Showing posts with label விளைவு. Show all posts
Showing posts with label விளைவு. Show all posts

Saturday, January 7, 2012

தெய்வத்தின் திருவிளையாடல் ஆனந்தம்


      உண்மையிலேயே விஞ்ஞான வளர்ச்சி பெற்ற இக்காலத்தில் பொருள் வறுமை இல்லவே இல்லை. மக்கள் அறிவு வறுமையால்தான் பொருட்கள் நிரவி வராமல் தேங்கியும், அவசியமற்ற பொருட்கள் பெருக்கமும், அவசியமான பொருட்கள் மீது அலட்சியமும் ஏற்பட்டுப் பொருள் வறுமை போன்ற ஒரு மயக்க நிலை உருவாகி நிலைத்து வருகிறது என உணர்ந்து கொண்டேன்.
      தெய்வநிலை அறிந்த உங்களால் ஏன் இந்த நிலைகளைச் சீர்திருத்தி உலக மக்கள் வாழ்வில் அமைதி ஏற்படுத்தக் கூடாது? என்று பல அன்பர்கள் நினைக்கலாம். தெய்வத்தை அறிந்து கொண்டால் பல நன்மைகளை உலகுக்கு சாதித்துவிட முடியும் என்றுதான் நானும் தெய்வ அறிவு பெறாத முன்னம் நினைத்திருந்தேன். ஆனால் தெய்வ நிலையுணர்ந்த பிறகுதான் உண்மையில், உண்மை விளங்கிற்று. எல்லாம் வல்ல முழுமுதற் பொருளான தெய்வம் கேட்டால் கொடுப்பதில்லை. செய்யும் செயலுக்குத்தான் ஏற்றபடி விளைவைக் கொடுக்கிறது, நோக்கம், திறமை, இடம், காலம், தொடர்பு கொள்ளும் பொருள் இவ்வைந்துக்கும் ஏற்ப ஒவ்வொரு செயலிலும் தக்கபடி சிறிது கூடத் தவறாத நீதியோடு விளைவைக் கொடுக்கிறது.
      முதலில் இவ்வுண்மை உணர்ந்து வாழ்வில் ஒவ்வொரு செயலிலும் ஒப்பிட்டுப் பார்த்தபோது தெய்வத்தன்மை அளிக்கும் விளைவுகள் ஒவ்வொன்றும் அற்புதமாகவே கருதினேன். நாட்கள் செல்லச் செல்ல, சிந்தனை மேலும் உயர, உயர நான் கண்ட உண்மை இவ்வற்புதங்கள் இறைநிலையின் இயல்பு என்பதாகும். எங்கும், எல்லாவற்றிலும், எப்போதும் விளைந்துகொண்டே இருக்கும் நிகழ்ச்சிகள் எவ்வாறு அற்புதமாக இருக்க முடியும்? ஏதோ ஒரு இடத்தில், ஒரு சமயத்தில், ஒரு பொருளில் நிகழ்ந்தால் அதை அற்புதம் என்று எண்ணலாம். இப்போது அவ்வற்புதங்கள் அனைத்தும் இறைநிலையின் இயல்பாகவே உணர்கிறேன். இதனையே நமது முன்னோர்கள் தெய்வத்தின் திருவிளையாடல் என்று கூறினார்கள்.

Wednesday, September 28, 2011

எதிர் செயல்‍ பதில் செயல் ஆனந்தம்


      எதிர் செயல் எண்ணங்களிலிருந்து வருவது. பதில் செயல் புரிதலிலிருந்து வருவது. எதிர் செயல் கடந்த காலத்திலிருந்து வருவது. பதில் செயல் நிகழ்காலத்தில் இருப்பது. ஆனால் நாம் எப்போதும் எதிர் செயல்தான் செய்கிறோம். – நம்மிடம் எப்போதும் உள்ளே எதிர்செயல் ஏற்கனவே தயாராக உள்ளது.
      யாரோ எதையோ செய்கிறார்கள். நாம் ஏதோ பட்டன் அழுத்தப்பட்டது போல எதிர்செயல் செய்கிறோம். யாரோ உன்னை அவமதிக்கிறார்கள். – நீ கோபமடைகிறாய். அது முன்போ நிகழ்ந்தது. அது எப்போதும் அப்படித்தான் நடக்கிறது. அது ஒரு பட்டன் போல ஆகி விட்டது. யாரோ அதை அழுத்துகிறார்கள். நீ கோபமடைகிறாய். ஒரு வினாடி கூட காத்திருக்கவில்லை. ஒரு வினாடி நேரம் கூட சூழ்நிலையை பார்க்கவில்லை. ஏனெனில் சூழ்நிலை வேறுபட்டிருக்கலாம். உன்னை அவமதித்த ஆள் சரியாக கூறியிருக்கலாம். அவர் உன்னிடம் உன்னைப் பற்றிய உண்மையை கூறியிருக்கலாம். அதனால் நீ அவமானமாக உணர்ந்திருக்கலாம். அல்லது அவர் தவறாக இருக்கலாம். அல்லது அவர் ஒரு குசும்பு பிடித்த ஆளாக இருக்கலாம். ஆனால் நீ அவரைத்தான் பார்க்க வேண்டும்.
      அவர் சரியாக சொல்லியிருந்தால் நீ அவருக்கு நன்றி சொல்ல வேண்டும், ஏனெனில் அவர் உனக்கு ஒன்றை சுட்டிக் காட்டியிருக்கிறார். அவர் உன்னிடம் கருணை காட்டி இருக்கிறார். உண்மையை சொன்னதன் மூலம் உன் நெஞ்சுக்கு நெருக்கமாயிருக்கிறார். அது சுடலாம், ஆனால் அது அவர் தவறல்ல, அல்லது அவன் மடையனாக, அறியாதவனாக, உன்னைப் பற்றி எதுவுமே தெரியாமல் ஏதாவது சொல்லிருக்கலாம். அப்போது அங்கே கோபப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவர் சொல்வது தவறு எனில் முற்றிலும் தவறான ஒன்றைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. அதில் ஏதோ சிறிதளவு உண்மையில்லாவிட்டால் நீ அதனால் கடுப்படைய மாட்டாய். நீ அதைப் பார்த்து சிரிப்பாய். அதன் முட்டாள்தனத்தைப் பார்த்து அதன் பொருந்தாதன்மையினால் சிரிப்பு வரும். அல்லது அந்த ஆள் ஒரு முசுடு, அவர் எப்போதும் அப்படித்தான், எல்லோரையும் அவமதித்துக் கொண்டிருப்பார். அதனால் அவர் குறிப்பாக உன்னைப் பார்த்துகூறவில்லை. அவர் எப்போதும் போல சொல்லிக் கொண்டிருக்கிறார், அவ்வளவுதான். உண்மையில் செய்ய வேண்டியது எதுவும் இல்லை. அவர் அது போலத்தான்.
      உன்னைக் கவனி. மற்றவர்களை கவனி, மற்றவர்கள் எப்படி ஒரு இயந்திரத்தனமாக, சுயநினைவின்றி, தூக்கத்தில் நடப்பவர்கள் போல செயல்படுகிறார்கள் என்று பார்.
எதிர் செயல் மனதிலிருந்து எழுவது,
பதில் செயல் மனமற்ற நிலையிலிருந்து வருவது.