Tuesday, January 3, 2012

பொய்யும் மெய்யும்-ஆனந்தம்


      மெய் என்றால் ஒன்றுபட்டது என்றும் பொய் என்றால் இரண்டுபட்டது என்றும் பொருள்படும். பொய் என்றால் இல்லாதது என்று பலரால் கருதப்படுகின்றது. இல்லாதது எப்படி இருக்க முடியும்? அதை எப்படிச் சொல்ல முடியும்? இருப்பதைக் தான் கருதுகின்றோம், பேசுகின்றோம்.
      ஒருவன் ஒரு பொருளை வைத்திருக்கிறான். ஆனால் கேட்பவர்களுக்கு அப்பொருள் இல்லை என்று சொல்லுகின்றான். இந்த இடத்தில் இல்லை என்று சொல்லுவதைப் பொய் என்று சொல்லுகின்றோம். அந்தப் பொருளை அவன் வைத்திருப்பது அவன் உள்ளத்தில் மறைந்து விடவில்லை. மேலும் வேறு ஏதோ காரணத்தால் இல்லை என்று சொல்லுகின்றான்.
      அவனுடைய உள்ளத்தில் அப்பொருள் இருப்பது, இல்லை என்று சொல்ல வேண்டுமென்பது ஆகிய இரண்டும் இருக்கின்றன. இருக்கிறது என்ற ஞாபகத்தோடு இல்லையென்று சொல்ல வேண்டிய ஞாபகமும் கூடி இரண்டு பட்டுவிட்டது. அதே பிளவுபட்ட கருத்து, சொல்லிலும் வந்தால் அதைப் பொய் என்று சொல்லுகின்றோம்.
      இதேபோன்ற ஏக நிலையாக  அரூப நிலையாக இருந்த தெய்வ நிலை, அணுவாகவும், கோள்களாகவும், உயிரிணமாகவும் பரிணாமமடைந்து விட்டபின், அது இரு நிலைப்பட்டு விட்டது. இவைகளில் பின்னர் தோன்றிய அணு முதல் அண்ட கோடிகளையும், அவைகளின் இயக்க நிகழச்சிகளையும், வேதாந்திகள் பொய் என்று சொல்லுகின்றார்கள். அதாவது இரண்டு பட்ட நிலை என்று சொல்லுகின்றார்கள். இப்படி இரண்டு பட்ட நிலைகளில், ஏக நிலையாக உள்ள அரூப நிலையை உணர்ந்து கொள்ளும் ஆற்றலை ஞானம் என்றும், அதை மறந்து இரண்டு பட்ட நிலையை மாத்திரம் கண்டு அறிவு மிரட்சி கொண்டு இயங்கி நிற்கும் நிலையை மாயை என்றும் கூறுகின்றார்கள்.

தெய்வத்தைப் பற்றிய கருத்து-ஆனந்தம்





தெய்வமென்ற கருத்தற்றோன் பாமரன் ஆம்.
     தெய்வமிலை என்போன் அச்சொல் விளங்கான்.
தெய்வமென்று கும்பிடுவோன் பக்தன்; அந்தத்
     தெய்வத்தை அறிய முயல்வோனே யோகி;
தெய்வ நிலையுணர்ந்தவனே தேவனாம்; அத்
     தெய்வமே அனைத்துயிரும் எனும் கருத்தில்.
தெய்வத்தின் துன்பங்கள் போக்கு தற்கே
     தெய்வத் தொண்டாற்றுபவன் மனிதன். காணீர்!
                                                                                 - வேதாத்திரி மகரிஷி.




