Saturday, July 6, 2013

பில்லிசூனியம் உண்மையா? ஆனந்தம்



     
      சித்து வேலைகளிலேயே மிக மோசமான வகைகள் எல்லாம் உங்கள் மனதில்தான் நிகழ்கின்றன. மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்ய முடியுமோ அது வெகு சொற்பம் மட்டுமே. நல்லது, கெட்டது என இரண்டு வகைகளிலும், உங்களுக்கு நீங்களே செய்து கொள்வதுதான் மிக அதிகம்.

      நம்மைச் சுற்றி இருக்கும் மக்களின் நோக்கங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் நமக்குள் என்ன நடக்கிறது என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியும். அதை 100% நாம் விரும்பிய வழியில் உருவாக்க இயலும்.
எனவே உங்கள் மனதை நேர்மறையான மந்திரவித்தையாக மாற்றிவிட்டால், மற்றவர்களுடைய பில்லிசூனியங்களை நீங்கள் புறக்கணித்துவிடலாம். ஆனால் உங்கள் மனமே பில்லிசூனியமாக இருந்தால், உங்களை அழிப்பதற்கு யாரோ ஒருவர் கொஞ்சம் கொளுத்திவிட்டால் போதும் அது சுலபமாகிவிடும்.

      மற்றவர்கள் உங்கள் மீது எந்த நோக்கத்தோடு இருக்கிறார்கள் என்பதை நீங்கள் முழுமையாகக் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது என்றாலும், அவர்களுடைய நோக்கங்களை உங்களால் ஓரளவு மாற்றியமைக்க முடியும். கோடிக்கணக்கான மக்கள் உங்களை விரும்பும்படியாக சூழ்நிலையை உங்களால் உருவாக்க முடியும். ஒருவகையில் பார்த்தால், நீங்கள் அவர்களுடைய நோக்கங்களையும் கட்டுப்படுத்துகிறீர்கள், ஆனால் அது 100% சாத்தியமில்லை.

      உங்களுடைய சொந்த குடும்பமே கூட திடீரென்று உங்களுக்கு எதிராகத் திரும்பிவிடும். இதை நாம் தினசரி வாழ்க்கை சூழ்நிலையில் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்? எனவே மற்றவர்கள் உங்கள் மீது என்ன நோக்கத்துடன் இருக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படுவதை விட, முதலில் உங்கள் மனம் உங்களுக்குச் செய்யக் கூடிய கொடூரமான செயல்களைப் பற்றி பார்க்க வேண்டியது அவசியம்.

      உங்கள் மனதை நீங்கள் சரி செய்துவிட்டால், மற்றவர்களுடைய மந்திர வித்தைகள் – அவை நல்லவையோ அல்லது பில்லிசூனியங்களோ, உங்கள் மேல் அவை தாக்கம் ஏற்படுத்தாது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அவை உங்கள் மேல் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் குறைவாக இருக்கலாம், ஆனால் அவற்றால் உங்கள் வாழ்க்கையின் பாதையை மாற்ற முடியாது.

      சித்து வேலைகள் செய்வது ஓர் விஞ்ஞானம். அது இன்றைய உலகில் பெரும்பாலும் தொலைந்தேவிட்டது. நாம் இதனை இழந்தது சரியல்ல. உண்மையில் சித்துவேலைகளை நேர்மறையாகவும் பயன்படுத்த முடியும். இந்த முறைகள் ஒருவருடைய சொந்த சக்திநிலைகளையோ அல்லது வெளிப்புற சக்திநிலைகளையோ குறிப்பிட்ட சில விஷயங்களைப் செய்வதற்காக பயன்படுத்திக் கொள்ளும் ஒரு தொழில்நுட்பம்.

      ஆனால் துரதிர்ஷ்டவசமாக மக்கள் இதனை துஷ்பிரயோகம் செய்துவிட்டனர். நேர்மறையான மந்திர வித்தைகளை விட, எதிர்மறையான பில்லிசூனிய வித்தைகள் நீண்ட காலம் நீடித்திருக்கக் கூடியவை. எனவே அதற்கு கிடைத்த ஆதரவினால், நிறைய பேர் மந்திர வித்தைகளை நேர்மைறையாக பயன்படுத்துவதை விட்டுவிட்டு முறையற்ற வகைகளில் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர்.

      ஒரு குறிப்பிட்ட திறமை உருவானது கெட்ட விஷயத்திற்காக இல்லை. அதைப் பயன்படுத்தும் கைகள்தான் அது நல்லதா, கெட்டதா என்பதை தீர்மானிக்கின்றன. ஒவ்வொரு திறமையும் நல்வாழ்வுக்காகவும் பயன்படுத்தப்படலாம் அல்லது மக்களை அழிப்பதற்காகவும் பயன்படுத்தப்படலாம்.

      நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் இதற்கு மிகச் சிறந்த உதாரணங்கள். சில நேரங்களில், சில விஷயங்கள் எதிர்மறையான நோக்கங்களோடு செய்யப்படுகின்றன, வேறு சில சமயங்களில் மிகவும் எதிர்மறையான விஷயங்கள் நேர்மறை நோக்கங்களோடு செயல்படுத்தப் படுகின்றன.

      விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் மனித குலத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதங்கள், ஆனால் துர்திர்ஷ்டவசமாக, அவற்றைப் பயன்படுத்தத் துவங்கிய நூறு வருடங்களுக்குள், அவற்றை நமக்கு எதிராக திசை மாற்றிவிட்டோம். இதனால் மனித குலத்தின் பிழைப்புக்கு மட்டுமல்லாமல், இந்த பூமிக்கே அவை அச்சுறுத்தலாக மாறி நிற்கின்றன.

      நாம் வாழும் இந்தக் காலகட்டத்தில், நாம் உபயோகிக்கும் இந்த தொழில்நுட்ப விந்தைகளை நீங்கள் நேர்மறை மந்திரவித்தைகள் என்பீர்களா அல்லது எதிர்மறையான பில்லிசூனியங்கள் என்பீர்களா? உண்மையில் பார்த்தால், உங்களுக்கு எப்படி விருப்பமோ அவற்றை அப்படி அழைக்கலாம். அவை துவங்கும்போது நல்ல நோக்கங்களுடனே துவங்கப்பட்டிருக்கலாம் அல்லவா?

      அதே போல பில்லிசூனியம் என்று நீங்கள் அழைக்கும் விஷயங்களும் நல்ல நோக்கங்களுடன்தான் துவங்கின. ஆனால் மக்கள் அவற்றை பலவிதமான வழிகளில் துஷ்பிரயோகம் செய்யத் துவங்கிவிட்டனர். ஆனால் இன்றைய நிலையில் பில்லிசூனியத்தைச் செய்யத் தெரிந்தவர்கள் மிகக் குறைவாக இருப்பதால், அவை குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.

      அவர்களுடைய நேரத்தையும், சக்தியையும் உங்கள் மீது செலவழிக்கும் அளவுக்கு நீங்கள் அவ்வளவு பெரிய மனிதரா? நீங்கள் ஒரு சக்ரவர்த்தியாக இருந்தால், நம்மை யாரோ ஏதோ செய்துவிடுவார்கள் என்று நீங்கள் கவலைப்படலாம் அல்லது ஒரு தங்க சுரங்கத்தின் மேல் உட்கார்ந்திருந்தால், இதுபோன்ற விஷயங்களைப் பற்றி கவலைப்படலாம்.

      அப்படி எதுவும் இல்லை என்கிறபோது நீங்கள் இவ்வளவு வருந்தத் தேவையில்லை. யாரும் தங்களுடைய நேரத்தை, சக்திகளை, பணத்தை உங்கள் மீது பில்லிசூனியம் வைப்பதற்காக பயன்படுத்தப் போவதில்லை. நீங்களே உங்கள் சொந்த மந்திரவித்தைகளை உங்களுக்குள் செய்வதுதான் நல்லது.

3 comments:

indrayavanam.blogspot.com said...

நீங்கள் ஒரு சக்ரவர்த்தியாக இருந்தால், நம்மை யாரோ ஏதோ செய்துவிடுவார்கள் என்று நீங்கள் கவலைப்படலாம் அல்லது ஒரு தங்க சுரங்கத்தின் மேல் உட்கார்ந்திருந்தால், இதுபோன்ற விஷயங்களைப் பற்றி கவலைப்படலாம்..... எனக்கு பிடித்த வரிகள்்...மிக அருமையான அலசல்

திண்டுக்கல் தனபாலன் said...

மனிதன் எதைத் தான் துஷ்பிரயோகம் செய்யாமல் விட்டு வைத்தான்...?

விளக்கங்களுக்கு நன்றி...

Anonymous said...

எல்லாம் சரி ! ஆனால் பில்லி சூனியம் உண்மை என்பது போலல்லவா பதிவு போகின்றது. நம் புலன்கள் ஊடாக கேடு விளைவிக்க இயலாமல் எங்கோ மந்திரம் ஓதி பொம்மை குத்துவது கேடு உண்டாக்காது. உளவியல் ரீதியாக உடலியல் ரீதியாக ஒருவரை நொறுக்க முடியும் அவரவர் உளம், உடல் பலனுக்கு தக்கவாறு. மூளைச் சலவை செய்து, அச்சமுண்டாக்கி உளவியல் கேடு உண்டாக்கலாம், அல்லது உடலுக்கு ஒவ்வாததைக் கொடுத்து உடல் கேடு உண்டாக்கலாம். புத்தியோடு செயல்பட்டால் இரு கேடுகளையும் தவிர்க்கலாம், மாறாக பில்லி சூனியம் மந்திரம் மயிர் பிடுங்குதல் எல்லாம் பிராடு வேலை. புரிஞ்சுக்கோங்க மக்காள்.

Post a Comment