில் மனதைச் சிக்க வைத்துக் கொண்டு உணர்ச்சி வயப்படுத்துகிறோம். தவறு செய்கிறோம். வருந்துகிறோம். மேலும் மேலும் வாழ்வில் சிக்கல்களைப் பெருக்கிக் கொள்கிறோம். மனிதன் தனித்து வாழ்வது முடியாது. கூடாது. இயன்ற மட்டும் எல்லோருடனும் அளவோடும், முறையோடும் பழகி வாழ்வில் நலம் பெற்று வெற்றிகாண வேண்டும்.
      சூடுள்ள பாத்திரத்தைக் கந்தைக் துணி உதவி கொண்டோ, கொரடாவின் உதவி கொண்டோ அடுப்பிலிருந்து இறக்கிப் பயன் காண்பது போல, கருத்து வேறுபாடு உடையவர்களோடு மனநிலையுணர்ந்து, அன்பு காட்டல், பொறுமை கொள்ளுதல், கடமையுணர்ந்து ஆற்றல் எனும் மூன்றிணைப்புத்திறன் கொண்டு பழகி வாழ்வில் வெற்றியும், மகிழ்ச்சியும், அமைதியும் காண வேண்டும். இந்த முறையில் விழிப்போடு வாழ்வை நடத்தும்போது வெறுப்புணர்ச்சி என்ற தீமை அணுகாது. சினமும், கவலையும் எழாது. வளராது. வாழ்வில் நாளுக்கு நாள் அன்பும், இன்பமும், அமைதியும் ஓங்கும்.
      இந்த விளக்கத்தை மனதில் நன்றாகப் பதிய வைத்துக் கொண்டு கணவன் மனைவி, பெற்றோர், மக்கள், உடன்பிறந்தோர், நண்பர்கள் என்ற எல்லா உறவுகளிலும் பயன்படுத்தி முதலில் வெற்றி பெறுங்கள். இதன் விளைவாக வெறி உலக மக்களிடம் கொள்ளும் தொடர்பிலும் உங்கள் வாழ்வின் மற்றெல்லாப் பகுதிகளிலும் வெற்றி ஒளி வீசும். போதனை மட்டும் போதாது. சாதனை செய்க.

---------------------------------வேதத்திரி மக‌ரிஷி----------------------------------

Tuesday, January 3, 2012

பொய்யும் மெய்யும்-ஆனந்தம்


      மெய் என்றால் ஒன்றுபட்டது என்றும் பொய் என்றால் இரண்டுபட்டது என்றும் பொருள்படும். பொய் என்றால் இல்லாதது என்று பலரால் கருதப்படுகின்றது. இல்லாதது எப்படி இருக்க முடியும்? அதை எப்படிச் சொல்ல முடியும்? இருப்பதைக் தான் கருதுகின்றோம், பேசுகின்றோம்.
      ஒருவன் ஒரு பொருளை வைத்திருக்கிறான். ஆனால் கேட்பவர்களுக்கு அப்பொருள் இல்லை என்று சொல்லுகின்றான். இந்த இடத்தில் இல்லை என்று சொல்லுவதைப் பொய் என்று சொல்லுகின்றோம். அந்தப் பொருளை அவன் வைத்திருப்பது அவன் உள்ளத்தில் மறைந்து விடவில்லை. மேலும் வேறு ஏதோ காரணத்தால் இல்லை என்று சொல்லுகின்றான்.
      அவனுடைய உள்ளத்தில் அப்பொருள் இருப்பது, இல்லை என்று சொல்ல வேண்டுமென்பது ஆகிய இரண்டும் இருக்கின்றன. இருக்கிறது என்ற ஞாபகத்தோடு இல்லையென்று சொல்ல வேண்டிய ஞாபகமும் கூடி இரண்டு பட்டுவிட்டது. அதே பிளவுபட்ட கருத்து, சொல்லிலும் வந்தால் அதைப் பொய் என்று சொல்லுகின்றோம்.
      இதேபோன்ற ஏக நிலையாக  அரூப நிலையாக இருந்த தெய்வ நிலை, அணுவாகவும், கோள்களாகவும், உயிரிணமாகவும் பரிணாமமடைந்து விட்டபின், அது இரு நிலைப்பட்டு விட்டது. இவைகளில் பின்னர் தோன்றிய அணு முதல் அண்ட கோடிகளையும், அவைகளின் இயக்க நிகழச்சிகளையும், வேதாந்திகள் பொய் என்று சொல்லுகின்றார்கள். அதாவது இரண்டு பட்ட நிலை என்று சொல்லுகின்றார்கள். இப்படி இரண்டு பட்ட நிலைகளில், ஏக நிலையாக உள்ள அரூப நிலையை உணர்ந்து கொள்ளும் ஆற்றலை ஞானம் என்றும், அதை மறந்து இரண்டு பட்ட நிலையை மாத்திரம் கண்டு அறிவு மிரட்சி கொண்டு இயங்கி நிற்கும் நிலையை மாயை என்றும் கூறுகின்றார்கள்.

தெய்வத்தைப் பற்றிய கருத்து-ஆனந்தம்





தெய்வமென்ற கருத்தற்றோன் பாமரன் ஆம்.
     தெய்வமிலை என்போன் அச்சொல் விளங்கான்.
தெய்வமென்று கும்பிடுவோன் பக்தன்; அந்தத்
     தெய்வத்தை அறிய முயல்வோனே யோகி;
தெய்வ நிலையுணர்ந்தவனே தேவனாம்; அத்
     தெய்வமே அனைத்துயிரும் எனும் கருத்தில்.
தெய்வத்தின் துன்பங்கள் போக்கு தற்கே
     தெய்வத் தொண்டாற்றுபவன் மனிதன். காணீர்!
                                                                                 - வேதாத்திரி மகரிஷி.