Saturday, December 31, 2011

Happiest - 2012

வாழ்க வளமுடன்! அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

Friday, December 23, 2011

கவனத்தை கவரும் போதை ஆனந்தம்


      என்னைச் சுற்றியுள்ள நண்பர்களில் பெரும்பாலோர் எப்படி இந்த சமூகத்தின் அவலங்களில் சிக்கியுள்ளனர், அவர்களின் மன இயக்கத்தின் ஆணி வேராக இருப்பது எது என்று பார்த்தேன். அது ‘கவனத்தை கவரும் முயற்சி ’ என்று தெரிகிறது. அடுத்தவர்களின் கவனத்தைக் கவர வேண்டும் என்ற உணர்ச்சியே ஆட்டிப் படைக்கிறது.
      தர்க்கம் செய்து, குதர்க்கம் செய்து, கடித்து, ஜோக் சொல்லி, பாடி, அலங்காரம் செய்து, ஒதுங்கி நின்று, கூடி கும்மியடித்து, அடுத்தவரை மட்டம் தட்டி, தன் கதை பேசி, ஊர் வம்பு பேசி, அறிவுத் திறனைக் காட்டி, தனது இயலாமையை பறை சாற்றி, இறுமாப்பு காட்டி, தன் நோயைச் சொல்லி, தன் வலிமையை காட்டி, இப்படி எதையாவது செய்து அடுத்தவரின் கவனத்தைக் கவர வேண்டும். அதுவே உயிர் வாழத் தேவைப்படும் மிக முக்கிய உணவாக இன்றைய மனிதனுக்கு இருக்கிறது.
      தனிமை இதனாலேயே மிரட்டுகிறது. அடுத்தவர் கவனம் இல்லாமல் ஒரு கணமும் வாழ முடியாத மனநோய் பிடித்த ஒரு சமூகத்தையே நாம் உருவாக்கியுள்ளோம். அடுத்தவர் கவனம் கிடைக்காத கணத்தில் உடனே போதை தேவைப்படுகிறது. சிகரெட்டில் ஆரம்பித்து, சினிமா, டிவி, மது, இண்டர்நெட், சேட்டிங், மொபைல் அரட்டை, மொபைல் விளையாட்டு என போதை எல்லா வடிவங்களிலும் அளவுகளிலும் தயாரித்து விற்கப்படுகிறது.
மனிதனின் இந்த வலிமையற்ற நிலையால் இந்த அடுத்தவர் கவனத்தின் போதை இல்லாமல் இருக்கமுடியாத நிலையால், அவன் கலை இலக்கியம், விஞ்ஞானம், படைப்பு என எல்லாவற்றையுமே போதையூட்டிக் கொள்ளவே பயன்படுத்திக் கொள்பவனாக இருக்கிறான்.
      எல்லாவற்றையும் எப்படி உபயோகப்படுத்திக் கொள்கிறான் ஒருவன் என்பதைப் பொறுத்தே அதன் விளைவு இருக்கும். கத்தியை ஆளை வெட்டவும் பயன்படுத்தலாம், அழகு படுத்தவும் பயன்படுத்தலாம். அது போல இன்றைய மனிதனின் போதைத்தனம் எதையும் போதைக்கு பயன்படுத்தவே தூண்டுகிறது.
      பணம் கிடைத்தாலும், பதவி கிடைத்தாலும், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் கிடைத்தாலும், வசதி கிடைத்தாலும் அதை அவன் தன்னை வளர்த்திக் கொள்ளவும் தன்னுணர்வு வரை தன் உணர்வை வளர்த்திக் கொள்ளவும் பயன்படுத்திக் கொள்வதில்லை. மாறாக ‘கவனிப்பு போதை’ கிடைக்காமல் தனிமை நேர்ந்தால் அதை தவிர்க்கவே பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறான். அல்லது அந்த கவனிப்பு போதை இன்னும் தலைக்கேற என்ன செய்ய இது நமக்கு உதவும் என யோசிக்கிறான்.
      பணம் உள்ளவன் அதை பகிர்ந்து கொள்ளத் தயாரில்லை. கலை உள்ளவன் அதில் கரைந்து புதிய வெளிப்பாடுகளை கொண்டுவர முயற்சிப்பதில்லை. பதவி உள்ளவன் கடமையை நிறைவடைய விரும்புவதில்லை. இன்று யாருமே தனக்கு கிடைத்த வாழ்வை வாழ்ந்து பார்க்கவோ கணத்தில் கரைந்து பார்க்கவோ தயாரில்லை.
      அடுத்தவர் கவனம் அதிகம் பெறுவது எப்படி என்று ஆரம்பித்து அது ஏற்படுத்திய இயந்திரத்தனத்தின் கட்டுப்பாட்டில் ஏன் எதற்கு என்று தெரியாமல் தேடியும் நாடியும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் மேலும் மேலும்.......இது மட்டும் தான் உத்தரவு. இயந்திரத்தனத்தின் கட்டளை.
கணவனிடம் கவனம் கிடைக்காத மனைவி நண்பனை நாடுகிறாள். முதலாளியால் பாராட்டப் படாத வேலையாள் இடம் மாறுகிறான். இன்று எல்லோருக்கும் அடிப்படைத் தேவையாய் இருப்பது அடுத்தவர் கவன போதை. இதை நியாயப் படுத்தும் வளர்க்கும் நம் சமூக அமைப்பை நீங்கள் கவனிக்க வேண்டும்.
      ஒரு மனிதனின் உயர்வு அவன் எத்தனை பேரால் கவனிக்கப்படுகிறான் என்பதைப் பொறுத்தே உள்ளது இன்றைய சமூகத்தில். ஆனால் அது உண்மையா அதில் சிறிதளவாவது உண்மை உள்ளதா தலைவர்களும் புகழ் பெற்றவர்களாய் இன்று உள்ளவர்களும் எவ்வளவு மனவளர்ச்சி குன்றியவர்களாய் உள்ளனர் என்பதை நீங்கள் ஆராய்ந்து பாருங்கள். அவர்களிடம் எவ்வளவு பேராசை, பொய், கீழ்மை, ஏமாற்றுத்தனம், நடிப்பு, வியாபாரம். ஆனாலும் அவர்களை மக்கள் வழி காட்டும் தலைவர்களாய், குருவாய், தனது மானசீக எதிர்காலமாய் ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதன் காரணம் இவர்கள் தேடும் போதையில் திளைப்பவனாய், அதிகம் கவனிக்கப்படுபவனாய் அவர்கள் இருக்கிறார்கள் என்பதே. புகழ், அந்தஸ்து, கௌரவம் என்று மனிதனுக்கு போதையூட்டும் எல்லாவற்றின் அடித்தளமும், அதனால் ஆட்பட்டுவிட்ட இயந்திரத்தனமும்தான்.
      இதன் ஆணிவேர் என்ன? எங்கிருந்து பிறந்தது இது?  ஏன் இப்படி நம்மை ஆட்டிப் படைக்கிறது என்று கேட்கிறீர்களா கொஞ்சம் பின்னோக்கிப் போவோம்.
      மனிதக் குழந்தை முழு வளர்ச்சியடையாமல் பிறக்கும் குழந்தை. இரண்டு காலில் நடக்க ஆரம்பித்த பிறகு கடைசி வரை குழந்தையை சுமக்க மனித உடம்பால் முடியாமல் போயிற்று. மனிதக் குழந்தைக்கு பராமரிப்பு அவசியம். அடுத்தவர் கவனம் இல்லாவிட்டால் மனிதக் குழந்தை இறந்துவிடும். குழந்தை பெறும் விலங்குகளுக்கு குட்டி சிறிது வளர்ந்தபின் தாய்மையுணர்வு மறைந்துவிடுவதைப் போல மனிதனுக்கும் மறைந்துவிட்டால் மனிதக் குழந்தையால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது.
விலங்குகளைப் போல வெறும் உணர்ச்சிகளின் வாழ்க்கை உள்ளவனல்ல மனிதன். முழு வளர்ச்சியடையாமல் பிறப்பதால், பிறந்த பின்தான் தன் வளர்ச்சியை மனிதக் குழந்தை எட்டுகிறது. உணர்ச்சிகளுடன் பிறக்கும் குழந்தை தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பிறர் கவனத்தையே நம்ப வேண்டி உள்ளது. ஆக அடிப்படையில் மனிதக் குழந்தை உயிர் வாழ்வதற்கான ஒரு அடிப்படைத் தேவை அடுத்தவர் கவனம். ஆகவே குழந்தை அடுத்தவர் கவனத்திலேயே ஒவ்வொரு கணமும் இருக்க விரும்புகிறது. தனிமை மரணத்தைக் கொண்டு வந்துவிடும் என அலறுகிறது.
