Showing posts with label தெய்வம். Show all posts
Showing posts with label தெய்வம். Show all posts

Saturday, January 7, 2012

தெய்வத்தின் திருவிளையாடல் ஆனந்தம்


      உண்மையிலேயே விஞ்ஞான வளர்ச்சி பெற்ற இக்காலத்தில் பொருள் வறுமை இல்லவே இல்லை. மக்கள் அறிவு வறுமையால்தான் பொருட்கள் நிரவி வராமல் தேங்கியும், அவசியமற்ற பொருட்கள் பெருக்கமும், அவசியமான பொருட்கள் மீது அலட்சியமும் ஏற்பட்டுப் பொருள் வறுமை போன்ற ஒரு மயக்க நிலை உருவாகி நிலைத்து வருகிறது என உணர்ந்து கொண்டேன்.
      தெய்வநிலை அறிந்த உங்களால் ஏன் இந்த நிலைகளைச் சீர்திருத்தி உலக மக்கள் வாழ்வில் அமைதி ஏற்படுத்தக் கூடாது? என்று பல அன்பர்கள் நினைக்கலாம். தெய்வத்தை அறிந்து கொண்டால் பல நன்மைகளை உலகுக்கு சாதித்துவிட முடியும் என்றுதான் நானும் தெய்வ அறிவு பெறாத முன்னம் நினைத்திருந்தேன். ஆனால் தெய்வ நிலையுணர்ந்த பிறகுதான் உண்மையில், உண்மை விளங்கிற்று. எல்லாம் வல்ல முழுமுதற் பொருளான தெய்வம் கேட்டால் கொடுப்பதில்லை. செய்யும் செயலுக்குத்தான் ஏற்றபடி விளைவைக் கொடுக்கிறது, நோக்கம், திறமை, இடம், காலம், தொடர்பு கொள்ளும் பொருள் இவ்வைந்துக்கும் ஏற்ப ஒவ்வொரு செயலிலும் தக்கபடி சிறிது கூடத் தவறாத நீதியோடு விளைவைக் கொடுக்கிறது.
      முதலில் இவ்வுண்மை உணர்ந்து வாழ்வில் ஒவ்வொரு செயலிலும் ஒப்பிட்டுப் பார்த்தபோது தெய்வத்தன்மை அளிக்கும் விளைவுகள் ஒவ்வொன்றும் அற்புதமாகவே கருதினேன். நாட்கள் செல்லச் செல்ல, சிந்தனை மேலும் உயர, உயர நான் கண்ட உண்மை இவ்வற்புதங்கள் இறைநிலையின் இயல்பு என்பதாகும். எங்கும், எல்லாவற்றிலும், எப்போதும் விளைந்துகொண்டே இருக்கும் நிகழ்ச்சிகள் எவ்வாறு அற்புதமாக இருக்க முடியும்? ஏதோ ஒரு இடத்தில், ஒரு சமயத்தில், ஒரு பொருளில் நிகழ்ந்தால் அதை அற்புதம் என்று எண்ணலாம். இப்போது அவ்வற்புதங்கள் அனைத்தும் இறைநிலையின் இயல்பாகவே உணர்கிறேன். இதனையே நமது முன்னோர்கள் தெய்வத்தின் திருவிளையாடல் என்று கூறினார்கள்.

Tuesday, January 3, 2012

தெய்வத்தைப் பற்றிய கருத்து-ஆனந்தம்





தெய்வமென்ற கருத்தற்றோன் பாமரன் ஆம்.
     தெய்வமிலை என்போன் அச்சொல் விளங்கான்.
தெய்வமென்று கும்பிடுவோன் பக்தன்; அந்தத்
     தெய்வத்தை அறிய முயல்வோனே யோகி;
தெய்வ நிலையுணர்ந்தவனே தேவனாம்; அத்
     தெய்வமே அனைத்துயிரும் எனும் கருத்தில்.
தெய்வத்தின் துன்பங்கள் போக்கு தற்கே
     தெய்வத் தொண்டாற்றுபவன் மனிதன். காணீர்!
                                                                                 - வேதாத்திரி மகரிஷி.




Wednesday, April 6, 2011

குழந்தையும் தெய்வமும் ஆனந்தம்


      பேருந்தில் பயணம் செய்கின்றபோது குழந்தைகளை கவனித்திருப்போம். சில குழந்தைகள் வைத்தகண் வாங்காமல் நம்மை அப்படியே பார்த்துக் கொண்டிருப்பார்கள். நம்மைப் பார்த்து அப்படி ஒரு புன்சிரிப்பு பூப்பார்கள். பல சைகைகளைக் காட்டி நம்மை தங்கள் பக்கம் ஈர்த்துக் கொள்வார்கள். இதையெல்லாம் பார்த்து நம்மில் சிலர் அப்படியே உளம் பூரித்துப்போய் அந்தக் குழந்தையின் கன்னத்தைச் செல்லமாய் கிள்ளியிருப்போம். 'என்னிடம் வருகிறாயா' என்று கேட்பதுபோல் குழந்தையைப் பார்த்து பல சைகைகளைக் காட்டியிருப்போம்.

      அந்தக் குழந்தை யாரென்று நமக்கு தெரியாமலிருக்கலாம். எந்த ஊரென்பதும் நாம் அறியாமலிருக்கலாம். ஆனால் அந்தக் குழந்தையால் ஒருவகையான இனம்புரியாத மகிழ்ச்சி நம்மில் உதயமாகிறது. நாம் பல்வேறு சிந்தனைகளோடு அந்த பேருந்தில் ஏறியிருக்கலாம். அவசர அவசரமாக குழப்பத்தோடு எங்காவது கிளம்பியிருக்கலாம்.ஆனால், அவற்றையெல்லாம் அந்த குழந்தையின் புன்னகையும் அழகிய சைகைகளும் அப்படியே மறக்கச் செய்துவிடும்.

      இவ்வாறு குழந்தைகள் இருக்கும் இடமெல்லாம் சொர்க்க பூமியாக மாறிவிடுவதை நாம் அனுபவிக்கிறோம். அது கோவிலாக இருந்தாலும் சரி.. மருத்துவமனையாக இருந்தாலும் சரி.. ஏன் இறப்புச் சடங்கு நடக்கும் வீடாக இருந்தாலும் சரி... குழந்தைகள் அந்த இடங்களை தங்களது மழலை வார்த்தைகளாலும் கள்ளங்கபடற்ற செயல்களாலும் சொர்க்கமாக மாற்றி விடுகிறார்கள். குழந்தைகளின் செல்ல மொழியும் தெய்வீக புன்னகையும் சுட்டித்தனமான செயல்களுங்கூட நம்மை அப்படியே மெய்மறக்க செய்துவிடுகின்றன.

      இதனால்தான் 'குழந்தையும் தெய்வமும் ஒன்று' என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள் போலும்! ஆம். தெய்வம் இருக்கின்ற இடத்தில் ஆனந்தமும் குதூகலமும் இருப்பது இயல்புதானே. அது தானே இறையின் குணம்... குழந்தையின் குணம்....