      இது ஒரு நடைமுறை உண்மை. ஆகவே இதில் தவறில்லை. ஆனால் அந்தக் குழந்தை வளர வளர அதன் உணர்வுகள் கூர்மைப் பட நாம் உதவ வேண்டும். அதன் உடலின், மன இயக்கத்தின் தனித்தன்மையை உணர உதவ வேண்டும். இயற்கை அதன் உடலின் மூலம் இந்த உலகிற்கு கொண்டு வரும் அழகை, கொண்டாட்டத்தை, மலர்ச்சியை, வளர்ச்சியை, மாற்றத்தை அந்தக் குழந்தை உணர்ந்து அதன் உள்ளுணர்வுப்படி வாழ உதவ வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் ஒரு இயற்கையின் செய்தியாளன். அது வாழ்ந்து மலர வேண்டிய ஒரு விஷயம் அங்குள்ளது. அதைக் கண்டுணர நாம் உதவ வேண்டும்.
      மாறாக நாம் என்ன செய்கிறோம் குழந்தைக்கு மேலும் மேலும் அடுத்தவர் கவனம் கவர்வது எப்படி அது எவ்வளவு முக்கியம் என்று கற்றுத் தருகிறோம். பலரின் கவனத்தை அது கவர்ந்தால் பாராட்டுகிறோம். கவனிக்கப்படா விட்டால் இகழ்கிறோம். கவனிப்பு பெற என்னவெல்லாம் செய்ய முடியுமோ செய் என்கிறோம். பள்ளிக்குப்போனால் அதுவேதான். பலரின் கவனத்தை ஈர்ப்பவன் தலைவன், அவனுக்குப் பாராட்டு, புகழ். கவனத்தை ஈர்க்க முடியாதவன் உதவாக்கரை. இப்படி மேலும் மேலும் மேலும் இந்த போதையை ஊட்டியே வளர்க்கிறோம் நாம். உடம்பு சரியில்லை என்றால் நிறையப் பேர் வந்து பார்த்து விட்டுப் போக வேண்டுமாம். என்ன மடத்தனம். மருத்துவரும் மருந்துமே உண்மைத் தேவை. ஆனால் அதைவிட நமக்கு இந்த கவனிப்பு போதையே தேவைப்படுகிறது.
      மேலும் இந்த கவனம் பெறும் முயற்சியின் அடிப்படையில் இதற்காக போட்டி, பொறாமை, தந்திரம், சூழ்ச்சி, போலித்தனம் எல்லாம் போற்றி வளர்க்கப்படுகிறது. இதுதான் நமது சமூக அமைப்பு.
      இந்த கவனிப்பு போதையால் நிகழ்ந்துள்ள மற்றொரு மிகப் பெரிய தீமை என்னவென்றால் இதுவே அன்பு என்று இன்று ஆகி விட்டதுதான். உண்மையான அன்பு மறைந்து போகவும் இது காரணமாகிவிட்டது. நம்மை மதிப்பவர்கள், நமக்கு ஏதாவது என்றால் வந்து பார்ப்பவர்கள்தான் அன்பாய் இருப்பவர்கள். அன்பு என்றால் ஒருவனுக்கு கவனிப்பு போதை தர வேண்டும். அதுவே அன்பு என்று ஆகி விட்டது.
      நீங்கள் உங்களது மனைவியை அவர்கள் இயல்புபோல் சுதந்திரமாக இருக்க அனுமதித்துவிட்டு நீங்கள் உங்கள் இயல்புப்படி வாழ்வது தவறு என்று ஆகிவிட்டது. ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு உதவி செய்துகொண்டு வாழ்வதே சிறந்தது என்பது போய், மனைவி கணவன் தன்னை மதிப்பதில்லை, தனக்கு கவனிப்புப் போதை தருவதில்லை, தன்னிடம் வம்பு பேசுவதில்லை, தன்னுடன் சண்டை போடுவதில்லை, என்று சொல்வதும் மனைவி அவர்கள் இயல்புப்படி இருந்து கொண்டு கணவனுக்கு தேவையான உதவிகளைச் செய்தாலும் மனைவி தன்னைப் புகழ்வதும், தனக்காகவே வாழ்கிறேன் என்று சொல்வதும் தனக்காக உருகுவதும் போன்ற கவனிப்பு போதை சமாசாரங்களே அன்பு என்று கருதப் படுகிறது.
      அதிக கவனிப்பு அதிக அன்பு என்று கருதப் படுகிறது. இது இருவருக்கும் தேவைப்படுவதால் இருவரும் கவனிப்பு போதையை பரிமாறிக் கொள்கின்றனர். இது அன்பு அல்ல.
      அவசியமான உதவிகள் செய்யலாம். ஆனால் அவரவர்களே செய்து கொள்ளக்கூடியதைக் கூட மற்றவர் செய்து தருவது இந்த போதை ஏற்றும் விஷயம்தானே தவிர, அது அன்பு அல்ல. இந்த கவனிப்புத் தேவை என்ற அம்சம் சிறு குழந்தைக்கு ஒரு அவசியம். ஆனால் அதை நாம் வளர வளர வெட்டிவிடாமல் அந்தக் குழந்தையை அடிமைப்படுத்த இந்த அதிக கவனிப்பை அன்பு என்ற பெயரில் கொடுத்து போதையூட்டி வளர்த்து விடுகிறோம். இந்த போதைக்கு அடிமைப்பட்டுப் போன இன்றைய சமூகம் அன்பை இழந்து நிற்கிறது.
      அன்பின் சுவை அறியாமல் போலியான இந்த கவனிப்பு சுவையில் விழுந்து வருந்துபவர்களையே நான் பார்க்கிறேன். கவனிப்பு அதிகமாகும் பக்கம் மனம் சாய்வதால் உறவுகளில் விரிதல், நட்பில் விரிசல், வாழ்க்கையே தடம் புரளுதல் என எல்லாம் நடக்கிறது. இந்த கவனிப்பு போதையை பயன்படுத்தி குழந்தைகளிடமும் இளைஞர்களிடமும் ஏராளமான தீய பழக்கங்கள் மற்றவர்களால் ஏற்றப்படுகின்றன. இதற்குத் தடுப்புச் சுவர்களும் எழுப்பபடுகின்றன. ஆனால் உண்மையான இயல்பான வழி அதுவல்ல. ஒரு குழந்தைக்கு வளர வளர மற்றவர் கவனிப்பில் நாட்டம் குறைய வேண்டும். மற்றவர் கவனம் தேவை என்பதை தாண்டி அது வளர வேண்டும்.
தனக்காக, தன் தன்மையை வாழ்ந்து அனுபவித்து அது ஆனந்தப்பட வேண்டும். அப்போதுதான் நமக்கு விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், ஞானிகள் கிடைப்பார்கள். இல்லாவிடில் புகழுக்கும் பெருமைக்கும் அலையும் கவனிப்பு போதையில் ஆழ்ந்து கிடக்கும் கும்பலே மிஞ்சும்.
      மேலும் தன் தனித்தன்மையில் நிறைவும் சந்தோஷமும் அனுபவிக்காத ஒருவன் தன்னுணர்வுப் பாதைக்கு வர முடியாது. வந்தால் அதுவும் போலியாகவே இருக்கும். தானாக, தன்னைப் போல, தான் எப்படியோ அப்படியே இருப்பதில் உள்ள சுதந்திரத்தையும், நிறைவையும் அனுபவிப்பதே தியானத்தின் ஆரம்பம்.
      அதிலிருந்து தான் ஒருவன் உணர்வைக் கூர்மைப் படுத்திக் கொண்டே போய், பிரபஞ்சவுணர்வுகளில் ஒன்றைத் தொட்டுக் கரைகிறான், கலக்கிறான். அந்த அனுபவமே தியானம். தன்னுணர்வு அனுபவம். விழிப்புணர்வு அனுபவம். அதன்பின் அவன் பிரபஞ்சவுணர்வின் பலதில் ஏதோ ஒரு அம்சத்தை மட்டும் வெளிப்படுத்தும் தனித்தன்மை கொள்கிறான். எதன் மூலம் அவன் தொடர்பு கொண்டானோ அதுவே அவன் வெளிப்பாடாகிறது. இப்படி உடலின் தனிதன்மையில் ஆழ்ந்து அனுபவித்து வாழும் மனிதன் பிரபஞ்சத்தன்மைகளில் ஏதாவது ஒன்றை வெளிப்படுத்தும் ஒரு தனித்தன்மை கொண்டவனைப் மலர்கிறான்.
      இந்த மலர்ச்சியே மனிதனின் மகிழ்ச்சியான எதிர்காலம். மாறாக இப்போது வாழும் கவனிப்பு போதை வாழ்வு மேலும் மேலும் மனிதனை அடிமைப்படுத்துவதாய், இயந்திரமயமாக்குவதாய், வலிமையற்றவனாக்குவதாய், தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் பாதைக்கே கொண்டு செல்லும்.
      ஆகவே நண்பர்களே
      உங்கள் உடல் மன இயக்கங்களை கவனியுங்கள். அதை வாழுங்கள், வளருங்கள்.
      பிரபஞ்சவுணர்வு வரை வளருங்கள். அதை வாழ்கையில் இந்த மரணம் ஒரு கட்டுக்கதை, மனம் ஒரு கருவி, வாழ்க்கை ஒரு விளையாட்டு.ஆனந்தமே நிச்சயம்.
                                                       வாழ்க வளமுடன்!

Thursday, November 17, 2011

தியானம்‍-கவனித்தல் ஆனந்தம்


      ஒரு மிகப் பெரிய துறவி தன்னுடைய சீடன் ஒருவனிடம் அவனுடைய பாடத்தின் கடைசி அத்தியாயத்தை படிப்பதற்காக அரசவைக்கு போகச் சொன்னார். சீடன் தேர்வு பெற்று விட்டதை அறிவிப்பதற்கு முன் அவன் அரசவைக்கு சென்று அங்கு சில நாட்கள் தங்கி இருக்க வேண்டுமென்று சொன்னார்.
      இதுதான் குருவின் விருப்பமா என்று எண்ணிய சீடன் சென்றான். ஆச்சரியம்தான், எல்லாவற்றையும் துறந்த ஒரு துறவி தன்னுடைய சீடர்களை எதையும் துறக்காத, பதவி வெறி பிடித்த, அடுத்த நாடுகளை வெற்றி கொள்ளும் வெறி பிடித்த சாதாரண ஒரு அரசனிடம், ஆயிரக்கணக்கான மக்கள் சாவதைப் பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாத, பொருட்களிடம் பற்றுக் கொண்ட மனிதனிடம் எதற்காக அனுப்புகிறார் அதில் ஏதாவது ரகசியம் இருக்க வேண்டும் நானும் எதற்காக அனுப்பப்படுகிறேன் தெரியவில்லையே என்று நினைத்தவாறே சென்றான்.
      அவன் சென்ற நேரம் மாலை நேரம். அவன் உடனடியாக அரசவைக்கு அழைத்துச் செல்லப் பட்டான். அது அரசர் மதுவருந்தும் நேரம், மேலும் ஒரு அழகான நடன மாது நடனமாட வந்திருந்தாள். அரசவை அந்த மாலை நேரத்தை அனுபவிக்க ஆரம்பித்திருந்தது.
     இது எல்லாவற்றையும் பார்த்த அந்த இளம் துறவி அதிர்ச்சியடைந்து, திகிலடைந்து போனான். அவன் அரசரிடம் நான் இங்கே சில நாட்கள் தங்க வந்தேன். ஆனால் என்னால் இங்கே ஒரு மணி நேரம்கூட தங்க முடியாது. என்னை என் குருநாதர் எதற்காக இந்த நரகத்திற்கு அனுப்பினார் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை. என்றான்.
     அரசர், உன்னை உன் குருநாதர் இங்கே அனுப்பினார் என்றால் அதற்கு ஏதாவது காரணம் இருக்கும். இவ்வளவு சீக்கிரமாக தீர்மானித்துவிடாதே. இரண்டு மூன்று நாட்களில் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது மேலும் நினைவில் கொள், இது உனது இறுதி கட்ட பரீட்சை. என்னுடைய அங்கீகாரம் இல்லாமல் நீ தேர்வடைந்தவன் என்று ஒரு போதும் அறிவிக்கப்படமாட்டாய். நீ உன்னுடைய குருலத்திலேயேதான் உன் வாழ்நாள் பூராவும் இருக்கவேண்டி வரும். அதனால் நீ உணர்வுடன் பேசு. இங்கே மூன்று நாட்கள் இரு. நீ இங்கே என்னை மதிப்பிட வரவில்லை, நான் உன்னை மதிப்பிடவே நீ இங்கே வந்திருக்கிறாய் என்பதை நினைவில் கொள்.
      இது மிகவும் அதிகம். எல்லாவற்றையும் துறந்த ஒரு துறவியை ஒரு அரசன் மதிப்பிடுவதா ஆத்திரமடைந்தாலும் என்ன செய்வது திரும்பி போனால் குருநாதர் மகிழ்ச்சியடையமாட்டார். எப்படி இருந்தாலும் இங்கே இருந்துதான் தீர வேண்டும் என்பது உறுதி என்றால் எப்படியோ இந்த மூன்று நாட்களை இங்கேயே கடத்திவிட்டு இந்த தலைகனம் பிடித்த மனிதனிடமிருந்து வேண்டியதை சாதித்து சென்று விடலாம்.
     அரசர் கூறினார், அமைதியடைந்து சுயஉணர்வு கொள். முதலில் குளி, நீ வரப் போகும் செய்தி முதலிலேயே எனக்கு வந்துவிட்டது. அதனால் நான் உனக்காக எல்லாம் தயார் நிலையில் வைத்திருக்கிறேன். கவலைப்படாதே. இளமை அப்படித்தான். எதையும் சீக்கிரமே தீர்மானம் செய்யச் சொல்லும். தீர்மானம் செய்யாமல் இருக்க, அல்லது உடனடியாக மதிப்பீடு செய்யாமல் இருக்க ஒரு சிறிதளவு அனுபவம் வேண்டும். நீ இதுவரை எதையும் பார்த்ததில்லை.
      இங்கே மூன்று நாட்கள் இரு, கவனி, பார். நீ மதிப்பீடு என்பதை உன் வாழ்நாள் முழுவதும் செய்யலாம். அதில் எந்த பிரச்னையும் இல்லை. முதலில் என்னுடைய ஒப்புதல் பெற்றுக் கொள். என்னுடைய மதிப்பீட்டை கவனித்து அதன்படி நடந்து கொள்ள முயற்சி செய். அப்போதுதான் நீ என்னிடமிருந்து சாதகமான தீர்ப்பை பெறலாம். இல்லாவிடில் நீ திரும்ப திரும்ப உனது வாழ்க்கை முழுவதும் இங்கே வர வேண்டியிருக்கும். அதனால் போய் குளி. நான் சகல ஏற்பாடும் செய்து வைத்திருக்கிறேன்.
      இந்த இளம் துறவி இதுவரை அரசனின் குளியலறையை பார்த்ததேயில்லை. அது போன்ற அழகான ஒரு இடத்தில் அவன் இருந்ததேயில்லை. நிர்வாணமான பெண்கள் மசாஜ் செய்ய அங்கே இருந்தனர்.....அவன், கடவுளே, இந்த பரீட்சை என்னை முடித்துவிடும் போலிருக்கிறதே. இந்த மூன்று நாட்களில் இவர் என்னை கொன்று விடப் போகிறார். என்றான். அவன் எதுவும் சொல்வதற்கு முன், உண்மையில் அவன் பதட்டத்தின் உச்சியில் இருந்தான். அவன் எப்போதும் பெண்களிடமிருந்து தப்பித்து வந்திருந்தான், இப்போது இங்கே நிர்வாணமான பெண்கள்.... அவன் இதற்கு முன் இவ்வளவு அழகான பெண்களை பார்த்ததேயில்லை, அதுவும் அவர்கள் மசாஜ் செய்யப் போகிறார்கள்.
      ஆனால் அவன் எதுவும் சொல்வதற்கு முன் உண்மையில் அவனால் எதுவும் பேச முடியவில்லை, அவன் பேசும் சக்தியை இழந்திருந்தான். அவனால் ஆஹாஹாஹா என்று மட்டுமே சொல்ல முடிந்தது. வேறு எதுவும் சொல்ல முடியவில்லை. அவர்கள் அவன் ஆடைகளை கழற்ற ஆரம்பித்தனர். அவன் எதையும் செய்யும்முன், அவன் நிர்வாணமாக நின்றிருந்தான். அந்த நான்கு பெண்களும் அவனை முழுமையாக தங்கள் வசம் எடுத்துக் கொண்டு அவனை குளியல்அறையின் தொட்டியில் அமிழ்த்தினர். அதில் முழுமையாக பன்னீர் இருந்தது.
      அரசர்களும் மிகப் பெரும் பணக்காரர்களும் பன்னீரில்தான் குளிப்பர். இரவில் குளியல்தொட்டியில் நூற்றுக்கணக்கான ரோஜாக்களை போட்டு வைத்தனர். அதனால் அந்த வாசம் தண்ணீரில் ஊறி விடும். காலையில் அந்த இதழ்களை எடுத்து விட்டால் நீ அந்த ரோஜாக்களை பார்க்காவிட்டாலும் ரோஜாவாசம் உன்னை சூழ்ந்திருக்கும்.
      அவன் இதுவரை தன் வாழ்நாளில் அது போன்ற ஆடம்பரமான எதையும் பார்த்ததேயில்லை. அந்த குளியல் தொட்டி முழுவதும் தங்கத்தால் ஆனது. அரிய வகை எண்ணெய் ஊற்றி அவன் மசாஜ் செய்யப்பட்டான். அதிலிருந்து தப்பிப்பதற்குள் அவனுக்கு போதும் போதுமென்றாகி விட்டது. அதற்குள் அவன் உறைந்தவன் போலாகி விட்டான்.
     பின் அரசர் அவனை விருந்துக்கு அழைத்தார். அவன் இதுவரை இது போன்ற உணவு வகைகளை ருசித்ததேயில்லை. ருசிக்காமல் சாப்பிட வேண்டும் என்றுதான் அவன் இதுவரை படித்துள்ளான். இங்கோ, ருசியான, சுவையான அற்புதமான உணவு. அதன் வாசனையே மணமே உனக்கு பசியெடுக்க வைத்துவிடும்.
      அரசர், உட்கார், உட்காரந்து சாப்பிடு. ருசிக்காமல் சாப்பிட வேண்டும் என்ற உனது ஒழுங்கை நினைவில் கொள். உனது குருநாதரின் இல்லத்தில் உள்ள சுவையில்லாத உணவை சாப்பிடும்போது அதை நினைவில் கொள்வதில் என்ன சிரமம் ஒரு ஒழுங்கினால்தான் அதை அங்கே நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமா அங்கே சுவையில்லை. எந்த முட்டாளும் ஒழுங்காக இருப்பான். இங்கே அதை நினைவில் கொள்.
      இளைஞன் அதில் உள்ள கஷ்டத்தை பார்த்தாலும் அதில் உள்ள நியாயத்தையும் பார்த்தான். அரசர், குளியல் எப்படி இருந்தது சொல்லவே இல்லையே, அந்த பெண்கள் நன்றாக இருந்தார்களா ஏனெனில் அவர்கள்தான் மசாஜ் செய்வதில் சிறந்தவர்கள் நீ திருப்தியடைந்திருப்பாய் என நினைக்கிறேன்.
      அவன் திருப்தியா, நான் மூன்று நாட்களை எப்படியோ கடத்த நினைக்கிறேன். எனக்கு நம்பிக்கை இல்லை, அப்படி கடந்து விட்டால்..... இதுதான் முதல் மாலை. இந்த மூன்று நாட்களும் எனக்கு மூன்று வாழ்க்கை போல இருக்கிறது. இந்த உணவு அதை என் வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்க முடியாது. நான் துறவி, மேலும் இந்த அழகான பெண்களை என்னால் மறக்கமுடியாது. இது என்ன வகையான பரீட்சை நான் இத்தனை வருடங்களாக என்னை தயார் செய்து வைத்திருப்பதற்கு நேர் எதிரான அனுபவங்களை நீங்கள் எனக்கு கொடுக்கிறீர்கள் என்றான்.
      பின் மது வந்தது. அரசர் அவனுக்கு சிறிது ஊற்றிக் கொடுத்தார். இளைஞன், இது அதிகப்படியானது. ஏனெனில் மது எனது குருநாதரின் இல்லத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று. என்றான்.
      அரசர், இது உனது குருவின் இல்லம் அல்ல. இது உனது பரிசோதகரின் இல்லம். உனக்கு ஒப்புதல் வழங்கும் பரிட்சை. கவனமாக இரு, நான் சொல்வதை செய். உனது குருநாதர் சுயஉணர்வின்றி இருக்காதே என்று தான் கூறியிருக்கிறார். சுயஉணர்வின்றி இருக்காதே. குடி, சுயஉணர்வை இழக்காமல் இரு. குடிக்காமல் சுயஉணர்வோடு இருப்பதில் என்ன பிரச்னை யாரும் அதை செய்யலாம், எல்லோரும் அப்படித்தான் இருக்கின்றனர்.
      அவன் குடிக்க வேண்டி வந்தது. பின் என்ன நடக்கிறது என்றே அவனுக்கு தெரியாது. என்ற அளவுக்கு அவன் சுயஉணர்வை இழந்து விட்டான். மது, மாது, அழகான உடை, யாவும் அவனை மயக்கி விட்டன. அவன் தங்க வேண்டிய இடத்திற்கு அரசர் அவனை தூக்கிச் சென்றார். அவனால் நம்பவே முடியவில்லை. அவன் தான் சொர்க்கத்திற்கு வந்து விட்டதாக எண்ணினான். மது பலருக்கு சொர்க்கத்தை பற்றிய நினைப்பை கொடுத்து விடும்.
      அவன் தான் சொர்க்கத்தில் இருப்பதாக எண்ணினான். அவன் தான் தேர்வடைய வந்திருப்பதை சுத்தமாக மறந்து விட்டான். அரசர் அவனுக்கு அவனுடைய படுக்கையை காண்பித்தார். அவன் படுத்த மறுகணம் அவன் தன் தலைக்கு மேல் நூலில் ஒரு வாள் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்தான். எல்லா மயக்கங்களும் காணாமல் போய் விட்டது. திடீரென அவன் தான் சொர்க்கத்தில் இல்லையென கண்டான். அந்த வாள்... யாரையும் எங்கிருந்தாலும் - சாவு - உடனே பூமிக்கு கொண்டு வந்து விடும்.
      அவன் அரசரிடம் எதற்காக இந்த வாள் இங்கே தொங்கிக் கொண்டிருக்கிறதென்று கேட்டான். அரசர், இது உன்னை சுயஉணர்வில் வைத்திருப்பதற்காக அங்கே தொங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறினார். இதுதான் உனது அறை. இப்போது தூங்கு. கடவுளின் கருணையிருந்தால் நாள் இருவரும் உயிரோடிருந்தால் சந்திப்போம். என்றார்.
     அவன், உங்களுக்கு எதுவும் நடக்காது. நீங்கள் உயிரோடிருப்பீர்கள். பிரச்னை எனக்குத்தான். கடவுளின் கருணையிருந்தால்கூட எனது தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த கூரான வாளை தாங்கிப் பிடிக்கும் சக்தி இந்த நூலுக்கு இருக்குமா என்பது எனக்கு சந்தேகம்தான். ஒரு தென்றல் காற்று போதும், அது எந்த வினாடியும் அறுந்து விழுந்துவிடும். நான் செத்தேன். என்றான்.
      அரசர், கவலைப்படாதே. நீ இறந்து விட்டால்கூட உனது குரு சொல்லிருப்பாரே மறுபிறப்பு பற்றி – நீ மறுபிறப்பு எடுப்பாய் – மறுபடியும் பிறப்பாய். நீ கற்றது அனைத்தும் உன்னுடன் வரும். அதனால் இந்த கடைசி கணங்களை தவற விட்டு விடாதே. அது விழலாம், அதற்கு நான் உறுதிமொழி கொடுக்கமுடியாது. நீ இந்த கணங்களை எப்படி உபயோகப்படுத்திக் கொள்கிறாய் என்பது உன்னை பொறுத்தது. தன்னுணர்வோடு இரு, நீ தன்னுணர்வோடு இறந்தால் அதை விட சிறப்பானது எதுவும் கிடையாது. என்றார்.
      இளைஞன், நான் இறக்க விரும்பவில்லை. நான் இங்கே ஒப்புதல் பெறவே வந்தேன். ஆனால் நீங்கள் என்னை வாழ்விலிருந்தே காலி செய்கிறீர்கள். என்றான்.
      அரசர், இதுதான் ஒருவர் ஒப்புதல் பெறும் வழி. நீ தூங்கு. என்ன நிகழ்கிறதோ அதுவே நிகழும். அதுதான் உனது குரு சொல்லிக் கொடுத்தது. இதைதான் இந்துக்கள் சொல்கிறார்கள் அவனின்றி அணுவும் அசையாது, ஒரு இலை கூட அவனது விருப்பமின்றி அசையாது, பின் எப்படி ஒரு வாள் உன்னை கொன்று விடும். அதுதான் அவன் விருப்பம் என்றால் வாளோ, வாளின்றியோ நீ கொல்லப்படுவாய்.
      அதனால் தூங்கு, நான் அப்படித்தான் தூங்கப் போகிறேன். உன்மேல் ஒரே ஒரு வாள்தான் தொங்கிக் கொண்டிருக்கிறது. அங்கே என்மேல் ஆயிரக்கணக்கான வாட்கள் தொங்கிக் கொண்டிருக்கிறது. சீக்கிரமே என் குறட்டை சத்தத்தை அடுத்த அறையில் இருந்து நீ கேட்கலாம். என்றார்.
      இளைஞனால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. இரவு முழுவதும் அடுத்த அறையில் அரசர் விடும் குறட்டை சத்தம் அவனுக்கு கேட்டது. காலையில் அரசர் அவனது அறைக்கு வந்தார். இளைஞன் விழிப்புடன் வாளை பார்த்தவாறே படுத்திருந்தான். இந்த முழு உலகத்திலும் வாளைத் தவிர வேறு எதுவும் இல்லை.
      அரசர், நான் குளிக்கப் போகிறேன். அவரது அரண்மனைக்கு பின் புனித கங்கை ஆறு ஓடிக் கொண்டிருந்தது. என்னுடன் வா, சிறிது தூரம் நடந்து விட்டு ஆற்றில் நீச்சல் அடித்து வரலாம். வா என அழைத்தார். அவர்கள் சென்றனர். அந்த துறவியிடம் கோவணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.
      பிச்சை பாத்திரம், கோவணம், ஒரு குச்சி ஆகிய இவையே அந்த இளைஞன் தன்னுடன் கொண்டு வந்த பொருட்கள். காலையில் அவன் அந்த மூன்று பொருட்களை திரும்பவும் எடுத்துக் கொண்டான். ஏனெனில் அரசர் கொடுத்த மிக மதிப்பு வாய்ந்த ஆடைகளோடு, உடையோடு வெளியே வர அவனுக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது.
      அவன், அரண்மனையில் இருக்கும்போது நான் அவற்றை அணிந்து கொள்கிறேன். ஆனால் வெளியே வரும்போது அவற்றை நான் போட்டிருப்பதை யாராவது பார்த்துவிட்டால் அது எனக்கும் உங்களுக்கும் சங்கடமாகி விடும். அதனால் நான் என் கோவணத்தை கட்டிக் கொள்கிறேன் என்றான்.
      அரசர், அது உன் பிரச்னை என்று கூறி விட்டார். ஆகவே அரசர் தனது ராஜ ஆடையிலும் இவன் தனது கோவணத்தோடும் சென்றனர். இருவரும் தங்களது ஆடைகளை கழற்றி கரையில் வைத்துவிட்டு குளிக்க நதியில் இறங்கினர். அவர்கள் குளித்துக் கொண்டிருக்கும்போது துறவி அரசரிடம் உங்களது அரண்மனையில் தீ பிடித்திருக்கிறது என்று கத்தினான்.
      அரசர், நீ பார்ப்பதற்க்கு முன்பே நான் பார்த்துவிட்டேன். ஆனால் கவலைப்பட ஏதுமில்லை. இப்போது என்ன செய்ய முடியும் அது தீப்பிடித்துவிட்டது. கடவுளின் விருப்பமின்றி எதுவும் நடவாது. அதனால் கவலைப்படாதே. நீ குளி. என்றார்.
      துறவி, என்ன சொல்கிறீர்கள், நான் என் துணிகளை காப்பாற்றிக் கொள்கிறேன். அது அரண்மனைக்கு அருகில் இருக்கிறது என்று கூறியவாறே ஓடிப் போய் தன் ஆடைகளை எடுத்துக் கொண்டான். அரண்மனை பற்றி எரிகிறது அரசரின் ஆடைகள் அங்கே இருந்தன. ஆனால் அவன் தனது ஆடைகளை பற்றி மட்டும் கவலைப்பட்டான். அரசர் குளித்துமுடித்தார். அரண்மனை எரிந்து முடிந்தது. அது அவரது ஆணையின்மேல் பற்ற வைக்கப்பட்டிருந்தது. துறவி, அதிர்ச்சியில் நடுக்கத்தில் இருந்தான். கோடிக்கணக்கான ரூபாய்கள்........ எத்தனை நஷ்டம் என்றான்.
      ஆனால் அரசர், கவலைப்படாதே அது உன்னுடையது அல்லவே உன்னுடைய பொருட்கள் பாதுகாப்பாக உள்ளதா என்றார்.
      அவன் எனது பொருட்கள் பாதுகாப்பாக இருக்கிறது என்றான்.
அரசர், அது உனக்கு போதும் – நீ உன் பொருட்களை பற்றி மட்டுமே கவலைப்பட வேண்டும். இவைதான் உன் செல்வம், உனது ராஜாங்கம். ஆனால் எனது முழு ராஜாங்கமும் பற்றி எரிந்து போனாலும் நான் கவலைப்பட மாட்டேன். அது பிரச்னையே அல்ல. ஏனெனில் நான் இங்கில்லாத போதும் உலகம் இருந்தது, அரசாங்கம் இருந்தது. ஒரு நாள் நான் இல்லாமல் போவேன், அப்போதும் உலகம் இங்கிருக்கும். இங்கே நான் ஒரு சாட்சியாளன், பார்வையாளன் மட்டுமே. இதில் நான் ஏன் ஒன்றி போக வேண்டும்
      ஆனால் நீ எதையும் துறக்கவில்லை என்பதை நீ நினைவில் கொள்ள வேண்டும். நீ இன்னும் பார்வையாளனாகவில்லை. உன்னால் எனது வீடு பற்றி எரிவதைக்கூட பார்க்கமுடியவில்லை. உனது துணி எரிந்துபோயிருந்தால் உனக்கு பயித்தியம் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். என்னுடைய இழப்பை பார்த்த்திலேயே உனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. ஆனால் அதற்க்கும் உனக்கும் என்ன சம்பந்தம். நான் குடித்ததை பார்த்ததிலேயே நீ அதிர்ச்சியடைந்துவிட்டாய், ஆனால் நான் குடிக்கும்போதுகூட நான் ஒரு சாட்சியாளன்தான். என்னைச் சுற்றி அழகான பெண்கள் இருந்ததை பார்த்த போது அதிர்ச்சியடைந்து விட்டாய். ஆனால் அப்போதும் நான் பார்வையாளன்தான். ஆனால் நீ சாட்சியாளனாக இல்லை. இந்த இரண்டு நாட்களில் விழித்துக் கொள். காலம் அதிகமில்லை. மிகவும் குறைவாகவே உள்ளது. சாட்சியாளனாக இரு. நான் உனக்கு சான்றிதழ் கொடுப்பதற்கு முன் நீ தேர்வடையவேண்டும். நீ ஒரு பார்வையாளன் என்பதை நீ நிரூபிக்க வேண்டும்.
      அவன் நான் எப்படி நிரூபிப்பது என்று கேட்டான்.
      அரசர், இன்று எல்லாவற்றையும் முயற்சி செய். அது எதுவாக இருந்தாலும் அது நீ கவனிப்பதற்கு உதவி செய்வதாக மாற வேண்டும். வெறுமனே கவனி, தப்பிக்க முயற்சி செய்யாதே. அமுக்காதே, சண்டையிடாதே. தவிர்க்காதே. கவனி, விஷயங்கள் நிகழட்டும். என்றார்.
      மூன்றாவது நாளில் இறுதி பரீட்சை ஒரு அழகிய நடனம். இந்த துறவியின் கையில் எண்ணெய் நிரம்பிய ஒரு கோப்பை கொடுக்கப்பட்டது. ஒரு சிறிதளவு அசைந்தால்கூட எண்ணெய் சிந்திவிடும். நடனமாதர்கள் – அனைவரும் நிர்வாணமாக - சுற்றிலும் வட்டமாக நடனமாடுவர். அரசர் நடுவில் அமர்ந்திருப்பார். அந்த இளைஞன் அந்த அரிய வகை எண்ணெய் நிரம்பிய கோப்பையை கையில் வைத்துக் கொண்டு சுற்றி வர வேண்டும். ஒரு சிறிதளவு எண்ணெய் சிந்தினாலும் போச்சு, நீ தேர்வடையவில்லை. என்று கூறப்பட்டிருந்தது.
      அவ்வளவு அழகான மாதர்கள் நடனமாடும்போது அக்கம் பக்கம் திரும்பி என்ன நடக்கிறதென்று பார்க்கும் ஆசை யாருக்குத்தான் வராது தூண்டுதல் இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த கோப்பையிலிருந்து ஒரு சொட்டு எண்ணெய்..... ஒரே ஒரு கணம் கவனமில்லாமை...... பெண்களை அவன் சுற்றி வந்தான். அவர்களை அவன் கடந்து வந்தான். அவன் சுற்றி வர வர, அவனுள் சாட்சிபாவம் மெதுமெதுவே படிந்தது. அவன் நடனத்தை மறந்தான், இக்கணம், எண்ணெய், கவனம் மட்டுமே இருந்தது.
      கவனித்தல் ஒரு சிறிய விஷயம்.ஆனால் அதில் ஏதும் ஆணவத்தை பூர்த்தி செய்யக் கூடியதில்லை. தியானமும் அப்படித்தான்.
      பல்வேறு பெயர்கள் – கவனித்தல், சாட்சி, தியானம், விழிப்போடு இருத்தல் – ஒரே விஷயத்துக்கு பலப் பெயர்கள். இவை யாவும் நீ ஏதும் செய்யாத போதுதான் நிகழும். இப்போது இதுதான் கேள்வி செய்யாமல் இருப்பது என்பது என்ன
      நீ எப்படி என்று கேள்வி கேட்கும்போது நீ அதை தவற விட்டு விடுகிறாய் ஏனெனில் எப்படி என்றாலே செய்வதுதான்
      நீ - செய்யாமல் இருப்பதை அடைவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் என்று கேட்கிறாய்.
      செய்யாமல் இருப்பது என்பதை நீ வெறுமனே புரிந்து கொள்ள வேண்டும்.
மடத்தனமான கேள்வியை கேட்காதே. செயல் மூலம் உனது ஆணவம் நிறைவடைவதை புரிந்துகொள்ள முயற்சி செய். நீ எதை செய்தாலும் – பிரார்த்தனை, பட்டினி, கோவிலுக்கு போவது, துறவியாவது – நீ எதை செய்தாலும் அது உன் ஆணவத்திற்கு தீனிதான். உனது ஆணவம் உனக்கும், பிரபஞசத்திற்க்கும், உனக்கும், உண்மைக்கும் இடையே தடை.
      எதையும் செய்யாதே.
      நீ இந்த மடத்தனம் எதையும் செய்யாமல் ஏன் வாழக்கூடாது
      பசிக்கும்போது சாப்பிடு.
      தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடி
      தூக்கம் வரும்போது தூங்கு
      விழிப்பு வரும்போது எழுந்து கொள்.
      மற்ற எல்லாவற்றையும் மறந்துவிடு.
      தேவையான சிறிய விஷயங்களை செய்.
      சாதாரண வாழ்க்கையை வாழ்.
      நீ கண்டுபிடிப்பாய். அது தான் தியானம், உன்னை புத்தனாக்கும், இயேசுவக்கும், கிருஷ்ணனாக்கும். வாழ்க வளமுடன்!

Friday, November 11, 2011

மரணத்தின் கதை ஆனந்தம்


      இது கண்டிப்பாக எப்பேர்பட்டவனுக்கும், எப்படியாகிலும் மரணம் நிகழ்ந்தே தீரும் என்பதற்க்கான  ஒரு மிகவும் பிரசித்தி பெற்ற சூஃபி கதை.  ஒரு அரசன் தன் கனவில் ஒரு கறுப்பு உருவம் ஒன்றைக் கண்டார். அது கனவு என்ற போதிலும் அவர் அரண்டு விட்டார். அவர்,“நீ யார்? எதற்காக என் கனவில் வந்தாய்?” என்று கேட்டார்.
      அதற்கு அந்த உருவம், “நான் தான் உன் மரணம். நாளை சூரிய அஸ்தமனத்தில் நாம் சந்திப்போம். உனக்கு மிகவும் பொறுப்புக்கள் இருப்பதால் நான் உன்னிடம் இதை தெரிவிக்கலாம் என்று வந்தேன். சாதாரணமாக நான் யாரிடமும் முன்கூட்டியே தெரிவிக்க போவதில்லை. ஆனால் நீ ஒரு அரசன், மிக முக்கியமானவன், மிக மிக அரிதானவன். என்னால் உன்னை சரியான இடத்தில் சந்திக்க முடியாமல் போய்விடுமோ என்று பயப்படுகிறேன். நீ வேறு எங்காவது சந்திப்பில் சிக்கிக் கொண்டு விட்டால் நான் என்ன செய்வது நீ என்னை சரியான இடத்தில் சரியான நேரத்தில் சந்திக்க வேண்டும் நினைவில் கொள்.” என்று சொல்லியது.
      அரசர், “எது சரியான இடம்?” என்று கேட்பதற்கு முன் பயத்தினால் அவரது தூக்கம் கலைந்துவிட்டது. நிழல் உருவம் மறைந்துவிட்டது. நேரம் தெரிந்துவிட்டது, சரியான காலம் – நாளை சூரிய அஸ்தமனம் – ஆனால் இடம் எது நான் உன்னை சந்திக்க வேண்டிய இடம் எங்கிருக்கிறது என்று கேட்பதற்க்காக அவர் பலமுறை கண்களை மூடி அந்த நிழல் உருவத்தை பார்க்க முயற்சித்தார். இறப்பை சந்திக்கவேண்டும் என்று அவர் விரும்பினார் என்பதல்ல. அந்த இடம் எது என்று தெரிந்தால் அதை தவிர்த்து விடலாம். ஆனால் இந்த முழு உலகத்தில் அந்த இடம் எது
      ஆனால் உன்னால் கனவை தொடர முடியாது  -அது மிகவும் கடினம். ஒரு முறை கனவு கலைந்துவிட்டால் எவ்வளவு முயற்சி செய்து கண்களை மூடி கனவை தொடர முயன்றாலும் அது வராது.
      அரசர் மிகவும் பயந்து போய் தனது அரசவை ஜோதிடர்கள், குறி சொல்பவர்கள், அமைச்சர்கள், குருமார்கள், பூசாரிகள், ரேகைசாஸ்திரம் சொல்பவர்கள் என யாவரையும் அழைத்து,“அந்த சரியான இடம் எது என்று எனக்கு கண்டுபிடித்து சொல்லுங்கள். அப்போதுதான் நான் அங்கு செல்லாமல் அதை தவிர்க்க முடியும்” என கூறினார்.
      உடனே அவர்கள் அனைவரும் தங்களது பழமையான நூல்களில் பதில் தேட ஆரம்பித்தனர். காலை வந்து சூரியன் எழுந்தது. காலை முழுமையாக விடிந்தவுடன் அரசர் மிகவும் பயந்து போனார். ஏனெனில் பொழுது விடிந்தால் முடியுமே! முடிவின் ஆரம்பம் தானே விடியல். சூரியன் விடிந்தால் அஸ்தமனம் வெகு தொலைவில் இல்லையே.
      சூரியன் ஏற்கனவே அஸ்தமனத்தை நோக்கி செல்ல துவங்கி விட்டான். இன்னும் இவர்கள் எந்த முடிவுக்கும் வரவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் தங்களுக்குள் சண்டையிட ஆரம்பித்துவிட்டனர். அரசர்,“உங்களுடைய நூல்களைப் பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை. அது எந்த இடம் என்று மட்டும் சொல்லுங்கள், போதும். அப்போதுதான் அங்கு நான் போகாமல் இருக்கமுடியும் ” என்றார்.
      அவர்கள், “ இருங்கள். இது ஒரு எளிமையான கேள்வி அல்ல. நாங்கள் அதற்கான வழிமுறைகளை கண்டு, பின் ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஜோதிடர் ஒன்றை சொல்கிறார், பூசாரி வேறு ஒன்றை சொல்கிறார். நாங்கள் உங்களுக்கு பதினைந்து பதில்கள் கொடுத்தால் அதனால் என்ன பயன் ? ஆகையால் நாங்கள் ஒரு முடிவுக்கு வந்த பின் சொல்கிறோம்” என்றனர்,
      அரசரின் வயதான வேலையாள் ஒருவன் அருகில் நின்று கொண்டிருந்தான். அவன் அரசரது காதில் மெதுவாக, “ நான் கிழவன். நான் இந்த பெரிய மனிதர்களின் வாக்குவாதத்தில் தலையிடகூடாது. நான் ஒரு வேலையாள். ஆனால் வயதானவன், எனக்கு உன் தந்தையின் வயதிருக்கும். உங்களது சிறிய வயதிலிருந்து நான் உங்களை வளர்த்திருக்கிறேன். நான் சொல்வதை கேளுங்கள். இவர்கள் ஒருபோதும் ஒரு முடிவுக்கு வர மாட்டார்கள்.
      இவர்கள் தங்களுக்குள் வருடக்கணக்கில் சண்டையிடுவார்களே தவிர ஒரு போதும் ஒரு முடிவுக்கு வர மாட்டார்கள். இரண்டு தத்துவவாதிகளோ, இரண்டு ஜோதிடர்களோ, இரண்டு குறி சொல்பவர்களோ ஒரு போதும் ஒத்துப் போக மாட்டார்கள். ஒத்துப் போகாமைதான் அவர்களது வியாபாரம், அவர்கள் அப்படி ஒத்துப் போகாமல் இருப்பதில்தான் வாழ்கிறார்கள். அதனால் காத்திருக்காதீர்கள். காலம் மிகவும் குறைவாக உள்ளது. நீங்கள் என்னைக் கேட்டால் உங்களிடம் உள்ள மிகச் சிறந்த குதிரை ஒன்றை எடுத்துக் கொண்டு – உங்களிடம் அப்படிபட்ட சிறப்பான குதிரைகள் உள்ளன. – இந்த இடத்திலிருந்து ஓடிப் போய்விடுங்கள். ஒரு விஷயம் நிச்சயம். நீங்கள் இந்த இடத்தில், இந்த அரண்மனையில், இந்த நகரத்தில், உங்களது ராஜ்ஜியத்தில் இருக்கக்கூடாது. எங்காவது தப்பிச் சென்று விடுங்கள்” என்று கூறினான்.
      அரசருக்கு இது சரியென்று பட்டது. அரசர், “ நீ சொல்வது சரிதான். ஏனெனில் இவர்கள் இதை சூரிய அஸ்தமனத்திற்க்குள் முடிக்க மாட்டார்கள் போலிருக்கிறது.” என்றவாறே அவர் தன்னுடைய குதிரைகளில் சிறப்பான ஒன்றை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடினார். மாலையாவதற்குள் அவர் தனது ராஜ்ஜியத்தின் எல்லையை கடந்து வேறொரு ராஜ்ஜியத்திற்க்குள் நுழைந்து விட்டார். அவர் தான் தப்பியதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இப்போது இவர் எங்கிருக்கிறார் என்று இறப்பினால் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை.
      இரவு ஓய்வெடுப்பதற்காக அவர் ஒரு சோலையினுள் நுழைந்தார். அவர் தனது குதிரைக்கு மிகவும் நன்றி செலுத்தினார். ஏனெனில் இந்த குதிரை உண்மையிலேயே ஒரு அற்புதமான விஷயத்தை செய்து முடித்திருக்கிறது. நாள் முழுவதும் அது மிகவும் வேகமாக ஓடி வந்திருக்கிறது. அது அப்படி ஓடி அரசர் கூட இது வரை பார்த்ததேயில்லை. அது தண்ணீர் குடிக்கக் கூட ஓய்வெடுக்கவில்லை. அது ஒரு வினாடி கூட ஓய்வெடுக்க நிற்கவும் இல்லை. அது இந்த அவசரத்தை புரிந்து கொண்டதைப் போல நடந்து கொண்டது.
      அரசர் அதற்கு நன்றி கூறினார். அவர் அதனிடம், “ நீ என்னை காப்பாற்றி விட்டாய். நான் உனக்கு நன்றி கூறுகிறேன், எனக்கு உன் மேல் அன்பு பெருகுகிறது, நான் உனக்கு தகுந்த சன்மானம் அளிப்பேன். நாளை நாம் நமது ராஜ்ஜியத்திற்க்குள் சென்றவுடன் எனக்கு அளிக்கப்படும் அதே அளவு மரியாதையை நீயும் பெறுவாய் ” என்றார்.
      அந்த நேரத்தில் சூரிய அஸ்தமனம் ஆனது, அப்போது ஒரு கரம்....... அரசர் தனது தோள் மீது ஒரு கரம் படிவதை உணர்ந்தார். அவர் திரும்பி பார்த்தார். அவர் கனவில் பார்த்த அதே கறுப்பு நிழல் உருவம் அங்கே இருந்தது.
      அந்த நிழல் உருவம் சிரித்தபடி, “நீ அந்த குதிரைக்கு நன்றி சொல்லக் கூடாது. நான் தான் அந்த குதிரைக்கு நன்றி சொல்ல வேண்டும். இதுதான் நான் காத்துக் கொண்டிருக்கும் இடம். உன்னுடைய குதிரையால் இங்கு வர முடியுமோ வர முடியாதோ என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அது வந்து சேர்ந்து விட்டது. இந்த உலகிலேயே மிக அற்புதமான குதிரை உன்னுடையது. நீ சரியான நேரத்திற்கு சரியான இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டாய்.” என்றது.
      நீ என்ன செய்து கொண்டிருந்தாலும் இறப்பை சந்திக்க சரியான இடத்திற்கு சரியான நேரத்திற்கு வந்தடைந்து விடுவாய்.

Sunday, November 6, 2011

எதிலும் நுணுக்கம் வேண்டும் ஆனந்தம்


காலை எட்டரை மனி வரை எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது, அப்புறம் தான் ஆரம்பிக்கிறது எல்லாம்! குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, மனைவியை அவ்ள் அலுவலகத்திற்க்கு இறக்கிவிட்டு, அலுவலகத்திற்க்கு வந்தால் அங்கேயும் ஆயிரம் பிரச்சனைகள். நாம் திட்டமிட்டபடி செயல் படப்பார்த்தாலும், மற்றவர்கள் அதை குழப்பி டென்ஷன் ஆக்கிவிடுகிறார்களே, எப்படி டென்ஷன் இல்லாமல் செயல் படுவது?
      காட்டு வழியில் தன் சீடனுடன் நடந்து கொண்டிருந்தார் ஒரு ஜென் குரு. சீடனிடம் அங்கிருந்த ஒரு செடியை காட்டினார்.
      "இந்த செடியைப் பற்றி சொல்!"
      "இதன் பெயர் பல்லடோனா! இதன் இலைகள் மிகவும் விஷமிக்கவை, உயிரைப் பறிக்ககூடியவை!"
      "இலைகளை வேடிக்கைப் பார்த்தால் ஆபத்தில்லை, சுவைத்தால் தான் உயிர் போகும். பிரச்சனைகளும் அப்படித்தான். தேவையான கவனம் கொடுத்தால் போது(அதிகம் தேவையில்லை), ஆபத்தின்றி தீர்ந்து போகும். தேவையற்ற முக்கியத்துவம் கொடுத்து, இழுத்து மண்டையை போட்டு குடைந்து கொண்டால், உயிரை எடுத்துவிடும்" என்றார் குரு.
      உங்கள் பிரச்சனை குடும்பமல்ல, நிறுவனமல்ல; பிரச்சனையே நீங்கள் தான். வெளியே இருப்பதை சமாளிப்பதாக நினைத்துக் கொண்டு உங்களை நீங்கலே திருகிக்கொள்கிறீர்கள்.
      கண்களை மூடிக்கொண்டு உங்கள் உள்ளங்கைகளை மேல்முகமாக திருப்பி வையுங்கள். உங்கள் மூச்சை கவனியுங்கள்(அரை நிமிடமாவது). அதேபோல் உங்கள் கைகளை கீழ்முகமாக திருப்பி வைத்துக் கொண்டு உங்கள் மூச்சை கவனியுங்கள்( எந்த மூக்கில் மூச்சு நன்றாக வருகிறது என்று). இப்போது மூச்சு வேறு விதமாக இயங்கும்( இடது மூக்கு, வலது மூக்கு என்று மாறும்).
      உடலுறுப்புகளை எந்த விதத்தில் வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொருத்து, உங்கள் உயிர் சக்தியின் ஓட்டம் மாறுகிறது. இது பற்றிய கவனமில்லாமல் உங்கள் கைகளை கோபத்தின் டென்ஷனின் போது இப்படியும் அப்படியும் வீசும் போது உங்கள் உயிர் சக்தி எவ்வளவு குழப்பத்திற்க்குள்ளாகும் என்று யோசித்துப் பாருங்கள்.
      இப்படி கவனமின்றி எவ்வளவு தூரம் உங்கள் உயிர் சக்தியை வீணடிக்கிறீர்கள்? நீங்கள் சரியான படி இயங்க வில்லை என்றால் உஙளுக்கு எதுவும் சரியாக நடக்காது!
      குடும்ப டென்ஷன், நிறுவன டென்ஷன், போக்குவரத்து டென்ஷன், என ஒவ்வொன்றும் டென்ஷனாகிப்போனால் நீங்கள் இந்த பூமியில் வாழத்தகுதி இல்லாதவராகி விடுவீர்கள்.
      உங்கள் உடலையும் மனதையும் கூட கையாளத் தெரியவில்லையே, குடும்பத்தையும், நிறுவனத்தையும் எப்படி கையாள்வீர்கள்?
      உங்களுக்கு எல்லாம் தெரியும் என்கிற இறுமாப்பை விட்டு விட்டு, எதையும் ஆழ்ந்த கவனத்துடன் அனுகிப்பாருங்கள்.
      சங்கரன்பிள்ளை இறக்குமதி செய்யப்பட்ட ஒரு காபி இயந்திரத்துடன் போராடிக்கொண்டு இருப்பதை, அவர் வீட்டில் வேளாஈ ஸேய்யூம் பெண்மணி கவனித்தாள்.
      "இந்த இயந்திரத்தை எப்படி பொருத்துவது என்பதைப் பற்றி ஃபிரெஞ்சு மொழியில் குறிப்பு அச்சிடப்பட்டு இருக்கிறது.அதன் படி செய்து பார்த்து விட்டேன், இயந்திரத்தில் ஏதோ கோளாறு என்று நினைக்கிறேன்" எனறார் சங்கரன்பிள்ளை.
      பணிப்பெண் பக்கத்தில் வந்து ஒரே முயற்ச்சியில் அந்த இயந்திரத்தை மிகச் சுலபமாக பொருத்தி விட்டாள்.
      "எப்படி?" என்றார் சங்கரன்பிள்ளை.
      "எனக்கு எழுதப்படிக்கத் தெரியாது, அதனால் குழப்பிக்கொள்ளவில்லை" என்றாள் பணிப்பெண்.
      புரிகிறதா?
      உங்களை நீங்கள் பெரிதாக நினைத்துக் கொள்ளாமல், நீங்கள் நிஅனைப்பது தான் சரி என்ற அகங்காரத்துடன் எதையும் அனுகாமல் இருந்தால், எந்தப் பிரச்சனை தான் உங்களை கட்டிப் போட முடியும்.
      பிரச்சனைகளின் விளைநிலம் உங்கள் குடும்பமோ, நிறுவனமோ அல்ல; உங்கள் மனம் தான். அற்புத கருவியாக இயங்க வேண்டிய சாதனம் அவலமான கருவியாகிவிட்டது. வேண்டியதை வழங்க வேண்டிய சாதனம், வேதனைகளை வழங்கும் சாதனமாகிவிட்டது.
      என்னையே எடுத்துக்கொள்ளுங்கள், ஈஷா இயக்கத்தில் உலகெங்கும் 10 லட்சத்திறுக்கும் அதிகமானோர் தண்ணார்வத் தொண்டர்களாக இருக்கின்றனர். அவர்கள் வெவ்வேறு கலாச்சாரப் பிண்ணணியில் வளர்ந்தவர்கள், வாழ்ந்தவர்கள். அவர்கள் இந்த தொண்டிற்கென்று எந்த தனி பயிற்ச்சியும் எடுத்துக் கொள்ளவில்லை. இதை புரிந்து கொள்ளாமல் நான் எடுத்ததற்கெல்லாம் டென்ஷனால், நான் எதிர்பார்க்கும் எந்த வேலை நடக்கும்? கோபத்தால் அத்தனை லட்சம் பேரை நான் எப்படி கையாள முடியும்?
      நான் அவர்களுக்கு தகப்பனாக, மகனாக, குருவாக, சேவகனாக, மனநல மருத்துவனாக எவ்வளவோ தளங்களில் இயங்க வேண்டியிருக்கிறது. அப்படி செய்யத் தயாராக இருந்தால் தான் நீங்களும்... குடும்பத்திற்க்கும் நிறுவனத்திற்க்கும் தலைமை பொறுபேற்க்க முடியும்.
      உங்களைச் சுற்றி என்ன நடந்தாலும் அங்கே நீங்கள் ஒரு பிரச்சனை ஆகிவிடாத அளவிற்க்கு ஒரு சூழ்நிலையை உருவாக்கினால் போது எப்போது டென்ஷனே இருக்காது.
      ரிச்சர்டு கவுலி என்ற பிரபல மருத்துவரிடம் ஒருவன் வந்தான்.
      "டாக்டர் எனக்கு 32 வயதாகிறது, கட்டை விரல் சூப்பும் பழக்கத்தை இன்னும் விடமுடியாமல் தவிக்கிறேன்" என்று கூச்சத்துடன் சொன்னான்.
      "இதில் கவலைப் ப்ட ஒன்றுமில்லை, எத்தனை வருடங்களுக்கு தான் இதே விரலை சூப்புவாய், இன்றிலிருந்து கவனமாக வேறுஒரு விரலை பயண்படுத்து" என்று அறிவுறுத்தி அனுப்பினார் ரிச்சர்டு கவுலி.
      ஒரே வாரத்தில் திரும்பி வந்தான் அவன்.
      "முப்பது வருடமாக தவிர்க்க முடியாதபடி இருந்த பழக்கத்தில் இருந்து ஆறே நாளில் எப்படி விடுதலை பெற்றேன் டாக்டர்?" என்றான்.
      "ஒரு விசயத்தை பழ்க்கதோசத்தில் செய்யாமல், ஒவ்வொரு முறையும் புதிதாக முடிவேடுக்க வேண்டி வந்தால், அதை கவனத்துடன் அனுகுவோம். தேவையற்ற பழக்கம் தானாகவே உதிர்ந்துவிடும்" என்றார் கவுலி.
      கோபமும், டென்ஷனும் உங்கள் வாடிக்கையாகிப் போயிருந்தால் இனி ஒவ்வொரு முறையும் அது பற்றிய கவனத்துடன் அனுகிப்பாருங்கள், விஷம் உதிரும், அமுதம் நிலைக்கும்.
.................................................................சத்குரு..................................................................................